வாழ்க்கையை உருட்டும் பகடைகள்
ஒருவன் தானாகவே இருத்தல் என்பது பெரிய விசயம். தான் தானாய் இருத்தல் என்பது ஒருவகை லயித்தல். சூழல் மாறலாம், வாய்ப்புகள் வந்து போகலாம். ஆனால் எப்பொழுதும் தன்னியல்பில் இருந்துகொள்தல் என்பது ஒரு பாதுகாப்பு. அல்லது தன் நிலையைத் தக்கவைத்தல், நியாய அநியாய தர்க்கங்களுக்கு வெளியே நின்று தன் நிலையில் தானாகக் கரைந்துவிடுதல் அது.
அந்நிலை அனைவருக்கும் வாய்க்காது. படைப்பாளிகளுக்கு – சித்திரம் வரையும் – செதுக்கும் படைப்பாளிகளுக்கு வாய்க்கலாம். தன் இரசனையை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே லயித்துச் சாகுதல் என்பது ஒரு கவி நிலை. அப்படியாய் கவிஞர்கள் – கவித்துவ மனநிலை கொண்டவர்கள் லயித்துப்போவார்கள். கவித்துவ மன நிலை கொண்ட எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை. ஆனால், கவிதைகளை ரசித்துவிடுவார்கள். அவர்களுக்கு ‘லயித்தல் மனநிலை’யில் தன்னைத் தக்க வைக்கும் கால அளவு மாறுபடலாம். ஆனால், கவிஞர்களுக்கு அது கைக் கொள்ளும்.
கவிஞர்கள் கவிதை எழுதலாம், ஓவியம் வரையலாம், புகைப்படம் எடுக்கலாம், சிறுகதை எழுதலாம், நாவல் கூட எழுதலாம். ஆனால் எல்லா இடத்திலயும் தன்னை மீறி ஏதேனும் ஒரு வரியில், ஒரு நிலையில் தன்னை மறந்து ஏதாவது ஒரு நினைவில் லயித்து, தான் கவிஞன் என்ற அடையாளத்தைக் காட்டிவிடுவான்.
கவிஞர்கள் சிறுகதை எழுதினால் இதைத்தான் தேடிப்பிடிப்பேன் – என்ற ஒற்றை வரிக்கு மேற்சொன்ன இத்தனை வரிகள் எழுத வேண்டியுள்ளது.
அமிர்தம் சூர்யா ஒரு நல்ல மேடைப்பேச்சாளர். கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா” வை அவரைப் பேசவிட்டு கேட்கவேண்டும். நல்ல விமர்சகர். இணையதளக் காணொளி வெளியிடுகிறார். இந்த “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” சிறுகதை எழுதியுள்ளார். எல்லாவற்றிலும் மேலாக இவர் ஒரு கவிஞர்.

சிறுகதைகளைப் படித்துவிட்டு அதன் நுணுக்கங்களை, கதை தவறும் கணங்களை அல்லது கதையின் உச்சங்களைக் குறுக்குவெட்டு செய்து பார்ப்பதை விட, ஒரு சிறுகதைத் தொகுப்பு வாசகனின் மனத்திற்குள் ஏதேனும் பழைய அனுபவத்தை மீட்டெடுக்கச் செய்வதை அல்லது புது அனுபவத்திற்கு அவனைப் பாத்தியப்படுத்துவதைப் பற்றிப் பேசவேண்டும் என்பதே என் கருத்து. ஒரு படைப்பின் நோக்கம் அதுவாகத்தானே இருக்கவேண்டும்?! “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அதைத்தான் செய்கிறது.
ஒரே மாதிரியான கதை மாந்தர்கள் அல்லது ஒரே பெயரில் வரும் கதை மாந்தர்கள் ஒரு வித அயற்சியைத் தரும் என்ற நிலைப்பாட்டை அமிர்தம் சூர்யா சுக்குநூறாக உடைக்கிறார். எல்லாக் கதைகளிலும் கிருஷ்ணன் வருகிறான், வியாசர் வருகிறார், சார்வாகன், த்ரௌபதி இப்படி வருகிறார்கள் . படித்து முடித்து விட்டு “RECALLING CUE” குறைவாய் இருக்கும் என்னைப் போன்றோருக்கு ஒரு சவால் இருக்கிறது. சாதிக்குப் பயந்து பெயரை மாற்றிக்கொண்ட ‘ராமண்ணா’ என்ற கிருஷ்ணன்தான் தாமரைக் காட்டைத் தேடி அலைந்து பைத்தியம் ஆகிறான் என்று கதை கட்டிவிடும் சவால் அது. ஒரு கதையில் இருக்கும் கதாபாத்திரம் இன்னொரு கதையில் உள்ள கதாபாத்திரத்தின் வேலையைச் சீர் செய்வது போல். அது சரி, ஒரு கதை இன்னொரு கதையை உண்டாக்கினால்தான் என்ன?! அமிர்தம் சூர்யா உருட்டிவிட்ட ‘சகுனிப் பகடையாய்’ அந்தக் கதை சொல்லும் தொனி எங்கும் அயற்சியை ஏற்படுத்தவில்லை.

நிறைய மாதிரிகளை “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” மூலமாக நமக்குத் தருகிறார் அமிர்தம் சூர்யா. ‘மாதிரி’கள் என்பவை இங்கு ஒன்றைப் போல இன்னொன்று என்றும் எடுக்கலாம். உவமை என்று இலக்கிய ஆர்வலர்களாயும் எடுக்கலாம். சில மாதிரிகள்:
“தமிழ் சினிமால வர்ற குழந்த நட்சத்திரம் ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்கா இருந்தாலும் கிருஷ்ணன் ……”
“மூளை செவிடான மாதிரி…”
“காதலும் கவிதை மாதிரிதான்…”
“இரட்டைச் சகோதரர்கள் மாதிரி இருந்தது அந்த வீடு”.
கதையின் போக்கைத் துரிதப்படுத்துவது என்பது வார்த்தைகளில் வெளிப்படுவது. உரையாடலில், கதைசொல்லியின் குரலில், இரண்டையும் விட வாசகனின் கற்பனைக்குள் அமர்ந்துகொண்டு, அவனைத் தன் வயப்படுத்தி, கதையைக் காட்சி வடிவில் அரங்கேற்றம் செய்து காண்பிப்பது. புனைவையோ அபுனைவையோ வாசகனோடு ஒன்றச் செய்யும் இந்த வகையான ரசவாதம் என்பது கிட்டத்தட்ட பூக்களை ஒரே நாரில் வைத்துக் கோர்த்துக்கொண்டே வருவதுதான். சில கதைகளில் பூக்கள் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு விழுகின்றன, சில கதைகளில் கற்பனை செய்த மாதிரியே ஒரு பூ மாலையாக உருப்பெறுகின்றன. ஆனால் அடிப்படை, வாசகனின் மனதிற்குள் காட்சிப்படுத்த எடுக்கப்படும் ப்ரயத்தனம்தான்.
அமிர்தம் சூர்யாவின் காட்சிப்படுத்துதலில் எந்த விதிகளும் அல்லாது, கட்டுப்பாடுகளற்ற, வாசகனுக்கு எந்த வழிகாட்டுதலுமில்லாத, எந்த வரையறைக்குள்ளும் சிக்கிவிடாத அல்லது சிக்கத்தோன்றாத, இப்படித்தான் என்ற உருவாக்க நுணுக்கங்களுமில்லாத மேலும் தனி பாணி என்ற முத்திரையும் இல்லாது ஒரு நிகழ்வை அப்படியப்படியே வர்ணிக்கிறார். காட்சிப்படுத்துதலை ஓர் எழுத்தாளன் செய்துவிடுவதுதான் செய்ய வந்த வேலையில் பாதி. அது சிறப்பாய் முடிந்துவிட்டால் மீதியை வாசகன் முடித்துக்கொள்வான்.

“இருளின் முகம் மெல்ல வெளிறும்படி இலையுதிர்க் காலத்தால் வந்த இடைவெளிகளில் ஆதவனின் ஒளிக்கற்றை இறங்கி, புதர் மண்டிய அந்தக் கற்குகை வாசலில் நிரம்பித் ததும்ப ஆரம்பித்தது”.
கவிஞர் அமிர்தம் சூர்யா ஒரு சிறுகதையில் இப்படி எழுதியிருக்கிறார். கதையின் போக்கில் களத்தைச் சொல்வதில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”-இல் எந்தச் சிக்கலும் இல்லை.
கிருஷ்ணன், சார்வாகன், வியாசர், த்ரௌபதி போன்ற கதாபாத்திரங்கள் போக, காற்றையும் பெரும்பாலான கதைகளில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில், காற்று ஒரு மேகத்தை அழைத்துச்செல்கிறது, போரில் தோல்வி பெற்றவர்களின் தபோவனத்தின் வாசலில் காற்று வறட்சியாய் இருக்கிறது, பூவரசம் பூக்களுடன் கைகலப்பில் காற்று ஈடுபடுகிறது, ஓங்காரச் சிரிப்பைக் காற்று ஒரு குளமாக மாறி, கல் மூலம் அதிர்வு பெறுகிறது, காற்றை மட்டும் சாப்பிட்டு சித்தர் ஆகும் முறையைச் சொல்கிறது, மாம்பழத்தின் வாசனையை இரயில் நிலையத்தில் மூக்கு முன்னால் போட்டு விட்டுச் செல்கிறது ஒரு காற்று, மயானத்தில் அப்பாவின் சமாதி தேடும் ஒருவன் முன் காற்று கனம் கூடி வீசுகிறது.
சிறுகதையாளர்களால் காற்றைக் கதைக்குள் கொண்டுவர முடியும். கவிஞர்களால் மட்டும்தான் காற்றை ஒரு வரிக்குள் கொண்டுவரவும் முடியும், ஒரு வரியைக் காற்றுக்குள்ளும் கொண்டுவர முடியும்.
ஒரு படைப்பு ஏற்படுத்தும் அனுபவம்தான் வாசகனுக்கு முக்கியம். படைப்பை ஆராய வேண்டிய தேவை வாசகனுக்கு இல்லை. அது எழுத்தாளர்களின் வேலை. வாசகன், ஒரு படைப்பிற்குள் தன்னைப் பார்ப்பதும், தன் அனுபவத்தை உணர்வதிலுமே அந்தப் படைப்பு, வாசகனுக்கானது என்று ஆகிறது. அழகியல், எதார்த்த அனுபவங்கள் சொல்லப்படும் விகிதங்களில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” வாசகனுக்கானத் தொகுப்பு.
அழகியல் நோக்கில் இந்தப் படைப்பை அணுகுவது தவிர்த்து, விமர்சனப் பார்வையில் எழுதிவிடுவதுதான் இலக்கிய ஆர்வலர்களுக்கான விசயம். படைப்புகளில் “நிறைவுறாத்தன்மை” என்பதும்கூட ஒரு வகையான அழகுதான். ஆனால், வெகுஜனக் கதைகளில் புகுத்தப்படும் “நிறைவுறாத்தன்மை” என்பது, அமிர்தம் சூர்யாவின் மொழியில் சொல்லப்பட வேண்டுமென்றால், சக்கரவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவின் வீரம் போன்றது.
தன் சாதி காரணமாகப் பெயரை மாற்றிக்கொள்ளும் கிருஷணன் ஆகட்டும், சாதி மாறித் திருமணம் முடித்து ஊர் திரும்பும் ஒருவனாகக் கனவு காணுவதாக இருக்கட்டும், அமிர்தம் சூர்யா என்ற ஆகச்சிறந்த ஊடகம் மிகப்பெரிய விசயத்தைச் சொல்லவருகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் கதை வெகு ஜாக்கிரதையாக அந்தச் சிக்கலில் இருந்து வெளியேறி “சுபம்” போடுகையில் அபிமன்யூ குறி வைக்கப்படுகிறான்.
அப்பாவைச் சாந்தப்படுத்த சமாதி தேடுபவனுக்கு மனைவி பிரிந்து போயிருக்கிறாள். உயிரோடு இருப்பவளைத் தேடாமல், செத்த ஒருவனைத் தேடி அலையும் ஒருவனது கதையில் “நிறைவுறும் தன்மை” நிராயுதபாணியாய் நிற்கும் அர்ஜூனனைத் தவிக்க விட்டு ஓடும் பரமாத்மாவாய் நிற்கிறது.
தன்னிலை அறிக்கையில் இவை எல்லாம் அனுபவங்கள் சார்ந்து புனையப்பட்டவை அல்லது செய்யப்பட்டவை என்ற எழுத்தாளரின் கூற்றோடு கதையைப் படிக்கும்பொழுது எதார்த்தம் வெளிப்படுகிறது. வாழ்வின் வெளி இப்படித்தானே இருக்கிறது?! நிறைவுறாத்தன்மையும் நிறைவுறும் தன்மையும் கிட்டத்தட்ட ஒரு மனநிலைதானே?! எதார்த்தங்கள் சுவாரஸ்யங்களைத் தந்துகொண்டே இருப்பதற்கு அடிப்படை, நாம் நினைப்பது நடக்காமல் இருப்பதும், நாம் நினைக்காதது நடப்பதிலும்தான். வாழ்க்கை நமக்கு உருட்டிவிடும் பகடைகள் எப்பொழுதும் நமக்குச் சாதகமாய் இருப்பதில்லை.
அந்தந்த நேரத்து உருட்டல்களை அந்தந்த நேரத்துச் சூழ்நிலைகளில் அந்தந்த நேரத்து மனநிலையில் மனிதர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.
“கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அந்தப் பகடைகளை உருட்ட, வந்து விழுந்த சில கதாபாத்திரங்கள்தான். கடவுளைக் கண்டுபிடிப்பதை விட உணர்வது சுவாரஸ்யமானது. “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”ஐ நீங்கள் உணரலாம்.
- பழனிக்குமார், மதுரை.

Mohan Raja
June 7, 2022அருமை