சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

நூல் அறிமுகம் மகாபாரதம், ராமாயணம், பாகவதம் எனும் வார்த்தைகள் பார்வையிலும் காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும் முகங்கள் சில உண்டு. கிராமத்தில் பொட்டுத் தாத்தா, அம்மா வழித் தாத்தா சின்ன ராமசாமி (நாங்கள் ‘வண்டித் தாத்தா’ என்று கூப்பிடுவோம்), பெரியப்பா வெங்கடாஜலபதி, பெருமாள் கோவில் அர்ச்சகர் ராஜர் (நம்பியின் அப்பா), சீனிவாசன் மாமா (தமிழாசிரியர்; மாமாவின் பெண் விஜயராணி என் வகுப்பு), திருமங்கலத்தில் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் நண்பன் நாராயணமூர்த்தி மூலம் அறிமுகமாகி அன்பின் நெருக்கமான சாமிப் பாட்டி அனைவரும் அப்புராணக் கதைகளை என் மனதிற்கு அறிமுகப்படுத்தி, ஆழ் மனத்தில் பதியச் செய்தவர்கள். பால்யத்தில் எத்தனை நூறு கதைகள் கேட்டிருப்பேன் அவர்களிடம்! கிராமத்தில் வண்ணமயில் கடைக்கு முன்னாலிருக்கும் காளியம்மன் கோயிலில், முன்னிரவுகளில் சுற்றிலும் கிராமத்து ஜனங்கள் அமர்ந்திருக்க தமிழ் பண்டிட் சீனிவாசன் மாமா சத்தமாய் ராகமாய் சுந்தரகாண்டம் படிக்கும் காட்சி இன்னும் பசுமையாய் நினைவுகளில் இருக்கிறது. நம்பியின் வீடு, வசந்தா அத்தையின் வீட்டிற்கு முன்னால். நம்பியின் அப்பா ராஜர் தினமும் பாரதம் தொடர்ந்து சொல்ல (பாரதக் கதை சொல்லத் தொடங்கிய நாளிலும் முடிக்கும் நாளிலும் பூஜை செய்து பிரசாதங்கள் தருவார்), நாங்கள் சிறுவர்களும் அத்தையும் பாட்டியும் (வசந்தா அத்தையின் அம்மா) இன்னும் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்போம். தேவி பாகவதத்தை எனக்கு நெருக்கமாக்கியது பொட்டுத் தாத்தாவும் திருமங்கலம் சாமிப்பாட்டியும். பாரதமும் பாகவதமும் என்றும் வற்றாத கதைகளின் ஊற்று. இன்றும் வியப்பளிக்கும் பிரம்மாண்டம். பி.கே.வின் இனி ஞான் உறங்கட்டே – கனவுகளில்/முன் வெளிகளில் உலாவச் செய்யும், மயக்கும், சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்த அபாரமான நாவல். ஆ.மாதவனின் அற்புதமான மொழிபெயர்ப்பு. மொழியின் இனிப்பிலும் அந்த எழுத்தின் வசீகரத்திலும் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறேன்! ஆரம்பத்தில் விலகி நின்று புன்னைகத்த மொழியிடம் மனம் குவித்து வேண்டிக் கொண்டேன், “என்னை உடன் அழைத்துப் போ” என்று. அதன்பின் அது கைப்பிடித்துக் கொண்டது. பிரமாதமான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, மனம் நெகிழ்த்தும் பயணம். செவ்வியல் (கிளாஸிக்) நாவல்களுக்கு வாசிப்பனுபவம் எழுதுவது இடர் தருவது. என்ன எழுதினாலும், எத்தனை எழுதினாலும் மனம் திருப்தி அடையாது. மனம் அந்நாவலின் ஆழத்தில், ஆன்மாவில் திளைத்துக் கிடக்கும். அது குறித்து எழுதுவதெல்லாம் மேலோட்டமாகவே அமைந்து/உணர்ந்து விசனப்பட வைக்கும்; எழுதாமல் தப்பிக்கலாம் என்றாலும் விடாது. அந்த எழுத்திலிருந்து கிடைத்தவற்றைத் தொகுத்துக் கொள்ள, சுவையின் ஒரு துளியையாவது பற்றிக்கொள்ள, பதிந்துவைக்க மனம் விழையும். *** ‘இனி ஞான் உறங்கட்டே’ நாவலில் மகாபாரதத்தின் முக்கியப் பாத்திரங்கள் பெரும்பாலானோர் வந்தாலும், முக்கியமாய் இது கர்ணனின் கதை; திரௌபதியின் கதையும் கூட. மனக் கொந்தளிப்புகளின் நாவல் என்று இந்நாவலைச் சொல்லலாமா? மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது மனதில் உருவாகும் தவிர்க்க முடியாத கேள்விகளை நாவலுக்குள் எழுப்பி, அதற்கான விடைகளை அதன் பாத்திரங்கள் வாயிலாகவே எழுத்தினூடே கண்டடையும் ஒரு கவித்துவ நவீன மனத்தின் படைப்பு ‘இனி ஞான் உறங்கட்டே’. யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரையும் போர்க்களத்தில் கொல்லும் வாய்ப்புகள் கிடைத்தும், தான் தாய்க்குத் தந்த வாக்குறுதியால் அவர்களைக் கொல்லாமல் விடுகிறான் கர்ணன். கர்ணனிடம் நால்வரும் தோற்று, போரில் உயிர்ப் பிச்சை பெற்றுப் பின்வாங்கும் காட்சிகள் நாவலில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. நாவலில் வரும் ஹஸ்தினாபுரத்தின் ஆயுத வித்தை அரங்குக் காட்சிகள், நாரதர்-யுதிஷ்டிரன் சந்திப்பு, குந்தி-கர்ணன் சந்திப்பு, கர்ணன்-கிருஷ்ணன் சந்திப்பு, இந்திரன்-கர்ணன் சந்திப்பு, சபையில் கிருஷ்ணையின் துகிலுறியப்படும் காட்சிகள், போர்க் களத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கர்ணன் சந்திக்கும் காட்சி,  பீமனின் துச்சாதன வதம், அர்ஜுனனின் கர்ண வதம் அனைத்தும் மிக அபாரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. போர்க்களக் காட்சிகள் ஒரு விஷூவல் ட்ரீட். நாவலில் எனக்குப் பிடித்த காட்சிகளைச் சொல்லவேண்டுமென்றால் பல பதிவுகள் எழுதவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு ஒன்று மட்டும். போர்க்களத்தில், போரின் நடுவில், அர்ஜுனனைப் பார்த்துவரும்படி யுதிஷ்டிரன் சொல்ல, பீமன் கௌரவர் சேனை நடுவே ரதத்தில் பாய்ந்து விரைகிறான். எதிரில் கர்ணன். உக்கிரமான போர் இருவரிடையிலும். வெற்றிக் களிப்பில் மனதைக் கட்டுப்பாட்டில் நிறுத்திய ராதேயன் கர்ணன் சின்ன சின்ன சரங்களைத் தொடுத்துவிட்டு பீமனை வேடிக்கையாக கிச்சுக்கிச்சு மூட்டினான். தாயிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் நினைவில் வரப்பெற்றவனானான். வீமன் அருகே போய் வில்முனையால் தொப்பையில் கிசுகிசுப்பு மூட்டி வாய்விட்டுச் சிரித்தான். சகிக்கவொன்னாத அவமானத்தால் சிலிர்த்த வீமன், அந்த வில்லினைப் பறித்தெடுத்து, கர்ணனது உச்சிமேல் அடித்தான். விலகிக்கொண்ட கர்ணன் கேலியாக பின்னும் நகை செய்தான். “தொப்பை வயிற்றுக்காரனாகிய அடேய் கௌந்தேயா, விருந்து மண்டபம்தான் உனக்குத் தகுதியான இடம். நீ எதற்காகப் போர்க்களம் வரவேண்டும்? வில் வீரத்தில் அஞ்ஞானி நீ. மரத்தைப் பிடுங்கி அடித்துக் கொன்றிட இது, கிர்மீரனும், பகனுமல்ல. இது கர்ணன் என்பதை நன்றாக நினைவில் வை. கானகத்தில் அலைந்து திரிந்து காய்கனிகளைத் தின்று வயிற்றை நிரப்புவதல்ல போர் என்பதை அறியவில்லை நீ. உனக்குப் போரிட ஆசையாயின் உனக்குத் தகுந்தவரிடம் போய்ப் போரிடு. அல்லது கிருஷ்ணார்ஜுனர்களின் நிழலில் போய் மறைந்துகொள். அவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அல்லது வேகமாக வீட்டை நோக்கி ஓடிவிடு. அதுதான் உனக்கு நல்லது…” மாஸ்டர் பி.கே.விற்கும் தமிழில் தந்த ஆ.மாதவனுக்கும் நன்றியும் வணக்கங்களும் என்றென்றும் அன்பும். இனி நான் உறங்கட்டும் – நாவல்மலையாள மூலம்: பி.கே.பாலகிருஷ்ணன்தமிழில்: ஆ.மாதவன்வெளியீடு : சாகித்ய அகாடமி

பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார். இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட  கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார். அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி  முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும்,  காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.  இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி  வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான். நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள். கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார். பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள்.  அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள். பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர். மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள். ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.  பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர். இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள். இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள். மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த  உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர். பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.  ‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான். திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர். யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார். படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார். விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன்  சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார். இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும்  ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக்  காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.  வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான். மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர். நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான்.  அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார். வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை. கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள். இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு  பாட ஆரம்பித்தாள். ‘இடி இடித்து எண்திசையும்வெடிபடும் அவ்வேளையிலேநடனக் கலை வல்லவர் போல்நாட்டியந்தான் ஆடுவதேன்?’ ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து  உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி  இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார். இரண்டாம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன் – 13

பொன்னியின் செல்வன் – 13

சின்ன பழுவேட்டரையரிடம் பாதாளச் சிறையின் சாவியைப் பெற்றுக்கொண்ட குந்தவை, வானதியை அழைத்துக்கொண்டு வைத்தியர் மகனைக் காணச் சென்றாள். பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கச்சாலையின் பின்புறமாகப் பாதாளச் சிறைச்சாலை இருந்ததால் அதற்கான கட்டுக்காவலும் அதிகமாக இருந்தது. அங்கு சென்றபோது சேந்தன் அமுதன் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் யார் என்பதையும், அவன் வந்தியத்தேவனுக்குச் செய்த உதவியையும் பற்றி குந்தவை தெரிந்து கொண்டாள். வைத்தியர் மகனைப் பழுவூர் இளையராணியின் ஆட்கள் அழைத்துப் போனதையும், வந்தியத்தேவன் காவலர்களிடம் இருந்து தப்பி இலங்கைக்குச் சென்றுவிட்டான் என்பதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சேந்தன் அமுதன் விடுதலை செய்யப்பட்டான். பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், முக்கியமான நிருபம் (கடிதம்) ஒன்றை ஆதித்த கரிகாலனுக்கு எழுதி முடித்தாள் நந்தினி. அதில், ‘அரசிளங்குமரா! தயங்கி, பயந்து இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும், தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா? தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? இதைக் கொண்டுவரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் – இங்ஙனம், துரதிர்ஷ்டத்தின் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி’ என்று எழுதி இருந்தது. அந்த நிருபத்தை, அவளது கவர்ச்சியில் ஏற்கெனவே மயங்கிப் போயிருந்த கந்தமாறனிடம் கொடுத்து, அதைக் கரிகாலரிடம் சேர்ப்பிக்கும்படியும், எப்படியும்  அவரைக் கடம்பூருக்கு அழைத்து வரும்படியும் வேண்டிக் கொண்டாள். வந்தியத்தேவன் கந்தமாறனை முதுகில் குத்தியிருக்கமாட்டான் என்றும் அன்று நிலவறைச் சந்திப்பின்போது தன்னை பழுவேட்டரையர் மகளாக அழைத்ததையும் நினைவுபடுத்தினாள். கந்தமாறன் யோசித்து முடிக்குமுன் பெரிய பழுவேட்டரையர் ஆங்காரத்துடன் வந்து சேர்ந்து கந்தமாறனை கேள்விகளால் துளைத்தார். நந்தினி பொறுமையாக அதற்கெல்லாம் பதில்சொல்லி அவரை சமாளித்து, கந்தமாறன் ஆதித்த கரிகாலனுக்கு ஓலை கொண்டுசெல்வதைப் பற்றிக் கூற, பழுவேட்டரையாரால் நந்தினியை எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை. கந்தமாறன் சென்றபிறகு, தன்னை அவன் எதிரில் சந்தேகப்பட்டுப் பேசியதற்காகப் பழுவேட்டரையரிடம் பெரிதாய் வருந்தி, தன்மேல் சந்தேகம் உள்ளதானால் வாளெடுத்துக் கொன்றுவிடுங்கள் என்றெல்லாம் கூறி இளக வைத்தாள். பின் பழுவேட்டரையர் அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினார். அங்கே இலங்கையில்.. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இளவரசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில், பார்த்திபேந்திரப் பல்லவனைச் சந்திக்க நேர்ந்தது. வந்தியத்தேவன், தான் வந்த காரணத்தைத் தெரிவிக்காமல் பேச்சை முடித்துக்கொண்டான். ஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் வந்திருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். பார்த்திபேந்திரன் சென்றவுடன், அந்த ஆட்கள் திருப்பியம்புறம் பள்ளிப்படையில் சோழர் குலத்தை அழிக்க சபதம் எடுத்துக் கொண்டவர்கள் என்று வந்தியத்தேவனிடம் கூறினான். வந்தியத்தேவன் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு பூங்குழலியின் தமையன் இலங்கைக்குச் சென்றதைப்பற்றி அவள் தந்தை குறிப்பிட்டதை  நினைத்துக்கொண்டான். இலங்கையின் சில பகுதிகள் சிங்கள மன்னன் மகிந்தனிடம் இருப்பதாகவும், சோழப் படை கைப்பற்றிய பகுதிகளில் இளவரசர் அருள்மொழி வர்மர் கருணையுடன் இலங்கை மக்களிடம் நடந்து கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். அப்போது வீதியில் பெரிய யானை மீதான அம்பாரியில் சீன யாத்ரிகர்கள் அமர்ந்திருக்க, அதன் மீதிருந்த பாகனை ஆழ்வார்க்கடியான் கூர்ந்து கவனித்து அது இளவரசர் அருள்மொழிவர்மர்தான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் வந்தியத்தேவன் அதைக் கவனித்திருக்கவில்லை. ஒரு காவலாளி கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தைச் சரிபார்த்து அவர்களை அழைத்துச் சென்றான். காவலாளியும் ஆழ்வார்க்கடியானும் இரு குதிரைகளில் ஏறிக்கொள்ள, வந்தியத்தேவனுக்குக் குதிரை வழங்கப்படவில்லை. கோபமடைந்த வந்தியத்தேவன் காவலாளியைத் தள்ளிவிட்டு, தாண்டிப்போன குதிரைகளைப் பின் தொடர ஆரம்பித்தான். வெகுதூரம் சென்றபிறகு சோழர் சைன்யத்துடன் தாவடிகள் காணப்பட்டது. அப்போது முன்சென்ற குதிரைகளிலிருந்து ஒருவர் மட்டும் வேகமாக வந்து வந்தியத்தேவனின் முகத்தில் குத்திக் கீழே தள்ளி அவன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். வந்தியத்தேவனால் அசையவே முடியவில்லை. அப்போது சுற்றியிருந்த அனைவரும் அந்த வீரனின் முகத்தைக் கண்டு ‘பொன்னியின் செல்வர் வாழ்க’ எனக் கோஷமிட, வந்தியத்தேவன் திகைத்தான். பின் அனைவரும் விலகிச் செல்ல, அருள்மொழிவர்மர் விஷயங்களைக் கேட்டறிந்தார். ‘பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைக் காஞ்சிக்கு அழைத்து வரும் தூதனாக வந்திருப்பதை அறிந்தே, உங்களைச் சந்திக்கும் முன்பு அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்’ என இளவரசர் கூறினார். ஆழ்வார்க்கடியான் தன்னை இலங்கையிலேயே இருக்கும்படி அநிருத்த பிரம்மராயர் சொல்லி அனுப்பியதாகக் கூறினான். மூன்று பேரிடமும் இருந்து வெவ்வேறு விதமான செய்திகளை அடைந்த இளவரசர் அமைதி காத்தார். பின்னர் பார்த்திபேந்திரனைச் சந்திப்பதற்காக அநுராதபுரம் கிளம்பிய அருள்மொழிவர்மருக்கு, செல்லும் வழியில் புத்தரின் பாதங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு செய்தி கிடைத்தது. அன்று இரவில் ஒரு படித்துறை தடாகத்தின் அருகே மூவரும் சென்றனர். அங்கு ஒரு பிட்சு வந்து அவர்களை ரகசிய வழியொன்றில் நிலவறை விகாரம் ஒன்றின் உள்ளே அழைத்து சென்றார். அங்கு ஒரு கருங்கல் மண்டபத்தில் தங்க சிங்காதனம், மணிமகுடம், உடைவாள், செங்கோல் அனைத்தும் இருந்தன. அங்கிருந்த தலைமைப் பிட்சு இளவரசரை அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இலங்கை அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அருள்மொழி வர்மர், தான் அவருடைய வேண்டுகோளுக்காகப் பெருமைப்படுவதாகவும் தன் தந்தையும் அரசருமான சுந்தர சோழருக்கு, தான் கீழ்ப்பட்டவன் என்பதால் அவரின் சொல்லின்றி எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி மறுத்தார். வந்தியத்தேவன் இளவரசரின் பெருந்தன்மையை எண்ணிப் பெருமிதப்பட்டவாறே இருக்க, மூவரும் வெளிவந்தனர். அதைப்பற்றிப் பேசிக்கொண்டே வீதியில் நடந்தபொழுது கைதட்டும் ஓசை கேட்க, திரும்பிப் பார்க்கையில் ஓர் உருவம் நின்றிருந்தது. அதை நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு இளவரசர் நகர, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து மேல் மாட முகப்பு இடிந்து வீழ்ந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தால்கூட மூவரும் இறந்திருக்கக் கூடும். காப்பாற்றிய அந்த உருவத்தைக் கண்ட வந்தியத்தேவன் திகைத்தான். ஏனெனில் அந்தப் பெண் பழுவூர் இளையராணி நந்தினியின் உருவ அமைப்பில் இருந்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட, சித்தப் பிரமையோ எனக் குழம்பினான். ஒரு மண்டபத்தை அடைந்து அங்கு இரவைக் கழிப்பதற்காக மூவரும் தங்கினர். அப்போது வந்தியத்தேவன் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கேட்க, அருள்மொழி வர்மர் அவளைப்பற்றிச் சொல்லலானார். ‘சிறு வயதில் என்னைப் பொன்னி நதியில் இருந்து காப்பாற்றிய பெண்மணி இவர்தான். நான் இலங்கைக்கு வந்தபிறகு, ஒரு சமயம் இரவில் எழும் விசித்திரமான குரலைக் கேட்டு என் வீரர்கள் அச்சப்பட, அது இந்தப் பெண்மணியின் குரல்தான் என்பதை நான் கண்டுகொண்டேன். அவரால் பேச முடியாது என்றும், அவர் என்மீது அளப்பரிய பாசம் கொண்டவர் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்போது அங்கு குளிர்காய்ச்சல் பரவி இருந்ததால், உடனே அங்கிருந்து நாங்கள் கிளம்பி விட வேண்டும் என அந்த மாதரசி கேட்டுக்கொள்ள நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அது மட்டுமல்லாமல் என்னைத் தொடரும் மறைமுக எதிரிகள், வனவிலங்குகள், மலைப்பாம்புகள் போன்ற பல அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்று கூறியவர், அவர்களை படுத்துக்கொள்ளும்படி கூறினார். அப்பொழுது அந்த மூதாட்டி அங்கு வந்து, அவர்களைப் பின் தொடருமாறு சைகை செய்ய மூவரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்களை ஒரு ரகசிய  குகைக்கு அழைத்துச்சென்று, குகையின் சுவர்களில் தான் வரைந்திருந்த  சித்திரங்களைக் காட்டினாள். அந்தச் சித்திரங்களில் இருந்து,  ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு வாலிபன் காதல் கொள்வதும், அவர்கள் மகிழ்ந்திருப்பதும், ஒரு தருணத்தில் அந்த வாலிபன் பிரிந்து செல்ல, இந்தப் பெண் தொடர்ந்து சென்று அவனை ஒரு நகரத்தில் பார்த்தபோது, அவ்வாலிபன் அரசனாகப் பட்டம் சூடி நிற்பதைக் கண்டு அந்தப் பெண் மனமுடைந்து கலங்கரை விளக்கில் இருந்து விழுவதையும், அவளை ஒருவர் காப்பாற்றியதையும் அறிந்து கொண்டார்கள். பின் அந்தப் பெண் மனநிலை சரியில்லாத வெறியளாகவும் கர்ப்பமுற்றும் இருப்பதையும், அங்கிருந்த ராணி ஒருத்தியும் அப்போது கர்ப்பமாக இருப்பதையும்,  அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறப்பதையும், ராணி அந்தக் குழந்தைகளில் ஒன்றை வளர்க்கக் கேட்பதையும், இந்தப் பெண் இரண்டு குழந்தைகளையுமே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டதையும், தூரமாய் இருந்து இரு குழந்தைகளையும் அவ்வப்போது பார்ப்பதுவுமான பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பின்பொரு நாள் காவிரியில் விழுந்த குழந்தையை அப்பெண் காப்பாற்றுவது  போன்ற சித்திரத்தைப் பார்த்ததும்,  ‘அந்தப் பெண் நீங்கள்தான்’ என அருள்மொழி வர்மர் சுட்டிக்காட்ட, அந்த மூதாட்டி இளவரசரை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். பின் இன்னொரு சுவரில் வரவிருக்கும் அபாயங்களை சித்திரத்தில் எழுதி அருள்மொழிவர்மரிடம் காட்டினாள். குகையின் மேல் நின்று பார்த்தபொழுது இவர்கள் படுத்திருந்த இடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தொடரும்.

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து, எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 4, 5 தேதிகளில் மழைக்கு ஊடாகவும் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. அவற்றுள், திரையில் அகிலனின் நாவல்கள் என்ற அமர்வில் கலந்துகொண்ட கவிஞரும் திரை இயக்குனருமான பிருந்தா சாரதி ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.   ஒரு எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள், சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன. இங்கே நேற்றைய அமர்வில் பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள், தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் தன்னை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்று கூறினார். அதேபோல, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில், தான் அவரைச் சந்தித்தபோது, அகிலனின் ‘பொன்மலர்’ நாவலை வாங்கி வருமாறு கேட்டதைக் குறிப்பிட்டார். பிறகு கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தபோதும் தலைமாட்டில் அந்நூலைக் கண்டதாகக் கூறினார். ஒரு முதலமைச்சர் முதல் சிற்றூரில், கிராமத்தில் படிக்கிற மாணவி வரை அகிலனின் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் அகிலன் அவர்கள், ஏறக்குறைய 20 நாவல்கள், 200 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள்,  சிறுவர் கதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, திரைக்கதை என, தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, எதார்த்தமான கதைகளை, மானுடத்தின் மாபெரும் லட்சியமான அன்பை முன்வைத்து காந்திய வழியில் தன் கதைகளை எழுதியவர் அகிலன். எளிய மொழி அவரது மொழி. கதை கூறும் முறையிலும் பெரிய சிக்கல் எதுவும் அற்றவை அவரது கதைகள். ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலான பெரும் பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்தபோது, பலரும் வாசித்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்ளும் உந்துவிசை பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவருடைய கதைகளின் நாயகர்கள், நாயகிகள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஏன், அவர் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு ஆக்கபூர்வமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கியவர் அவர். அகிலனின் கதைகள் ஒரு காலகட்டத்தின் முகம் என்றும் கூறலாம். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான 50 ஆண்டுகளின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களைத் தன் கதைகளில் எழுதினார் அகிலன். பெண்ணுரிமை, பொருளாதாரச் சமத்துவம்,  போலித்தனங்களைத் தோலுரித்து உண்மையைத் தேடுதல் போன்ற கருப்பொருட்களை காந்திய நெறியில் எழுதியவர். தமிழில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர். சாகித்திய அகாடமி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றவர். கவிஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகம்தான் வளர்ச்சி பெறுகிற ஒரு சமூகமாக முன்னேற முடியும் என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஆகவே எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை, குறைந்தபட்சம் 100 இடங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி தொடங்கி வைத்து விட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற இலக்கிய அமைப்புகள் அகிலனின் படைப்புகள் குறித்துக் கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய மனங்களில் நல்ல நெறிகளையும் நம்பிக்கையையும் விதைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 5

பொன்னியின் செல்வன் – 5

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அவ்வப்போது சிங்கள மன்னர்கள் பாண்டியர்களுக்கு உதவி செய்வது வழக்கமாய் இருந்தது. பாண்டிய மன்னனான வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் வென்றதைத் தொடர்ந்து, ஈழமன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என சோழநாடு விரும்பியது. போர் புரிவதை விரும்பும் சோழத் தளபதிகள்,  மாவீரர்கள் அங்கு செல்வதற்குப் போட்டி போட்டனர். அப்பொழுது இளவலான அருள்மொழிவர்மன், தன்னை அனுப்பும்படி அனைவரிடமும் வலியுறுத்தினார். குந்தவை தேவிக்குத் தன் தம்பியாகிய அருள்மொழிவர்மன் மீது தனிப்பிரியம். அவரும் தமக்கை குந்தவை இட்ட கட்டளைகளை மீறியதே கிடையாது. தன் தம்பியை வீரனாகவே வரித்திருந்த குந்தவைக்கு ஈழம் செல்லத் தகுதியானவன் அருள்மொழிவர்மர்தான் என்று தோன்றியது. ஈழத்துக்கு வழியனுப்புகையில், தன் தோழியான வானதியை ஆரத்தி எடுக்கப் பணித்தபொழுது, வானதி தனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியால் தட்டைத் தவறவிட்டு மயக்கமடைந்தாள். இளவரசரும் பதற, குந்தவை வானதியைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து சென்றார். இளவரசர் வந்து வானதியைசி சற்றே சமாதானப் படுத்திவிட்டு விடைபெற்றுச் சென்றார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் வானதிக்கு அடிக்கடி மயக்கம் வந்தது. குந்தவையும் அவளைக் கண்போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். இது, உடனிருந்த தோழிகளிடையே வானதியின் மேல் பொறாமையைச் வளரச் செய்தது. வானதியின் பயத்தைப் போக்க, தாங்கள் ஜோதிடர் வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் ஒரு பொம்மை முதலையைத் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள் குந்தவை. அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, அனைவரும் ‘முதலை முதலை’ எனக் கத்திக்கொண்டு பயந்தது போல நடித்தனர். வானதி பயப்படவில்லை. ஆனால், இந்த சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த வந்தியத்தேவன், பெண்களைக் காப்பாற்றுவதாக எண்ணி ஈட்டியால் முதலையைத் தாக்கினான். அதிலிருந்து பஞ்சும், வாழைநாரும் வெளிவந்தன. சுற்றியுள்ள பெண்களெல்லாம் சிரிக்க, வந்தியத்தேவன் குழம்ப, குந்தவை ஜோதிடர் வீட்டில் பதில் சொல்லாமல் வந்ததற்கும், இங்கு பொம்மை முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும் சொல்லி வருத்தம் தெரிவிக்க, வந்தியத்தேவன் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லி மாளாது. இத்தனையும் பெண்களுக்கு நடுவில் நடக்கவும், அசூயை அடைந்த வந்தியத்தேவன் குதிரையை விரட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பி விட்டான். அதைக் கண்டு குந்தவை வருந்தியதோடு, தோழிகளையும் கடிந்து கொண்டாள். குந்தவையைச் சந்தித்தபிறகு அங்கேயே நின்றுவிட்ட மனதைத் திருப்ப முடியாமல் வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். குந்தவையின் நினைவால் இயற்கை எழிலை ரசிக்க முடியாமல் புதுவித உணர்வில் தவித்துக்கொண்டே தஞ்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவையாறு திரும்பும் வழியில் கடம்பூர் மாளிகையில் பார்த்திருந்த மூடுபல்லக்கு வருவதைக் கவனித்தவன், அதில் இருப்பவர் மதுராந்தகன் என்பதை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என முடிவு செய்துகொண்டு பல்லக்கைத் தொடர்ந்தான். பழுவேட்டரையரும் அவரின் பரிவாரங்களும் உடன் வராததால் இன்னும் துணிவு பிறந்தது. பழுவூர் ஆட்கள் இவன் பின்தொடர்வதைக் கவனித்து விசாரிக்க முயல்கையில், வேண்டுமென்றே பல்லக்கை இடிப்பதுபோல் சென்று காப்பாற்ற வேண்டும் என பல்லக்கில் இருப்பவரிடம் முறையிட்டான். காவலர்கள் பிடிக்க வந்த நேரம் பல்லக்கின் மூடுதிரை விலகியபோது உள்ளே தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தான். மதுராந்தகனை எதிர்பார்த்த வந்தியத் தேவனுக்கு அழகிய மோகினியைப் போன்ற பெண்ணைக் கண்டு பேரதிர்ச்சி. முதலில் பேச்சு வராமல் திகைத்தவன், அவள் நந்தினிதான் என்று யூகித்த கணத்தில், ஆழ்வார்க்கடியானின் பெயரை உபயோகித்து, தங்களிடம் பேச வேண்டும் என்றான். பழுவூர் இளைய ராணியான நந்தினி, ஒரு கணம் வியந்தவள் அரண்மனையில் வந்து சந்திக்குமாறு கூற, ‘காவலர்கள் விடமாட்டார்களே’ என வந்தியத்தேவன் நயந்தான். உடனே நந்தினி, ஒரு தந்த மோதிரத்தைக் கொடுத்து, பின் தொடர்ந்து வரவேண்டாம் என எச்சரித்துவிட்டே அந்தப் பல்லக்கை நகரச் சொன்னாள். வந்தியத்தேவன் அவள் அழகில் கிறுகிறுத்துப் போயிருந்தான். பழுவேட்டரையர் இவள் பேச்சைக் கேட்கிறார் என்பது உண்மையானால் அது தவறில்லை என்று நினைத்துக் கொண்டான். பல்லக்கு வெகுதூரம் சென்றபிறகே கிளம்பிய வந்தியத்தேவன், தஞ்சையை அடைந்தான். நகரத்தை ரசிக்க ஆவலிருந்தாலும் முதலில் வந்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற கடமையினால், கோட்டை பிரதான வாயிலுக்குச் செல்ல, அங்கு யாரும் உள்ளே சொல்லாமல் ஒதுங்கி நின்றிருந்தனர். காவலர் கவனத்தைக் கவராது உள்ளே செல்வது கடினம் என்று உணர்ந்து கொண்டு, அருகிலிருந்த ஒரு இளம் வாலிபனிடம் பேச்சுக் கொடுத்து, வேளக்காரப் படை வெளியில் வருவதற்காகத்தான் அனைவரும் ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். வேளக்காரப் படை பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வெளிவந்தது. அவர்கள் வெளியில் வந்த பிறகு முக்கியஸ்தர்களைத் தவிர உள்ளே செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிந்து கொண்டவன், இரவைக் கோட்டைக்கு வெளியே கழித்து விடலாம் என்று முடிவு செய்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிவபக்தன் போலத் தோற்றமளித்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்ததில், அவன் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்தில் மலர் கைங்கரியம் செய்து வருபவன் எனத் தெரிந்தது. தங்க இடமிருக்குமா என்று கேட்க, சேந்தன் அமுதன் என்ற அந்த வாலிபன் அவன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். அவனுடன் வீட்டுக்குச் சென்ற வந்தியத்தேவன் அவனுடைய தாயார் காது கேளாத, வாய்பேச முடியாத பெண்மணி என்று தெரிந்துகொண்டான். சேந்தன் அமுதனிடம் கோட்டையைப் பற்றிய விவரங்கள் கேட்டு அறிந்தான். கோட்டைக்குள்ளே சுந்தர சோழர், பழுவேட்டரையர்கள், முதன்மந்திரி அநிருத்தர், இளவரசர் மதுராந்தகர் அரண்மனைகளும் மற்றும் அதிகாரிகள் வசிப்பிடங்களும் துர்க்கைக் கோவிலும் கணிகையரும் இருப்பதாகக் கூறினான் சேந்தன் அமுதன். கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டரையரின் மகளை மதுராந்தகர் மணந்திருப்பதாகவும் அதற்குப் பிறகு அவரின் குணம் சிறிது மாறிவிட்டதாகவும் கூறினான். வெகு சுவையான உணவை உண்ட வந்தியத்தேவன் அயர்ந்து உறங்கினான். இதற்கிடையில், வந்தியத்தேவன் கிளம்பிப்போன பிறகு திருமலையப்பன் என்னும் ஆழ்வார்க்கடியான், குதிரை வாங்கி வந்த பணியாளோடு பேச ஆரம்பித்தான். தன் பெயர் இடும்பன்காரி என்று அறிமுகப் படுத்திக்கொண்ட அந்தப் பணியாள் தன் கை விரல்களால் மீன் போன்ற முத்திரையைக் காட்ட, ஆழ்வார்க்கடியான் அதைப் புரிந்து கேள்வி கேட்டபோது ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டான். ஆழ்வார்க்கடியானிடம் போக்குக் காட்டி அவன் விலகிச் சென்ற சமயத்தில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேல் ஏறிக்கொண்டு திரும்பவும் அவ்விடம் வந்த இடும்பன் காரியைக் கண்காணிக்க ஆரம்பித்தான். வெகுநேரம் கழிந்த பின்பு சோமன் சாம்பவன் என்னும் புதியவன் வந்து மீன் முத்திரையைக் காட்ட, இருவரும் கிளம்பித் திருபுறம்பியம் என்னும் பகைவனின் பள்ளிப்படைக்கு ரகசியமாகச் செல்லவேண்டுமெனப் பேசிக்கொண்டே கிளம்பினர். (பள்ளிப்படை என்பது பழந்தமிழகத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு எழுப்பப்படும் நடுகல்லும், தெய்வமும் இணைந்த கோயிலாகும்). பாண்டியருக்குப் பகை நிலையில் நின்று போரிட்ட பல்லவ மன்னனின் துணைவன் கங்க மன்னன் பிருதிவிபதி நினைவாக எழுப்பப்பட்ட திருபுறம்பியம் பள்ளிப்படைக்கு ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து இருட்டும்வரை மறைந்து இருந்தான். பின் இருவர் இருவராக ஆறுபேர் வந்து கூடினர். பின்னர் சோமன் சாம்பவனும் இடும்பன்காரியும் வந்து இணைந்து கொண்டனர். ரவிதாஸன் என்பவன் இலங்கைக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இரு குழுவாகப் பிரிந்துச் சென்று பகைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல வேண்டுமென்றும், அதற்கான பொருளைச் சோழரின் கருவூலத்திலிருந்தே எடுத்து வந்ததாகக் கூறி பொன் நாணயங்களைக் காண்பித்தான். இடும்பன்காரி பணியாள் போல சம்புவரையர் மாளிகையில் நடித்து, முதல்நாள் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொண்டதைக் கூறினான். ஆழ்வார்க்கடியான் மற்றும் வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியபோது ரவிதாஸன், ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் ஒற்றனாய் இருக்கலாம் எனக் கூறி அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுமாறு கூறினான். அப்போது ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தில் சலசலப்புத் தோன்ற, நெருங்கி வந்தவர்கள் மீது வெளவாலை எறிந்துவிட்டு ஆழ்வார்க்கடியான் இருளில் மறைந்து தப்பினான். வந்தியத்தேவன் காலையில் புத்துணர்ச்சியுடன் நன்கு அலங்கரித்துக்கொண்டு, அரசரைத் தரிசிக்கக் கிளம்பினான். கோவிலுக்கு பூக்கூடையுடன் கிளம்பிய சேந்தன் அமுதனிடம் பேசிக்கொண்டே, குதிரையை அங்கேயே விட்டுவிட்டு கோட்டை வாசலுக்கு நடக்க ஆரம்பித்தனர். சேந்தன் அமுதனின் அன்னையின் தமக்கை இறந்து விட்டார் எனவும் தமையனார் ஒருவர் கோடியக்கரையில் குழகர் கோயிலில் கைங்கர்யம் செய்வதாகவும் கூறினான். சேந்தன் அமுதனின் மாமன் மகளான பூங்குழலி நன்கு பாடுவாளெனவும், அவள் பாடினால் சமுத்திரமும் காட்டு விலங்கும் கூட மெய்மறந்து போகுமெனவும் சிலாகித்தான். சேந்தன் அமுதனுக்கு பூங்குழலி மீது இருந்த ஆசையை உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், “திருமணம் செய்து கொள்ளலாமே” என்று கிண்டல் செய்ய, சேந்தன் அமுதன் அதற்கு, பூங்குழலியின் சம்மதத்திற்குக் காத்திருப்பதாகக் கூறினான். பழுவேட்டரையரின் திருமணத்தைப் பற்றிப் பகடியாய் வந்தியத்தேவன் பேச, சேந்தன் அமுதன் அதைக் கண்டித்தான். கோட்டைக்குள் செல்லும்போது இத்தகைய பேச்சு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தான். பழுவேட்டரையர்களை எக்காரணத்தைக் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அவர்கள்தான் இங்கு அதிகார மையம் என்பதையும் புரிய வைத்தான். பழையாறையிலிருந்த சுந்தர சோழரைக்கூட, வீரபாண்டியனின் மரணத்துக்குப் பிறகு பாண்டியர்களால் ஏதாவது ஆபத்து நேரலாம் என்பதால் தஞ்சையில் தங்கள் பாதுகாப்பில் பழுவேட்டரையர்கள் வைத்திருப்பதாகக் கூறினான். இரு கால்களும் உணர்ச்சியற்று இருப்பதால் சக்ரவர்த்தியான சுந்தரசோழர் எங்குமே செல்ல முடியாது என்றும் வருந்தினான். பழுவேட்டரையர்களின் அதிகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் இருப்பதால்தானே நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என உள்ளுக்குள் மருகிய வந்தியத்தேவன், சேந்தன் அமுதனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய மனக்கோட்டைகளுடன் கோட்டை வாசலை நெருங்கினான். சவிதா

பொன்னியின் செல்வன் – 2

பொன்னியின் செல்வன் – 2

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1 – முந்தைய பகுதியைத் தவறவிட்டவர்கள் இந்த இணைப்பில் வாசித்துவிட்டுத் தொடரலாம். பொன்னியின் செல்வன் – 2 பழுவேட்டரையரின் பரிவாரங்கள் ராஜபோகமாக ஆர்ப்பாட்டத்துடன் செல்வதை வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகார ஆக்கிரமிப்பில் பழுவேட்டரையரின் காவலாளிகள், தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவன் குதிரையுடன் வம்புக்குச் சென்றார்கள். அவர்களால் சீண்டப்பட்ட குதிரை கூட்டத்தில் குழப்பம் விளைவித்தபடியே தப்பித்து ஓடியது. அதனைத் தடுக்க முடியாமல் வாடி நின்ற வந்தியத்தேவனைக் கண்ட ஆழ்வார்க்கடியான் அவனிடம், ‘என்னிடம் காட்டிய வீரத்தை அவர்களிடம் காட்டக்கூடாதா?’ என்று வேறு  குத்திக் காட்டினான். உள்ளூரக் கோபத்திலிருந்த வந்தியத்தேவன், பழுவேட்டரையருடைய வீரர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சண்டைக்குப் போகாமல், தள்ளிப் போய் பாவமாக நின்று கொண்டிருந்த குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கூட்டி வந்தான். ‘இந்த வீரர்களுக்கு என்றேனும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என்றும் எண்ணிக் கொண்டான். ஆழ்வார்க்கடியான் காத்திருந்ததைக் கண்டபோது இன்னும் எரிச்சலாயிருந்தது. போதாதற்கு  ஆழ்வார்க்கடியானும் நோட்டம் பார்ப்பது போல், ‘எங்கு தங்குகிறாய்?’ எனக் கேட்டதும் இடக்காகப் பதில் சொன்னான். ஆழ்வார்க்கடியான் விடாமல், ‘நீ கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குவதாயிருந்தால் எனக்கு உன்னிடம் ஒரு உதவி தேவைப்படுகிறது’ எனக் கூறினான். தான் செல்லப் போகுமிடம் அவனுக்குத் தெரிந்திருந்தது வந்தியத்தேவனுக்குத் திகைப்பாக இருந்தது. அதைக் குறித்து அவன் எப்படி எனக் கேட்க,  ‘பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சம்புவரையரின் மரியாதை வழங்கப்பட்டு  அங்குதான் செல்கின்றன;  மேலும், நாடெங்கிலும் இருந்து விருந்தாளிகள் இன்று இங்கு வரப்போகிறார்கள்’ என்று ஆழ்வார்க்கடியான் கூறவும், பழுவேட்டரையர் போன்ற மாவீரரை இன்று அந்த மாளிகையில்  சந்தித்துப் பழக வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு ஏற்பட்டாலும், அவருடைய படைவீரர்களின் அதிகார அலட்சியம் அவனுக்குக் கசந்தது. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், அன்றிரவு சம்புவரையர் மாளிகையில் நடக்கும் குரவைக்கூத்து, களியாட்டம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமென்றும், தன்னை ஒரு பணியாள் போலப் பொய் சொல்லி அவனுடன் அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்டான். வந்தியத்தேவன் அவ்வாறெல்லாம் மோசடிக் காரியத்துக்கு உடன்பட மறுத்து, தான் தன்னுடன் படித்த சம்புவரையர் மகனான கந்தமாறவேளின் நண்பன் என்ற உரிமையில் போவதாகக் கூறினான். அப்படியென்றால் அவனுக்கே இன்றைக்கு அங்கு தங்குவது சிரமம்தான் எனக் கூறினான், ஆழ்வார்க்கடியான். பேசிக்கொண்டே தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான், வீர நாராயண ஏரியை ஒட்டியிருந்த வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்தியத்தேவனை அழைக்க, அவனும் உடன் சென்றான். வீர நாராயணர் கோவிலைப் பற்றிய ஒரு அறிமுகம்: முதலாம் பராந்தகச் சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், இராஷ்டிரகூட மன்னர்கள் படையெடுத்து வருவார்கள் என எதிர்பார்த்து, பாதுகாப்புக்காகத் தன் மகன் இராஜாதித்தன் தலைமையில் ஒரு பெரிய சைன்யத்தைத் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். படைவீரர்கள் வேலையின்றி இருப்பதைக் கண்ட இராஜாதித்தன், குடிமக்களுக்கு உதவும் வகையில் கொள்ளிடத்திலிருந்து வீணாகும் வெள்ள நீரின் ஒரு பகுதியைச் சேமிக்க ஒரு ஏரியை உருவாக்கி, அதற்கு தன் தந்தையின் இன்னொரு விருதுப் பெயரான வீர நாராயணன் ஏரி எனப் பெயரிட்டான். ஏரிக் கரைகளைக் காக்க அந்நாளில் பெருமாளுக்குக் கோயில் கட்டுவது வழக்கம். அந்தக் கோவிலுக்குத்தான் இப்பொழுது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியான் பக்திப் பரவசத்தில் கண்ணீர் வழிய உருகி, பாசுரங்களைப் பாடுவதைக் கண்ட வந்தியத்தேவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது மதிப்பு உண்டாகியது.  அர்ச்சகர் ஈசுவர பட்டரிடம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தவுடன் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டான். பதிலுக்கு ஆழ்வார்க்கடியான் கேட்ட உதவி வந்தியத்தேவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பழுவேட்டரையருடன் மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஒரு சீட்டு தருவதாகவும், அதை சம்புவரையர் மாளிகையில் தங்க நேர்ந்தால் அந்தப் பெண்ணிடம் சேர்த்து விடுமாறும் ஆழ்வார்க்கடியான் கூறியதைக் கேட்ட வந்தியத்தேவன், படபடப்படைந்து கோபப்பட்டான். ஆழ்வார்க்கடியான் அதைப் பொருட்படுத்தாமல், ‘முடியாது என்றால் பரவாயில்லை; நீ இந்த உதவியை எனக்குச் செய்திருந்தால், பின்னால் நானும் உனக்கு உதவ வசதியாய் இருக்கும்’ எனக் கூற, வந்தியத்தேவன் எரிச்சலில் உடனே அங்கிருந்து குதிரையிலேறிக் கிளம்பி விட்டான். சம்புவரையரின் மாளிகையை வேகமாய் நெருங்கியவன், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்தான். தயங்கி நின்றால் விசாரிப்பார்கள் என்று எண்ணி, குதிரையைத் திறந்திருந்த பெரிய கோட்டையின்  வாசலுக்குள்  வேகமாக இட்டுச் சென்றான். ஆனால் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி அவன் துடுக்குத்தனத்தை விசாரிக்க ஆரம்பித்தனர். அவன் யார் என விசாரித்ததற்கு, ‘என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்; என் நாடு திருவல்லம்; என் குலத்து முன்னோர்களின் பெயர்களை உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள், தெரிந்ததா?’ என வீரமாகக் கூறினான். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே சீண்டிய குதிரையையும் அவர்கள் ஏளனமாய்ப் பேசுவதைக் கண்ட வந்தியத்தேவன் சட்டென ஒரு யுக்தியைச் செயல்படுத்தினான்.   குதிரையை விட்டால் திரும்பிப் போவதாக அமைதியாக வந்தியத்தேவன் கூறினான். கயிற்றை வீரர்கள் விட்டவுடன், உடைவாளை உருவிக் கொண்டு பெரும் வேகத்துடன் கோட்டைக்குள்ளே சென்றான். தடுத்த வேல்கள் விழுந்தன. சுற்றியும் வந்த வீரர்கள் சிதறினர். கோட்டைக்கதவு சாத்தப்பட்டது. வீரர்கள் ‘பிடி.. பிடி..’ என சுற்றி வளைத்தனர். எல்லோரும் சுற்றி வளைத்ததும், வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தாவிக் குதித்தான். ‘கந்தமாறா.. கந்தமாறா.. என்னைக் கொல்கிறார்கள்’ என சத்தம் போட, நெருங்கி வந்த வீரர்கள் அவன் தங்கள் எஜமானனின் மகன் பெயரைக் கூறவும் தயங்கி நின்றனர். மேல் மாடத்திலிருந்து செங்கண்ணன் சம்புவரையர், தன் மகன் கந்தமாறனை அழைத்து ‘என்ன கலகம்?’ என்று பார்த்து வரச் சொன்னார். கந்தமாறன் வரும்வரை அனைவரும் அப்படியே நின்றிருந்தனர். பிடித்த கத்தியுடன் தனியொரு வீரனாக நின்றிருந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், “வல்லவா.. நண்பா.. நீதானா?” என வியந்து கட்டிக் கொண்டான் கந்தமாறன். “இதுதான் நீ எனக்களித்த வரவேற்பா?’ என வந்தியத்தேவன் கூறவும், சுற்றி இருந்த வீரர்களைக் கடிந்துகொண்டு, வந்தியத்தேவனை அணைத்தபடி வெகு உற்சாகமாக உள்ளே கூட்டிச் சென்றான் கந்தமாறன். (கல்கியின் வார்த்தைகளில்: இளம்பிராயத்தில் நட்பும் காதலும்தான் பரவசப் படுத்தக் கூடியவை. காதலுக்காவது சில துன்பங்கள் உண்டு; நட்புக்கு அதுவும் கிடையாது) கந்தமாறன் வந்தியத்தேவனை, தன் தந்தை சம்புவரையரிடம், உற்சாகமும் பெருமையுமாகத் ‘தன் நண்பன்’ என அறிமுகப்படுத்த, அவர் அத்தனை மகிழ்ச்சியாகப் பேசவில்லை. ‘கலவரத்திற்கு காரணம் இவன்தானா?’ என்றும், இருட்டியதற்குப் பிறகு இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்ததையும் அவர் குறை கூறியது கந்தமாறனுக்கு வருத்தமாய் இருந்தது. அடுத்து வந்தியத்தேவனைப் பழுவேட்டரையரிடம் கூட்டிச் சென்றான். பழுவேட்டரையரின்பால் வந்தியத்தேவன் கொண்டிருந்த ஈடுபாட்டைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ‘மாமா. இவன் என் நெருங்கிய நண்பன். வாணர் குலத்தவன். நாங்கள் எல்லைக்காவல் புரிந்தபோது உங்களைப் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டே இருப்பான். தங்கள் உடம்பில் போரினால் ஏற்பட்ட அறுபத்து நான்கு காயங்கள் இருப்பது உண்மைதானா என எண்ணிப் பார்க்க வேண்டுமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்’ எனப் பெருமையாகக் கூறினான். பழுவேட்டரையர் குதர்க்கமாக, ‘எண்ணிப் பார்க்கவில்லையென்றால் நம்ப மாட்டாயா? வாணர் குலத்துக்கு மட்டும்தான் வீரம் சொந்தமா?’ என்று கேட்கவும், இருவரும் எரிச்சலும் வருத்தமும் அடைந்தார்கள். வந்தியத்தேவன் சுதாரித்தபடி, ‘ஐயா, பழுவேட்டரையரின் புகழ் குமரி முதல் இமயம் வரை பரவியிருக்கிறது. சந்தேகிப்பதற்கு நான் யார்?’ எனப் பொறுமையாகக் கூறவும், ‘நல்ல மறுமொழி’ என பழுவேட்டரையர் அமைதியாகி விட்டார். சம்புவரையர் வந்தியத்தேவனுக்கு உணவளித்துவிட்டு சீக்கிரம் படுக்க வைத்துவிட்டுத் திரும்புமாறு கந்தமாறனுக்குக் கட்டளையிட்டார். அந்தப்புரத்துக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்ற கந்தமாறன், தன் அன்னையை அவனுக்கு அறிமுகப் படுத்தினான். அன்னையை வணங்கிய வந்தியத்தேவன் அவருக்குப் பின்னால் ஒளிந்ததுதான் கந்தமாறன் முன்பு தன்னிடம் சொல்லியிருந்த அவனது தங்கை மணிமேகலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். பின், அங்கிருந்த பெண்களின் கூட்டத்தில், ‘பல்லக்கில் வந்த பெண் இருக்கிறாளா?’ என்று கண்களால் தேடினான். தொடரும். சவிதா

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

சோழர் பரம்பரை – ஒரு எளிய அறிமுகம் பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழையும் முன்பு கதை நிகழும் காலத்தோடு பயணம் செல்ல இந்த பரம்பரை வரலாறு உதவியாக இருக்கும்.விஜயாலய சோழன், ஆதித்ய சோழன் என சிற்றரசாக இருந்த சோழர்கள் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தங்கள் எல்லையை விரிவடையச் செய்து பேரரசாக உருவெடுத்தனர். பராந்தக சோழனின் மூத்த மகனான இராஜாதித்ய சோழன் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். எனவே இரண்டாவது மகனாகிய கண்டராதித்ய சோழன் அரசராகப் பதவி ஏற்றார். அவர் ஒரு சிவபக்தர். வெகுகாலம் திருமணத்தை வெறுத்த அவர், தன்னைப் போலவே சிவபக்தியில் தேர்ந்த செம்பியன் மாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு இல்லாததால், இளையவரான அரிஞ்சய சோழருக்கு பட்டத்து இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. பின்னர், கண்டராதித்ய சோழனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே கண்டராதித்ய சோழன் காலமானார். எனவே, அரிஞ்சய சோழர் அரசராக முடிசூடினார். அவரும் குறைந்த காலத்திலேயே இறந்துவிட, அவரின் மகனான சுந்தர சோழன் பதவி ஏற்றார். அவருடைய காலத்தில் நடைபெற்ற கதையைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சுந்தர சோழனின் முதல் மகனான ஆதித்த கரிகாலனுக்கு மதுரையை ஆண்ட வீரபாண்டியனை வென்றதால் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதற்கிடையில் கண்டராதித்தனின் மகன் மதுராந்தகனும் வயதை அடைந்து வாரிசாக இருக்கிறார். இந்த வாரிசுரிமை, அரசியல் களத்திலும் சோழமன்னர் குடும்பத்திலும் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் இக்கதையின் சாரம். இனி.. புதுவெள்ளம்சற்றேறக்குறைய சுமார் 1070 ஆண்டுகளுக்கு முன், இதே ஆடி பதினெட்டாம் நாளன்று கதை தொடங்குகிறது. இப்பொழுது வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீர நாராயண ஏரிக்கு அன்றுதான் வந்தியத்தேவன் வந்திருக்கிறான். இந்த ஏரி எழுபத்து நான்கு கணவாய்களை உடையது. அது உண்மைதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்தியத்தேவன் தன் குதிரையுடன் வந்தடைந்த நாளில், பதினெட்டாம் பெருக்குக்காக ஏரிக்கரை களைக்கட்டியிருந்தது. இரு கரைகளும் பொங்கிப் பாய்ந்த அந்த வெள்ளத்தில் மக்களின் வெள்ளமும் சேர்ந்துகொள்ள, வந்தியத்தேவனுக்கு உற்சாகம் பொங்கியது. கண்ணுக்கினிய பெண்கள் கூட்டம் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது. சில உபசரிப்புகளையும் அவன் ஏற்றுக் கொண்டான். சோழர்கள் உண்டாக்கி வைத்திருந்த நீர் மேலாண்மையையும் மக்கள் கூட்டம் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்ததையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சலசலப்பும் பரபரப்பும் உற்சாகமும் பதட்டமும் நிறைந்த கூச்சல்கள் எழத் தொடங்கின. எல்லோரும் பார்த்த திசையைப் பார்த்தபோது, ஏழெட்டு பெரிய ஓடங்கள் வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்டு ஏரிக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த படகில் வீரர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கூட்டத்தை ஆயுத பலத்துடனும் உரத்த குரல்களுடனும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இன்றையக் காலகட்டத்தில் பிரதமர் வருகையின்போது நடக்கக்கூடிய கெடுபிடிகள் போன்று அது இருந்தது. வருபவர் யாரென விசாரித்தபோது பனைமரக் கொடியைச் சுட்டிக் காட்டினர். வந்தியத்தேவன் புரியாமல் பார்க்க, அது பழுவேட்டரையருடையது என்று அவனுக்கு ஒருவர் புரிய வைத்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்த பொழுது அவரின் அரசியல் பலம் புரிந்தது. வந்தியத்தேவனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பழுவேட்டரையர் சிறந்த வீரர். சோழப் பேரரசின் நிதி அமைச்சரான அவர், நிர்வாகத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்தார். கருவூலம், நிதி மேலாண்மை, கூல விநியோகம் போன்ற முக்கியப் பொறுப்புகள் அவர் வசமும் தலைநகர் தஞ்சாவூர் கோட்டைக் காவல் அவரின் தம்பியான சின்னப் பழுவேட்டரையரின் வசமும் இருந்தன. சுற்றியிருக்கும் அரசுகளுக்கு வரி, தண்டம் விதிக்கக்கூடிய அளவுக்கு உரிமை கொண்டவர் என்றெல்லாம் ஏற்கனவே அவரைப்பற்றி வந்தியத்தேவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வீர இளைஞனான அவனுக்கு, அந்த மாபெரும் வீரரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது உவகையாக இருந்தது. ஆனால் அவன் வந்த வேலையை நினைத்துக் கொண்டான். காஞ்சி நகரில் சோழ அரசின் பட்டத்து இளவரசரும், தன்னுடைய தலைவனுமான ஆதித்த கரிகாலன் எச்சரித்திருந்ததையும் நினைவில் கொண்டு வந்தான். ஆதித்த கரிகாலன் இரு ஓலைகளை, தன் தந்தையான சுந்தர சோழரிடமும், தமக்கையான குந்தவை தேவியிடமும் ரகசியமாக ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். முக்கியமாக, பழுவேட்டரையர்களுக்குத் தெரியவே கூடாது என்றும் சொல்லியிருந்தார். வந்தியத்தேவன் குறும்பான வாலிபன் என்பதால், அடக்கமாக, யாருக்கும் தெரியாமல், எந்த வம்புச் சண்டையிலும் நுழையாமல், பத்திரமாகச் செல்லுமாறு கண்டித்திருந்தார். (ஆனால், அவன் அப்படி இருந்திருந்தால் இந்தக் கதை உருவாகியே இருந்திருக்காது) அதை நினைத்துக்கொண்ட வந்தியத்தேவன் பழுவேட்டரையரைப் பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு, கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இரவு தங்கும் நோக்கத்துடன் குதிரையைச் செலுத்திக்கொண்டு கிளம்பி விட்டான். இயல்பிலேயே துடிப்பான வந்தியத்தேவனுக்கு, தன் வால்தனங்களை அடக்கிக்கொண்டு பயணம் செய்யக் கடினமாக இருந்தது. ஆனாலும், பழையாறை போன்ற முக்கியமான நகரங்களைப் பார்ப்பது குறித்தும், குந்தைவை தேவியைச் சந்திக்கப்போகும் பெருமையை நினைத்தும், தன் ஆவலை அடக்கிக் கொண்டான். வீரநாராயண விண்ணகரக் கோவிலுக்குச் செல்லும் வழியில், கடைத்தெரு கோலாகலமாய் நிறைந்திருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றவனை அங்கு நடந்துகொண்டிருந்த சைவ வைணவச் சண்டை ஈர்த்தது. ஒரு சைவர், ஒரு வைணவர் மற்றும் ஒரு அத்வைதி ஆகியோர் தங்கள் கொள்கையே சிறந்தது என வாதிட்டுக் கொண்டிருந்தனர். இருபக்கமும் மனிதர்கள் நின்றுகொண்டு தத்தம் கொள்கைகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தனர். சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களில் வைணவத்துக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. அவர் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சைவ- வைணவச் சண்டைகள் அப்பொழுது வெகு பிரசித்தம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வந்தியத்தேவன் நடுவில் புகுந்து, சண்டை போடுவதை நிறுத்துமாறும், அப்படிப் போட வேண்டிய அவசியம் இருந்தால், போருக்குச் செல்லும்படியும் கூறினான். மக்களில் சிலருக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது. ஆழ்வார்க்கடியானின் மொத்த ஆவேசமும் இவன் பக்கம் திரும்பிவிட்டது. விளையாட்டாய் சண்டையை நிறுத்த வந்தியத்தேவன் முயல, கூட்டமும் அதில் சேர்ந்து கொண்டது. அப்போது மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. பழுவேட்டரையர் யானையின் மீது அமர்ந்து, தன் கூட்டங்களுடன் அதிகாரம் பொருந்திய மிளிர்வுடன் வந்து கொண்டிருந்தார். பின்னால் ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கின் உள்ளே யார் இருப்பாரோ என்ற எதிர்பார்ப்புடன், வந்தியத்தேவன் பல்லக்கை நோக்கினான். பல்லக்கு வந்தியத்தேவனைக் கடக்கும் போது திரை விலகியது. அழகு பொங்கும் சுந்தர முகம் தோன்றியது. ஆனாலும் மனத்தில் காரணம் தெரியாத ரசிப்பின்மை தோன்றியது. இவனைப் பார்த்தவுடன் சட்டெனத் திரை மூடிக் கொண்டது. யாரைப் பார்த்து பயந்து திரை மூடிக் கொண்டது என்று வந்தியத்தேவன் தேடும்போது, ஆழ்வார்க்கடியான் விசித்திரமான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு அது மர்மமாகத் தோன்றியது. அந்தக் கணத்தில் அவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது ஒரு வித வெறுப்பும் அருவருப்பும் தோன்றியது. தொடரும் சவிதா

கரைசேராப் படகுகள் – 9

கரைசேராப் படகுகள் – 9

தொடர்கதை “ஏங்க மாமா… காப்பு சம்மந்தி வீட்லதானே போடுவாங்க? நாம ஏன் வாங்கணும்? மூனாம் மாசம் பொண்ணைக் கூட்டி அனுப்பும்போதுதான் குழந்தைக்கு கொலுசு, அண்ணாக்கயிறுன்னு போட்டு அனுப்புவாங்க” என்று குழப்பத்துடன் கேட்டாள் மரகதம். “இனாமாக் குடுத்த மாட்டைப் பூட்டி நெலாவுல ஏரடிச்சானாம் இளிச்சவாயன்”ன்னு உன் தலையில கட்டிடப் போறாங்கடா, உன் மருமவன் வூட்டு மனுசனுங்க” என்று ராகம் இழுத்தாள் பட்டம்மா. “என்னைய என்ன புத்திகெட்ட ஆம்பளன்னு நினைச்சயளா? ஆளாளுக்கு  அலப்பற தர்ரீங்க..” என்று செந்தாமரை சத்தம் போட்டுவிட்டு, அவங்களுக்கு   டவுனுக்குப் போக பொழுது ஆப்படலையாம். அதான் என்னய  வாங்கியாந்து வைக்கச் சொன்னாங்க” என்றார். மனிதனுக்கு இரண்டு நேரங்களில் கோபம் வரும். செய்த தப்பை மறைக்கும்போதும், தப்பு செய்யாத போது குற்றம் சாட்டப்படும் போதும்.  இதில் செந்தாமரை இப்பொழுது கோபப்பட்டது எந்த ரகம் என்று நமக்குப் புரியும். செந்தாமரை லேசாகக் குரலை உயர்த்தியதும், மாமியாரும் மருமகளும்  பொங்குகிற பாலில் தெளித்த தண்ணீர் மாதிரி ‘புஸ்சுன்னு’ அடங்கிவிட்டார்கள். செந்தாமரை வெளியில் வந்து, “ஏய்.. சுள்ளான் இங்க வாடா” என்று கூப்பிட்டதும், வாசலில் படுத்திருந்த சுள்ளான் வாலை ஆட்டிக்கொண்டே இவர் பின்னாடியே ஓடி வந்தது. இவர் வயக்காட்டுப் பக்கம் செல்வதைப்  பார்த்ததும் இவருக்கு முன்னாடி ஓடி வழிகாட்டியது. அதிகாலையில் எழுந்த மரகதம், வெள்ளிக்கிழமைங்கறதால வாசல்  தெளித்து அரிசி மாவில் பெரிதாகக் கோலம்போட்டு, அடுப்பு தட்டு   மொழுகி சும்மா வீட்டை ஜொலிக்க வைத்திருந்தாள். ‘நாளைக்கு வீட்டுக்கு சொந்த பந்தம், சாதி சனமெல்லாம் வருவாங்க’ என்று வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு,  தலைக்குக் குளித்து, சின்ன சின்ன பூ கண்ணுக்கே தெரியாத சிவப்பு நிறத்தில் இருந்த மஞ்சள் நிற நூல் புடவையைக் கட்டியிருந்தாள் மரகதம். அவளை ஏற இறங்கப் பார்த்த பட்டம்மா, ‘டொக்…. டொக்..’ என்று வெற்றிலை இடித்துக்கொண்டே, “சீமை சிறுக்கியாட்டும் சீவி முடிச்சு சிங்காரிச்சு வயக்காட்டுல கலெக்டரு உத்தியோகம் பாக்க போனாளாம் வித்தக்காரி” என்று வியாக்கனம் படிச்சார். பொழுது விடிந்ததும் சண்டை வேண்டாம் என்று முகத்தைப் பரண்மேல்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தாள் மரகதம். “என்னத்த சுத்தம் பண்றா இந்தக் கருப்பாயி?” என்று அவளைத் திட்டிக்கொண்டே மாட்டுக் கொட்டகையைப் பெருக்கி வாரி, சாணத்தைக் குப்பைக்குழியில் கொட்டினாள். மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு போட்டுத் தண்ணீர் காட்டிவிட்டு,  பித்தளையில நல்ல உயரமாக இருக்கும் பால் பாத்திரத்தில் பாலைக் கறந்து, நுரை பொங்கப் பொங்க அப்படியே எடுத்து வந்து பட்டம்மா பக்கத்தில் ‘பட்’டென்று வைத்துவிட்டு, “பால் வாங்க வரவங்களுக்கு அளந்து ஊத்திடுங்க” என்று வெடுக்கென்று சொன்னாள். நுரை பொங்கற பாலை ஊற்றி இழைய காய்ச்சி, கருப்பட்டி போட்டு  புனிதாவுக்கும் மாமியாருக்கும் கொடுத்துவிட்டு, ‘ரெண்டு டபரா’ காபியை கூஜாவில் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலில் வந்து, ‘வயக்காட்டுப் பக்கம் யாரு போறாங்க?’ என்று பார்த்துக்கொண்டு நின்றாள் மரகதம். “எலே.. குருவம்மா வயக்காட்டுப் பக்கம் போனீன்னா.. என் மாமங்கிட்ட  கொடுத்துடு” என்று சொல்லி, அந்தப்பக்கம் வந்த குருவம்மாவிடம் கூஜாவைக் கொடுத்தாள். “எக்காவ், உங்க வயலுக்குத்தான் அறுப்புக்குப் போறேன்” என்று ‘போற போக்குல’ சொல்லிக்கொண்டே போனாள் குருவம்மா. நேற்று, வயலில் வேலை செய்யும் ஆட்கள்,  “தினம் கூழு வேண்டாம்; அரிசிக் கஞ்சி வேணும்” என்று சொன்னதால் மரகதம் அடுப்பில் உலை வைத்து, பெரிய படியில் ஐந்து படி நொய் அரிசியை ஊறப் போட்டுவிட்டு,  பக்கத்துத் தெருவில் இருக்கும் இருக்கற நாவிதர் வீட்டுக்குப் போனாள். மரகதத்தைப் பார்த்ததும் ஓடி வந்த இருளாயியிடம், “நாளைக்கு புனிதாவுக்குத் தீட்டு எடுக்கணும். வயக்காட்டுல வேலை கெடக்கு,  கொஞ்சம் வெள்ளனயே வந்துடு” என்று சேதி சொல்லிவிட்டுக் கிளம்பினாள். வீட்டுக்கு வந்து கஞ்சி காய்ச்சி எடுத்துக்கொண்டு, தூதுவளை துவையலை  வாழையிலையில் மடித்து அண்டா மேல் வைத்துக்கொண்டு, முந்தானைத் தலைப்பை சிம்மாடு மாதிரி சுருட்டித் தலை மேல் வைத்துக்கொண்டு, ‘ஒத்த கையால’ அண்டாவைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒத்த கையை வீசி வீசி அவள் நடந்த தாள லயத்துல வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாரை மயங்கியது. நெல்லு பொறுக்கிக்கிட்டு இருந்த தேன்சிட்டு, அந்த அண்டா மேல இருந்த தட்டு விளிம்புல ஊஞ்சல் ஆடிக்கிட்டு வந்தது.’ இந்த காட்சியில் மயங்கிய சூரியனும், ‘தனக்கு ஒருவாய் கஞ்சி கிடைக்காதா?’ என்று, மரகதம் பின்னாலேயே ஓடிவர, மேகக் கூட்டங்கள் அலைஅலையாக ஒன்றோடு ஒன்று துரத்திக் கொண்டு சூரியனை முந்திக்கொண்டு ஓடிவர, ஒருவழியாக வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் மரகதம். சுடச்சுட கஞ்சியைப் பார்த்ததும், கதிர் அரிவாளைப் போட்டுவிட்டு ஓடிவந்தாங்க. கும்பலா உட்கார்ந்து ஊரு கதையைப் பேசி உரண்டை இழுத்து கஞ்சி குடிக்கற சுகமும் வெஞ்சனம் இல்லாம உடல் உழைச்சி, வயிறாற கஞ்சி குடிக்கற சுகமும் சொர்க்கத்துக்குச் சமம். செந்தாமரை பெரிய மகளை கூவத்தூரில் உள்ள மச்சானுக்கே திருமணம் செய்து கொடுத்தார். நடு மகளை தேவாதூரில் கொடுத்தார். ‘இரண்டு  ஊரும் பக்கம் பக்கம்தான்; இருந்தாலும் நடந்து போக முடியாது’ என்று பொட்டி வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்புகிற நேரத்தில், வயக்காட்டில் வேலை செய்தவங்க எல்லாம் வேலையை விட்டுவிட்டு கும்பல் கும்பலாக ஓடினார்கள். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 4 

கரைசேராப் படகுகள் – 4 

தொடர்கதை குழந்தை பெற்றெடுத்த எந்த உயிரினமாக இருந்தாலும் அகோரப் பசியில் இருக்கும். சில உயிரினங்கள் தன் குட்டியையே சாப்பிட்டுவிடும். அப்படி ஒரு பசியில்தான்  நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டாள் புனிதா. ஆனால் இந்தப் பட்டம்மா கிழவி அதைப் பிடுங்கிவிட்டதே என்ற கோபத்துடன், “ஏன் அத்தை, தண்ணி டம்ளர புடுங்கறீங்க?” என்று  கேட்டாள்  மரகதம்.  “பொசக்கெட்டவளே, புள்ள பெத்த உடனே தண்ணி குடிச்சா ஜன்னி வச்சிடும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பட்டம்மா. “இப்ப என்ன பண்றது? புள்ளைக்கு நாக்கு வறளுதே” என்று விசனப்பட்டாள் மரகதம். “சர்க்கரைத் தண்ணிய தொட்டு, பச்ச மண்ணு நாக்கிலும் புனிதா நாக்கிலும் தடவுங்க” பட்டம்மா பக்குவமாகச் சொன்னார். தாமரைமீது மோகம் கொண்டு ஆதவன் அதிவேகமாய் வரும் இளங்காலைப் பொழுது. ஆதவனைக் கண்ட வெட்கத்தில் ஆம்பலும் அல்லியும் மறைய, குளங்களில் தாமரைகள் பூத்துக் குலுங்கின.  மரகதம்  சாணத்தால் வாசல் மெழுகி, கோலம் போடாமல் விட்டாள். அப்பதான் தீட்டு வீடுன்னு பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஏழு நாளுக்கு அந்த வீட்டுடன் அன்னம் தண்ணி புழங்க மாட்டாங்க.  வீட்டு வாசலில் “அம்மா… தாயீ..” என்ற குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், வாசலில் வண்ணாத்தி இருப்பதைப் பார்த்தாள்.  “வா சொக்கி.. ஏன் நேற்று துணி எடுத்துட்டு வரல?” என்று சற்று அதட்டலுடன் கேட்டாள். “வந்தேன் தாயீ, திண்ணையில பெரிய வூட்டு அய்யாமாருங்க எல்லாம் இருந்தாங்க, அதான் போயிட்டேன். பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காமே, ரொம்ப சந்தோசமுங்க”  என்று வெள்ளந்தியாகப் பேசினாள் சொக்கி.  “ஆமா சொக்கி, தீட்டு எடுக்கற அன்னிக்கு உனக்கு வெத்தல பாக்கு தரேன். இப்ப பாப்பா துணிய தனியா எடுத்துட்டுப் போ” என்று உள் அறையைக் காட்டினாள் மரகதம். “எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. புள்ள பெத்த வீடும் கல்யாண வீடும் ஒன்னுன்னு சொல்வாங்க. வாரவங்க போறவங்களை கவனிக்கணும்; புள்ள பெத்தவளை கவனிக்கணும். காடு கழனிய பாக்கணும். இந்த மனுஷன் வேற, ரெண்டு நாள்ல அறுவடைன்னு சொல்றாரு. ஆளுங்களுக்கு கூழாக்குவேனா? புனிதாவ கவனிப்பேனா? ஆத்தாடி, தலைய சுத்துதே!” என்று புலம்பிக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள் மரகதம். “செந்தாமர.. டவுனுக்குப் போய் புனிதாவுக்கு வறுத்த ரொட்டி வாங்கிட்டு வா. இன்னிக்கு புனிதாவுக்கு அதுதான் சாப்பாடு”  என்று மகனுக்குக் கட்டளையிட்ட பட்டம்மா, “ஏன்டா, உன் மத்த மவளுக்கெல்லாம் சேதி சொல்லிட்டியா?” என்று பேத்திகளைப் பார்க்கும்  ஆர்வமுடன் கேட்டாள்.  “சொல்லி விட்டிருக்கு. அவளுங்க எல்லாம் ஏழாம் காப்புக்கு வர்ரோம்னு சொல்லியிருக்காங்க” என்றார் செந்தாமரை. “என்னமோ போடா, நீ பெத்தது மூனும் பொண்ணா போச்சேன்னு வெசனமா இருக்கு” என்று புலம்பிக்கொண்டே பட்டம்மா பாட்டி நெய்யை ஊற்ற, “யாரை நோவறது? விதைச்சவன் விதைச்சுட்டான்; விதி வழியே போவ வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டார் செந்தாமரை.  “ஏங்க காலையிலேயே எதுக்கு சலிச்சிகிட்டு? ஆகற வேலைய பாருங்க. போய் சுப்புடு ஐயரைப் பாத்து புள்ளைக்கு பேர் குறிச்சிட்டு  வாங்க” என்று செந்தாமரையைக் கிளப்பி சுப்புடு ஐயர் வீட்டிற்கு அனுப்பினாள் மரகதம்.  “மரகதம்….  மிளகு, சீரகம், தனியா, சுக்கு, ஓமம், திப்பிலி, இதையெல்லாம் பொன்னிறமா வறுத்து, அம்மியில வச்சு ஒட்ட ஒட்ட அரைச்சு, குழம்பு வைக்கணும். இனிமே மூனு மாசத்துக்கு இது மாதிரி பத்தியச் சாப்பாடுதான் தரணும்” என்று மரகதத்திற்கு விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்  பட்டம்மா.  பக்கத்துத் தெரு குப்புசாமி ரெட்டியார் கொல்லையில் களையெடுத்துக் கொண்டே  பெண்கள், ஊர்க் கதையை ஊறுகாய் இல்லாமல் வாயில் ஊறவைத்தனர்.  “ஏன்டி, நம்ம ஓட்டு வீட்டு  பட்டம்மா பாட்டி பேத்திக்கு பொண்ணு பொறந்திருக்காமே!”  என்று முனியம்மாவுக்கு மூக்கு வியர்த்தது.  “ஆமான்டி, பாவம் அவ புருசன் வரலன்னு அழுதுகிட்டு இருக்காளாம். எங்க இருக்கானோ?! உயிரோட இருக்கானோ, இல்லையோ! யாரு கண்டா? கல்யாணம் பண்ணி மூனு மாசத்துல விட்டுட்டு போனான்; இன்னி வரைக்கும் தகவல் இல்லையாம்”  என்று  அருக்காணி அளந்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  மனிதர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள், தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்கள். அந்த வார்த்தையின் பலன் பிறருக்குச் சொந்தம் என்பதை அறியாமலே பேசுகிறார்கள். இங்கும் அப்படித்தான், களையெடுத்துக் கொண்டே புனிதாவின் கணவனைப் பற்றி, தப்புத் தப்பாக தலைப்புச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர். “அருக்காணி, உன் வாயில நல்ல வார்த்தைகளே வராதா? பாவம் புனிதா, அவ புருசனைப் பத்தி அவச்சொல்லா சொல்ற. எல்லாம் மாசம் ஒரு தடவை கடுதாசி போடறானாம்” என்று நல்ல மனதுடன் பேசினாள் சிவப்பி.  “ஏன்? கடுதாசி போடற துரைக்கு ஒரு எட்டு வந்து பாக்க முடியாதாமா? அப்படி என்ன பொல்லாத வேலை? ஒருக்கால் அங்க ஏதாவது வீடு கீடு வச்சிருப்பானோ?” என்று திரையில்லாமல் படம் ஓட்டினாள் அருக்காணி.  “ஊரு கதைய உப்பில்லாம பேசறியே அருக்காணி, உன் புருசனை எங்க மூனு மாசமா காணோம்? அடிச்சி விரட்டிட்டியா?” என்று கடுப்புடன் கேட்டாள் சிவப்பி.  “என் கதைதான் ஊரு சிரிக்குதே! உனக்கு வேற தனியா சொல்லணுமா? அவன்தான் அந்த எடுபட்ட  சிறுக்கியை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டான். அதான் ஒரேயடியா போய் சேருடான்னு தலைமுழுகி விட்டுவிட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னாள் அருக்காணி. அருக்காணியைப் பொறுத்தவரை அவள் கதையாக இருந்தாலும், ஊர்க்கதையாக இருந்தாலும், மேளம் கொட்டாமல் தண்டோரா போடுவாள். இது அவள் இயல்பு. அதை யாரும் பெரிதாக எடுத்துக்க மாட்டாங்க. ‘குடிகாரக் கணவனிடம் உதைபட்டு வாழறதைவிட, தனியா உழைச்சு ரெண்டு புள்ளைங்களைக் காப்பாத்தறாளே’ன்னுதான் சந்தோஷப்படறாங்க. அருக்காணி ஒரு கொல்லையில் வேலை செய்தால், அங்கே ஊர் செய்தி முழுவதும் தெரிந்து கொள்ளலாம். இன்னிக்கு இப்பதானே தென்னன்டை  தெரு புனிதாவைப் பற்றி சொல்லியிருக்கா? இன்னும் வடக்குத் தெரு, நடுத் தெரு, வில்லித் தெருன்னு எல்லா செய்தியும் வரும். யார் யார் வீட்ல அடிச்சிகிட்டாங்க என்பதில் தொடங்கி, யார் வீட்ல என்ன சமையல் செய்தாங்க என்பது வரை அனைத்துச் செய்திகளுக்கும் குத்தகைக்காரி இந்த அருக்காணி. தொடரும் சாம்பவி சங்கர்

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

தமிழ் படைப்பிலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் எழுத்தாளர் அகிலன். 1922 இல் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்னும் ஊரில் பிறந்த அகிலாண்டம் என்ற அகிலன் 1938 இல் தனது முதல் கதையை எழுதினார். பள்ளியில் வெளிவந்த பத்திரிகையில் ‘அவன் ஏழை’ என்ற அந்தக் கதையை பதினாறு வயதுப் பையனான அகிலன் கொடுத்தபோது, அந்தக் கதையின் நடைச் சிறப்பு ஆசிரியருக்கு ஐயத்தை ஏற்படுத்த, இந்தக் கதையை எங்கு திருடினாய்?’ என்று கேட்டார். ‘ஐயா, என் கதையை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். திருப்பித் தந்து விடுங்கள். நான் திருடனில்லை’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் அகிலன். அந்த ரோசத்திலேயே உண்மையை உணர்ந்த ஆசிரியர், அவரைத் தட்டிக் கொடுத்தார். 1944 இல் அவரது முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ வெளிவந்தது. ஆனால், அகிலன் தமிழ் வாசகர்களிடையே வாழ்நாள் முழுவதும் மங்காத முழு நிலவாகவே பிரகாசித்தார். பள்ளிப் பருவத்திலேயே வாலிபர் சங்கம் அமைத்து, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் நிராகரிப்பு என்றெல்லாம் தேசிய இயக்கங்களில் செயல்பட்டிருக்கிறார். தேசிய இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அகிலனுக்கு, ‘தேச விடுதலை மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும்’ என்று, அன்றிருந்த எல்லாப் படைப்பாளிகளைப் போலவே மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்யோ என்ற யதார்த்தம் அவரைச் சுட்டிருக்க வேண்டும். அவர் படைப்புகளில் இந்த ஏமாற்றத்தை நாம் அடையாளம் காண முடியும். மு.வ., கி.வா.ஜ. உள்ளிட்ட இலக்கிய ஜாம்பவான்களிடமும், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள் உள்ளிட்ட கலைஞர்களுடனும் நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தார். தீவிர கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் அவரது எழுத்தாளர் வாழ்வின் இலட்சியமாக இருந்தன. போட்டி மிகுந்த அன்றைய படைப்புலகில், அவர் தன் இலட்சியத்தில் என்றும் தளராமல் தன் படைப்புகளை வெளிக் கொணர்ந்தார். அகிலனுக்கென்று மிகப் பெரிய வாசகர் வட்டம் எப்போதும் இருந்தது. எல்லா வார, மாத இதழ்களிலும் அவரது சிறுகதைகளோ தொடர் கதைகளோ நிச்சயம் வந்த வண்ணம் இருக்கும். மொத்தம் 20 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என்று பன்முகப் படைப்பிலக்கியங்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். எளிய நடையுடன் கூடிய இவரது படைப்புகளில், சமூகப் பொறுப்புடன் கூடிய எழுத்து வேட்கை துலங்குவதைக் காண முடியும். சுவையான கதைக்களம், உயிர்த் துடிப்பான பாத்திரப் படைப்பு, அறம் சார்ந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு என்று, அகிலனின் படைப்புகள் வாசகர் மனதைக் கொள்ளை கொண்டன. 1963 இல் அவரது சரித்திரப் புதினமான ‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற அகிலன், 1975 இல் அவரது ‘சித்திரப் பாவை’ நாவலுக்கு ஞான பீடம் விருதையும் வென்றார். அவரது பாவை விளக்கு, வாழ்வு எங்கே மற்றும் கயல் விழி ஆகிய படைப்புகள் திரைப்படங்களாக வந்தன. எங்கே போகிறோம், சிநேகிதி, பெண், கொம்புத் தேன் மற்றும் நெஞ்சின் அலைகள் உள்பட்ட மகத்தான நாவல்களைப் படைத்த அகிலன், தனக்கென்று மிகப் பெரிய வாசகர் உலகத்தைக் கொண்டிருந்தார். அகிலனின் படைப்புகள் சர்ச்சைகளையும் காட்டமான விமர்சனங்களையும் சந்தித்த தருணங்களும் உண்டு. அவற்றை மிகுந்த நேர்மையுடன் அணுகினார் அகிலன் என்ற பண்பாளர். மிகச் சிறந்த இலக்கிய மேதையும் ஒரு அரை நூற்றாண்டு கால இலக்கிய உலகின் இலட்சியம் மிக்க அடையாளமாகவும் (1944 – 1988) தமிழ் உலகில் சுடர் விட்ட அகிலனுக்கு இன்று நூற்றாண்டு தொடங்குகிறது. சுவடு இதழ், ஒரு தொடக்கமாக அகிலனின் நூற்றாண்டை, எழுத்தில் சமூகப் பொறுப்பின் அடையாளமாகப் போற்றிக் கொண்டாட வாசகர்களை அழைக்கிறது. வாழ்க அகிலன் புகழ்! கோமதி சங்கர்

கரைசேராப் படகுகள்

கரைசேராப் படகுகள்

தொடர்கதை – பகுதி 1 ‘ஜல் ஜல்’ என்ற சலங்கை ஒலி வானில் எதிரொலிக்க, புழுதிப் படலமொன்று மேகத்தினைத் திரையிட, அதற்குள் சூரியன் ஒளிந்து கொள்ள, சூரியனைத் தேடி நிலாமகள் வரும் மந்தகாசமான மாலைப் பொழுது. அருங்குணம் என்னும் கிராமத்து நாற்சந்தியில், வயல் வேலை முடித்து வரும் மக்கள், மந்தை மாடு ஓட்டிவரும் மக்கள், இரவு உணவுக்குக் கடைகளில் பொருள் வாங்கும் மக்கள், தெரு விட்டு தெரு சென்று கதை பேசும் மக்களென, அந்த இடமே வெங்கலப் பானையில் இரும்புக் குண்டை உருட்டியது போன்று கலகலப்பாக இருந்தது. தென்னன்ட தெருவில் ஒரு வீட்டின் நடுக்கூடத்தில், சாய்வு நாற்காலியில் சாய மனமில்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது ஒரு உருவம். கிட்டத்தட்ட சினிமா நடிகர் செந்தாமரை மாதிரி அதே உருவம், அதே குரல், அதே நடை, அட! பெயர் கூட அதேதான். ஆனால் இவர் அவரல்ல. விசு படத்தின் கதாநாயகி கமலா காமேஷ் மாதிரி ஒரு உருவம். அதே உயரம், அதே ஒல்லி, ஆனால் பெயர் மட்டும் மரகதம். கூடத்தின் ஒரு முனையில் இருந்து ‘டொக்.. டொக்.. டொக்..’ என்று தாள லயத்துடன் ஒரு ஓசை. தவில் வித்துவான் வீட்டிற்கு வந்தால் இருவரும் கச்சேரி வாசிப்பார்கள். சில நேரங்களில் தவில் தாளம் தப்புமே தவிர, பட்டம்மா பாட்டியின் வெற்றிலை இடிக்கும் ஓசை தாளம் தப்பாது. ஒரு அறையின் கதவைத் திறந்து கொண்டு மரகதம்மா அவரசமாக வெளியே ஓடிவந்து சமையலறைக்குள் நுழைந்தார்கள். மரகதம்மா கதவைத் திறந்த அந்த இடைவெளியில் அறைக்குள் இருந்து ஒரு பெண் அலறும் ஓசையும் கதறி அழும் ஓசையும் கலவையாகக் கேட்டது. மரகதம்மா செந்தாமரையைத் தாண்டிப் போகும்போது, “மரகதம் இப்ப எப்படி இருக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டார் செந்தாமரை. “பயமாதாங்க இருக்கு” என்று பாத்திரத்தில் ஏதோ எடுத்துப் போகும் மரகதம் அழுதபடியே சொல்லிவிட்டுப் போனாள். வெளியில் திண்ணையில் அமர்ந்திருந்த பெரிசுகள், “என்னப்பா செந்தாமரை, என்னாச்சு?” என்று குழுவாகக் குரல் கொடுத்தனர். ஒலிபெருக்கி இல்லாமலே பெரிசுகளின் குரல் தெருவெல்லாம் எதிரொலித்தது. “ஏம்பா உன் மருமவனுக்கு தகவல் சொல்லி விட்டயா?” என்று ஒரு பெரிசு ஏதோ மாபெரும் யோசனை சொன்னமாதிரி சபையைப் பார்த்தார். “ம்..ம்.. மதியமே சொல்லிவிட்டுட்டேன். ஆனா பதில் தகவல்தான் வரல” என்று விரக்தியுடன் சொன்னார் செந்தாமரை. “சீராட்டி, பாராட்டி, தங்கப் பாலாடையில் பாலூட்டி வளர்த்த தங்க மயிலை, மலைக் குரங்கு கையில் பிடிச்சுக் கொடுத்துட்டானே.. இந்த அக்கிரமம் எங்க நடக்கும்?” என்று புலம்பினாள் பட்டம்மா பாட்டி. “ஏய் கிழவி, அனத்தாம சும்மா இரு. இங்க அவனவன் உயிரைக் கையில பிடிச்சிட்டு நிற்கிறான். நீ வேற எசப்பாட்டு பாடிக்கிட்டு..” என்று அதட்டினார் செந்தாமரை. தெருவில் உள்ள பெண்களில் பாதிப்பேர் வெண்கலக் குடத்தை வைத்துக் கொண்டும், பானையை வைத்துக்கொண்டும் தண்ணீர் மோந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் ஓடிவந்து, “நம்ம மரகதம்மா பொண்ணு வலியில் துடிக்குதாமே” என்று தகவல் சொல்ல, பெண்கள் அனைவரும் சிட்டாய்ப் பறந்தனர். செந்தாமரை வீட்டு வாசலில் ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. உள்ளேயிருந்து புனிதா அலறுவது கல்லிலும் நார்வரும் போல், அனைவர் மனதையும் உருக வைத்தது. கூடியிருந்த பெண்கள், “கன்னியம்மா தாயே! புனிதாவ காப்பாத்து” என வேண்டினர். தொடரும்.. சாம்பவி சங்கர்

ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்

ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்

“மாப்ளே ஐயப்பா, நான் பொதுவாத்தான் சொன்னேன். என்னையத்தான் எடுத்துக்கோ. நான் இன்னா நிக்கேன். நாளைக்கு இருப்பேன்னு உறுதியாச் சொல்ல முடியுமா?”– என்று இயல்பான பேச்சினூடே முந்தைய நாளில் சொல்லும் கோயா அடுத்த நாளே கொலையுண்டு கிடக்கிறான். அவனது மரணச் செய்தி, உறக்கம் கலையாத அந்த ஊரில் தீயாகப் பரவுகிறது. ஊரின் பிரதான இடமான ஜங்ஷன் முக்கு கடைவீதிதான் இப்படி எல்லாத் தகவல்களும் உலவும் இடம். கோயாவின் கொலைச் செய்தி பரவியதிலிருந்து ஊரே பரபரப்பான முகத்தைச் சூடிக்கொள்கிறது. இதில் குறிப்பாக, ஊரின் அனைத்துப் பிரச்சனைகளும் கை,கால் முளைத்து சிறகடித்துப் பறக்குமிடம் சாலம்துவின் டீக்கடையாக இருக்கிறது. காவல் துறை வருகிறது. கொலையுண்டவனுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களென ஒவ்வொருவராக அழைத்துச் சென்று தனது பாணியில் விசாரணையை முடுக்கி விடுகிறது. எப்போதும் அதிகாரம் எளிய மனிதர்கள் மீதுதான் தனது முழு பலத்தையும் காட்டும். இந்த நாவலிலும் அப்படி ஒன்றுமறியாத அப்பாவிகளையே நெருக்குகிறது. இதனால் தவறே செய்யாத பூமணி என்பவன் இறந்து போகிறான், மோசே பைத்தியம் ஆகிறான், ஐயப்பன் ஊரையே காலி செய்துகொண்டு கேரளாவில் தஞ்சமடைகிறார்.  நாவலின் கதைக்களம் ஒரு கொலையின் பின்னணியில் சூடுபிடிக்கத் தொடங்கினாலும் வழமையான த்ரில்லர் கதைகளாக இல்லாமல் அந்த ஊரின் அமைப்பையும், எளிய முறையில் ஜீவிதம் செய்யும் மனிதர்களின் அன்றாடத்தையுமே அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது.  நாவலாசிரியர் மீரான் மைதீன் நாகர்கோவிலைச்சார்ந்தவர். இதற்கு முன்பான இவரது நாவல்களிலும், கதைகளிலும் நாஞ்சில் மொழியைப் பிரத்யேகமாகப் படம்பிடித்துக் காட்டியது போலவே, இந்த நாவலிலும் அம்மொழியைக் கையிலெடுக்க, நழுவியோடும் உயிர் மீனின் லாவகத்தன்மையோடு வாசகனுக்கு விளையாட்டு காட்டியுள்ளார்.  குடும்பத்தைப் பிரிந்து காவல் சங்கக் கட்டிடத்தில் காவலாளியாகப் பணி செய்து வருபவன் கோயா. ஊரில் மட்டுமல்லாது கொஞ்சம் உலக விசயங்களிலும் ஞானமுடையவன். ஒருசிலருக்கு அவனுடைய மேதாவித்தனமான பேச்சுகள் சுவாரஸ்யம் தந்தாலும் ஒரு சிலருக்கு சமயங்களில் அலுப்பூட்டுகிறது. ஆனாலும் யாரோடும் பகைமை இல்லாது இருப்பவன். இரக்க குணம் கொண்டவன். அவனுக்கு ஆற்றங்கரையோரம் குடிசையமைத்து வாழும், இடுப்புக்கு கீழே கால்கள் சூம்பிப்போன மனோரஞ்சிதம் மீது கூடுதல் பிரியம் இருக்கிறது. அடிக்கடி அவளது வீட்டுக்கு இவனுடைய போக்கு கண்டு ஊர் வாய்க்கு வழக்கம்போல கண் காது முளைத்து விடுகிறது. பிறகு அது எப்படி ஒரு கொலைப்பாதகம் வரை நீள்கிறது என்பதே முழு நாவலும்.  சொந்த ஊரிலேயே இருக்கும் காவல் நிலையம் என்றாலும் காவல் நிலையம் என்றதும் அது ஒரு போகக்கூடாத இடமாகவே இன்றளவும் சாமானிய மக்களின் மனதில் தீர்க்கமாகப் பதிந்திருக்கிறது. அதேபோல காவல் துறையின் கிடுக்கிப்பிடிக் கேள்விகளில் கூட்டத்தோடு நின்றிருக்கும் ஒருவன் சிக்கும்போது அதற்குப் பலவாறு கிளை வரைந்து வேர் பாய்ச்சும் கூட்டமாகவும் அதே சாமானியர்களின் மனங்கள் இருக்கிறது. தன்னை விசாரிக்க அழைக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் நிற்காமல் சிறுநீர் கழிக்கும் நெட்டை ஆகட்டும், விசாரணை முடிந்து வெளியே வரும் ஐயப்பனிடம்,  “ரேகை மட்டும் எடுக்கானுவளா…இல்ல கேள்வியும் கேக்கானுவளா “,?-எனும் கோலப்பனுக்கு,  “ரேகையும் எடுத்துட்டு நல்ல முறுவலா ஒரு தோசையும் கொஞ்சோல கெட்டிச் சட்டினியும் தரானுவோ.” ஒரு மாதிரி விரக்தியிலும்,இயலாமையிலும் ஐயப்பன் சொல்லும் போது வாசகன் அடுத்து என்ன நடக்கும் என்ற மனநிலையை மறந்து சட்டென சிரித்து விடும் இடங்களாக இருக்கின்றன. அதுபோல பஷீரும், சரவணனும் பொறியாளர் அன்வரின் ஏமாற்று வேலைகளைப் பகடி செய்யும் இடங்களும், பஷீரின் காதல் கதையும் கொஞ்சம் இறுக்கமான மனதைத் தளர்த்திக் கொள்ளும் இடங்களாகும்.  இவர் கதை சொல்லும் யுக்தி முறை அலாதியானது. உதாரணமாக, தொடக்கத்திலேயே நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் வந்துவிடுகிறார்கள். உள்ளே போகப்போக மீண்டும் மீண்டும் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு காட்சிகளும் தொடங்கும் விதம் சினிமா காட்சிகளைபோல் பல திருப்பங்களைத் தருகின்றன. புறம்போக்கு நிலத்தை பொய் பத்திரம் தயார் செய்து ஊரை ஏமாற்றும் குமாஸ்தா சதாசிவம்தான் கொலைகாரன் என்று வாசிப்பவர்கள் நம்பும் வேலையில் ஆசிரியரின் மாயாஜால எழுத்து வேறொரு பக்கம் கொண்டு போய்விடுகிறது. ஜின்னா, ஐயப்பன், பூமணி, மோசே,மனோரஞ்சிதம், சதாசிவம், நெட்டை, கோலப்பன், பஷீர், சரவணன் என்ற கதாபாத்திரங்களின் வழி தொன்னூறு சதவீதம் கதை நிகழ்ந்தாலும் மொத்தமும் அதிகாரத்திற்கு அடங்கி ஒடுங்கி அஞ்சும்போது, அதற்கு எதிரான இயலாமை வாசகனின் உள்ளளத்திலும் கனல்கிறது. தன் மகன் வயதுடைய நீலன் எஸ் ஐ “உன் அம்மைக்கு மாப்பிள்ளை பாக்க” என்று தன்னுடைய அதிகாரத் திமிரை ஐயப்பனிடம் வெளிப்படுத்தியதிலிருந்து அவ்வார்த்தை ஐயப்பனைத் தூங்கவிடாமல் செய்கிறது. நாட்டில் அதிகாரத்தில் இருந்தாலே போதும் வயது வித்தியாசமின்றி யாரிடமும் நடந்து கொள்ளலாம் என்பதற்கு இப்படி சிலர் இன்றும் சாட்சியாக இருக்கிறார்கள். அந்த ஒற்றைச் சொல் ஐயப்பனைத் துரத்துவதை ஆசிரியர் “கற்பனையில் ஒருவனை சன்னம் சன்னமாகக் கொன்று போடக்கூடிய அளவுக்கு வன்மம் நிறைந்த வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானவை” என்றெழுதி நீலன் சொன்னது ஐயப்பனிடம் மட்டுமல்ல எளியவர்கள் எல்லோருக்கும் அதிகாரம் இப்படித்தான் ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் என்பதாகச் சொல்லியுள்ளார்.  ஒட்டுமொத்த நாவலிலும் மும்மத மக்களையும் கதாபாத்திரங்களாக அமைத்திருக்கிறார். எல்லோரிடமும் உள்ள கேலி, கிண்டல் அறியாமைகளை தன்னுடைய எழுத்துக்களில் பதிந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொலையாளி சிக்கி, பின் ஜாமீனில் வெளியே வந்து கொஞ்ச காலம் ஊரோடு ஒட்டாமல் இருந்தவன் பிறகு சகஜமாகிவிடுகிறான். கோயாவை மறந்து எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அடுத்த ஒரு பரபரப்பான செய்தி கிடைக்கிறது. வழக்கம் போல அதற்கு இறக்கைகளைப் பொருத்திப் பறக்கவிடும் வேலைகளை ஊர் தொடங்குவதாக முடிகிறது. ஒச்சை என்றால் உற்றுக்கேட்டல், இரைச்சல் என்று பொருள். ஒரு இரைச்சல் கேட்டால் கூட்டம் கூடிவிடும் ஊர், ஒவ்வொரு காலத்திலும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறது. பெரிய பூடகமாக எந்த விவரணைகளுமில்லாமல் எளிய மனிதர்களின் அன்றாடங்களை மிக எளிமையாகப் பதிவு செய்வதே ஆசிரியர் மீரான் மைதீனின் பாணியாக இருக்கிறது. அதே சமயம் மொழியில் அழகியலையும், நையாண்டிகளையும் ஒரு சேரக் கலந்து கொடுத்து வாசகனைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர். எளிய மனிதர்கள் மீதே எப்பொழுதும் தன்னுடைய படைப்புலகத்தைக் கட்டமைக்கும் மீரான் மைதீனுக்கு வாழ்த்துகள்.   நூல்: ஒச்சைவகை: நாவல்ஆசிரியர்: மீரான் மைதீன்வெளியீடு: புலம்விலை: ரூ.180 விமர்சனம்: சேலம் ராஜா