க(வி)தை
ஆறு வயசிருக்கும்
அக்காவை அயித்தான்
மேளம் கொட்டி தாலி கட்டயில..
அயித்தான் கைபிடிச்சி அக்கா போகயிலே
‘அக்கா’ன்னு ஓடிப்போயி அவ கால கட்டிக்கிட்டேன்
கண்ணுல தேக்கிவைச்ச மடை ஒடைச்சி
அக்கா சேலைய நான் நனைச்சேன்
ஆத்தா மூக்கைச் சிந்தி அப்பால வீசிப்போட்டு
அக்கா காலவுடு; வாக்கப்பட்டு போறா அவ
வாடா ராசான்னு கை புடிச்சி வலிச்சிட்டா..
ஆத்தா கைய வுடு அக்காகூட போறேன்னு
அழுது புரண்டு மல்லுக்கட்டி நாந்திமிர..
திலும்பி திலும்பி பாத்து தெருவெறங்கி போன அக்கா
சட்டுனு ஓடியாந்து குனிஞ்சி முத்தமிட்டு
சீரு பானையோடே கண்ணுல கரைஞ்சி போனா..
ஆறுயேழு நாளு அக்கா அக்கானு
அழுது பொலம்பியிருந்தேன்..
ஆத்தா ஆயி அப்பன் தேற்ற தெளிஞ்சிகிட்டேன்..
பொண்ணா பொறந்துபுட்டா வயசும் வந்துபுட்டா
வாக்கப்பட்டுத்தேன் மாமியா வூடு சென்னு
மாமனோட குடுத்தனம் பண்ணிடோணும்..
ராசா அழுவாதே.. அக்கா பொண்ணு பெத்து
உனக்குக் கட்டி வைப்பா..
அப்போ ஆத்தா சொன்னா…
ஆறுமாசமாச்சி
அயித்தான், விளஞ்ச பலாப்பழத்தை சொமந்து வந்தாக..
சேதி சொன்னான் சுப்பன் ஓடி வூடு வந்தேன்
அக்கா வரலையான்னு அயித்தான் மூஞ்ச பாத்தேன்..
சிரிச்சபடி ஆத்தா
சின்ராசு ஓடிப்போயி மாங்கா பறிச்சி வாடா
அக்கா ஆசைப்பட்டா..ன்னு சொன்னா
மாங்கா வாங்கத்தேன் அயித்தான் வந்தாராக்கும்
அக்காவை நா பாக்கோணும் அவயேன் வரலைன்னு
ஆத்தாவ திலுப்பி கேட்டேன்
அப்பன் ஆத்தா ஆயி அயித்தான் எல்லாரும்
கொல்லுன்னு சிரிச்சாக
முட்டாப்பய மவனே அக்கா முழுகாம இருக்காடா..
சேதி சொல்லத்தேன் மாமன் தேடி வந்தாரு..
ஓடிப்போயி மாங்கா பறிச்சி வாடா..
சீமக் கிழங்காட்டம் சிறுக்கிய பெத்துனக்கு
அக்கா தருவாடா..
ஏதுமப்ப புரியல; ஆனா அக்கா ஏதோ தருவான்னு
மாந்தோப்பு ஓடிப்போயி மடிநெறய மாங்கா
பறிச்சி வந்து அயித்தான் கைகுடுத்தேன்..
ஏழுமாசம் போச்சி
எங்கக்கா பொண்ணு பெத்துட்டானு சொல்லியனுப்பிச்சாக..
ஆத்தா ஆயி பல்லு வெத்தலகரை வெளிய தெரியலாச்சி..
ஏலே சின்னராசு.. மருமவ பொறந்துபுட்டா
உம்முட அக்காவ போயி பாக்கோணும்..
வெரசா வாடான்னு ஆத்தா கூப்பாடு போட்டுச்சி..
அக்காவ பாக்கோணும்..
அதுமட்டுந்தேன் கேட்டுச்சி.. ஓடியாந்து ஏறிக்கிட்டேன்
பூட்டிவச்ச வண்டீல அரைக்கால் சட்டையோட..
கிறுக்குப் பயபுள்ள
ஒன்னுந்தேன் போடாம போயி புள்ளய பாப்பியா..?
சொக்கா போட்டு வாடான்னு ஆத்தா வெஞ்சிச்சி..
குடுகுடுன்னு குதிச்சி ஓடிப்போயி
சொக்கா தேடிப்போட்டு தாறுமாறா தலைய வாரி
வண்டியேறித்தேன் அக்கா வாசலுக்குப் போயி சேந்தேன்
ஆத்தா அப்பன் ஆயிகூட..
வண்டி விட்டிறங்கி எல்லாரும் போயிட்டாக..
ஒசரமான வண்டியில இறங்கத் தெரியாமத்தான்
இப்படியும் அப்படியும் தொங்கி நாங்கிடந்தேன்..
அயித்தான் ஓடிவந்து அணச்சி இறக்கிபுட்டு
வாங்க மருமவனே.. வில்வண்டிய விட்டு
வரத்தேன் மனசில்லையோ எண்டு
கேலி பேசிச் சிரிச்சாக..
அதெல்லா ஒன்னுல்ல..
வீராப்பா சொல்லிப்புட்டு விருட்டுனு
வீட்டுக்குள் நா நுழஞ்சேன்..
உத்தரத்து சட்டத்துல தூளி கெட்டியிருக்க
ஆத்தா ஆயி அக்கா அக்கா மாமியான்னு அத்தினி பேரும்
சுத்தி நின்னுகிட்டு சொலசொலனு பேசிச் சிரிச்சாக..
எட்டிப் பாக்கத்தான் என் ஒசரம் பத்தலையே..
ஏனோ மனசுக்குள்ள கோவம் கூடிடுச்சு..
கூடத்து தூணு பக்கம் நானு நகந்து போயி
கெட்டியாப் புடிச்சிகிட்டு தனியா உறுமி முறைச்சிருந்தேன்.
திலும்பி பாத்த அக்கா
‘டேய் சின்ராசு..’ன்னு கூவிகிட்டே ஓடிவந்தா..
போக்கா.. என்னை பாக்கத்தான் உனக்கு நினப்பில்ல..
சும்மா கொஞ்சுதியோ.. கோவம் உம்மேலன்னு
கைய உதறிவிட்டு மூஞ்ச திலுப்பிக்கிட்டேன்..
சின்ராசு.. சின்ராசு.. அக்காவுன்ன மறப்பேன்னு நினைச்சுதியோ..
அலகா உனக்காக பொண்ணு பெத்து வச்சிருக்கேன்..
வந்திங்க பாருடா சின்னி..
சின்னினு அக்கா மட்டும் செல்லமா கூவும் என்பேரு..
அக்கா அக்குள்ல அணச்சித் தூக்கி
தூளியில சாச்சு பாருன்னு சொன்னா..
தூளிக்குள்ள பகுடரு மூஞ்சியப்பி
கருப்பு மையால கண் புருவம் வரைஞ்சி
மாரியாத்தா பொட்டுபோல நெத்தியில கன்னத்துல
கறுப்புப் பொட்டு வச்சி கட்டவிரல் தூக்கி
கைபிடிச்சுச் சிரிச்சா சிவப்பா சின்ன சிறுக்கி..
என் கண்ணுல என்னவோ பட்டாம்பூச்சி பறந்திச்சி..
அக்கா கழுத்த கட்டிக்கிட்டு கன்னத்தில எச்சி வச்சேன்..
ஐய்யா..
அக்கா மவ பொறந்தாச்சி..
- வைகறையான்

Anita Srikanth
July 14, 2023வணக்கம் ..
அக்கா கல்யாணம் ஆகி போனப்ப இப்டித்தான் அழுதேன்…
அக்காவுக்கு மக பிறந்தப்ப நீ சின்ன அம்மா ..சித்தி ஆகீட்ட ..னு அந்த அழகு ரோஜா பூவை என் கைல தந்த நாள் நினைவுல வருது. ….
அத அனுபவிச்சவுங்களுக்கு தான் தெரியும்..
ஒவ்வொரு வரியும் உணர்வு பூர்வமா இருக்கு…
அழகா எழுதி இருக்கிங்க அண்ணா..
மாதவன்
July 15, 2023அருமையான வாழ்வியல் நிகழ்வு.
உறவும், உரிமையும் உள்ளார்ந்து உணர்த்தும் சம்பவங்கள் அனைத்தும் நீண்ட நினைவாக நெஞ்சில் நிலைத்து இருக்கும். வாழ்த்துகள் அண்ணா.
கவிஞர். மாதவன்