தலைகீழாகத்தான் குதிப்பேன்

தலைகீழாகத்தான் குதிப்பேன்

அரசியல் நையாண்டி: ஆர்னிகா நாசர் உதயசங்கர் ஸ்கூட்டி பெப்பை ஓட்டியபடி அந்த குறுக்குச் சந்துக்குள் புகுந்தான். எதிரில் ஒரு இ-பைக் மோதுவது போல வந்து சறுக்கி நின்றது. இ-பைக்கில் அமர்ந்திருந்த சீனிவாசன் இரைந்தான். “உனக்கு என்னோட மோதுரதே பழக்கமாகிப் போச்சு உதயா!” மோத வந்தது நீயா நானா?” இருவரும் ஓரமாய் ஒதுங்கி அவரவர் வாகனங்களை ஸ்டாண்டிட்டனர். “அப்புறம்?” “ரொம்ப சந்தோஷமா இருக்க போல சீனி…” “ஹிஹி… ஆமா… எங்க மோதானியின் சாதனைகளை நினைச்சா எனக்கே மார்பளவு 65 இஞ்ச் ஆகுது!” “வெடிச்சிறப் போகுது நெஞ்சு. நாட்டை பிடித்த ஒன்பதரை நாட்டுச் சனி உங்க மோதானி. பீடையைக் கைகழுவ நேரம் பார்த்துக்கிட்டு இருக்கம்!” “அதெல்லாம் நடக்காது. மோதானியின் டாப்கிளாஸ் சாதனைகளில் ஒன்றாக சிந்தியாவின் பெயர் மாற்றம் இருக்கப் போகிறது. ‘சாரத்’ எவ்வளவு இனிமையான பெயர்!” “இருபத்தெட்டு எதிர்க்கட்சிகள் ஒன்னு கூடி கூட்டணி அமைச்சிருக்கிறது, உங்க மோதானிக்கு பீதியைக் கிளப்பிருச்சு. பிரதீப்ஷாவுக்கு அல்லு விட்ருச்சு. உங்க பிஎஸ்எஸ்ஸுக்கு பேதியை பிடுங்கி விட்ருச்சு!” “ஹ… ‘சாரத்’ என்கிற பெயர் மாற்றத்துக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம் ஒளிந்திருக்கிறது உதயா!” “அப்படி என்ன ராஜதந்திரம்?” “மோதானி அரசு 105 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என உபிகள் புலம்புகின்றனர். கிருணாச்சலசத்தில் கோனா நுழைஞ்சதுக்குப் போய் வாயிலும் வயிற்றிலும் லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க. சிந்தியான்னு பெயர் இருக்கும் போதுதானே கடன் வாங்கினோம்? இப்ப எங்க பெயர் சாரத் எங்களுக்கும் சிந்தியா வாங்ன கடனுக்கும் துளி சம்பந்தமில்லை என கடன் கொடுத்தவனை விரட்டுவோம். சிந்தியால சில இடங்களை புடிச்சோமா சாரத்தில் சில இடங்களை பிடிச்சோமான்னு கன்ப்யூஸ் ஆகி பிடிச்ச இடத்தை விட்ருவான் கோனாக்காரன்!” “அரைகுறை மங்கியாக இருந்த நீ முழு மங்கியா மாறிட்ட சீனி!’ “சாரத்’ பெயர் மாற்றத்துக்கு அறிவியல்பூர்வமான காரணம் ஒன்னு சொல்றேன் கேளு உதயா!” “சொல்லு…” “நிலாவுக்குப் போன கிந்தராயன் விண்வெளில இருந்து பாத்தப்போ சிந்தியா நாடு நாடு ‘சாரத்’ என்கிற எழுத்து வடிவில் தெரிஞ்சிருக்கு, ‘சாரத்’ என்கிற சொல்லில் சா-ர-த் எனும் மூன்று எழுத்துகள் உள்ளன. ‘சா’ என்பது மித்வோ குணம். ‘ர’ ரஹிஜோ குணம். ‘த்’ என்பது தங்மோ குணம். இந்த மூன்று குணங்களும் இணைந்த ‘சா—ர-த்’ என்பது சக்தி வாய்ந்த மந்திரம். ஒருமுறை கான்ஸ்டீன் விண்வெளி ஆராய்ச்சி செய்யும்போது ‘சாரத்’ எனும் ஒலி பிரபஞ்சத்தில் இருந்து கேட்பதை உணர்ந்தார். ‘சாரத்’ என ஒருமுறை சொல்வது கிக் வேதத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஆயிரம் முறை சொல்வற்குச் சமம். ‘சாரத்’ என்று சொன்னால் நீண்ட நாள் நோய் குணமாகும். கடன் பிரச்சனை தீரும். பஸ்ஸில் போனால் வாந்தி வராது, ஏடிஎம்மில் நீங்கள் எத்தனை முறை பணம் எடுத்தாலும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறையாது.” “அட பைத்தியக்கார பக்கி… மங்கித்தனம் தொத்து நோயா? படிச்சவன், படிக்காதவன், சயின்டிஸ்ட், கிஸ்ரோ டைரக்டர், ஜட்ஜ், போலீஸ்காரன், இப்படி எல்லார்கிட்டயும் தாறுமாறா பரவி இருக்கு. துட்லரின் பெர்மனி ஆகிக்கிட்டு இருக்கு சிந்தியா…” “எங்களைக் கழுவிக் ழுவி ஊத்தினாலும் துளி வெக்கப்பட மாட்டோம். தொடர்ந்து மங்கிதனம் செய்வோம்!” “சாரத்னு பெயர் மாத்தறதுக்கு பதில் ‘வல்லரசு’ என்று பெயர் மாத்திடுங்க. நாட்டை வல்லரசு ஆக்கிட்டோம்னு கும்மாளம் போடலாம் நீங்க!” “வல்லரசு சாரத்’-னு பெயர் மாத்திட்டா போச்சு!” “பெயர் மாற்றத்துக்கு 15000 முதல் 20000 கோடி ரூபாய் வரை செலவாகும்!” “ஆனா ஆகிட்டுப் போகுது டிலோன் ஸ்ரீபங்கானும், திர்மா ஸயான்மர்ன்னும், கிர்ஷியா டர்ரான்னும், டயாம் சேய்லாந்துன்னும், டோலந்து பெதர்லாந்துன்னும், பம்பூச்சியா லம்போடியான்னும், காடீசியா டும்பாவேன்னும் பெயர் மாறிக்கலையா?” “நீ சொன்ன சில நாடுகள் நியாயமான காரணங்களுக்காகத் தங்கள் பெயர்களை மாற்றி இருக்கலாம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மோதானி செய்த அலங்கோலங்களைப் பட்டியலிடுகிறேன் கேள். நாணயமதிப்பிழப்பு நடவடிக்கை 13000கோடி செலவு. மைரோனா ஊரடங்கால் நூற்றுக்கணக்கானோர் மரணம். வாழ்வுரிமை திருத்த சட்டத்தால் கிஸ்ஸாம் அகதி மாநிலம் ஆயிற்று. கிஸ்லாமிய பெண்களின் குடும்ப வாழ்க்கையை சீரழிக்க பத்தலாக் சட்டம். கார்ப்பரேட்களுக்கு 14,5லட்சம் கோடி கடன் தள்ளுபடி. பந்தி திணிப்பு. செத்துப் போன உமஸ்கிருதத்தை தலையில் வைத்து கூத்தாடுதல். கட்சி சொத்தை 6500கோடியாக பெருக்கியது. 90சதவீத கிரிமினல்களை லஞ்ச ஊழல் பேர்வழிகளை வைத்து கட்சி நடத்துதல். கட்சிதாவல் தடை சட்டத்தை கேலி கூத்தாக்கி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தல். மதவெறி இனவெறி அரசியல் பண்ணுதல். பணிப்பூர், தரியானா, ச.பி.,யில் இரத்தவெறியாட்டம். வேலைவாய்ப்பின்மை. விலைவாசி உயர்வு. டாலருக்கு நிகரான சிந்திய ரூபாய் மதிப்பு சரிவு. சுகாதார கட்டமைப்பின்மை. வடக்கத்தியர்களை தெற்கில் குடியமர்த்துவது. வங்கி ரயில்வே பணிகளில் கிமிழர்களை முழுமையாக புறக்கணித்தல். குலக்கல்வி திட்டத்தை அமுல்படுத்தல். இரண்டு சதவீத உயர்சாதி சிந்துகள் கால்களில் 140கோடி சிந்தியரை விழுந்து கிடக்க செய்தல். நீதிதுறையை பாவிமயமாக்குதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்… மோதானியின் ஒன்பதரை ஆண்டு ஆட்சி நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னே கொண்டு சென்றுவிட்டது. மோதானி எந்த அழிவு காரியம் செய்தாலும் அதனை ஆதரித்து பேசி எழுதுகிறீர்களே… இதனை தெரிந்து செய்கிறீர்களா, தெரியாமல் செய்கிறீர்களா?” “பேதர்களும் உயர்ஜாதி சிந்துகளும் ஒன்று. எங்களுக்கான ராஜா மோதானி. அவரை ஆதரிப்பதே எங்கள் உயிர்மூச்சு!” “சிந்தியாவை ‘சாரத்’ என மாற்றினால் என்னென்ன குழப்படிகள் நேரும் தெரியுமா? சிந்திய ரிசர்வ் வங்கி, சிந்திய தொழில்நுட்ப கழகம், சிந்திய ரயில்வே, சிந்தியா போஸ்ட், சிந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சிந்திய தேர்தல் ஆணையம், சிந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பெயர்களை மாற்ற வேண்டிவரும்!” “மாத்திட்டு போரோம்…” “பாஸ்போர்ட், பேஜார்அட்டை, பிங்பாங் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமை, சிண்டியன் கரன்ஸி இப்படி எல்லா விஷயங்களையும் பெயர் மாற்றவேண்டும்!”  “மாத்திட்டுப் போறோம்!” “எதிர்கட்சி கூட்டணி ‘சிண்டியா’ன்னு பேர் வச்சதினால ‘சாரத்’னு பேர் மாற்றம் செய்றீங்க சரி… நாளைக்கே எதிர்கட்சி கூட்டணி தங்களின் பெயரை ‘சாரத்’னு மாத்தி வச்சுக்கிட்டா என்ன பண்ணுவீங்க!” சிரித்தான் சீனிவாசன். சிரிப்பு ஹிஸ்டீரிகலாய் இருந்தது. கண்கள் கொடூரமாய் மின்னின. “கினாதன் ராஷ்டிரம் என மாற்றுவோம்…” “சீனி! ஒரு முக்கியமான விஷயத்தை உனக்கும் உன் சகமங்கிகளுக்கும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது. சிறுபான்மை மக்கள் இல்லாத சிந்தியா சாத்தியமே இல்லை. ஒரு கட்டத்தில் சிந்தியா ரஷ்யாபோல 28மாநிலங்களும் 8யூனியன் பிரதேசங்களும் தனித்தனி நாடுகளாய் சிதறி விடும். சோற்றுக்கும் தண்ணீருக்கும் மத்தியோப்பியர்கள் போல் அடித்துக் கொள்வோம். ஸ்ரீபங்கா போல திவாலாகி விடுவோம். தேர்தல் ஜனநாயகத்தை கிஜேபி ரத்து செய்துவிடும். சிந்தியாவோ சாரத்தோ கற்காலக் காட்டுமிராண்டிகள் நாடாகிவிடும். அப்படி ஒரு மோசமான சிந்தியாவை நம் மகன்களுக்கும் நம் பேரன் பேத்திகளுக்கும் விட்டுச் செல்லப் போகிறோமா?” “சும்மா பூச்சி காட்டாதே உதயா… ஒட்டுமொத்த சலேசியா கண்டமும் ‘அகண்ட சாரத்’ ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!” “கண்களை திறந்து கொண்டே அதளபாதாளத்தில் தலைகீழாய் விழுகிறீர்கள்!” “அப்படித்தான் விழுவோம் உதயா!” “உன் சீனிவாசன் என்கிற பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?” “அறுபது வருடங்களுக்கு முன் என் அப்பன் எனக்கு இந்தப் பெயரை வைத்து விட்டான்… அபிஷ்டு… பிரம்மஹத்தி… அசடு… நான் என் பெயரை கவர்மென்ட் கெஜட்ல குடுத்து மாத்திக்கப் போறேன்!” “புதுசா என்ன பெயர் வச்சுக்கப் போற?” “ரொம்பதூரம் போய்ட்டேன்… திரும்பி வர முடியாது… எங்களை மங்கி மங்கின்னுதானே கேலி பண்றீங்க… கேலி பண்ற பெயரையே வச்சுக்கிட்டா?” ‘மங்கின்னா லட்சக்கணக்கான மங்கிகளில் நீயும் ஒருவன் என்றாகிறது உன் தனித்தன்மை பாழாகுமே?” சீனிவாசனின் முகம் சூரியனித்தது. “இன்றிலிருந்து என் பெயர் கினாதன் மங்கி…” நூறுமுறை தனக்குள் சொல்லி பார்த்துக் கொண்டான், “ஆயிரம் நஷ்டங்கள் வந்தாலும் இனி என் பெயர் கினாதன் மங்கிதான்… கினுதர்மம் வாழ்க! பர்ணாசிரமம் வாழ்க! குலத்தொழில் வாழ்க வாழ்க!” மானசீகத்தில் லட்சம் மங்கிகள் கூடிக் குலவை ஒலி எழுப்பினர்.

வந்தே பாரத் வடை 

வந்தே பாரத் வடை 

நகைச்சுவைச் சிறுகதை குளித்து முடித்து வெளியே வந்தார் சின்னமலை. வயது 42. உயரம் 170 செமீ, மார்பளவு 40 அங்குலம். திராவிட நிறம், தூக்கி வாரப்பட்ட சொற்பக் கேசம், சகுனி கண்கள், மீசை இல்லாத சுயசவர முகம். பூஜையறைக்கு வந்தார். அனுமன் விக்கிரகம் முன் வந்து நின்று, அனுமன் சாலீஸா மந்திரத்தை ஓத ஆரம்பித்தார். “ஜெய ஹனுமானே! ஞானக் குணக்கடலே!உலகத்தின் ஒளியே வானரர் கோனே!ராம தூதனே! ஆற்றலின் வடிவமே!அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே…” தொடர்ந்து ஓதி முடித்தவுடன் தனக்குள் முணுமுணுத்தார் சின்னமலை. ‘ஜிலேபி கட்சிக்கு மாநிலத் தலைவராக, கும்பிடுற சாமியையே மாத்த வேண்டி இருக்கு பாரேன்.. முனியப்பனைக் கும்பிட்டு, சாராயம் குடிச்சிட்டு கறிவிருந்து சாப்ட்டுட்டு மல்லாக்ற சுகத்தை விட்டு ரெண்டு வருஷமாகுது. சில சமயங்களில் கட்சில இருக்கோமா அல்லது ட்ராமா கொட்டகைக்குள்ள இருக்கோமான்னு சந்தேகம் வந்திருது. நொடிக்கு நொடி வேஷத்தை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியதாயிருக்கு.. “ யாரோ வரும் சத்தம் கேட்கவே, (சத்தமாக) “ஜெய் பஜ்ரங் பலி!” உதவியாளன் அண்டா மணி வந்தான். உருண்டு திரண்ட அவன், சபாரி அணிந்திருந்தான். நெற்றியில் விபூதிப் பட்டை. நடுவில் குங்குமம். “காலை வணக்கம் தலைவரே” “காலை வணக்கம் மணி!” “தலைவரே.. எனக்கொரு சந்தேகம்” “கேளுடா..” “நீங்க நிஜமாவே ஐஎஸ் ஐஎஸ்ஸா?” “அடேய்.. அது ஐஎஸ் ஐஎஸ் இல்லடா.. ஐபிஎஸ்!” “என்னவோ ஒன்னு தலைவரே. என் சந்தேகம் அது இல்ல. ஐபிஎஸ் ஆகுறதுக்கு நீங்களே பரிட்சை  எழுதுனீங்களா? இல்ல உங்களுக்கு பதில் ஆள் வச்சு எழுதுனீங்களா?” “டேய் அதிகப் பிரசங்கி.. என்னடா உளர்ற?” “இல்ல தலைவரே.. பல சமயங்கள்ல நீங்க எட்டாம் கிளாஸ் அஞ்சு தடவை பெயிலானவன் மாதிரியே பேசுறீங்க..” “ஐபிஎஸ் சின்னமலை வேற.. ஜிலேபி கட்சித் தலைவர் சின்னமலை வேற.. காசுக்காக, புகழுக்காக, பதவிக்காக நடத்துற டிராமாடா இது..” “அது சரி, ஐபிஎஸ் வேலையை எதுக்குண்ணே ரிஸைன் பண்ணுனீங்க?” “ஜிலேபி கட்சிக்குத் தலைவர் ஆகுறதுக்குதான்?” “அதான் தலைவரே கேக்கறேன்.. தோள் பட்டைல நூல் பட்டை மாட்டுன ஆளுங்க இருக்கும்போது உங்களை எப்படி செலக்ட் பண்ணாங்க..?” “அப்பதானடா ஆண்ட பரம்பரை ஆளுங்களை ஏமாத்த முடியும்?” “என்ன தலைவரே சொல்றிங்க? ஏமாத்தவா?” “ஆமா.. தோள்ல கயிறு மாட்டினவங்க சாய்ஸ் எப்படின்னாலும் ஜிலேபி கட்சிதான். ஆனா கைல கலர் காலரா கயிறு கட்டுற ஆளுங்கள கவர் பண்ணனும்னு சொல்லி எனக்குக் கொடுக்கப்பட்ட அஜெண்டா இது..” “அப்படின்னா எல்லாமே டுபாக்கூரா தலைவரே..” “வாயைத் திறந்தா வர்றது பூராவுமே வண்டி வண்டியா டுபாக்கூர்தான்..” “கன்னிமாரா லைப்ரரியைக் கரைச்சுக் குடிச்சது?” “டுபாக்ஸ்!” “ரெண்டு லட்சம் கேஸ் போட்டது?” “டுபாக்ஸோ டுபாக்ஸ்.. என்னடா மணி.. நான் பேசுறதை வீடியோ எதுவும் எடுக்கறியா?” “திருட்டு விடியோ பிளாக்மெயில் எல்லாம் உங்க வேலை தலைவரே.. சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது!” “என் தினப்படி ஸ்பான்ஸர்கள் எங்கடா?” “வரவேற்பறைல காத்துக்கிட்டு இருக்காங்க..” “அண்ணே! நீங்க வாக்கிங் போகக் கேரவன் வேணும்னு கேட்டீங்களே.. இந்தாங்க சாவி. வண்டி வெளியே நிக்குது..” – ஒரு ஸ்பான்ஸர். “கரன்ட் பில் கட்டிட்டேன்!’‘ “உங்க நாலு போன்களுக்கு ரீசார்ஜ் பண்ணிட்டேன்!” “வீட்டு வாடகை செட்டில் பண்ணிட்டேன்!” “உங்க ஒரு மாத பெட்ரோல் செலவை நான் பாத்துக்கிட்டேன்!” “இந்தாங்க நீங்க எங்க போனாலும் சோத்துக்கு கூப்பன்..” “ஒரு டஜன் ஜாக்கி ஜட்டி கேட்டீங்கள்ல.. இந்தாங்க..” “ஓகே ஓகே ஸ்பான்ஸர்ஸ். நீங்க எந்த அளவுக்கு எனக்கு ஸ்பான்ஸர் பண்ணுறீங்களோ, அந்த அளவுக்கு உங்கள் பித்தலாட்டங்களை எல்லாம் வாசிங் மெஷின்ல போட்டு கிளீன் பண்ணித் தரச் சொல்லி நம்ம மேலிடத்துக்கு ரெக்கமண்ட் பண்ணுவேன்..” “வாழ்க எங்க வார்ரூம் தலைவர் சின்னமலை!” “வாழ்க குபீர் கடிகாரம் சின்னமலை!” வாழ்க கோஷம் கேட்ட மகிழ்ச்சியில் செல்போனைத் திறந்த சின்னமலையின் முகம் சுருங்கியது. “டேய் மணி, ஒரு சிங்கம் வேணும்னு கேட்டு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருந்தம். ஆனா ஒரு கரடி பொம்மையை அனுப்பி ஏமாத்திட்டடாங்கன்னு மீம்ஸ் போட்ருக்காங்கடா..” “விடுங்க தலைவரே.. இதெல்லாம் அரசியல்ல ஜகஜம்தானே!” – அண்டா   மணி. தலைமை அலுவலகத்துக்குக் கேரவனில் கிளம்பினார் சின்னமலை. உடன் அல்லக்கைகள் மற்ற கார்களில் ஏறிக்கொண்டனர். தலைமை அலுவலகத்தின் போர்டிகோவில் போய் வண்டி நின்றது. போர்டிகோவுக்கு இடதுபக்கம் பத்தாயிரம் பேரும் வலதுபக்கம் பத்தாயிரம் பேரும் நின்றிருந்தனர். இடதுபக்கம் நின்றிருந்தோர். “கர்நாடக முதலமைச்சர் சின்னமலை வாழ்க!’‘ வலதுபக்கம் நின்றிருந்தோர் “தமிழ்நாடு முதலமைச்சர் சின்னமலை வாழ்க!” நடுவில் நின்ற கூட்டம், “கர்நாடக முதலமைச்சரும் சின்னமலைதான், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் சின்னமலைதான்!’‘ சின்னமலை அந்தக் கூட்டத்திடம் போனார் “என்னப்பா இதெல்லாம்?” ஒருவன் மார்புச் சட்டையை கிழித்து காட்டினான் “இதோ உங்க பெயரை பச்சை குத்தி வச்சிருக்கேன். நீங்க ஆட்சிக்கு வந்தாதான் ரெண்டு மாநிலத்தையும் காப்பாத்த முடியும்!” “நீங்க ரெண்டு மாநிலங்களுக்கும் முதல்வராக மறுத்தீங்கன்னா சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்!” “எங்க கோரிக்கையை டிமோஜி ஏத்துக்கிடனும்னு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை அங்கப் பிரதட்சணம் செய்வோம்!” “இருமாநிலங்களிலும் மதக்கலவரங்கள் ஏற்படுத்துவோம்!” “சரி, சரி. உங்க உணர்வுகளை மதிச்சு நான் ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆகிடறேன்..” “தலைவரே, அது எப்படி நீங்க ஒரே ஆள் ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆக முடியும்..? அதுவுமில்லாம, கர்நாடகாவுல போன மாசம்தான் தேர்தல் முடிஞ்சிருக்கு. அங்க உங்க ஜிலேபி கட்சி வாய்ல அல்வா திணிச்சிட்டாங்க. தமிழ்நாட்டுல ஏற்கனவே ஸ்ட்ராங்கா ஒரு ஆட்சி நடந்துட்டு இருக்கு. இன்னும் அவங்களுக்கு மூனு வருஷம் ஆட்சி இருக்கு. இதுல நீங்க எப்டி ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆகறது?” – அண்டா  மணி. “அடேய் அண்டா .. நம்ம டிமோஜியால முடியாதது எதுவுமே இல்லடா.. கர்நாடகா மார்க்கெட்ல எம்எல்ஏ என்ன விலைன்னு விசாரி.. நம்ம பாதுஷாகிட்ட சொல்லி பேசி முடிக்கச் சொல்லி நான் சிஎம்மாகிடுவேன். தமிழ்நாட்டுல எந்திரன் சனாவுக்கும் அழகி தனத்துக்கும் ஆபத்துன்னு சொல்லி நம்ம கொப்பர மணியாட்டி சாமிய விட்டு ஆட்சியைக் கலைச்சிட வேண்டியதுதான்.. அப்புறம் என்ன, நான்தான் டபிள் ஸ்டேட் சிஎம்!’‘ “அரசியல் அமைப்புச் சட்டத்துல இதுக்கெல்லாம் இடம் இருக்கா தலைவரே..” “அடேய்.. இங்கிலீஷ் மியூசிக் ரெண்டு டிஸ்ட்ரிக்ட்ல கலெக்டரா இல்லையா? அதையே உதாரணமா சொல்லி, சட்டத்தை நமக்குச் சாதகமா திருத்திக்கிட்டா போச்சு..” “நீங்க கன்னடிகான்னு கர்நாடகக்காரன் ஒத்துப்பானா? தமிழ்நாட்டுக்காரன் உங்களை ஏத்துப்பானா?” “அடேய்.. நம்ம டிமோஜி நினைச்சார்ன்னா, நைட்டு எட்டு மணிக்கு டிவில வந்து, உலகம் முழுக்க நடந்த எந்தத் தேர்தலும் செல்லாது அப்படின்னு சொல்லி, எல்லா நாட்டுலயும் ஆட்சியைக் கலைச்சிட்டு, ஒட்டு மொத்த பூமியையும் பாரத் தேஷ் அப்படின்னு அறிவிச்சுடுவார். ஒரே உலகம் ஒரே எலெக்சன்னு சொல்லித் தேர்தல் நடத்தி, அவர் பூமி பாரத் அதிபராவும் என்னை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கவர்னராகவும்கூட ஆக்கிடுவாரு.. ஏன்னா அவங்களை அடக்க என்னை மாதிரி ஐபிஎஸ் ஆபீசராலதான் முடியும்.. தெரிஞ்சுக்கடா அண்டா ..” “இதெல்லாம் நம்புற மாதிரியா தலைவரே இருக்கு..” சுற்றி நின்ற கூட்டம் கோஷமிடத் தொடங்கியது. “வந்தே பாரத் அதிபர் வாழ்க.. டபுள் கண்ட்ரி பிஎம் ஸ்மால் மவுண்டன் வாழ்க..!” “எனக்கு வெக்கமாயிருக்கு தலைவரே..” “அடேய்.. அதெல்லாம் உனக்கு. நான் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னமே சூடு சொரணை சுயகௌரவம் தன்மானம் வாய்மை உண்மை நேர்மை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டுதானே வந்தேன்.. இங்க பாரு, வந்தே பாரத் அப்படிங்கிறது ரயிலுக்கு வச்ச பேருன்னு கூடத் தெரியாம வாழ்க கோஷம் போடறாங்க.. இந்த மாதிரி ஆட்கள் இருக்கிற வரை, ஜிலேபி கட்சி எவ்வளவு வடை சுட்டு வித்தாலும் வியாபாரம் ஆகும்.. புரியுதா..?” “இந்தக் கண்றாவியெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியல தலைவரே..” “ஏத்துக்க முடியலைன்னா நீ போய் உன் குலத் தொழிலைக் கவனிடா.. இது கவர்னரின் உத்தரவு” கோபமாகக் கத்திய சின்னமலையைப் பிடித்து உலுக்கினான் அண்டா  மணி. “என்ன தலைவரே.. பகல் கனவா? யார் குலத்தொழில் பாக்கணும்? எல்லாரும் அவரவர் குலத்தொழில்தான் பாக்கணும்னா நீங்க எப்படி தலைவரே ஐபிஎஸ் ஆகியிருக்க முடியும்?” அண்டா மணியின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார் சின்னமலை. “மணியடிக்கிறவன் காலத்துக்கும் மணியடிக்கணும். மத்தவனெல்லாம் அவனுக்கு அடிமை சேவகம் பண்ணனும் அப்படின்னு சொல்ற நீங்க நியாயப்படி இப்போ என்ன பண்ணனும்? ஆடுதானே மேய்க்கணும்? அப்புறம் எப்படி மக்களை ஆள நினைக்கலாம்? இவ்வளவு கேவலமான புத்தி இருக்கிற உங்ககூட இனிமேலும் என்னால இருக்க முடியாது தலைவரே..” எப்படியாவது பெட்ரோமேக்ஸ் லைட் வாயை வாடகைக்கு விட்டுப் பிழைத்துக்கொள்ளலாம் என்று கனவு கண்ட சின்னமலையின் மேண்டிலை உடைத்த பெருமையுடன் அங்கிருந்து வெளியேறினான் மணி.

அரச விருந்தாளி

அரச விருந்தாளி

நகைச்சுவைச் சிறுகதை முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன், திருமணமானவன், மனைவி அவனை விட்டு விலகி நான்கு வருடங்கள் ஆகின்றன. மீன் அங்காடியில் மீன்களை வெட்டிச் சுத்தம்செய்து தரும் பணியைச் செய்து வந்தான். குரூர நகைச்சுவை உணர்வு கொண்டவன். மாஜிஸ்டிரேட், பழைய திரைப்பட நடிகர் உசிலைமணியின் சாயலில் இருந்தார். அரசு வழக்கறிஞர் எழுந்து, மெதுவாக நடந்து ராக்கப்பனிடம் வந்தார். “நீதானே நண்டு ராக்கப்பன்?” “நீதானே பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்?” “மரியாதை இல்லாம பேசக்கூடாது” “நீ மட்டும் பேசலாமா?” “சரிங்க நண்டு சார். விஷயத்துக்கு வருவோம்…” “வந்துக்க” “12.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு ஆர் ஒன் போலீஸ் ஸ்டேஷன் போனாயா?” “போனேன்” “போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்ன டானாக்காரருக்கு மீசையும் நாமமும் வரைஞ்சு விட்டியா?” “சமத்தா நின்னார். மீசையும் நாமமும் வரைஞ்சேன்” “போலீஸ்காரர்னு உனக்குத் துளியும் மரியாதை இல்லை” “சரியா வரையாம விட்ட மீசையை எச்சில் துப்பி அழிச்சேனே… அதைச் சொல்றீங்களா? நான் மீசையும் நாமமும் வரைஞ்சதை அந்தப் போலீஸ்காரர் செமத்தியா என்ஜாய் பண்ணினார் தெரியுமா?” “அடுத்து என்ன பண்ணின? ஸ்டேஷனுக்குள்ள திமுதிமுன்னு எருமைமாடு மாதிரி புகுந்த” “ஆமா… எவ்வளவு நேரம் வெளிவாசல் டானாக்காரர்கிட்டயே நிக்றது? உள்ளே நடந்தேன்” “கொண்டு வந்த மீன் கழிவுகளை ஸ்டேஷனுக்குள்ள விசிறியடிச்சே” “அஞ்சு கிலோ இருக்கும். கழிவுகளைக் கொட்ன பிறகு ஸ்டேஷன் பூராவும் கலீஜான நாத்தம்.. மீன் மார்க்கெட் அட்மாஸ்பியரை ஸ்டேஷனுக்குள்ள கொண்டு வந்திட்டேன்ல்ல..” “அட்ரோஸியஸ்..” “டைரக்டர் அட்லி பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..” “ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மரியசூசை ஓடிவந்து, ‘ஏய்யா மீன் கழிவுகளைக் கொட்டின?’ அப்டின்னு கோபமா கேட்டார்” “பழைய ரயில் கரி இன்ஜின் போலப் புசுபுசுத்தார்” “அவரை நீ என்ன பண்ணின?” “அவரை மடிலபோட்டு ரோரோன்னு கொஞ்சினேன்” “பொய்.. அவரைத் தாறுமாறா அடிச்சு, சட்டையைக் கிழிச்சு, தலைமுடியைப் பிய்ச்சு, அவர் மூஞ்சில சாணிய அப்பிட்ட… இன்ஸ்பெக்டர் ஐஸியூல இருந்து போன வாரம்தான் டிஸ்சார்ஜ் ஆனார். ஸ்டேஷன் ஆளுக வந்து உன்னையும் இன்ஸ்பெக்டரையும் விலக்கிவிடலைன்னா இன்ஸ்பெக்டர் அடி தாங்காமச் செத்திருப்பார்” “என்னை ரொம்பப் புகழாதிங்க பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்” “நீ வெளிவாசல் டானாக்காரரைத் தொந்திரவு பண்ணினது, இபிகோ 353 பிரிவின்படியும் இன்ஸ்பெக்டரைத் தாக்கிக் கொல்ல முயன்றது இபிகோ 307 பிரிவின்படியும் குற்றம். இதோட உன் க்ரைம் நின்னுச்சா? இல்லையே…” “எதையும் அரைகுறையா செய்றது என் பழக்கமில்லை” “ஸ்டேஷனுக்குள்ள இருந்த பெண் போலீஸைக் கட்டியணைச்சு இங்கீலிசு முத்தம் கொடுத்திருக்க.. பெண் போலீஸிடம் அத்து மீறி, பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணின. அந்தப் பொண்ணு வாங்கின முத்தத்தோட தப்பிச்சு ஓடிருச்சு” “அந்தப் பொம்பளை போலீஸ் எனக்குப் போதிய ஒத்துழைப்புத் தரல… ரேப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” “பணியில் இருந்த பெண் போலீஸைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது இபிகோ 376 பிரிவின்படி ஏழுவருடக் கடுங்காவலுக்குரிய குற்றம். பெண் போலீஸின் கழுத்துச் செயினைத் திருடினாய். இது இபிகோ 511 பிரிவின்படிக் குற்றம்..” “அந்தப் பெண் போலீஸ் மாடு கட்டுற கயிறு மாதிரி இருந்துச்சு. அந்தச் செயினை விலைக்கா வாங்கிப் போட்டிருக்கும்? லஞ்சம் வாங்கித்தான் போட்டிருக்கும். அதான் லஞ்சப் பொருளைப் பறிமுதல் பண்ணினேன்…” “உன் அடுத்த க்ரைம்.. எழுத்தர் மேஜைக்கு ஓடி அவரின் கம்ப்யூட்டரை உடைத்தாய். அவரின் மேஜையிலிருந்த கோப்புகளைக் கிழித்துப் போட்டாய்..” “போலீஸ் ஸ்டேஷன்கள் இல்லேன்னா ஆட்டோமாட்டிக்காக குற்றங்கள் குறைஞ்சிடும். ஒருத்தனும் கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டான். நேஷனல் பெர்மிட் லாரிக்காரன்கள் நிம்மதியா லாரி ஓட்டுவான்க. நடைபாதை வியாபாரிகள்கிட்ட கோயில் யானை மாதிரி பிச்சை கேட்பது நின்றுவிடும். கட்டப் பஞ்சாயத்துகள் நடக்காது..” மாஜிஸ்டிரேட் குறுக்கிட்டார். “விட்டா நீதிமன்றங்களும் தேவை இல்லைன்னு சொல்வ போல…” “நீதிமன்றங்கள்ல நேர்மை இருந்தா சாமானியர்களுக்கு எளிமையா நீதி கிடைச்சிரும். ஆனா அதனால நமக்கென்ன லாபம் மொதலாளி? இதுல தொழில் ரகசியம் என்னன்னா.. கி.. கி.. கி..” உசிலைமணியைப் போலவே மிமிக்ரி செய்து நீதிபதியை நக்கல் அடித்தான் ராக்கப்பன். “உன் பேச்சு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971இன் பிரிவு 2(சி), உன் துர்நடத்தைக்குத் தகுந்த தண்டனை தரும்” பப்ளிக் பிராஸிக்யூட்டர் தொடர்ந்தார். “காவல்நிலையப் பணிகளைச் செய்ய விடாதது, காவல்நிலைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தது ஆகியவை இபிகோ 425இன் படி குற்றம்” “குற்றம் குற்றம்னு ஏன் பினாத்றீங்க?” கத்தினான் ராக்கப்பன். “இதோட குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனின் குற்றங்கள் முடிவடையவில்லை. லாக்கப் ரூம் சாவியை எடுத்துத் திறந்து, லாக்கப்பில் இருந்த ஆறு கைதிகள் தப்பித்து ஓட உதவியிருக்கிறார்” “உங்கள்மீது சுமத்தப்படும் குற்றங்களை எல்லாம் ஒப்புக்கொள்கிறீர்களா ராக்கப்பன்?” “ஒத்துக்கிட்டா அவார்டா தரப் போறீங்க?” “நேரடியான பதில் தேவை…” ராக்கப்பன் சார்பாக வாதாடும் வக்கீல் எழுந்தார். “யோவ் தேங்காமூடி வக்கீல்… நீ எனக்காக வாதாடி இன்னும் தண்டனையைக் கூட்டிராத. கம்னு உக்காரு” மாஜிஸ்டிரேட் ஒருகணம் யோசித்தார். “மிஸ்டர் பிபி, அக்யூஸ்ட்டின் நடவடிக்கைகள் முழுக்க மனநிலை பிறழ்ந்த ஒருவரின் நடவடிக்கைகளாகத் தெரிகிறது. நாம் ஏன் இவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பக்கூடாது?” “ஏய் ஜட்ஜு.. யாரைப் பாத்து மென்டல்னு சொன்ன? நீதான் மெண்டல். நான் நல்லாத்தான் இருக்கேன்.. என்னால வேணுமின்னா பத்து பேரு மெண்டல் ஆவானுக” “போலீஸ் உன்னை அடித்தார்களா?” “அவனவன் பொண்டாட்டிக மேல இருந்த கோவத்தை என்னை அடிச்சுத் தீர்த்துக்கிட்டான்க. நான் வடிவேலுமாதிரி. என்னை ஆயிரம் அடி அடிச்சாலும் நல்லா இருந்துச்சு மசாஜ்னு எந்திரிச்சு வந்திருவேன்..” “உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது” “நான் பரிதாபப்படச் சொன்னேனா? நீ உன் வேலையப் பாரு மாஜிஸ்..” “உன் தண்டனையைக் குறைக்கலாமா?” “எதுக்கு? இபிகோ என்ன சொல்லுதோ அந்த தண்டனைகளை என் மீது விதிச்சிட்டுப் போ..” மாஜிஸ்டிரேட் தன் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “இபிகோ 353, 376, 425, 511 மற்றும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2(சி)இன்படி குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனுக்கு மொத்தமாக 17 வருடக் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அபராதம் கட்டவில்லை என்றால் கூடுதலாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை…” “டாங்ஸ் மாஜிஸ் செல்லாக்குட்டி” “உனக்கு அப்பீல் செய்ய அவகாசம் வேண்டுமா? சொந்த ஜாமீன் தரட்டுமா?” “அய்ய.. நேரா என்னைப் புழலுக்கு அனுப்பு அம்மணி..” *** புழல் சிறைச்சாலைக்குள் நுழைந்தான் ராக்கப்பன். “என்னய்யா… நுணலும் தன் வாயால கெடும் என்பதுபோல, குற்றங்களை எல்லாம் பெருமையா ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு வந்திட்ட?” என்றார் வார்டன். “நான் போட்டு வைத்த ஜெயில் திட்டம் ஓகே கண்மணி” பாடினான் ராக்கப்பன். “என்னது.. திட்டம் போட்டியா?” “ஆமா.. திட்டம்தான். மூன்று வேளை ராஜ உணவு- வாரத்திற்கு ஒரு புது சினிமா- மாதம் ஒருமுறை மனைவியுடன் மூன்று மணிநேரம்- செல்போன் இன்கம்மிங் கால் வசதி- ஆறுமாதத்துக்கு ஒரு வாரம் பரோல்- ஏசி அறை ஈரோப்பியன் கிளாசெட்டுடன். சிறைக்குள் கிடைக்கும் வசதி வாய்ப்பெல்லாம், மாதம் நாப்பதாயிரம் செலவு பண்ணினாலும் கிடைக்காது. தினம் மீன்வெட்டிச் சுத்தப்படுத்திக் கொடுத்தா பிச்சைக்காசு இருபது முப்பது ரூபாதான் கிடைக்கும். அதனால திட்டம் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்து, வெரைட்டி வெரைட்டியா க்ரைம் செய்து கைதாகிவிட்டேன். அடுத்த 15-18 வருஷத்துக்கு நான் மாமியார் வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை.. செம என்ஜாய் கரோதான்” வார்டன் தோள்களைக் குலுக்கி அங்கலாய்த்தார். “அட கிறுக்குப் பயலே.. எனி ஹவ், அரச விருந்தாளிக்கு என் கண்ணிய வரவேற்பு..” வெல்கம் ட்ரிங்க்காகக் கொடுக்கப்பட்ட மட்டன் சூப்பைக் குடித்தபடி கண் சிமிட்டிய ராக்கப்பன் சொன்னான், “சுதந்திர தினத்திற்கு பீஃப் பிரியாணி போட்ருங்க..”

நரகவாய் மோகன்

நரகவாய் மோகன்

அரசியல் நையாண்டிச் சிறுகதை ஸ்கூட்டி பெப்பில் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே தனது பத்து வயது மகனை உட்கார வைத்துக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்தார் பாலகணேஷ். “எங்க போறோம் பாலகணேஷ்?” மகன் மோகன்ராஜா வினவினான். தந்தையைப் பெயர் சொல்லிதான் அழைப்பான். சகமனிதர்களை, புழுக்களைப் பார்ப்பது போலத்தான் பார்ப்பான். வெண்கலக் குரல். “சும்மா இங்க பக்கத்துல என் பிரண்டு வீட்டுக்கு!” “பொய் சொல்ற. நீயும் உன் மனைவியும் பேசுறதை உங்க பெட்டுக்கு அடில படுத்திருந்து முழுசா ஒட்டுக் கேட்டுட்டேன்!” “உன் க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுதே ராஜா?” “உன் டிக்ஷனரிலதான் நான் செய்றதுக்கு க்ரைம் என்று பெயர். என் டிக்ஷனரில என் செயல்களுக்கு சாகசம் என்ற பொருள் இருக்கிறது!” “வாயை மூடிக்கிட்டு வா. ஸைக்காலஜிஸ்ட் பார்ப்போம்..” “வண்டியை ஆக்ஸிடென்ட் பண்ணிடுவேன்” “மிரட்டாம கம்முன்னு வா. உன் சாகசங்களை ஸைக்காலஜிஸ்ட் முழுசா தெரிஞ்சிக்கிட்டு உனக்கு அவார்டும் ரிவார்டும் கொடுக்கட்டும்!” “ஸைக்காலஜிஸ்ட்டைப் பாக்கறதில எனக்கொன்னும் பயமே இல்லை. போங்க அவனைப் பாத்துப் பேசி மல்லாத்திறலாம்!” கிளினிக்கின் முன்புறம் பத்து இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மூன்று இருக்கைகளில் போய் அமர்ந்தனர். ஆறாவது ஏழாவது இருக்கையில் ஒரு தாயும் ஒரு 4 வயது மகளும் அமர்ந்திருந்தனர். அந்தச் சிறுமியைப் பார்த்து, காது வரை இளித்தான் மோகன்ராஜா. “உனக்குப் பெண்கள் என்றாலே பிடிக்காதே! அந்தச் சிறுமியைப் பார்த்து ஏன் இளிக்கிறாய்?” “பிடித்த அடிமையிடம் எஜமானன் பல்லிளிக்கத்தான் செய்வான். சதா ஏன்ய்யா என்னையே நோட் பண்ணிக்கிட்டு இருக்க? உருப்புட்டுருவ.. தக்காளி..” உள்ளே அழைக்கப்பட்டனர். மருத்துவர் சுழலும் இருக்கையில் அமர்ந்திருந்தார். வயது 60. அறிவுஜீவிக் கண்கள். உள்ளே நடந்து வரும் தாய், தந்தை, மகனை அவதானித்தார். சிறுவன் முகமது பின் துக்ளக் படத்தில் சோ குதித்துக் குதித்து நடந்து வருவது போல நடந்து வந்தான். ‘இந்த கிளினிக் என்ன விலை? ஒரே செக்கில் ஃபுல் அமவுன்டை செட்டில் பண்ணிருவேன்’ என்கிற தோரணை சிறுவனிடமிருந்து வெளிப்பட்டது.“உட்காருங்கள்… உங்க பையனுக்குத்தானே பிரச்சனை?” “ஆமா சார்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” “கருவாடு நாறத்தானே செய்யும்!” “இவன் எங்கள் ஒரே மகன். இவனின் பெயர் மோகன்ராஜா. வயது பத்து. ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். இவன் ஆயிரக்கணக்கான நெகடிவ் குணங்களின் வேர் ஹவுஸ்…” “என்னென்ன பண்ணுகிறான்?” “வாயைத் திறந்தால் பொய்.. லாஜிக்கே பார்க்கமாட்டான். எதிராளி நம்புறான், நம்ப மாட்டிங்கிறான் என்பது பற்றியெல்லாம் துளியும் கவலைப்பட மாட்டான்!” “இவன் சொன்ன பொய்களில் பெஸ்ட் பத்து பொய்களைச் சொல்லுங்கள் கேப்பம்..” “ஒருநாள் மோகன் ராஜா தன் நண்பர்களிடம் ‘நண்பாஸ்! ஒரு நாள் பக்கத்துல இருக்ற காட்டுக்கு, தனியா விளையாடப் போய்ட்டேன். ஒரு டைனசார் குட்டி கிடைச்சது. வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அம்மா பாத்துட்டு பதறினாள். டைனசார் குட்டியை வீட்டுல வளர்க்கிறது படு ஆபத்து என்றாள். திரும்ப டைனோ குட்டியைக் காட்டுல கொண்டுபோய் விட்டுட்டேன்’ என்றான். இது ஒரு பொய்!” மோகன்ராஜாவின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார் மனநல நிபுணர். “கப்ஸா மன்னன்டா நீ!” மோகன்ராஜா குரோதமாக முறைத்தான். “திடீரென்று ஒருநாள் சர்டிபிகேட்டைத் தூக்கிட்டு வந்து எல்லாத்துகிட்டயும் காண்பிச்சான். உலக விஞ்ஞானங்கள் அனைத்திலும் விசேஷ பட்டப்படிப்பு படித்து முடித்ததாக ஒரு சான்றிதழ். அந்தப் பட்டப்படிப்பை ஆறு வயதில் அமெரிக்காவில் படித்து முடித்தானாம். யாராவது அந்தச் சான்றிதழ் பற்றிச் சந்தேகப்பட்டால் ஃபைன் போடுவேன் என மிரட்டுகிறான்!” “ஜித்தன்டா நீ!” “எங்க மகனுக்கு ஒரே ஒரு ஃபிரண்டுதான் இருக்கான். அவன் பெயர் அமர்ஜித். ஒருதடவை இவன்க ரெண்டு பேரும் சேர்ந்து தெருநாய்களுக்கு விஷம் வச்சு சுமார் 22 நாய்களைக் கொன்னுட்டான்க. ஒரு தடவை இவன்க மொட்டை மாடில படுத்திருந்தப்ப திருடன் வந்து இவன்களைக் காயப்படுத்திட்டான்னு சீன் போட்டு தங்களுக்கு சிம்பதி வேவ் கிரியேட் பண்ணாங்க!” “க்ரைம் ட்வின்ஸ்..” “இவன்க ரெண்டு பேரும் ஸ்கூல் பசங்க கிட்டயிருக்ற எல்லா சாமான்களையும் திருடி அஜித், அஸ்ரானின்ற இரண்டு பணக்காரப் பசங்ககிட்ட ஒப்படைச்சிருவான்க. டீச்சர்களையும் பிரின்சிபலையும் கூட இவர்கள் விடுவதில்லை..” “மலைக் கள்ளன் பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்குக் கொடுப்பான். இவர்கள் ஏழைகளிடம் திருடி பணக்காரர்களிடம் தருகிறார்கள். சபாஷ் என்னதொரு கான்ட்ராஸ்ட்..!” “நான்கு வயதில் ரோடுரோடாக சமோசா விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றியதாக புருடா விடுவான் சக சிறுவர்களிடம்..” “சமோசா பாய்!” “மோகன் ராஜாவுக்கு மொள்ளமாரித்தனங்களை அமர்ஜித் சொல்லித் தருகிறானா? அல்லது அமர்ஜித்துக்கு மோகன்ராஜா சொல்லித் தருகிறானா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒருநாள் ரெண்டு பேரும் சைக்கிள் ஓட்டிவந்து பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர் மீது காயப்படுத்திவிட்டார்கள். கேட்டால், சிறுவர்கள் சைக்கிள் ஓட்டினால் எட்டு பாதசாரிகள் நான்கு பிளாட்பாரவாசிகள் காயப்படத்தான் செய்வார்கள் என சால்ஜாப்பு கூறுகின்றனர். உயிர்களைத் துன்புறுத்தல் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. வண்ணத்துப்பூச்சியை இறக்கைகளை பிய்த்துப் போடுவார்கள். ஓணான்களை சுருக்கில் கட்டி மின்கம்பிகளில் தொங்கவிட்டுச் சாகடிப்பர்கள். கோழிகளைத் துரத்தித் துரத்திக் கல்லால் அடிப்பார்கள்..” மோகன்ராஜா மனநல மருத்துவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தான். ‘இருடி பாக்கெட்ல கவட்டை வச்சிருக்கேன். கவட்டையை இழுத்து உன் மண்டையை உடைக்கிறேன்..’ என நினைத்துக்கொண்டான். “பக்கத்து வீட்டுச் சிறுமியை வச்சு தனக்கு மேக்கப் போட்டுக்குவான். ஒரு நாளைக்கு ஆறு தடவை ட்ரஸ் மாத்திப்பான். கேமிரான்னாலே அவனுக்குக் கொள்ளைக் கிறுக்கு. திறந்தவாய் மூடாம பார்ப்பான். விதவிதமா போஸ் கொடுப்பான். ஊர் சுத்த்றதில நாட்டம் அதிகம். காலைல காளான்தான் சாப்பிடுவான்!” “எனக்கு எல்லாமே புரியுது!” “தனியா நின்னு என்ன வேணாலும் பேசுவான். ஆனா க்ளாஸ் ரூம்ல டீச்சர் ஒரு கேள்வி கேட்டா, தொடை நடுங்கி ஒன்னுக்குப் போய்விடுவான்!” “ஒன்பாத் ரூம் ஃபெல்லோ!” “யாரையாவது விரும்பிக் கட்டிப்பிடிச்சான் என்றாலோ கைகுலுக்கினான் என்றாலோ கட்டிப் பிடிக்கப்பட்டவர், கைகுலுக்கப்பட்டவர் அடுத்த ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு விபத்தில் காயப்படுவார்!” “டாக்டர்! உங்க கையைக் குலுக்கவா?கட்டிப் பிடிக்கவா?” கை நீட்டியபடி வந்தான் மோகன்ராஜா. “கொஞ்சம் அமைதியா இரு ஸ்மால் பாய்..” “என்ன?” “என் மகன் அவனோட ஃப்ரண்ட்ஸ் அமர்ஜித், அஜித், அஸ்ரானி நால்வரும் சிஎல்ஓ என்கிற தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்றவர்களாம்!” “சிஎல்ஓ என்றால்?” “சைல்ட் லிபரேஷன் ஆர்கனைஸேஷன் எனப் பொருள்!” “அதன் நோக்கம்?” “பெற்றோரிடமிருந்து, ஆசிரியரிடமிருந்து, குறிப்பாக மூத்த தலைமுறையினரிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பு அது. குழந்தைகள் சுயநலமாய் வளர வேண்டும் என்பது அதன் அடிப்படைக் குறிக்கோள்!” மோகன்ராஜாவைப் பக்கத்தில் அழைத்து, கண், காது, மூக்கு, வாய், நாடித் துடிப்பு, இதஉலகநாடுகளைச்ஆகியவற்றைப் பரிசோதித்தார் மனநல நிபுணர். “நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?” “நான் சூப்பர் மனிதன் நீங்கள் எல்லாம் ஆட்டுப் புழுக்கைகள்!” “வேற?” “உன் வேலை மயிரைப் பாத்திட்டு போ. மீறினா கொன்னுடுவோம்“ “எங்கள் மகனுக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்துகொண்டீர்களா டாக்டர்?” “ஓ! உங்க மகனுக்கு இருக்கும் மனநோயின் பெயர் ‘ஜிடிமோ ஸின்ட்ரோம்’’ ‘நியோஹிட்லரின் ஹார்மோன்’ மிதமிஞ்சிய சுரப்பும் உங்க மகனின் மனநோய்க்கு ஒரு காரணம். சிஎல்ஓ அமைப்பும் மூன்று ‘அ’ நண்பர்களும் உங்கள் மகனின் துர்நடத்தைக்கு முக்கியக் காரணங்கள். ஜிடிமோ ஸின்ட்ரோம் கவர்ச்சிகரமானது; ஆனால் நயவஞ்சகமானது. இந்த ஸின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள். இறுதி வீழ்ச்சி படுபயங்கரமாக இருக்கும். சிறிது காலமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஜிடிமோ ஸின்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளனர்..” “என் மகனின் மனநோயைக் குணப்படுத்த மருந்துகள் உள்ளனவா?” “எதுவும் செய்யாமல் உங்கள் மகனை அவன் போக்கில் விட்டுவிட்டால் இரண்டு விஷயங்கள் நடக்கும்!” “என்ன?” “ஒருநாள் உங்கள் மகன் நாடாள்பவனாக தனிவிமானத்தில் உலகநாடுகளைச் சுற்றி வருவான். அல்லது அவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி இரத்தக் காயங்களுடன் சாலையில் கிடப்பான்!” பெரிதாய் வாய் திறந்து சிரித்தான் மோகன்ராஜா. அவனது திறந்த வாய்க்குள் நரகம் தெரிந்தது.

வில்லிசை நாயகன்

வில்லிசை நாயகன்

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியவர். 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டுக் கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வில்லுப்பாட்டினால் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர். வில்லுப் பாட்டுக் கலை தமிழ் நாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அவருக்குப் பிறகு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளவில் பரவியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு, வித்துவான் ஆ.க.நவநீத கிருஷ்ணன் பிள்ளை என்பவர் ஆவார். இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன்பிறகு ‘மதுரை தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற நூலை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்தி மகான் கதையை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். திரையுலகில் கலைவாணர் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்த பல படங்களுக்கான நகைச்சுவைக் காட்சிகளையும் எழுதியுள்ளார். 1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி ‘கருணைக்கடல் காஞ்சி காமாட்சி’ என்ற தலைப்பில் அரங்கேறியது. ‘காந்தி வந்தார்’ என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது. கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார். கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசால் ‘கலைமாமணி’ என்ற கௌரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் சுப்பு ஆறுமுகம் பெற்றுள்ளார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றான வில்லிசையின் நாயகராகத் திகழ்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். தாணப்பன் கதிர்

வைகைப் புயலே வருக!

வைகைப் புயலே வருக!

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடை விதித்து போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அவர் களம் இறங்கவிருக்கிறார் என்பது மகிழ்வான செய்தி. ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்துப் பேட்டியளித்த அவர், “இது என்னுடைய மறுபிறவி” என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். ரெட் கார்ட் வழங்கப்பட்ட காலத்தில், திரைப்படங்களில்தான் வடிவேலு நடிக்கவில்லையே தவிர, தொலைக்காட்சிகள் வழியாகவும் மீம்கள்  வழியாகவும் அன்றாட வாழ்வில் அவரது வசனங்கள் வாயிலாகவும் நம்மைத் தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருந்தார் என்பதுதான் உண்மை.  தனி மனிதன் என்பது வேறு. ஒரு கலைஞனாக இருப்பது என்பது வேறு. தனிமனிதனின் கருத்து சுதந்திரத்திற்காக ஒரு துறை அவனது கலை வாழ்வை முடக்கி வைத்திருந்தது. இப்பொழுதாவது அந்தத் தடை நீங்கியிருப்பது நல்லது.  ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு பருவம் உண்டு. SEASON என்று சொன்னால் சிலருக்கு எளிதில் புரியும். அதேபோல, ஒரே மாதிரியான தொனி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசப்படும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஜனகராஜ் , கவுண்டமணி, செந்தில், விவேக், சூரி என இப்பொழுது இருக்கும் யோகிபாபு வரை நீண்ட நெடிய பருவங்கள் உண்டு. நாகேஷ் ஒரு ட்ரெண்ட் செட் செய்தார். அவர் காலத்தில் அல்லது அவரது காலத்தைத் தொடர்ந்த  சிலர் அவரவர் பாணியில் ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கென ஒரு பாணியை உருவாக்குவதற்குள் நிலைத்தன்மை பெறாமல் பல நல்ல கலைஞர்கள் காணாமல் போனார்கள். அது தான் நிதர்சனம். ஆனால் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் வகையான இசை இருப்பது போல் சில நகைச்சுவைகளை நாகேஷ் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.  கவுண்டமணி – செந்தில் காம்போவும் சரி, கவுண்டமணியின் சிங்கிள் ட்ராக் காமெடிகளும் சரி, நகைச்சுவையில் புது ட்ரெண்ட்டை உருவாக்கினாலும் அதைத் தொடர்ந்து வந்த வடிவேலு, விவேக் பருவங்கள் முக்கியமானவை. அதில் நிலைத்து தனக்கென்று தனிப்பட்ட முத்திரையை இன்றளவும் பதித்துக்கொண்டிருப்பவர் வடிவேலு.  வடிவேலுவின் மகத்தான வெற்றிக்கு சில காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்.  முதலில் திகட்டவே திகட்டாத தென் தமிழகத்தின், முக்கியமாக மதுரை வட்டார வழக்குமொழி.  சொற்களைப் பிரயோக்கிக்கும் அலைவரிசை மற்றும் அதற்கேற்றபடி உடல் மொழியை, முக பாவனைகளைக் கோர்க்கும் நடிப்புத்திறமை.  ஒரு சாமான்யனாக, மனதில் தோன்றும் அசரீரிகளை அசரீரிகளாகவே ஒலிக்கவிட்டு, அதையும் வடிவேலுவின் குரலாக ஒலிக்கவிட்டு எல்லா மூலைகளிலும் வடிவேலுவைப் பயன்படுத்தத் தெரிந்த, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த கன்டென்ட் ரைட்டர்ஸ் மற்றும் இயக்குனர்கள்.  இவை எல்லாம் ஒன்று சேர்ந்த கலவைதான் வடிவேலுவின் வெற்றி.  குழந்தைகளை ஈர்க்கும் முக பாவனைகள் வடிவேலுவிடம் உண்டு. ஒரு படத்தில் ஒரு குழந்தை பலூன் ஊதச்சொல்லும், அவரும் ஊதுவார்.  பலூன் உடையும். உடைந்ததும் முகத்தில் ஒரு பாவனை காட்டுவார். குழந்தை அழும்போது குழந்தையை மிரட்டும் தொனியாக மாற்றுவார். ஆனால் குழந்தையிடம் தோற்கும் முகத்தை நகைச்சுவைக்காக மாற்றுவார்.  எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் அது விகாரமாக மாறும் என்று தெரியாமல் பயன்படுத்தி சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் வடிவேலுவிடம் இருக்கும் தனித்திறமை, எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்பதைப் புரிந்து வைத்திருப்பது. இது அனைவருக்கும் வராது. உதாரணத்திற்கு, ‘உயிரே.. உயிரே.. தப்பித்து எப்படியாவது ஓடிவிடு… ஐயயோ வருதே… மூதேவி வருதே…” என்று வடிவேலுவின் குரலில் ஒலிக்கும்பொழுது திரையில் வடிவேலுவின் முகமும் உருவமும் பர்தாபோட்டு மூடியிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் நம்மால் அந்தக் குரலைக் கேட்டவுடன் வரும் வெடிச்சிரிப்புக்குத் தடை போட முடியாது. நகைச்சுவையில் தனித்து நின்ற உச்சரிப்புகளில் அதுவும் ஒன்று.  வடிவேலு பற்றி சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருந்தாலும் நுணுக்கமான விசயங்களை மட்டுமின்றி வெகுஜனக் காமெடிகளில் பரவலாக அறியப்பட்ட காமெடிகளைச் சொல்லாமல் கட்டுரை நிறைவு பெறாது என்பதுதான் வடிவேலுவின் வெற்றி.  ஒரு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வரும் வாக்காளர் இன்னொரு கட்சி பூத்தில் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும் வடிவேலுவின் பூத்திற்கு வந்து உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்றும் கூறுவார். “அவன்ட்ட வாங்குன காசுக்கு ஏணியில ஒரு குத்து, உன்ட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து” என்றும் சொல்வார். “மூன்றாவது குத்த நான் குத்தவா?” என்று வடிவேலு சொல்வதற்கு முன், எழுத்தால் எழுத முடியாத ஒரு சத்தத்தை (ஜங்……) எழுப்பி, “ங்கொய்யாலே” என்று அவனை அடிப்பார். உண்மையில் அந்தக் காமெடிக்கான சிரிப்பின் ஆதிப்புள்ளி முத்துக்காளை வசனத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது உருவானாலும் வடிவேலு உச்சரிப்பில் மொழியும் சொல்லும் அற்ற அந்த ஒலிதான் சாமான்யனையும் தன்னை மறந்து சிரிக்க வைக்கும் அல்லது வெடிக்க வைக்கும் பெரும்புள்ளி. அதே காட்சியில் அடுத்து வரும் நபர், அவர் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சொல்வதை வடிவேலு நம்ப மறுப்பார். அதற்கு அவர் “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் ஓட்டு போட்ட சீட்டைக் கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து சீட்டை வெளியே எடுத்துக் காண்பித்து, 17 வருசமா உங்களுக்குத்தான் ஓட்டு போடறேன்” என்று சொல்வார். “அப்படின்னா 17 வருசமா கொண்டு போய்ட்டுதான் இருக்கியா?!!” என்று சொல்லி, முதல் நபருக்குக் கோபத்தைக் காண்பித்தவர், இரண்டாவது நபருக்கு முகத்தில் அதிரிச்சியையும் குரலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் அந்த நகைச்சுவையின் நீட்சி. ஒரு நெடிய காட்சியைத் திரைப்படுத்தும்பொழுது இரண்டு சவால்கள் உள்ளன. அந்தக் காட்சிக்கென்று இருக்கும் உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவது. இரண்டாவது, காட்சி தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பார்வையாளனை அந்த உணர்வுக்குள்ளேயே தக்க வைப்பது. ஆனால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் நெடிய காட்சிகளாகப் படமாக்கப்படும்பொழுது, அவை அதே உணர்வில் இருப்பதோடு அல்லாமல், உணர்வு மோலோங்கவும் செய்யும். அதாவது நகைச்சுவையின் வீச்சு அதிகமாகவும் செய்யும்.  அதே திரைப்படத்தில் ஒரு நபரிடமிருந்து ஃபோன் வரும், இவர் சொல்ல வருவதற்குள் எதிர்முனையில் இருப்பவர் இவரைப் பேசவே விடாமல் ஏதோ பேசுவார். அந்த ஒலி திரையில் வராது. ஆனால் எதிர்முனையில் இருப்பவன் தன்னைப் பேச விடாமல் பேசுவதைத் தன் குரல் சமிக்ஞைகள் மூலமாகவே எதிரொலிப்பார், எதிரொளிப்பார்.  வடிவேலுவின் வெற்றிக்கு அவரது வட்டாரமொழி என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்தாலும் வெறுமனே சமிக்ஞைகளைக் கொண்டு மனதில் நின்ற கலைஞனாகவே வடிவேலுவை நிலை நிறுத்த விரும்புகிறேன்.  பல ஐ.டி நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வடிவேலுவின் பிரபல மீம்களும், அவர் பேசிய உரையாடல்களும் பேசப்படுகின்றன. வடிவேலுவின் நகைச்சுவைகள் A B C  என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமாய் இருந்தது என்பதுதான் உண்மை.  நகைச்சுவையோடு இசையையும் இணைத்து அதற்குத் தன் குரலையும் நடனத்தையும் ஒருசேர ஒப்புக் கொடுத்தவர் வடிவேலு. பல பாடல்கள் வடிவேலுவிற்கென்றே நடன அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டன. நடன அமைப்பாளரின் தொனியை வடிவேலுவிற்கு ஏற்றுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த நடனக் கலைஞர்களும் வடிவேலுவின் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. பிரபுதேவாவுடன் இணைந்து ஆடிய ‘ஆல் டே ஜாலி டே’, விஜய்யுடன் இணைந்து ஆடிய ‘வாடி வாடி வாடி, கை படாத ஜோடி’ உள்ளிட்ட பல பாடல்களில் திறமையான நடனக் கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருக்கும்.   வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் எளிய நகைச்சுவையில், ‘எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை” எனக் காந்தர்வக் குரலிசையை ஒலிக்கச் செய்திருந்தார். “இந்த ஊரே என் பாட்டைப் பாடும்” என்ற குரல் பாடகர் வடிவேலுவிற்கானது.  என்.எஸ்.கே., சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிகர் பாடகராக வலம் வருவதும் அந்தக் குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாடுவதும் வடிவேலுவின் குரல்தான். மிகவும் சாமானியர்களில் ஒருவனாக பல படங்களில் நடித்த வடிவேலு, 23ஆம் புலிகேசியாக நகைச்சுவையை மிக இயல்பாக வெளிப்படுத்தினாலும் ஒரு மன்னனுக்கு உண்டான அந்த கெத்துடன் வாழ்ந்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு நடிகனும் ஒவ்வொரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிடுவான்.  அதற்கு திரைக்காட்சியின்மீது ஏற்படும் அயற்சியும் தலைமுறையினர் மாறுவதால் ரசனையின் வீச்சு மாறுவதாலும்தான். ஆனாலும் அனைத்துத் தலைமுறையையும் கவரும் ரஜினி போல தன்னைத் தலைமுறைகள் கடந்து தக்க வைத்துக்கொண்டவர் வடிவேலு.  கலைத்துறையில் கலைஞனுக்கும் சரி, ரசிகனுக்கும் சரி சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. இருவரில் ஒருவருக்குச் சலிப்பு ஏற்பட்டாலும், அந்தக் கலைஞன் தன் சந்தையைத் தவறவிடுவான். வடிவேலுவின் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவருக்குக் விதிக்கப்பட்ட தடைக் காலத்தில் அவருடைய இருப்பை பல ரசிகர்கள் தவறவிட்டார்கள். சூரி யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் அந்த இடங்களைப் பூர்த்தி செய்தாலும் புது ரகங்களைக் கொண்டுவந்தாலும் வடிவேலுவின் வசனங்களும் சமிக்ஞைகளும் பார்வைகளும் மக்களின் வாழ்வியலில் ஒன்றாகிவிட்டன.  நேசமணி காண்ட்ராக்டருக்குத் தலையில் அடிபட்ட நகைச்சுவை வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, #PrayForNesamani ஹேஷ் டேக் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களிலும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் பேசுபொருளாய் ஆனது.  கமலஹாசனின் விக்ரம் பட போஸ்டரில் வடிவேலுவை போட்டும், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அவரைப் போட்டும் வலைதளங்கள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் வெளியான சில மணி நேரங்களில் அனைத்து கதாபாத்திரங்களிலும் வடிவேலுவின் முகத்தைப் பொருத்தி அதிரச் செய்தார்கள் மீம் கிரியேட்டர்கள். ஒரு கலைஞன், தன் தொழிலுக்கு நேர்மையாக தியாக மனப்பான்மையுடன் உழைக்கும்பொழுது வெற்றி பெறுகிறான். மக்களை மகிழ்விக்கும் கலையை அவன் நேசிக்கும் விதமே, அவனை மக்கள் மத்தியில் நிறுத்துகிறது.  இவ்வளவு ஆண்டுகால தடைக்குப் பின்னும் வடிவேலுவின் நடிப்பும் பாணியும் மக்களிடம் புழங்குவதன் மையச்சரடு, வடிவேலு சாமான்யர்களின் கலைஞன் என்பதும் அவரது நகைச்சுவைகள் வாழ்வியல் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதும்தான்.  எவ்வளவு கடினமான மனநிலையிலிருந்தும் வெளிவர, ஒற்றை வீரபாகுவின் பார்வையோ, ஏட்டு ஏகாம்பரத்தின் ‘மல…’ என்ற சிரிப்போ, ‘வேணாம், வலிக்குது, அழுதுருவேன்’ என்ற கைப்புள்ளயின் குரலோ, ‘ஒய் பிளட், சேம் பிளட்’ என்ற வார்த்தையோ போதுமானது. பல குழப்பங்களுக்கு மத்தியில் ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற விசித்திர குரலும், ‘தம்பி, டீ இன்னும் வரல’, ‘இது வாலிப வயசு’ போன்ற கெத்தும்தான் வாழ்வியல் முறைகளுக்குள் ஊடுருவிவிட்ட வெற்றியின் தடயம்.  யாராலும் தடைசெய்ய முடியாத வைகைப் புயல் மீண்டும் வருகிறது, பலரின் சுமைகளைத் தீர்க்க. தயாராகவே இருப்போம். இனி, “Sing in the rain….” கட்டுரையாளர்: பழனிக்குமார்,

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

 இயல்பாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் ராமன். அதனால் நட்பு வட்டத்தில் அவனைச் செல்லமாக, ‘தெனாலி ராமன்’ என்றே அனைவரும் அழைத்தனர். யாராவது அவனிடம், “ஏன் ரொம்ப பயப்படுகிறாய்?” எனக் கேட்டால், பயப்படுவதற்குதான் நான் எப்போதும் பயப்படுவதேயில்லை என்று தெனாலி படத்தில் வரும் கமலின்  டயலாக்கைச் சொல்லுவான். வயதோ 28, பி.ஏ. பட்டதாரி. சொந்தமாக வீட்டிற்கு அருகிலேயே E- சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தான்.  சமீபத்தில்தான் அவனுக்கு காதலில் படுதோல்வி ஏற்பட்டது. ஆம், தான் காதலித்த பெண்ணையே மணம் முடிக்கும்படி ஆகிவிட்டது. மனைவி நிவேதா கல்லூரியில் அவன் கூடப் படித்தவள். அறிவானவள், துணிவானவள். ஒரு முறை அவனை நாய் ஒன்று  துரத்தியபோது, அவனை நாயிடம் இருந்து கடிபடாமல் அலேக்காகத் தூக்கி காப்பாற்றிய போதுதான், அவனுக்கு அவள்  அறிமுகமானாள். அவனை எப்படியாவது தைரியசாலியாக மாற்ற வேண்டும் என்று ராஜாதிராஜா பட நதியா போல் நிறைய அறிவுரைகளைக் கூறிக்கொண்டே இருப்பாள்.  “தைரியம்ங்கிறது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்” என்று அவனிடம் அவள் சொல்ல, “அப்படின்னு சிக்மன்டு ஃப்ராய்டு சொன்னாரா?” என்று கேட்டான்.  “இல்லையில்லை, இதுவும் குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் சொன்னதுதான்” என்றாள் அவள்.  தோழி ஒருத்தியின் ஆலோசனைப்படி அருகில் இருந்த மனநல மருத்துவரிடம் ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றாள்.  “எதற்கெல்லாம் பயம்?’”என்று அவர் அவனிடம் கேட்க, அவன் மனைவி நிவேதாவைப் பார்க்க, “மனைவிக்கு பயப்படுறதெல்லாம் நார்மல்தான்” என்றார் மருத்துவர். பின் அவன் சொன்ன  அவனுடைய பயங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவனுக்கு மனப்பதட்ட நோய் இருப்பதாகவும் அதற்கு மருந்துகள் பரிதுரைப்பதாகவும் கூற, மருந்து உட்கொள்ள பயந்து அதை எடுத்துக் கொள்ளாமல், அடுத்து அவரைப் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து விட்டான்.  கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது தன் ஈ சேவை மையத்தையும் மூடிவிட்டு வீட்டிற்குள் முடங்கினான் ராமன்.  கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கவும், இவனுடைய பயமும் அதிகரித்தது. அனைத்து விஷயங்களிலும் முன்னெச்செரிக்கையுடன் நடக்கத் தொடங்கினான். குடும்ப வாழ்க்கையிலும்கூட  சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறவில்லை. மனைவிக்கு பறக்கும் முத்தம் மட்டும்தான்.   எப்பொழுதும்  கொரானா பற்றிய தகவல்களை மட்டுமே அலைபேசியில் தேடித் தேடி படித்தும் கொரோனா பற்றிய செய்திகளை யூ-டியூபில் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.  இரவு தூங்கும்போதும்கூட முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான். மனைவி கேட்டதற்கு, முந்தைய நாள் இரவு தூங்கும்போது, தன் ஈ சேவை மையத்துக்கு முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் வருவது போலவும் இவன் முகத்திற்கு நேராக வந்து  இருமுவது போலவும் தும்முவது போலவும் பயங்கரக் கனவு வந்ததாகவும், கனவிலும் பாதுகாப்பாக இருப்பதற்காக தூங்கும்போதும் அணிந்து கொள்வேன் என்று அடம்பிடித்து, N95 முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான்.  ஒரு ஞாயிற்றுக் கிழமை, கொரோனா முழு முடக்கம்  காரணமாக, கறிக்கடையெல்லாம் அடைத்திருக்கும் என்பதால் அதிகாலையில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கோழிக் கறிக்கடைக்காரர் வீட்டின் பின்புறம் சென்று ரகசியமாக பிளாக்கில் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து பிரியாணி செய்யச் சொன்னான். வயிறு முட்ட முட்டையில் இருந்து வந்த கோழி பிரியாணியைச்  சாப்பிட்டுவிட்டு உறங்கிப் போனான்.  மாலை சுமார் 4 மணி இருக்கும், மாடியில் டமார் என்று ஏதோ சத்தம் கேட்க, திடீரென்று முழித்தான். உடல் முழுவதும் ஏதோ இனம் புரியாத கஷ்டத்தை உணர்ந்தான். காய்ச்சலாக இருக்குமோ என்று  வீட்டிலிருந்த தெர்மா மீட்டரை எடுத்து உடலின் வெப்ப நிலையைப் பரிசோதித்தான். 98.4 என்று காட்டியது.  மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகாதது போன்ற உணர்வும் மார்பை ஏதோ  அழுத்துவது போன்ற உணர்வும் சேர, அவனுக்கு பயம் கூடியது. படபடப்புடன்  வேர்த்துக் கொட்டியது.  மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்று இறந்து விடுவோம்’ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. வாங்கி வைத்திருந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை எடுத்து தன் ஆள் காட்டி விரலில் மாட்டி ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்தான். அதில் 94 என்று காட்டியது.  உறங்கிய மனைவியை அவசரமாக எழுப்பி விவரத்தைச் சொல்லி ஒருவேளை தனக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால்  உடனடியாகத் தன்னை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான்.  மருத்துவமனையின் அவசரப் பிரிவை  அடைந்ததும், மருத்துவர் அவனுக்கு  முன்பாக இன்னொரு  நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி தனக்குச் சாதாரண இருமல்தான் என்றும், தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டாமென்றும் மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மருத்துவர், “சாதாரண இருமலா அல்லது கொரோனா இருமலா என்று பரிசோத்தித்தால் மட்டுமே தெரியும். ஏதோ கொரோனா இருமலென்றால் ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பின்னனி இசையோடு தனியாகத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருந்தார்.  அவசர வார்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் நாட்டில் நிலவும் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டவுடன், தனக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. அடுத்ததாகத் தன்னை அழைத்த டாக்டரிடம், “சார், ஆக்ஸிஜன் வைச்சிருக்கீங்களா? எனக்குக் கொடுத்து காப்பாத்திடுவீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.  அதைக் கேட்ட மருத்துவர், “இருக்கிற ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுல, ஆக்ஸிஜன் கொடுத்து நோயாளியைக் காப்பாற்றுவதைவிட, நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜனைக் காப்பாற்றச் சொல்லிதான் எங்களுக்கு மேலிடத்துல இருந்து ஆர்டர்” என்றார்.   மிரட்சியுடன் அவன் டாக்டரைப் பார்க்க, அவர் “சும்மா விளையாட்டுக்குத்தான்  சொன்னேன்” என்றார். “உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்கள்” என்று கேட்டார். அவனுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் அவன் பட்டியலிட பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். அவனுடைய முழுப் பிரச்சினையையும் கேட்டு விட்டு, O2 அளவு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுருள் படம் போன்ற பரிசோதனைகளைச் செய்துவிட்டு, அவனுக்கு உடம்பில் ஒரு கோளாரும் இல்லை, பேனிக் என்ற ஒரு வகை தீவிரமான மனப் பதட்ட நோய்தான் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் கூறினார்.  கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் பார்க்க வேண்டாம் என்றும் தைரியம் வருவதற்கு சில மருந்துகள் தருவதாகவும் அதனை  அவன் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர வேண்டும் என்றும் சொன்னார். அப்போது உடனே நாக்கின் அடியில் வைக்க ஒரு மாத்திரையும் கொடுத்தார். மாத்திரையை நாக்கின் அடியில் வைத்து சில நிமிடங்களில் அவனுடைய மனம் அமைதியானது. மருத்துவர் அவனுடைய வாழ்க்கையில் சில ஆரோக்யமான மாற்றங்களைக் கொண்டு வர அறிவுறுத்தினார்.  வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தினமும் ஆறேழு முறை டீ குடிக்கும் பழக்கம் அவனுக்கு வந்து விட்டிருந்தது, அதைக் குறைத்துத் தினமும் இருமுறை மட்டும் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார்.  “உடல் உழைப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறீங்க. நீங்களே சொந்தமா உங்க பல்ல விளக்கிக்கிறீங்க. நீங்களே சொந்தமா சோப்பு போட்டு குளிச்சிக்கிறீங்க. நீங்க தூங்கும்போது நீங்களே சொந்தமா புரண்டு படுத்துக்கிறீங்க. அதெல்லாம் உடற்பயிற்சிதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கட்டாயம் ஒரு முக்கால் மணி நேரமாவது நடைப் பயிற்சிக்குப் போங்க. லாக்டவுன் காலத்துல புது ஹோட்டல் திறக்கும்போது, ஐந்து புரோட்டா வாங்கினால் ஐந்து புரோட்டா இலவசம்னு கூவிக் கூவிக் கூப்பிடுறாங்க. அதெல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்காம ஒழுங்கா காய்கறிகள், பழங்கள்னு சாப்பிடுங்க. மொபைல் ஃபோனையே எப்பொழுதும்  நோண்டிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலாக ஏதாவது புத்தகம் எடுத்துப் படிங்க”.  இப்படியாக மருத்துவர் சொன்ன அறிவுரைகளைச் சரியாக பின்பற்றியதாலும் மருந்துகளை சரியாகச் சாப்பிட்டு வந்ததினாலும் அவன் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல மன நலத்துடன்  எந்த பயமும் இல்லாமல் தைரியசாலி ராமனாக மாறிவிட்டான் தெனாலி ராமன். Dr. ர. நிஷாந்த்,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை. படங்கள்: இணையத்திலிருந்து