ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை, நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணுதல், பன்முகச் சிந்தித்தல், எண்ணங்களை ஆராய்ந்து தெளிதல், கற்றதைச் செயல்படுத்தல் என்பன போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது. பொதுவாக, முந்தைய அனுபவங்களைக் கொண்டு இயந்திரத்தைக் கற்கச் செய்தல், எதிர்கொள்ளும் தீர்வுகளுக்கேற்பத் தானாக மாற்றிக் கொள்ளுதல், மனிதனைப்போல் சிந்தித்துப் பிரச்சனைகளின் முடிவுகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிதல், சரியான முடிவுகளைச் செயல்படுத்துதல் முதலானவற்றை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்கிறது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவுக் கற்றல் – கற்பித்தல் காணொலிகள் அடங்கிய தொகுப்பு வெளியிடும் முயற்சியில் ஒரு சிலர் முயன்று வருவது எண்ணத்தக்கது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது எதிர்வரும் காலங்களில் மருத்துவம், மின் வணிகம், கல்வி, நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தரவுப் பாதுகாப்பு, விவசாயம், விளையாட்டு, சமூக ஊடகங்கள், தானியங்கிக் கருவிகள் மற்றும் எந்திர மனித உற்பத்திப் பணிகள் எனப் பல்வேறு துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. கல்வித் துறையில் இதன் வருகை ஒரு புதிய மைல் கல்லாக அமையப் போகிறது. இப்போதும் பல்வேறு சமூக ஊடகங்களில் எல்லாருடைய மனங்களிலும் நீங்காமல் நிலைத்து நிற்கும் மறைந்த தேசியத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், நடிகர் நடிகைகள், கற்பனைக் கதை மாந்தர்கள் முதலான நபர்களின் நிழற்படம் மற்றும் காணொலிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மீட்டுருவாக்கம், உருவாக்கம் செய்யப்பட்டவற்றைக் கண்டுகளித்து வியக்கும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலத்தில் சாலைப் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் நடைமுறையில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் கணவனின் தவறான நடத்தையைக் கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து வழக்குப் பதிந்து நியாயம் கேட்ட சேதி ஊரறிந்த ஒன்று. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் இதைப்போன்ற எதிர்மறையான தவிர்க்க முடியாத சிதைந்த நோக்கத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஆகும். ஆல்பிரட் நோபல் அதனை மாற்றி யோசித்து உருவாக்கியதை அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இருபெரும் நகரங்களில் அவற்றைப் பரிசோதிக்க முடிவு செய்து பெரும் நாசம் விளைவித்ததை யாரும் மறக்க முடியாது. இதுபோன்ற அல்லது இதைவிடவும் மிகப்பெரிய மனித ஆக்கப் பேரிடர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வித்திட்டால் என்ன செய்வது என்று பல்வேறு வளர்ந்த நாடுகளும் இத்தொழில்நுட்பப் பயன்பாட்டை எதிர்த்து முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இத்தொழில்நுட்பம் பல்வேறு வகையான துறைகளில் பல்வேறு புதுமைகளைப் படைக்க இருப்பதாக அறியப்படுகிறது. அதேவேளையில், இதனால் மனித சமூகத்துள் பலவிதக் குழப்பங்கள், ஆபத்துகள், பணி இழப்புகள், மனநெருக்கடிகள் சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகள் தொடக்கத்தில் எழும் என்பது நிச்சயம். எனினும், இது எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ஏற்படுவது இயற்கை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. இதுபோன்றவற்றைத் தடுக்க நினைப்பதும் முடியாத நிலையில் இயலாமையால் வருந்துவதும் அறிவீனம் ஆகும். மனித வேலையிழப்பை மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது. ஆள் விரயம், கால விரயம், நேர விரயம், பண விரயம், மன உளைச்சல் விரயம் போன்றவை இதனால் பெருமளவில் தவிர்க்கப்பட்டதையும் நினைவுகூர்ந்து எண்ணிப் பார்ப்பது அவசியம். இன்றைய சூழலில் எந்தவொரு மின் சாதனங்கள், தகவல்தொடர்புக் கருவிகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த வசதிகளையும் நுகர்வுத் தன்மைகளையும் வெகுவாகக் குறைத்துக்கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும். மனித மனம் அவற்றிற்கு அடிமையாகிவிட்டது. ஒருகட்டத்தில் இவற்றின் பாதகங்களைக் கடந்து போகவும் சாதகங்களை நினைந்து போற்றவும் பழகிக் கொண்டு விட்டோம் என்பதுதான் உண்மை. சரி. கல்வியில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்குச் சரியாக விடையளிப்பது அவசியம். வகுப்பறைகளில் இத்தொழில்நுட்பம் பல்வேறு புதுமைகளைத் துல்லியமாக விளைவிக்கும். அதாவது, மகாத்மாவைப் பாட வைக்கலாம். நேரு மாமாவை ஆட வைக்கலாம். நேதாஜியை வீர உரையாற்றச் செய்யலாம். வேலுநாச்சியாரைப் போரிடச் செய்யலாம். புரட்சியாளர் அம்பேத்கர் போதிப்பதைக் கேட்கச் செய்யலாம். கவிக்குயில் சரோஜினியைக் கவி பாட வைக்கலாம். மகாகவி பாரதியை உணர்ச்சிப் பெருக்குடன் கவிதை எழுதச் சொல்லலாம்.  இவையனைத்தையும் இன்றையக் காலச் சூழலில் தத்ரூபமாக வியக்கத்தக்க வகையில் இப்போது செய்து காட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழிகோலும். இதுபோன்ற நிகழ்வுகள் கற்பித்தலில் ஆசிரியர் பணியை வெகுவாகக் குறைக்க உதவிடும். புதுமை – இனிமை – எளிமை அடிப்படையில் கற்பித்தல் பணிச்சுமை இலகுவாகும். இதற்கு நேர்மாறாக, கற்றலில் துரிதமும் துல்லியமும் மகிழ்ச்சியும் நீடித்து நிலைத்தலும் மிகும். எத்தகைய காணொலிகளையும் இதனால் மிக விரைவாக உருவாக்க முடியும். பல்வேறு கேலிச்சித்திர இயங்குபடம் அடங்கிய தொகுப்பு, குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து கற்றல் சுமையாகவும் தண்டனையாகவும் வலியாகவும் வேதனையாகவும் அல்லாமல் விரைவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் ஆனந்தமாகவும் நிகழ அதிகம் வாய்ப்புண்டு. எந்தவித ஐயப்பாடுகளையும் அவை சார்ந்த தீர்வுகளையும் விளக்கங்களையும் தேடித் திரியும் அவசியம் இல்லை. ஓப்பன் ஏஐ சாட் ஜிபிடி (Open AI ChatGPT) மூலம் நொடிப் பொழுதில் விடைகளாகப் பெறவியலும். இதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டாலும் காலப்போக்கில் அனைத்துக் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. தானே கற்றலுக்கு இஃதொரு நல்ல எந்திர ஆசிரியர் (AI-Teacher) ஆகும். அதற்குத்தான் கூகுள் (Google) தேடுபொறி இருக்கிறதே என்று அங்கலாய்ப்பது சரியாகாது. பல்வேறு இயங்குதளத்தைச் சுட்டிக்காட்டி உரிய தரவுகளைத் தேடிக் கண்டடைவது தேடுவோரின் கடினப் பணியாக உள்ளது. ஆனால், இஃது அவ்வாறு கிடையாது. கையிலே காசு வாயிலே இனிப்பு என்பது போல, வினாத் தொடுத்த மறுநொடியே சுடச்சுட விடைகளைச் சிறியதாகவும் பெரிதாகவும் அளவாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் போதும் போதும் என்று கொட்டிக்கொண்டிருக்கும். தற்போது ஆங்கிலத்தில் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் மொழியில் போதுமான தரவுகள் வழங்கப்படுவது இன்று குறைவானதாக உள்ளது. ஆனால், நாளை அவ்வாறு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேவேளையில், தேர்வின்போது ஒரு மாணவனிடம் இது கிடைக்குமேயானால் அபாயகரமானது. படிக்கவே வேண்டியதில்லை. எதையும் நொடிப் பொழுதில் தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராபத்து இதில் உள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கல்வித்துறை எதிர்காலத்தில் போராடும் என்பது திண்ணம். இத்தகைய நிலையில், கல்வித்துறை நிர்வாகத்தில் இத்தொழில்நுட்பம் புகுத்தப்படுமேயானால், ஆசிரியர் பணியும் பணியிடமும் கேள்விக்குள்ளாகக் கூடும். இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமே மனித வளத்தை வெகுவாகக் குறைத்து நிறைவான அடைவைப் பெறச் செய்வதாகும். பள்ளிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளால் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக ஐந்து தொடக்கப்பள்ளிகளோ, நடுநிலைப்பள்ளிகளோ, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோ பிணைக்கப்பட்டு ஒரு குறு கற்றல் வள மையம் தோற்றுவிக்கப்பட்டு சுழற்சி முறையில் தகுதியும் திறமையும் அனுபவமும் பயிற்சியும் நிறைந்த பாட ஆசிரியர்கள் எடுக்கும் இணையவழி இடைவினை வகுப்பு களால் (Online Mutual Response Class) கல்வி வளப்படுத்தப்படும். தவிர, ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மற்றும் பீட்டர் நார்விக் எனும் ஆசிரியர்கள் முன்மொழிந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட அ) எதிர்வினை இயந்திரங்கள் (Reactive Machines), ஆ) வரையறுக்கப்பட்ட நினைவகம் (Limited Memory), இ) மனத்தின் கோட்பாடு (Theory of Mind), ஈ) சுய விழிப்புணர்வு (Self-Awareness) ஆகியவற்றுள்  மனத்தின் கோட்பாடு (Theory of Mind) அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் சமூக நுண்ணறிவு (Social Intelligence) கொண்டதாக அமைக்கப்படுகின்றன. இவை மனித நோக்கங்களை ஊகித்து அறிவதுடன், அவர்தம் நடத்தையைக் கண்காணிக்கவும் முடியும். இவை மனிதக் குழுக்களின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக இருப்பதற்கான திறன்களைக் கொண்டிருப்பதன் காரணமாகக் கல்வியில் இதன் பயன்பாடுகள் அதிகரிக்கக் கூடும். இதற்கு இயந்திர வழிக் கற்றல் (Machine Learning) மற்றும் அதன் ஒரு பகுதியாக விளங்கும் ஆழ்ந்து கற்றல் (Deep Learning) ஆகியவை கற்போருக்கு மிகுந்த உதவிகரமாக விளங்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. செயற்கை நுண்ணறிவு தானியக்க எந்திரச் செயல்முறை (AI Robotic Process Automation) மூலமாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை வடிவமைத்து வழங்கும் செயல்பாடுகள் ஊடாக மதிப்பீட்டு முறைகளும் அதன் வழியாகக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் குறைதீர் நடவடிக்கைகள் போன்றவை நிகழ்த்தும் நோக்கும் போக்கும் காலப்போக்கில் ஆசிரியர் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும் துல்லியமும் துரிதமும் மிக்கதாக இருக்கும். மனித விருப்பு வெறுப்பிற்கு ஈண்டு இடமில்லை. எடுத்துக்காட்டாக, ஐந்து பாட ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணியை ஓர் AI எந்திரம் செய்துவிடும். மனிதப் பிழைகள் மாதிரியான குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பயனர்க்கு இடையேயான நட்பு (User Friendly) இதனால் வலுப்படும். மேலும், இன்றைய தொழில்நுட்பக் கருவிகள் மீதான இனம் புரியாத ஈர்ப்பின் காரணமாகக் குழந்தைகளிடம் கற்றலானது விரைந்து நிகழும். போதிப்பவர் என்ற நிலையிலிருந்து ஆசிரியர் மாணவர் கற்பதற்கான வளங்களையும் வசதிகளையும் சூழலையும் ஏற்படுத்தித் தரும் நபராக (Facilitator) அறியப்படுவார். ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விளைவிப்பது இங்கு நோக்கமல்ல. வேகமாக மாறி வரும் உலக நடப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புரியவிருக்கும் அபரிமிதமான மாயவித்தைகள் மற்றும் விந்தைகள் குறித்த போதிய விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கையும் நோக்கி நகர முனைவதும் முனைப்புக் காட்டுவதும் இன்றியமையாதது என்று ஆசிரியர் பெருமக்கள் புரிந்து கொள்வது நல்லது. 2030களில் இப்போதுள்ள மரபுவழி வகுப்பறை (Chalk and Talk Class) திறன்மிகு வகுப்பறை (Smart Class) நிலையைக் கடந்து செயற்கை நுண்ணறிவு வகுப்பறை யாக (AI Class) உருவாக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். இப்படித்தான் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System) வருகைப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகள் கல்வியில் மெல்ல நுழைக்கப்பட்டபோது பலரும் இதெல்லாம் கொஞ்சகாலம்தான் நீடிக்கும் என்று வெளிப்படையாகப் புலம்பியது அறியத்தக்கது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் கல்வித்துறையில்

சரித்திரப் பயணத்தில் சந்திரயான் 3

சரித்திரப் பயணத்தில் சந்திரயான் 3

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் அனைவரும் இன்றைய மாலைப் பொழுதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஜூலை 14 அன்று நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், நிலவில் தரையிறங்கவுள்ளதைக் காணவே இத்தனை ஆவல் நிலவுகிறது. கற்பனையில் நிலவைப் பாடிக்கொண்டிருந்த காலத்தை மாற்றியது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் அது மிகையில்லை. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஏற்கனவே சந்திரயான் 1 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தாலும் சந்திரயான் 2, தன்னுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் இன்று நிறைவடைகிறது. சந்திரயான் 1 நிலவின் வட துருவத்தில் தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இதனால், நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், சந்திரயான் 3க்கு முன்னதாகவே நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் அது நிலவில் மோதி நொறுங்கியது. எனவே, சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கப் போகும் அந்த இறுதி நிமிடங்களை உலகமே உற்றுநோக்குகிறது. சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் 10 கட்டங்களாக நிகழ்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது சிறிதாக முன்னேறி நிலவை நெருங்கியுள்ள சந்திரயான் மூன்றின் பயணத்தின் படிநிலைகளைக் காண்போம். பெரும் சவால்களைக் கடந்து, எட்டாவது கட்டப் பயணத்தை இன்று நிறைவு செய்யவுள்ள சந்திரயான் 3 விண்கலம், தனது பயணத்தின் 9 மற்றும் 10ஆம் கட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, இந்தியாவின் அறிவியல் வலிமையை உலகிற்கு உணர்த்தும் நாளாக இந்த நாள் அமையட்டும். சந்திரயான் 3 திட்டத்தில் பங்காற்றிய அறிவியலாளர்கள் உள்ளிட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

துள்ளிக் குதிக்கும் ஜீன்கள்

துள்ளிக் குதிக்கும் ஜீன்கள்

மக்காச்சோளக் கதிரில் இருக்கும் முத்துக்கள் சில சமயம் இயல்பான மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட புள்ளிகள், சிவப்பு, நீலம் என வேறு வண்ணங்களில் காணப்படுவது உண்டு. இது எதனால் நிகழ்கிறது என்பதை, பார்பரா மெக்ளின்டோக் கண்டறிந்தார். பார்பரா மெக்ளின்டோக் ஜூன் 16, 1902-ல் அமெரிக்காவில் பிறந்தவர். அவரையும் சேர்த்து மொத்தம் நான்கு குழந்தைகள். அவர்களை வளர்க்கப் போதுமான பொருளாதார வசதி இல்லாதாதால், மூன்று வயதிலிருந்தே  உறவினர் வீட்டில் வளர்ந்தவர். பெண் என்ற ஒரே காரணத்திற்காக, கார்னெல் பல்கலைக்கழகம் அவருக்குப் பேராசிரியர் பதவியைத் தர மறுத்தது. செல்லில் காணப்படும் குரோமோசோம் மாறுபட்டால் தாவரத்தின் வெளிப் பகுதிகள் மாறுபாடு அடையும். இதைப்பற்றிப் படிக்கும் பிரிவுக்கு சைட்டோ ஜெனட்டிக்ஸ் என்று பெயர். சைட்டோ என்றால் செல். ஜெனட்டிக்ஸ் என்றால் மரபியல். பார்பராவின் ஆய்வு வழிகாட்டிக்கே (Guide) இது முற்றிலும் புதிய துறையாக இருந்தது. உயிர்கள் அனைத்தும் செல்களால் ஆனவை. செல்களை நுண்ணோக்கியில் பார்த்தால் அவற்றுக்குள் இருக்கும் நிறைய நுண் பகுதிகள் தெரியும். அவற்றில் முதன்மையானது உட்கரு. இது மேம்பாடு அடையாத உயிரிகளான பாக்டீரியா போன்றவற்றில் மேலுறை இல்லாமல் காணப்படும். அதனை நியூக்ளியாய்டு என்பார்கள். நம் செல்களில் இருப்பது நியூக்ளியஸ். இதற்குள் குல்பி ஐஸ் போன்று இருப்பவை குரோமோசோம்கள். அதற்குள் DNA நன்றாக சுருட்டி சுற்றப்பட்டு இருக்கும். பார்பரா முதலில் மக்காச்சோளத்தில் காணப்படும் குரோமோசோம்களை ஆராய்ந்தார். அவற்றை நேரடியாக நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க முடியாது. இதற்காக குரோமோசோம்களை முதலில் சாயமேற்றும் கார்மைன் முறையைக் கண்டறிந்தார். மொத்தம் பத்து ஜோடி குரோமோசோம்கள் மக்காச்சோள உட்கருவில் இருந்தன. அவற்றில் ஒன்பதாவது ஜோடி குரோமோசோம்கள் விநோதமாகச் செயல்பட்டன. இரண்டு பகுதிகள் அதற்குக் காரணமாக இருந்தன. ஒன்று பக்கத்தில் உள்ள ஜீனை ஒதுக்கி வைத்து அதன் செயல்பாட்டைத் தடுத்தது. இன்னொன்று அந்த ஜீனை செயல்பட வைத்தது. இவற்றுக்கு முறையே Ds- Dissociation, Ac-Activator என்று பெயரிட்டார். DNAவின் குறிப்பிட்ட ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட செயலுக்குக் காரணமாக இருந்தால் அதனை ஜீன் என்று சொல்வார்கள். மேம்பாடு அடைந்த உயிரிகளில் இப்படி வேலை செய்யும் பகுதியும் (Exons), சும்மா இருக்கும் பகுதியும் (Introns) ஒன்றுகொன்று மாறி மாறி அமைந்திருக்கும். செயல்படும்போது எக்சான்கள் ஒன்றாக இணைந்துவிடும். DNAவில் உள்ள நைட்ரஜன் கார வரிசையில் (A,T,G,C) ஏதேனும் மாறுதல்களைக் கட்டாயப்படுத்தி மேற்கொண்டால் அவற்றின் வரிசை அமைப்பு குலையும். இவை கதிர்வீச்சு போன்ற புறக்காரணிகளால் நிகழ்வதுண்டு. இதற்கு திடீர் மாற்றம் (Mutation) என்று பெயர். செல்லுக்குள் இருக்கும் DNA-வின் வரிசை மாறினால், வெளிப்புறத் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படும். இத்தகைய மாறுபாடுகள் இயற்கையாகவே நடக்கின்றன. அதற்குக் காரணம் ஓரிடத்தில் இல்லாமல் தாவிக் குதிக்கும் ஜீன்கள். இதன் காரணமாகவே ஆரம்பத்தில் சொன்ன அரிதான சில மக்காச்சோள முத்துக்கள்  விதவிதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இதனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் என்று அழைத்தனர். பின்னர் நகரும் மரபியல் கூறுகள், ட்ரான்ஸ்போசான்கள், குதிக்கும் ஜீன்கள் போன்ற பெயர்களை வழங்கினார்கள். மரபியலின் தந்தை என்று அழைக்கப்படும் கிரிஹர் மெண்டலின் கண்டுபிடிப்புகள் 1900இல் மறு ஆய்வு செய்யப்பட்ட பின்பே  உலகுக்குத் தெரியவந்தன. சென்ற வருடம் அவர் பிறந்து இருநூறாவது ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடினார்கள். மரபியல் பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் செயல்பாட்டை மெண்டல் இரண்டு விதிகளின் மூலமாக, பரிசோதனைகள் செய்து வெளியிட்டார். மெண்டலின் ஆய்வுகள் உலகுக்குத் தெரியவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்பு அதன் நீட்சியாக பார்பராவின் ஆய்வுகள் இருந்தன என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. குதிக்கும் ஜீன்கள் மூலம் மாறுபாடுகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்ற தலைமுறைக்குக் கடத்தப்படும் என்பது முற்றிலும் புதியது. இன்னும் சொல்லப்போனால், இது மெண்டல் சொன்ன விதிகளுக்கும் அதன் நீட்சியாக ஏற்கனவே மேற்கொள்ளப்ட்ட ஆய்வுகளின் கட்டங்களுக்குள்ளும் பொருந்தி வராத ஒன்று. இதன் காரணமாகவே இவருடைய ஆய்வுகளும் 1940களில் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. ஏனெனில் அப்போது DNAவின் ஈரிழை வடிவமைப்போ, மரபு சங்கேதக் குறியீடுகளோ கண்டறியப்பட்டிருக்கவில்லை.  DNA அமைப்பு கண்டறியப்பட்ட ஆண்டான 1953லிருந்து, இத்தகைய நிராகரிப்பின் காரணமாக பார்பரா தன் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டார். DNA-வின் குறிப்பிட்ட பகுதிகள் எவ்வாறு மின்சார சுவிச்சைப் போன்று செயல்படுகின்றன என்பதை ஒபரான் மூலமாக ஜேக்கப் மோனாட் கண்டறியும்போது பார்பரா ஆய்வின் தனித்துவம் உலகுக்குத் தெரியவந்தது. குதிக்கும் ஜீன்களைக் கண்டறிந்தமைக்காக முப்பது வருடங்கள் கழித்து 1983இல் பார்பராவுக்கு செயலியல் மற்றும் மருத்துவத் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை இத்துறையில் தனியொரு பெண்ணாக நோபல் பரிசு பெற்றவர் பார்பரா மெக்ளின்டோக் மட்டுமே ஆவார். இத்தகைய குதிக்கும் ஜீன்கள் நுண்ணுயிரிகள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நமக்குள்ளும் இருக்கின்றன. 1960களில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துக்கு எதிராக இயங்கும் தன்மையை பாக்டீரியாக்கள் இத்தகைய குதிக்கும் ஜீன்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தி அழிந்து போகாமல் வம்சத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன என்று கண்டறிந்தனர். டார்வின் சொன்ன பரிணாமக் கோட்பாட்டில் முக்கியமானது இத்தகைய வேறுபாடுகளே ஆகும். இவை பரிணாமத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஓம்புயிரியில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்த ட்ரான்ஸ்போசான்களைத்தான் ஒட்டுண்ணிகள் முகமூடியாகப் பயன்படுத்துகின்றன. ஒரு ஜீன் ஒரு நொதிக் கோட்பாட்டை நிறுவிய பீடில், டாட்டம் ஆய்வுகளில் பார்பரா முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர்களுக்கு 1958இலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மக்காசோளத்தின் முதல் மரபியல் வரைபடம், குரோமோசோம் நுனிப் பகுதியின் செயல்பாடுகள் என்று பார்பரா ஏராளமாகக் கண்டறிந்துள்ளார். இத்தகைய குதிக்கும் ஜீன்கள், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களிலும் புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்களிலும் காணப்படுகின்றன. கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் இத்தகைய அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பார்பரா 1992, செப்டம்பர் 2இல் தனது 90ஆவது வயதில் நியூயார்க்கில் இயற்கை எய்தினார். அவர் பிறந்த இந்த ஜூன் மாதத்தில் இந்தக் கட்டுரையின் மூலம் அவரை நினைவு கூர்வோம்.