திரைவிமர்சனம்

வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையிலோ சுய வரலாற்று அடிப்படையிலோ அல்லாது, அஜயன் பாலா எழுதிய நூலைத் தழுவி, அதே பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘தலைவி’.

பதிவாகியுள்ள அரசியல் வரலாற்று நிகழ்வுகளுடன், யூகங்கள் மற்றும் செவிவழி அடிப்படையிலான சில செய்திகளையும் தொகுத்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியைச் சுவையாக இயக்குனர் விஜய் காட்சிப்படுத்தியிருக்கிறார். எனவே, இதிலுள்ள உண்மைத்தன்மை நூறு விழுக்காடும் உத்தரவாதத்திற்கு உரியது அல்ல.

விருப்பமில்லாமல் வந்த திரைத்துறையிலும் விருப்பமில்லாமல் வர நேர்ந்த அரசியலிலும் அப்போது நிலவிய ஆணாதிக்கத்தைத் துணிவுடன் எதிர்த்து, சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாக, வெற்றியும் பெற்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைதான் ‘தலைவி’யில் விவரிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையும் அரசியலும் பின்னிப்பிணைந்த தமிழக வரலாற்றின் தலைவி அத்தியாயத்தில், ஜெயலலிதாவாகட்டும், ஆர் எம் வீரப்பனாகட்டும், வி.என்.ஜானகியாகட்டும், அத்தனை பேரும் சுற்றிவரும் மையப்புள்ளி எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆரின் விருப்பம் என்னவாக இருந்தாலும், இவர்கள் அனைவரது விருப்பமும், அவர் ஒருவராகத்தான் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்திய விதம் அவரவர்களுக்கு ஏற்ப, மாறுபட்டும் இருந்திருக்கிறது, அவ்வளவுதான்.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியதே கலைஞர்தான் என்றாலும், அதன் பிறகு அவரது அரசியலும் அவரைச் சுற்றியேதான் தொடர்ந்தது என்பதும் உண்மையே. இப்படத்தின் கதை ஜெயலலிதாவை நோக்கியது என்கிற வகையில், எம்ஜிஆரின் அரசியல் செயல்பாடுகள், அவரது காலத்தில் கலைஞரின் அரசியல் எல்லாம் ஒரு வரையறைக்குள் நிறுத்தப்பட்டுவிட்டன.

ஜெயாவாகக் கங்கனா ரனாவத் நிறைவாகவே தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே ஆர். எம்.வீரப்பன் உடனான மோதல், சீண்டல், அலட்சியம், கிண்டல், எகத்தாளம், எம்.ஜி.ஆர். மீதான அதீத அன்பு, அவ்வப்போதான பிணக்கு, சமயோசித அறிவு, திறன், கோபம், கண்டிப்பு, உணர்ச்சி வயப்படுதல் என ஜெயாவின் பன்முகத் தன்மையை, படத்தில் கிடைத்த வாய்ப்பில் வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு. அரவிந்த் சுவாமிதான் எம்.ஜி.ஆர். கனப்பொருத்தம். அவரிடமே வெளிப்பட்டிராத முக பாவங்களைக்கூட, இதில் இவர் வெளிப்படுத்தி இருப்பது அருமை. நாசர் (கலைஞர் கருணாநிதி), சமுத்திரக்கனி (ஆர் எம் வீரப்பன்) இருவரும் ஏற்ற பாத்திரத்தைப் பழுதில்லாமலும் அட்டகாசமாகவும் செய்துள்ளனர். உடல்மொழியுடன் குரலும் நாசருடையதே என்றால், அவருக்குக் கூடுதல் பாராட்டு. பாக்யஸ்ரீ (சந்தியா), ரெஜினா கஸன்ட்ரா (சரோஜாதேவி), மதுபாலா (வி என் ஜானகி), தம்பி ராமையா (மாதவன்), ஷாம்னா காசிம் (வி.கே. சசிகலா), ராதாரவி (எம்.ஆர்.ராதா) தத்தம் பாத்திரத்தில், உரிய பங்களிப்பைக் குறைவின்றி வழங்கியுள்ளனர்.

‘அறிந்தேன் ஆண்மையினை… உண்மையைத்தான் சொன்னேன்’ ‘செட்’டில் எம்.ஜி.ஆரிடம் சரோஜாதேவி, ‘செட்டுக்குள்ள நடிக்கறதுக்கு மட்டும்தான் நீங்க சம்பளம் தர்றீங்க. வெளியே வந்து நீங்க எடுக்கிற பாடத்த கேட்டுக்கறதுக்கு இல்ல..’ ஆர்.எம்.வீ.யிடம் சரோஜா தேவி, ‘தப்பில்லம்மா, அம்மா பண்ணதான், தப்பு’ அம்முவிடம் மாதவன், ‘இப்ப மரியாதை மனசுல வந்துருச்சு’ மாதவனிடம் அம்மு, ‘காப்பாத்தினது கடவுள் இல்லை. இதோ, இந்த மருத்துவரும் மருத்துவமும்தான். அறிவுதான் கடவுள்’ கலைஞர், ‘நல்லா இருக்கு; நான் உங்கள ரெஸ்ட் எடுக்க சொன்னா, நீங்க என் நிம்மதிய கெடுக்கப் பாக்கறீங்களா?’ எம்ஜிஆரிடம் ஜெயா, ‘இது என் படம். என் பணம். யார் வாழணும், யார் சாகணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். டென்ஷனா இருந்துச்சுன்னா மெதுவடை சுட்டு மெதுவா சாப்பிடு’ ஜெயாவிடம் ஆர்.எம்.வீ. ‘உண்மையைச் சொல்லுங்க; ரெண்டு பேர்ல யாரு பெஸ்ட் ஆக்டர்?’ கேட்கும் மாதவனிடம் ‘அது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? யார் பெஸ்ட் ஆக்டர்ன்னா, அது நான்தான்’ என்று சொல்லும் ஜெயா, ‘விரும்பறவங்களோட மனச கோபப்படுத்தலாம், காயப்படுத்தக் கூடாது’ அம்முவிடம் சந்தியா, ‘என்னைத் தவிர என் வாழ்க்கைக்கு எல்லாரும் முடிவெடுக்கிறாங்க, எனக்கு ஒரு வேலையும் இல்ல’, ‘இது விட்ட மாதிரி தெரியல, வேணான்னு வெட்ன மாதிரி தெரியுது’ ‘நாம விரும்பறவங்க நம்ம பக்கத்துல நிற்கும்போது எப்படி சந்தோஷம் இல்லாம இருக்க முடியும்? அது நிஜமல்ல, வெறும் பிம்பம்தான்னு நினைக்கும்போது எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?’ ஜெயா, ‘நாம மக்கள விரும்பினா மக்கள் நம்மள விரும்புவாங்க. அதான் அரசியல்’, எம்ஜிஆர், ‘ஜானகி அம்மாதான் எம்.ஜி.ஆரோட மனைவி, அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, மனைவி தலைவியாக முடியாது’ ஜெயா. இப்படி வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்; பலே, மதன் கார்க்கி.

காமிரா கோணங்கள், லைட்டிங், ஏரியல் ஷாட்ஸ், பாடல்களைப் படமாக்கிய விதம் என விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. இணையாக, ஜி வி பிரகாஷ் குமாரின் அந்தந்தக் காலகட்டத்திற்கான திரை இசை உட்பட, உணர்வுபூர்வமான பொருத்தமான பின்னணி இசையும் அருமை. படத்தொகுப்பு அந்தோணி. தொலைக்காட்சித் தொடராகவோ, திரைப்படமாக இருந்தால் பாகங்களாகவோ எடுக்க வேண்டிய அளவிற்கு விரிவாக்கம் தேவைப்படுகின்ற இக்கதையை, இரண்டரை மணி நேரத்தில் சுருக்குவது என்பது மிகவும் சிரமம்தான். விளைவு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்கிற விதத்தில், நிகழ்வுகளின் ஓட்டத்தில் தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் இயலாத திடீர்த் தாவல்கள் நிறைய.

எம்.ஆர்.ராதா ஓர் இரவில் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்கிறார். சுடும் சத்தம் கேட்கிறது. அடுத்து எம்.ஆர். ராதா காயத்தோடு வெளியேறுகிறார்; எம்ஜிஆர் ரத்தவெள்ளத்தில் தரையில், என்று துண்டு துண்டாகக் காட்சிகள். டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசி, எடுத்த முடிவை உடனடியாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்காத ஜெயலலிதா, ‘இதை எப்போ, எங்க சொல்லனும்னு எனக்குத் தெரியும், நான் சொல்லிக்கிறேன்’ என்கிறார். ஆனால், அதை இறுதி வரை சொல்லாமல் போனதாகத்தான் படத்தில் தெரிகிறது. அதே போன்று, சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பியதில் இருந்து, இறக்கும்வரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திக்காதது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திரைத்துறையிலும் அரசியல் துறையிலும் தவிர்க்க இயலாத பிரமுகர்களாகத் திகழ்ந்த, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எம். வீ சார்ந்த நிகழ்வுகளும் செய்திகளும், ஏறக்குறைய அனைத்தும் அறிந்தவைதான் என்கிற வகையில், இந்தக் கதையில் புதுமை இல்லைதான். என்றாலும், பிந்தைய ஆட்சி அதிகாரம், வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழக்கூடிய எந்தவிதமான மதிப்பீடையும் தவிர்த்த மனநிலையுடன், ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் நுழைந்த ஜெயலலிதா அங்கும், அதற்குப் பின்னர் பல இடர்ப்பாடுகளைத் தாண்டி, ‘தலைவி’யாக அவதாரமெடுத்த அதே ஆணாதிக்கம் மிகுந்த அரசியலிலும் சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதான நிகழ்வுகள் அனைத்தையும் ஒருசேர ‘மலரும் நினைவு’ களாக, இப்பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில், மீண்டும் திரையில் காண்பது, சுவைதரும் அனுபவமே.

மதிப்பெண் : 7/10

விமர்சனம்: மது ராஜேந்திரன்

படங்கள்: இணையத்திலிருந்து


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *