கானல் சுவாசிக்கும் கால்கள்

புகைப்படத்துக்கான கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்:

கோபிப்பாளையம் புனித தெரசா தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அரசு தாமஸ் அவர்கள், கடைத்தெருவில் கண்ட காட்சியைச் சிறைப்பிடித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, ஒரு உழைப்பாளியின் நிலையை நமக்கெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதும்படி ஒரு போட்டியை நம்முடைய சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகம் சார்பாக அறிவித்தோம்.

ஏராளமானவர்கள் போட்டியில் பங்கேற்றுக் கவிதைகளை அனுப்பியிருந்தார்கள். போட்டிக்கான நடுவராக இருந்து, கவிதைகளை வாசித்து, அவற்றிலிருந்து 3 கவிதைகளைப் பரிசுக்கானவையாகத் தெரிவு செய்தார் தோழர் கோமதி சங்கர் அவர்கள். பரிசு பெற்ற கவிஞர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நம்முடைய வாழ்த்துக்களும், நன்றியும். ஆசிரியர் அரசு தாமஸ் அவர்களுக்கும் தோழர் கோமதி சங்கர் அவர்களுக்கும் சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகத்தின் நன்றிகள்.

முதல் பரிசு பெற்ற கவிதை

கானல் சுவாசிக்கும் கால்கள்
கானல் சுவாசித்தபடி
கால்கள் மிதிக்கின்றன
தலைச்சுமை ஏனோ
தக்கையாய் மிதக்கிறது
இந்தப் பயணம்
இலக்கு நோக்கியதா?
இரைப்பை இரைச்சலுக்கானதா?
மகளின் சீர் குடத்திற்கானதா?
மனைவியின் மருந்துக் குப்பிகளுக்கானதா?
கடன்பட்ட நெஞ்சத்துக்கானதா?
கவனிப்பாரற்ற சுயத்துக்கானதா?
யூகிக்கக் கிடைக்கும் காரணங்கள் ஏராளம்
பழுத்த மனதில் நம்பிக்கையோ தாராளம்
தூரங்கள் கண்டு துவளவில்லை
பாரங்கள் ஏந்த அஞ்சவில்லை
வியர்வையில் குளிக்கும் உடலை
மஞ்சள் நீரில் அலசி அலங்கரிக்கும் வரை
ஓடும் கால்களுக்கு ஓய்வேது?
சுமக்கும் எடைக்கு குறைவேது?
சளைக்காத மனமே
சற்று நில்!
களைத்தபடி உடன்வரும் உடலுக்குப் புத்துணர்வூட்ட
ஒரு கோப்பை தேநீர் தருகிறேன்

  • யாழினிஸ்ரீ

கூடுதல் பரிசு பெற்ற கவிதைகள்

எழுத முடியா நெடுந்துயர்
வறுமை வாழ்க்கைக்குள்
செலுத்திய பாரம்
சைக்கிள் சக்கரங்கள் சுழலும்படி
மூச்சிறைக்கப் பெடலை
மிதிக்க விட்டிருக்கிறது
பசி ஒரு படி மேலே சென்று
மனதிற்குள் அளவிடமுடியா
பாரத்தையும்
தலையில் அளந்து வைத்த பாரத்தையும்
ஏற்றி விட்டிருக்கிறது
கருணையுள்ள இந்த பூமி
காலம் காலமாய்
ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்
சுழல்வதில்லை
கருணையற்ற இந்தக் காலம்
காலம் காலமாய்
ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்
விடிவதில்லை
நரம்புகள் புடைக்க வாழ்வை
எதிர்கொள்ளும் மனிதனின்
நெடிதுயரத்தை
ஏனோ என்னால்
எழுதி தொலைக்கக் கூட
முடிவதில்லை

  • வழிப்போக்கன்

பேர் சொல்லும் காசு
வண்டி வாகனம் பெருத்துப் போச்சி
எங்க வயிறோ சிறுத்துப் போச்சி
ஊரெல்லாம் அதிக சம்பளம் வாங்குற காலத்தில கூட
நாங்க வாங்குறதென்னவோ அஞ்சு பத்து கூலிதான்
எழுதப் படிக்கத் தெரியாம போனதால
எடை தூக்க வந்திட்டோம்
எடைக்கு எடை ஏழுமலையானுக்கே படியளக்கும் மகராசா!
இந்த ஏழ வயித்தையும் கொஞ்சம் பாருமையா!
பட்டு சொக்கா போட்டு பகுமானமா நிப்பவரே!
சீக்கிரம் பாத்துப் போட்டு தாங்க,
பத்திரமா கொண்டுபோறேன்!!
தலையில பொதி சுமக்குறோம்
காலணிகூட இல்லாம காலணாவுக்குக் காத்துக் கிடக்கிறோம்
எரி எந்திரமெல்லாம் எங்கிட்ட இல்ல சாமி
ஏதோ, ஏறி மிதிச்சா என்னோட சுமையவும் சேத்து சுமக்க
மிதிவண்டி ஒன்னிருக்கு!
அழுத்தி மிதிச்சா அஞ்சி நிமிசமாகும்
எறக்க கூட ஆள் வேணாம்,
ஒத்தாசைக்கு நின்னாபோதும்
சேத்து ஏதும் கேட்கல,
சொத்து சேர்த்து வைக்கவும் கேட்கல
ஒழைக்கிற காசு உடம்புல ஒட்டணும்
இன்னைக்கு ஒட்டுற காசு உங்க பேர் சொல்லட்டும்!

  • வே. ஆறுமுகப்பாண்டி


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *