ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது

நம்ப வைத்து ஏமாற்றிய திமுக அரசுசிறப்பாசிரியர்கள் குமுறல்

அரசுப் பள்ளிகளில் 11 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்துக்கு சம்பளம் வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த திமுக, தற்போது மே மாதத்துக்கு ஊதியம் வழங்கமுடியாது என்று கூறியுள்ளது பகுதிநேர ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியின்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைப் பகுதிநேர ஆசிரியர்கள் தொடங்கினார். அப்போராட்டமானது 24ஆம் தேதிவரை நீடித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை அழைத்து, தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பொறுப்பேற்றிருக்கும் அறிவொளி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த 11 ஆண்டுகளாகத் தங்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சங்கத்தினரிடம், ‘கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டிற்கான மே மாத ஊதியம் வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதனடிப்படையில் அவர்களும் தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

ஆனால் 9.6.2023 அன்று, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஆர்த்தி அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களைப் பணியமர்த்திய அரசாணை எண் 177ஐ சுட்டிக்காட்டி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமனிடம் கேட்டபோது,

“அரசாணை எண் 177இல் மே மாதம் ஊதியம் இல்லை என்றோ பதினோரு மாதங்களுக்குதான் ஊதியம் வழங்கப்படும் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் எங்கள் பணி நியமனம் குறித்து 26.8.2011 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விதி எண் 110இன் கீழ் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில் 16549 ஆசிரியர்களுக்கு 99 கோடியே 29 இலட்சம் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது சிறப்பாசிரியர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்படி கணக்கிட்டால் அவர் குறிப்பிட்டது 12 மாதத்திற்கான சம்பளத் தொகையாகும்.

அதுமட்டுமின்றி, பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் என்பது கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ் (தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்) நியமிக்கப்பட்டதாகும். இத்திட்டமானது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு நிதிப் பங்களிப்புடன் நடைபெறுவதாகும். இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான சம்பளத்தில் மத்திய அரசு 60% வழங்குகிறது. மீதமுள்ள 40% தொகையை மாநில அரசு வழங்க வேண்டும். இதற்கென ஆண்டுதோறும் Project Approval Board மூலம் Annual work plan and Budget கூட்டம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தக் கூட்ட அறிக்கையியிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12 மாத சம்பளத்திற்கான நிதி ஒதுக்குவதாகத்தான் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாகவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை.

மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் மத்திய அரசின் 60% போக மாநில அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டதற்கு, “மாநில அரசு மூலம் பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தனியாக ஒதுக்கீடு எதுவும் இல்லை” என மாநில அரசு பதில் கொடுத்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் வரிசை எண் 181இல் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் எனக் கூறியிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது எங்களுக்கு நியாயமாகக் கொடுக்கவேண்டிய பலன்களைக்கூடக் கொடுக்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. மாண்புமிகு முதல்வர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக எங்களுக்குச் சேரவேண்டிய மே மாத ஊதியத்தையும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தர ஆணையையும் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஏற்கனவே சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்துவரும் சிறப்பாசிரியர்களை வாக்குறுதி கொடுத்து வஞ்சித்து வருகிறது அரசு. பணி நிரந்தரம் செய்வதற்கான சட்ட நுணுக்கங்களை அறியாமலா தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பார்கள்? பணி நிரந்தரக் கோரிக்கை ஒருபுறமிருக்க மாநில அரசின் நிதிப் பங்களிப்பாக ஒரு ரூபாய்கூட ஒதுக்காமல் ஒன்றிய அரசு வழங்கும் 60% நிதியை மட்டுமே வழங்கிவிட்டு மே மாதம் ஊதியம் வழங்க மறுப்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதோடு அது உழைப்புச் சுரண்டல் மற்றும் உரிமைச் சுரண்டலும் ஆகும்.

அரசுப் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கியதாகக் கூறிப் பெருமைப்பட்டுக்கொண்ட திமுக அரசு, சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே நியாயமானதாக இருக்க முடியும்.


Comments (12)


கௌதமன்
கௌதமன்
June 11, 2023

எங்களின் நிலையை உங்களின் சுவடு இதழ் மூலமாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

Uma

நன்றி நன்றி ஐயா.எங்களை பற்றிய செய்தி வெளியிட்டமைக்கு

Kadhar

தமிழ்நாடு அரசு உடனே தங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ள பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்… எங்கள் கோரிக்கைக்கு குரல் கொடுக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்

Jayachandharan
Jayachandharan
June 11, 2023

சுவடு…… பகுதி நேர ஆசிரியர்கள் காலச் சுவடு….. நன்றிகள் பல

கௌதமன்
கௌதமன்
June 11, 2023

எங்கள் நிலையை வெளியிட்டமைக்கு,உண்மையை வெளியிட்டமைக்கு நன்றி

தமிழ்
தமிழ்
June 11, 2023

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சோதனை மேல் சோதனை என்பதை தெளிவுபடுத்திய உங்களுக்கு நன்றி.

Simbu

எங்கள் நிலை பரிதாபமாக உள்ளது

sajin

good explanation

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

அறமற்ற செயல்!

Girija

தமிழ்நாடு முதல்வர் அவர்கள், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 12 ஆண்டு கால போராட்டம்

Vinoth

நன்றி

சரவணன்
சரவணன்
August 16, 2023

பகுதிநேர ஆசிரியர்களின் வலிகளை மனவேதனையை அருமையாக சொல்லியுள்ளிர்கள் நன்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *