நங்கூரம்
கவிதை
நீண்ட நெடிய
ஓட்டத்திற்குப் பிறகு
நிதானமாய் மெல்ல
திரும்பிப்பார்க்கிறேன்
எத்தனை தூரம்
நதியில் விழுந்த இலையாக
காலம் என்னை
இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது!
காலத்துக்கேற்ற
கதாபாத்திரங்களின்
ஒப்பனை கலையாமல்
உள்வைத்துத் தைத்த
உணர்வுகளின்
சுயம் கசியாமல்
விழி பூக்கும் கண்ணீரின்
வேர்களின்
வலி விழுங்கி
உதட்டுப் புன்னகையில்
கூடுதலாய்க் கொஞ்சம்
ஒளி கூட்டி
என் குணம் தெரியாமல்
பூச்சாண்டி காட்டிய வாழ்விற்கும்
நேசம் போதித்து
எஞ்சி நிற்கும்
காலப் பெருவெளியில்
நங்கூரமாகும் என்னை நினைத்தால்
எனக்கே சற்று
பொறாமையாகத்தான் இருக்கிறது
- அமுதா தமிழ்நாடன்

YozenBalki
August 8, 2023அடடா நல்லா இருக்கே!
ஒரு பெண்மையின் உள்ளார்ந்த சமரசமற்ற குணத்தின் வெளிப்பாட்டுக் கவிதை!
ஆம்! வாழ்க்கை நமது ஞானாசிரியன்!
YozenBalki
August 8, 2023“என் குணம் தெரியாமல்
பூச்சாண்டி காட்டிய வாழ்விற்கும்…”
இந்த ஒரு வரி எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது…
☘️🌸✅✅
சுவடு மன்சூர்
August 8, 2023சிறப்பு.. மிகச்சிறப்பு..
ம. செ. மோகன் ராஜா
August 8, 2023அருமை
Babusasitharan
August 8, 2023சிறப்பான கவிதை 👌👌
வாழ்த்துகள் அக்கா 💐💐