ஹிஜாப் அணிவது மத அடையாளமா?
கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவரத் தடை விதித்த பிரச்சினை தற்போது அடுத்த வடிவம் பெற்றுள்ளது. தற்போது கர்நாடக அரசு, தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அந்தந்த நிர்வாகம் சொல்லும் சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், இந்தக் கட்டுப்பாடு அரசியல் சாசனம் வழங்கும் மதச் சுதந்திர உரிமைக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளது. மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, 200க்கும் மேற்பட்ட மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனால், அந்தக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட வணியில் வடிவமைக்கப்பட்ட இந்து மதச் சாமியார் சிலையை விடவா ஹிஜாப் அணிவது மத அடையாளத்தை முன்னிறுத்துகிறது? தலையில் முக்காடு அணியும் வழக்கம் தென் மாநிலங்களில் அதிகம் இல்லையென்றாலும் வட மாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலப் பெண்களில் அனைத்துப் பெண்களிடமும் உண்டு. கிறித்தவ மதத்திலும் கூட, தொழுகை நேரங்களில் பெண்கள் முக்காடு அணிந்தே தொழகை நிகழ்த்துவார்கள். இந்தியாவில் பல்வேறு மத, சமுதாயப் பெண்களிடையே, வேற்றுக் குடும்ப ஆண்களைக் கண்டால் உடனடியாகப் பெண்கள் தங்கள் தலையில் முக்காடு இட்டுக் கொள்வது இன்னமும் வழக்கமாகவே உள்ளது. ஏதோ ஒரு வகையில் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக்கொள்வது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஆனாலும், ஹிஜாப் அணிவது ஒரு மத அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை மத அடையாளமாகவே எடுத்துக் கொண்டாலும், விபூதி குங்குமம் வைப்பது, நாமம் போடுவது போன்றவையும் மத அடையாளங்களே. அவ்வளவு ஏன், ஒரே மதத்துக்குள் பிறரைத் தாழ்த்தும் வகையில் பூணூல் அணிவது சாதியத்தின் அடையாளம் இல்லையா? ஹிஜாப் அணியத் தடை விதிப்பவர்கள், இந்த அடையாளங்களுக்கும் தடை விதிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. ஹிஜாபுக்குப் போட்டியாக காவி ஷால் அணிந்து வருவது மதவாத அரசியலின் மற்றொரு வெளிப்பாடே அன்றி வேறில்லை. கல்லூரி மாணவிகள் வரை தற்போதைய சிற்பான்மையினர் மீதான மதவெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது இந்த சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதை மரமாகிக்கொண்டு இருப்பதன் நிகழ் சாட்சி. ஹிஜாப் என்பது ஆணாதிக்கத்தின் சாட்சி என்றாலும் இன்றைய பெண்களில் சிலர் அதை அலங்காரத்தின் வடிவமாக மாற்றிக்கொண்டு பல்வேறு வண்ணங்களில் பல்வேறு டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த வழிபபாட்டுப் பாடல்கள், நடைமுறைகளை இன்னமும் வைத்துக்கொண்டு,கல்லூரி வயதில் உடைக் கட்டுப்பாடு விதிப்பது என்பது இன்னமும் இந்தச் சமூகம் எவ்வளவு பிற்போக்கான சிந்தனைகளில் உழல்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.