சொன்னவண்ணம் செய்த பெருமாள்

சொன்னவண்ணம் செய்த பெருமாள்

தாய்மொழி தின நாடகம் காட்சி 1 காலம்: ஆறாம் நூற்றாண்டில் ஒரு மாசி மாதம்தினம்: மகம்இடம்: திருவெஃகா விண்ணகரம்நேரம்: காலைபாத்திரங்கள்: சீதையம்மை, திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன், கோயில் பட்டர் திருக்கோயிலைச் சுத்தம் செய்து வரும் சீதையம்மை அன்றும் சுத்தம் செய்து திரும்பிக்கொண்டிருக்கும் நேரம். எதிரே திருமழிசை ஆழ்வாரின் சீடன் வருகிறான். சீதையம்மை: வணக்கம் ஐயா. கணிகண்ணன்: வணக்கம் அம்மையே, ஏன் சோர்ந்தாற்போல் வருகிறீர்கள்? சீதையம்மை: வயதாகிவிட்டதல்லவா. இந்தப் பெருமாளுக்கு இன்னும் எத்தனை நாள் நான் சேவை செய்யக் கொடுத்துவைத்திருக்கிறேனோ. அவளின் கடைசி வாக்கியத்தைக் கேட்டவாறே வந்துகொண்டிருந்த ஆழ்வார் குறுக்கிட்டு, திருமழிசை ஆழ்வார்: வருந்த வேண்டாம் அம்மையே. நாராயணனிடம் சொல்லி வைக்கிறேன். அவன் அருள்புரிவான். திடமுடன் வாழ்வாய். கவலை வேண்டாம். கோயில் பட்டர் எதிரில் வந்தவாறே, பட்டர்: ஆஹா.. இன்று ஆழ்வாரின் திருநட்சத்திரம் ஆயிற்றே.. தெய்வத் தமிழ் அல்லவா அவர் வாக்கு! அப்படியே பலிக்கும். அம்மா சீதா, நீ கவலைப்படாதே. கணிகண்ணன்: குருநாதரின் ஜன்ம தினம் அல்லவா. இந்தப் பள்ளிகொண்ட பெருமாள், ஐயனின் தமிழுக்குத் தாசன் அல்லவா. அம்மையே, நீ யுவதி போல நிலைபெறுவாய். இந்தக் கச்சி மணிவண்ணன் கை கொடுப்பான். பாம்பணை மேல் பள்ளி கொண்டவனை திருமழிசை ஆழ்வார் தமிழால் பாடித் துதிக்க, எல்லாரும் கண்மூடிப் பெருமாளிடம் லயித்துக் கிடக்கின்றனர். காட்சி 2 நேரம்: முன்மதியம்இடம்: அரண்மனைபாத்திரங்கள்: பல்லவ அரசன், கணிகண்ணன் மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கணிகண்ணன்: அரசே, வணங்குகிறேன். அழைத்தீர்களாமே.. பல்லவ அரசன்: ஆமாம், ஆழ்வாரின் சீடனே! எனது நீண்ட நாள் விருப்பம் ஒன்றுள்ளது. அதை நீர் ஆழ்வாரிடம் சொல்லி நிறைவேற்றித் தர வேண்டும். கணிகண்ணன்: சொல்லுங்கள் மன்னா. பல்லவ அரசன்: ஆழ்வாரின் தமிழால் என்னைப் பாட வேண்டும். ஒரு பாட்டு போதும்.. பணிந்து கேட்கின்றேன். நீர்தான் உமது குருவிடம் சொல்லி நிறைவேற்றி அருள வேண்டும். கணிகண்ணன்: இது நிறைவேறாது மன்னவா. எம் ஐயன் நாராயணனையன்றி மனிதரைப் பாடுவதில்லை. அவரிடம் இந்த விண்ணப்பத்தை என்னால் வைக்கலாகாது. அரசன்: நீர் இதை எப்படியும் செய்ய வேண்டும். இது அரச கட்டளை. கணிகண்ணன்: ஆண்டவன் கட்டளைக்கே அடி பணிவேன். அரசன்: என் விருப்பத்தை நிறைவேற்றாவிடில் உம்மை நாடு கடத்துவேன். நீர் இரவுக்குள் நகர் விட்டு வெளியேற வேண்டும். அமைச்சர் உள்பட அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்து நிற்க, கணிகண்ணன் செல்கின்றான். காட்சி 3 இடம்: திருக்கோயில்நேரம்: முன் மாலைபாத்திரங்கள்: கணிகண்ணன், திருமழிசை ஆழ்வார், பாம்பணைந்தோன் கோயிலில் மாலை பூஜை தொடங்கியதை அறிவிக்கும் மணியோசை கேட்கிறது. ஆழ்வார்: கணிகண்ணா, புறப்படு. பெருமாளை சேவித்துவிட்டு வரலாம். கணிகண்ணன்: குருநாதா, மன்னிக்க வேண்டும். நான் நகர் நீங்குகிறேன். இது அரசாணை. ஆழ்வார்: என்ன! அரசன் உன்னை நகர் நீங்கச் சொன்னாரா? ஏனப்பா? கணிகண்ணன்: ஐயனே, என் வாயால் எப்படிச் சொல்வேன்.. தாங்கள் அரசனைப் பாடவேண்டுமாம். அதை நானே உங்களிடம் விண்ணப்பிக்க வேண்டுமாம். நான் மறுத்தபடியினால் எனக்கு இந்தத் தண்டனை. ஆழ்வார்: வா, பெருமாளிடம் போவோம். பெருமாள் முன்பு பக்தர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். ஆழ்வார் பாடுகிறார். “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடையசெந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” ஆழ்வார் பாடிவிட்டு நடக்கிறார். கணிகண்ணனும் நடந்து போகிறான். பட்டர் பாம்பணைந்தோனை ஒருகணம் பார்க்கிறார். பெருமாளின் பாம்பணை அதிருவதாக அவருக்குப் பட்டது. அரசனுக்கு அங்கு நடந்ததை சொல்வதற்கு ஓடுகிறார். காட்சி 4 நேரம்: பின் மாலைஇடம்: அரண்மனைபாத்திரங்கள்: அரசன், பட்டர், அமைச்சர், காவலன், மக்கள் அமைச்சர்: அரசே! ஆழ்வாரின் சீடனை நகர் நீங்க உத்தரவிட்டது சரியாகத் தோன்றவில்லை. அரசன்: ஏன் அமைச்சரே? நான் பணிவாகத்தான் அவரிடம் வேண்டினேன். அரசன் என்ற மரியாதைக்காவது அவர் தனது குருவிடம் சொல்லுகிறேன் என்று போயிருக்கலாம். இவர் சொல்லி குரு மறுத்திருந்தால்கூடப் பரவாயில்லை. அமைச்சர்: இருப்பினும் நகர் நீங்க உத்தரவு போட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காவலன்: (வேகமாக வந்து) அரசே, வாயில் முன் மக்கள் பதற்றத்துடன் கூடி வருகின்றனர். அரசனும் அமைச்சரும் வெளியில் வரவும் எதிரில் கோயில் பட்டர் வந்துகொண்டே, பட்டர்: அரசே, அபச்சாரம் நடந்துவிட்டது. கணிகண்ணன் நகர் நீங்குவதால் ஆழ்வாரும் நகர் நீங்கினார். அத்துடன் பெருமாளையும் அழைத்துக்கொண்டுபோய்விட்டார். மக்கள் பதற்றத்துடன் அலைகிறார்கள். அரசன்: என்ன! பெருமாளை அழைத்துக்கொண்டா?! என்ன உளருகிறீர் பட்டரே? அமைச்சர்: அரசே! அமைதி கொள்ளுங்கள். பட்டரே, நடந்தது என்ன? பட்டர் நடந்ததைச் சொல்லி முடிக்கிறார். அமைச்சர்: அரசே, வாருங்கள். ஆழ்வார் வெகுதூரம் போயிருக்க மாட்டார். அவரை சமாதானம் செய்து அழைத்து வருவோம். அவர் வந்தால்தான் பெருமாள் வருவார். அரசன்: அமைச்சரே, நீங்களுமா.. பெருமாள் அவர் பின்னே போய்விட்டாரா என்ன? அமைச்சர்: அரசே, மன்னிக்க வேண்டும். ஆழ்வாரின் தமிழில் பெருமாள் நகர் நீங்கிப் போய்விட்டார். இனி தமிழ் உள்ளளவும் பெருமாள் இந்தக் கச்சி திருவெஃகாவில் இருக்கமாட்டார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசருக்குப் பொறி தட்டியது. அரசர்: சரி, புறப்படுங்கள். (வெளியில் இருக்கும் மக்களிடம்) காஞ்சி நகர மக்களே! என்னை மன்னியுங்கள். ஆழ்வாரிடம் போகின்றேன். அவரை அழைத்துக்கொண்டுதான் வருவேன். அரசன், அமைச்சர், பட்டர் எல்லாரும் விரைகிறார்கள். மக்களும் அரசர் பின்னே நடக்கிறார்கள். மாசி மகத்தின் முழுநிலவு மேலேறி வந்து விண்வழியே அவர்களை முந்திக் கொண்டு ஆழ்வாரிடம் சேதி சொல்ல விரைகின்றது. காட்சி 5 காலம்: பின்னிரவுஇடம்: வேகவதி நதியின் அக்கரையில் ஒரு மரத்தடிபாத்திரங்கள்: அரசன், அமைச்சர், பட்டர், திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் மற்றும் மக்கள். ஆழ்வார் வேகவதி நதியைத் தாண்டிப் போய்விட்டார் என்று அறிந்து எல்லாரும் நதியின் அக்கரை போய்ச் சேருகின்றனர். ஆழ்வாரும் கணிகண்ணனும் மரமொன்றின் அடியில் அமர்ந்திருக்கின்றனர். அரசன்: (வந்து கொண்டே), பக்தரே, இந்தச் சிறியேனை மன்னிக்க வேண்டும். கணிகண்டரே, நீரும் என்னைப் பிழை பொறுத்து மன்னித்து அருள வேண்டும். கச்சிப் பதிக்குத் திரும்ப வேண்டும். அமைச்சர்: தமிழ் உருவமே! தங்கள் வாக்கில் இருக்கும் நாரணன் இங்கும் நிறைந்து இருப்பதை உணர்கிறேன். கச்சியைக் கைவிட்டுவிடாதீர் ஐயா. தமிழ் வாக்கிற்குச் செவி சாய்த்து உம்முடன் வந்திருக்கும் இறையையும் அழைத்து வரவேண்டும். திருமழிசை ஆழ்வார்: கணிகண்ணனே, மன்னவன் மனம் வருந்தினான். நாம் மீண்டும் திருவெஃகா செல்லலாம்தானே? கணிகண்ணன்: ஐயனே, செல்லலாம். இத்தனை மக்களும் பெருமாளைத் தேடி வந்தார்களே..! ஆழ்வார்: மன்னவனே! அதிகாரத்தால் அடைய முடியாததும் உலகில் உண்டு என்பதைப் புரிந்திருப்பீர். இதோ, என் தமிழ் வாக்கிற்காக மணிவண்ணனும் என்னுடன் ஓரிரவு வந்து நிற்கும் இந்த இடத்தை மக்கள் ஓரிரவிருக்கை என்று நினைவில் வைத்திருப்பார்கள். சொல்லிவிட்டு ஆழ்வார் காஞ்சி நோக்கி நடக்கிறார். எல்லாரும் அவரைத் தொடர்ந்து நடக்கின்றனர். முழுநிலவு வானில் விழி மலர்த்தி சிரிக்கின்றது. திருவெஃகா கோயிலுக்குள் வந்ததும் ஆழ்வார் வெளியில் பார்த்துப் பாடுகின்றார். “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடையசெந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்பைந்நாகப் பாய்படுத்துக்கொள்” கோயில் எங்கும் ஆழ்வாரின் தமிழ்க் குரல் ஒலிக்கிறது.

குமிண் சிரிப்பு

குமிண் சிரிப்பு

நாடக விமர்சனம் : மது ராஜேந்திரன் சிவபுரம் நடராஜர் சிலை கடத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட உண்மைக் கதையின் அடிப்படையில், சுஜாதா விஜயராகவன் எழுத்தில், திரைப்பட இயக்குநரும் வீணைக் கலைஞருமான எஸ்.பாலச்சந்தர் அவர்களின் மகன் எஸ்.பி.எஸ். ராமன் இயக்கத்தில் மேடையேறி  இருக்கும் நாடகம்தான் ‘குமிண் சிரிப்பு.’ புதுப்பிப்பதற்காகத் தம்மிடம் வந்த  ராஜநல்லூர் சிவன் கோவில் நடராஜர் சிலையைப் போன்றே அச்சு அசலான ஒரு சிலையைப் பணத்தாசையால் மாணிக்க ஆசாரி செய்து விற்றுவிடுகிறார். அச்சிலை பல கைகள் மாறி, அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு கலைக்கூடத்திற்குப் போய்ச் சேருகிறது. இச்சிலைத் திருட்டு, பின்னர் வெளியுலகத்திற்குத் தெரிந்ததையடுத்து நடந்த சட்டப் போராட்டத்தின் இறுதியில் நடராஜர் சிலை மீட்கப்பட்டு, கிராமத்திற்குத் திரும்ப வருவதுதான் ‘குமிண் சிரிப்பு’ நாடகத்தின் மொத்தக் கதை. அப்பர் பாடலில் வரும் வார்த்தைகள் நாடகத்தின் தலைப்பாக இருப்பதுடன், உண்மையை வெளிப்படுத்த அதையே ஒரு உத்தியாகவும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. சிலை செய்யும் நேர்த்தியில் பெருமிதம் கொள்வதிலாகட்டும் வந்தவர்களிடம் முடிந்தவரை பேரம் பேசுவதிலாகட்டும்  நகை செய்யும் ஆசாரியிடம் மனைவிக்கு வாங்கும் நகை குறித்துச் சந்தேகம் தீர விசாரிப்பதிலாகட்டும்  மாப்பிள்ளை,  மகளிடம் பெற்ற பயனைப் பங்குபோட முனைவதிலாகட்டும் செய்த குற்றம் வெளிப்பட்டுவிட, அதைப் பேசிப் புலம்பி மருகுவதிலாகட்டும், பாத்திரத்தின் தன்மையை முழுதும் உள்வாங்கி மாணிக்க ஆசாரியாகவே மாறி நடிப்பில் பிரகாசிக்கிறார் ராஜா மான்சிங். ஆசாரியின் மகள் செல்லம்மா, மனைவி, மருமகன் கோபால், நிலக்கிழார் குமாரசாமி,  காவல் ஆய்வாளர், கலை வரலாற்றாய்வாளர் ரோஜர் வில்லியம்ஸ் உள்ளிட்ட துணைப் பாத்திரங்களும் நடிப்பில் தத்தம் பங்களிப்பைக் குறையின்றி வழங்கியுள்ளனர். மேடையில் வழக்கமான அரங்க அமைப்புகளைத் தவிர்த்து, பிரம்மாண்டமான டிஜிட்டல் பின்புலத்தைப் பயன்படுத்தியுள்ள புதுமை பாராட்டத்தக்கது. எனினும் அந்தத் திரை வரம்பிற்கு அப்பாலும் பாத்திரங்கள் நிற்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோன்று, மேடை ‘மைக்’குகளுக்குப் பதிலாக, பாத்திரங்களின் தலையைச் சுற்றி ஒலிவாங்கியைப் பயன்படுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அவை வெள்ளை நிறத்தில் அல்லாது கருப்பு நிறத்தில் இருந்திருந்தால், பார்வைக்குச் சற்று உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கும். பின்னணி இசையின் துல்லியமும் பாடலின்  கனீரென்ற குரல்களும் ஈர்க்கின்றன. ஒளியமைப்பும் ஒப்பனையும் அருமை. இடையிடையே வரும் நிதீஷ் குமாரின் ‘சிவ’தாண்டவம் நேர்த்தியாக இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதன் குறியீடு என்னவென்பது (எஸ் பி எஸ்) ‘ராமனு’க்குத்தான் வெளிச்சம்! பொதுவாகச் சிலைத்திருட்டு பற்றி அமையாமல், வசதியாக சிவபுரம் நடராஜர் வழக்கைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளதால், சிலைத் திருட்டில் கைக்கொள்ளப்படும் செயல்முறைகள் குறித்து ஒரு முழுமையான தோற்றம் வெளிப்படாதது ஒரு குறையே. சிலைத் திருட்டில் கடவுளர் சிலைகள் மட்டுமின்றி, பழமையான கலைப் பொருட்களும் ஓவியங்களும்கூட அடங்கும். இதனை பக்தி நாடகமாகவே உருவகித்துவிட்டதால், ஒரு ‘திரில்லர்’ அளவிற்குச் செல்ல வேண்டிய கதையோட்டம் இல்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம், சிலைத் திருட்டின் மர்மத்தை முதல் காட்சியிலேயே உடைக்காமல், விறுவிறுப்பான விசாரணையின் முடிவில் வழக்கின் முடிச்சை அவிழ்த்திருந்தால், குறைவான எண்ணிக்கையிலேயே படங்களைத் தந்திருந்தாலும் தமிழ்நாட்டின் ஹிட்ச்காக் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.பாலச்சந்தரின் புதல்வரானஇயக்குநரிடமும் அவரின் மரபு வெளிப்பட்டிருக்கும். மதிப்பெண் 6.5/10

நீலகண்ட பிரம்மச்சாரி – 24

நீலகண்ட பிரம்மச்சாரி – 24

காட்சி 24 காலமும் இடமும் பாத்திரங்களும் : முந்தைய காட்சியின் தொடர்ச்சி (ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் உரையாடலைத் தொடர்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா விருந்தினர் விடுதிக்குப் போனதும் சர்தார் பட்டேலிடமும் மகாதேவ தேசாயிடமும் என்னைப்பற்றிச் சொல்லிவிட்டு, ‘நீங்கள் இவரைச் சந்திக்க வேண்டும். தவறினால் நீங்கள் வருத்தமடைவீர்கள்’ என்று சொல்ல, ஆர்வம் கொண்ட அவர்கள் என்னை வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள். என் சந்திப்பு பற்றிய விவரம் காந்தியடிகளிடம் சொல்லப்பட்டது. காந்திஜி என்னைப்பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே, என்னைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது உடல் நலம் கருதி, அவரை நானே பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு, காந்தியடிகளை நான் சென்று சந்தித்தேன். காந்தியடிகளின் சந்திப்பு எனக்கும் அவருக்குமே மன நிறைவாக இருந்தது. நாங்கள் அரசியல் ஏதும் பேசவில்லை. அவர் எனது ஆன்ம சோதனைகள் பற்றியே அதிகம் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசிவிட்டு விடைபெற்று வந்தேன். சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. நான் இங்கிருந்த சில நாட்களில், இந்த ஆசிரமத்தில் நான் கண்ட காட்சிகளும் உங்களைப் பற்றி நீங்கள் சொன்ன செய்திகளும் மிகுந்த வியப்பையும் பிரமிப்பையும் தந்தன. ஆனால் தன்னடக்கம் கருதியோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ நீங்கள் சொல்லாத செய்திகளையும் நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவை உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் மரியாதையை இன்னும் உயர்த்தி வைக்கின்றன. ஓம்கார் சுவாமிகள் : அப்படி என்ன கேள்விப்பட்டீர்கள் இந்த சாமியாரைப்பற்றி? சங்கர கிருஷ்ணன் : உங்கள் மாசு மருவற்ற நல்லொழுக்கம் பற்றி, எந்தப் பொருளையும் உரிமை கொள்ளாது ஆசிரமவாசிகளிடமும் மக்களிடமும் பகிர்ந்துகொள்வது பற்றி, ஏழைகளின் மீது நீங்கள் கொண்டுள்ள பரிவையும் கருணையையும் பற்றி, உங்கள் பிரசங்கங்கள் பற்றி, பள்ளிக் குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு அவர்களுக்குச் செய்யும் உதவிகள் பற்றி, பலப்பல செய்திகளை ஆசிரமத்திலும் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கேட்க முடிந்தது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) இதெல்லாம்தான் துறவியின் குணங்கள். (மீண்டும் சிரித்துவிட்டு) நான் நல்ல சாமியார்தான் அல்லவா? சங்கர கிருஷ்ணன் : (தானும் சேர்ந்து சிரித்துவிட்டு) கணக்கு எழுதுபவர், சரக்கு பிடிக்கும் ஏஜெண்ட், பத்திரிகைக்காரர், பிரசங்கி, புரட்சிக்காரர், எழுத்தாளர் என்ற பல முகங்களைக் கொண்ட நீங்கள், துறவியாக மாறிவிட்டபோதிலும் உங்களைப் பற்றிய புரட்சி முகமே எனக்குப் பிடிக்கிறது. ஏனெனில், ஒரு துறவிக்கு வேண்டிய தன்னலம் கருதாமை என்ற பண்பு நலன் உங்களிடத்தில் நிறைந்திருப்பதை, பழைய புரட்சிகரப் பாத்திரத்தின் தொடர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் வரலாற்றில் வந்து போனவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் சித்திரங்கள் மிகச் சொற்பமானவை என்பதுதான் மிகப் பெரிய விசித்திரம். இன்று நான் விடைபெற்றுக் கொள்கிறேன் சுவாமி. இந்த ஆசிரமவாசிகளின் உபசரிப்பையும் உங்கள் அன்பையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன். மீண்டும் ஒரு நாள் வாய்த்தால் உங்களைக் காண வருவேன். ஓம்கார் சுவாமிகள் : நீங்கள் வரும்போது உங்களை உபசரிக்க நான் இருப்பேனா என்று தெரியாது தம்பி. என் ஞாபகமாக நான் எழுதியிருக்கும் புத்தகத்தைத் தருகின்றேன். பெற்றுக்கொள்ள வேண்டும்.(சொல்லிவிட்டு, தயாராக எடுத்து வைத்திருக்கும் புத்தகத்தைதின் தலைப்பை வாசித்துவிட்டுத் தருகிறார்.) Confessions, Upadesh and Talks – இது நான் எழுதிய மூன்று நூல்களின் தொகுப்பு. Confessions on the way towards Peace – சாந்தியின் மார்க்கத்தில் மெய்ஒப்புதல் என்ற தலைப்பில் எனது புரட்சிக் காலத்திய நினைவுகளை எழுதியிருந்தேன். இதற்கு அரவிந்தர் முன்னுரை எழுதியிருக்கிறார். இந்தப் பழைய நினைவுகள், நான் துறவியாவதற்கு முன் எழுதியவை. துறவியானபின் இந்நூலை வெளியிட என் மனம் ஒப்பவில்லை. உங்களிடம் தந்த புத்தகத்தில் Confessions என்ற பகுதி அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மட்டுமே. Upadesh – உபதேஷ், என் ஆன்மீக சாதனங்களைப் பற்றியது. 1946இல் வெளியானது. Talks – பொறுக்கியெடுக்கப்பட்ட உரைகள் என்ற என் சொற்பொழிவுகளின் தொகுப்பு 1971இல் வெளியானது. சங்கர கிருஷ்ணன் : வந்தனம் சுவாமி.. வருகிறேன். (கும்பிட்டு விடைபெறுகிறார்) (திரை விழுகிறது. பின்னணியில் குரல் ஒலிக்கிறது) குரல் : நூறாண்டுக்கு முன்பு ‘தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறி, கெட்டுப் பாழ்பட்டு’ நின்ற இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் வந்தவர்களின் வழிமுறைகளும் சுயநலமில்லாத செயல்பாடுகளும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டுத் தண்டனை பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் தங்கள் இருப்பினைத் தொடர, ஒவ்வொருவராக ஆன்மீகத்தில் சென்று ஆசிரம வாழ்க்கையை ஒரு மாற்றாகக் கொண்டிருக்கின்றனர். அரவிந்தர், வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்த வரிசையில் வந்தனர். பாரதி மறைந்தபோது, அவர் தீவிர அரசியலில் இல்லை. வ.உ.சி.யின் கடைசி நாட்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறிவோம். ஆனால் 16 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தபின், துறவியான நீலகண்டர் பற்றி, அவர் காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் சொல்லும் குறிப்புகள், அவர் மீதான ஏதோ ஒரு வெறுப்பு தடவிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டிலிருந்து பல மைல்கள் தாண்டித் தனது துறவு வாழ்க்கையை அவர் வைத்துக்கொண்டதைப் பார்த்தால், அவரும் அதை உணர்ந்திருந்தாரோ என்று தோன்றுகிறது. அவரது ஆசிரம வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டின் முதல் புரட்சிக்காரன் என்று சொல்லுக்குத் தகுதியான நீலகண்ட பிரமச்சாரியிடமிருந்தும் மக்கள் தொண்டுக்காகத் தனது ஆசிரம வாழ்க்கையை விதித்துக்கொண்ட ஓம்கார் சுவாமிகளிடமிருந்தும் நாம் விடைபெற்றுக்கொள்வோம். தியாகமும் தொண்டும் எந்தக் காலத்திலும் நினைவு கூரப்படும். வணக்கம். (நிறைவு) நிறைவும் நன்றியும் சுவடு நேயர்களுக்கு வணக்கம். 24 காட்சிகளாக தினமும் நான் எழுதிய நாடகத்தில், உடன் பயணம் செய்து உற்சாகப்படுத்திய வாசக நண்பர்களுக்கு நன்றி நவிலும் தருணம் இது. பாரதி ஆய்வாளர் ரா.ஆ. பத்மநாபன் அவர்கள் எழுதிய சித்திர பாரதி படித்தபோது, நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி அதில் அவர் எழுதியிருந்த ஒருபக்கக் கட்டுரைதான் எனது நாடகத்தின் ஆரம்பம் என்று சொல்வேன். அதிலிருந்து, இந்தப் புரட்சிக்கார நீலகண்டர் பற்றிய குறிப்புகளைப் பல நூல்களில் தொடர்ந்து வந்தேன். சிறு துளிகளாகக் கிடைத்த அவற்றைக் கோர்த்து இந்த நாடகத்தை உருவாக்கி முடித்தேன். இதை உருவாக்கும் முன் எனக்குச் சில யோசனைகளை வழங்கிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு என் முதல் நன்றி. வ.உ.சி. ஆய்வாளர் ரெங்கையா முருகன் மற்றும் அவரிடம் என்னை ஆற்றுப்படுத்திய நெல்லை ஓவியர் வள்ளிநாயகம் ஆகியோருக்கும் எனது நன்றி. AITUC தமிழ் மாநிலத் தலைவர் தோழர் காசிவிசுவநாதன் நிறைய தகவல்களைத் தந்துதவினார். அவருக்கு எனது நன்றி. நாடகம் வளர்ந்துகொண்டிருந்தபோது சில தகவல்களை பகிர்ந்துகொண்ட கோவை வழக்கறிஞர், தோழர் ஞானபாரதி அவர்களுக்கும் எனது நன்றி. எப்போதும் என்னுடன் இருந்து, நாடக உருவாக்கத்தில் பயணித்த என் அன்புத் தோழன் கோவை பிரசன்னாவுக்கும் நாடக ஆக்கத்தில் தொடர்ந்து ஊக்கப்படுத்திய சுவடு ஆசிரியர் நல்லுவுக்கும் என் நன்றி. நாடகப் பக்கத்தின் முகப்புப் படத்தைத் வடிவமைத்துத் தந்த வாலறிவன் பதிப்பக நண்பர் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. நாடகத்தைத் தினந்தோறும் வாசித்தும் பகிர்ந்தும் நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டியும் என்னை உற்சாகப்படுத்திய சுவடு வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகள் பல. நாடகம் உருவாகத் துணைபுரிந்த நூற்பட்டியல் :

நீலகண்ட பிரம்மச்சாரி – 23

நீலகண்ட பிரம்மச்சாரி – 23

காட்சி 23 காலம் : 1936ஆம் வருடம் மே மாதம் இரண்டாம் தேதிஇடம் : ஓம்கார் ஆசிரமம்பாத்திரங்கள் : ஜே.சி.குமரப்பா மற்றும் சிலர் ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (அங்கிருக்கும் ஆசிரமவாசியிடம் கன்னடத்தில்) இதோ, இவர் பெயர் ஜே.சி.குமரப்பா. மகாத்மா காந்திஜியின் சீடர். சுவாமிஜியைப் பார்க்க வந்திருக்கிறார். ஆசிரமவாசி : சுவாமிஜி அந்தக் குன்றின் மேல் இருக்கிறார். இப்போதெல்லாம் அவர் கீழே வருவதில்லை. அவரைப் பார்க்கவேண்டுமென்றால் நீங்கள்தான் மேலே போய்ப் பார்க்க வேண்டும். ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (குமரப்பாவிடம் இந்தியில்)ஐயா, சுவாமிஜி இப்போது அந்தக் குன்றின் மேல் இருக்கிறாராம். கீழே வருவதில்லையாம். நாம்தான் மேலேறிப் போய்ப் பார்க்க வேண்டுமாம். குமரப்பா : அதற்கென்ன? அவரைப் பார்க்கத்தானே வந்திருக்கிறேன்! குன்றேறலாம் வாருங்கள். (மேடை, குன்றின் மீதிருக்கும் ஓம்கார் சுவாமிகளின் குடில் அமைப்புக்கு மாறுகிறது) குமரப்பா : (தன்னுடன் வந்தவரிடம் இந்தியில்) ஆசிரமம் மிகுந்த எளிமையுடன் காட்சி அளிக்கிறது. ஒரு பிராமணன் வசிக்கும் ஆசிரமத்தில் பிராமணரல்லாதவரும் சேர்ந்து வசிப்பது வியப்பளிக்கிறது. (‘வாருங்கள் குமரப்பா’ என்ற தமிழ்க் குரல் குமரப்பாவை வரவேற்க, சிலிர்த்துத் திரும்புகிறார். கனிவும் சிரிப்பும் பொங்கிப் பொலியும் தோற்றத்தில் ஓம்கார் சுவாமிகள் குடிலின் வாசலில் வந்து கும்பிட்ட கைகளுடன் குமரப்பாவை வரவேற்கிறார்.) குமரப்பா : (தானும் கும்பிட்டவாறே தமிழில்) தாங்கள்…? ஓம்கார் சுவாமிகள் : அடியேன்தான் நீங்கள் தேடி வந்திருக்கும் ஓம்கார். குமரப்பா : வணக்கம் சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா வந்திருக்கிறார் என்றவுடன், நானே வந்து வரவேற்க வேண்டும் என்று வந்துவிட்டேன். உள்ளே வாருங்கள்.. (எல்லோரும் உள்ளே வருகிறார்கள். குடிலின் உள்ளே சுவாமியைத் தவிர இருவர் அமர்ந்தாலே இடித்துக்கொண்டுதான் அமர வேண்டும் என்பதுபோலச் சிறிய அறை) குமரப்பா : இத்தனை சிறிய அறையா? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) குமரப்பா கேட்டதாலேயே இந்தக் கேள்வி அர்த்தமுடையதாகிவிட்டது. ஆமாம், என் தனிமையின் பொருட்டு ஏற்படுத்திக்கொண்ட குடில் இது. குமரப்பா : என்னை அறிவீர்களா? ஓம்கார் : தமிழர் என்றும் தஞ்சாவூர்க்காரர் என்றும் காந்தியின் சீடர்களில் மிகவும் கறாரானவர் என்பது வரையிலும் அறிவேன். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. காந்திஜியும் அவர் சீடர்களும் நந்தி மலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று காலைப் பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். காந்திஜி நலமா? ஓய்வெடுக்க வந்திருப்பதாகப் போட்டிருந்தார்களே? குமரப்பா : ஆமாம். இரத்த அழுத்தம் சீராக இல்லை. மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் இந்த மலைச்சாரலுக்கு ஓய்வெடுக்க வந்திருக்கிறார். சில நாட்கள் இங்குதான் இருப்பார். ஓம்கார் : என்னைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது என் நற்பேறு. குமரப்பா : நாங்கள் நந்திமலைக்கு வந்த ஓரிரு நாட்களில் உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அடிவாரத்தில் நாங்கள் தங்கியிருக்கும் விருந்தினர் விடுதியிலிருந்து பார்க்கும்போது, இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மலையிலிருந்து அடிவாரத்தை நோக்கி விளக்கு ஒன்று அசைவதும் பதிலுக்கு கீழே இருந்து மேலே ஒளி செல்வதையும் பார்க்க முடிந்தது. இந்த சமிக்ஞை குறித்து விசாரித்தபோது, மேலே ஒரு சாது இருக்கிறார் என்றும் அவர் ஆசிரமத்தின் தலைவர் என்றும் தெரிந்தது. மேலும் விசாரிக்க, பூர்வோத்திரத்தில் புரட்சிக்காரராக இருந்த நீலகண்ட பிரமச்சாரிதான் அவர் என்பதும் தெரிந்தது. ஆகவே ஆவல் மேலிட்டுக் கிளம்பி வந்தேன். விசாரித்ததில் உங்கள் ஆசிரமப் பணிகளும் வியப்பளித்தன. சுவாமிஜி, அது என்ன சமிக்ஞை? ஓம்கார் சுவாமிகள் : கீழே ஆசிரமத்தில் போதிய தனிமை எனக்குக் கிடைக்கவில்லை. மக்கள் தங்கள் லோகாயதச் சிக்கல்களுக்கெல்லாம் என்னிடம் தீர்வைத் தேடி வந்துவிடுகிறார்கள். கடவுள் பக்தியில் சிந்தையைச் செலுத்தியும் சுயநலமின்றியும் உங்கள் மனம் சொல்லும் முடிவை நாடுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு தீர்வு என்னிடம் ஏது? ஆகவே தனிமைக்காக மேலே வந்துவிட்டேன். யாரும் சொந்தக் காரணங்களுக்காக மேலே வரவேண்டாம் என்றும் கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். நான் மேலே நலத்துடன் இருக்கிறேன் என்பதை ஆசிரமவாசிகள் தினமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அதற்காகவே இந்த ஒளி உரையாடல். குமரப்பா : நல்லது. உங்கள் பழைய புரட்சி வாழ்க்கையை இந்த ஆன்மீக மாற்றம் செரித்துக்கொண்டதா? அவை எந்தப் புள்ளியில் பொருந்திப் போகின்றன? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், செரித்துக்கொண்டது. அவை முற்றிலும் மாறுபட்டவை. புரட்சிக்காரன் என்ற அடையாளத்தை உதறிக்கொண்டு பிறரோடு இணங்கி இருப்பதற்கு நான் தேடிக்கொண்ட புதிய வாழ்க்கை இது. தனித்த சிறை வாழ்க்கையில் என் உள்ளத்துடன் மட்டுமே பேசிக்கொண்டு என்னை நான் கண்டுகொண்ட எனது ஆன்ம வெளிப்பாட்டை, ஆசிரமம் என்ற கூட்டு வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறேன். தொண்டு என்பதை மட்டுமே இரண்டு வாழ்க்கையிலும் பொருந்திப்போகிற புள்ளி என்று சொல்லுவேன். அது இருக்கட்டும்.. உங்கள் பழைய கிறித்தவ மரபு சார்ந்த வாழ்க்கையும் காந்தியடிகளுடன் உங்கள் சேவையும் எந்தப் புள்ளியில் பொருந்திப்போயின அன்பரே? குமரப்பா : நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள்? அவையும் பொருந்தாதவைதான். தேசத் தொண்டு, சுயத்தை முன்னிறுத்தாத அரசியல், அஹிம்சையும் சத்தியமும் இணைந்த வாழ்க்கை நெறி, சலிப்பில்லாத போராட்டம், இப்படிப் பல புள்ளிகளில் என் வாழ்க்கை அடியோடு மாறிப்போனது. (உரையாடலுக்குப் பிறகு குமரப்பா விடை பெறும் நேரத்தில்) ஒரு வேண்டுகோள். நான் ஆசிரமத்தைப் பார்வையிட விரும்புகிறேன். அனுமதிக்க வேண்டும். ஓம்கார் சுவாமிகள் : நீங்கள் ஆசிரமத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்பதே பெருமை அல்லவா? (ஆசிரமவாசியிடம்) இவருக்கு ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டுங்கள். குமரப்பா : வருகிறேன்.. வணக்கம். ஓம்கார் சுவாமிகள் : காந்திஜியிடம் நலம் விசாரித்தததாகச் சொல்லுங்கள். குமரப்பா : சொல்கிறேன்.. யார் கண்டது? அவரே உங்களைப் பார்க்க விரும்பினாலும் ஆச்சரியமில்லை. வருகிறேன். ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள். (குமரப்பா விடைபெற்றுச் செல்கிறார். ஆசிரமவாசியும் அவருடன் செல்கிறார். மேடையில் காட்சி மாறி, சங்கர கிருஷ்ணனுடன் ஓம்கார் சுவாமிகள் பேசுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : தம்பி.. குமரப்பா பற்றி உங்களுக்குத் தெரியுமா? சங்கர கிருஷ்ணன் : தெரியாது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : மிகச் சிறந்த பொருளாதார மேதை. காந்தியப் பொருளாதாரத்தை விளக்கிச் சொல்வதில் அவருக்கு இணை அவர்தான். காந்திஜியின் சீடர்களிலேயே மிகவும் கறாரானவர். ஒரு சமயம் குமரப்பா பீகார் நிலநடுக்க நிவாரணப் பணியில் இருந்தார். அவர்தான் நிவாரண நிதிப் பொறுப்பைக் கவனித்து வந்தார். நிவராணப் பணியில் இருக்கும் தொண்டர்களுக்கு ஒருநாள் உணவுக்கு மூன்றணாதான் விதித்திருந்தார். அப்போது நிவாரணப் பணிகளைப் பார்வையிட காந்தியடிகள் வந்திருந்தார். அவருக்காக பால் மற்றும் பழங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். காந்தியடிகளின் செயலாளர் தேசாயிடம் மூன்றணாவுக்கு மேல் செலவு செய்ய முடியாது, காந்தியடிகளிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் குமரப்பா.அடுத்த நாள் காந்தியடிகள் வந்த காருக்குப் பெட்ரோல் போட்ட பில் வந்தது. முடியாது என்று மறுத்தார் குமரப்பா. காந்தியடிகள் இதை அறிந்ததும், ‘நான் நிவாரணப் பணிக்கு வந்திருக்கும் பெட்ரோல் செலவையும் மறுப்பீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘பொதுமக்கள் தந்திருக்கும் நிவாரண நிதியை, நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்பதால், இந்தச் செலவு மறுக்கப்பட்டது’ என்று சொல்லிவிட்டார். காந்திஜி அதை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் நிவாரணப் பணியில் சேராத செலவுகள் எதையும் கோர வேண்டாம் என்று தன் செயலர் தேசாயிடம் சொல்லிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா! எப்படியான மனிதர்கள்..! சரி, காந்திஜியுடனான உங்கள் சந்திப்பு குறித்துச் சொல்லுங்கள் சுவாமி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

காட்சி 22 இடம் : ஓம்கார் ஆசிரமம், நந்தி மலை.பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : இந்த நந்திமலை வனத்திற்குள் ஒரு சுனை இருக்கிறது சங்கர கிருஷ்ணன். தட்சிணப் பிநாகினி இங்கிருந்து கிளம்பி ஓடுகிறாள். இவள் தமிழ்நாட்டுத் தென்பெண்ணை. இங்கிருந்து கிளம்பித் தமிழ்நாட்டுக்குப் போகிறாள். நான் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பி இவள் மடிக்கு வந்து சேர்ந்தேன்.இந்த நதி கடலில் சேரும் இடத்திற்கும் எனது சொந்த ஊரான எருக்கூருக்கும் சுமார் நாற்பது மைல்கள் இருக்கலாம். ஏதோ ஒரு தொந்தம்போல, நான் பிறந்த இடத்துக்கு அருகே பாயும் பெண்ணை நதியின் உற்பத்தி ஸ்தானத்தில் என் வாழ்க்கை நிலைபெற்றது. இன்னும் கொஞ்ச காலத்தில் இவள் மடியிலேயே என் வாழ்க்கையும் முடிந்து போகலாம். (சற்று அமைதிகொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : (சில கணங்கள் காத்திருந்து) சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : நான் சென்னையிலிருந்து கிளம்பிய பிறகு, இந்த நாட்டின் பல பிரதேசங்களில் அலைந்து திரிந்தபின் இந்த நந்தி மலைக்கு 1933இல் வந்து சேர்ந்தேன். சங்கர கிருஷ்ணன் : அப்போ இரண்டு வருடமாக அலைச்சல்தானா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : இங்கு வரும் முன்பு, ஆனகுந்தி சமஸ்தானத்தில் சிலநாட்கள் இருந்தேன். துறவியாக மாறி நிலைகொள்ளத் தொடங்கிய இடம் அது. சென்னையை விட்டுக் கிளம்பிய நான், மத்திய பாரதம் வரை பல ஊர்களில் பரதேசியாகத் திரிந்தேன். கன்னட தேசத்தின் துங்கபத்ரா நதிக்கரையோரம் சிலநாள் சாதுவாக அலைந்துகொண்டிருந்தபோது அங்கு வந்தார் ஆனகுந்தி சமஸ்தானத்தின் ராணி குப்பம்மா. சங்கர கிருஷ்ணன் : ராணி குப்பம்மாவா? ஓம்கார் சுவாமிகள் : விஜயநகர அரசின் கடைசிக் கிளை வழியில் வந்தவர் அவர். அந்த சமஸ்தானத்தின் சிவன் கோவிலில் பூஜகராக இருக்குமாறு என்னை அழைத்தார்.அவருடைய வலிந்த அழைப்பைத் தட்டமுடியாமல் அங்கு சிலகாலம் ஒரு குடிலில் எனது ஆசிரமத்தை அமைத்தேன். அது சிந்தாமணி ஆசிரமம். (மேடை அமைப்பு மாறுகிறது) காலம் : 1932ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள்இடம் : துங்கபத்திரை நதிக்கரை ஆசிரமக் குடில்பாத்திரங்கள் : ராணி குப்பம்மா, நீலகண்ட பிரம்மச்சாரி (கன்னடத்தில் உரையாடுகிறார்கள்) ராணி குப்பம்மா : சுவாமி, நீங்கள் இங்கு வந்த பிறகு நானும் இந்தப் பிரதேசத்து மக்களும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீலகண்ட பிரம்மச்சாரி : ஆனால் நான் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இப்படிச் சொன்னதற்கு மன்னிக்க வேண்டும் மகாராணி. இந்த ஆசிரமத்தில் இப்போது மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. நான் தனிமையை விரும்புகிறேன். அது இப்போது கிடைப்பதே இல்லை. ராணி குப்பம்மா : மன்னிக்க வேண்டும் சுவாமி, பக்தர்கள் உங்களைச் சந்திப்பதில் காட்டும் ஆர்வத்திற்கு எங்களால் அணை போட முடியவில்லை. இப்போது உங்களிடம் ஒரு உதவி கோரி வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி : சொல்லுங்கள் மகாராணி.. ராணி குப்பம்மா : பக்கத்து சமஸ்தானத்து ராஜகுமாரியின் பெயர் லால்குமாரி. அவரது குடும்பத்தினரும் உங்கள் பக்தர்கள்தான். அவரை எங்கள் குடும்பத்திற்கு மணம் பேச விரும்புகிறோம். ஏனோ அவர்கள் தரப்பில் தயக்கம் காட்டுகிறார்கள். நீங்கள் சென்று பேசினால் நடக்கும். தாங்கள் இந்த உதவியைச் செய்ய வேண்டும். நீலகண்ட பிரம்மச்சாரி : தாயே, நான் துறவி. என்னிடம் இந்த வேலைகளைச் செய்யச் சொல்வது சரியல்ல. மன்னிக்க வேண்டும். ராஜகுமாரி குடும்பத்தார் என்னிடம் வைத்திருக்கும் மரியாதைக்காக நான் தலையிட்டு இப்படிச் சம்பந்தம் பேசுவதெல்லாம் தவறாகப் போய்விடும். இது என் வேலையல்ல. ராணி குப்பம்மா : கொஞ்சம் யோசியுங்கள் சுவாமி. நீங்கள் சென்றால் இரண்டு சமஸ்தானங்களும் நன்மை பெறும். நீலகண்ட பிரம்மச்சாரி : நீங்கள் கிளம்புங்கள் மகாராணி. இது என்னால் முடியாது. (ராணி கிளம்புகிறார். மேடை அமைப்பு மீண்டும் மாறுகிறது) ஓம்கார் சுவாமிகள் : அப்போது நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் தேடி வந்த ஆத்மானுபவம் எங்கே? ஆனால் நான் எங்கு வந்து நிற்கிறேன்?! இந்தத் தொந்தரவுகள் என்னை எங்கே கொண்டு சேர்க்கும் என்றெல்லாம் நீண்ட நேரம் யோசித்தேன். அன்று இரவே வெளியேறினேன். 1933ஆம் வருடம் டிசம்பர் மாதம் இந்த நந்தி மலை அடிவாரத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் படுத்துக்கொண்டேன். அந்தத் தனிமை எனக்கு பிடித்துப் போனது. அந்த மண்டபமே எனது எளிய ஆசிரமம் ஆனது. காய் கிழங்குகளையும் இந்த நதி நீரையும் ஆகாரமாகக் கொண்டு அந்த மண்டபத்திலேயே தவசியாக வசிக்கத் தொடங்கினேன். சங்கர கிருஷ்ணன் : அந்த மண்டபம் எது சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : கீழே ஒரு கோவில் இருக்கிறதல்லவா? சிவன் கோவில். இந்த ஆசிரமம் அந்தக் கோவிலை மையமாக வைத்தே நடக்கிறது தம்பி. அந்தக் கோவில்தான் 1933இல் பாழடைந்த மண்டப மாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : இப்போது நான் சொல்லப் போவதை நம்புவீர்களா என்று தெரியாது. அந்த மண்டபத்தின் பக்கத்தில் ஒரு புற்று இருந்தது. பெரிய கரையான் புற்று. இங்குள்ள மக்களுக்கோ எனக்கோ அதனால் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனாலும் அந்தப் புற்று என்னை ஏனோ உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்குள் இருந்து என்னை யாரோ அழைப்பது போல. அது 1934ஆம் வருடம். அந்த வருடத்துப் பருவ மழை இந்தப் பிராந்தியத்தில் அடித்துப் பெய்தது. தென்பெண்ணை பிரவாகத்தில் இந்தப் பக்கமெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஒரு வார காலம் வானம் உடைத்துக்கொண்ட பிறகு நிர்மலமானது. உயிர்கள் நிம்மதி கொண்டன. வெள்ளமும் வந்த வேகத்தில் வடிந்து போனது. போகும்போது புற்றையும் சேதப்படுத்திவிட்டுப் போனது. சற்றே சிதைந்திருந்த புற்றில் சிவலிங்கம் ஒன்று எட்டிப் பார்த்து அந்த மழைக்காலச் சூரிய ஒளியில் மின்னியது. நான் இங்குள்ள குடிகளோடு சேர்ந்து சிவலிங்கத்தை புற்றிலிருந்து வெளியேற்றி மண்டபத்தில் கொண்டு வைத்துப் பிரதிஷ்டை செய்தேன். அவருக்கு ஓம்காரேஸ்வரர் என்று நாமம் சூட்டினேன். அவர் பெயரையே எனக்கும் சூட்டிக்கொண்டேன். 1934ஆம் வருடம் ஜூலை மாதம் இந்த ஆசிரமம் கோவில் பக்கத்தில் உருவானது. இந்த வருடத்தோடு நாற்பது ஆண்டுகள் முடிந்துபோய்விட்டன. (கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : ஆசிரமத்தில் என்னவெல்லாம் செய்து வருகிறீர்கள் சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : பார்த்திருப்பீர்களே.. கூட்டுப் பிரார்த்தனை மற்றும் ஆன்மீகப் பிரசங்கங்கள், ஆத்ம சோதனைகள் இதெல்லாம் பிரதானமானவை. தவிர, பக்தர்களும் தரும சிந்தனை உள்ள தனவான்களும் கனவான்களும் தரும் பொருளுதவி கொண்டு மக்களுக்கு எளிய தொண்டுகள் செய்து வருகிறோம். எளிய கைத்தொழில்களில் இங்குள்ள பெண்களை ஈடுபடுத்தி, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை ஆசிரமத்தின் மூலமாகவே விற்பனை செய்து உதவுகிறோம். ஆசிரமவாசிகள் கதரைத்தான் இப்போது வரை அணிகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்களே நூற்கவும் செய்தோம். மலைக் குடிகளுக்குச் சட்டபூர்வ உதவிகள் செய்வது, மருத்துவ உதவி செய்வது, பசித்து வரும் ஏழைகளுக்கும் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் ஆசிரமத்தில் மதிய உணவு தருவது..ஒன்று தெரியுமா? நான் இதைச் சிங்காரவேலர் நினைவாகச் செய்து வருகிறேன். ஏனெனில், ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு தரவேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. அவர் சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தபோது 1925இலேயே இதைச் செய்திருக்கிறார் என்று நான் சிறையில் இருந்தபோது பத்திரிகை வாயிலாகத் தெரிந்து வைத்திருந்தேன். ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – இங்குவாழும் மனிதருக்கெல்லாம்பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்‘ என்று பாரதியார் சொன்னாரல்லவா தம்பி? சங்கர கிருஷ்ணன் : ஆசிரமத்திற்கு காந்தியடிகள் வந்தாரென்று சொன்னீர்களே.. அது எப்போது சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : சொல்கிறேன், ஆசிரமத்துக்கு வரவில்லை. இந்த நந்திமலை அடிவாரத்து விருந்தினர் விடுதிக்கு வந்திருந்தார். என்னைப் பார்க்க விரும்பிய அவரை நான் சென்று தரிசித்தேன். அதற்கு முன்பு ஜே.சி. குமரப்பா வந்ததைச் சொல்ல வேண்டும். அவர்தான் காந்திஜி வருகைக்குக் கட்டியம் கூறுவதுபோல ஆசிரமத்திற்கு வந்தார். வாருங்கள் ஆகாரம் முடித்த பிறகு பேசலாம். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 21

நீலகண்ட பிரம்மச்சாரி – 21

காட்சி 21 காலம் : 1930ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தேதிஇடம் : ‘தி ஹிந்து’ பத்திரிகை அலுவலகம், சென்னை.பாத்திரங்கள் : ஹிந்து ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசன், நீலகண்டர் நீலகண்டர் : நமஸ்காரம். அடியேன் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி. என்னை நீங்கள் அறிவீர்கள். சீனிவாசன் : நமஸ்காரம் நீலகண்டர். உம்மைத் தெரியுமே.. உமது சுடர் விடும் கண்களில் கனிவும் உமது முகப்பொலிவில் சாந்தமும் இப்போது காண்கிறேன். சிறைவாசம் உம்மை மாற்றியிருக்கிறது போலும். எப்போ வெளியில் வந்தீர்..? நீலகண்டர் : ஒரு மாதம் ஆகிறது. ரங்கூனிலிருந்து சென்னைக்கு நேற்றுதான் வந்தேன் அண்ணா. வயிற்றுப் பாட்டுக்கு ஒரு வேலை வேண்டி வந்திருக்கேன். உங்கள் பத்திரிகையில் ஏதேனும் வேலை கொடுத்து உதவ வேண்டும். சீனிவாசன் : செய்யலாம் நீலகண்டர். உமது எழுத்தாற்றல் பற்றி எனக்குத் தெரியும். இப்போதைக்கு பத்திரிகையில் வியாசங்கள் எழுதுங்கள். தகுந்த சன்மானம் பெறறுக்கொள்ளுங்கள். சிறிது காலத்தில் பத்திரிகையில் வேலை தருகிறேன். நீலகண்டர் : சரி அண்ணா, எழுதுகிறேன். சீனிவாசன் : எதைப்பற்றி முதலில் எழுதப் போகிறீர்? நீலகண்டர் : சீக்கிய குருமார்களைப் பற்றி எழுதுகிறேனே.. சீனிவாசன் : பேஷ் பேஷ்.. எழுதுங்கள். முதல் கட்டுரை எப்போது தருவீர்கள்? நீலகண்டர் : நாளையே தருகிறேன். நீலகண்டர் : சபாஷ், நாளை மறுநாள் ஹிந்து வார இதழில் போட்டுவிடலாம். (மேடை ஓம்கார் ஆசிரமத்திற்கு மாறுகிறது) சங்கர கிருஷ்ணன் : சிறை வாழ்க்கை முடிந்ததும் எழுத்தாளரா? ஓம்கார் சுவாமிகள் : சீனிவாசன் வேலையில் ரொம்ப கெட்டி. வேலை வாங்குவதில் கறார் பேர்வழி. எழுதுகிறேன் என்ற உடனேயே நான் தயார் நிலையில் இருக்கிறேனா என்பதைத் தெரிந்துகொள்வது போலப் பேசினார் பாருங்கள். நாளை மறுநாள் போடவேண்டும் என்பதை எனக்கு விதித்துவிட்டார். உதவியது போலவும் உறுதிப்படுத்தியது போலவுமான பேச்சு. என் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த மாற்றமும் பேச்சில் இருந்த நிதானமும் அவருக்கு என்மீது பிடிப்பைத் தந்திருக்க வேண்டும். அவர் பத்திரிகை வேலையில் சூரர். அவரிடம் வேலை பார்க்கத் தொடங்கினேன். அவர் கேட்பதற்கு முன்பு வியாசங்களைக் கொடுத்துவிடுவேன். சங்கர கிருஷ்ணன் : முதல் கட்டுரைத் தொடரில் என்ன எழுதினீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : முதல் கட்டுரையில் ‘குருநானக்’ பற்றி எழுதினேன். அவர் சொன்னபடியே 1930ஆம் வருசம் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி வெளிவந்தது. தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை ஐந்து கட்டுரைகள் எழுதினேன்.N.B. என்ற பெயரில் அந்த வியாசங்கள் வந்தன. ‘குருநானக்கின் மதக் கொள்கை’ என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு கட்டுரையை நேயர்கள் விரும்பி ரசித்தார்கள்.இறுதிக் கட்டுரை, ‘குரு கோவிந்த சிங்’ குறித்து எழுதினேன். என் பழைய புரட்சிகர வாழ்க்கையின் இறுதி போலும், புதிய ஆன்மீகப் பாதையின் ஆரம்பம் போலும் அந்தக் கட்டுரைகள் அமைந்தன. சங்கர கிருஷ்ணன் : தொடர்ந்து ஆன்மீகக் கட்டுரைகளுக்கே போய்விட்டீர்களா? ஓம்கார் சுவாமிகள் : அதுதான் இல்லை. கொஞ்சமேனும் லோகாயத விருப்பங்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. இறக்கை முளைத்துப் பறக்கும் முன்பு, கூட்டுக் குஞ்சு போல என் எழுத்து வாழ்க்கை அமைந்தது. எனக்கு மற்றவர்களைக் கவரும் பேச்சாற்றல் இருப்பதை முன்னரே அறிவேன். எழுதவும் முடிகிறது என்பதை அடையாளம் காட்டிய பருவம் அது. சங்கர கிருஷ்ணன் : ஓ..! வேறென்ன எழுதினீர்கள்? (மேடை ஹிந்து அலுவலகத்திற்கு மாறுகிறது) சீனிவாசன் : நீலகண்டர், உமது கட்டுரைகள் ரொம்ப விரும்பப்பட்டன என்பது வாசகர் கடிதங்களால் தெரிய வருகிறது. சந்தோஷம் நீலகண்டர். அடுத்த வேலை என்ன செய்யலாம்? நீராக ஏதும் விருப்பமாய் எழுத ஆசை வைத்திருந்தால் சொல்லும். நீலகண்டர் : கம்பளித் தொழில் பற்றி எழுத விரும்புகிறேன். சீனிவாசன் : கம்பளித் தொழில் பற்றியா? அதைப்பற்றி உமக்கு என்ன தெரியும் நீலகண்டர்? நீலகண்டர் : மூல்தான் சிறையில் கம்பளி ரோமம் பிரிக்கும் வேலையில் என்னைப் போட்டார்கள். ரொம்பக் கஷ்டமான வேலை. இந்த வேலை பல தோல் நோய்களை உருவாக்கக் கூடியது. இப்படியான வேலையைத்தான் சுப்ரமணிய சிவாவுக்குக் கொடுத்து, அவருக்குத் தொழுநோய் வந்தது. இந்த வேலையின் கொடுமையைத் தாண்டி அதன் நுட்பங்களைக் கண்டறிந்தேன். சிறை அலுவர்களிடம் அந்தத் தொழில் பற்றிய நூல்களைக் கேட்டு வாங்கிப் படித்துக்கொண்டேன். இந்தத் தொழில் பற்றிய எனது புரிதல்களை எழுதலாம் என விரும்புகிறேன். சீனிவாசன் : சபாஷ் நீலகண்டர், எழுதிக் கொடும். பிரசுரித்து விடலாம். (மேடை ஓம்கார் ஆசிரமத்திற்கு மாறுகிறது) ஓம்கார் சுவாமிகள் : ‘இந்தியாவின் கம்பளிக் கைத்தொழில்’ (Woolen Handcraft in India) என்ற தலைப்பில் அது வெளியாயிற்று. சங்கர கிருஷ்ணன் : பிரமாதம் சுவாமிஜி. ஓம்கார் சுவாமிகள் : அப்புறம், ‘நைல் நதியின் சர்ப்பம் கிளியோபாத்ரா’ (Cleopatra, the snake of River Nile) என்றொரு வியாசமும் ஹிண்டுவில் எழுதினேன். அதோடு ஹிண்டுவில் எழுதுவது நின்று போனது. ஆங்கிலத்தில் எழுதியது போதும் என்று என் மனது சொல்லிக்கொண்டது. இதே காலத்தில், சுதேசமித்திரனிலும் எனக்கு எழுத வாய்ப்புத் தந்தார்கள். சுதேசமித்திரனில் பழைய சரித்திரங்களின் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு நான் எழுதி வந்தேன். சங்கர கிருஷ்ணன் : என்னென்ன எழுதினீர்கள் சுவாமிஜி? ஓம்கார் சுவாமிகள் : நினைவில் இருப்பதைச் சொல்கிறேன்.. லோடி கான் ஒரு பட்டாணி வீரன், கருணாகரத் தொண்டைமான், ராஜா ரணமல், பல்லவர் அரசு, பாணிபட் யுத்தம், கரிகால் சோழர், கண்டி யுத்தம், இப்படிப் பல சரித்திரக் கட்டுரைகள் எழுதினேன்.சி.நீ. என்ற பெயரிலும் ஸ்ரீமான் என்.கே. அய்யர் என்ற பெயரிலும் அவை பிரசுரமாயின. சங்கர கிருஷ்ணன் : என்.கே. அய்யர் தெரிகிறது. சி.நீ. என்றால்? ஓம்கார் சுவாமிகள் : சிவராம கிருஷ்ணன் நீலகண்டன். இவ்வளவோடு என் எழுத்தாளர் வாழ்க்கை முடிந்து போனது. என் பரதேசி வாழ்க்கை என்னை அழைத்தது.. 1931 ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கியதும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நான் சென்னையைவிட்டு விலகிப் போனேன். ஓரிடத்தில் நிற்கப் போகிற கடைசி ஓட்டம் அது. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 20

நீலகண்ட பிரம்மச்சாரி – 20

காட்சி 20 காலம் : 1928ஆம் வருடத்தில் ஒருநாள் காலைஇடம் : ரங்கூன் சிறைச்சாலை, பர்மாபாத்திரங்கள் : சிறை அதிகாரி, நீலகண்டர் சிறை அதிகாரி : நீலகண்ட பிரம்மச்சாரி.. மதராசி.. Age thirty nine.. தமிழன்.. நீலகண்டர் : நீங்கள் தமிழ் அறிவீரா? சிறை அதிகாரி : ஆம், நன்றாகத் தெரியும். records பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. நல்ல பிள்ளையா மாறிட்டு வாறீங்க. continue பண்ணுங்க. இன்னும் நாலு வருசம் இருக்கு, நன்னடத்தை continue ஆச்சுன்னா தண்டனை குறையலாம். என்ன man? நீலகண்டர் : இப்படியே இருக்கத்தான் விரும்புகிறேன். சிறை அதிகாரி : உமக்கு help ஏதும் வேண்டுமானால் கேளுங்கள். நீலகண்டர் : என் எண்ணங்களைக் குறிப்புகளாக எழுதி வைக்க வேண்டும். அதற்கு உதவ முடியுமா? சிறை அதிகாரி : முடியும், உதவுகிறேன். நீலகண்டர் : வந்தனம். (அவருக்கான தனியறையில் அடைக்கப்படுகிறார். சிறிது நேரம் கழித்துக் காவலர் ஒருவர் வந்து பழுப்புக் காகிதங்களால் கெட்டி அட்டை வைத்துத் தைக்கப்பட்ட குறிப்பேடு ஒன்றையும் பென்சில் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போகிறார். மேடையில் ஒளி குறைந்து மீண்டும் ஒளி வருகிறது. மாலை வேளை. சிறை அதிகாரி பார்வையிட்டுக்கொண்டே வருகிறார். நீலகண்டர் அறை முன்பு நிற்கிறார்) சிறை அதிகாரி : என்ன மிஸ்டர் நீலகண்டன், note book வந்ததா? Are you happy? நீலகண்டர் : ஆம், கிடைத்தது. நன்றி. சிறை அதிகாரி : ஏதேனும் எழுதினீரா? நான் பார்க்கலாமா? நீலகண்டர் : (குறிப்பேட்டை அவரிடம் நீட்டியபடி) போலீஸ்காரர் சந்தேகமா? சிறை அதிகாரி : இல்லை நீலகண்டரே, really I’m interested to see. (குறிப்பேட்டின் அட்டையைப் புரட்டியவுடன் முதல் தாளில் ‘பாரதி வாழ்க’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டு) சிறை அதிகாரி : யார் பாரதி? நீலகண்டர் : உங்களுக்குத் தெரியாதா? பாரதியார் தமிழ்நாட்டின் தவமாக வந்த மகா கவிஞர் அவர். சிறை அதிகாரி : ஓ..! ஓய்வு நேரம் கிடைக்கும்போது அவரைப்பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். Can You sing a song written by him? நீலகண்டர் :என்று தணியும் இந்த சுதந்திர தாகம்என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் சிறை அதிகாரி : ஓ..! சுதந்திர தாகம்.. நீர் இன்னும் மாறவில்லை. But, this song creates pity in my mind! Is it really pity or disability or angry? (அடுத்த தாளைப் புரட்டி எழுதியிருப்பதை வாசிக்கிறார்) துக்கம் அமைதியைத் தருகிறதுதுக்கம் ஒன்றே சத்தியத்தின் உட்பொருளைஉள்வந்து ஊட்டுகிறதுதுக்கம் இனியது; துக்கம் நல்லது. (வாசித்துவிட்டுக் குறிப்பேட்டை நீலகண்டரிடம் நீட்டியபடி) Good  Mr. நீலகண்டர். நாளை பேசுவோம். (மேடையில் ஒளிமாறி ஓம்கார் ஆசிரமத்தில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறை அதிகாரி மிகவும் உதவியாக இருந்தாரா? ஓம்கார் சுவாமிகள் : நான் சந்தித்த அத்தனை சிறை அதிகாரிகளும் என் மீதுள்ள அச்சத்தால் முதலில் என்னிடம் கெடுபிடியாகவே இருந்தனர். நாளடைவில் என்னிடம் இணக்கமாக மாறியிருக்கிறார்கள். ரங்கூனில் இருந்தவர், முதலிலேயே என்னிடம் நட்பாகப் பேசினார். தொடர்ந்து தொந்தரவில்லாமல் என்னால் இருக்க முடிந்தது. சங்கர கிருஷ்ணன் : எந்தச் சிறைவாசம் உங்களுக்கு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது? ஓம்கார் சுவாமிகள் : மூல்தான் சிறைவாசத்தைச் சொல்லலாம். கம்பளி ரோமத்தைப் பிரிக்கிற வேலையை எனக்குக் கொடுத்துச் சிரமப்படுத்தினார்கள். ஆனாலும் அந்த வேலையின் நுட்பத்தைப் புரிந்துகொண்டேன். விடுதலையான பிறகு, ‘இந்தியாவின் கம்பளிக் கைத்தொழில்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினேன். சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறைச்சாலையில்தான் ஆன்மீகப் பாதைக்குள் மனம் சென்றதா? ஓம்கார் சுவாமிகள் : அப்படியும் சொல்லலாம். ஆனால் அரவிந்தர் போன்றோரிடம் ஏற்பட்ட தொடர்புதான் அதன் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். நீண்ட தனிமைச் சிறை என்னிடம் இருந்த அரசியல் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டே வந்தது. சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறையிலிருந்து எப்போது விடுதலை ஆனீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : தண்டனைக் காலத்தைக் குறைத்தார்கள். எட்டாம் ஆண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்தேன். 1930ஆம் வருடம் ஜூன் மாதம் 30ஆம் தேதி விடுதலையானேன். சங்கர கிருஷ்ணன் : விடுதலையின்போது உங்கள் உளப்பாங்கு எவ்விதம் இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : நான் வெளியே வந்தபோது மனதளவில் முழுப் பக்குவம் கொண்ட திடபுருஷனாக விளங்கினேன். உடலிலும் உள்ளத்திலும் சோர்வுகளில்லை. எனது குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து போயிருந்தன. மனதிலிருந்த மாசு மருவெல்லாம் அகன்று போயிருந்தன. சங்கர கிருஷ்ணன் : மொத்தமாக 16 ஆண்டுகள் சிறைவாசம். பழைய புரட்சிகர இயக்கத்தில் செயல்பட்டவர்களில் சிறையில் நெடுங்காலம் கழித்தவர் நீங்கள்தான் அல்லவா? ஓம்கார் சுவாமிகள் : நான் வெளிவந்தபோது சுப்பிரமணிய சிவா இறந்து போயிருந்தார். சிதம்பரம் பிள்ளை அரசியலிலிருந்து விலகியிருந்தார். கம்யூனிசத்தில் எனக்கு ஆர்வம் குறைந்து போனது. உண்மையில் சிங்காரவேலரிடம் இருக்கும்போதுகூட தாமரை இலைத் தண்ணீர்போல ஒரு ஒட்டாமையே இருந்து வந்தது. காந்தியடிகள் தண்டி யாத்திரை தொடங்கிக் கைதாகி இருந்தார். என் பாதை என் மனதில் வந்திருந்தது. செயலில் வர மேலும் ஒரு ஆண்டு ஆனது. சாது வாழ்க்கை 1931ஆம் ஆண்டு ஆங்கிலப் புது வருஷத் தொடக்கத்தில் தொடங்கியது. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

காட்சி 19 இடம் : ஓம்கார் ஆசிரமம்(ஓம்கார் சுவாமிகள் – சங்கர கிருஷ்ணன் உரையாடல் தொடர்கிறது) ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமத்தின் பக்கத்தில் ஓடும் தென்பெண்ணை நதியைப் பார்த்தீர்கள் அல்லவா சங்கர கிருஷ்ணன்..? ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாக ஓடுகிறது. மலைச் சரிவில் ஆர்ப்பரிக்கும் புனல், சமவெளியில் அமைதியாகப் போவது போல, என் வாழ்க்கை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகித்து வயலுக்குப் பொசியும் வாய்க்கால் போல அமைதி ஆனது. இங்கு வந்தபோது நான் இந்த நதியைப் போல அமைதியாக இருந்தேன். எனக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருந்தேன். ஆனால், தொண்டு செய்வதை விட்டுவிடவில்லை. இப்போது வரை 41 வருடங்களாக இங்குள்ள எளிய மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறேன். எனது ஆன்மீக சாதனைகள் மட்டுமல்ல இந்த ஆசிரம வாழ்க்கை. தொண்டின் மீது நான் கொண்ட தணியாத தாகத்தின் ஒரு பாகமும்தான். தேசத் தொண்டு என்பது, தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்காரவேலரும்தான். சங்கர கிருஷ்ணன் : சிங்கார வேலரின் கம்யூனிஸ்ட் இயக்க வேலைதானே உங்களை இரண்டாவது சிறைவாசத்திற்குக் கொண்டு சென்றது..? ஓம்கார் சுவாமிகள் : என் கூடவே பிறந்தது போன்ற முரட்டுத்தனம்தான் அதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து நான் முரடனாகவே இருந்திருக்கிறேன். ஒரு நிலைகொள்ளாத உள்ளம் என்னை உந்தித் தள்ளி வந்திருக்கிறது. அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கிறேன். பாலர் சந்திப்புக்குப் பிறகு, முற்றிலுமாக ஒரு பரதேசி போலச் சுற்றல் வாழ்க்கைதான். புரட்சி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது என்பது ஒரு சாக்கு போலத் தொடர்ந்து வந்தது.பாய்ந்து வரும் காட்டாறு, பள்ளம் கண்டால் தங்கிவிடும் அல்லவா? அதுபோலத் தங்கியிருக்கிறேன். பள்ள மனது நிறைவானதும் பயணப்பட்டு விடும் அல்லவா? அதுபோல தங்குதலும் தாவிப் போவதுமாக ஓடிக் கொண்டிருந்தேன். மேடுகள் பிரவாகத்திற்கு லட்சியமில்லை. தள்ளிச் சரித்துவிட்டுத் தன் பாதையை அமைத்துக்கொள்ளும். அந்த ஓட்டத்தில் ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய விவேக மனோபாவம் எனக்குக் கைகூடவில்லை. நான் ஏற்றுக்கொள்ளாத எந்த விஷயத்தோடும் நான் சமரசம் கொள்ளவில்லை. அதுவே எனது அடையாளம். அதுவே என் பலமும் பலவீனமும். நான் இரண்டாம் தடவை சிறைப்பட்டதைச் சொல்கிறேன்; உங்களுக்கே புரியும். சங்கர கிருஷ்ணன் : சொல்லுங்கள் சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : அது 1922ஆம் வருடம் ஜூலை மாதம். அப்போது சிங்காரவேலர், கயாவில் நடக்கப்போகும் காங்கிரசில் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டிய உத்திகளை வகுத்துக்கொண்டிருந்தார். நிறைய பயணங்களைச் செய்துகொண்டிருந்தார். அந்தக் காங்கிரசில்தான் பூரண சுயராஜ்யத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் முனைப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், காங்கிரசின் திட்டம் அப்போது பூரண சுயராஜ்யம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா..? அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது சிங்காரவேலர்தான். அந்தக் காங்கிரஸ் நிகழ்ச்சிகளெல்லாம் நான் சிறை சென்ற பின்பு நிகழ்ந்தவை. நான் பத்திரிகை பார்த்துத் தெரிந்துகொண்டவை. ஆகவே சென்னை வேலைகளை நாங்களாகவே செய்துகொண்டிருந்தோம். அப்போது, நான் தயாரித்த பிரசுரம் ஒன்று போலீஸ் உளவாளிகளிடம் சென்றது. அதை தயாரித்தவன் நான் என்பதும், நான் ஆஷ் கொலை வழக்கின் பிரதானக் குற்றவாளி என்பதும், பழைய சிறைப் பறவை என்பதும் அவர்களைப் பதற வைத்தன.இவன் இன்னும் இயங்குகிறான் என்பதும் அதுவும் கம்யூனிஸ்ட் பிரசாரகன் என்பதும் தெரிந்தவுடன் சுறுசுறுப்பானார்கள். அந்தப் பிரசுரத்தை ராஜதுவேசப் பிரசுரம் என்று கொண்டு, அதைப் பிரசுரித்த என்மீது வாரண்ட் கொண்டுவந்தார்கள். நான் தலைமறைவானேன். சங்கர கிருஷ்ணன் : ஏன் தலைமறைவானீர்கள்..? உங்கள் தோழர்களிடம் ஆலோசிக்கவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : அதுதான் என் விவேகமின்மை. போலீஸ் என்னைத் தேடினார்கள். 1922 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, திருவல்லிக்கேணி இடுகாட்டில் மறைந்திருந்த என்னைக் கைது செய்யச் சுற்றி வளைத்தார்கள். (மேடையில் ஓம்கார் சுவாமிகள் அறையில் இருள் பரவி மறுபக்கம் ஒளிர்கிறது) காலம் : 1922ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிஇடம் : விசாரணை நீதிமன்றம், சென்னைபாத்திரங்கள் : விசாரணை அதிகாரி, நீலகண்டர் விசாரணை அதிகாரி : மிஸ்டர் நீலகண்டர், உம்மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.முதலாவது, நீர் ராஜ துவேஷப் பிரசுரங்கள் அச்சிட்டு, மக்களிடம் அரச விரோதத்தைத் தூண்டியுள்ளீர்.இரண்டாவது, நீர் உரிமம் இல்லாமல் கைத் துப்பாக்கி வைத்திருந்தீர்.முன்றாவதாக, அந்தத் துப்பாக்கியால் உம்மைக் கைது செய்ய வந்த போலீஸ் ஜவான்களில் ஒருவரைச் சுட்டீர். அந்தத் துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் அந்த ஜவான் தப்பித்தார். இருப்பினும் அது கொலை முயற்சியே.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உமது பதில் என்ன? நீலகண்டர் : பிரிட்டிஷார் சட்டத்தையும் கோர்ட்டையும் நான் மதிப்பதில்லை. இந்தியர்கள் உருவாக்காத சட்டங்களுக்குக் கீழ்ப்படிய எனக்கு விருப்பமில்லை.உங்கள் சட்டத்தின் முன்பு ராஜதுவேஷமாகச் சொல்லப்படும் எமது அறிக்கை, எமது மக்களின் எதிர்கால விடுதலைக்கானது. அந்த விடுதலைக்காக அவர்களை அணி சேர்ப்பதற்கானது. மற்ற குற்றச்சாட்டுகளில், நானே என் நடத்தையின் மீது விளக்கம் சொல்வது அவசியம் என்று தோன்றவில்லை. நீங்கள் உங்கள் தீர்ப்பைக் கூறலாம். எதுவாயினும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன். (மேடையில் ஒளி இடம் மாறி ஓம்கார் ஆசிரமத்தில் விரிகிறது) ஓம்கார் சுவாமிகள் : எனக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அளித்தார்கள். பழைய புரட்சிக்கார குற்றவாளி என்பதாலும் என் பழைய சிறை வரலாறுகள் கலகச் சாயையைக் கொண்டிருப்பதும் சிறையிலும் நான் மற்ற கைதிகளின் உரிமைகளைப் பேசுபவன் என்பதை அடையாளப்படுத்தி நின்றன என்பதாலும் சிறை அதிகாரிகள் என்னைக் குறித்து அச்சத்தில் இருந்தனர். ஆகவே என்னை இந்தியாவுக்கு வெளியே அனுப்பிவைத்தார்கள். ஆனால் சிறைவாசத்தில் அமைதியானவனாக மாறிக்கொண்டு வந்தேன். என் மனப் புயல்கள் ஓய்ந்து வந்தன. சங்கர கிருஷ்ணன் : உங்கள் வாழ்க்கைமீது மிகுந்த மரியாதை வருகிறது சுவாமி.. உங்கள் தற்போதைய ஆசிரம வாழ்க்கையின்மீதுகூட என்னால் விளக்க முடியாத பிரியம் வருகிறது. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

காட்சி 18 (திரை விலகும்முன் மேடையில் செவ்வொளி பரவியிருக்க குரல் மட்டும் கேட்கிறது) குரல் : மீண்டும் ஒருமுறை உங்களிடம் பேசவேண்டியதாகிவிட்டது. நீலகண்டரின் கதையில் பாரதியின் இறுதி நாளில் அவர் அங்கிருந்தார் என்பதாலேயே, பாரதியின் பிரிவை நாடகத்தில் விரிவாகக் காட்டவேண்டி வந்தது. இந்த நாடகம் தொடங்கிய பாரதி வீட்டிலேயே முடிந்தும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஒரு காவியப் பூச்சுகூடக் கிடைத்து விடும். ஆனால், இன்னும் கொஞ்சதூரம் நாம் போய்த்தான் ஆக வேண்டும். (திரை விலகி ஓம்கார் ஆசிரம அறையில் காட்சி தொடங்குகிறது. சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : எனக்கு அப்போது பெரிய பலம் பாரதியார்தான். என் மீது கடைசி வரை பிரியம் காட்டியவர். அவருடைய மறைவால் நான் நிராதரவாக உணர்ந்தேன். பதினாறு வயதில் தேச விடுதலை இயக்கத்திற்கு வந்த எனக்கு, அப்போது 32 வயது. என் எதிர்காலம் குறித்த கவலை என்னை அலைக்கழித்தது. சங்கர கிருஷ்ணன் : புரிகிறது சுவாமிஜி, அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : சிங்காரவேலரிடம் சென்றேன். அவருடன் கொஞ்சகாலமே இருக்க முடிந்தது. சுமார் ஒரு வருடம் போலத்தான். (மேடையில் ஒளி மாறியதில் ஒரு வீட்டின் வரவேற்பறை) காலம் : 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஒருநாள்இடம் : சிங்காரவேலர் இல்லம்பாத்திரங்கள் : சிங்காரவேலர், நீலகண்டர் சிங்காரவேலர் : நீலகண்டரே, எம்மோடு இருப்பதை நீர் எவ்வாறு உணர்கிறீர்..? நீலகண்டர் : இதுவரை நான் அறிந்திருந்த உலகத்திற்கு இப்போது புதிய விளக்கங்களைக் காண்கிறேன். தேச விடுதலை என்பது தொழிலாளர், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன். படைப்பில் மேல் – கீழ் என்பதும் ஆண்டான் – அடிமை என்பதும் கீழ்மைச் சிந்தனைகள் என்பதை பாரதி பாடல்கள் மூலம் தெரிந்திருந்த எனக்கு, உங்கள் பழக்கம் வந்தபிறகு அவற்றின் பொருள் சார்ந்த காரணங்கள் புரியவந்தன. சிறிய குழுக்களாக வேலை செய்து வந்தவன், இப்போது கட்டற்ற விடுதலையை உணர்கிறேன். தொழிலாளர் சங்கங்களில்,தலைவரும் உறுப்பினர்களும் வெளிப்படையாகப் பேசி, பெரும்பான்மை முடிவை அமுல்படுத்தும் பாங்கு எனக்குப் பிடித்திருக்கிறது. சிங்காரவேலர் : நல்லது.. உம்மைப் பிரசாரக் குழுவில் வேலை செய்யச் சொன்னோம். மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்து செய்து வாரும். நாம் தயாரிக்கும் பிரசுரங்களை நீரும் கவனமாகப் படித்து, போகிற இடங்களில் தெளிவாக விளக்கிப் பேச வேண்டும். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இயங்க வேண்டும். நாம் காங்கிரசு இயக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. காங்கிரசில் காந்தியாரின் தலைமை விரைவில் வரும். வருகிற டிசம்பரில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கப்போகும் காங்கிரசில், திலகர் விட்டுப்போயிருக்கிற இடமும் செல்வாக்கும் காந்தியாருக்குப் போய்விடலாம். சம்பாரண் விவசாயிகளுக்காக நான்காண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய போராட்டம், அதைத் தெளிவாக இந்த ஏழை தேசத்திற்குப் புரிய வைத்திருக்கிறது. நீலகண்டர் : அப்படியானால் அது தேசத்திற்கு என்ன மாற்றத்தைக் கொண்டுவரும்..? சிங்காரவேலர் : இப்போ எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால் மக்களை பேரலையாக இயக்கத்தில் கொண்டு வரும் சக்தி, காந்தியாரிடம் உண்டு. அரசியல் என்பது மக்களின் பங்களிப்போடு, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பற்காகப் போராடுவது என்பதை, காங்கிரசில் கொண்டு வந்தது காந்தியார்தான்.இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று, பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் இருப்பதாக, காங்கிரசில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது. அகமதாபாத் காங்கிரசில் காந்தியார் தமது பாதையை அறிவிக்கலாம். இனிமேல் அந்நிய ஆட்சியை எதிர்ப்பதோடு, காந்தியாரோடும் பயணிக்கிற கடினமான பணி நமக்குக் காத்திருக்கிறது. பார்ப்போம்.. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறையில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : காங்கிரசில்தான் இருப்பதாக சிங்காரவேலர் சொன்னாரே, அப்படியானால் 1921இல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கட்சியாக உருவாகவில்லை. ஆனால் ‘இந்தியப் பொதுவுடமை நிறுவனங்களின் இணைப்பு’ என்ற அமைப்பாக இயங்கினார்கள். வங்காளத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் மத்திய பாரதத்திலும் சென்னை மாகாணத்திலுமாகக் குழுக்களாக இயங்கி வந்தார்கள். காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டே இயங்கினார்கள். சங்கர கிருஷ்ணன் : உங்கள் வேலை என்னவாக இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட் பிரசாரப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வது.. சங்கர கிருஷ்ணன் : பழைய பயங்கரவாத இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கண்ட வேறுபாடுகள் என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : பழைய இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு இல்லை; மக்களோடு ஐக்கியமும் இல்லை. இயக்கம் செய்யும் வேலைகளால் வரும் பின்னடைவைச் சரி செய்யவே முடியாமல் போனது. ஆனால், அந்தப் பழைய குழுக்களின் தோழர்களே பெரும்பாலும் புதிய இயக்கத்திற்கு மாறிக்கொண்டார்கள். அவர்களின் புரட்சிகர குணாம்சங்களைக் குறை சொல்ல முடியுமா..? சங்கர கிருஷ்ணன் : சிங்காரவேலர் பற்றிய உங்கள் அபிப்பிராயம் எப்படி இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : அவர் பேரறிஞர்.. நிரம்பிய நூல் பழக்கம் கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த நூல்களின் சேகரத்தைப் பார்த்து வியந்து போனேன். கடினமான உழைப்பாளி. தொழிலாளர் மேன்மை பற்றியே சிந்தித்து வந்தார். மார்க்சிய வழியில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொன்னார். சங்கர கிருஷ்ணன் : காந்தியின் வருகையைக் கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் பரிசீலித்தார்கள் என்பது அவர் பேச்சில் தெரிகிறதே..! ஓம்கார் சுவாமிகள் : காந்தியின் பாதையைக் கம்யூனிஸ்டுகள் போல யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள் தம்பி. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, உங்கள் பேச்சு மிக வியப்பாக இருக்கிறது. இத்தனை தூரம் கம்யூனிஸ்ட்கள் பற்றிப் பேசுகிற நீங்களா சாமியாராக மாறினீர்கள்..?! பெரிய புதிராக இருக்கிறது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட்களோடு, அதுவும் சிங்காரவேலர் போன்ற ஒரு சிலரோடு ஒரு வருட காலமே என் தொடர்பு. அதற்குப் பிறகு இன்னுமோர் நெடிய சிறைவாசம் என் மனப்போக்கை மாற்றி, இப்போதைய வாழ்வுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்தது. (திரை விழுகிறது) நாளை தொடரும்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

காட்சி 17 காலம் : 1921 செப்டம்பர் 11ஆம் நாள் முற்பகல்இடம் : இந்த வரலாற்றின் ஆரம்பக் காட்சியில் நாம் பார்த்த திருவல்லிக்கேணி பாரதியார் வீடுபாத்திரங்கள் : பாரதியார், செல்லம்மா, சகுந்தலா, வ.வே.சு.அய்யர், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, பரலி நெல்லையப்பர், குவளை கிருஷ்ணமாச்சாரி, ஹரிஹரசர்மா, வைத்தியர், இன்னும் சிலர். (பாரதி கண்மூடிப் படுத்திருக்கிறார். பக்கத்தில் செல்லம்மாவும் சகுந்தலாவும் இருக்கிறார்கள். நீலகண்டரும் குவளை கிருஷ்ணமாச்சாரியும் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாசலில் சத்தம் கேட்கிறது. பலர் உள்ளே வரும் சலசலப்பில் செல்லம்மாவும் சகுந்தலாவும் எழுந்து வாசலைப் பார்க்கிறார்கள்.முதலில் வ.வே.சு.அய்யர் உள்ளே வர, சில போலீஸ் ஜவான்கள் பின்னால் வருகிறார்கள்) செல்லம்மா : வாருங்கள் சுவாமி, உங்கள் சிநேகிதரைப் பாருங்கோ. பயமாக இருக்கிறது சுவாமி. வ.வே.சு.ஐயர் : பயப்பட வேண்டாம் செல்லம்மா. பாரதி குணமாகிவிடுவார். ஆகாரம் ஏதேனும் பண்ணினாரா..? செல்லம்மா : காலையில் சிறிது கஞ்சி மட்டும் குடிச்சார். வைத்தியரை அழைக்க ஹரி போயிருக்கிறார். வ.வே.சு.ஐயர் : (பாரதியின் பக்கத்தில் அமர்ந்து) பாரதி.. பாரதி.. பாரதியார் : (மெதுவாக கண்விழித்து) யார்? ஐயரா..? வாரும்.. வ.வே.சு.ஐயர் : எப்படி இருக்கிறீர்..? பாரதியார் : ஒன்றுமில்லை ஐயரே, வயிற்றுக் கடுப்பு இருக்கிறது; களைப்பாகவும் இருக்கிறது. சரியாகிவிடும். (சுற்றுமுற்றும் பார்க்கிறார். போலீஸ் ஜவான்கள் கண்ணில் பட) செல்லம்மா இந்த ஜவான்கள் நம் வீட்டுக்கு ஏன் வந்திருக்கிறார்கள்..? வ.வே.சு.ஐயர் : அவர்கள் என்கூட வந்தார்கள். என்னைப் போலீஸ் நிலையம் அழைத்துப் போகிறார்கள். போகும் வழியில் உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்துவிட்டேன். செல்லம்மா : என்ன விஷயம் சுவாமி? வ.வே.சு.ஐயர் : ‘தேசபக்தன்’ பத்திரிகையில் ஒரு வியாசம் வந்திருந்தது. அது ராஜ துவேசத்தைக் கொண்டிருக்கிறது என்று என்மீது வாரண்ட்டு. நான் ‘தேசபக்தன்’ ஆசிரியன் என்பதால், என்னை அழைத்துப் போகிறார்கள். அது இருக்கட்டும்.. (பாரதியைப் பார்த்து)பாரதி.. நான் போய்வருகிறேன். உடம்பைக் கவனித்துக்கொள்ளும். அசட்டையாக இராமல் வைத்தியர் தரும் மருந்தைச் சாப்பிடும்.. வரட்டுமா..? பாரதியார் : (வ.வே.சு. அய்யரின் கரத்தைச் சிறிது பற்றி, பின் விடுகிறார்) சரி அய்யரே.. விசாரணை முடிந்ததும் வாருங்கள். வ.வே.சு.அய்யர் : (எல்லாரையும் கும்பிட்டுக்கொள்கிறார். நீலகண்டரையும் கும்பிட்டுக்கொண்டே) நல்லது.. வருகிறேன்..(வ.வே.சு.அய்யரும் அவருடன் வந்தவர்களும் சென்றுவிடுகிறார்கள்) சகுந்தலா : (குவளையில் கஞ்சியுடன்) அப்பா.. இன்னும் கொஞ்சம் கஞ்சி தரட்டுமா..? (பாரதி தலையாட்ட, சகுந்தலா கஞ்சியைப் புகட்டுகிறார். அப்போது வைத்தியருடன் ஹரிஹர சர்மாவும் வருகிறார்) வைத்தியர் : (பாரதியிடம் நெருங்கி) பாரதி.. எப்படி இருக்கிறீர்? (கேட்டுக்கொண்டே பாரதியின் மணிக்கட்டைப் பிடித்து நாடி பார்க்கத் தொடங்க) பாரதியார் : (கையை உதற முற்படுகிறார். பலம் இல்லாததால் பெருமூச்சு விடுகிறார்) எனக்கு என்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். செல்லம்மா.. இது என்ன, வைத்தியரை அழைத்தாயா? ஏன் என்னை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? என்னை விட்டுவிடுங்கள்; எனக்கு ஒன்றுமில்லை. வைத்தியர் : சரிதான் பாரதி, உமக்கு ஒன்றுமில்லைதான். நான் தரும் மருந்தை மட்டும் சாப்பிட்டுவிடுங்கள்; உமது களைப்பெல்லாம் போய்விடும். (செல்லம்மாவிடம் மருந்துப் பொட்டலங்களைக் கொடுத்தவாறே) இந்த மருந்தை இரண்டு மணிக்கொரு தடவை கொடுங்கள். நாளைக்கு வந்து பார்க்கிறேன். தொடர்ந்து கஞ்சியே கொடுத்து வாருங்கள். (பாரதி முனகுவதும் மருந்தை உட்கொள்ள மறுப்பதும் சகுந்தலா அவரைக் கெஞ்சியே மருந்தையும் கஞ்சியும் கொடுப்பதாகப் பகல் பொழுது கடந்து மாலை வருகிறது) செல்லம்மா : பாப்பா.. விளக்கேற்றிவிடம்மா.. (சகுந்தலா விளக்கேற்றுகிறாள்) பாரதியார் : (முன்னிரவில் கண்விழித்து) நீலகண்டரே, ஹரிஹரனும் நீங்களும் பக்கத்தில் வாருங்கள். (பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்) இப்போ கொஞ்சம் பரவாயில்லை.ஆப்கானிஸ்தானத்து மன்னன் அமானுல்லாகான் பற்றி ஒரு வியாசம் மனத்தில் வருகிறது. அதை எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பவேண்டும். நீலகண்டர் : சரி, செய்யலாம். உங்களுக்குக் கொஞ்சம் தெம்பு வரட்டும். பாரதியார் : இப்போ தெம்பாகத்தான் இருக்கிறேன். அமானுல்லாகான் யார் தெரியுமா..? உலக யுத்தத்தில் ஜெர்மனிப் பக்கம் இருந்தவன். இப்போ வெள்ளைக்காரர்கள் யுத்தத்தில் ஜெயித்திருப்பதால், அவனை அவதூறு பண்ணிக்கொண்டு வருகிறார்கள். (மூச்சுவிடத் திணறுகிறார்) ஹரிஹர சர்மா : அமைதியாக இருங்கள், பிறகு பேசலாம். சகுந்தலா இங்கே வா. அப்பாவுக்குக் கொஞ்சம் தீர்த்தம் கொடேன்.. செல்லம்மா : மருந்து கொடுக்கும் நேரம்தான். பாப்பா மருந்தும் கஞ்சியும் கொடுத்துவிடு. (சகுந்தலா மருந்து கொடுக்க முயல, பாரதி சாப்பிட மறுக்கிறார். சகுந்தலா வற்புறுத்திப் புகட்ட, மருந்து பாதி இறங்கியும் இறங்காமலும் போகிறது) பாரதியார் : எனக்கு ஒன்றுமில்லை, விடுங்கள்… (படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறார். பரலி நெல்லையப்பரும் சுதேந்திரநாத் ஆர்யாவும் வருகிறார்கள். பாரதியாரோடு இருந்த நினைவுகளைப் பேசிக்கொள்கிறார்கள். நள்ளிரவு கடந்த பின்னர் பாரதியார் சிந்திப்பதை நிறுத்திக்கொள்கிறார். மறுநாள் காலையில் பாரதியாருக்கு இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி யோசிக்கிறார்கள்.) காலம் : 1921 செப்டம்பர் 12ஆம் நாள் காலை சகுந்தலா : (செல்லம்மாவிடம்) அக்காவுக்குச் சொல்லணுமே அம்மா.. அக்காவும் அத்திம்பேரும் வந்துருவாங்களா..? குவளை : நானும் ஹரிஹரனும் போய் எல்லாருக்கும் தந்தி கொடுத்துட்டோம். ஆனா அவா எல்லோரும் இன்னைக்கே வந்துட முடியாதே.. வந்திருந்தவர்களில் ஒருவர் : எல்லாரும் வரவரைக்கும் காத்திருக்க முடியுமோ ஓய்..? வந்தவாளை வச்சுக் காரியங்களை செய்ய ஆரம்பிச்சுடணும். நீலகண்டர் : அண்ணாவோட சென்னை சிநேகிதர்களாவது வரவேண்டாமோ.? பரலி நெல்லையப்பர் : பத்திரிகைச் செய்திகூட இனிமேல்தான் வரணும். காத்திருந்து செய்யலாமா..? வந்திருந்தவர்களில் இன்னொருவர் : சம்பிரதாயப்படி இறந்த நாளிலேயே காரியங்களைச் செய்யணும். அஸ்தமனம் வரை போகக் கூடாது. மீண்டும் முதல் நபர் : வருகிறவர்கள் வரட்டும்.. நாம ஆரம்பித்து விடலாம். இரண்டாமவர் : சரி.. பாரதிக்குக் கிரியைகள் யார் செய்யறது..? தம்பி நீலகண்டர், உன்மேல் அவருக்கு ரொம்பப் பிரியம் அல்லவா..? பாரதிக்கு ஈமக் கிரியைகள் நீ செய்யலாமே..? நீலகண்டர் : என்ன..! நானா..? என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சடங்குகளில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.. பாரதிக்கு எப்படிச் செய்ய முடியும்?! இன்னொருவர் : அப்போ, ஹரிஹர சர்மாவைச் செய்யச் சொல்லலாம். (ஹரிஹர சர்மா பாரதிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வது என்று முடிவாகிறது. பாரதியின் இறுதிப் பயணம் தொடங்குகிறது)

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

காட்சி 15 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்.இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். ஆர்யா : நீலகண்டரே, சரணடையும் முடிவைக் கல்கத்தா போய் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? நீலகண்டர் : நான் இயங்கி வந்த இயக்கத்தின் நண்பர்கள் வங்கத்தில்தான் இருந்தார்கள். உண்மையில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். புதுச்சேரி நண்பர்கள் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று அறிந்திருந்தேன். அவர்களின் இலக்கு ஆஷ் என்பது தெரியாது.புதுச்சேரியைவிட்டு வெளியேறிய நான், திருநெல்வேலிக்குச் சென்று தோழர்களைப் பார்த்து என் நிலைமையை விளக்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எத்தனைத் தவறாகப் போய்விட்டது..?!என்மேல் அவர்களுக்கிருந்த சந்தேகங்களையேனும் நிவர்த்தி செய்திருக்கலாம். இந்தக் கொலையைப்பற்றித் தெரிய வந்திருந்தால் தடுக்க ஒரு முயற்சியும் எடுத்திருக்கலாம். ஆஷ் கொலையுண்டதைப் பத்திரிகைகளில் பார்த்த நான், என் பெயர் தேடப்படும் சதிகாரர்கள் பட்டியலில் இருப்பதை அறிந்ததும், இதுபற்றி யோசித்துத் தெளிவு பெற எனக்குக் கல்கத்தா நண்பர்களே உதவமுடியும் என்பதால், நான் அங்கு சென்றேன். சரணடைந்துவிடலாம் என்று அங்குதான் முடிவு செய்தோம். ஆர்யா : சரணடைவது உமது குணமில்லையே நீலகண்டர்..? நீலகண்டர் : சரணடைவதைத் தவிர வேறு இரண்டு வழிகளை யோசித்தோம்..முதலாவது, நண்பர்கள் உதவியைப் பெற்று எங்கேனும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவது. இரண்டாவது, நமது தேசத்திலேயே தலைமறைவாக வாழ்வது. முதல் வழியில் போனால் இந்தியா விடுதலை பெறும்வரை தேசத்திற்குள் வர முடியாது. சுதந்திரம் பெறப் பல காலம் ஆகலாம். அதுவரை தேச சேவைக்கு வரவே முடியாது. இரண்டாம் வழியில் தேசத்தில் இருக்கலாம். ஆனால் பல காலம் ஒளிந்து வாழ வேண்டும். பயந்துகொண்டே தேச சேவை செய்ய வேண்டும். அது ஆபத்தானது. ஆஷ் கொலையில் எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததாலும் சதியின்போது நான் திருநெல்வேலியில் இல்லாததாலும் வழக்கிலிருந்து தப்பிக்க சரணடைவதே சரியாக இருக்கும் என்று யோசித்தோம். சிறைத் தண்டனை என்றாலும் சிறிய காலமே அமையும் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து தேசப் பணியைத் தொடரலாம் என்று கருதியதால், கல்கத்தாவிலேயே சரணடைந்து வாக்குமூலம் கொடுத்தேன். ஆர்யா : (பாரதியாரைப் பார்த்து) ஏன் பாரதி.. கடலூரில் உன்னைக் கைது செய்தபோது, ஆஷ் கொலை வாரண்டில் உன் பெயர் இருந்ததைச் சாக்காக வைத்துக்கொண்டார்கள் என்கிறார்களே? பாரதியார் : 1908இல் நான் புதுச்சேரி வந்தபோது, என் பேரில் எந்த வாரண்டும் இல்லை. ஆஷ் கொலைச் சதியில் புதுவையில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பதை வாஞ்சிநாதன் மற்றும் அவரது சகாக்களின் கடிதங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு, எங்கள் மீது 1911இல் வாரண்ட் பிறப்பித்தது. பல ஆண்டுகள் சென்றபின்னும் அதற்கு உயிர் இருந்தது, கடலூரில்தான் தெரியவந்தது. ஆர்யா : அப்போ நீலகண்டர் வாக்குமூலத்திற்கு முன்பே பாண்டிச்சேரியின் தொடர்பு பிரிட்டிஷ் அரசுக்கு தெரிந்திருக்கிறதே.. அப்படியானால் நீலகண்டர் புதுவைச் சுதேசிகளை காட்டிக்கொடுத்தார் என்ற பேச்சு வந்தது எப்படி..? நீலகண்டர் : என் வாக்குமூலம் திருநெல்வேலியில் இரண்டு நாட்களாகப் பெறப்பட்டது. ஆனால் இரண்டாவது நாள் வாக்குமூலத்தை என்னை நிர்ப்பந்தித்து வாங்கினார்கள். ஜூலை 12 அன்று, முதல் வாக்குமூலத்தில், நான் அறிந்த விவரங்களையே சொன்னேன். இதில் எனது புதுச்சேரித் தொடர்புகள் பற்றிச் சொல்லவேண்டியிருந்தது. பாரதியார் : உண்மையில், புதுச்சேரி தர்மாலயத்தில் என்ன நடந்தது என்றே எனக்கும் அரவிந்தருக்கும் தெரியாது. எங்களைத் தவிர்த்தே எல்லாம் செய்தார்கள். நீலகண்டரும் அப்போது அங்கு இல்லை என்பதால் அவருக்கும் திட்டங்கள் தெரிந்திராது. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறை வருகிறது. ஓம்கார் அறையில் சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கின்றனர்) சங்கர கிருஷ்ணன் : உங்களிடம் ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்..? ஓம்கார் சுவாமிகள் : அவர்கள் வழக்கில் ஒரு உருவத்திற்கு வந்திருக்க வேண்டும். என்னைத் தனியாகவே வைத்திருந்தார்கள். வழக்கு என்ன, யார் என்ன சொல்லியிருப்பார்கள் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். இரண்டாம் நாள் வாக்குமூலத்தை அதிகாரிகள் ஒருபக்கம் அச்சம் காட்டியும் மறுபக்கம் விடுதலைக்கு ஆசை காட்டியும் தயார் செய்து வாங்கினார்கள். மாஜிஸ்டிரேட் தம்பு என்பவர் முன்னிலையில் அப்ரூவர் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை கொடுத்த வாக்குமூலத்திற்கு ஒத்துப்போகிற மாதிரி என் வாக்குமூலத்தை மாற்றினார்கள். என் குழப்பத்தாலும் எனக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை என்று நம்பியும் அப்படிக் கொடுக்கவேண்டியதாயிற்று. ஆனாலும் முழுமையாக எதுவும் சொல்லிவிடவில்லை. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : உயர்நீதிமன்றத்தின் விசாரணையின்போது நீதிபதியிடம் நடந்த உண்மையைக் கூறினேன். என்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து அவ்வாறு பொய் சொல்ல நேர்ந்த என் பலவீனத்தை நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் அதை வெட்கப்படும் செயலாகவே உணர்கிறேன். நீதிமன்றம் என் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் தீர்ப்பு என்னவோ அப்ரூவர் வாக்குமூலத்தை ஒட்டியதாகவே அமைந்தது. அதுவும் கொலை வழக்கின் தீர்ப்பில் நான் காசிக்குப் போனதை, எனது திருநெல்வேலி நண்பர்களிடம் வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட திருடனாகச் சித்தரித்துச் சொல்லியிருந்தார்கள். புதுச்சேரியிலிருந்து நானாக வெளியேறினேனா அல்லது மற்றவர்கள் என்னை வெளியேற்றினார்களா என்பதைச் சந்தேகமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். சங்கர கிருஷ்ணன் : தீர்ப்பை எதிர்த்து நீங்கள் அப்பீலுக்குப் போகவில்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : (புன்னகைக்கிறார்) (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி -14

நீலகண்ட பிரம்மச்சாரி -14

காட்சி 14 காலம் : 1921ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள்இடம் : திருவல்லிக்கேணி கடற்கரைபாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். (பாரதியாரும் நீலகண்டரும் கடற்கரையில் அமர்ந்திருக்கின்றனர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதையை பாரதியார் படித்துக் காட்டுகிறார்.) பாரதியார் : கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடையாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.மலைவு செய்யாமை; மனப்பகை யின்மை ;நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை ;தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம்.வருக காந்தி ! ஆசியா வாழ்வே !தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.ஆன்மா அதனால் ஜீவனை யாண்டுமேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்.. நீலகண்டர் : (குறுக்கிட்டு) அண்ணா நிறுத்துங்கள். பாரதியார் : என்ன பாண்டியா? நீலகண்டர் : என்ன பாட்டு இது..? பொருள் தெரிகிறது. காந்தி மகான் தோன்றியதை பாரத மாதா சொல்வது போல அமைத்திருக்கிறீர்கள். ஆனால் சந்தக் கட்டு ஏதும் இல்லாமல் வழக்கமான உங்கள் நயம் எதுவுமில்லாமல் இருக்கிறதே..! பாரதியார் : (சிரிக்கிறார்) பலே.. சரியாகத்தான் சொன்னீர் நீலகண்டர். இது என் பாட்டு இல்லை. அமெரிக்கா தேசத்தில் வாழ்ந்து வரும் ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற மாது எழுதிய ஆங்கிலக் கவிதை. தமிழில் மொழிபெயர்த்து எழுதினேன். சுதேசமித்திரனுக்கு போகப் போகிறது. நீலகண்டர் : அண்ணா, சாகாவரம் பெற்ற பாடல்களை வடித்தவர் நீங்கள். ஆனால் உங்கள் கற்பனை சௌந்தர்யம் இந்த மொழிபெயர்ப்பில் வரவில்லையே.. சுதேந்திரநாத் ஆர்யா : (சிங்காரவேலருடன் வந்துகொண்டே) அது எப்படி அமையும் நீலகண்டரே.. மூலத்தின் ஜீவன் எத்தகையதோ, அதுதான் மொழிபெயர்ப்பிலும் வரும். இதே காந்தியைப் பற்றி ‘வாழ்க நீ எம்மான்‘ என்று பாரதி பாடியது எத்தனை ஜீவன் ததும்பியதாக இருந்தது..? பாரதியார் : ஏதேது, நீங்கள் இருவரும் எனக்கு மொழிபெயர்க்கவே வராது என்று சொல்வது போல இருக்கிறது.. (எல்லாரும் சிரிக்கிறார்கள்) ஆர்யா : ‘வந்தேமாதரம்’ மொழிபெயர்ப்பு ஒன்று போதுமே, பாரதி பெயரைச் சொல்வதற்கு..பாரதி, உன்னைக் கேலி செய்து எவ்வளவு நாள் ஆச்சு?! கோபம் இல்லையே..? சிங்காரவேலர் : ஆர்யா, இந்தக் கவிதையின் கூர்மையைக் கவனியுங்கள். இதில் பாரதி, காந்தியின் அரசியல் பாதையைச் சுட்டிக் காட்டுகிறார். வெளிநாட்டார் வியாக்கியான உலகம், காந்தியின் வருகையை ஆசியாவின் எழுச்சியாகப் பார்ப்பதைக் கவனியுங்கள். காந்தியின் வழியை திலகர் வழி வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன பாரதி சரிதானே..? பாரதியார் : நாட்டின் வருங்கால அரசியலில் காந்தியின் பாத்திரம் தவிர்க்க முடியாதது சிங்காரவேலரே.. கவிதையை நீங்கள் யோசிக்கும் விதத்தை வியக்கிறேன். அது போகட்டும் ஆர்யா. நீலகண்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாயே.. ஆர்யா : ஆமாம் பாரதி.. நீலகண்டரே நீர் வந்திருப்பதை பாரதி சொன்னார். சிறைவாசம் முடிந்து எத்தனை நாள் ஆயிற்று..? நீலகண்டர் : இரண்டாண்டுகள் ஆயிற்று. பல இடங்கள் அலைந்து திரிந்தேன். சென்னைக்கு வந்தும் நாலைந்து நாட்கள் திக்குத் தெரியாது அலைந்தேன். சாப்பாட்டுக்கு வழியில்லை. கோயிலில் பிரசாதம் வாங்கிப் பசி ஆறினேன். வெட்கத்தைவிட்டு யாசகமும் பெற்றேன். ரயிலடியிலும் கடற்கரையிலும் கோயில் மண்டபங்களிலும் படுத்துக்கொண்டேன். சிலநாள் முன்புதான் பாரதி அண்ணா வீட்டைக் கண்டுபிடித்தேன். பாரதியார் : பார் ஆர்யா, இவர் ஒரு சிம்மம். ஒரு தடவை இயக்கத்திற்கு நன்கொடை தருவேன் என்று இவரை அலையவைத்த ஒரு பெரிய மனிதரைத் துப்பாக்கியைக் காட்டிப் பணியவைத்தவர். பெரிய விவேகி.. அப்படிப்பட்டவர் பட்டினியாய் அலைந்திருக்கிறார் பார்.. சிங்காரவேலர் : அதற்கும், காலத்தை வென்று நிற்கப் போகிற நவ கவிதை ஒன்று உம்மிடம் பிறந்து வந்ததே.. நீலகண்டர் : அண்ணா, இவர் யார்..? இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே.. இவர் என்ன சொல்கிறார்..? நான் பட்டினியாய் அலைந்ததில் கவிதை வந்ததா..? எப்படி…? பாரதியார் : இவர் சிங்காரவேலர்.. பெரிய மேதை.. தொழிலாளர் மேன்மைக்காக உழைத்து வருகிறார். அவர்களை ஐக்கியப்படுத்தி வருகிறார். ருஷ்யாவின் போல்ஸ்விக் கட்சியைப் போல் நமது நாட்டிலும் சமதர்மக் கட்சியொன்றை ஏற்படுத்த முயன்று வருகிறவர்களில் இவரும் ஒருவர்.நீர் பட்டினியாய் என் வீட்டுக்கு வந்த அன்று ஒரு பாட்டு வந்தது. அதைக் கடற்கரைக் கூட்டத்தில் பாடினேன். சிங்காரவேலர் அந்த விருத்தாந்தத்தை அறிந்தவர்..அதைத்தான் சொன்னார். (சிங்காரவேலரைப் பார்த்து) இவர்தான் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி. உமது தொழிலாளர் சங்கங்களில் வேலை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர். தொண்டால் சிறை அளந்து வந்திருக்கிறார். சிங்காரவேலர் : பாரதியிடம் இத்தனை புகழ்ச் சொல் பெறுவது கடினம் தம்பி.. நீ விரும்பினால் என்னுடன் வந்து உதவி செய்யலாம். நீலகண்டர் : அண்ணா, இப்படித்தான் சிதம்பரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் நான் தேறவில்லை. இப்போது உங்களுடன் அனுப்புகிறார். சிங்காரவேலர் : ஆஷ் கொலை வழக்கில் அதிக நாள் தண்டனை பெற்றவர் நீர்தான் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம், சதிக் குழுவை உருவாக்கியவன், சதியைத் திட்டமிட்டவன் என்றெல்லாம் சொல்லிக் குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் நான் இல்லவே இல்லை. ஆர்யா : நீர் சரணடைந்தபோது இதைக் குறிப்பிட்டிருந்தீர் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம்.. பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதத்தில்தான் கல்கத்தாவில் நானாக முன்வந்து சரணடைந்தேன்; வாக்குமூலமும் கொடுத்தேன். 1911ஆம் வருடம் ஜூலை 11ஆம் தேதி திருநெல்வேலிக்குக் கொண்டுவந்தார்கள். (மேடை இருளில் போய் ஒளியில் வரும்போது ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : ஆஷ் கொலையின்போது காசியில் இருந்தேன் என்று சொன்னீர்களே.. கல்கத்தாவுக்கு எப்போது போனீர்கள்.? ஓம்கார் : சொல்கிறேன். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

காட்சி 13 காலம் : 1911 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்இடம் : பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் வெள்ளவாரி ஓடைபாத்திரங்கள் : நாகசாமி, கண்ணுப்பிள்ளை, வாஞ்சிநாதன்.(நாகசாமி, வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடப் பயிற்சி தருகிறார்) நாகசாமி : வாஞ்சி, உமக்குத் துப்பாக்கிச் சுடுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கையில் நடுக்கம் குறைந்துவிட்டது. குறி வைப்பதிலும் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது. இன்னும் சிலநாள் பயிற்சி போதும். இலக்கைத் தவறவிடமாட்டாய். வாஞ்சிநாதன் : வந்தனம் ஐயா. நாகசாமி : உமது இலக்கு 6 அடி முதல் 10 அடிக்குள் இருக்குமாறு உமக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது. எதிரி இந்த இலக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டு நீர் துப்பாக்கியை இயக்க வேண்டும். எதிரியின் மார்புதான் சரியான இலக்கு. அப்படியான இலக்கு எல்லைக்குள் எதிரி இருக்கும்போது துப்பாக்கி வெடிக்க வேண்டும். கொஞ்சம் குறி விலகினாலும் தோட்டா பிசகிப் பாய்ந்து எதிரி தப்பித்துவிட அதிகம் வாய்ப்பு உண்டு. வாஞ்சிநாதன் : நல்லது ஐயா. நாகசாமி : வாஞ்சி ஐயர், உம்மை நினைத்து மிகுந்த பெருமை கொள்கிறேன். தென் தமிழ்நாட்டு விடுதலைப் போர்ச் சரித்திரத்தில் உமக்கு அழியாத பெயரும் கீர்த்தியும் உருவாகப் போகிறது. உமது தியாகத்திற்கு இணை சொல்ல வேறு யாரும் இல்லை. வாஞ்சிநாதன் : நானும் கர்வமாகவே இருக்கிறேன் அண்ணா. இந்தக் கடமையை என்னை நம்பி ஒப்படைத்தீர்களே..! உங்களுக்கும் ஐயருக்கும் எத்தகைய நன்றி சொன்னாலும் தகும். நாகசாமி : உண்மையில் நீர் முதலில் இங்கு வந்தபோது எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. அய்யர்தான் உன்மேல் பெரிய நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பணியைத் தந்துள்ளார். வாஞ்சிநாதன் : பாரத மாதாவுக்கு என் கடமையை நிச்சயம் செய்து முடிப்பேன். கண்ணுப்பிள்ளை : வாஞ்சி அண்ணா, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நாகசாமி : அநேகமாக பிரான்ஸ் தேசத்திலிருந்து துப்பாக்கி இந்த வாரத்தில் வந்துவிடும். வந்ததும் திட்டத்திற்குத் தயாராகிவிடலாம். வாஞ்சிநாதன் : ஆனா, நீலகண்டர் எங்கே போனார் என்ன ஆனாருன்னு தெரியவில்லையே அண்ணா? (மேடையில் இருள் பரவி ஒளி வரும்போது ஓம்காரின் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்கள் வாஞ்சியின் பயிற்சியின்போது எங்குதான் இருந்தீர்கள்..? ஓம்கார் : பாண்டிச்சேரியை விட்டு வெளியேறிய சில நாட்களில் காசிக்குச் சென்றுவிட்டேன். ஆஷ் கொலைச் சதியில் என்னையும் சேர்க்கப்பட்டிருந்ததை காசியில் பத்திரிகைச் செய்தியாகத்தான் நான் தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : நாகசாமி சொன்னதுபோல வாஞ்சிநாதனின் பெயர் தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில் நிலைகொண்டுவிட்டது அல்லவா..? ஓம்கார் : ஆமாம், வாஞ்சி அந்தக் கொலைக்குத் தயாரானதைவிட, தற்கொலைக்குத் தயாரானதுதான் பெரிய சவால். புரட்சிக்குத் தயார் ஆகிறவன் மரணத்திற்கும் சேர்ந்தேதான் தயார் ஆகிறான். ஆனால், அந்த மரணம் சமரில் அமைய வேணடும்; அல்லது அந்த மரணம் தொடர்ந்து புரட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டும் அல்லவா..? வாஞ்சியின் தியாகம் மகத்தானது. ஆனால் அவர் செயலும் தியாகமும் புரட்சியைத் துடைத்துப் போட்டுவிட்டது. வாஞ்சியின் மரணத்தோடு தமிழ்நாட்டு புரட்சிப் இயக்கமும் தனது இறுதி மூச்சை விட்டது. ஆகவேதான் அவரது தியாகம் அர்த்தமில்லாது போய்விட்டது. (மேடை இருளில் போகிறது. ஒளி வரும்போது தர்மாலயம் இல்லத்தின் அறை) காலம் : 1911ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஒருநாள் முன்னிரவு.பாத்திரங்கள் : வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், கண்ணுப்பிள்ளை, நாகசாமி வ.வே.சு.அய்யர் : துப்பாக்கி வந்துவிட்டது (துப்பாக்கியை எடுத்துக் காட்டுகிறார்) மேடம் காமாவின் முயற்சியினால் பிரான்ஸ் தேசத்திலிருந்து வந்த துப்பாக்கி இது. இதில் இரண்டு குண்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. ஒன்று ஆஷ் கலெக்டர் மார்பைத் துளைக்க வேண்டும். இன்னொன்று உனக்கானது; தியாக வேள்வியின் ஆகுதிக்கானது. நீர் உமது வேலையை எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்? வாஞ்சிநாதன் : ஊருக்குப் போனதும் செய்துவிடுவேன் ஐயா. வ.வே.சு.அய்யர் : நல்லது.. நீர் செய்யப் போகும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதை இங்கே திட்டமிட முடியாது. அதை நீங்கள் உங்கள் ஊரில் சென்றுதான் முடிவு செய்ய வேண்டும். உமக்கும் புதுச்சேரியில் உள்ள எங்களுக்குமான தொடர்பு இன்றுடன் முடிகிறது. இனிமேல் இந்தப் பணி திருநெல்வேலியின் பணி. ஜாக்கிரதை.!பராசக்தி உமக்குத் துணையிருப்பாள். பாரத மாதாவின் பரிபூரண ஆசிகள் உம்முடன் இருக்கும். சென்று வாருங்கள். நாகசாமியும் கண்ணுப்பிள்ளையும் உம்மைப் புதுச்சேரி எல்லையைக் கடந்து விட்டு வருவார்கள்.(நாகசாமியைப் பார்த்து), எப்படி அழைத்துப் போகப்போகிறீர்கள்..? நாகசாமி : இன்னைக்கு இராத்திரி 11 மணிக்குக் கிளம்புகிறோம். வில்லியனூர் போய், அங்கிருந்து பாகூர் சென்று ஆற்றுக்கு அக்கரை போய் திருப்பாப் புலியூரில் ரயிலேற்றி விட்டுவிட்டு வருவோம். வ.வே.சு. அய்யர் : நல்லது.. பத்திரமாக அனுப்பிவிட்டு வாருங்கள். காரியம் ஜெயம் ஆகட்டும். (வாஞ்சிநாதன் வணங்கிக் கொள்கிறார். வ.வே.சு. அய்யர் விடைபெற்றுச் செல்கிறார்) (மேடையில் காட்சி மாறுகிறது. மீண்டும் ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமி, காரியம் ஜெயம் ஆனது அல்லவா..? ஓம்கார் : காரியம் ஜெயம்தான். புரட்சி இயக்கத்திற்கு ஜெயம் இல்லையே. தன் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்றுதானே வாஞ்சி தன்னைச் சுட்டுக்கொண்டார்? அப்படியானால் அவர் தன் பெயரையும் ஊரையும் எழுதிக்கொண்டது தவறல்லவா? சங்கர கிருஷ்ணன் : கொலைக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதற்குத்தானே அந்தக் கடிதத்தை அவர் வைத்துக்கொண்டார்? ஓம்கார் : அந்த வேலையை இயக்கம் செய்ததாக இருக்க வேண்டும். தன் பெயரையும் ஊரையும் எழுதி வைத்தது, தன் முனைப்பால் வந்த அறிவு மயக்கம், ஒரு புரட்சிக்காரனுக்கு வரக்கூடாதது. அவரை அடையாளம் காட்டிய கடிதத்தை வைத்தது மட்டுமின்றி அவர் வீட்டிலும் தன் சகாக்களின் கடிதங்களை அழிக்காமல் வைத்திருந்து, எல்லாரையும் அவரே காட்டிக் கொடுத்தவரானார். இது மிகப் பரிதாபம். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு..? ஆஷ் கொலைச் சதியில் தம்மைச் சேர்த்துவிடுவார்களோ என்றும் செய்த சத்தியத்தை மீறி இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க வேண்டி வந்துவிடுமோ என்றும் நினைத்து இன்னும் இருவர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒருவர் செங்கோட்டையைச் சேர்ந்த தர்மராஜ ஐயர்; வாஞ்சிநாதனுக்கு நெருங்கிய நண்பர். இயக்கத்தின் சார்பில் எனக்கு மணியார்டர் அனுப்பி வந்தவர். அவர் பாதரச நஞ்சை உட்கொண்டு மரணமடைந்தார். இன்னொருவர் வெங்கடேச அய்யர்; புனலூர்க் காரர். இவர் கத்தியால் தொண்டையில் குத்திக்கொண்டு சாவை வரவேற்றார். இவர்களின் மரணத்தை நீங்கள் வீரச் சாவில் சேர்க்கமாட்டீர்கள் அல்லவா? ஏனெனில் இவர்கள் ஆஷைக் கொல்லவில்லை. வெறும் பயத்தில் உயிரைவிட்டார்கள் என்பதால்தானே? தனிநபர்க் கொலைச் சதிக்கான தண்டனையையோ, போலீஸ் சித்திரவதையையோ ஏற்றுக்கொள்ளத் தேவையான மனோதிடத்தை, இவர்களுக்குப் புரட்சியைப் போதித்த தலைவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை அல்லவா? சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்களும் புரட்சியைப் போதித்தவர் அல்லவா? நீங்கள் இல்லாத இடத்தை வேறொருவர் நிரப்பிக்கொள்ளும் வகையில் உங்கள் போதனை பலவீனமானதாய் இருந்ததாகச் சொல்லலாமா? ஓம்கார் : எனது தோல்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் உடனடிச் செயலை அவர்கள் மனம் விருப்பத்துடன் நாடியது. தகுந்த தருணத்திற்காக அவர்கள் காத்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

காட்சி 12 காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..? சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் கூட்டமாக வந்தார்கள். இங்கே வந்து சில ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்குப் பல காரணங்களாக பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. நான் தொந்தரவுக்கு உள்ளானேன். தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சிக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஆகவே மலை மேலே போய் இருந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் காந்தியடிகள் வந்திருந்தார். முதலில் அவரது பிரதம சீடர் குமரப்பா மலை ஏறி வந்து என்னைப் பார்த்தார். அவர் சொல்லி, காந்திஜி என்னைப் பார்க்க விரும்பினார். அவர் என்னைப் பார்க்க மேலேறி வருவது சரியாக இருக்காது என்று கருதி நான் கீழிறங்கி வந்து பார்த்தேன். சங்கர கிருஷ்ணன்: ஆஹா.. இங்கே காந்தியடிகள் வந்திருக்கிறாரா..? நேற்று பாரதியின் இறுதிச் சடங்கை செய்ய உங்களை அழைத்தார்கள் என்று சொன்னீர்கள். இன்று காந்தியடிகள் இங்கே வந்திருக்கிறார் என்கிறீர்கள். ஒரு பக்கம் வாஞ்சிநாதன் கதை போய்க்கொண்டிருக்கிறது. நான் எதை முதலில் கேட்கட்டும் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக் கொண்டே) எதைக் கேட்டால் என்ன..? பேச்சின் போக்கில் போவோம்.. தானாக எல்லாம் வரும். சங்கர கிருஷ்ணன்: ஆசிரமத்தில் உங்களிடம் சிலர் வைத்தியத்துக்கு வருவதைப் பார்க்க முடிந்தது.. அது எப்படி சுவாமி..? வைத்தியம் தெரியுமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமம் மேலே போனதற்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு சித்த வைத்தியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும். இங்கே இருக்கும் குடிகளுக்கும் வருகிற பக்தர்களுக்கு அவசரக் காலத்திலும் மருத்துவ யோசனைகள் சொல்லி வந்திருக்கிறேன். (சிரிக்கிறார்) அவை அதிசயமாகப் பலிக்கத் தொடங்கின தம்பி. மக்கள் ரொம்பவும் நம்பிவிட்டார்கள். (மீண்டும் சிரிக்கிறார்) சாமியாரின் மருத்துவம் வேறு பலனைத் தருவதற்கு முன்பு ஆசிரமத்தை மேலே கொண்டுபோவதுதான் சரியென்று போனேன். என்னைக் கேட்காமல் யாரும் வரக்கூடாது என்று திட்டம் சொல்லி இருந்தேன். நல்ல மக்கள்..! என் பேச்சை மீறவில்லை.அவர்களும் எனக்கு உத்தரவு போடுவார்கள்; நானும் சிலவற்றைக் கேட்டுக்கொள்வேன். அப்படி ஒரு உத்தரவு, ‘சாமியாருக்கு வயதாகி விட்டது.. மேலே தங்கக்கூடாது. கீழே தங்கள் பார்வையில் இருக்க வேண்டும்’ என்று. சங்கர கிருஷ்ணன்: நல்லது சுவாமிஜி, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : மீதிக்கதை வேகம் நிறைந்தது. வாஞ்சிநாதனை தர்ம இல்லம் தயார்படுத்தியது. தினமும் காலை வேளையில் வ.வே.சு. அய்யரின் போதனைகள்; மாலையில் கிளர்ச்சியூட்டும் உடற்பயிற்சிகள்; சிலம்ப வித்தைகள். அதன் மூலம் வீர சாகச உணர்வுகளால் மனத்தில் போதையூட்டுவது; பாரத இராமாயண யுத்தக் கதைகள் மூலமாக வன்முறையை மிகச் சாதாரணமானதாக இரத்தத்தில் ஏற்றுவது; தனிநபர்க் கொலைகளை வீரம் என்று நம்பச் செய்வது.. இப்படி நெஞ்சில் வேண்டிய உரம் ஏறின பிறகு வாஞ்சிநாதன் சில இயக்கப் பிரசாரப் பிரசுரங்களோடு செங்கோட்டை வந்து சேர்ந்தார். அவர் தனது இறுதியான வேலையைச் செய்வதற்கான பிரயத்தனங்களைச் செய்தார். மீண்டும் அவர்கள் ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டிலும் புனலூரிலும் கூடியதாகத் தெரிகிறது. சங்கர கிருஷ்ணன்: (சிரித்துவிடுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : ஏன் சிரிப்பு தம்பி..? சங்கர கிருஷ்ணன்: மன்னிக்க வேண்டும் சுவாமி, நீங்கள் தயார் செய்த நண்பர்களை, ‘அவர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டீர்களே..? ஓம்கார் சுவாமிகள் : அது அப்படித்தானே ஆயிற்று தம்பி.. என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லையே.. சங்கர கிருஷ்ணன்: சரி சுவாமிஜி, ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : அவை எல்லாமே நான் இல்லாத நிகழ்வுகள்.. கேட்டவற்றிலிருந்தே சொல்கிறேன்.. ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் வாஞ்சிநாதன் இந்த செயலைச் செய்யப்போகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது.கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டுத் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கற்பனை செய்து பார்த்தால் வாஞ்சிநாதன் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள். (மேடையில் ஒளி மங்கி மாடசாமி வீடாக ஒளி விரிகிறது) காலம் : 1911ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒருநாள் பகல் வேளை.இடம் : மாடசாமி வீடு, ஓட்டப்பிடாரம்.பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரகிருஷ்ணய்யர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை மற்றும் சிலர். வாஞ்சிநாதன் : (தான் கொண்டுவந்த பிரசுரங்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு) ‘ஆரியர்களுக்கு ஒரு ஆப்த வாக்கியம்’ (என்ற பிரசுரத் தலைப்பை வாசித்துவிட்டு) எல்லோரும் இந்தப் பிரசுரத்தைப் படிக்க வேண்டும். நமது நாட்டின் கீழ்மைகளுக்கெல்லாம் காரணங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பரங்கியரின் அக்கிரமங்களையும் நமது நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதையும் பஞ்சத்திலும் நோயிலும் நமது ஜனங்கள் மடிந்துகொண்டிருப்பதையும் வெள்ளையர்கள் உல்லாசமாகத் திரிந்துகொண்டு தேசபக்தர்களை ஒடுக்கி வைப்பதையும் மக்களுக்குப் புரியும் விதமாகக் குறித்திருக்கிறோம். மாடசாமி : இந்தப் பிரசுரங்களை என்ன செய்ய வேண்டும்..? வாஞ்சிநாதன் : மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். நமது இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். சங்கரகிருஷ்ணய்யர் : அது சரி, நமது அடுத்த திட்டம் என்ன..? நீலகண்டரைப் பார்த்தீர்களா.? வாஞ்சிநாதன் : நீலகண்டர் பாண்டிச்சேரியில் இல்லை; எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. வ.வே.சு. அய்யர்தான் பாண்டிச்சேரியில் இப்போது இயக்கத்தை நடத்துகிறார். புதிய பரங்கி அரசன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் முடிசூடப் போகிறானாம். நமது நாட்டிலும் வந்து அந்த வைபவத்தைச் செய்யப் போகிறானாம். அவன் இந்தியாவில் காலை வைக்கும் நாளில், பரங்கியர் எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாடெங்கிலும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றனவாம். நமது கடமையாக நமது ஜில்லாவில் நாம் கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும். அந்த வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.(வாஞ்சிநாதன் நிறுத்துகிறார். எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பல கணங்கள் கனமாக நகர்கின்றன) சங்கரகிருஷ்ணய்யர் : அபாயமான திட்டம். இது நீலகண்டருக்குத் தெரியாது என்பது தெரிகிறது; நீ தயார் நிலையில் வந்திருப்பதும் தெரிகிறது. இன்றைய தேதியில், இந்த ஜில்லாவின் பெரிய மனிதர்கள், கனவான்கள், தனவான்கள் எல்லாரையும் கலெக்டர் ஆஷ் பயத்தாலும் நயத்தாலும் தன் வசப்படுத்தி இருக்கிறான். கொஞ்சகாலம் முன்பு பெரிய கூட்டத்தின் நடுவில் மாலையும் கழுத்துமாக அவன் வீற்றிருக்கிற படத்தைப் பார்த்தேன். நீ செய்யப்போகிற காரியத்திற்குப் பிறகு நமக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாம் தலைமறைவாகவே வாழ வேண்டியிருக்கும். வாஞ்சிநாதன் : இது தெரிந்ததுதானே.. நாம் எல்லாரும் இரத்தத்தில் சங்கல்பம் செய்திருப்பது மறந்துவிட்டதா..? காரியத்திற்குத் தயாராகும்போது தயக்கமோ பயமோ நமக்குள் வரலாமா..? சிதம்பரம் பிள்ளை சிறையில் துன்பப்பட்டதைக் கேட்டு நமக்கு எத்தனை கோபம் வந்தது..? அதுவெல்லாம் ஆறிப்போனதா..? சொல்லுங்கள்.. மாடசாமி : சகோதரா, நான் துணிந்துவிட்டேன். உன் மகத்தான தியாகத்தை ஆசீர்வதிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறேன். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : சரி, நானும் சம்மதிக்கிறேன். சங்கர கிருஷ்ணய்யர் : நானும் துணிகிறேன். மற்றவர்கள் : நாங்களும் சம்மதிக்கிறோம்.. (மீண்டும் எல்லோரும் சேர்ந்து இந்த இரகசியத்தைக் காப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்) வாஞ்சிநாதன் : இன்னும் சில வேலைகள் பாண்டிச்சேரியில் பாக்கி இருக்கின்றன. முக்கியமானது, துப்பாக்கியும் அதற்கான பயிற்சியும். அதற்காக நான் மீண்டும் எனது விடுப்பை நீட்டித்துக்கொண்டு பாண்டிச்சேரி போகிறேன். நான் திரும்பியதும் நம் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். பாரதமாதாவுக்கு நம்மை அர்ப்பணிப்போம். அன்னை நம்மை ஆசீர்வதிப்பாள். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது. இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம். பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? – உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? – பன்றிச் சேய்களோ? என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார். வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன். ‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி) யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது. வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா? வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்? வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா.. வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..? ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி.. சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்.. சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி. சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..? ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..? சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..? ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே! வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார். எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை. ‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை. இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை. பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது. இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

காட்சி 10 காலம் : 1911ஆம் வருடம்.ஜனவரி மாதத்தில் அதே நாள்இடம் : பாண்டிச்சேரி ‘தர்ம இல்லம்’பாத்திரங்கள் : வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், நாகசாமி. (வ.வே.சு.அய்யரும் வாஞ்சிநாதனும் ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள். வாசலில் ஒரு இளைஞர் நிற்கிறார்) வ.வே.சு.அய்யர் : வாஞ்சிநாதன்.. இதுதான் ‘தர்மம்’ பத்திரிகாலயம்.. இவர் நாகசாமி. இவர்தான் ‘தர்மம்’ பத்திரிகையைக் கவனித்துக்கொள்கிறார். நாகசாமி : வாருங்கள் அய்யர்.. வாரும் தம்பி.. தம்பி யார்..? வ.வே.சு.அய்யர் : இவர் வாஞ்சிநாதன். நீலகண்டரின் தயாரிப்பு. அவரைத் தேடித்தான் வந்திருக்கிறார். (நீலகண்டர் பெயரைச் சொன்னதும் நாகசாமியின் முகம் மாறுகிறது. வ.வே.சு.அய்யரும் அதைக் கவனிக்கிறார்) நாகசாமி : நீலகண்டரைத் தேடி வந்தாரா..? அவர்தான் இப்போ இங்கு இல்லையே.. வ.வே.சு. அய்யர் : ஆமாம்.. அவர் வரும் வரை இங்கேதான் இவர் தங்க வேண்டும்.. நீர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். நாகசாமி : சரி.. அப்படியே ஆகட்டும்.. ஆனால்… வ.வே.சு. அய்யர் : மற்றதை அப்புறம் பேசிக்கொள்வோம்.. இவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடும்.. மாலை சந்திக்கலாம்.(வ.வே.சு. அய்யர் புறப்படுகிறார்)(மேடையில் இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவும்போது வ.வே.சு. அய்யரின் வீடு. வ.வே.சு.அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே.. நீலகண்டன் நம் காரியத்துக்கு ஒத்து வர மாட்டார் என்றுதானே தர்ம இல்லத்தில் இருந்து அவரை நான் வெளியேற்றினேன்.. நம் ரகசியங்கள் பல அவருக்குத் தெரியும்.. அவர் நம் கருத்திலிருந்து கொஞ்சநாள் விலகிப் பேசி வந்தார். அவர் நம்முடன் இருந்தால் போலீசுக்குக்கூட விவரங்கள் போய்விடலாம். வ.வே.சு. அய்யர் : என்ன நாகசாமி.. நீலகண்டன் நம்முடன் மாறுபடுகிறாரே தவிர, நம்பிக்கைத் துரோகி அல்ல. இயக்க சபதம் செய்திருப்பவர். அவரைப் பற்றி இந்த சந்தேகம் வேண்டாம். நாகசாமி : சரி அய்யரே.. இந்த வாஞ்சி, நீலகண்டரின் ஆள் ஆயிற்றே.. இவரை வைத்து என்ன செய்யப் போகிறோம்..? வ.வே.சு. அய்யர் : துணிச்சல் மிகுந்த பையனாக இருக்கிறான். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கும் தேசபக்தர்களின் தொடர்பு இருக்கிறது. நீலகண்டர் மீது இவனுக்கு மனக்குறை இருக்கிறது. நமது திட்டத்தை இவனை வைத்து நிறைவேற்றலாம். அவனிடம் இணக்கமாகப் பேச்சுக் கொடுத்து அவனது மனநிலையைப் புரிந்துகொள்ளும். நாம் பிறகு சந்திப்போம். (மேடையில் இருள் பரவி மீண்டும் ஒளி பரவுகையில் ‘தர்மாலயம்’ வீட்டில் நாகசாமியும் வாஞ்சிநாதனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : தம்பி வாஞ்சி.. நம்ம வீட்டுச் சாப்பாடு பிடித்திருந்ததா..? பிரம்மச்சாரி செய்த சாப்பாடாயிற்றே..? வாஞ்சிநாதன் : நல்லா இருந்தது அண்ணா.. நாகசாமி : சந்தோசம் தம்பி. தம்பிக்கு திருவிதாங்கூர் ராஜ்யத்தில் செங்கோட்டைன்னு அய்யர் சொன்னார். கலியாணம் ஆகிவிட்டதா..? வாஞ்சிநாதன் : ‘ஆம் அண்ணா. திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நாகசாமி : ஓ..! இளம் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து தேச சேவைக்கு வந்திருக்கிறீர். உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது தம்பி. தம்பிக்கு என்ன வேலை..? வாஞ்சிநாதன் : காட்டிலாகா ரேஞ்சர். நாகசாமி : ஆஹா..! இப்படி ஒரு வேலையை வைத்துக்கொண்டா இந்த ரகசிய இயக்கத்திற்கு வந்தீர்கள்..? கேட்கவே அதிசயமாய் இருக்கிறது தம்பி.. நீர் நீலகண்டரைத் தேடி வந்ததைப் பற்றி அய்யர் சொன்னார். அப்படித் தலை போகிற அவசரம் என்ன வந்தது தம்பி..? வாஞ்சிநாதன் : திருநெல்வேலியில் நடப்பதெல்லாம் பிரம்மச்சாரிக்குத் தெரியுமா..? அவர்பாட்டுக்கு பாண்டிச்சேரிக்குப் போனவர் ஒரு தகவலும் தரவில்லை. புனலூர் சங்கர கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதிலும் உருப்படியாக ஒன்றுமில்லை. எனக்கு ஒரு கடிதம் எழுதி, மான் தோல் ஒன்று ஏற்பாடு செய்து தரும்படிக் கேட்டிருந்தார். வேறு செய்தி இல்லை. நாகசாமி : இதற்கெல்லாமா அவசரப்பட்டு அவரைப் பார்க்க வந்திருக்கிறீர்..? வாஞ்சிநாதன் : அது மட்டுமில்லை அண்ணா. பரலிக்கோட்டை நெல்லையப்பர், சிதம்பரம் பிள்ளையை ஜெயிலில் பார்த்துவிட்டு வந்து சொன்ன செய்தி எங்களை உருக்கிவிட்டது. ஜெயிலில் அந்த மேதையைச் செக்கிழுக்க வைக்கிறார்களாம். அடிக்கக்கூடச் செய்கிறார்களாம். நெல்லையப்பரிடம் சொல்லி வருந்தியிருக்கிறார் பிள்ளைவாள்.. (கண் கலங்கி அழுகிறான்)இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணமான கலெக்டர் ஆஷின் அக்கிரமங்களுக்கு ஒரு முடிவே இல்லையான்னு அவர் நெல்லையப்பரிடம் சொன்னாராம்.ஆஷ் கலெக்டர் அக்கிரமமும் கூடிப் போச்சுங்க ஐயா. குற்றாலத்தில் வெள்ளையர்கள் குளிப்பதற்குத் தனியாக நேரம் வைத்துச் சட்டம் போட்டிருக்கிறான், அந்த இன வெறியன். வெள்ளையர்கள் குளிக்கும்போது நம்ம ஜனங்கள் யாரும் அருவிப் பக்கமே போகக்கூடாதாம்.திருநெல்வேலியில் இப்போ யாரும் சுதந்திரமா பேசக்கூட முடியாது. நீலகண்டர் வந்தால் அவரிடம் கேட்டு, இவன் அக்கிரமத்திற்கு ஏதாவது பாடம் பண்ணணுமுன்னு யோசிச்சோம். அவரைக் கேட்காம எதையும் செய்யவும் தயக்கமாயிருக்கு. அதான் நேரே பார்த்துட்டு வந்திரலாமுன்னு சகோதரர்கள் அனுப்பி வச்சாங்க. நாகசாமி : நெல்லையப்பர் இங்கேயும் வந்திருந்தார். எங்களுக்கும் இந்தச் சேதி தெரியும். நாங்களும் கொதிச்சுப் போய்த்தான் இருக்கோம். இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந்து இழிவுற்றாலும்விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்று பாரதியார் பாடியது பிள்ளையவர்களுக்கே பொருந்தும். அந்த மகானுக்காகவேனும் ஏதும் செய்துதானாக வேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது தம்பி. கவலைப்படாதே தம்பி, இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை காலை பேசுவோம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. ஒளி விரியும்போது வ.வே.சு. அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே, இந்தப் பையன் வேண்டாம். புதிதாகத் திருமணம் ஆனவன். பெண் குழந்தை இருக்கிறது. இவனுக்கு ஏதேனும் ஆனால் இவனது இளம் மனைவியின் நிலை என்னவாகும்..? வ.வே.சு.அய்யர் : தேச இயக்கம் என்று வந்துவிட்டால், இப்படியெல்லாம் பார்க்க முடியமா..? நமது திட்டத்தை இவனை வைத்துச் செய்ய முடியுமா என்று பார்ப்போம். முடிந்தால் செய்ய முனையலாம்.. நாளை கரடிக் குப்பத்திற்கு எல்லாரையும் வரச்சொல்லி இருக்கிறேன். நீரும் வாஞ்சிநாதனை அழைத்துக்கொண்டு வந்துவிடும்.. அங்கே பேசிக்கொள்வோம். (மேடை இருளாகிறது.. மீண்டும் ஒளி பரவ, ஓம்கார் ஆசிரமத்தில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. உங்களைத் துரோகி என்று வெளியேற்றினார்களா..? ஏன் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : பலாத்கார இயக்கம் என்பது ஆயதந்தாங்கிய யுத்தம் என்றே நான் நம்பி வந்தேன். அப்படியான நேரடிப் போரைத்தான் எதிர்பார்த்து நான் சந்தித்தவர்களிடமெல்லாம் சொல்லியும் நம்பிக்கையும் கொடுத்து வந்தேன். தனிநபர் கொலையில் எனக்கு நம்பிக்கையும் சம்மதமும் இல்லை. ஆனால் சில நாட்களாக பாரிஸிலிருந்து வ.வே.சு.அய்யருக்கு வந்திருக்கும் செய்தியின் அடிப்படையில், அவர்கள் தனிநபர் கொலைகள் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அந்த முரண்பாடு முற்றவே, அவர்கள் என்னை ஒதுக்கிவைத்துப் பேசினார்கள். என்மீது ஐயமும் கொண்டார்கள். அதிலும் நாகசாமி என்னைப் போலீஸ் உளவாளி என்று சந்தேகம் கொண்டுவிட்டார். என்னை தர்மாலயத்திலிருந்து வெளியேற்றவும் செய்தார். இது அரவிந்தருக்குத் தெரிந்திருக்கும். பாரதியாருக்குத் தெரியாது. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்ன ஆச்சு சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : வாஞ்சிநாதனை உயிர்த் தியாகம் செய்யத் தயார் செய்தார்கள். (திரை விழுகிறது) (நாளை தொடரும்)

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

காட்சி 9 காலம் : 1911 ஜனவரி மாதத்தில் ஒருநாள்இடம் : ஈசுவரன் தர்மராஜா வீதி, பாண்டிச்சேரிநேரம் : காலை 8 மணிபாத்திரங்கள் : வாஞ்சிநாதன், வ.ரா., வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதன் : (வீதி முனையில் நின்றுகொண்டு எதிரே வரும் நபரிடம்) ஐயா, இங்கே பாரதியார் வீடு எங்கே இருக்கிறது..? எதிரே வந்த நபர் : இதே தெருவில் கடைசி வீடுதான்.. நீர் யார்? பாரதியாருக்கு என்ன உறவு..? வாஞ்சிநாதன் : ஐயா, நான் பாரதியாரைப் பார்க்க வரவில்லை. அவர் வீட்டில் தங்கியிருக்கும் என் நண்பர் ஒருவரைப் பார்க்க வேண்டும். எதிரே வந்த நபர் : பாரதியின் வீட்டிலா..? நானும் அங்குதான் இருக்கிறேன். அங்கு வேறு யாரும் இல்லையே.. (வந்தவரை ஏற இறங்கப் பார்க்கிறார்) வாஞ்சிநாதன் : ஐயா, ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்..? எதிரே வந்த நபர் : இல்லை.. பாரதி வீட்டைத் தேடி வருகிற பாதிப் பேர் மாறுவேடத்தில் வரும் போலீஸ்காரர்கள். மீதிப் பேர் போலீசுக்கு உளவு சொல்கிறவர்கள். அதனால்தான் பார்த்தேன். உம்மைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நீர் யாரைத் தேடிவந்திருக்கிறீர்..? வாஞ்சிநாதன் : ஐயா. என்பெயர் வாஞ்சிநாதன்.. எனக்கு ஊர் செங்கோட்டை. நான் பிரம்மச்சாரியைத் தேடி வந்திருக்கிறேன். எதிரே வந்த நபர் : யாரை..? பிரம்மச்சாரியையா..? (பலமாகச் சிரிக்கிறார்) பிரம்மச்சாரிதான் பெண்ணைத் தேடுவார். நீர் எந்த பிரம்மச்சாரியைத் தேடுகிறீர்..? (மீண்டும் சிரிக்கிறார்) இங்கே நிறைய பிரம்மச்சாரிகள் உண்டு. கல்யாணம் பண்ணிய, பண்ணாத பிரம்மச்சாரிகள்.. நானும் பிரம்மச்சாரிதான். வாஞ்சிநாதன் : ஐயா, நான் நீலகண்டரைத் தேடி வந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி. எதிரே வந்த நபர் : ஓ..! அவரா..? அட்டைக் கரி பாய்ந்த தேகத்தில் இருப்பாரே.. புரட்சிக்காரர் என்று பாரதி சொல்லுவார். பாரதியைவிட என்ன புரட்சி செய்துவிட்டார் என்று தெரியவில்லை. அவர் பாரதியைவிட அரவிந்தரிடத்தும் வ.வே.சு.அய்யரிடமும்தான் அந்தரங்கம் பேசுவார். இப்போ வ.வே.சு. அய்யரிடம் கேட்கலாம் வாரும். வாஞ்சிநாதன் : ஐயா, உங்களைத் தெரிந்து கொள்ளவில்லையே.. நீங்கள்..? எதிரே வந்த நபர் : அதனால் ஓன்றும் ஆகிவிடாது. என்னைத் தெரிந்துகொள்ளாததால் பாண்டிச்சேரியில் புயல் ஒன்றும் வந்துவிடாது. நான் இந்தப் பாண்டிச்சேரியில் அவ்வளவு முக்கியமானவன் அல்ல. என்பெயர் ராமசாமி. வ.ரா. என்று சுருக்கி அழைப்பார்கள். (இருவரும் பேசிக்கொண்டே சென்று ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள்) வ.ரா. : இதுதான் வ.வே.சு. அய்யருடைய வாசஸ்தலம்.. ஐயரே.. ஐயரே.. வ.வே.சு. ஐயர் : வாரும் ஓய் வ.ரா.. என்ன இந்தக் காலை வேளையில்..? வ.ரா. : எனக்கு ஒன்றுமில்லை.. இந்தப் பையன்தான் நீலகண்டரைத் தேடி வந்திருக்கிறார். நீலகண்டர் உம்மோடு இருப்பார் என்று அழைத்து வந்தேன். வ.வே.சு. ஐயர் : நீலகண்டர் இரண்டு நாளைக்கு முன்னால் இங்கு இருந்தார். ஏதோ அவசரம் என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்கப்புறம் காணவில்லை ஓய்.. அந்த ஆளைத் தேடி இவரு வந்தாராமா..? என்ன விஷயம்..? வ.ரா : உள்ளே அழைத்துப்போய் விசாரியுங்கள் ஐயரே.. நான் கிளம்புகிறேன்.. பாரதியார் தேடுவார்.வ.வே.சு. ஐயர் : சரி ஓய்.. பாரதியாரை வரச்சொல்லும். (ஒளி மங்கி இருளாகிறது. ஒளி பரவும்போது மேடை ஒரு வீட்டின் அறையாக இருக்கிறது) வ.வே.சு. ஐயர் : உன் பேரு என்ன தம்பி? நீலகண்டருக்கும் உமக்கும் எப்படிப் பழக்கம்..? வாஞ்சிநாதன் : என் பேரு வாஞ்சிநாதன். தேசபக்த வேலையிலதான் நீலகண்டருடன் பழக்கம். அவரைப் பார்த்து முக்கிய விஷயம் பேசணும். வ.வே.சு. ஐயர் : அவரு வெளியூர் போயிட்டாரு. எங்கப் போனாரு, எப்ப வருவாருன்னு தெரியாது தம்பி. வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் ஊருக்குப் போக வேண்டியதுதான். வ.வே.சு.ஐயர் : தம்பி.. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா உமக்கு உதவலாம். வாஞ்சிநாதன் : மன்னிக்கணும் ஐயா, அதைச் சொல்ல முடியாது. வ.வே.சு.ஐயர் : ஓ..! ரகசிய இயக்கமா..? நானும் உங்க இயக்கத்தோட பழக்கம்தான். நீலகண்ட பிரம்மச்சாரியோட எல்லா ரகசியமும் எனக்கும் தெரியும். அதனால தைரியமா உன்னோட பிரச்சினையைச் சொல்லலாம். வாஞ்சிநாதன் : (அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு) பிரம்மச்சாரி உங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறார். ஆனா.. வ.வே.சு.ஐயர் : (வாஞ்சியின் தோளில் கை போட்டவாறே) பயம் வேண்டாம். இந்தப் பாண்டிச்சேரில நாங்க போலீஸ் பரிவாரத்தோடத்தான் இருக்கோம். பயந்தா எப்படி..? பயப்படாமச் சொல்லும். வாஞ்சிநாதன் : சரி ஐயா.. இப்போ திருநவேலி ஜில்லாவுல பரங்கியர் அதிகாரம் சகிக்கலே. கலெக்டர் ஆஷ் தேசபக்தர்களைத் தொடர்ந்து வேட்டையாடுறார். எத்தனை நாள் அவரைச் சகிச்சுக்கிட்டுப் போறது..? வ.வே.சு.ஐயர் : அதெல்லாம் சரி.. நீலகண்டரைப் பார்க்க இவ்வளவு தூரம் வர்றதுக்கு என்ன அவசரம் வந்தது? வாஞ்சிநாதன் : வெள்ளைக்காரங்களைக் கொன்னு சுயராஜ்யம் சமைப்போம்ன்னு நீலகண்டர் சொல்லிக்கிட்டே இருக்காரு. ஆனா ஒன்னும் நடந்த பாடில்லை. ஆயுதங்கள் வரணும். சந்தர்ப்பம் வரணுமுன்னு சொல்றாரே தவிர, ஒன்னும் ஆரம்பிச்ச பாடில்லை.(கொஞ்சம் தயங்கியவாறு)இப்போ ரெண்டு மாசமா ஆளையும் காணலை. சூர்யோதயம் பத்திரிகையும் வரலை. அதுக்குக் கணக்கும் சொல்லலை. அதுதான் அவரை நேரில் பார்த்து ரெண்டுல ஒன்னு கேட்டுறலாமுன்னு நம்ம ஆளுங்க அனுப்பிச்சு இந்த ஊருக்கு வந்தேன். வ.வே.சு.ஐயர் : தம்பி, நீலகண்டரின் காரியங்கள் எப்படி இருந்தாலும், பண விஷயத்தில் அவர் ரொம்பக் கறார். நீங்க கொடுத்த பணத்திற்குச் சரியாகக் கணக்கு வைத்திருப்பார். பட்டினி கிடந்தாலும் பொதுப் பணத்தில் கை வைக்கவே மாட்டார். அந்த விஷயத்தில் உமக்குக் கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டியதில்லை. வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் கிளம்ப வேண்டியதுதான். நீலகண்டர் வந்த உடனே, நான் வந்து போனதைச் சொல்லிவிடுங்கள். வ.வே.சு.ஐயர் : சரி.. அப்போ உடனே கிளம்பணுமா..? ரெண்டு மூனு நாள் இருந்து நீலகண்டர் வந்துட்டா பார்த்துட்டே போயிறலாமே.. வாரும்.. பின்னால கிணற்றடியிலே ஸ்நானம் பண்ணிட்டு சாப்பிட வாரும்.. மத்தத அப்புறம் பேசலாம்..’ (மேடையில் இருள் பரவி திரும்ப ஒளி வரும்போது ஓம்காரின் அறையில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இது என்ன..? நீலகண்டரிடம் அவர் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதுபோல..? ஓம்கார் சுவாமிகள் : இந்த ரகசிய இயக்கங்களின் பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிது தொடர்பு விட்டுப்போனாலும் சந்தேகம் கிளை விட்டுவிடும். பண விவகாரம் இருந்தால் இன்னும் ஆபத்து. ரெண்டு மாச காலமா நானும் போகவில்லை. சூரியோதயமும் அனுப்ப முடியவில்லை. பத்திரிகையை நடத்த மிகச் சிரமமாக இருந்தது. அச்சடிச்ச பிரதிகளையும் அனுப்ப முடியவில்லை. போலீஸ் கெடுபிடி அப்படி இருந்தது. இன்னொரு விஷயம், சந்தாப் பணம் வேறு வேலையில் செலவு ஆகிவிட்டது. இயக்க வேலைதான். இருந்தாலும் அதை நான் திருநெல்வேலி சென்றால் அல்லவா சொல்ல முடியும்..? சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : அப்புறம் என்ன.. வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதனை மடை மாற்றினார். ஆசிரமப் பணிகள் முடிந்தபிறகு, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்கிறேன். (திரை விழுகிறது) நாளை பார்க்கலாம். (நாளை பார்க்கலாம்)

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

காட்சி 8 காலம் : 1910ஆம் வருடம் கோடைக்காலத்தில் ஒருநாள்இடம் : தென்காசியில் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீடுபாத்திரங்கள் : நீலகண்டர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, சங்கர கிருஷ்ணன், வாஞ்சிநாதன், இன்னும் சில இளைஞர்கள் (காளி படம் ஒன்றுக்கு மாலை போட்டு வைத்திருக்க, பொரியும் கடலையும் படைக்கப்பட்டிருக்கிறது.. சிறிய செம்பு ஒன்றில் தண்ணீரும் பக்கத்தில் செப்பு ஒன்றில் குங்குமமும் இருக்கிறது) நீலகண்டர் : என்ன சிதம்பரம் பிள்ளை.. எல்லாரும் வந்தாச்சா..? மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : ஓட்டப் பிடாரம் மாடசாமியும் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளையும் வரணும். இப்போ ரயில் வர நேரம்தான். தென்காசி ரயிலடி பக்கம்தான..(அப்போது ரயில் ஊதல் கேட்கிறது) நீலகண்டர் : சரி அவர்களும் வந்துரட்டும்.. (வாஞ்சிநாதனைக் காட்டி) இது யாரு? புதுசா இருக்காரே.. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : இவரைப் புனலூர் சங்கர கிருஷ்ணய்யர் அழைச்சுட்டு வந்திருக்கார்.. (நீலகண்டர் சங்கர கிருஷ்ணய்யரைப் பார்க்கிறார்) புனலூர் சங்கர கிருஷ்ணன் : இவர் வாஞ்சி ஐயர்.. ஊர் செங்கோட்டை.. நம்ம வேலை பற்றிச் சொல்லியிருக்கேன். (கதவு தட்டும் சத்தம் கேட்க, சிதம்பரம் பிள்ளை கதவைத் திறக்க இரண்டு நபர்கள் உள்ளே வரவும் கதவை மறுபடியும் சாத்துகிறார் சிதம்பரம் பிள்ளை) நீலகண்டர் : வாங்கோ ஆறுமுகம் பிள்ளை, வாரும் மாடசாமி.. சிதம்பரம் பிள்ளைவாள் சேதி ஏதாச்சும் தெரியுமா..?(வ.உ.சி.யின் பெயரைக் கேட்டதுமே எல்லாரும் கண் கலங்குகிறார்கள்)மாடசாமி : (குரல் தழுதழுக்க) கோயம்புத்தூர்ல போட்டுருக்கான்.. பாவம் எப்படி இருக்காரோ.. பரலிக்கோட்டை நெல்லையப்பர் போன வாரம் பார்க்கப் போனாரு.. அவரு வந்தாத்தான் ஐயா எப்படி இருக்காருன்னு தெரியும்..(சில கணங்கள் கனத்த மவுனமாகக் கழிகிறது) நீலகண்டர் : சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்..எல்லாரும் நம்ம வழக்கம்போல காளி முன்னால சங்கல்பம் செஞ்சுக்குவோம்.. சங்கர கிருஷ்ணன், இன்னைக்கு நீர் சங்கல்பம் செஞ்சு வையும். சங்கர கிருஷ்ணன் : மகா காளி, உன் பெயரால் உறுதிகொள்கிறோம். எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேச சேவைக்கு அர்ப்பணம் செய்கிறோம். பாரத மாதா சங்கத்தின் வேலைகளையும் திட்டங்களையும் இரகசியமாக வைத்துக்கொள்வோம். எங்களில் இரகசியத்தை வெளியிடுவோன் யாராயினும் அவன் நரகத்திற்கே போவான். இரகசியத்தை வெளியிடுவோன் சுட்டுக் கொல்லப்படுவான். திட்டமிட்ட ஒருநாளில் தேசம் முழுவதிலும் உள்ள வெள்ளையர்களைக் கொல்லும் பணிக்கு, எப்போதும் ஆயத்தமாயிருந்து காத்திருப்போம். கட்டளை வந்தவுடன் அர்ச்சுனன் போலக் காரியம் ஆற்றுவோம்.. இது சத்தியம். மற்றவர்கள் : ஆம்.. இது சத்தியம். (நீலகண்டர் காளியின் படத்தின் முன்பு இருந்த செம்புத் தண்ணீரில் குங்குமத்தை எடுத்துக் கலக்குகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, ஆங்கிலேயர்கள் பாம்புகள். கண்ட இடத்தில் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். நாம் தனித்தனியாகச் செய்வோமென்றால் சூரனைப்போல முளைத்துக்கொண்டு வருவார்கள். நமது பாரத மாதா சங்கம் கல்கத்தாவிலிருந்து சொல்லும் ஒருநாளில் நாம் ஒன்றாய்த் திரண்டு யுத்தம் செய்து வெள்ளைப் பூண்டுகளைக் கொல்வோம்.நான் தமிழ்நாடெங்கிலும் சுற்றிவந்து ஆட்களைத் தயார்செய்து வந்திருக்கிறேன்.திருநெல்வேலி ஜில்லாவில் 3000 மறவர்களையும் 20000 கம்பளத்து நாயக்கர்களையும் நமது திட்டத்திற்குத் தருவதாக மறவர் தலைவர்களும் நாயக்கர் தலைவர்களும் சம்மதித்திருக்கின்றனர். ஜெர்மனியிலிருந்து நமக்கு ஆயுதங்கள் வருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது. எல்லாம் கூடிவரும்போது நாம் நமது மாதாவின் சேவையைப் பூர்த்தி செய்வோம்.சகோதரர்களே, பாரத மாதாவின் பெயரால் ஆணை.. இந்தக் குங்குமத் தீர்த்தத்தைப் பரங்கியரின் இரத்தமாக எண்ணிப் பருகுவோம். இது நமது கடமையின் சின்னமாக இருக்கட்டும். வாழ்க அன்னை.. வந்தே மாதரம்..! (நீரைத் தீர்த்தம்போல அனைவருக்கும் கொடுத்துவிட்டு, கடைசியில் தானும் அருந்துகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, இனி நாம் நமது சொந்தப் பெயர்களில் இயங்கக்கூடாது. புனைப்பெயரை வைத்துக்கொள்ள வேண்டும்.. இன்றிலிருந்து எனது பெயர் பிரம்மச்சாரி. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை இனிமேல் கோவிந்தன். வாஞ்சி அய்யர் இன்று முதல் ஹரி.. (தொடர்ந்து பெயர் சூட்டும் படலம் நடந்து முடிகிறது) நீலகண்டர் : சகோதரர்களே, நமது இயக்கத்தின் செய்திகளை நாம் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக, பாண்டிச்சேரியிலிருந்து நாம் வெளியிடும் ‘சூரியோதயம்‘ என்ற பத்திரிகைக்கு சந்தா சேகரிக்க உங்களையெல்லாம் கேட்டிருந்தேன். நீங்களும் சேகரித்துக் கொடுத்தீர்கள். இப்போது நூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். சந்தா தந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். மீதியைக் கொடுத்து இன்னும் நிறைய சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நம் செய்திகள் பரவலாகத் தமிழ்நாடெங்கும் சென்று சேர வேண்டும். நான் பாண்டிச்சேரிக்குச் செல்கிறேன். திரும்ப வர சிலகாலம் ஆகலாம். எல்லாம் கூடிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம். வந்தே மாதரம்..! அனைவரும் : வந்தே மாதரம்..! (மேடையில் மெதுவாக இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவ, ஆசிரம அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் இருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இவ்வளவு ரகசியங்களும் எப்படி வெளியாகின..? ஓம்கார் சுவாமிகள் : அந்த வாஞ்சி அய்யர், ‘நான்தான் கொன்னேன் பாத்துக்கோ’ என்கிற மாதிரி, தன் பெயரையும் ஊரையும் எழுதிச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அல்லவா தன்னைச் சுட்டுக்கொண்டார்..?! அந்தக் கடுதாசியிலிருந்துதான் நூல் பிடித்தார்கள்..! சங்கர கிருஷ்ணன் : அந்த வீரச் சாவை நாங்களெல்லாம் எப்படிப் போற்றிக்கொண்டிருக்கிறோம்..! நீங்கள் அதை ஏதோ முட்டாள்தனம் போலக் குறிப்பிடுகிறீர்களே சுவாமி?! ஓம்கார் சுவாமிகள் : அவசரக்குடுக்கைத்தனம் என்றும் சொல்ல வேண்டும்.. பாண்டிச்சேரியில் வ.வே.சு.அய்யர் செய்து முடித்த சூழ்ச்சியின் விளைவு அது. சங்கர கிருஷ்ணன் : பாண்டிச்சேரியில் என்னதான் நடந்தது சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : நான் இல்லாதபோது நடந்த விஷயங்கள் அவை. என்னைத் தேடிப் பாண்டிச்சேரிக்கு வாஞ்சிநாதன் வந்திருந்தார். நான் அப்போது அங்கே இல்லை. மீண்டும் நான் வந்தபிறகு தெரிந்துகொண்டதைத்தான் சொல்ல வேண்டும். சொல்கிறேன்.. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

காட்சி 7 இடம் : ஓம்கார் ஆசிரமம்காலம் : மறுநாள் காலை 10 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : நேற்று ராவுல நல்லா தூங்கினீங்களா..? சங்கர கிருஷ்ணன் : நல்லா தூங்கினேன் சுவாமிஜி. காலை வேளையில் இந்த மலைச் சாரல் மிக ரம்மியமாக இருக்கிறது. அதிலும் தெளிந்த கண்ணாடி போன்ற நதியின் பிரவாகத்தில் என்னை மறந்து போனேன். ஓம்கார் சுவாமிகள் : இந்த நதியை இங்கே ‘தட்சிணப் பிநாகினி’ என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறாள். இந்த நதி வனத்திற்குள் ஒரு சுனையில் பிறந்து வருகிறது. இந்த ஆசிரமத்தைத் தொடங்கிய சில நாட்களில் அந்தச் சுனையைக் கண்டுபிடித்து, இந்தப் பகுதி மலைக் குடிகளின் உதவியோடு அந்தப் பாதையைச் சீர் செய்தேன். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! இது தென்பெண்ணை நதியா..!நல்லது சுவாமிஜி. நேற்று வ.உ.சி. வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னபோது, காந்திஜி பத்திப் பேச்சு வந்ததே.. அவரு அப்பவே பிரபலமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா, அப்ப அவரு தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகச் சோதனைகளைச் செய்து வந்தார். அவர் இந்தியாவுக்குள்ள கொஞ்சம் முன்னால வந்திருந்தா, என் சரித்திரம் இப்படி இருந்திருக்குமா..? (சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : காந்தியடிகளைச் சந்தித்திருந்தால் உங்கள் மனம் மாறியிருக்குமுன்னு சொல்றீங்களா..? ஓம்கார் சுவாமிகள் : அப்படிச் சொல்ல வரவில்லை. அவரால் நாட்டின் அரசியல் போக்கு மாறிப்போனதைச் சொன்னேன். அதனால் என் போன்றவர்களின் அரசியல் வழிகளில் மாற்றம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். தேசத்தின் சரித்திரத்தை, மக்கள் என்ற மகாசமுத்திரத்தின் சக்தியை முன்னிறுத்தி மாற்றிய போக்கு அல்லவா அது..! பின்னாளில் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு இது தோன்றியது. சங்கர கிருஷ்ணன் : ஆஹா.. அதையும் கேட்க வேண்டும். பிறகு கேட்கிறேன்.சுவாமிஜி, பரோடா மகராஜான்னு மாடசாமிக்கிட்டே சொன்னீங்களே.. அவரு யாரு..? ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. அதை லண்டன்ல இருந்த இந்தியா விடுதியில் இருந்து சொல்லணும். சிதம்பரம் பிள்ளை கேட்டாருல்ல.. ‘உனக்கு தேசபக்திப் பாடம் யாரு போதிச்சது’ன்னு.. அந்த மகானுபவர்களின் நண்பர்கள் எல்லாம் அங்கேதான் இருந்தாங்க. அவங்க ஆரம்பிச்ச இயக்கத்திற்குப் பெயர் ‘அபிநவ் பாரத் சமிதி‘. சியாம்ஜி கிருஷ்ண வர்மான்னு ஒரு தேசபக்தக் கனவான் இருந்தாரு. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கில அரசில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அபாயகரமான மனிதர் என்ற பிரசித்தியுடன் ஆங்கில அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் மீண்டும் லண்டன் வந்து, இந்தியாவிலிருந்து அங்கே படிக்கப் போனவங்களுக்கு நிதி உதவி செய்றதுக்கு ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செஞ்சு, அதைக் கவனித்து வந்தார். இந்த உதவியில் படித்தவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை செய்யக் கூடாதுன்னும் தேச விடுதலைக்கு உழைக்கணும் என்ற நிபந்தனையுடன் அதைச் செஞ்சார். அப்படி திலகர் சிபாரிசுல படிக்க வந்தவருதான் விநாயக தாமோதர் சாவர்க்கர். திலகர் இவரை அனுப்பிய உண்மையான நோக்கம், பலாத்காரப் புரட்சிக்குத் திட்டமிடுவது குறித்தும் வெளிநாட்டில் இருந்துகொண்டு புரட்சியை நடத்த ஆட்களைத் தேர்ந்து, வழிநடத்தி, தயார் செய்வதற்கும்தான். சாவர்க்கர் அந்த வேலையில் வெகு கெட்டிக்காரர். வ.வே.சு. அய்யரும் லண்டனில் படிக்க வந்தார். இவங்கல்லாம் இந்தியா ஹவுஸ்ல இருந்து அந்த இயக்கத்த நடத்திக்கிட்டு இருந்தாங்க. பாரிஸ் நகரத்திலேயும் அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. சியாம்ஜி கிருஷ்ண வர்மா பேரில் இங்கிலாந்து உளவுத்துறைக்கு ஐயம் தோன்ற, அவர் பாரிஸ் சென்றுவிட்டார். சாவர்க்கரும் அய்யரும் விடுதியைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவுல இவங்க இயக்கத்திற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர்-ன்னு செல்வாக்கு இருந்தது. 1857 போல சிப்பாய்ப் புரட்சி ஒன்னு நடத்தணுமின்னு அவங்க எண்ணம். அதுல சில இந்து ராஜாக்களும் இருந்தாங்க. அவங்கள்ள ஒருத்தருதான் பரோடா மகராஜா ஸாயாஜிராவ். சங்கர கிருஷ்ணன் : லால் பால் பால் அப்படின்னு சொல்வாங்களே.. அது இவங்க மூனு பேரைத்தானே சுவாமிஜி..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, அரவிந்தரும் உண்டு. அப்போ லண்டன்ல ஒரு கொலை நடந்தது.. 1909ஆம் வருசம் மதன்லால் திங்கரான்னு ஒரு சுதேசி இளைஞன், கர்சான் வைலி என்ற வெள்ளைக்கார அதிகாரி ஒருத்தன சுட்டுக் கொலை பண்ணினான். கொலையில் இந்தியா ஹவுஸ் ஆட்களுக்குத் தொடர்பு இருந்ததுன்னு மோப்பம் பிடிச்சு சாவர்க்கரை பிடிச்சுக்கிட்டு போச்சு பிரிட்டிஷ் அரசு. அவரை அந்தமான்ல கொண்டு போட்டாங்க. வ.வே.சு. அய்யர் பலே கில்லாடி. தப்பிச்சுப் போயிட்டாரு. 1910ஆம் வருசம் பாண்டிச்சேரிக்கு வந்து என் தலையெழுத்தை அவருதான் எழுதினாரு. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, சாவர்க்கர்ன்னு சொன்னீங்களே.. காந்தி அடிகள் கொலைச் சதியில் சேர்க்கப்பட்டிருந்தாரே அந்த சாவர்க்கரா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா அவருதான்.. (சிரிக்கிறார்) காலம் எப்படில்லாம் மாறிடுச்சு பாருங்க.. நான் சாமியாராகி இருக்கேன்.. அரவிந்தர் வேதாந்தியாப் போய் ஆசிரமம் நடத்துனாரு.. வ.வே.சு. அய்யர் காந்திஜி தயவால பிரிட்டிஷ் அரசின் பொதுமன்னிப்ப வாங்கிட்டு ஆசிரமம் நடத்துனாரு. சாவர்க்கர் அந்தமான் சிறைக்கொடுமை தாங்காம மன்னிப்புக் கடிதங்கள் போட்டு வெளியே வந்தாரு. கடைசியிலே காந்திஜி கொலைச் சதியில் சேர்க்கப்பட்டு நிரூபணம் ஆகாம விடுதலையானாரு. சங்கர கிருஷ்ணன் : நீங்க மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கிட்ட எந்த விதத்திலேயும் சரணடையாம, ரொம்ப காலம் ஜெயில்ல இருந்தவரு.. இல்லையா சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) அதுதான் தம்பி வேடிக்கை. இரண்டு தடவை நான் ஜெயிலுக்குப் போனபோதும் வெறும் சதிக் குற்றம்தான். ஆஷ் கொலையை நான் திட்டமிடாமலே முதல் குற்றவாளி. ஏழரை வருடம் சிறை. இரண்டாம் தடவை கம்யூனிஸ்ட் பிரச்சார நோட்டீஸ் கொடுத்தேன்.. இன்னொரு எட்டு வருசம் சிறை. இது பெரிய குற்றமில்லியா? இந்தியாவுக்கு வெளியே ரங்கூன்ல கொண்டு போட்டான்..(சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : நேற்று தூத்துக்குடிச் சம்பவங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. 1908 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடிக்கு ஒரு பெரிய புயல் வந்தது. அதோட பேரு சுப்பிரமணிய சிவா. அப்போ தூத்துக்குடி தேசபக்த வெறி பிடிச்சுக் கிடந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க. நான் திருநெல்வேலி வந்து கூட்டங்களில் பேசிக்கிட்டிருந்தேன். மார்ச் மூனாம் தேதி வேலை நிறுத்தம் ஜெயிச்சது. 50 சதமானம் சம்பளம் ஒசத்துனாங்க. வார விடுமுறையும் கொடுத்தாங்க. சம்பளம் இல்லாம விடுப்பு எடுத்துக்கிடலாம். நெனச்சுப் பாரு தம்பி, 66 வருசத்திற்கு முன்னே இத நடத்துனாரு பிள்ளைவாள்.. சங்கர கிருஷ்ணன் : உண்மையில் இது பெரிய சாதனைதான் சுவாமிஜி.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, ஏகாதிபத்தியத்தின் முதுகில் விழுந்த அடி இது. அப்புறம் பாலர் விடுதலையைத் தூத்துக்குடியில் கொண்டாடத் திட்டம் போட்டார் பிள்ளைவாள். இது பெரிய மக்கள் எழுச்சி ஆகிவிடும் என்று திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் பயந்தான். தூத்துக்குடியில் சப் கலெக்டரா இருந்த ஆஷ் அதிகார ஆணவம் கொண்ட இன வெறியன். கூடவே சிதம்பரம் பிள்ளை நடத்திய தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க நினைத்தும் முடியாத தோல்வியில் குரோதம் கொண்டு இருந்தான். கலெக்டர் விஞ்ச், பாலர் விடுதலைக் கொண்டாட்டத்திற்குத் தடை போட்டான். வ.உ.சி.யும் சிவாவும் அய்யங்காரும் தடையை மீறி பாலர் விழாவை நெல்லையில் கொண்டாடினார்கள். மூனு பேரையும் கைது பண்ணினாங்க. திருநெல்வேலியிலேயும் தூத்துக்குடியிலேயும் பெரிய எழுச்சி நடந்தது. விஞ்ச்சும் ஆஷூம் இந்த ரெண்டு ஊரையும் ரணகளமாக்கி, பேயாட்டம் ஆடினாங்க.என் இயக்கத்தை நடத்த வேண்டியிருந்ததால நான் கடையநல்லூருக்குப் போய் இருந்துகிட்டேன். பிறகு சென்னைக்கு வந்து, இந்தியா பத்திரிகையில் வேலை பார்த்தேன். பாரதியார் பாண்டிச்சேரி போனப்போ, இரண்டு வாரம் நான்தான் இந்தியாவைக் கொண்டு வந்தேன். அப்புறம் இந்தியா பாண்டிச்சேரியிலிருந்து வந்தது. அவ்வளவுதான்.. ஒரு இரண்டரை வருசம் பேயா அலைஞ்சு ஆள் புடிச்சேன். 1910ஆம் வருசம் வந்தது; சித்திரையா வைகாசியா.. சரியா ஞாபகமில்லை. அப்போ.. (மேடையில் ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை தொடரும்.