குட்டீசுடன் கும்மாளம்

குட்டீசுடன் கும்மாளம்

இப்ப எல்லாம் நாம வேலைக்குப் போறதைவிட அதிகமா கவலைப்படறது குழந்தை வளர்ப்பு பற்றிதான். இதைப் பார்க்கும் வீட்ல இருக்கற பெரியவங்க “அட, நாங்க எல்லாம் அஞ்சாறு புள்ளைகளை அழகா பெத்து வளர்த்தோம். ஆனா இவங்க ஒண்ணு ரெண்டு புள்ளைகள வைச்சிகிட்டு பண்ற அலம்பல் இருக்கே… தாங்க முடியல” அப்படின்னு சொல்லுவாங்க. நாம குழந்தைகளா இருந்த காலத்தில் எல்லா சொந்த பந்தங்களும் அக்கம் பக்கத்தில் ஒன்னு மண்ணா இருந்து வந்தாங்க. இன்னைக்கு நாம குழந்தை களுக்குச் சொல்ற “ஷேரிங் ரொம்ப நல்லது” அப்படிங்கிற விஷயம் அப்ப இயல்பா வாழ்க்கை முறையில இருந்துச்சு. பெரியப்பா தன் கொழந்தைகளுக்கு மட்டும் இல்லாம தம்பி பிள்ளைகளுக்கும் சேர்த்தே வாங்கிட்டு வருவார். அதே மாதிரி சித்தப்பா, அத்தைகள், மாமன்கள் எல்லா ருமே அப்படி இருப்பாங்க. எங்க அப்பா வேலை முடிஞ்சு வரும்போதே நெறைய மிட்டாய், தின்பண்டம் வாங்கிட்டு வருவார். வீட்டுக்கு அரை கிமீக்கு முன்னாடி இருக்கற இடத்தில் நாங்க மற்ற பசங்களோடு விளையாடிட்டு இருப்போம். அப்பாவோட பைக் சத்தம் கேட்டதும் எல்லா பசங்களும் “மிட்டாய் மாமா! மிட்டாய் மாமா!!”ன்னு பின்னாடியே வருவாங்க. வீட்டுக்கு வந்ததும் எல்லாருக்கும் எடுத்துக் குடுப்பார். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல… எல்லா நாட்களும் இப்படிதான் பண்ணுவார். இதைப் பார்த்து இயல்பா ஷேரிங் குணம் எங்களுக்குள் வந்துச்சு. அதே மாதிரி வீட்ல என்ன செஞ்சாலும் நம்ம கையில கொடுத்து அதை அக்கம் பக்கம், சொந்தக் காரங்களுக்கு தந்துட்டு வரச் சொல்லுவாங்க. இது மாதிரி எல்லா விசயங்களும் பெரியவங்க சொல்லித் தந்து தெரிஞ்சுக்காம செயல்முறை யாவே நாம கத்துக்கிட்டோம். ஆனா இன்னைக்கு சூழ்நிலை அப்படியா இருக்கு? வாழ்தல் வேண்டி படிப்பு துரத்த, வாசல், முற்றம், மரங்கள் என்ற அழகிய வீட்டை விட்டுப் பல மைல்கள் தாண்டி ஆயிரம் சதுரஅடி வீட்டுக்குள் நாமும் சிறைப்பட்டு, பிள்ளைகளையும் சிறைப்படுத்தி வாழ்கிறோம். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க யாருன்னே நமக்குத் தெரியாது. நிறைய சம்பாதிக்கணும்னு சொல்லி, காசைக் குடுத்து அனைத்து வசதிகளையும் கைக்கு அருகில் கொண்டு வந்தாச்சு. குழந்தைகளை நம்முடைய நீட்சியா நெனைச்சு நம்ம கனவுகள் ஆசைகள் எல்லாம் அவங்க மேல திணிச்சு, “வாழ்க்கை ஒரு பந்தயம். ஓடு.. ஓடு…ன்னு அவங்கள பந்தயக் குதிரைகள் ஆக்கி வைச்சிருக்கோம். குழந்தைகளை குழந்தைகளா வாழ விடுறோமா? பணம், புகழ்ங்கற வட்டத்திற்குள் அவங்களையும் சிக்க வைச்சு, கடைசியில “நான் அப்படி அருமையா வளர்த்தேன்… இன்னைக்கு என் பேச்சைத் துளி கூட மதிக்கறது இல்ல”ன்னு நெறைய பேர் புலம்பிட்டு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்காங்க. ஒரு கணம் யோசிச்சுப் பார்த்தா தவறு எங்கே ஆரம்பம் ஆகுதுன்னு நாம் உணர்வோம். விதை ஒண்ணு போட்டு மரம் ஒண்ணு வளரணும்னு எதிர்பார்த்தா எப்படி நடக்கும்? நம்மிடம் ஆயிரம் தவறுகளை வைத்துக் கொண்டு பிள்ளைகள் மட்டும் சரியானவர்களாய் வளரணும்னு நினைச்சா அது எப்படி சரியாகும்? அதனால் நாம முதல்ல மாறணும். பின்னர் பிள்ளைகளும் அவங் களாகவே நம்மைப் பார்த்து மாறுவாங்க. இப்ப உள்ள குழந்தைகள்கிட்ட பட்டிமன்றத் திற்கு ஒரு தலைப்பு வைக்கச் சொல்லிக்  கேட்டா “அதிகம் அட்வைஸ் பண்றது அம்மாவா? அப்பாவா?” ன்னுதான் தலைப்பு தருவாங்க. பொதுவா யாருக்குமே அறிவுரை சொல்றது பிடிக்காது. ஆனா செலவில்லாம கொடுக்கற விசயம் அப்படிங்கறதால எல்லாரும் அறிவுரைகளை அள்ளி வீசுவோம். அறிவுரை என்பதை விட அதையே ஆலோசனைகளா பிள்ளைகள் கிட்ட சொல்லிப் பாருங்க. ஆலோசனைகள் சொல்லி, ஆரோக்கியமான விவாதம் அவர்களிடம் பண்ணும்போது அவங்க அதை ஏத்துக்குவாங்க. அறிவுரைக்கும் ஆலோ சனைக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம். ‘அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே’ என்பதை விட “இப்படி செய்யலாமே, அப்படி செய்யலாமே” என ஆலோசனைகள் கூறலாம். அடுத்து நாம செய்யற இன்னொரு தப்பு ஓப்பீடு. நம்ம குழந்தைகளை மற்றவங்க குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசும்போது குழந்தைகளிடம் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை வந்துடும். அதனால ஒப்பிடுதல் கண்டிப்பா வேண்டாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். நம்ம குழந்தையிடம் என்ன தனித்திறமை இருக்கு அப்படின்னு கண்டு பிடிச்சு அதில் அவங்களுக்கு நிறைய விருப்பம் இருந்தால் மட்டுமே அவங்கள அந்த வகுப்புகளுக்கு அனுப்பணும். “பக்கத்து வீட்டுப் பொண்ணு பாட்டு கிளாஸ் போறா. அதனால நீயும் போ”ன்னு சொல்லி திறமைகளைத் திணிக்க கூடாது. எந்தவொரு மனிதரும் ஏங்குவது அங்கீகாரத்துக்கும், பாராட்டுக்கும்தான். அதனால சின்ன சின்ன விசயங்கள் செய்யும் போது அவங்கள பாராட்டி, சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்குவிக்கணும். எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்னு ஆரோக்கியமா வாழ்றது.  ஆரோக்கி யமான குழந்தைதான் நல்லபடியாக வளரும். அதனால உடற்பயிற்சியின் அவசியத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்தணும். முன்னுதாரணமா நாமும் உடற்பயிற்சிகள் செய்தால்தான் பிள்ளைகளும் அதைப்பார்த்து  கடைப்பிடிப்பாங்க. ‘நாம எப்போதாவது பிள்ளைகளிடம் சாரி சொல்லி இருக்கோமா?’ன்னு ஒரு கணம் யோசிச்சுப் பாருங்க. ‘என் குழந்தைகிட்ட நான் எதுக்கு சாரி கேக்கணும்?’ அப்படின்னுதானே பெற்றோர்கள் நினைக்கிறோம். அதை மாத்தி, கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சாரி, ப்ளீஸ், தேங்க்யூ போன்ற கோல்டன் வார்த்தைகளைப் பயன்படுத்தணும். அப்போதான் குழந்தைகளும் அந்த வார்த்தைகளைப் பள்ளிகளிலும், வீடுகளிலும், வெளியிடங்களிலும் பயன்படுத்துவாங்க. குழந்தை வளர்ப்பில் நம் மனதில் இருத்த வேண்டிய இரண்டு முக்கிய  விசயங்கள்… 1. குழந்தைகள் நம்மால் வந்தவர்களே தவிர நமக்காக வந்தவர்கள் அல்ல. 2. குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை கேட்ட வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார்கள். இந்த இரண்டையும் விசயங்களையும் நினைவில் கொண்டு நம்மை நாம் செதுக்கிக் கொண்டாலே, குழந்தை வளர்ப்பு என்பது இனிமையானதொரு அனுபவமாகிவிடும்.

மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள்!

மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள்!

பெரும் பதட்டமும் பரபரப்பும் என்னைச் சூழ்ந்து கொண்டது. இவ்வளவு பிரமாண்டமான ரயில் நிலையத்தில் உயரமான படிக்கட்டுகளில் ஏறி இறங்கி நீண்ட பிளாட்பாரங்களில் நடந்து கவுண்ட்டர் கவுண்ட்டராகத் தேடி, தேவையான பதிலைப் பெறுவது பெரும் சங்கடத்தையும் மனச்சோர்வையும் தந்தது. கொல்கத்தா ரயில் நிலையம் நான் நினைத் ததற்கு  மேலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. இருக்காதா என்ன? 1911 வரை இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தாதான் இருந்தது. அதற்கேற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டது இந்த ரயில் நிலையம். இந்தியாவின் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த ரயில் நிலையத்தைச் சிறு நகரம் என்று கூடச் சொல்லலாம். உணவகங்கள், சிறு கடைகள், பல்பொருள் அங்காடிகள் எனப் பல தரப்பட்ட கடைகள் எல்லாம் நீண்டுகொண்டே செல்கிறது. இரவு மணி 11:45க்கு அசாம் செல்லும் காமரூபம் எக்ஸ்பிரஸ் வண்டியில் நான் ஏறியிருக்க வேண்டும். இப்போதோ மணி 12:20. 11 மணியிலிருந்து வண்டியைப் பற்றிய விபரத்தைத் தேடி அலைந்து கொண்டே இருந்தேன். பயணிகள் விசாரணை அலுவலகம், கவுண்ட்டர்கள், கடைநிலை ஊழியர்கள், நடைமேடைக் கடை வியாபாரிகள் என்று எவரிடத்திலும் சரியான பதில் கிடைக்கவில்லை. “வரும்… வெயிட் பண்ணுங்க..!” என்பது ஒரு சிலரின் பதிலாக இருந்தது. எப்போது வரும், எந்த நடைமேடையில் நிற்கும், எந்த நேரத்தில் ரயில் கிளம்பும் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. நிலைய நிர்வாகம் முறையாக அறிவுப்பு ஏதும் செய்யவில்லை. அறிவிப்புப் பலகையிலும் இதுகுறித்த தகவல் எதுவ்மில்லை. அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் என எவரிடத்திலும் முறையான பதிலும் இல்லை. உடலும் உள்ளமும் சோர்ந்து போனேன். ஆனாலும் ஓரிடத்தில் நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. ரயில் ஏதாவது ஒரு நடைமேடைக்கு வந்து கிளம்பிச் சென்று விட்டால் மொத்த பயணத் திட்டமும் தோல்வியாகி விடும். கால்கள் இருப்புக் கொள்ளாமல் நடந்துகொண்டே இருந்தன. “அண்ணா… தமிழ்நாடா?” திடுக்கிட்டுத், தமிழ் வந்த திசை நோக்கித் திரும்பி பார்த்தேன். நுழைவாயிலுக்கு அடுத்த முதன்மையான பயணிகள் கூடத்தில் கடைகளின் ஓரமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. அதிலிருந்த ஒரு இளம்பெண்தான் என்னை நோக்கி கேட்டாள். ஆச்சரியமாக இருந்தது. கடுமையான மன உளைச்சலில் இருந்த எனக்கு தமிழைக் கேட்டது மகிழ்ச்சியையும் தந்தது . “ஆமா… தமிழ்நாடுதான் சென்னையிலிருந்து வர்றேன்..!” சரி எங்க போறீங்க..? “சிலிகுரிக்கு” “சிலிகுரிக்கா..? அங்க என்ன..?” “அங்கிருந்து சிக்கிமுக்கு.. கேங் டாக்.!” “ஓ… டூர் போறீங்களா..? தனியாவா?” கண்களை அகல விரித்துக்கொண்டு அழகான தமிழ் உச்சரிப்புடன் மிகவும் இயல்பாக உரையாடினாள் அந்தப் பெண். அவளது அம்மாவும் அப்பாவும் கூடவே இருந்த அண்ணனோ தம்பியோ ஒரு இளைஞனும் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தனர் . “ஒரு மணி நேரமா டென்ஷனா அலையறீங்களே.. என்ன பிராப்ளம்..?” “காமரூபம் எக்ஸ்பிரஸ்ல டிக்கெட் பதிவு பண்ணி இருந்தேன். வண்டி கிளம்புற நேரம் 11:45 ன்னு டிக்கெட்ல போட்டு இருக்கு. இங்க வண்டியும் இல்ல, வண்டி பத்தின தகவலும் இல்லை. அதான் டென்ஷன்..!” மனப் பதட்டம் குறையாமல் சொல்லி முடித்தேன். “ஓ…இதுதான் பிரசினையா…? இருங்க வரேன்..!” என்று கூறிவிட்டு அவளது அப்பாவிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு வந்தாள். “சரி.. வாங்க போகலாம்..!” என்று கையைப் பிடித்துக்கொண்டு அழைத்தாள். இறுகப் பற்றி இருந்த கையை விடுவிக்க முயற்சித்தேன். ஆனால் அவள் விடவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபாளம் – போன்ற நாடுகளில் ஆண் பெண் வேறுபாடுகள் குறைவு. பெண்களும் ஆண்களைப் போலவே செயல்படுவதைப் பலரும் பல இடங்களில் பார்த்திருக்கலாம். என் கையைப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த அவளுக்கு, கடினமான என் தோல் பையை இடையூறாய் இருந்தது. “இது எதுக்கு இப்ப..?” எந்த தயக்கமும் இல்லாமல் நெடுநாள் பழகிய தோழியைப்போல எனது தோல் பையை எடுத்துக் கொண்டு போய் அவர்கள் குடும்பம் உட்கார்ந்திருக்கும் இடத்தின் நடுவில் வைத்தாள். தயங்கினேன். திரும்பித் திரும்பி என் தோள் பையைப் பார்த்தேன். புரிந்து கொண்டாள். “தைரியமா வாங்க.. சேஃப்டியா இருக்கும்..!” மீண்டும் கையைப் பிடித்துக் கொண்டு எதிரில் சற்றுத் தொலைவில் முதல் மாடியில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றாள். நள்ளிரவு நேரம் என்பதால் வழிகளிலும் படிக்கட்டுகளிலும் வராண்டாவிலும் பலதரப்பட்ட பயணிகள் படுத்துக் கிடந்தனர். தாறுமாறாக வழியை மறித்துக் கொண்டு படுத்துக் கிடப்பவர்களைச் சத்தமாகத் திட்டி னாள். சில நேரம் ஷூ அணிந்த காலாலேயே அவர்களை ஒதுக்கித் தள்ளி முன்னேறினாள். அவளது ஒவ்வொரு செயலும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. திடமான நடை. எதற்கும் தயக்கமில்லை. புதியவன் அன்னியன் என்ற எந்தத் தடையும் இல்லை. “நீங்க..?” அவளை நோக்கிக் கேட்டேன். “மணிப்பூர். ஆனா உங்க ஊர்ல தான் படிக்கிறேன். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் பொலிட்டிகல் சயின்ஸ். இரண்டாவது வருசம் ..!” கவுண்ட்டர்களில், அதிகாரிகளின் அலுவலகங்களில் சில வங்காளிகள்   தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வங்காளத்தில் எனது ரயில் பற்றிக் கேட்டாள். ஒருவர் இன்னொருவரைக் கைகாட்ட அவர் இன்னொரு அலுவலகத்தில் மற்றொருவரைக் கைகாட்ட… இப்படியே இரண்டு மூன்று அலுவலகம் சென்று வந்தோம். எங்கும் சரியான பதில் இல்லை அவளது சொந்த மொழியான மணிப்புரியில் பலவிதமாக வசைபாடித் தீர்த்தாள். பொறுக்க முடியாமல் நானும் கேட்டேன். “ஏன் இங்க எல்லாமே இப்படி இருக்கு? “ஆமா… இது என்ன.. சென்ட்ரலா? எக்மோரா? இல்ல கோயம்புத்தூரா..? இங்க எல்லாமே இப்படித்தான் இருக்கும். எந்த ட்ரெயினும் நேரத்துக்கு வராது. உங்க ஊரு மாதிரி அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்ல… இங்க எட்டு மணி நேரம் பத்து மணி நேரம்கூட ஆகும். இருந்து வெயிட் பண்ணி பொறுமையாதான் போகணும்.!” எனக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாளே ஒழிய அவளது கண்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருந்தன. எங்காவது விடை கிடைக்குமா? இந்தியாவிலேயே தென்னக ரயில்வே தான் சிறப்பான செயல்பாட்டிற்காகப் பாராட்டப் படுகிறது. ஓரளவு நேர ஒழுங்கு, உறுதி செய்த பெட்டிகள், உறுதி செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கட்டுப்பாடு, முறையான தகவல் அறிவிப்பு எனப் பலவற்றையும் சொல்லலாம். வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு இரயில்வேக்களில் நிலைமை தலைகீழ். பொறுப்பற்ற ரயில்வே நிர்வாகம்  மற்றும் சோம்பேறித்தனமான ஊழியர்கள் மட்டுமல்ல, புயல் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, மலைப்பாதைகளில் மண்சரிவு என பிற இயற்கை இடர்களையும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம். இரவு 1:40. சிறிது நேரம் என்னைத் தனியே ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு எனது பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு சென்றவள், பத்து நிமிடம் கழித்துத் திரும்ப வந்தாள். எனது உடல் சோர்வை அவள் கவனித்திருக்க வேண்டும். முகத்தில் கடுகடுப்பு குறைந்து புன்னகை பூத்திருந்தது. “…ப்பா.. முடிச்சாச்சு.. வாங்க போகலாம்” என்றபடியே பயணச்சீட்டை எனது சட்டைப் பையில் திணித்தாள். “பிளாட்பார்ம் நம்பர் 14. டைம் 2.30. காமரூப் எக்ஸ்பிரஸ்.!” என்றபடியே முன்னிலும் விரைவாகப் படியிறங்கி ஓடினாள். படுத்துக் கிடப்பவர்களை தாண்டிக் குதித்து ஓடும்போது, அவள் ஒரு தடகள வீராங்கனை போலவே  எனக்குத் தெரிந்தாள். அவளைப் பின் தொடர்வது எனக்குக் கடினமாக இருந்தது. இரவு 2.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. விரைந்து சென்று தனது குடும்பத்தாரிடம் மணிப்புரியில் ஏதோ கூறிவிட்டு, எனது தோள் பையை எடுத்துக் கொண்டாள். உட்கார்ந்திருந்த அவளது அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் எழுந்து நின்று என்னை நோக்கிச் சற்று குனிந்தவாறு கைகூப்பினர். நெகிழ்ச்சியில கண்களின் ஓரம் நீர் துளிர்ப்பது போல் இருந்தது எனக்கு. பதிலுக்கு நானும் கைகூப்பி வணங்கிப் புறப்படுகையில், அவளது தாய் சிறு பொட்டலத்தை எடுத்து என் கையில் திணித்தாள். அதில் இரண்டு மூன்று சப்பாத்திகள். “வாங்க.. சீக்கிரம் வாங்க..,” என்று என் பையைத் தூக்கி கொண்டு  எனக்கு முன்னே நடந்தாள். கொல்கத்தா ஹௌரா ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 23 நடைமேடைகளில் 14வது நடைமேடையைத் தேடி, ஏறி இறங்கி வந்து சேருவதற்கு 15 நிமிடம் பிடித்தது. எனது பெட்டி எண், இருக்கை எண்ணை சரியாகத் தேடிப்பிடித்து  பையை வைத்தாள். நேரம் பின்னிரவு 2.20. “எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல… எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கீங்க…ரொம்ப நன்றி..!” நெகிழ்ந்து போன மனதிலிருந்து வார்த்தைகள் சரியாக வரவில்லை. தடுமாற்றமாய்த்தான் வந்தது. “எதுக்கு தேங்ஸ்லாம்.. என்னை மாதிரி உள்ளவங்களை, எங்க ஸ்டேட்காரங்களையெல்லாம் நீங்க எவ்வளவு நல்லா பாத்துக்கறீங்க!! சொந்த ஊரா இருந்தாலும் எங்க ஊர்ல  எங்களுக்கு எந்த சுதந்திரமும் இல்ல. ஆனா உங்க ஊர்ல எங்களுக்கு சுதந்திரம் மட்டுமில்ல, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல் எங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்தையும் நாங்க அங்கதான் தேடிக்கிறோம். அதுக்காக உங்களுக்கு, உங்க தமிழ்நாட்டுக்கு நாங்கதான் தேங்க்ஸ் சொல்லணும்!” காமரூபம் எக்ஸ்பிரஸ் மெல்ல நகரத் தொடங்கியது. நடைமேடையில் நின்றபடியே கையசைத்துக் கொண்டே இருந்தாள் அந்த மணிப்புரி மாணவி. நடைமேடை விளக்குகளின் வெளிச்சம் பட்டு அவள் கருப்பாகவும் வெள்ளையாகவும் மெல்ல மறையத் தொடங்கினாள். இருளில் மறைந்தது அவள் மட்டும்தானா..? இனம், மதம், மொழி, மாநிலம், எல்லைகள் எல்லாமும்தான்..!

இன்றைய சூழலில் கல்வி – 2

இன்றைய சூழலில் கல்வி – 2

ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார் ரூசோ, பள்ளிக்கூடமே அவசியமில்லை என்கிறார் ஜான்ஹோல்ட். நோய்த்தொற்றின் அச்சுறுத்தலும் ஊரடங்குச் சூழலும் இவர்கள் கூற்றை உண்மையாக்கியிருப்பது யதார்த்தம். குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தைச் சிந்திப்பது குறித்து  சென்ற இதழில் பேசினோம். ஆனால் இன்று வேறொரு பிரச்சனை நம்மைத் திசை திருப்பி யுள்ளது. ஆம், நமது கல்வி முறையில் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்புகளாக  அமைந்துள்ள 11 , 12 ஆம் வகுப்புகளின் சேர்க்கையில் இந்தக் கல்வியாண்டு முதல் கொண்டு வந்துள்ள மாற்றம்தான் அந்தப் பிரச்சனை. மேல்நிலைக் கல்விப் பிரிவுகள்குழப்பத்திற்கு வழி வகுக்கின்றனவா? தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை விளைவிக்கும் வகையில் உள்ளன. கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில் 1977- 1978 கல்வியாண்டு முதல் 10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும். இவை தவிர பகுதி மூன்றில் சிறப்புப் பாடங் களாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், விவசாயம், மனையியல், பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல்… இப்படி ஏறத்தாழ  30 பாடங்கள் உருவாக்கப்பட்டன.  பகுதி மூன்றில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள், 1200 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் சுமையைக் குறைக்க கடந்த 2017-18 கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் நூறு மதிப்பெண் களுக்கு மட்டுமே தேர்வு என்ற அடிப்படையில் மொத்த மதிப்பெண் கள் 600 ஆகக் குறைக்கப் பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரி களில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் பெறும் நடைமுறை இருந்து வருகிறது. தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்த பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன. புதிய அரசாணை 166 கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதிதாக அரசாணை ஒன்றை வெளி யிட்டது. பள்ளிக் கல்வித் துறை அரசாணை 166, 18.09.2019-ன் படி பகுதி 3 -இல் புதிய முறையை அறிமுகம்செய்தது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில்  நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய முறையில் மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும், உயர் கல்வி வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப் பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாணவர்  விருப்பப்பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான நான்கு பாடங் களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை நடப்புக் கல்வியாண்டி லிருந்து பின்பற்ற வழிகாட்டப் பட்டுள்ளது. இதன்படி 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண் களுக்கு தேர்வுகள் நடைபெறும். அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் 600. உண்மையில் என்ன நடக்கிறது? இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம். தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். ஏற்கனவே தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையைத் தங்கள் வழியில் துவங்கிவிட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காகத் தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களையும் அளித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர்களிடம் பேசும்போது, பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும், அதை அடிப்படை யாகக் கொண்டு தான் சேர்க்கை நடை பெறும் என்றும் பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும்  அவர்கள் முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கை குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர். அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது. எனவே நம் கண் முன்னாலேயே பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் காலாவதி யாவதை விரைவில் காணப்போகிறோம். உயர்கல்வி வாய்ப்பின் பல வழிகளை அடைக்கும் புதிய முறை நான்கு பாடங்களை உள்ளடக்கிய  முறையில் உதாரணமாக கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியில்  வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தற்போது உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை நீக்கி, வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும்போது அங்கும் மாணவர்கள் தன் வாய்ப்புகளை இழக்கிறார்கள். நீட் தேர்வில்  CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாக்கள் இடம்பெறுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் கொண்ட முழு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்புக்குப் பிறகு கணிதத்தோடு தொடர்பே இல்லாததால் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. அதற்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், மேலும் ஒரு பாடத்தைக் குறைப்பது என்பது, நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் பின்தங்கிவிடச் செய்யும். எனவே, தனியார் பள்ளி மாணவர்களுக்காகவே இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. போலவே, புதிய முறையில், கணக்கு, இயற்பியல் பாடத்துடன் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இடம்பெறுகிறது. இந்தப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இனி கணினி சார் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடியும். கலைப்பிரிவில் (ஆர்ட்ஸ் குரூப் ) Typography and Computer Application என்றொரு பாடத்தை ஒப்புக்காக இடம்பெறச் செய்கிறார்கள். கணினி அறிவியல் பாடம் இல்லை எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைப் பெற முடியாமல் போய்விடும். அதேபோல, கணினி அறிவியலுடன் கணக்கு, இயற்பியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல், கணினித் துறைகள் மட்டுமே படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேதியியல் தொடர்பான எந்த மேற்படிப்பையும் இவர்கள் படிக்க முடியாது. இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய முறை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது. தொடர்ந்து உரையாடுவோம்!

இசையோடு சில இனிய நினைவுகள்

இசையோடு சில இனிய நினைவுகள்

அன்பிற்கினிய சுவடு மின்னிதழ் வாசகப் பெருமக்களே வணக்கம்! ஒரு படைப்பாளி வெகுஜன ஊடகங்களில் எழுதுவதே பெருமையென நினைத்து வாய்ப்புத்தேடி எழுதிய காலமொன்றிருந்தது. அவ்வகையான ஊடகங்கள் இலக்கியத்திற்கென் இணை ஏடுகள் நடத்தத் தொடங்கியதும் அதில் எழுதுவதை பெருமை யாகப் பார்க்கப்பட்டது. அதன் பின் வந்த கால மாற்றத்தில் எல்லாம் வணிக மயம் என்றான பின் படைப்பாளிகள் சிற்றிதழ்கள் பக்கம் திரும்பினர். தொடங்கிய திலிருந்தே வியாபார நோக்கமின்றி தரமானதைத் தேடி அச்சிட்டுத் தந்து கொண்டிருக்கும் சில பல சிற்றிதழ்களுக்கு மாற்ற மில்லாத மரியாதை இருந்து கொண் டேதான் இருக்கிறது. ஊடகத் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் அச்சிதழ்கள் மின்னிதழ்களாக மாறிவிட்டது. அதனோடு ஏற்பட் டுள்ள அசாதாரணச் சூழலில் இதைத்தான் செய்யமுடியுமென்ற நிலைக்கு இன்று எல்லாத் துறையும் வந்துவிட்ட நிலையில் ஒரு தரமான நடுத்தர நடுநிலை இதழாக சுவடு மின்னிதழ் வருகிறது. வாழ்த்துக்கள். இதில் எனது படைப்புகளையும் வழங்கி பங்கேற்பு செய்வதில் மகிழ்கிறேன். “இசையோடு சில இனிய நினைவுகள்” என்ற தலைப்பில் இவ்விதழில் மாதம் இருமுறை உங்களைச் சந்திக்க வருகிறேன். வாஞ்சையுடன் உங்கள் வளநாடன் அன்று அந்தக் கல்லூரியில் கலைவிழா நாள். மாலையில் மேடை நிகழ்வுகளும் காலையில் கலகலப்பான உள்ளரங்கு கேளிக்கை களும் நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளூம் விதமாக பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக மாணவர் களிடம் தங்களுக்குப்பிடித்த கவிஞர்கள், அவர்களைன் படைப்புகளைப் பற்றி ஒரு ஆசிரியர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு மாணவன் எழுந்து பா.விஜய் என்றான். அவரின் பாடல் வரிகளில் உள்ள கவித்துவமான வரிகளை மேற்கோள் காட்டினான். ஒரு மாணவி எழுந்து நா.முத்துக்குமார் என்றவள் அதைப்போல ஒரு பாடலில் உள்ள ஒரு வரியை சற்று ராகத்தோடு பாடலாகவே பாடிக் காட்டினாள். அதற்குப் பின் மாணவர்களிடையே உற்சாகம் வந்து ஒட்டிக்கொள்ள கீழிலிருந்து மேல் வரிசையில் வைரமுத்து, வாலி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமென அவரவர்களுக்குப் பிடித்த கவிஞர்களையும், அவர்கள் எழுதிய பாடல்களில் அவர்களுக்குப் பிடித்த வரிகளையும் மேற்கோள் கட்டி சிலர் வாசித்துக் காட்டியும், சிலர் பாடிக்காட்டியும் அந்நிகழ்வை கலகலப்பாக்கிக் கொண்டிருந்த போது ஒரு மாணவி எழுந்து தனக்குப் பிடித்த கவிஞர் அவரென்றும், அவரடு கவிதையில் இந்தந்த வரிகளால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்றும் கூறினார். ஆட்டமும், பாட்டமும் கொஞ்சம் அடங்கி அறை சற்று அமைதியானது. அதற்குப் பின் சில முணுமுணுப்புகள் எழத்தொடங்கியது. இவரை யாரென்று தெரியாது. அவர் எழுதியதாகச் சொன்ன கவிதையும் எங்களுக்குத் தெரியாதே என்று சொல்ல, சிலர் முணுமுணுப்பைக் கடந்து சற்று கேலியாகவும், கிண்டலாகவும் சிரிக்கவும், பேசவும் தொடங்கியதும் அந்த மாணவி மீண்டும் எழுந்து ”சார்… தங்களுக்குப் பிடித்த கவிஞர்கள், அவர்களின் கவிதை களையும் சொல்லவேண்டும் என்றுதானே நீங்கள் கேட்டீர்கள்? அதில் பிரபலமானவரின் பெயரைச் சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்க வில்லையே” பிரபலமாவது என்பது படைப்பின், கவிதையின் அடிப்படையில் மட்டும் எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை. அவரவர்களின் சந்தர்ப்பம், சூழல், அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு, அதைச் சரியாய் பயன்படுத்தி அவர்கள் அடைந்த வெற்றி அதனால் கிடைப்பதுதான் பிரபலம் என்பதே. இங்கே நான் குறிப்பிட்டுச் சொன்ன கவிஞரும் நல்ல கவிஞர்தான். இவரது கவிதைகளும் படைப்பும் சிறந்ததுதான். அவருக்கு அந்த பிரபலமாகும் வாய்ப்பு அமையவில்லையே தவிர அவரது எந்தக் கவிதையையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. மேலே இவர்களெல்லாம் குறிப்பிட்ட அந்தக் கவிஞர்களெல்லாம் சிறந்த கவிஞர்கள்தான். அதை நான் மறுக்கவில்லை, நானும் அவர்களத் விருப்பத்தை ஏற்று அவர்களின் பெயர்களைச் சொல்லும்போதெல்லாம் கைதட்டி வரவேற்றேன். அவர்களுக்கு விருப்பமான பிடித்த கவிஞர்கள் இருக்கும்போது எனக்குப் பிடித்த ஒரு கவிஞர் பெயரைச் சொன்னபோது ஏன் இவர்கள் கேலி பேசி கிண்டல் செய்கிறார்கள்? என்ற அந்த மாணவி இறுதியாய் அங்கே இன்னொன்றையும் சொன்னாள். ”சார் இங்குளோர் குறிப்பிட்ட அந்தப் பெயர்கள் அனைவருமே பாடலாசிரியர்கள், இசைகோர்த்து இன்னொருவர் பாடி, திரைப்படத்தில் காட்சியாகி பட்டிதொட்டியெங்கும் பார்க்கப்பட்டுபேசப்பட்டு, ஒலிக்கப்பட்ட திரைப்படம் சார்ந்து எழுதியர்கள். நான் சொன்னவர் கவிதை மட்டுமே எழுதிய ஒரு கவிஞர்” என்றதும் மீண்டும் அந்த அறை அமைதியால் நிறைந்தது. ஆசிரியர் அந்த மாணவி சொல்வதும் சரிதானே? பிடித்த கவிஞர்கள் பெயரைத்தான் நான் கேட்டேனே தவிர பிரபலமான கவிஞர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று எனது கேள்வியில் இல்லையே” என்றதும் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு கைதட்டு எழும்ப அனைத்து மாணவர்களும் கை தட்டிட மீண்டும் மாணவர்களிடையே உற்சாகம் ஓடிவந்து ஒட்டிக் கொண்டது. ஆசிரியர் அந்த மாணவியின் பக்கம் திரும்பி அவள் சொன்ன கவிஞரைப் பற்றிய மேலும் விவரம் கேட்டதும், அவள் சொன்னாள் ”சார்…. நான் குறிப்பிட்டுச் சொன்ன அந்தக் கவிஞர் வேறு யாருமில்லை எனது அப்பாதான். அவரும் நல்ல கவிஞர்தான். அவரது எளிமையான இனிய கவிதைகள் பல எனக்குப் பிடிக்கும். இது என் அப்பா எழுதிய கவிதையென நான் சொல்லி விட்டுத் தொடங்கி யிருந்தால் அந்தக் கவிதை கூட இந்த அறைக்குள் இருக்கும் இந்த மாணவ, மாணவி களிடம் சென்று சேர்ந்திருக்காது. அதனால் பிடித்தவர் என பெயர் சொல்லிவிட்டு அவரதுஒரு கவிதை யையும், இங்கு வாசித்துவிட்டு, அதற்கு இத்தனை விளக்கமும் சொல்ல வேண்டிய தாயிற்று. இதற்குப் பெயர் வாய்ப்பும், சூழலும் என்பது” என்றாள். மேலே நான் குறிப்பிட்டுள்ள நிகழ்வு கற்பனையல்ல. ஒரு கல்லூரியில் கலைவிழா அன்று நடந்த உண்மை நிகழ்வுதான். அந்த மாணவி எனது மகள். அவள் குறிப்பிட்ட கவிஞர் நானேதான். என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டுமென இந்நிகழ்வை இங்கே குறிப்பிடவில்லை. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் இணைத்துச் சொல்ல ஒருவாய்ப்புதான் அது. ஒரு இசைக்குழு ஒன்றில் நான் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது மேடையில் நாமும் ஒரு பாடலைப் பாடிவிட வேண்டுமென ஆசைப்பட்டு இசைக்குழு ஒருங்கிணைப் பாளரிடம் வாய்ப்புக் கேட்டேன். யாருடைய குரல் உனக்கு ஒத்துவருமோ அவரோட குரலில் பிரபலமான ஒரு பாடலைத் தேர்வு செய்து நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டு வா என ஒப்புதல் அளித் தார். அப்போது எனக்கு ஏகப்பட்ட பாடகர்களை எனக்குப் பிடிக்கும். அதில் டி.எம்.எஸின் கம்பீரமான குரலில் மயங்கிப்போனேன். ஆனால் அவரது எந்தப்பாடலும் எனக்கு அதாவது எனது குரலுக்கு ஒத்துவராதபோது, பல்கலை வித்தகர் சந்திரபாபுவின் குரல்தான் அவர் பாடிய பாடல்தான் சரியாக இருக்குமென நாம் பாடிடக் கேட்ட நண்பர்கள் சொன்னதால் அவருடைய பாடலொன்றைத் தேர்வு செய்து பாடிப்பாடி பயிற்சி செய்துகொண்டு இரு நிகழ்ச்சியில் ஒரு வாய்ப்பு பாடுவதற்கு எனக்கு வந்தது. அப்போதும் டி.எம்.எஸ்.குரல்மீது உள்ள ஈர்ப்புக் குறையாத காரணத்தால் ரொம்ப மென்மையாய் அவர் பாடிய பாடலொன்றைத் தேடிப்பிடித்து தேர்வு செய்தேன். பயிற்சியெடுத்து குழுவினர் முன் பாடிக்காட்டி அடுத்த நிகழ்ச்சியொன்றில் பாடுவதென முடிவானபின் பாடலின் வரிகளைப் பாடப்பாட எளிமையும் அந்தப் பாடலில் தன் காதலையை வர்ணிக்க கவிஞர் எடுத்தாளும் உவமை மேற்கோளும் அந்தப் பாடலை எழுதியவர் மேல் எனக்கொரு அன்பும், மரியாதையும் என்னையுறியாமல் வந்துவிட்டது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, உடுமலைப் பேட்டையார், ஆலங்குடி சோமு, வாலி, இவர்கள் வரிசையில் இன்னொரு கவிஞரே அவர். (கண்ணதாசனை ஏன் இவர்களில் சேர்க்கவில்லை என ஒரு கேள்வி எழலாம். அவர் எங்க ஊர்க்காரர் என்பதோடு எல்லாருக்கும் மேல் என் இதயத்தில் இடம்பிடித்தமர்ந்தவர். ஏன் என்பதற்கு என்னிடம் நிறையப்பதில் உள்ளது) கண்ணதாசனை விடுத்த கவிஞர்கள் பட்டியலில் இன்னொருவர் இருந்தார் என்றேனே அந்தக் கவிஞர் எழுதி, டி.எம்.எஸ் அவர்கள் மிக மென்மையாகப் பாடிய அந்தக் காதல் பாடலைத்தான் நான் இசைக்குழுவில் பாடுவதற்காக நான் தேர்வு செய்திருதேன். அந்தக் கவிஞர்தான் கவிஞர் கா.மு.ஷெரிப். அவர் எழுதிய அற்புதமான மேற்கோளுடன் தன் காதலியை வர்ணித்துப்பாடும் மிக எளிமையான அதே நேரம் மிக இனிமையான பாடல்தான் நான் பாடிக் கைதட்டல்கள் வாங்கினேன். அது என்ன பாடலாக இருக்குமென யோசித்துக் கொண்டிருங்கள். அடுத்த இதழில் அதைப்பற்றிச் சொல்கிறேன்.

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

“ஈ.வே.ராமசாமியாகிய நான், தமிழர்களின் மீதான சூத்திரப் பட்டம் என்னும் இழிவைத் துடைத்தெறிய யாரும் முன்வராத காரணத்தால், நானே அந்தப் பணியை என் தோளில் சுமந்து செல்கிறேன்” என்று தமிழர்களுக்காகத் தானே முன்வந்து பகுத்தறிவுச் சிந்தனைகளை, சுயமரியாதைச் சிந்தனைகளை விதைத்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார். அவரின் பெருமைகள் எதையும் அறியாத 5 வயதில் 1965-இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் முதல்முறையாகப்  பெரியாரைப் பார்த்தேன். அப்போது பெரியாரின் எந்தக் கருத்துகளும் என்னை ஈர்க்கவில்லை. ஆண்களும், பெண்களும் என் போன்ற குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த போது எனக்கு ஏதோ ஒன்று புரியத் தொடங்கியது.மாநாடு காலையில் தொடங்கியது. பலரும் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் மேடையில் இருந்த பெரியாரிடம் சென்று, அவரை வணங்கி, அவர் கையில் கட்சி வளர்ச்சி நிதிக்கு, விடுதலை வளர்ச்சி நிதிக்கு என்று ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொடுத்துக் கொண்டி ருந்தார்கள். பெரியார் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி வளர்ச்சி நிதியை வாங்கிக் கொண்டிருந்தார். என்போன்ற சிறுவர், சிறுமியர் வளர்ச்சி நிதி கொடுத்தபோது, சிறுவர்களை “வாங்க ஐயா”, என்றும் சிறுமியை “வாங்க அம்மா” என்றும் விளித்தார். வளர்ச்சி நிதியைப் பெரியார் கையில் கொடுத்தபோது, சிறுவர்களின் கரங்களைத் தன் கரங்களில் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். 5 வயதிலிருந்து நான் என் மூத்த சகோதரி சண்பக வல்லியின் வீட்டில் திருச்சி வரகனேரி பெரியார் நகரில் வாழ்ந்து வந்தேன். என் சகோதரியின் கணவர் என் மாமா ஓ.வேலு அவர்கள் (80களில் திருச்சி நகரத் தி.க. துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார்) என்னை மதுரை மாநாட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார். பெரியார் சிறுவர்களுக்குக் கைகளில் முத்தம் கொடுப்பதைப் பார்த்து, என் கையில் 25 பைசா கொடுத்து, பெரியாரிடம் கொடுக்கச் சொன்னார். நானும் மேடைக்குச் சென்றேன். பெரியாரை நெருங்கியவுடன், பெரியார் என்னைப் பார்த்து, “வாங்க அய்யா” என்று கைகூப்பி வரவேற்றார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, நன்கொடையாக 25 பைசாவைப் பெரியாரின் கைகளில் கொடுத்தேன். என் இரு கரங்களையும் பெரியார் பற்றிக் கொண்டு, கரங்களில் முத்தம் கொடுத்தார். அந்த நேரத்தில் பெரியாரைவிடவும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது, அவரின் இருபக்கங்களிலும் இருந்த நாய்கள்தான். பெரியாரிடமிருந்து விலகிச் சென்ற நான், இருபக்கங்களிலும் இருந்த நாய்களின் தலைகளைத் தடவிக் கொடுத்தேன். பெரியாரும் ஒன்றும் சொல்லவில்லை. மேடையை விட்டு இறங்கி மக்களோடு மக்களாக மாநாட்டு மணலில் அமர்ந்தேன். என் பார்வைகள், சிந்தனைகள் அனைத்தும் பெரியாருக்குப் பக்கத்திலிருக்கும் நாய்கள் மீதே இருந்தன. பகல் உணவு இடைவேளைக்கு, பெரியார் மேடையிலிருந்து வெளியே சென்றார். நாய்களும் பெரியாருடன் சென்றன. மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மீண்டும் தமுக்கம் மைதானத்திற்கு வேனில் வந்தார். வேன் நின்றவுடன் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அந்த இரண்டு நாய்களும் மேடையே நோக்கி வந்து பெரியார் அமரும் இடத்தின் வலப்புறம் இடப்புறம் அமர்ந்து கொண்டன. பின்புதான் பெரியார் வந்தார். மாலை நேரத்தைத் தாண்டி இரவு 7.00 மணியளவில் பெரியார் பேசத் தொடங்கினார். இரவு 9.00 மணிக்குப் பெரியார் தன் உரையை முடித்தார். அதுவரை அந்த நாய்கள் பெரியாரை விட்டு அகலவில்லை. சிறுநீர் கழிக்கவோ, உணவு அருந்தவோ அந்த நாய்கள் செல்லாதது என்னை பிரமிக்க வைத்தது. பெரியாரின் கருத்துகளால் மனிதர்கள் பெரியார் மீது அன்பு வைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட என்னால், நாய்கள் ஏன் பெரியார் மீது இவ்வளவு அன்பு செலுத்துகின்றன என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து பெரியார் பற்றிய செய்திகள் ஒளிப்படங்கள் வழியாக “தந்தை பெரியார், தான் உணவு முன் நாய்களுக்கு உணவு வைக்கச் சொல்லுவார். நாய்களைக் கட்டிப் பிடித்தப்படி படுக்கையில் அமர்ந்திருப்பார். மணியம்மை அவர்களும் பெரியார் நாய்களிடம் கட்டிய அன்புக்கு நிகராகவே அன்பு காட்டினார்” என்ற செய்திகளை அறிந்தேன். நாய் மனிதர்களிடம் அன்பு காட்டக்கூடிய விலங்கு. எளிதில் மனிதர்களிடம் பழகிவிடும் தன்மை கொண்டது. மனிதர்கள் பிரம்மாவின் தலையிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிறந்ததாக மனுஸ்மிருதி சொல்வதாய்ப் பிறப்பில் வேற்றுமை பாராட்டுபவர்கள் குறிப்பிடுவார்கள். இதைக் கடுமையாகத் தந்தை பெரியார் எதிர்த்தார். அந்தக் காலத்து அரிஜன்கள் இந்தக் காலத்துத் தலித்துகள் பெரியாரிடம் சென்று, “ஐயா…. தலையில் பிராமணனும், தோளில் சத்திரியனும், தொடையில் வைசியனும் காலில் சூத்திரனும் பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாங்கள் எங்கே ஐயா பிறந்தோம்” என்ற கேள்விக்குத் தந்தை பெரியார்,“அவர்கள் பிறக்கக்கூடாத இடத்தில் பிறந்துள்ளார்கள். நீங்கள்தான் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்தவர்கள்” என்று கோபமும் கேலியுமாய்ப் பதில் கூறியுள்ளார். நாயைப் பைரவன் என்று கடவுளின் வாகனமா வைத்திருந்தாலும் புராணங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் நாய் என்பது இழிவு பொருளில்தான் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடவுளின் முன்பு நாயினும் கீழானவன் என்னும் பொருள்பட “நாயினும் கடையேன்” என்று பக்தி இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. மனிதர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதை வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நாய்களை மனிதர்களுக்கு இணையாக மதித்துள்ளார். நாய்களும் பெரியாரின் பண்பை மதித்திருக்கின்றன என்பதை நாய்கள் காட்டிய அன்பின் வழியாகப் பின்னாளில் என்னால் உணர்ந்து கொள்ளமுடிந்தது. 1969-இல் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது என் சகோதரி,  மாமாவோடு லாரியில் திருச்சி வரகனேரியிலிருந்து பிப்.3ஆம் நாள் இரவு சென்னைக்குச் சென்றோம். லாரியில் ஆண்கள் பெண்கள் எனச் சுமார் 50 பேர் இருந்தார்கள். அனைவரும் சென்னை செல்லும்வரை அழுதுகொண்டே வந்தார்கள். சென்னை சென்று சேர்ந்தும் அழுது கொண்டே இருந்தார்கள். என் சகோதரியும் இதில் அடக்கம். அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை யாரும் சாப்பிடவில்லை. அண்ணாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டம்தான் எனக்கு அரசியலைப் புரிய வைத்தது. அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார், “என் தலைமகனை இழந்து புத்திர சோகத்தில் இருக்கிறேன்” என்று வெளியிட்ட அறிக்கையின் வழியாக அண்ணாவையும் பெரியாரையும் புரிந்து கொண்டேன். அப்போது எனக்கு 9 வயது. தொடர்ந்து பெரியார் கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்வது என்பது என் வழக்கமாகிவிட்டது. பகுத்தறிவுக் கண்காட்சியில் புராணக் குப்பைகளைச் சாடி வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்து என் அறிவை, அறிவியல் உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்போது தொடங்கித்தான் பெரியாரின் நாய்களிடமிருந்து என் பார்வையை விலக்கிக் கொண்டு, பெரியாரின் கருத்துகள் மீது கவனம் கொண்டேன். திமுகவிற்காக 1971இல் என் தந்தை மற்றும் சகோதரர்களோடு 1971இல் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக உரையாற்றினேன். பெரியாரின் பேச்சுகளையும், திராவிடர் கழகச் சிறு வெளியீடுகள் வழியாகப் பெரியாரை முழுமையாக அறிந்துகொண்டேன். 1973 டிசம்பர் 24ஆம் தேதி பெரியார் இயற்கை எய்தினார். அப்போது 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெரியாரின் மறைவு செய்திக் கேட்டு எல்லாரும் அழுதுகொண்டிருந் தார்கள். ஒரு மரணத்திற்காக நான் முதன்முறையாக அழுதது தந்தை பெரியாருக் காகத்தான். அன்று இரவு திருச்சியிலிருந்து இரயில் மூலம் பெரியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இரயில் மூலம் சென்றோம். என் சகோதரர்களும் வந்திருந்தனர். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு எங்களோடு வந்திருந்த வரகனேரி மருதமுத்து நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தார். பெரியார் மரணமும் எங்களின் உறவினர் மருதமுத்துவின் மரணமும் எங்களைப் பெரும் வருத்தம் கொள்ளவைத்தது. பெரியாரை 5 வயதில் அறிந்த நான் 10 வயதில் முழுமையாகப் புரிந்துகொண்டேன். இப்போது எனக்கு வயது 60. பெரியாரியச் சிந்தனைகளிலிருந்து வழுமால் நழுவாமல், பெரியாரியச் சிந்தனைகளை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என்னை வளர்த்த என் மாமா ஓ.வேலு அவர்கள் பொன்மலை இரயில்வேயில் பணியாற்றி 80களில் ஓய்வு பெற்று, திராவிடர் கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். பின்னர் 1992ஆம் ஆண்டு பெரியார் மறைந்த டிசம்பர் 24ஆம் நாள் காலை 7.00 மணிக்குப் பொன்மலை மருத்துவமனையில் இயற்கை எய்தினார். பெரியார் எங்கள் வாழ்வோடு இணைந்து எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லா உண்மையாகும்.

”பா.ஜ.க. காலூன்றினால் தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்!”- பியூஸ் மானுஷ் ஆவேசம்

”பா.ஜ.க. காலூன்றினால் தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்!”- பியூஸ் மானுஷ் ஆவேசம்

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சூழியல் போராளி பியூஸ் மானுஷ். பிறப்பால் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றாலும் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழக சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலேயே உள்ளது. சுவடுக்காக அவரிடம் பேசினோம். “காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின் வாக்குறுதியின்படி இந்தியா நடந்து கொள்ளவில்லை என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு காரணம் என்ன?” “கொரோனா காலத்தில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தைக் கொண்டு வந்ததே மிகப்பெரிய தவறு. மக்களுக்கான இந்த திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மிகப்பெரிய கோளாறுகளை உள்ளடக்கி வெளியிடப் பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மசோதாவால் எந்த ஒரு பயனும் இல்லை என்று பாஜகவைச் சேர்ந்த நிதின் கட்கரியே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதைதான் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் வலியுறுத்தி உள்ளார்.” “கொரோனா தொற்று அதிகரிக்க ஈஷா யோகா மையமும் ஒரு காரணம் என்று நீங்கள் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தீர்கள் அதன் உண்மைத் தன்மை என்ன சார்?” “உலக நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வெளிநாட்டு பயணிகளின் வரவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு வந்திருந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு சரியான மருத்துவ பரிசோதனை செய்தார்களா? இந்த நிகழ்ச்சிக்கு வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பேர் வந்து இருந்தார்கள் என்கிற பட்டியல் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் இதுபற்றி கேள்வி கேட்கவேண்டிய மாவட்ட சுகாதாரத் துறையும் மாநில அரசு மவுனம் காத்து வருகின்றன.வெள்ளியங்கிரி மலையை ஆக்கிரமித்த போதும், காவேரி அழைக்கிறது இயக்கம் மூலமாக பொதுமக்களிடமிருந்து பணத்தை சுரண்டிய போதும் எப்படி இந்த அரசாங்கம் அமைதியாக இருந்ததோ, அதுபோலவே இந்த வைரஸ் தாக்குதலால் ஈஷா யோகா மையத்தில் ஏற்பட்ட மரணங்களை கண்டும் காணாதது போல மௌனித்து வருகிறது மாநில சுகாதாரத்துறை.” “சென்னை சேலம் எட்டு வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டதிற்கு மக்களிடையே எழுந்து வரும் எதிர்ப்புகள் பற்றி?” “எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவிக்கு வந்த பிறகு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த பல்லாயிரக் கணக்கான மரங்கள் உரிய அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன. மரங்களை எதற்காக வெட்டினார்கள் என்று கேட்டால்,  அந்த இடத்தில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டு விட்டால் சரியாக போச்சு என்று கூலாக பதில்கூறியுள்ளார் முதலமைச்சர். சேலம் மக்கள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் இவர், சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல், விவசாய நிலங்களை பாழாக்காமல் சேலத்திலிருந்து சென்னைக்கு புல்லட் ரயில் விடுவதற்கு முயற்சி எடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம். இந்த எட்டு வழி சாலை திட்டத்திற்கு ஆகும் செலவில் பாதி அளவு தான் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஆகும். மேலும் சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் அதிவிரைவு தேஜஸ் ரயில் இயக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இந்த விரைவு ரயில் அனுமதி கிடைத்தால் சேலத்திலிருந்து இரண்டரை மணிநேரத்தில் சென்னை போய் சேர்ந்து விடலாம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பசுமையான விவசாய நிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை போடப் போவதாக இந்த திட்டத்திற்கு ஆர்வம் காட்டி வருகிறார் முதல்வர். சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு கூறவில்லை. ஆனால் விவசாய நிலங்களை கையகப் படுத்தாமல், மாநில அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேலம் நகரத்திற்கு வெளியே இருக்கின்றன. அந்த இடத்தில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யுங்கள் என்பதுதான் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. சேலம் புதிய விமான நிலைய விரிவாக்க திட்டம் ஒருபுறம் இருக்கட்டும்.  1972இல் சேலம் விமான நிலைய கட்டமைப்புக்காக நிலம் கையகப்படுத்திய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. சேலம் இரும்பாலை திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க புதிதாக சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மாநில அரசு வழங்கும் என்று என்ன உத்தரவாதம் உள்ளது? நமது விவசாயத்தை அழித்து எட்டு வழிச்சாலை போடப்போவதாக இந்த அரசு கூறுவதும் நகைப்பிற்கு உள்ளான ஒன்றுதான்.” “வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் அரசின் நடவடிக்கை எப்படி இருக்கிறது?” “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் பத்து நாளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பூரிகள் செய்து சேலம் வழியாக பயணித்த ரயில் பயணிகளுக்கு தினமும் கொடுத்து வந்தோம். இதுவரையிலும் சுமார் 3 லட்சம் முகக் கவசங்கள் வினியோகம் செய்துள்ளோம். ஒரு தனி நபரால் இவ்வளவு செய்ய முடிகிற போதும் இந்த அரசுக்கு மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. முதலமைச்சருக்கோ அமைச்சர் களை எப்படி வேலை வாங்குவது என்று தெரியாமல் விழிபிதுங்கி போயுள்ளார்.” “மோடி எதிர்ப்பு எண்ணம் எப்போது தோன்றியது?” “மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டிலிருந்தே குஜராத் மாடல் என்பது பொய் என்றுகூறி வருகிறேன். தற்போது கூட டோலேரா என்ற ஒரு நகரத்தை உருவாக்கி டெல்லியை விட ஆறு மடங்கு வளர்ச்சி அடைந்த நகரம் என்றும் ஷாங்காயை விட பத்து மடங்கு வளர்ச்சி அடைந்த நகரம் என்றும் இன்னமும் பச்சை பொய்யை கூறி வருகிறார். இதற்கு மேலும் மோடியை மக்கள் நம்பும் பட்சத்தில் நம்மை அந்தக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. கடந்த ஆறு வருடமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்த வக்கில்லை இவருக்கு. பொய்யை மட்டுமே மூலதனமாக்கி மக்களை அடிமைப்படுத்தி கார்ப்பரேட் அரசியல் செய்து வருகிறார். ஒரு சமூக ஆர்வலராக இதை நான் எப்படி வரவேற்க முடியும்!” “நேரடி அரசியலுக்கு வருவது போன்ற எண்ணம் உள்ளதா?” “அரசியல் என்பது என்ன? நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். அந்த வேலையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன். ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பு மூலமாக அரசியலுக்கு வந்து மக்களிடம் வாக்குகள் பெற்றால் தான் நான் அரசியல் வாதியா? சேலத்தில் சுற்றியுள்ள பல ஏரிகளை பொது மக்கள் ஒத்துழைப்புடன் தூர்வாரி உள்ளேன், பச்சைப் பசேலென்ற காடுகளை உருவாக்கி உள்ளேன். தவறு செய்யும் அரசாங்கத்தை தட்டிக்கேட்க என்னை போன்ற பல சமூக ஆர்வலர்களை உருவாக்கி யுள்ளேன். நான் மக்களுக்கான அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். இதுதான் இன்றைய நிதர்சன அரசியல்.” “திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்?” “என்னுடைய பூர்வீகம் ராஜஸ்தான். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடுதான். இந்தியாவில் வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தை போன்ற கல்வியறிவு, மருத்துவ வசதி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்பட இவ்வளவு வளர்ச்சியடைந்த மாநிலத்தை யாராவது ஆதாரத்துடன் காட்ட முடியுமா?  திராவிடர்கள் ஆட்சியில் இருந்ததால் தான் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலத்தில் திமுக அதிமுக என்ற திராவிட கட்சிகள் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் பாஜகவை மட்டும் உள்ளே விட்டு விடக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஊழலை எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடலாம். ஆனால் சாதி மத பிரிவினை ஆதிக்க வெறி கொண்டவர்களை எப்போதும் மாற்ற முடியாது. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைத்தால் வட மாநிலங்களை விட மோசமான நிலைக்கு இந்த மாநிலம் தள்ளப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.” “நித்தியானந்தா தற்போது எங்கு இருக்கிறார்?” “இந்தக் கேள்வியை எச்.ராஜாவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நித்யானந்தா இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நான் கூறிவிட்டேன். பல்வேறு வழக்குகள் பதியப் பட்ட பிறகுதான் குஜராத் நீதிமன்றத்தில் நித்தியானந்தா இந்தியாவில் இல்லை என்று ஒத்துக் கொண்டார்கள். நித்யானந்தா கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈகுவடாரில் தான் இருந்துள்ளார். அங்குள்ள மலைப்பகுதிகளை வீடியோ எடுத்து புதிதாக ஒரு தீவு வாங்கி உள்ளதாகவும் அந்த தீவிற்கு கைலாசம் என்று பெயரிட்டுள்ளதாகவும் பெரும் பித்தலாட்டத்தை கூறிவருகின்றனர்.இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டில் உள்ள குற்றவாளிகளை மிரட்டி அவர்களிடம் உள்ள பணத்தை பிடுங்கிக்கொண்டு வெளிநாடு களுக்கு அனுப்பி வைத்தது போல நித்தியானந் தாவிடம் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.” “சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?” “நான் ஒரு மூங்கில் விவசாயி. என் நண்பர்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மூங்கில் பயிரிட்டு அதன் மூலமாக கட்டில், ஊஞ்சல் போன்ற மர பொருட்களும், மலைத்தேன் மற்றும் கற்றாழை போன்ற இயற்கை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலமாக வரும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். அந்த வருமானத்தில்தான் மக்களுக்கான சேவையும் செய்து வருகிறேன். எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமோ கார்ப்பரேட் நிறுவனத்திடமோ கையேந்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கான சுயசார்பு பொருளாதாரத்தை நானே உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறேன்.  எனக்கு பிரச்சனை என்பது பணம் அல்ல. என்னைப் போன்று அரசாங்கத்தை கேள்வி கேட்க இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும். மக்கள் கேள்வி கேட்கும் பட்சத்தில் அரசாங்கம் தங்கள் செய்யும் தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஆனால்,தற்போதைய சூழலில் சமூகத்தின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனை அளிக்கிறது.”

இனி என்னவாகும் கூட்டுறவு வங்கிகள்?

இனி என்னவாகும் கூட்டுறவு வங்கிகள்?

இந்திய நாட்டின் அனைத்து வங்கிகளின் வங்கியாகச் செயல்பட்டு வருவது RBI என அழைக்கப்படும் பாரத ரிசர்வ் வங்கியாகும். இது நாட்டின் மைய வங்கி. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் இதன் நேரடி கட்டுப்பாடு மற்றும் விதிகளின்படியே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முறைப்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும். கடந்த 25/06/2020 அன்று இந்திய அரசு, “நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (RBI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்” என்ற அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. மேலும் 28/06/2020 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மத்திய அரசின் இம்முடிவின் தாக்கம் எந்த மாதிரியான விளைவுகளைப் பொது மக்களிடம் ஏற்படுத்தும் என்று வங்கிப் பணியாளர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: கூட்டுறவு நிறுவனம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் என்பவை கிராமம் மற்றும் உள்ளூர் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சங்கங்களின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பு ஆகும்.  குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான விவசாயக் கடன், நகைக் கடன் மற்றும் இடுபொருள் கடன்கள் வழங்குவது போன்ற பெரும் பணிகளை துரிதமாக செய்து வருகின்றன. மாநில அரசுகளின் கீழ்  ஓரளவு சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தன. இனிவரும் காலங்களில் கூட்டுறவு வங்கிகளின் நிலைமை எவ்வாறு அமையும் என்று விவசாயிகள் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள். இந்தப் புதிய மாற்றத்தினால், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் அதிகாரத் தலையீடு தவிர்க்கப்படும். கணக்கு வழக்குகள் ஒழுங்கு முறைப் படுத்தப் படும். கையூட்டு, மோசடி மற்றும் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். அதேவேளை விவசாயி களுக்கான பயிர்க்கடன், மற்றும் நகைக் கடன் பெறுவதில் மிகுந்த சிரமங்கள் உண்டாகும். கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடையலாம். மேலும் விவசாயிகளின் நலன் சார்ந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆகாமலும் போகலாம். மிக முக்கியமாக  இது மாநில அரசின் அதிகாரத்தை ஒடுக்குவதற்கு சமமாகும். மேலும் மாநிலத்தின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும். கூட்டுறவுத்துறை சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டுக்கு இந்த உரிமைப் பறிப்பு பேரிழப்பு என்கிறார் அவர். கரையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல், கூட்டறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவருவதன்மூலம் மத்திய அரசு மக்களின் பணத்தையும் மாநில உரிமைகளையும் அபகரிக்கிறது.

முகிலோடும் முகடோடு…

முகிலோடும் முகடோடு…

இந்தப் புவியின் ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசித்து முடிக்க ஒரு பிறவி போதாது. உலகம் முழுக்க புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் பல இருந்தாலும் இந்தியாவுக்குள்ளேயே நாம் இதுவரை கண்டிராத பேரழகு கொட்டிக் கிடக்கிறது. அதிலும், ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் உலகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத  அற்புதங்கள் ஏராளம்… ஏராளம்…! அந்த அற்புதக் காட்சிகளைக் கண்கள் குளிரக் கண்டு, உள்ளம் குளிர உலா வந்தது எங்களுக்கு அமைந்த நல்வாய்ப்பு. ஏழு சகோதரிகள் (Seven Sisters) என அழைக்கப்படும் மாநிலங்கள் அசாம், அருணாச் சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை. 2016 நவம்பர் 10ஆம் தேதி முதல் 17 நாட்கள், என் இரு மகன்களுடன், என் தங்கையும் நானும் சென்று வந்த மறக்க முடியாத பயண அனுபவங்களைச் சுவடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. மகன்களின் புவியியல் அறிவும், இயற்கையின் மேல் அவர்கள் கொண்ட காதலும், என் கணவர் வர இயலாத சூழலிலும் எங்கள் பயணத்தை மிக அழகாக்கியது. நவம்பர் 10 அன்று காலை சென்னையிலிருந்து எங்கள் பயணம் துவங்கவிருந்த நிலையில் எட்டாம் தேதி இரவு அறிவிக்கப்பட்ட திடீர் பண மதிப்பிழப்பையும் மகன்களின் திறமையால் சமாளித்து, திட்டமிட்டபடி பயணத்தைத் துவக்கினோம். அசாம் மாநிலம் பர்மா மற்றும் பூட்டானுடனும்,  திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் பர்மாவுடனும், மேகாலயா பங்காளாதேசுடனும், அருணாச்சலப் பிரதேசம் சீனாவுடனும் தங்கள் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மிக அதிக அளவு மழை, மிதமான குளிர், கோடையில் வெப்பம், சில இடங்களில் கடும் பனி என அனைத்து வகையான தட்பவெப்ப நிலை, ஆணிவேரிலிருந்து பிரியும் கிளை வேர்களைப்போல பிரம்மபுத்திரா  நதியிலிருந்து பிரிந்து மலைகளினூடே வளைந்து நெளிந்து ஓடும் கிளை நதிகள் என, ஓடி ஓடி உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை வழங்கவும், இயந்திர வாழ்விலிருந்து விடுபட்டு சற்றே இளைப்பாறவும் இங்கே இயற்கை அன்னை தன் மடியில் நமக்கு இடமளிக்கிறாள். அசாமின் பெரிய நகரமான கவுஹாத்தியில் செல்ப் டிரைவிங் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, திகட்ட திகட்ட காரிலேயே மலையெங்கும் சுற்றியது, அருணாச்சல பிரதேசத்தில் 13,700 அடி உயரத்தில் சீன எல்லையில் இருக்கும் ‘தவாங்’ என்னும் கடுங்குளிர் இடத்துக்கு சென்றது, மலையெல்லாம் மஞ்சள் மலராய் எங்களை வரவேற்ற கோஹிமா – இம்பால் மலைப்பகுதியில் உலவியது, இம்பாலில் முழுப் புல்வெளியும் தண்ணீரில் மிதக்கும் அதிசயத்தைக் கண்டது, அங்கே பெண்களே நடத்தும் உலகில் பெரிய ‘இம்மா’ மார்க்கெட்டில் வலம் வந்தது, க்ரங்சூரி, தவ்கி ஆறு, சிரபுஞ்சி, உலகின் சுத்தமான கிராமம், வேர்ப் பாலம் என மேகாலயாவின் அழகை அத்தனை எளிதாக எழுத்தில் வடித்துவிட முடியாது. திரிபுராவுக்கு 12 மணி நேரம் இயற்கையோடு இணைந்த ரயில் பயணமும், உன்னக்கோட்டியின் மலை சிற்பமும், காசிரங்காவின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும் தவாங் போகும் போது கடந்த “செலா பாஸும்” என காணுமிடமெல்லாம் பரந்துகிடக்கும் பேரழகில் எதைச் சொல்ல? எதை விட? பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், பாஸ்போர்ட் விசா தேவையின்றி உலகின் பேரழகைத் தரிசிக்க விரும்புவோருக்கும், இயற்கையோடு சில நாட்கள் இன்புற்று வாழ நினைப்போருக்கும் எங்கள் பயண அனுபவம் சிறிதேனும் பயன்படக்கூடும். வாருங்கள், ஏழு சகோதரிகளை இனி வரும் ஏடுகளில் சந்திப்போம். தொடரும்…

பெண் என்ன பொதுச் சொத்தா?

பெண் என்ன பொதுச் சொத்தா?

அண்மையில் நிகழ்ந்த ஒரு பெண்ணின் மறுமணம் ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அந்தத் திருமணம் ஒரு பெருங்கூட்டத்தால் அருவருக்கத்தக்க வகையில் விமர்சிக்கப்பட்டது. ஒரு பெண் மறுமணம் புரிவது இவர்களுக்கு ஏன் இவ்வளவு உறுத்துகிறது? ஆண்டாண்டு காலமாக நம் சமூகத்தில் மனைவி இறந்த பின்னோ, பிரிந்த பின்னோ அல்லது உடன் இருக்கும்போதோ கூட ஒரு ஆண், இரண்டாம் திருமணம் புரிவது அல்லது மணம் புரியாமல் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது போன்றவை நமக்கெல்லாம் ஒன்றும்  புதிதல்ல. அவற்றையெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர் செய்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் செய்தாலும் `இன்று சென்னை வெயில் 37.’ என்பது போன்ற அன்றாடச் செய்தியாகத்தான் தலைமுறை தலைமுறையாக நாம் கடந்து கொண்டி ருக்கிறோம். ஒத்து வராத காரணத்தால் பிரிய நினைக்கும் தம்பதியரை ஊர் கூடி அறுத்துவிட்டு, மறுமணம் புரியும் உரிமை இருவருக்குமே கொடுக்கப் படுவதும் ஆண்டாண்டு காலமாக சில கிராமங் களில் இருந்து வந்திருக்கிறது ஒரு பெண்ணின் கணவர்  இறந்துவிட்டால், திருமணமாகாத அவரின் சதோதரர் யாரும் இருந்தால் அவர் ஒப்புதலுடன் அந்தப் பெண்ணுக்கு மணம் முடித்துவைத்து அப்பெண்ணையும் குழந்தை களையும் காப்பாற்றும் பொறுப்பை அவரிடம் விடும் கிராம பஞ்சாயத்துகளும் இங்கே உண்டுதான். ஆனால் முன்னேறிக்கொண்டிருப்பதாகச் சொல்லித்திரிந்து கொண்டிருக்கும் நம் நவீன சமூகம், அதிலும் மெத்தப் படித்து தெளிந்து விட்டதாக இறுமாப்பு  கொண்டிருக்கும் இன்றைய சமூகம், இன்றும் ஒரு பெண்ணின் மறுமணத்தைக் கடக்கவியலாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஒரு முன்னேறிய சமூகத்தில் எவர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் செய்தியாக இருக்கவே கூடாது. அப்படியே செய்தியானாலும் `அப்படியா?’ என்று கடக்கும் கட்டத்தில் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கிறோமா நாம்? இங்கு ஒரு பெண் திருமணம் புரியாவிட்டாலும் பிரச்சினை. புரிந்தாலும் பிரச்சினை. அவள் உயிரும் உணர்வும் உள்ளவள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு என்ன செய்தாலும் பெண்ணே ஒரு பிரச்சினையாகிவிடுகிறாள். ஒரு பெண் திருமணம் வேண்டாம் என்று சொன்னால், ஆண் துணை இல்லாமல் எப்படி வாழ்வாள் என்றொரு கேள்வி. ஆனால் திருமணம் புரிந்த பிறகு, ஆண் இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்துவிட்டாலோ, அப்பெண் தனக்குத் துணை வேண்டுமென்று சொன்னால், `அதென்ன ஒரு பொம்பளைக்கு அப்படி ஆம்பள கேக்குது?’ என்று அதே வாய் கேட்கும். யார் வாழ்வை யார் நிர்ணயிப்பது? யாருக்கு என்ன தேவை என்பதில் யார் தலையிடுவது? ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ மறுமணம் புரிய அவர்கள் இருவரின் ஒப்புதல் மட்டுமே அவசியம். வளர்ந்திருக்கும் பிள்ளைகள் அவர்கள் பொறுப்பில் இருந்தால் மனரீதியாக அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இதுகூடத் தார்மீகக் கடமை என்றுதான் கொள்ளவேண்டுமே தவிர, திணிக்க இயலாது. ஒரு பெண்ணின் மறுமணம் குறித்து மற்றவர் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அது யாராகவே இருந்தாலும்? அவளைப் போல வாழ இயலாத கையறுநிலையில் இருக்கும் பெண்களும், எங்கே தங்கள் வீட்டுப் பெண்களை இப்படிப்பட்ட உதாரணங்கள் மாற்றிவிடுமோ என்ற பயத்தில் வாழும் ஆண்களும், கலாச்சாரம் என்ற முகமூடியை அணிந்து திரியும் போலிகளும் எறியும் கற்கள் இவை, கொட்டும் குப்பைகள் இவை, நாறிடும் சாக்கடைகள் இவை! அதிலும் குறிப்பாக, மறுமணம் புரியும் பெண் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான மனிதராக இருந்து விட்டால் போதும். யார் வேண்டுமானால் என்ன அவதூறு வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து வசை பாடுவார்கள். ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை அவர் பொதுச் சொத்து. அவர்களின் படுக்கையறையில், குளியலறையில் என்று எங்கும் எட்டிப் பார்க்கும் உரிமையை இவர்களே கையில் எடுத்துக்கொள்வார்கள். கேட்டால், பிரபலங்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும், அவர்கள் எப்படி தவறு புரியலாம் என்று கேள்வி வேறு கேட்பார்கள். முதலில் தனி மனித வாழ்க்கையில் மற்றவருக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் யார் என்ன செய்தாலும் அதை விமர்சிக்க நாம் யார்? ஒரு பெண் – அவள் பிரபலமோ அல்லது பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணோ -வாழவேண்டுமா இல்லை சாக வேண்டுமா என்பதைப் பொதுச் சமூகம்தான் முடிவு செய்கிறது. ஒரு காலத்தில் கணவன் இறந்துவிட்டான், நீயும் அவனுடன் செத்துப்போ என்றார்கள். ஒருவன் உன்னை வன்புணர்வு செய்தானா, அல்லது ஒருவனை நம்பி ஏமாந்துவிட்டாயா, நீ வாழத் தகுதியற்றவள் இறந்து போ என்றார்கள்! இப்படி எத்தனையோ பெண்களை வீழ வைத்திருக்கிறது நம் சரித்திரம். இன்றளவும் கற்பு என்ற ஒன்றை நிலைநிறுத்துவதற்காக அபலைப் பெண்களின் மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்படியாக மறுமணம் செய்த பெண்ணைப்பற்றி அவதூறு, ஏளனம்  பேசுபவர்கள், இனி வரும் தலைமுறையில் இவர்கள் குடும்பத்திலிருந்தே ஒரு பெண் இதைச் செல்படுத்திக்காட்டும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். உடலைத்தாண்டி, அதுவும் முக்கியமாக அடுத்தவர் உடலைத்தாண்டி சிந்திக்கக் கற்காத வரை, இந்த வன்மங்கள் கொண்ட கொடூர நாக்குகள் பேசிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் மாற்றங்கள் நிகழ்வதை இங்கு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக வேண்டுமானால் ஆரோக்கியமான தனி மனிதர்களின் கூட்டத்தால் மட்டுமே முடியும்.  தூற்றுபவர்கள் எரிந்தே சாம்பலாகட்டும். வாழ நினைப்பவர்கள் விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் அவரவர் வாழ்வை அவரவர் வாழ்வோம்!

கொரோனா அயலகத் தமிழர்கள்  எதிர்கொண்டது எப்படி?

கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?

தமிழகத்தில் இருந்து சென்று பல்வேறு உலக நாடுகளிலும் பணியில் இருப்பவர்கள் அந்தந்த நாடுகளில் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளின் தொடர்ச்சி…  ஸ்பெயின்:  சீனாவுக்கு அடுத்ததாக, மார்ச் மாதத்தில் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள். கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கோபிப்பாளையத்தைச் சேர்ந்த முனைவர் குமார் பழனிசாமி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். அங்கிருந்து அவர் ஸ்பெயின் நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஸ்பெயினில் முதல் கொரோனோ தொற்று ஜனவரி 29-ல் கண்டறியப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமான நோய்த் தாக்குதலுக்கும் இறப்பிற்கும் ஆளாகியுள்ளனர். மார்ச் துவக்கத்தில் 7000க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டதை அடுத் அரசு அவசர நிலையை அறிவித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு, பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தடுப்பது, உணவுப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், வாகன எரி பொருள்கள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு வராமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. பல லட்சம் சோதனைக் கருவிகளைக் கொள்முதல், தானியங்கிக் கருவிகள் (Robots), மாபெரும் தற்காலிக மருத்துவமனை, மற்றும் அவசரநிலையைக் கண்டிப்புடன் செயல்படுத்தி யதால் தற்போது வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பிவிடும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. அவசரநிலை பிறப்பித்த முதல் சில நாட்களுக்கு மக்கள் பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. தற்போது விளைவுகளை உணர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்கள். பொருளாதார பாதிப்பினைச் சமாளிக்க, உடனடி யாக 200  பில்லியன் யூரோவை சிறப்பு நிவாரணத் தொகுப்பாக அரசு அறிவித்தது. முக்கியமாக, கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிக்காக 30 மில்லியன் யூரோ ஒதுக்கப் பட்டுள்ளது. துவக்கத்தில் முகக்கவசம், கையுறை, சோதனைக் கருவிகள், சுவாசக்கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் 420 மில்லியன் யூரோ மதிப்பில் (சுமார் 3500 கோடி ரூபாய்)  மருத்துவக் கருவிகள் வாங்க அரசு ஏற்பாடு செய்தது. இங்கும் ரேப்பிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டன. எனவே PCR சோதனை முறையே தொடர்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோர் நோய்த்தொற்று அடைந்தோர், இறந்த வர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, அரசின் நடவடிக்கைகளைப்பற்றி விளக்கினர். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே, அதிக அழுத்தத்துடன் நீண்டநேரம் வேலை செய்தனர். முதல் இரு வாரங்கள் எவ்வித பாதுகாப்புக் கேடயங்களும் இன்றி மக்கள் நலனுக்காக சேவை செய்தனர். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நாட்டின் மதிப்புமிக்க “ஆஸ்டூரியாஸ் இளவரசி-2020” எனும் விருதினை அறிவித்து கவுரவப்படுத்தி யுள்ளனர். கொரோனாவால் ஸ்பெயின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டு வருகிறது. சுற்றுலாத்துறையின் வருவாய் இழப்பு மட்டும் சுமார் 92.5 பில்லியன் யூரோ. பொதுமுடக்கக் காலத்தில் வேலை பறிபோவதைத் தடுக்க, தற்காலிக வேலைவாய்ப்பு ஒழுங்குமுறைத் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு 4 மாதம் முதல் 2  ஆண்டுகள் வரை சம்பளத்தில் 70-50% வரை வழங்கப்படும். சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புத் தொகையினை அரசே செலுத்துகிறது. மேலும் மானியத்துடன் கூடிய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்குகிறது. நோய்த்தாக்குதல் மற்றும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை எங்களுக்கு அச்சமூட்டியது. பெற்றோர்கள் எங்களின் நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டனர். அரசின் நடவடிக்கைகள், பணிபுரியும் நிறுவனத்தின் ஒத்துழைப்பு, பெற்றோர், உறவினர்களின் புரிதல், நண்பர்களின் ஆறுதல்கள் போன்றவற்றால் மனஇறுக்கம் குறைந்தது. தற்போது அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முககவசம் அணிவது, சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொரடப்படும். சமூகப் பொறுப்புடன் அலட்சியம் தவிர்த்து, அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி இந்தக் கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து, மானுட வாழ்வியலைப் புதியபாதையில் கொண்டு செல்வது நம் அனைவரின் தலையாய கடமை” என முடிக்கிறார் குமார்.  இங்கிலாந்து:  கோயம்புத்தூரைச் சேர்ந்த கஸ்தூரி ராஜி சுப்பிரமணியம். இங்கிலாந்தில் பெர்க் ஷயர் நகரில் வசிக்கும் அவர் டேட்டா சயின்டிஸ்டாகப் பணிபுரிகிறார். “இங்கிலாந்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா நுழைந்தது. விடுமுறைக்கு இத்தாலிக்குச் சென்றவர்கள் திரும்பி வந்த இருவாரத்தில், நூற்றுக்கும் மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போது விமான நிலையங்களில் எவ்வித பரிசோதனையும் இல்லை. கொரோனாவை எதிர்க்க ‘Herd Immunity’ வழிமுறையைப் பின்பற்றி, வயதான வர்கள் மற்றும் பிற நோயாளிகளைப் பாதுகாத்துக்கொண்டு, ஏனையோர் வியாதிக்கு உள்ளாகும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க முடிவானது. அத்தியாவசியப் பணியில் உள்ள KEY WORKERS தவிர மற்றவர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இங்கு 95% அரசு மருத்துவமனைகள்தான். அனைத்து சிகிச்சையும் இலவசம். 17000 படுக்கைகள் கொண்ட அவசரகால ICU மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார்கள். அவசரத்தேவையற்ற மற்ற சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அறுபது வயதிற்கும் மூத்தவர்களின் இறப்பு விகிதம் அதிகம். இப்பொழுது இறப்புகள்  41,000-ஐக் கடந்து விட்டது. மே இரண்டாம் வாரத்திலிருந்து தொற்று குறைந்து வருகிறது. ஜூன்-1 முதல் லாக்-டவுனில் சிறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆண்டின் மொத்த பட்ஜெட்டையும் கோவிட்-19க்காக நிதியமைச்சர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பணி நீக்கத் தடை, 80% சம்பளத்தை (£2500 வரை)  அரசே வழங்குவது, வரிகள் நிறுத்தி வைப்பு, தொழில் முனைவோர் உதவித்தொகை, வீட்டு வாடகை, வீட்டுக்கடன் கட்ட மூன்று மாதம் அவகாசம் போன்ற பயன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்வில் இடர்ப்பாடுகள் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு விதிமீறல்கள் இருந்தன. அவற்றைக் காவல்துறையினர் கண்காணித்து அபராதம் விதித்தனர். பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள்  தொலைக்காட்சி மூலம், புள்ளி விவரங்களுடன் உரையாற்றிவிட்டு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள். எங்களின் நிலையை எண்ணி  இந்தியாவில் சொந்தங்கள் கவலை கொண்டனர். ஆனால், இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அவர்கள் ஆறுதலடைந் தார்கள். ஆனால், அங்கு லாக்-டவுன் முதல் துறைகளை ஒழுங்குபடுத்துவது வரை பல வேறுபாடுகளைப் பார்த்தபோது மனம் சஞ்சலமானது. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் நடப்பதும், சிறு குறு தொழில்களுக்கு அரசு உதவிகள் எதுவும் வழங்காதததும், பிரதமர் இந்தப் பேரிடரில்கூட பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து மக்களுக்கு விளக்கமளிக்காததும் ஏமாற்றம் அளித்தது. ஒரு நாட்டின் தலைமையால் அந்த நாட்டு மக்களைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அனைவரும் கவனமாக இருப்போம், நம்மை நாமே காத்துக்கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறார் கஸ்தூரி.  ஆஸ்திரேலியா:  தீவுக் கண்டமான ஆஸ்திரேலியா, துவக்கம் முதலே கொரோனா தொற்று அதிகம் இல்லாமல் ஓரளவு பாது காப்பாகவே இருந்துவருகிறது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து, ஆஸ்திரேலி யாவின் டார்வின் நகரில், ராயல் டார்வின் மருத்துவமனையில் நிர்வாக அலுவலராகப் பணிபுரியும், குமரி மாவட்டம் திருஞானபுரத்தைச் சேர்ந்த மோசஸ் மனோகர் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஆஸ்திரேலியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஜனவரி 22 முதலே வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவித்து விட்டது. தொற்று எண்ணிக்கை 200-ஐ எட்டிய போது பேரங்காடிகள், திரையரங்குகள், மதுக்கடைகள், பார்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பேருந்து, தொடரி, விமானம், லிப்ட் அனைத்திலும்  சமுதாய இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. உணவுப் பொருட்கள் உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடை யில்லாமல் மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்தது. சிறு அறிகுறி என்றாலும் மக்கள் பரிசோதனை மையங்களுக்குச் சென்று தங்களை பரிசோதித்துக் கொண்டார்கள். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்த போது வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்படாமல் இராணுவப் பாதுகாப்போடு நட்சத்திர விடுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டார்கள். மருத்துவர்களும் செவிலியர் களும் அவர்களை விடுதி களுக்கே சென்று பரிசோதித் தார்கள். தற்போது ஐந்து மாநிலங்கள் கோரோனா இல்லாத மாநிலங்களாகி விட்டன. சுமார் 400 பேர் மட்டுமே பாதிப்பில் உள்ளார்கள். தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கம் தாண்டுவதில்லை. விரைவில் இதையும் தடுக்க மருத்துவத் துறை கடுமையாய்ப் போராடுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 102 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந் திருக்கிறார்கள். இப்போது இயல்பு வாழ்க்கை ஓரளவிற்குத் திரும்பி விட்டது. திரையரங்குகள் மட்டுமே இன்னும் திறக்கப்பட வில்லை. எப்போதும்போல் மக்கள் இப்போதும் அரசு விதிகளை மதித்து நடந்து கொண்டார்கள். ‘பிரதமர் அல்லது முதல்வர் சொல்லி நான் ஏன் கேட்க வேண்டும்?’ என யாரும் நினைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பிற்குத் துணை நிற்கிறார்கள். விரைவில் கொரோனா இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறிவிடும் என்கிறார் மோசஸ்.  கனடா:  கனடாவின் வான் கூவர் நகரில் Supply Chain Analyst ஆகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த அஸ்வின் குமார் ராமசுப்பு கனடா நாட்டின் கொரோனா சூழலை விவரிக்கிறார். மார்ச் மாத முதற்பாதி வரை கனடாவில் கொரோனா பரவல் துவங்காததால், அதுவரை வெளிநாட்டுப் பயணிகளை பரிசோதனையின்றி அனுமதித்து வந்தது. தொற்றுப் பரவல் அதிகாரத்த முதல் இரு மாதங்கள் நிலைமீறி சென்றுகொண்டிருந்த நிலையில், பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது மெதுவாகப் பலனளிக்கத் துவங்கிவிட்டது. முடக்கம் அறிவித்த முதல் வாரமே, வேலை இழந்த அனைவருக்கும் மாதம் 2000$ (ரூ.1,10,000) என நான்கு மாதங்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார் பிரதமர். விண்ணப்பித்த அனைவருக்கும் மறுவாரமே உதவித்தொகை அவரவர் வாங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. பாதிப்புக்குள்ளான தொழில்களுக்குப் பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டது. ஊதியம் வழங்கமுடியாத நிறுவனங்களுக்கு ஊதிய தொகையில் 75% அரசு ஏற்பதாக அறிவித்தது. முதற்கட்ட உதவித்தொகைக்கு உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% ஐ அரசு ஒதுக்கியது. மருத்துவ முறை, பரவல் தடுப்பு விதிகள், மருத்துவ வசதிகளுக்கான ஒதுக்கீடு, கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மாகாணங்களே தீர்மானித்தன. பொருளாதார உதவிகள், வழிகாட்டுதல், கொள்கை முடிவு, மற்றும் வெளியுறவுத் தொடர்புகளில் மட்டுமே மத்திய அரசு முடிவெடுத்தது. பிரதமர் மனைவியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். எனினும் தினமும் வீட்டுக்கு வெளியே வந்து அறிவிப்புகளை வெளியிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார். கனடாவில் ஒவ்வொரு மாகாணமும் குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. பெரும்பாலும் காப்பீடு இலவசம் அல்லது மிகக் குறைந்த மாதத்தொகை கட்டினால் போதும். அதன்கீழ்

ஜோக்ஸ்

ஹலோ… மிஸ். அறிவழகி வீடா. ஆமா… நான் அவங்கம்மா பேசறேன்… அறிவு இருந்தா அவ கிட்டே போனைக்குடுங்க… கணவன்: என்னம்மா இட்லி பூப்போல இருக்குன்னு சொல்லிக் கொடுத்துவிட்ட… சாப்பிட்டுப் பார்த்தா சவ சவன்னு இருக்கே..? மனைவி: அடப்பாவி மனுசா… மாஸ்க்கைக் கழட்டிட்டு சாப்பிடுயா… இந்த நாடு முழுவதும் கொரனாவ எதிர்த்து போராடிட்டிருக்குது. நான் மட்டும் ஒரு காக்காவ எதிர்த்து போராடிட்டு இருக்கன்… டேய் அந்த வடகத்த பாத்துக்கடா… (Work From home) “என்னை வாழ வைத்தது சென்னை” என்ன நேர்ந்தாலும் நான் சென்னையை விட்டுப்போகமாட்டேன்.”            ஏம்மா சுற்றி வளைச்சிப் பேசறே! உனக்கு e.பாஸ் கிடைக்கல்லேன்னு சொல்லு நன்றி: FAMILY JOKES WHATSAPP GROUP

பயணம்

இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டி ருந்தது. “காளிய வச்சி தார்பாயை கட்டிகிட்டு இரு. நான் போய் டீ சாப்ட்டு வந்துடறேன்” என்று புதிதாக வேலைக்கு வந்திருந்த சீனியிடம் சொல்லிக்கொண்டே கைலியின் மடிப்பில் பீடி இருக்கிறதா? எனப் பார்த்தபடி டீக்கடை வாசலை அடைந்தார் டிரைவர் சாமி. சற்று நேரத்தில் வண்டியை எடுக்க வேண்டும். ‘மழை வருகிறதா?’ என வானத்தைப் பார்த்த போது மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. “சொல்லு” “கெளம்பிட்டீங்களா?” “இல்ல, இனிமே தான். வந்துட்டானா?” “இல்ல. ஆள இன்னும் காணல. அதான் போன் பண்ணேன்” “வருவான். நீ சாப்ட்டு படு” “நா வேணா பாத்துட்டு வரட்டா..? கோவிலாண்ட இருக்கானான்னு.. “ “வருவான். வரலைனா அப்டியே போறான். அதுக்கு என்ன பண்றது? பொண்ணு ஒன்னு தான் நமக்குன்னு இருந்துற வேண்டியதுதான்.” “ம்” “வந்தா நீ ஏதும் பேசாத. நான் நாளைக்கு நைட்டு வந்துருவேன்.” “ம். சரி.” “வச்சிர்றேன்..” என்றவாறு அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி, “அடிச்சிருக்கக் கூடாதுதான். ஆனா, அந்த வார்த்தை? வயசுக்கு வந்த புள்ள இருக்குற வீட்டுல அப்படியா பேசுறது? வேலை வெட்டிக்குப் போனா இதெல்லாம் வருமா?” என்று எண்ணியபடியே டயர்களைச் சரிபார்த்துவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார். “சீனி…” “வந்துட்டேன்ண்ணே, இங்கனதான் இருக்கேன்” “ஓனர்ட்ட சொல்லிட்டியா?” சொல்லிட்டேன் என்பதுபோலத் தலையை ஆட்டினான். “ஏறு… போலாம்” என்று கூறியவாறு வண்டியைக் கிளப்பினார். முப்பத்திரண்டு வயதில் தொடங்கிய சாமியின் பயணம், நாற்பத்தொன்பது வயது ஆகியும் நிற்கவில்லை. பதினேழு வருட உழைப்பில் குடும்பத்தை ஓரளவு நிமிர்த்தியிருந்தார். மகன் படிப்பு முடிஞ்சதும் ஓரளவிற்கு மனதளவிலாவது ஓய்வு பெறலாம் என்று எண்ணியிருந்தவருக்கு அதில்தான் சிக்கல் இருந்தது. முதலாளி காதில் போட்டு வைத்தால் அவர் ஏதாவது வழி செய்வார் என்ற எண்ணத்தில் ஒருநாள் பேச்சுவாக்கில், “ஒரு வேலையும் செட் ஆக மாட்டேங்குதுண்ணே” எங்க போனாலும் வந்துர்றான். என்ன பண்றதுன்னு தெரியல. இவனும் பொட்ட புள்ளையா இருந்திருந்தா கவலை இல்லனு தோனுது” என்று முதலாளியிடம் பேசும்போது தன் கவலையைப் பகிர்ந்து கொண்டார். வேலை ஒன்றில் மகனைத் திணித்தால் மட்டும்தான் நிம்மதி வரும் என்ற கவலை மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. வண்டி நகரத்தைத் தாண்டி நெடுஞ்சாலையில் பயணமானதும் சீனியைக் கவனித்தார். “சாப்டியாடா…?” என்றார். அவனிடமிருந்து “ம்” என்ற ஒலியுடன் தலை அசைத்தல் வந்தது. ‘பையன் யாராக இருக்கலாம்?’ என்ற யோசனை சாமிக்கு வர, “யாருடா உன்னை இந்த வேலைக்கு சேர்த்து விட்டது?” என்ற கேள்வியை அவனை நோக்கி வீசினார். இரண்டு நாட்களாக லாரி செட்டில் வேலை செய்துகொண்டிருந்த பையனை, “இன்னைக்கு இவனைக் கூட கூட்டிட்டு போ சாமி, உனக்கு ஏதாவது உதவியா இருப்பான்” என்று சொல்லி முதலாளி தான் அனுப்பிவைத்தார். “எங்க அம்மா ஓனர் வீட்டுலதான் வேலை பாக்குறாங்கண்ணே. சும்மா இருக்குறேன்னு அனுப்பி வச்சாங்க” என்றதும் “பள்ளிக்கூடம் போகலையா? இங்க வந்துட்ட…” என்றார். “இப்போ லீவுண்ணே. திறந்ததும் போயிருவேன்” என்று அவன் பதில் சொல்ல, “பரவால்ல, நல்ல பொறுப்பான பையனா இருக் கான்” என்ற எண்ணம் சாமிக்குள் எழுந்தது. “தூக்கம் வந்தா சொல்லிரனும், சரியா..? ” நீ பாட்டுக்கு டோர்ல சாஞ்சிறக் கூடாது” என சாமி சொல்ல, வழக்கம் போல தலையை ஆட்டிக்கொண்டான் சீனி. “எத்தனாவது படிக்கிற?” “எட்டு முடிச்சி ஒன்பது போறேன்ண்ணா” என்றான். ஏனோ வண்டியில் இருக்கும் வானொலியைப் பாட விடுவதற்கு அவருக்கு மனமில்லை. சீனி கூட பேசிக்கொண்டிருப்பது தேவையாய் இருந்தது. “படிச்சிட்டு என்ன வேலைக்குப் போகப் போற?” என்ற கேள்வியைக் கேட்டவாறு அவன் முகத்தைப் பார்த்தார். முன்னாள் சாலையின் நடுவில் இருந்த வெள்ளைக் கோடுகள் வண்டிக்கு அடியில் ஓடி மறையும் காட்சியைப் பார்த்தபடியே ஆனந்தத்தில் இருந்து விலகாமல், “எந்த வேலை கிடைச்சாலும் போவேன்ண்ணா” என்றான். சாமிக்கு மகனின் ஞாபகம் வந்தது. ‘கிடைக்குற வேலையை செய்யறேன்னு நம்ம மகனுக்கு ஏன் தோணல? எந்தக் குறையும் இல்லாமல் தான வளர்த்தோம். கேட்டத கஷ்ட்டப்பட்டாவது வாங்கித் தந்தோம்ல. நம்ம கஷ்டம் நம்ம புள்ள படக்கூடாதுன்னு தானே வெயில்லயும் மழையிலயும் பாடுபடுறோம்?!’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்”. “இன்னும் எவ்ளோ தூரம் போகணும்ண்ணா?” என்று சீனி வாய் திறந்தான்.  “ஏன்டா தூக்கம் வருதா?” என்றார் சாமி. இல்லை என்பதாகத் தலையை ஆட்டினான். “விடிய காலை ஆகிரும்டா. நீ தூங்கு” என்றதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக சாமியின் கை கால் அசைவுகளைப் பார்த்தவாறு இருந்தவன், “எப்பயுமே நைட் தூங்க மாட்டிங் களா?” என்றான். “வீட்டுக்கு போனாதான்டா தூக்கம். லோடு இறக்குற வரைக்கும் காலையில கொஞ்சம் தூங்கலாம். வேணும்னா நீ வண்டி ஓட்டு நா வேணா தூங்குறேன்..” என்றார் கிண்டலாக. “இல்ல… தினமும் நைட்டு கண்ணு முழிக் கிறது கஷ்டமா இருக்கும்ல. நான் இவ்ளோ நேரம் முழிச்சிருந்ததே இல்ல” என்றான். சாமிக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. வீட்டில் இருக்கும் போது தூங்காமல் யாருட னாவது கதை பேசிக்கொண்டிருந்தால் சத்தம் போடுவாள். “ராவுல தூங்காம அப்டி என்ன பேசிட்டு இருப்பிங்க?” என்பாள். சோதனைச் சாவடி வந்ததும் இடது ஓரத்தில் நிறுத்திவிட்டு சீனியைப் பார்த்து, “வண்டிலயே இரு வந்துர்றேன்” என்று சொல்லிக்கொண்டே காக்கிச்சட்டையை மாட்டிக்கொண்டு காவல் வாகனத்தை நோக்கிப் போனார்.  எதுவும் பேசாமல் வாகனச் சான்றிதழைச் சரி பார்த்த காவலர், “வண்டிய விட்டு இறங்கினாதான் சட்டை போடுவீங்களோ?” என்றார். “இல்ல சார் புழுக்கமா இருந்தது” என்ற சாமியை நோக்கி “நாங்க என்ன ஏசி லயா நிக்கிறோம்? சரி போ” என்று சொல்லி அனுப்பிவைத்தார். இருக்கைக்கு வந்த சாமியோடு சீனி பேசவில்லை. “ஏலே சீனி… நீ வேணா படிச்சி போலீஸ் ஆகிறேன்” என்றார் முகத்தில் சிரிப்பு மலர. “அதுக்கு கோவம் வரணும்ண்ணே. எனக்கு கோவமே வரமாட்டேங்குதுன்னு அம்மா சொல்லும்” என்று அவன் முடிக்கும் முன்பே சாமிக்கு பையனின் ஞாபகம் வர, அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அதில் மிஸ்டு கால் ஒன்றும் இல்லை. சீனிக்குத் தூக்கம் வருவது போல இருந்தது. வண்டியின் வேகத்தில் உள்ளே வரும் குளிர்காற்று முகத்தில் பட்ட சுகத்தில் கண்கள் சொக்க சாமியைப் பார்த்தான். “நாங்கதான் இப்படிக் கிடந்தது அல்லாடுறோம். ஓனர் போகச் சொன்னா, நீ முடியாதுன்னு சொல்லி இருக்கலாம்ல?” என்றார். “செட்ல இருந்ததுக்கே நூறு ரூபா குடுத்தாரு ண்ணா. வண்டில போனா இன்னும் அதிகமா குடுப்பாருன்னு வந்துட்டேன்” என்றான். “காச வாங்கி உங்கம்மாகிட்டதான குடுக்கப் போற?” என்ற சாமியைப் பார்த்து “இல்லண்ணா, லீவு முடியறவரைக்கும் வேலைக்குப் போய்க் கிடைக்கிற காசைச் சேர்த்து சைக்கிள் வாங்கணும்ண்ணா, பள்ளிக்கூடம் போறதுக்கு” என்ற சீனியின் குரலை சாமி கவனித்தார். அதில் சொந்த உழைப்பில் சைக்கிள் வாங்கி ஓட்டப்போகும் பெருமிதம் மிளிர்ந்தது. அந்தப் பெருமிதம் கண்டு மகன் வந்தவுடன் அவனிடம் என்ன பேசவேண்டும் என்ற முடிவிற்கு சாமியும் வந்திருந்தார்.

இந்தியாவின் தேவை, சீனாவுடன் போரா? பொருளாதாரக் கட்டமைப்பா?

இந்தியாவின் தேவை, சீனாவுடன் போரா? பொருளாதாரக் கட்டமைப்பா?

உ னையாள்வதே பெரும்பாடம்மா… ஊராள்வது எனக்கேதம்மா… தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடல் வரிகள் இவை. இது யாருக்கு ஒத்துப் போகிறதோ இல்லையோ, இன்றைய நிதர்சன அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளைத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வல்லரசு நாடான அமெரிக்காவே கதிகலங்கிப் போயுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சுயசார்பு இந்தியா எனும் திட்ட வரைவு ஒன்றை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உள்நாட்டுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் கூறப்பட்டாலும், நடைமுறையில் இது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய சீன எல்லைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் இந்தச் சூழலில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாராகும் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என பிரதமர் கூறியிருந்தார்.  இந்த அறிக்கை வெளிவந்த சில நாட்களில் நாட்டில் சிலர் சீனப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வணிக உலகத்தின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டி ருக்கும் சீனாவை நம்பித்தான் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை மறந்து தற்போது சீனப் பொருட்களுக்கு எதிரான வர்த்தகப் போராட்டத்தைக் கையாண்டு வருகின்றனர். வரலாறு தெரியாதவர்களுக் காக… சீனாவிடமிருந்து 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்பில் இது 17% ஆகும். சீனாவைப் பொறுத்தவரை அந்நாடு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இது வெறும் 6% மட்டுமே. இதே காலகட்டத்தில் இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் மட்டுமே. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 5 லட்சத்து 84 ஆயிரம் கோடிகள் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த 2019-20 உள்நாட்டு உற்பத்தி 200 லட்சம் கோடியில் நேரடி அந்நிய முதலீடுகள் (FDI) மற்றும் வர்த்தக முதலீடுகளில் சீனாவின் பங்கு மட்டுமே சுமார் 1 லட்சம் கோடி என்று தரவுகள் கூறுகின்றன. இந்தியாவிற்கான உலக வர்த்தகத் தொடர்பு நிறுவனமான கேட்வே ஹவுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள பேடிஎம் மால், ஸ்விகி, ட்ரீம்11 உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் சீன முதலீட்டாளர்கள் சுமார் 580 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 30 சதவீத ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சீனாவிடமிருந்து வாங்கப்படுவதாக தெரிவிக்கின்றது இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு. தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நவீன உலகில் மொபைல் போன்கள் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்தச் சூழலில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்றும் பயன்பாட்டில் உள்ள 90 சதவிகித போன்கள் சீன தயாரிப்புகள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட, சுமார் ஏழு மடங்கு இறக்குமதி செய்கிறது. உணவுப் பொருட்கள் முதல் மின்னணுப் பொருட்கள், சைக்கிள், சூரிய மின்கலங்கள், காசநோய், தொழுநோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வரை முழுவதுமாக நம் நாட்டு வணிகர்கள் சீனத்து வர்த்தகத்தையே நம்பி உள்ளனர். குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முதலாளிகள் சீனாவில் தங்களது அலுவலகத்தை நிறுவி இந்தியாவிற்கான ஏற்றுமதி வர்த்தகத்தை வழி நடத்துகின்றனர்.  கடந்த 2017-18ல் மட்டுமே இந்தியாவின் மின்னணு உபகரணத் தேவையில் ஏறத்தாழ 60 சதவீதமும், விளையாட்டு பொம்மைகளில் 90 சதவீதமும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக விற்பனை செய்யப்படும் ஐந்து ஸ்மார்ட் போன் பிராண்டுகளில் முதல் நான்கு சீனாவைச் சேர்ந்தவை. இந்த நான்கு பிராண்டுகளும் இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் 70%ஐ ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 40 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீடுகள் மூலமாக சீன நிறுவனங்களின் துணையோடு இந்தியப் பொருளாதாரம் இயங்கிவரும் இந்த வேளையில் சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் சுற்றி வருகின்றனர். அவர்களை நோக்கி தான் இந்தக் கட்டுரையின் முதல் வரியில் வரும் பாடலைப் பிரதமர் பாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்.. உங்களை ஆள்வதற்கே எனக்கு நேரம் போதவில்லையே! ஓட்டுப் போட்ட மக்களுக்குப் பணி செய்ய நேரம் எங்கே உள்ளது? எனப் பிரதமர் வருத்தம் கொள்ளும் அளவிற்கு ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன. அந்நிய நாட்டு வணிகப் பொருட்களை நிராகரிப்பதற்கான அறைகூவல் ஒன்றும் நமக்கு புதுமையோ தனித்துவமோ அல்ல. மேலும் இந்தியா ஒரு சுயசார்பு நாடாகத் திகழ வேண்டும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கண்டுபிடிப்பும் அல்ல. காந்தி காலத்திலிருந்தே இது பற்றி நாம் பேசி வருகிறோம். காந்தி காலத்தில் அறிவுறுத்தப்பட்ட அந்நியப் பொருட்கள் எதிர்ப்பு முழுக்கம் மற்றும் சுதேசிப் பொருட்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் பின்னணியில் ஒரு தெளிவான செயல்திட்டமும், தனிப்பட்ட உறுதியும் இருந்தது. சுதந்திரம் அடைந்த கையோடு, காந்தியோடு அவருடைய கொள்கைகளையும் சேர்த்தே கழற்றிவிட்ட இந்தியாவினுடைய எந்த ஒரு கட்சியும் இன்றைய சுயசார்பு இந்தியாவிற்கான தனித்துவமான செயல்திட்டங்களை கொண்டிருப்பதாக சொல்லவில்லை. இப்படியான சூழலில் வெறும் சுயசார்பு தொடர்பிலான முழக்கத்தை எப்படிப் பார்ப்பது என்ற கேள்வியை வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்காச்சாரி. உலகின் பல நாடுகளில் இது போல நடைபெற்ற சுயசார்பு வர்த்தகப் போராட்டங்கள் கடைசியில் தோல்வியில் முடிவடைந்ததாகவே வரலாறுகள் சான்றளிக்கின்றன. 1930களின் முற்பகுதியில் சீனா ஜப்பானியப் பொருட்களை நிராகரிக்க முயன்றதும். 9/11 சம்பவத்துக்குப் பிறகு ஈராக்கிற்குத் தனது துருப்புக்களை அனுப்ப பிரான்ஸ் மறுத்தபோது அமெரிக்கக் கூட்டு நாடுகள் 2003 வாக்கில் பிரான்சின் பொருட்களை நிராகரிக்க முயன்றதும்.  பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய, அமெரிக்க நிலைப்பாட்டின் காரணமாகப் பலமுறை ஆப்பிரிக்க தேசங்களும் அவற்றின் பொருட்களை நிராகரித்துள்ளதும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளது. இந்த போராட்டங்களில் பொதுவான அம்சம் என்னவெனில் மேற்கண்ட எந்த சுயசார்பு வர்த்தக போராட்டமும் வெற்றி பெறவில்லை என்பதுதான். மேலும் போராட்டம் ஆரம்பித்த சில வாரங்களிலேயே இந்தப் புறக்கணிப்புக் கோசங்கள் நீர்த்துப் போய்விட்டன. உணர்ச்சிகளாலும், தனி மனிதத் தூண்டுதல்களாலும் அந்நிய நாட்டின் பொருட்களைப் புறக்கணிப்பது என்பது வெறும் அறைகூவலாகத்தான் இருக்குமே தவிர, நமக்கு சுயசார்புப் பொருளாதாரத்தையோ ‘ஆத்மநிர்பார்’ பாரத்தையோ பெற்றுத் தந்து விடாது. இந்த நாட்டின் நிலைமைக்குத் தகுந்த செயல்திட்டம் முன்வைக்கப்படுவது அவசியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மக்களையும் நாட்டின் சுதந்திரத்திற்குப் போராட உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிணைத்தது வந்தே மாதரம் எனும் சுதந்திர முழக்கம். இனம், மதம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்ச்சிகளையும் தீப்பிழம்பாக உசுப்பேற்றி நாட்டையே போராட்டக் களமாக மாற்றியது அன்றைய தேசிய ஒற்றுமை. ஆனால் இன்று காணப்படும் முரட்டு தேசபக்தியும், அதீதமான அரசியல் சித்தாந்தமும்தான் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்குப் பெரும் காரணமாக இருக்கின்றன. உலகமயமாக்கல் பரிணாமத்தில் இயங்கி வரும் இந்தக் காலத்தில் உலக வர்த்தக நிறுவனங்களின் விதிகளாலேயே ஒட்டுமொத்த தேசங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. தேசங்களுக்கிடையே எளிதான வர்த்தக நடைமுறைகளை வெறும் மலிவான வார்த்தை ஜாலங்களால் தடை போட முயன்றால், அது இன்னொரு வழியில் எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள் போலும். சீனா இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளி என்பதையும் தாண்டி உலக வர்த்தகச் சந்தை சீனாவுக்கு ஆதரவாகவே இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  இந்தியாவின் உற்பத்தித் திறன் வரம்புக்குட்பட்ட அளவிலேயே இருக்கும்போது, சுயசார்புப் பொருளாதாரம் எனத் தனிப்பட்ட முறையில் வர்த்தகப் போரில் இறங்குவது நமக்கு பலன் தராது. இந்த உலக வர்த்தக அசுரனுக்கு எதிராகப் பேசுவதற்கு முன் நாம் உள்நாட்டுத் தொழில் துறை வளர்ச்சியில் எந்த நிலையில் இருக்கிறோம் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சமீபத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருந்தாகக் கருதப்படும் ஹைட்ராக்சி குளோரோகுவினை அதிகப்படியாக நாம் ஏற்றுமதி செய்தாலும், அதனை உற்பத்தி செய்யத் தேவையான செயல்பாடுள்ள மருந்துப் பொருட்களை (Active Pharmacheutical Ingredients –API) உற்பத்தி செய்யும் கச்சாப் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது சீனா. சீனப் பொருட்களை நிராகரிப்பதற்கு முன்னதாக இதற்கு மாற்று ஏற்பாடு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இதுவரை எவரும் எழுப்பாதது வியப்பாக உள்ளது. நிதர்சனமான உண்மை என்னவென்றால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடங்கப்படவில்லை என்றே கூற முடிகிறது. சீனப் பொருட்களுக்கு மாற்றாக அதன் தரம் மற்றும் விலையுடன் போட்டி போடும் விதமாக உள்ளூர் பொருட்களை உருவாக்கவும், இறக்குமதி செய்யவுமான வழிமுறைகள் இங்கு இன்னும் உருவாக்கப்படவில்லை.  ஆராய்ச்சிகள் மற்றும் அதன் வளர்ச்சிக்குச் செலவிடப்படும் குறைவான நிதி ஒதுக்கீடுகள் தான் இந்தியாவின் கண்டுபிடிப்புச் சூழலுக்குப் பெரும் சவாலாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ‘தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகத் தகவல் அமைப்பு (NSTMIS)’ அளிக்கும் சமீபத்திய ஆராய்ச்சி வளர்ச்சி புள்ளி விவரத்தின்படி 2004-05 இலிருந்து 2014-15 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவினம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. எனினும் இது ஜி.டி.பி.யில் வெறும் 0.7% மட்டுமே.  இதுவே சீனா அதன் ஜி.டி.பி.யில் 2 சதவிகிதமும், பிரேசில் 1.2 சதவிகிதமும்,  இஸ்ரேல் தனது ஜி.டி.பி.யில் 4.3சதவிகிதமும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு வளர்ச்சிகளுக்காக செல விடுகின்றன. இந்தக் கொரோனா காலத்தில் சீனாவிலிருந்து இடம் பெயரும் அமெரிக்க நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயரும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.  ஏனெனில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க சீன வர்த்தகப் போர் தொடங்கிய பிறகு 5%க்கும் குறைவான நிறுவனங்கள்தான் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தன.  அவை அப்படியே இடம் பெயர்ந்தால் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அவை உறுதிப்படுத்தாது.  ஏனெனில் உள்நாட்டு வர்த்தக சந்தையை புதிதாக தொடங்குவதால் அடுத்த சில ஆண்டுகளுக்குச் சர்வதேசச் சந்தையில் இந்தியப்

நரைத்தடம்

நரைத்தடம்

வயதானவர்கள் என்றால் வெட்டிக்கதை பேசிக்கொண்டு, ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு மரத்தடியில் கட்டில் போட்டு சுகமாக ஓய்வெடுப்பவர்கள் என்கிற சினிமா மாயையை உதறிவிட்டு, நரைகூடிக் கிழப் பருவம் எய்தி – கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?! என்ற பாட்டுடைக் கவிஞன் பாரதியின் வரிகளுக்கு உயிர்ப்பித்துக் காண்பிக்கிறது ‘நரைத்தடம்’. பொதுவாகக் குறும்படம் என்றால் காமெடி, தினசரி ஹாட் டாபிக் மற்றும் காதல் கதைகளையே முக்கியமாகத் தேர்ந்தெடுக்கும் இந்தச் சூழலில் தனிமனித சுதந்திரத்திற்காகத் தன் கடைசி மூச்சுவரை வாழ்ந்துவரும் இடதுசாரி சிந்தனை கொண்ட பெரியவர் ஒருவரின் வாழ்க்கையையும் சமூகத்தின் மேல் அவர் கொண்டுள்ள அக்கறையையும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். வயதானவர்களையும் அவர்களுக்கே உரித்தான குணாதிசயங் களையும் தாண்டி, பொதுச் சேவைகளில் ஈடுபடுவோர் படும் இன்னல்களையும் மற்றவரிடம் அடி வாங்கும் சூழ்நிலையையும் அசாதாரண மாகக் கூறுகிறார் இந்த கதையின் நாயகன். ‘சாதி, மத, அரசியல் பேதமின்றி சமூக அவலங்களை சிந்தனை செய்தால் நீயும் ஒரு போராளியே!’ என எதார்த்தமாக வாழ்ந்து வருகிறார் அந்தப் பெரியவர். தொடக்கக் காட்சியில் பசுமையான கிராமத்து மலை, ரசிக்கத் துடிக்கும் மனம் என கதையின் நகர்வில் உள்ள இடங்களைப் பார்த்துகொண்டே இருக்கலாம். மலையையும் மலை சார்ந்த இயற்கைச் சூழலையும் கண்ணாடிப் பேழைக்குள் திணித்து பச்சைப் பசேலென வளர்ந்துள்ள சினிமா வனத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இருந்து வெளியே வரும் முதல் காட்சியில் நரைத்த தலை முடியுடன் கண்ணாடி அணிந்த வயதான ஒருவர் பனியனுடன் வெளியே வரும் வேளையில் கதையின் மாற்று சிந்தனையை நன்கு அறியமுடிகிறது. கண்ணாடிக்கு முன் நின்று தனது தோள்பட்டை மீது கைவைத்துத் தடவிப் பார்க்கும் வேளையில் அதன் காரணம் நமக்குப் புரியவில்லை. முந்தையநாள் கள்ளச்சாராயம் விற்றவர்களைக் காவல்துறையிடம் காட்டிக் கொடுத்ததால், சாராய வியாபாரிகள் அடித்த இடத்தைத் தடவிக்கொடுப்பதாக வரும் காட்சி நம்மை நெகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு சென்று முந்தைய காட்சிக்கு விளக்கமளிக்கிறது. வயதானவரின் மகனாக வரும் நடிகர் ஒரு மகனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். “நாமக் கட்டியும், கோவணத்தையும் தவிர வேறு அனைத்தும் விலை உயரும்” எனும் போதும் சிரிப்பையும், “இந்திய தேசியக் கொடியை உருவாக்கியதே ஒரு முஸ்லிம் பெண்மணிதானே!” என்று கூறும்போது நமது சமுதாயத்தின் நிதர்சனத்தையும் காட்சிப் படுத்துகிறார் கதையின் நாயகன். ஒருகட்டத்தில் “யோக்கியனாக எவன் வேண்டுமானாலும் வேசம் போடலாம், ஆனால் வாழ்வது கடினம்” என்று கூறும் வசனத்தில் தனிமைச் சுழலில் வளர்ந்த சிங்கத்தின் கர்ஜனை ஒலிக்கிறது. டீ குடிக்கக்கூட மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் போக வேண்டும் என்கிற அந்தப் பகுதியில், அவர் வாழும் தனிமைச் சூழல் மற்றும் சந்திக்கும் மனிதர்களுடன் கதையின் நாயகன் பேசும் விதத்தைப் பார்க்கும் போது, அவர் வாழும் காலத்திற்குள் சென்று அவருக்கு கிடைக்கப்பெற்ற வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் காளிதாஸ். “ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எனக்குப் போதவில்லை, 50 மணிநேரம் வேண்டும்” என்று கூறும் வேளையில் இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிக்கிப் போயுள்ள நாம் வாழ்க்கையை எப்படி நகர்த்தி வருகிறோம் என்று நச்சென்று கூறுகிறார். தினமும் காலையில் உணவு கொண்டு வந்து கொடுக்கும் மகன், மகன் போனபிறகு அந்த உணவைப் பறவைகளுக்கு வைத்துவிட்டு, தனக்கான உணவைத் தானே சமைத்து சாப்பிடும் அப்பா என, தந்தை மகன் உறவில் இருவரும் வாழ்கிறார்கள். இந்தக் கதைக்கு நாயகனாகவும், கதையின் கருப் பொருளாகவும் இறுதிவரை நம்மை அழைத்துச் செல்கிறார் அந்த நரைமுடிக் கிழவர். இடையில் வரும் கார்த்திக் கதாபாத்திரம் எதார்த்தத்தின் உச்சம். பகுத்தறிவுச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட தனிமனிதர் ஒருவரின் வயோதிக வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் இசை, ஒளிப்பதிவு மற்றும் வசனம் அனைத்தும் சிறப்பு. உலகம் முழுவதும் பல குறும்பட விழாக்களில் கலந்துகொண்டு சுமார் 22 விருதுகளையும், நார்வே குறும்பட விழாவில் சிறந்த குறும்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நரைத்தடம். பொதுத்தொண்டு மற்றும் சமூகம் என்றால் என்னவென்று சரியான புரிதலின்றி எடுக்கப்படும் இன்றைய படங்களுக்கு மத்தியில் “நரைத்தடம்” ஒரு சிறந்த படைப்பு.

மூடிய கேள்விகள்?

மூடிய கேள்விகள்?

மூடிட்டுப் போ என்கிறார்கள்.. தீர்வு அறியாததற்கும் விடை தெரியாததற்கும் எப்போதும் பேசும் பேச்சு இது.. திறனாய்ந்த மருத்துவன் காயத்தை திறந்து பார்க்கிறான்.. நோய்மை புரியாத வைத்தியன் கடவுளுக்குத் தான் தெரியும் என்று மூடிட்டுப் போகிறான்.. இயங்காமல் இருப்பது நோய்மை.. மூடுண்ட தொழிற்கூடமே நோய்மைப்பட்ட நிறுவனமாகிறது.. திறக்காத வான்குடைதான் எமனேறும் வாகனமாகிறது.. இதழ்கள் மூடிய மலருக்குள் எப்போதும் வண்டின் குடைச்சல்.. மூடிக் கிடக்கும் வானம் அழுகிறது.. வெளிறி கிடக்கும் வானம்தான் விண்மீன்களால் ஜொலிக்கிறது.. பெருவெடிப்பே ஜீவனின் ஆதாரம்.. உறுதிறத்தலே லௌகீக ரகசியம்.. கதவடைத்தல் என்பது வீட்டு கதவடைப்பது போல் நிதம் நடக்கும் சங்கதியாகிறது.. கதவடைக்கிறோம் எனும் பேரில் சிறகுகளைக் கத்தரிக்கிறீர்கள்.. பசி ஓலத்தில் துஞ்சமறுக்கும் விழிகளை அறைந்து சாத்துகிறீர்கள்.. வேர்களுக்கு சொட்டுநீர் பொசியும் அடைப்பான்களை இறுக மூடிவிட்டு கனிகளைக் கணக்கிடுகிறீர்கள்.. ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவதும் அரவம் புற்றுக்குள் பதுங்குவதும் ஒன்றெனும் அசமத்துவம் பேசுகிறீர்கள்.. கதவடைப்பதை விடுதலை என்றீர்கள்! கதவடைப்பதை பாதுகாப்பு என்றீர்கள்! உங்களின் இந்த விளையாட்டிற்கு பாம்புகள் மட்டுமே பல்லிளிக்கின்றன.. பால் கனியோடு கூத்தடித்து விட்டில்களுக்காக விளக்கேற்றும் உமது கதவடைத்தல் ஓர் ஆடம்பரம்… இரவு ஒன்பதுமணி முதல் விடியவிடிய வெற்று ஒட்டடைக் கோலில் விரகதாப வலைப்பின்னி காத்திருக்கும் உமது கதவடைத்தல் சிற்றின்பம்.. சயனித்தலைக் கடக்கவியலாத உமது சரசத்தை சம்சாரி விஞ்சுகிறான்.. அவன் சாவோடு சல்லாபிக்கிறான்.. விதியோடு விவாகம் செய்கிறான்.. வியாதியோடு விழுந்து புரளுகிறான்.. மூடுவதிலோ, திறப்பதிலோ எமக்கு எந்த வேறுபாடும் இல்லை.. மூடிக் கிடக்கும் போது இந்திரனால் பங்கப் படுவதும் திறந்திருக்கும் போது கௌதமனால் சாபம் பெறுவதும் அகலிகைகளான எமக்கு வாடிக்கை.. வறண்ட நதிகளில் தவறிவிழும் எங்கள் மோசேக்களின் கைக்கோல் ஜீவாதார வழிகளை அடைத்துவிடுகிறது. துன்பக்கடலை பிளக்கும்போதும் பெரும் பிரளயத்தைக் கிளப்பி  எம்மை ஜலசமாதி அடையச் செய்கிறது.. கதவடைப்பில் சிக்கும் எலிகளை என்றேனும் நீர் எண்ணியதுண்டா? உமது வீட்டு அடுப்பெரிய  ஊர் பிணங்களின் சிதைகளில் சுள்ளி சேகரிக்கிறவர் நீங்கள்.. பொங்கிவரும் பாலில் தெளிக்கும் தண்ணீராக இருக்க வேண்டிய ஊரடங்கை கொதித்து வெளியேறும் ஆவிக்கு  ஊற்றும் பாலாக மாற்றியவர் நீர்! வாசல்களை அடைக்கும் நீங்கள் மூச்சு முட்டும்போது விருட்டென விசிறிகளைத் திறந்து விடுகிறீர்கள்.. இன்னல்கள் எதையும் அகற்றாமல் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறீர்கள்.. கண்ணீர் கதவுகளை அடைத்து கண்ணோட்டத்தை பறிகொடுக்கிறீர்கள்.. தண்ணீர் மதகுகளை அடைத்து வயிற்றோட்டத்தில் பரிதவிக்கிறீர்கள்.. மூடி மறைப்பதே ராஜதர்மம்.. அடைத்து வைப்பதே அநுகூலமென்பதை உம் திறக்கப்படாத கோப்புகள் சொல்லும்.. மூடிட்டுப் போகும் பேச்சும் வெறும் பேச்சாகத்தான் இருக்கிறது.. காணிக்கை செலுத்த புதியவகை உண்டியல்களை நிறுவுகிறீர்கள்.. படையல்களை வரிசைப்படுத்தும் சாத்வீக முறைகளைக் கற்பிக்கிறீர்கள்.. நெய்வேத்திய பொருட்களின் தீர்வையை கடவுளர்களிடம் சேர்ப்பிக்கிறீர்கள்.. பிரசாதத்தைக்கூட கண்ணில் காட்டாமல் பூசாரிகளை விட்டு களவாடுகிறீர்கள்.. மூளைகளை மூடி வைத்துவிட்டு வாய்களை அகல திறக்கிறீர்கள்.. ஆலயங்களை மூடிவிட்டு பிரார்த்தனைகளை முடுக்குகிறீர்கள்.. மோசமான ஓட்டுநர்கள் எப்போதும் பக்தியை வளர்க்கிறார்கள்.. மதக்கடைகளை அடைத்துவிட்டு மதுக்கடைகளை திறந்துவைத்தீர்கள்.. ஏதாவது ஒரு போதையில் மக்கள் மயங்காது போனால் உமக்கு கைகால்கள் உதறுகிறது.. வகுப்பறைகளை மூடிவிட்டு வகுப்புவாதத்தை மூட்டி விடுகிறீர்கள்.. ஏழை எளியவர்க்கு சோறுபோடும் அட்சயப் பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்து வைக்கிறீர்கள்.. இருட்டில் தத்தளித்துத் தவிக்கும் மக்களின் கதி என்னவென்றால் கடவுளுக்கே வெளிச்சம் என்கிறீர்கள்.. மொத்தத்தில் – வைபோகங்கள் சிறுகதையானாலும் அனுபோகம் நெடுந் தொடராகிறது.. பொறுப்பு கையுறை போட்டுக் கொண்டது. கடமை முகமூடி அணிந்து கொண்டது.. தர்மம் மூடிட்டுப் போய்விட்டது.. மணலைக் கயிறாகத் திரித்து துன்பமலையை மத்தாக்கி ஊழல்கடலைக் கடைந்தபோது வெளியானது ஊரடங்கு காமதேனு.. வேண்டியதைத் தரும் தேவதையால் ஊமைகள் கண்ட கனவு உத்தேசமாய் பலித்துப் போனது.. மாடுகளுக்கே மகுடம் சூட்டும் தேசத்தில் காமதேனுவை எதிர்க்கும் மன்னரும் ராஜ்ஜியத்தை இழந்து தவசியாவார்..

தியானம்!

தியானம்!

உன் முதல் சிரிப்பையும் முதல் அழுகையையும் ரசித்த முதல் ரசிகன் நான்!.. நித்தம் உந்தன் நினைவலையில் நீர்த்துப் போனேன் நிராயுதபாணியாய்!.. சங்குவலை கழுத்தில் சாய்ந்தாட சஞ்சிகை அவதாரம் காண்பேனோ சயனநிலையில்!.. அணிகளைந்து ஆடைகளைந்து நித்தம் எஞ்சுவதை நோக்கி ஏங்கித் திகைப்பேனா!.. கால்பிணைத்து கட்டியணைத்து காயம் பேசிடும் ஆழ்மனதின் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை… அள்ளியெடுத்து பொங்கும் அன்பின் நுரைசொல்ல முடியா உணர்வுகளை சொல்லிவிடத் துடிக்கும் தேகத்தின் தியானம்!.. ஈருருளியில் நீண்ட பயணம்மரமில்லா பொட்டல் சாலைநிழலைத் தேடும் மரவியாபாரி!

அவதானம்!

அவதானம்!

மலரிடை கொடியிடையாள் மனமதில் குடியுடையாள் தேகத்தின் ஆர்ப்பரிப்பில் தேன்பருகிட துகிலுரித்தாள் கள்வனும் கணவனாய் காத்திருப்பில் அவதானம்!..

“என்னையும் புதைத்துவிடுங்கள்”

“என்னையும் புதைத்துவிடுங்கள்”

பசுமைக் குடை பிடித்து, பகலவன் கதிர் தடுத்து, பனி கூட உருகாமல் பகலையும் குளிராக்குவேன். பசிக்கு உணவு தந்து, புசிக்கும் பழங்கள் தந்து, ருசிக்கும் எல்லாம் தந்து, தவிக்கும் நோய்க்கு மருந்தாம் மூலிகை தருவேன். காடுகரை வளர்த்து கழனி  செழிக்க கார்மேகம் தடுத்து, கண்மாய் நிறைக்கும் கனமழை தருவேன். வீட்டிற்கு நிலைக்கதவாக, விலங்கிற்கும் இரையாக, விளைச்சல் தரும் பயிராக, விறகாக, நீ வெட்டியெடுக்கும் கட்டித்தங்கம் நிலக்கரியாக, இலையாகத்  தழையாக, உரமாக, மரமாக, நீ, உயிர் வாழ உள்ளிழுக்கும் உயிர்க்காற்றை உருவாக்கித் தருவேன். பூக்களும் பூங்காக்களும் புற்களும், புதருகளும், தந்து, எதையும் தின்றுவிடும் பூமியையே  வென்றுவிடும் புதிரான சக்தி நான். வெட்டிய அளவிற்கு நட்டவன் இல்லை. வெட்டிய எதுவும் அவன் நட்டதுமில்லை. நட்டவே இல்லை என்றால் நட்டம் எனக்கில்லை. என் பெயர் விதை. விதையுங்கள் என்பதன் சுருக்கம். இன்று முளைக்கப்பட்ட எல்லாமும், என்றோ புதைக்கப்பட்டவைதான். ஆதலால், என்னையும், புதைத்து விடுங்கள்.

சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்!

பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படுகொலை அது. அந்தக் கொலைக்கு எதிராக சமூகத்தின் ஒரு பகுதி கொந்தளித்த அதே வேளையில், சமூகத்தின் மற்றொரு பக்கம் அக்கொலையைக் கொண்டாடியது. நியாயம் கற்பித்தது. கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது சற்றும் தளராமல் போராடி, கொலைக்குக் காரணமானவர்களை விடுவித்துவிட்டது. இன்றும் இந்த சமூகத்தின் அழுகிப்போன பகுதி, தன் வெற்றியைக் கொண்டாடுகிறது. கொலையுண்டவனின் ஆன்மாவும், குடும்பமும் கொலை நடந்த நடுத்தெருவில் நீதியைத் தேடுகிறது. கொலைக்கான நியாயம் கற்பிப்பவர்கள் கவுசல்யாவின் கற்பை ஏலம் போடுகிறார்கள். அவரது மறுமணத்தைக் கேலிப் பொருளாக்கு கிறார்கள். கவுசல்யாவைக் கண்ணால்கூடக் கண்டிராதவர்களெல்லாம் அவரது உடல் வேட்கையை அளவெடுக்கிறார்கள். அழுகிய பிணத்தினும் கேவலமாக நாற்றம் வீசுகிறது அவர்களின் சொற்களிலிருந்து. இன்னும் சில நீதிமான்களோ, கவுசல்யாவைப் பெற்று, இருபது ஆண்டுகள் வளர்த்தவர்களின் உணர்வுகளைக் கண்டு வேதனையில் உழல்கிறார்கள். கவுசல்யா வின் பெற்றோர் மட்டுமே பெற்று வளர்த்தார்கள். சங்கரின் பெற்றோர்கள், அவரைப் பொம்மைக் கடையிலிருந்து இலவசமாக வாங்கி வந்திருக்கக் கூடும். சங்கருக்காகவும், அவரின் பெற்றோருக் காகவும் வருத்தப்பட நாங்கள் என்ன தாழ்த்தப் பட்டவர்களா? இல்லையே! நாங்கள் ஆண்டைகள், சிங்கங்கள், ஓநாய்கள், வெறி நாய்கள், மொத்தத்தில் சாதிப்பசிக்காகப் மனிதர்களைக் கொன்று பிணங்களைப் புசிக்கும் நவீன மிருகங்கள். இன்னொரு குழுவினரும் இருக்கிறார்கள். “பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாகக் குழந்தைகள் நடக்கலாமா?” என்று கேட்கும் நடுநிலைத் தராசுகள் அவர்கள். “பாராட்டி சீராட்டி வளர்த்த குழந்தையை ஆள் வைத்து வெட்டலாமா?” என்ற கேள்வியை யார் அவர்களிடம் எழுப்புவது? இந்தப் பழங்கதைகள் என்றும் தொடர்கதைகள் தான். அதனால் நாம் அதைப்பற்றி இங்கே பேசப்போவதில்லை. வேதனை என்னவெனில், சமூகநீதியைக் காப்பாற்ற அறைகூவல் விடுக்கும் பல கட்சிகள் தற்போது வாயே திறக்கவில்லை என்பதுதான். என்ன செய்வது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருக்கும் சூழலில், அவர்கள் வாயில் ஓட்டு எனும் திண்டுக்கல் பூட்டு மாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். அங்கே அரியாசனத்தில் பசுவின் கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்கள் இல்லை. மாறாக ‘மனு’ நீதிச் சோழன்கள் இருக்கிறார்கள். கவுசல்யாவின் பெற்றோரும் கொலைகாரர்களும் ஒரு மாதமாகத் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் இருந்தும், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்கிறார்கள். இனிமேல் நாட்டு மக்கள் அனைவரது தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆவணப்படுத்திவிடலாம். இல்லையேல் பெரும்பான்மைச் சதிச்செயல்கள் குற்றம் என நிரூபிக்கப்படாமலே போய்விடக்கூடும். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பியிருந்தால், ‘’உங்களுக்குச் சம்பந்தம் இல்லாத ஆட்களுடன் ஒரு மாதம் அப்படி என்னதான் பேசினீர்கள்? எதற்காகப் பேசினீர்கள்?’’ என்றாவது ஒரு வார்த்தை அந்தச் சதிகாரர்களிடம் கனம் கோர்ட்டார் அவர்கள் கேட்டிருக்க லாம். அல்லது, எந்த ஒரு கொலை வழக்கையும் விசாரிக்கும்போது கொலைக்கான காரணம் (Motive) என்ற ஒன்று முக்கியக் காரணியாக எடுத்துக்கொள்ளப்படும். அதையாவது கருத்தில்கொண்டு, “நடுரோட்டில் மக்கள் மத்தியில் வைத்துக் கொடூரமாகக் கொள்ளும் அளவிற்கு, சங்கருக்கும் உங்களுக்கும் என்ன முன் பகையா? சொத்துத் தகறாரா? அதிகாரப் போட்டியா? தொழில் போட்டியா? அல்லது குறைந்தபட்சம் வாய்க்கால் தகராறாவது உண்டா?” எனக் கேட்டிருக்கலாம். அதையெல்லாம் விசாரிப்பது ‘ஹைகோர்ட்’ கடமையில் வராது என நினைக்கிறேன். சரி, கொலைகாரர்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையைக் குறைக்க ‘ஹைகோர்ட்’ சொல்லும் காரணம் என்ன? ‘அவர்கள் இளம் வயதுக்காரர்கள். இதற்கு முன்பு அவர்கள்மீது கொடூரக் குற்ற வழக்குகள் எதுவும் இல்லை’ என்பதுதான். இதனால், இந்த ‘ஹைகோர்ட்’ அறிவிப்பது என்னவென்றால், கொடூரக் குற்றச் செயல்களை இளம் வயது நபர்களை வைத்து அரங்கேற்றுங்கள். அவர்களும் முதல் தலைமுறைக் குற்றவாளிகளாக இருக்கட்டும். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் நிர்பயா வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்டு பதினாறு, பதினேழு வயது இளைஞர் களை வைத்துக் காரியத்தை முடித்தால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் புனிதர்களாக வெளியே வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பேட்டரி வாங்கித் தந்த காரணத் துக்காக, கால் நூற்றாண் டுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் சிறை சென்ற போது அவருக்கு இளவயதுதான். கொலைச் சதித்திட்டம் தீட்டத்தான் கவுசல்யாவின் பெற்றோர் போனில் பேசினார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றால், பேரறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதும் நிரூபிக்கப்படாத ஒன்றுதானே?! பெயர் ஒன்றாக இருந்ததாலேயே குண்டு சாந்தனுக்காகச் சிறையில் வாடும் சாந்தன், உள்ளிட்ட எழுவருமே அன்றைக்கு இளம் வயதினர்தான். அவர்கள் மீதும் இதற்கு முன்பாக எந்த ஒரு கொடூரக் குற்றமும் பதிவாகி இருக்கவில்லை. இத்தனைக்கும் “நான் பொய் வாக்குமூலம் எழுதித்தான் அவரைக் குற்றவாளி ஆக்கினேன்” என்று விசாரணை அதிகாரியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தபின்னும், ஒரு தொலைக்காட்சி விவாத முடிவில், வழக்கில் தொடர்புடைய சாந்தன் இருக்குமிடம் தெரிந்தபோது, ஒரு அப்பாவி சாந்தன் தண்டனை அனுபவிப்பதை அறிந்தும், தங்கள் விசாரணை இலட்சணம் பல்லிளித்துவிடக்கூடாது என்பதற்காக, வழக்கில் தொடர்புடைய சாந்தனைச் சுட்டுக் கொன்றதை விசாரணை அதிகாரிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டபோதும், எந்த ‘ஹைகோர்ட்டும்’ அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வில்லை. ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றகள், நீதிபதிகளுக்கும் தனித்தனியே சட்ட நூல்கள் இருக்கிறது போலும். தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளை யாரும் விமர்சிக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள், விண்ணிலிருந்து வந்த தேவ மைந்தர்கள். கடவுளின் அவதாரங்கள். காலம் காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டதெல்லாம், அவதாரங் களின் மீது கேள்விகளையோ, விமர்சனங் களையோ எழுப்பக்கூடாது என்பதுதானே.. யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் ஆணவக் கொலைகள் அங்கீகரிக்கப்படலாம். கொடூரக் குற்றங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படலாம். கொலை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படலாம். அதை வேடிக்கை பார்த்து ‘உச்’ கொட்ட மட்டுமே நமக்கு அனுமதி வழங்கப்படலாம். மற்றபடி… சாதிக்கு ஒரு நீதி! நீதிக்குதான் இல்லை நாதி!