பொன்னியின் செல்வன் – 6

பொன்னியின் செல்வன் – 6

கோட்டைக்குள் நுழைந்த வந்தியத்தேவனுக்கு, ஒரு நகரத்துக்கு வந்த புதிதான அனுபவம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது. பழுவூர் இளையராணியின் முத்திரை மோதிரம், காட்டிய மாத்திரத்தில் ஒரு கேள்விகூட இல்லாமல் அனைத்துக் கதவுகளையும் திறக்கக்கூடிய வல்லமை படைத்ததாக இருந்தது. நகருக்குப் புதியவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் புலிக்கொடி பறந்து கொண்டிருந்த அரண்மனையை நோக்கி அரசரைக் காண வந்தியத்தேவன் சென்று கொண்டிருந்தான். சின்ன பழுவேட்டரையரைத் தாண்டி அரசரை யாரும் சந்திக்க முடியாது என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் கடம்பூரிலிருந்து திரும்பவில்லை என்பதையும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான். அரண்மனையினுள் நுழைந்தவன் சின்னப் பழுவேட்டரையரைச் சந்திக்க எங்கு செல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபொழுது, ஒரு புலவர் கூட்டம் அரசரைச் சந்திக்க அவரின் அனுமதி வாங்கச் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அவர்களுடன் இணைந்து கொண்டான். தமையனாரை விட ஆஜானுபாகுவாய் வீற்றிருந்த சின்ன பழுவேட்டரையரை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொண்டான். வீர இளைஞர்களைக் கண்டால் தன் காவல்படையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும் ஆவலில் ஆர்வமாகக் கவனித்த சின்ன பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனின் தூதுவன் என்றதும் முகம் கடுத்தார். ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு புதிதாக ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, அரசரிடம் தானே ஓலையைச் சேர்த்து விடுவதாகக் கூறினார். இதை எதிர்பார்த்திருந்தபடியால் வந்தியத்தேவன் கடம்பூரில் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்ததாகவும் அவர்தான் இந்த ஓலையை அரசரிடம் தன்னையே கொடுக்கச் சொன்னதாகவும் இட்டுக் கட்டிக்கூற, அரசரைப் பார்க்க உள்ளே அனுப்பினார். அரசரைக் கண்டதும் பரவசமும், அவர் நோயில் நலிந்து காணப்பட்டதால் வருத்தமும் அடைந்த வந்தியத்தேவனுக்குப் பேச்சே வரவில்லை. மகனிடமிருந்து வந்த ஓலை என்றது அரசரும், அரசியுமான வானமாதேவியும் மிகவும் மகிழ்ந்தனர். தான் கட்டிக்கொண்டிருக்கும் பொன்மாளிகைக்கு வருகை தருமாறு ஓலையில் ஆதித்த கரிகாலன் எழுதியிருந்ததைப் படித்த அரசர், ‘தெய்வங்களுக்கு மட்டுமே பொன்மாளிகை ஏற்படுத்த வேண்டும்; மனிதர்களுக்குத் தேவையா?’ என்று வருந்த, தாயும் தகப்பனுமாயும், நாட்டுக்கான அரசனுமாயும் விளங்கும் சுந்தரசோழர்-வானமாதேவிக்குப் பொன்மாளிகை கட்டியது தவறில்லை என வந்தியத்தேவன் இனிய சொற்களைக் கூற, இருவருக்கும் வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. தூரத்தில் சின்ன பழுவேட்டரையர் வருவதைக் கண்டவன், தான் சொல்ல நினைத்ததை அவசர அவசரமாகக் கூறினான். ‘தாங்கள் தஞ்சையிலிருந்து கிளம்ப வேண்டும். இங்கு அபாயம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அபாயம்.. அபாயம்’ .. எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சின்ன பழுவேட்டரையர் உள்ளே நுழைய, அவர் கடைசி வார்த்தையைக் கேட்டு விட்டார். அப்போது புலவர்கள் உள்ளே வர, வந்தியத்தேவன் அவர்களுடனேயே போய் நின்றுகொண்டான். வந்த புலவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாட, அரசர் அதில் லயித்து மகிழ்ந்தார். பாடல்கள் வழி ஒரு குறிப்பு இருந்தது. அது இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கிருந்து உணவுப் பொருட்கள் அனுப்ப வேண்டாம் என்பதாகும். நடுவில் குந்தவை தேவியைப் பற்றி அரசர் பேசியபோது, அவரின் முகம் நெகிழ்ந்ததைக் கண்ட வந்தியத்தேவன், அவரைச் சந்தித்து அடுத்த ஓலையைக் கொடுக்க வேண்டும் என்று இடுப்பைத் தொட்டு பார்த்தான். ஓலையைக் காணவில்லை. எங்கோ தொலைந்து போய்விட்டது என்று தெரிந்துகொண்டவன், இருப்பில் நிற்காமல் பதட்டமுற்று கிளம்பிக் கொண்டிருக்கும் அந்த புலவர்களுடனேயே திரும்ப முனைந்தான். ஆனால் சின்ன பழுவேட்டரையர் அவனைப் போகவிடாமல் இறுகக் கைப்பற்றி அரசரிடம் கூட்டிச்சென்று அபாயம் என அவர் காதில் விழுந்ததைப் பற்றி விசாரித்தார். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன், தான் அபயம் எனக் கேட்டதாகவும், தனக்கு ஒரு பத்து கிராமங்களாவது தங்களுடைய முன்னோர் பூமியில் அளிக்குமாறு வேண்டிக் கொண்டதாகவும் முறையிட்டான். அதையும் ரசித்த அரசரிடம், சின்ன பழுவேட்டரையர் ஓலைக்கு என்ன பதில் அனுப்புவது என்று கேட்க, அரசர் தஞ்சையை விட்டு வெளியே போவதில் அதுவும் பெண் பிள்ளைகள் போகும் பல்லக்கில் கால் செயலிழந்த நிலையில் போவது விருப்பமில்லை என்று கூறினார். அதற்குத் தகுந்த பதில் பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்ததும் கலந்துகொண்டு அனுப்பலாம் எனவும், தன் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் போல் இருப்பதாகவும், எனவே ஆதித்த கரிகாலனையும், ஈழம் சென்றிருக்கும் அருள்மொழி வர்மனையும் வரச் சொல்லி ஓலை எழுதவேண்டும் எனவும் கூறினார். அதுவரை வந்தியத்தேவனை இங்கேயே தங்க ஏற்பாடு செய்யுமாறும் கூறினார். ஈழத்திற்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கான சின்ன பழுவேட்டரையரின் ஆட்சேபனையைப் புலவர்களின் பாட்டால் குறிப்புணர்த்தியதைப் புரிந்துகொண்ட அரசர், அதற்கும் ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார். யமனிடமிருந்து கூட மீட்டு வருபவர் என்னும் அளவுக்கு அரசர் சின்ன பழுவேட்டரையரின்பால் நம்பிக்கை வைத்திருந்தது அவர் பேச்சிலேயே தெரிந்தது. ஓலையைத் தொலைத்திருந்த வந்தியத்தேவனுக்கு மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. அவன் நினைத்தாற்போலவே அந்த ஓலை சின்ன பழுவேட்டரையரிடம் ஒரு காவலன் மூலமாக அடைந்திருந்தது. ‘அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான தீரன் வேண்டும் எனக் கேட்டிருந்தாய் அல்லவா? ஓலையைக் கொண்டு வருபவனே அந்த வீரன்’ என்றும், ‘வந்தியத்தேவனைப் பூரணமாக நம்பலாம்’ என்றும் ஆதித்த கரிகாலன் அந்த ஓலையில் எழுதியிருந்ததைக் கண்ட சின்ன பழுவேட்டரையர், இதில் ஏதோ சூது இருக்கிறது என்று புரிந்து கொண்டே வேகமாக அங்கு வந்திருந்தார்.  அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு, வந்தியத்தேவனைக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நன்கு உபசரிக்கும்படி ஆணையிட்டார். வெகுதூரம் வந்த களைப்பு போக அந்த மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட சுகபோக உபசரிப்பில் வந்த விஷயத்தையே மறந்து போகும் வண்ணம் மகிழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். புதிய உடைகள், உணவு எல்லாவற்றையும் ருசித்தவன், அங்கிருந்த சிற்பக் கூடத்தைச் சுற்றிப் பார்த்து சோழர்குல வரிசை, பராக்கிரமம், போர்கள், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், அதில் பழுவேட்டரையர் பரம்பரை செய்த தியாகங்கள், உதவிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புரிந்து கொண்டான்.  தன்னைக் கண்காணிப்பதற்கே இந்த உபசரிப்பு என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன், சடுதியில் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அங்கிருந்த காவலாளிகளிடம் தன் பொருட்களைத் திருப்பித் தருமாறு சண்டையிட ஆரம்பித்தான். முன்வாசலில் குதிரையில் வந்த சின்ன பழுவேட்டரையரை ஓரக்கண்ணில் கவனித்தவன் தன்னை நெருங்கியவர்களை எல்லாம் ஒரே சுற்றில் வீழ்த்தினான். என்ன கலாட்டா என்று நெருங்கியவர், அவனின் வீரத்தை மனதுக்குள் மெச்சி, தமையனாரிடம் கலந்து கொண்டு  அவனைத் தன் காவற்படையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டார். தன் பொருட்களெல்லாம் காணவில்லை, திரும்ப வேண்டும் என்று கேட்ட வந்தியத்தேவனிடம் என்ன பொருட்கள் எனக் கேட்க, அவன் வேறுவழியில்லாமல் குந்தவை தேவியின் ஓலையும் அதில் இருப்பதாகக் கூறி அனைத்துப் பொருட்களும் எனக்குத் திரும்ப வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தான்.  அவர் ஆணையின்படி எடுத்து வந்த பொருட்களில், தவறவிடப்பட்டிருந்த ஓலையும் அவன் வைத்திருந்ததை விட அதிகப் பொற்காசுகளும் இருந்தன. இதிலிருந்தே தன்னை உளவு பார்த்ததைப் புரிந்து கொண்டவன், அதிகப்படியாக இருந்த காசுகளை மறுத்தான். அதை வைத்துக்கொள்ளுமாறு கூறிய சின்ன பழுவேட்டரையர், அவன் அன்று அங்கேயே தங்கி, பெரிய பழுவேட்டரையரைப் பார்த்துவிட்டுப் போகிறானா என அவன் திட்டத்தை விசாரித்தார். இருந்துவிட்டுப் போவதாகவே கூறியவன், தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென அனுமதி கேட்டான். அவனுடன் இரு காவலாளிகளைத் துணைக்கு அனுப்பி, சுற்றிப் பார்க்கச் சொல்லிவிட்டு சின்ன பழுவேட்டரையர் கிளம்பினார்.  தான் தப்பிப் போகாமல் இருப்பதற்குத்தான் காவலாளிகள் இருவரும் வருகிறார்கள் என்று புரிந்துகொண்ட வந்தியத்தேவன், வேடிக்கை பார்ப்பது போல் போக்கு காட்டிக்கொண்டே, அங்கிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக்கொண்டு வந்தான். திடீரென அவனுக்கு நந்தினியின் ஞாபகம் வந்து, இந்தக் கோட்டையில் உதவி செய்வதானால் அவள்தான் செய்ய முடியும் என்று தோன்ற, காவலாளிகளிடம் இருந்து தப்ப சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியில் வேளக்காரப் படை வந்து கொண்டிருந்தது. திடீரென வேளக்காரப் படை வரிசையில் சிறிது குழப்பம் ஏற்பட, அதைப் பிடித்துக் கொண்ட வந்தியத்தேவன் அங்கிருந்து ஓடிய வீரர்களுடன், தானும் ‘பிடி.. பிடி’ என்று சத்தம் போட்டுக்கொண்டே எதிர்ப்பட்ட சந்தின் வழியே தப்பி ஓடினான்.  அவர்களுடனே சிறிது தூரம் ஓடியவன், பின் வழி மாறி சிறிய சந்துகளிலெல்லாம் மாறி மாறிச் சென்று, ஒரு பெரிய மதில் சுவரின் ஓரத்தில்  அமர்ந்து கொண்டான். இந்நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள், எப்படியேனும் தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டவன் அப்படியே சுவரின் மீது சாய்ந்து தூங்கி விட்டான். சிறிது நேரத்தில் யாரோ அழைப்பது கேட்டு விழித்தவன் மேலிருந்து ஒரு பெண் உருவம் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.  அந்த உருவம் ‘என்ன தூக்கமா? இரு ஏணி வைக்கிறேன். ஏறி வா’ எனக் கூறிவிட்டு மூங்கில் ஏணி ஒன்றை இறக்க, வந்தியத்தேவனால் நம்பவே முடியவில்லை. சரி ஆனது ஆகட்டும். போய்ப் பார்க்கலாம் என ஏறத் தொடங்கினான். ‘ம். அங்கே இளையராணி காத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்குத் தூக்கம் கேட்கிறதா’ என்று அந்தப் பெண் கேட்க, வந்தியத்தேவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இளையராணி என்றால் நந்தினியின் மாளிகைக்கா நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணியவன், மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம் என வேகமாக ஏறினான். மதிலின் உச்சியில் ஏறிக் கீழே பார்த்தபோது, அது ஒரு அரண்மனையின் விஸ்தாரமான தோட்டம் எனத் தெரிந்தது.  யாருடையது எனக் கேட்கத் தொடங்கிய வந்தியத்தேவனை ‘உஷ்.. என அடக்கியபடி அந்தப் பெண் முன்னால் நடந்தாள். வந்தியத்தேவனும் தொடர்ந்தான்.  நடுவில் காவலாளிகளின் சத்தத்திற்கு மறைந்து கொண்டபோது நிலவின் வெளிச்சத்தில் அந்தப் பெண் வந்தியத்தேவன் முகத்தை உற்றுப்பார்த்து, ‘நீ போனமுறை வந்த அதே மந்திரவாதிதானா?’ என்று சந்தேகத்துடன் கேட்க, இவன் சமாளித்துக் கொண்டு அடிக்கடி மாறுவேடம் பூண்டாக வேண்டிய அவசியத்தைக் கூறினான். பின் ஒரு லதா மண்டபத்தை அடைந்தார்கள். அந்த இரவில் அங்கிருந்த விளக்குகளின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபம் ஒரு விதத்தில் தேவலோகமென வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. உள்ளே சென்ற பெண்ணிடம் பேசிய குரலை வைத்து, அது நந்தினிதான் எனப் புரிந்து கொண்டான்.  உள்ளே வந்தியத்தேவன் நுழைந்தபோது ஒயிலாய் சப்பர மஞ்சத்தில் நந்தினி சாய்ந்திருந்தாள். அவனைக் கண்டு வியந்தபோதும், பணிப்பெண்ணின் முன் இருவரும் சமாளித்துக் கொண்டனர். அழகெனும் தெய்வமே உருக்கொண்டாற்போல் நந்தினியின் மோகன உருவத்தைக் கண்டு மயங்கிய வந்தியத்தேவன், முன்னொருமுறை மதுவால் ஏற்பட்ட மயக்கத்தையும், சித்தம் கலங்குவதால் இனிமேல் மது அருந்தக்கூடாது என்று தான் உறுதி எடுத்துக் கொண்டதையும் நினைத்து, இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணிக் கொண்டு திடமாய் தன்னை

கரைசேராப் படகுகள் – 12

கரைசேராப் படகுகள் – 12

கோபாலண்ணன் கொடுத்த பேப்பரில் இருந்த பேரும் மகான் சொன்ன பேரும் ஒன்றாக இருந்தது. சுப்புடு ஐயர் ‘சுவாதி’ங்கற பெயரை எழுதிக் கொடுத்திருந்தார். அதைப் பார்த்ததும் செந்தாமரை கலங்கினார். ‘மகான் சொன்னது போல எனக்கு ஏதாவது கஷ்டம் வருமோ?’ன்னு மனசு கலங்கினார். செந்தாமரை முகம் மாறி, வெளிறிப்போய் நிற்பதைப் பார்த்ததும், “வில்லிபுத்தூர் ராசகோபுரமும்  கரிகாலனும் தோத்துதான் போவாங்க என் ராசா கம்பீரமா நீ நின்னா.. ஏன் ராசா கலங்கி நிக்கற?”ன்னு கேட்ட பட்டம்மாவுக்கு, “ஒன்னுமில்ல ஆத்தா, மயிலம் மலை கணக்கா கல்லாட்டம்தான் இருக்கேன்.. நீ சோலிய பாரு ஆத்தா” என்று பட்டம்மாவை விரட்டி விட்டார் செந்தாமரை. “விடுப்பா செந்தாமரை.. ஒன்னும் நடந்திடாது. ஐயனாரப்பன் துணையிருக்கான்; போப்பா, போய் விசேசத்த பாரு. நான் போய் பொழுது சாயறச்சே வர்றேன்”னு சொல்லிட்டு கோபாலண்ணன் கிளம்பினார். டவுன்ல வாங்கிவந்த காப்பை யாருக்கும் தெரியாமல் பொஞ்சாதிகிட்டேயும் ஆத்தாகிட்டேயும் காட்டினார் செந்தாமரை. அந்தக் காப்பைப் பாத்ததும், “காணாதத கண்டாளாம் கண்டாங்கி கட்டனவ; போகும்போது போச்சாம் பவுசத்துப் போய்”ன்னு புலம்ப ஆரம்பிச்சா பட்டம்மா. “மாமா.. என்ன விலையிருக்கும்?”னு கேட்ட மரகதத்திற்கு, “பவுனு 50 ரூவா.. இந்தக் காப்பு அரைப் பவுனுக்குக்கூட. 30 ரூவா” என்று விளக்கமாகச் சொன்னார் செந்தாமரை. “காசு உன் சம்பந்தி குடுத்தாளா? அவதான் “எள்ளப் பிச்சு எழுவது பேருக்குப் பங்கு வைக்கறவளாச்சே”ன்னு சந்தேகமாகக் கேட்டார் பட்டம்மா. “ஆமாம் அத்தே, எனக்கு்ம் புலப்படல. இந்த மனுசன் சூது பேசறாரோன்னு தோனுது”ன்னு மாமியாளுக்கு ஒத்து ஊதினாள் மரகதம். “வேப்பமரத்துப் பேயும் ஆலமரத்துப் பிசாசும் ஆம்படையனை அடிக்க ஒன்னா சேந்துச்சாங்கற கதையா, ரெண்டு பேரும் ஒன்னா சேந்துட்டீங்களா? நான் விளங்கனா மாதிரிதான்”னு சொல்லிவிட்டு, பால் கறக்கப் பால் லோட்டாவை எடுத்துக் கொண்டு கிளம்பினார் செந்தாமரை. “வீட்டுக்கு மக்க, மனுசா எல்லாம் வருவாக. பொழுதோட மாட்ட ஓட்டியான்னு மாரியான்ட காலைலேயே சொன்னேன். மாடு வந்துதான்னு தெரியல” என்று புலம்பிக்கொண்டே கொட்டகைப் பக்கம் வந்தார் செந்தாமரை. “புனிதா இருக்கற அறையில மூனு பொட்டப் புள்ளையும் ஒன்னுக்கு மண்ணா உக்காந்து அரட்டை அடிக்கறாளுங்க. ஒன்னா வளந்ததனாலதான் பாசம் விட்டுப் போவல”ன்னு மரகதம் மனசுல நினைச்சுகிட்டாள். “மரகதத்தோட கூட பொறந்த கொடிங்க ரெண்டு பேரு இருக்காங்க. எங்க, அறுப்பை வச்சிகிட்டு ஊர் ஊரா  சொல்ல முடியல. அதான் பொண்ணு குடுத்த சம்பந்தியோட நிறுத்தியாச்சு”ன்னு மரகதம் வந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தாள். திடீரென மேகங்களெல்லாம் தரையிறங்கி வந்திடுச்சி. இந்திரன் குதிரையாட்டம் நாலு காலு பாய்ச்சல காளையும் கன்னும் வீட்டுக்கு ஓடியாற, பெரும் புழுதி மூட்டம் கிளம்பியது. அந்த மண்வாசம், ஆயிரம் ரோசா தோட்டம் இருந்தாலும் இந்த வாசத்துக்கு ஈடாகாது. அக்கம் பக்கத்து மக்களெல்லாம் சீவிமுடித்து சிங்காரித்து ஒவ்வொருத்தரா சேர ஆரம்பித்துவிட்டார்கள். பக்கத்து வீட்டு வள்ளியும் எதிர்த்த வீட்டு சக்குபாயும் சமையல்கட்டுக்குக் கூடமாட ஒத்தாசைக்கு வந்தார்கள். அந்த நேரம் பாத்து வாசல்ல  “கடகட..கட”ன்னு அவுத்திமேட்டு மல உருண்டு வர்ற சத்தம் வாசலில். புனிதா மாமியார் வூட்டு சனங்க வந்தார்கள். “பட்டாட்டம் பொட்டி வண்டி, கட..கட.. கட்ட வண்டியோட சம்பந்தம் பேசியிருக்கே.. எங்க அடுக்கும் இந்த நியாயம்?”னு புலம்பினா பட்டம்மா. “த.. ஆத்தா புலம்பாம இரு, அவுங்க காதுல விழப்போவுது”ன்னு  அதட்டினார் செந்தாமரை. வந்தவர்களை வாங்கன்னு கூப்பிட்டு, காபி தண்ணி கொடுத்தாள் மரகதம். ஏழாம் காப்பு செய்றதுக்கு, கூடத்தைச் சுத்தம் பண்ணி, கூடத்துக்கு நடுவுல பச்சரிசி மாவுல கோலம் போட்டா. சுத்தி பட்டை பட்டையா கோடு போட்ட ஜமுக்காளம் போட்டு வந்தவர்களை உட்கார  வைத்தார்கள். அதற்குள் குப்புசாமி ரெட்டி, கண்ணு உடையாரு, கோவாலு நாய்க்கரு, பண்டாரம் எல்லாரும் வந்துட்டாங்க. வந்த ஆம்பளங்க ஒரு பக்கமாகவும் பொம்பளங்க ஒரு பக்கமாகவும் அடைஞ்சி உட்காந்தார்கள். மரகதம் மாமியாகாரி முகத்தைப் பார்த்தாள். “எலி மூஞ்சி என்ன வளையில தூக்கி வச்சிருக்கு?”ன்னு யோசிச்சவ, அவங்கள கேட்காம செய்யறம்னு கோபம் போலன்னு புரிஞ்சிகிட்டு, “அத்தை, அப்பறம் என்ன செய்யணும்னு சொல்லுங்க”ன்னு கேட்டாள். “என்னவோ சொன்ன கதையில, எலி ரவுக்க கேட்குதாம் சபையிலங்கற மாதிரி எங்கிட்ட எதுக்குடி கேட்கற? இவ்வளவு நேரம் நீதானே செய்த?”ன்னு வெடுக்குனு பேசினா மாமியார். “தெரியலன்னுதானே கேட்கறாங்க.. சொன்னா, சிலுக்கு சீமைக்குப் போய்டுமா?’ன்னு பதில் பாட்டு பாடிகிட்டே, அங்க ஒரு மணைப் பலகை போட்டு, அதும் மேல வெள்ளை வேட்டியைப் போட்டாள் மரகதம். மணைக்கு எதிரில் செங்கல்லு வச்சு அதுமேல சாணியில மூனு பிள்ளையார் பிடிச்சு வச்சு, அதுமேல அருகம்புல்ல வைடி”ன்னு மாமியாகாரி அதிகாரம் பண்ணினார்கள். பட்டம்மா சொன்னா மாதிரியே எல்லாம் பண்ணி, தோட்டத்துல இருந்து அடுக்குமல்லியைப் பறிச்சு அதை சரமா கட்டி, பிள்ளையாருக்கும் விளக்குக்கும் போட்டாள் மரகதம். ஒரு குட்டி மண் பல்லாவுல விளக்கெண்ணெயும், மூலிகைத் தழையும், வேப்பங்குச்சி, கருடக்கிழங்கு, இதெல்லாம் போட்டு கரியாக்கிய மையை வைத்தாள். இந்த மையை வச்சா பால் மணத்துக்கு காத்து கருப்பு அண்டாது. ஒரு பித்தள தட்டுல பால்மணி, கருப்பு மணி, வெள்ளருக்கம் வேரில் திரிச்ச அண்ணாக்கயிறு, அதே வேருல திரிச்ச காப்பு இதெல்லாம் வைத்திருந்தாள் மரகதம். குத்துவிளக்கும் காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றி வைத்து, புனிதாவையும் குழந்தையையும் சீவி சிங்காரிச்சு அழைச்சிட்டு வந்து மணையில உக்கார வச்சாங்க. கற்பூரம் ஏற்றி பூசை பண்ணினாள் மரகதம். புனிதா மாமியாரைக் கூப்பிட்டு  வெள்ளெருக்கங் காப்பு போடச் சொன்னாங்க. தட்டில் இருந்தது எல்லாவற்றையும் குழந்தைக்குப் போட்டார்கள். செந்தாமரையின் மூத்த மகள்கள், குழந்தை கையில் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்தார்கள். “குழந்தைக்குப் பவுன்ல காப்பு போடலையா?”ன்னு கூட்டத்துல யாரோ கேட்டார்கள். உடனே செந்தாமரை ஓடிப்போய் பவுனு காப்பை எடுத்து வந்து புனிதா மாமனாரிடம் தந்தார். அவரும் குழந்தைக்குப் போட்டுவிட்டார். “குழந்தைக்கு என்னப்பா பேரு?”ன்னு குப்பு ரெட்டி கேட்க, “சுவாதி”ன்னு செந்தாமரை சொன்னாரு. “என்னது… என் பேத்திக்கு நீங்க பேரு வைக்கறதா…?”ன்னு புனிதாவின் மாமனார் கத்தினார். தொடரும். சாம்பவி சங்கர்  

கரைசேராப் படகுகள் – 11

கரைசேராப் படகுகள் – 11

களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பிய செந்தாமரை, “மரகதம், நாளைக்கு அரைவிடுதி வேலைதான் ஆளுங்களுக்கு சொல்லிவிட்டிருக்கு; நீ காலைல கஞ்சியும் சேர்த்து எடுத்துட்டு வந்துடு. ஆளுங்க கோழிகூவயிலேயே வந்துருவாங்க” என்றார்.    “அய்யோ நாளைக்கும் கஞ்சி காய்ச்சணுமா? வீட்ல சொல்லிவிட்டவங்க எல்லாம் வந்துடுவாங்களே.. வேலை மெனக்கெடுமே” என்று புலம்பினாள் மரகதம். “விளைஞ்ச வெள்ளாமை வீடு வர வேணாமா? மேலு அலுப்ப பார்த்தா முடியுமா?” “நான் கஞ்சி காய்ச்சிடறேன் மாமோய்.. சத்த அந்தக் கஞ்சி அண்டாவ, மாரிய விட்டு தூக்கிப் போயிடேன்..” என்று கொஞ்சும் குரலில் சொன்னாள் மரகதம். “சிறுமலை சுத்தற சின்னக்காளுக்கு மணவறை சுத்தனா மயக்கமா?” என்று நீட்டி முழக்கினார் பட்டம்மா. “யாரும் இங்க பவுசா உட்காந்து திங்கல. ‘இடிஇடின்னு இடியாப்பம் பிழிஞ்சு, காப்பித் தண்ணி கொடுத்து கப்பலேத்தி விட்டாங்க’ன்னு சொல்றா மாதிரி உழைச்சிகிட்டுதான் இருக்கோம்” என்று பதிலுக்குப் பொரிந்தாள் மரகதம். “டேய் சுள்ளான்… இங்க நின்னு பஞ்சாயத்து பார்த்தோம்னா பஞ்சா பறந்துடுவோம். களத்துமேட்டுக்குப் போலாம் வா” என்று நாயையும் அழைத்துக்கொண்டு செந்தாமரை கிளம்பினார். கோழி கூவறதுக்கு முன்னாடியே எழுந்து, வாசல் தெளித்து, செம்மண்ணில் ஓரங்கட்டி, வாசல் அடைத்து பச்சரிசி மாவில் கோலம் போட்டு, வாசலில் தொங்கிய வேப்பிலையெல்லாம் எடுத்து வீசினாள் மரகதம். அடுப்பை மெழுகிக் கோலம் போட்டு, கஞ்சி காய்ச்சினாள். குளித்து   முடித்து சிவப்பு நிறத்தில் சின்ன சின்னதாக மஞ்சள் பூப்போட்ட புடவையைச் சுற்றிக்கொண்டு விளக்கு தட்டு விளக்கி, சாமி மேடையைச் சுத்தம் செய்தாள். முருகர் படத்தைத் துடைக்கப் போனவள், படத்துக்குப் பின்னாடி இருந்த கடிதத்தைப் பாரத்தாள். “கூறுகெட்ட மனுசன், கடுதாசி படிச்சா தூக்கிப் போடவேண்டியது தானே..” என்று தூக்கிப் போடப் போனவள், ‘பிரிக்காமலேயே இருக்கே..’ என்று அங்கேயே வைத்துவிட்டு, அடுப்படி வேலைக்கு வந்துவிட்டாள். எட்டு மணி சங்கு கூவும்போது, இருளாயி வந்து சேந்தாள். முந்தானையில்  பறிச்சு வச்சிருந்த குப்பைமேனி, தூதுவளை, கற்பூரவல்லி, முடக்கத்தான், முசுமுசுக்கை, முருங்கை, துளசி, சீந்தல், அருகம்புல், வேப்பிலை, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் எல்லாவற்றையும் அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். அண்டா நிறைய சுடுதண்ணி விளாவி வைத்து, புனிதாவைப் புழக்கடைப் பக்கம் அழைத்து வந்து உட்காரவைத்து, தலையில் பொட்டு எண்ணெய்  வைத்து அரப்புப் பொடி போட்டு நல்லா தலை முடியைக் கசக்கி எடுத்தாள்.  அடி வயிற்றில் நல்லா தண்ணியை அடித்து ஊற்றினாள். வேகவேகமாகப் புனிதாவுக்குத் துணியைச் சுற்றி, அரைத்து வைத்த மருந்துருண்டையில் மூனு உருண்டை கொடுத்து, சுடு தண்ணி கொடுத்தாள். அதற்குள் மரகதம் கரி நெருப்புல சாம்பிராணி போட்டாள். அதை இருளாயி பக்குவமா புனிதா முடியில காட்டி, தலையில பல்லாங்குழி காய ஆறவிட்டாள். நல்லா நுரை பொங்க காபி தண்ணி கொடுத்தாள். ஆறவைத்து ஒரு சொம்பு நிறைய குடித்தாள் புனிதா. பட்டம்மா பாட்டி புனிதாவைப் பார்த்து, “அரிசி, பருப்பு, புளியில் கை வச்சிட்டு கூடத்துல வந்து உட்காருடி; தல ஆறாம படுக்கக்கூடாது” என்று சத்தம் போட்டாள் இருளாயி, குழந்தைக்குத் தலைக்கு ஊற்றி, நன்றாகத் துவட்டி சாம்பிராணி போட்டு, உச்சந்தலையில் விபூதி வைத்து, புனிதா பக்கத்தில் துணியைப் போட்டுக் கிடத்தினாள். ஒரு வாரம் கழிச்சு இப்பதான் வெளியில் வருகிறாள் புனிதா. பட்டம்மா ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வந்து அவ தலையில சொருகினாள். அதற்குள் பட்டம்மா பாட்டியின் பட்டாளமெல்லாம் ஒன்றாக  சேர்ந்துகிட்டு, “இதைப் பண்ணியா, அதைப் பண்ணியா” என்று மரகதத்தை அதிகாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. கடுப்பானாள் மரகதம். “கூடவந்த பெருச்சாளி கூடைய தூக்கிட்டு ஆடுச்சாம்; பாக்க வந்த பெருச்சாளி செருப்ப தூக்கிட்டு ஆடுச்சாம்”ன்னு பாடிகிட்டே எல்லாருக்கும் காபி தண்ணி கொடுத்தாள். எல்லா கிழவிகளும் காபிய குடிச்சிட்டு கிளம்பிடுச்சிங்க. அருக்காணி வாய்க்கால் தண்ணியில் இருந்து, குட்டி குட்டிக் கெண்டை மீனைப் பிடித்துவந்து, காரம் கம்மியா போட்டு, மிளகுத்தூள் போட்டு நல்லெண்ணெய் நிறைய விட்டு, மணக்க மணக்க வச்ச மீன் குழம்ப வயிறுமுட்டச் சாப்பிட்டு, தூங்க ஆரம்பிச்சிட்டா புனிதா. மதியம் வர்ற சொந்தபந்தத்துக்கு நாட்டுக்கோழிக் குழம்போடு இருளாண்டிகிட்ட ஆட்டுக்கறிக்குச் சொல்லி விட்டிருந்தாள். ஆட்டுக் காலு சூப்பும் ஆட்டுக்கறித் தொக்கும் நெய்யை ஊத்தி ருசியா பண்ணி வைத்திருந்தாள் மரகதம். அரைவிடுதி வேலையை முடித்து வந்த செந்தாமரை, சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு, டவுனுக்குப் போய் வெற்றிலை பாக்கு வாங்கிகிட்டு  காப்பு எடுத்துட்டு வரலாம் என்று கிளம்பினார். மரகதத்தின் பெரிய மவளும் ஆத்தா, அப்பன், தம்பியும் வண்டி கட்டிகிட்டு வந்தாங்க. அம்மாவைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக, “வாங்க வாங்க” என்று அழைத்தபடி வாசலுக்கு ஓடினாள் மரகதம். பெரிய பேத்தியை பார்த்ததும்  பட்டம்மா கிட்டே கூப்பிட்டு கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தா வைத்துக் கொஞ்சினாள். சம்பந்திய ‘வாங்க’ன்னு கூப்பிட்டு, “ஏய்.. மரகதம் எல்லாருக்கும் சாப்பாடு போடு”ன்னு அதிகாரம் பண்ணினார் பட்டம்மாள். மரகதத்தின் அம்மா மரகதத்திடம் வந்து “என்னடி, புனிதாவுக்கு தலைக்கு ஊத்தியாச்சா? மருந்து அரைச்சுக் குடுத்தியா?”ன்னு விசாரணை பண்ணாங்க. இதே கேள்வியை பட்டம்மா கூட்டாளிங்க கேட்கும்போது மரகதம் பழிச்சு பாட்டு பாடினா இல்ல.. அதனால் இப்ப பட்டம்மா, “அதியசயமான ஊர்ல புள்ள பொறந்துச்சாம்; தொப்புள் கொடி அறுக்க கப்பல் ஏறுச்சாம்”ன்னு ராகம் இழுத்தா. கொஞ்ச நேரத்தில் நடு மகளும் அவள் மாமியாரும் மட்டும் வந்தாங்க. கோதையையும் கட்டிப் பிடித்துக் கொஞ்சிய பட்டம்மாவுக்கு சந்தோஷத்துல தலகால் புரியல. புழக்கடைப் பக்கம் வந்த கோதைகிட்ட “எப்படியவ இருக்க?” என்றாள் மரகதம். “எள்ளுக்குச் சேலை இருபத்திரண்டு முழமாம்; சுத்து எட்டலைன்னு சுண்டறா கண்ணீர’ன்னு எம் மாமியாகாரிக்கு எவ்வளவு செஞ்சாலும் பத்தாதுமா”ன்னு குறைபட்டாள் கோதை. வந்த உறவுகளெல்லாம் நன்றாகச் சாப்பிட்டு, உண்ட களைப்பு தீர ஓய்வெடுத்தார்கள். டவுனுக்குப் போன செந்தாமரை, சாமானெல்லாம் மூட்டைகட்டிகிட்டு வந்தார். உறவுகளை ‘வாங்க’ன்னு சொல்லிட்டு, மரகதத்தைத் தேடி வந்தார். அங்கே மரகதம் லாந்தர் விளக்கு, பெரிய விளக்கு, சிம்னி விளக்குன்னு    ஏழெட்டு விளக்கை அரிசி மாவு போட்டு கரிபடிஞ்ச சிம்னி எல்லாத்தையும் துடைத்துக் கொண்டு இருந்தாள். “பூவுள்ள மங்கையாம் பொன்கொடியாம்; போன இடமெல்லாம் செருப்படியாம்”ங்கற கதையாட்டம் உனக்கு வேல ஒழிய மாட்டேங்குது. பாவம் புள்ள நீ” என்று பொஞ்சாதிகிட்ட செந்தாமரை உருகறது கடவுளுக்கே பொறுக்கவில்லை போல. “தம்பி.. செந்தாமரை”ன்னு குரல் கொடுத்தார் கோபாலண்ணா. “இதோ, வாரேன்”னு சொல்லிட்டே திண்ணைக்கு வந்த செந்தாமரையிடம், சுப்புடு ஐயர் பேர் எழுதிக் கொடுத்த பேப்பரை நீட்டினார். பேப்பரைக் கையில் வாங்கிப் பார்த்ததும் அதிர்ந்தார் செந்தாமரை. தொடரும். சாம்பவி சங்கர் ஓவியம்: வெண்ணிலா

கரைசேராப் படகுகள் – 10

கரைசேராப் படகுகள் – 10

தொடர்கதைவயலில் வேலை செய்தவர்கள் கும்பல் கும்பலாக ஓடியதைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி ஓடுகிறார்கள்?’ என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் செந்தாமரை. “எலே.. செந்தாமரை, நம்ம ஊரு கன்னிமா கோயில்ல…. யாரோ பெரியவரு வந்திருக்காராம். எல்லாரும் பாக்க போறாங்களாம், நீயும் வாடா” என்று கோபால் நாயக்கர் கூப்பிடவும், குழந்தை பிறந்த தீட்டு இருப்பதை  மறந்து அவர் கூடவே ஓடினார் செந்தாமரை. கோவாலண்ணன் கூப்பிட்டாரேன்னு வேகவேகமாக வந்த செந்தாமரைக்கு கோயிலுக்கு கிட்ட வந்ததும்தான் தீட்டுன்னு உரைச்சது. இருந்தாலும் வந்துட்டமேன்னு வாசலைத்  தாண்டி ஒதுங்கி நின்றார். கோயில் வாசல்ல  அகலமா ஒரு கல்லு இருக்கும். அந்தக் கல்லு மேல, உடம்பெல்லாம் ஒட்டிப்போய், ஒல்லியாக வேட்டி மாதிரி ஒரு காவித் துணி கட்டிகிட்டு, மேலுக்கு ஒரு துண்ட விரிச்சி போட்டுகிட்டு, கையில ஒரு கொம்ப வச்சிகிட்டு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். “ஆரு இவரு..?” என்று செந்தாமரை கோவாலுவைக் கேட்டார். “இவருதான் பெரிய மகான்; வட நாட்ல இருந்து  வர்ராராம், இவர பாத்தா புண்ணியமா..” என்று கோவாலு விளக்கினார்.  எல்லாரும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். செந்தாமரை பயந்துகொண்டு ஓரமாக நின்றுகொண்டிருந்தார். மகான், செந்தாமரையைக் கையை அசைத்துக் கூப்பிட்டார். கிட்ட ஓடிப் போன செந்தாமரை, ‘படார்’னு அவர் காலில் விழுந்துட்டார்.  “எழுந்திரு, காய்ச்ச மரம்தான் கல்லடி படும்”னு  சொல்லிட்டு, “சுவாதி நல்லா இருப்பா”ன்னு சொன்னார். ‘அந்த மகான் என்ன சொன்னார்னு புரியலையே..”ன்னு வழியெல்லாம் யோசனையாகவே இருந்தார்  செந்தாமரை. “அண்ணாத்த…. நம்ம வீட்ல யாருண்ணா சுவாதி? இல்லாத பேரை சொல்றாரு” என்று குழப்பமாகக் கேட்டார் செந்தாமரை. “முட்டா பய மவனே.. புனிதா குழந்தைக்குதான் சுவாதின்னு பேர் வக்கச்  சொல்லியிருக்காரு டா” என்று விளக்கினார் கோவாலு. “அண்ணாத்த, எனக்கு ஒரு ஒத்தாச பண்ணுங்க. நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குறிப்பு கொடுத்திருக்கேன். குழந்தைக்குப் பேரு வாங்கி வந்துடுங்கண்ணா. நான் மவளுங்களை ஏழாம் காப்புக்கு அழைச்சிட்டு வந்திடறேன்”னு சொல்லி பொட்டி வண்டியில புறப்பட்டார் செந்தாமரை. நடுமகள்  ஊரைத் தாண்டிதான் பெரிய மகள் வீட்டுக்குப் போகணும். அதனால  முதல்ல நடுமகள் வீட்டுக்குப் போனாரு செந்தாமரை.  “கடிச்ச பாக்குல காப் பாக்கு கொடுக்காத பெரியாத்தா, நாபெத்த மவளே, நாபெத்த மவளேன்னு வழியனுப்ப வந்தாளாம்”.  அந்த மாதிரி வாயிலேயே வட சுடுவா, கோதை மாமியாரு பவளம். செந்தாமரையைப் பார்த்ததும் “வாங்க.. வாங்க”ன்னு வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்  பவளம். “எப்படி இருக்கீங்க சம்பந்தி?ன்னு தெரியாம கேட்டுட்டாரு செந்தாமரை. “நாயக்  கேட்பாரும் இல்ல, நடுவூட்ல வைப்பாரும் இல்ல;  ஏன்னு கேட்பாரும் இல்ல எடுத்து புடிப்பாரும் இல்ல”ன்னு ஒப்பாரி  வைக்க ஆரம்பிச்சுட்டா பவளம். ஆனா கழுத்துல மாட்டு வடமாட்டம் மோப்பு வச்ச  செயினு தொங்க, காதுல வைர பேசரி மின்ன, ஆளு நல்லா வளமாதான் இருந்தா. பஞ்சு மிட்டாய் நிறத்துல காபிதூள் பூப்போட்ட  வெல உசத்தியான சேலையில கூந்தலில் கனகாம்பரம் தொங்க செழிப்பா இருந்த, மகள் கோதையைப் பாக்கறதுக்கு செந்தாமரைக்கு  மனசுக்கு குளிர்ச்சியா இருந்தது. வயிறு குளிர  மோரைக் குடித்துவிட்டுக் கிளம்பினார். “நாளைக்கு புனிதா பொண்ணுக்கு ஏழாம் காப்பு, குடும்பத்தோட வந்துடுங்க”ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினார். வண்டிய வேகமாக  கூவத்தூருக்கு ஓட்டினாரு. வவுறு பசியில கத்த, மாட்ட அடிச்சு   ஓட்டினார்.   உச்சி வெயிலுக்கு இவரோட  பெரிய மகள்  வசந்தி வீட்டுக்கு வந்தார். பேத்தி வளரும்போது பாட்டியா பாசம் காட்னவ, தாலி ஏறியதும் மாமியாரா மாறிட்டா. இருந்தாலும், செந்தாமரை மருமவன்தானே.. அதான், மருமவன் வருவாருன்னு எதிர்பார்த்து , வெடக்கோழிக் குழம்பு வச்சு, வயக்காட்டு நண்டை வறுத்து ரசம் பண்ணி வச்சிருந்தாங்க. வவுறு கதறக் கதற உள்ள போட்டுத் திணிச்சுட்டு, மீதிய அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும்   மூட்ட கட்டினார் செந்தாமரை. “காலைல கோழி கூவ வந்துடுங்க  அத்தை. வசந்தி.. நீயும்தான். புனிதா அவ புருசனை நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு இருக்கா. உன்னையும் கோதையையும் பாத்தா, அவ மனசு ஆறும்”னு  சொல்லிட்டு, “மாமனையும் மச்சானையும் வயக்காட்ல பாத்து சொல்லிட்டேன்”  என்ற சேதியும் சொல்லிட்டு கிளம்பினார். பொழுது சாயறதுக்குள்ள ஊரு போய்ச் சேரணும்னு வண்டிய அடிச்சு ஓட்டினார். வயக்காட்டு வேலைய கணக்கு தீர்த்துட்டு, கட்டின புடவயில கதிரெல்லாம் ஒட்டியிருக்க, முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க  வந்த மரகதத்தைப் பார்க்கும்போது, வழவழன்னு இருக்கற ரப்பர் மரத்துல பால் வடியறா மாதிரி இருந்தது. செந்தாமரையும் மாமியார் வீட்ல கொடுத்த தூக்குச் சட்டிய தூக்கிக்கிட்டு வீட்டுகுள் நுழைந்தார்.  “என்னதுங்க..? என் ஆத்தா கொடுத்தாங்களா?”ன்னு தூக்குச் சட்டிய  கையில வாங்கினாள் மரகதம். “விலை மோர்ல வெண்ணெய் எடுத்து, தலை மகனுக்குக் கல்யாணம் பண்ற குடும்பமாச்சே.. அவளா கொடுத்திருக்கப் போறா?”ன்னு  வம்பிழுத்தார்   பட்டம்மா. “ஓசியில உலை வச்சி, காந்தல்ல களிகிண்டற குடும்பமாச்சே உங்க குடும்பம்! நீ  என் குடும்பத்தைப் பேசறியா?”ன்னு பதிலடி கொடுத்தா மரகதம்.  “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க போராட்டத்த… சத்த நேரம் அடங்குங்க”ன்னு சத்தம் போட்டுட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்த செந்தாமரை மனசுகுள்ள, அந்த மகான் சொன்னது ஓடியது. அதற்குச் சாட்சியாக முருகர் படத்திற்குப் பின் இருந்து கடிதம் ஆடியது. தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 9

கரைசேராப் படகுகள் – 9

தொடர்கதை “ஏங்க மாமா… காப்பு சம்மந்தி வீட்லதானே போடுவாங்க? நாம ஏன் வாங்கணும்? மூனாம் மாசம் பொண்ணைக் கூட்டி அனுப்பும்போதுதான் குழந்தைக்கு கொலுசு, அண்ணாக்கயிறுன்னு போட்டு அனுப்புவாங்க” என்று குழப்பத்துடன் கேட்டாள் மரகதம். “இனாமாக் குடுத்த மாட்டைப் பூட்டி நெலாவுல ஏரடிச்சானாம் இளிச்சவாயன்”ன்னு உன் தலையில கட்டிடப் போறாங்கடா, உன் மருமவன் வூட்டு மனுசனுங்க” என்று ராகம் இழுத்தாள் பட்டம்மா. “என்னைய என்ன புத்திகெட்ட ஆம்பளன்னு நினைச்சயளா? ஆளாளுக்கு  அலப்பற தர்ரீங்க..” என்று செந்தாமரை சத்தம் போட்டுவிட்டு, அவங்களுக்கு   டவுனுக்குப் போக பொழுது ஆப்படலையாம். அதான் என்னய  வாங்கியாந்து வைக்கச் சொன்னாங்க” என்றார். மனிதனுக்கு இரண்டு நேரங்களில் கோபம் வரும். செய்த தப்பை மறைக்கும்போதும், தப்பு செய்யாத போது குற்றம் சாட்டப்படும் போதும்.  இதில் செந்தாமரை இப்பொழுது கோபப்பட்டது எந்த ரகம் என்று நமக்குப் புரியும். செந்தாமரை லேசாகக் குரலை உயர்த்தியதும், மாமியாரும் மருமகளும்  பொங்குகிற பாலில் தெளித்த தண்ணீர் மாதிரி ‘புஸ்சுன்னு’ அடங்கிவிட்டார்கள். செந்தாமரை வெளியில் வந்து, “ஏய்.. சுள்ளான் இங்க வாடா” என்று கூப்பிட்டதும், வாசலில் படுத்திருந்த சுள்ளான் வாலை ஆட்டிக்கொண்டே இவர் பின்னாடியே ஓடி வந்தது. இவர் வயக்காட்டுப் பக்கம் செல்வதைப்  பார்த்ததும் இவருக்கு முன்னாடி ஓடி வழிகாட்டியது. அதிகாலையில் எழுந்த மரகதம், வெள்ளிக்கிழமைங்கறதால வாசல்  தெளித்து அரிசி மாவில் பெரிதாகக் கோலம்போட்டு, அடுப்பு தட்டு   மொழுகி சும்மா வீட்டை ஜொலிக்க வைத்திருந்தாள். ‘நாளைக்கு வீட்டுக்கு சொந்த பந்தம், சாதி சனமெல்லாம் வருவாங்க’ என்று வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு,  தலைக்குக் குளித்து, சின்ன சின்ன பூ கண்ணுக்கே தெரியாத சிவப்பு நிறத்தில் இருந்த மஞ்சள் நிற நூல் புடவையைக் கட்டியிருந்தாள் மரகதம். அவளை ஏற இறங்கப் பார்த்த பட்டம்மா, ‘டொக்…. டொக்..’ என்று வெற்றிலை இடித்துக்கொண்டே, “சீமை சிறுக்கியாட்டும் சீவி முடிச்சு சிங்காரிச்சு வயக்காட்டுல கலெக்டரு உத்தியோகம் பாக்க போனாளாம் வித்தக்காரி” என்று வியாக்கனம் படிச்சார். பொழுது விடிந்ததும் சண்டை வேண்டாம் என்று முகத்தைப் பரண்மேல்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தாள் மரகதம். “என்னத்த சுத்தம் பண்றா இந்தக் கருப்பாயி?” என்று அவளைத் திட்டிக்கொண்டே மாட்டுக் கொட்டகையைப் பெருக்கி வாரி, சாணத்தைக் குப்பைக்குழியில் கொட்டினாள். மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு போட்டுத் தண்ணீர் காட்டிவிட்டு,  பித்தளையில நல்ல உயரமாக இருக்கும் பால் பாத்திரத்தில் பாலைக் கறந்து, நுரை பொங்கப் பொங்க அப்படியே எடுத்து வந்து பட்டம்மா பக்கத்தில் ‘பட்’டென்று வைத்துவிட்டு, “பால் வாங்க வரவங்களுக்கு அளந்து ஊத்திடுங்க” என்று வெடுக்கென்று சொன்னாள். நுரை பொங்கற பாலை ஊற்றி இழைய காய்ச்சி, கருப்பட்டி போட்டு  புனிதாவுக்கும் மாமியாருக்கும் கொடுத்துவிட்டு, ‘ரெண்டு டபரா’ காபியை கூஜாவில் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலில் வந்து, ‘வயக்காட்டுப் பக்கம் யாரு போறாங்க?’ என்று பார்த்துக்கொண்டு நின்றாள் மரகதம். “எலே.. குருவம்மா வயக்காட்டுப் பக்கம் போனீன்னா.. என் மாமங்கிட்ட  கொடுத்துடு” என்று சொல்லி, அந்தப்பக்கம் வந்த குருவம்மாவிடம் கூஜாவைக் கொடுத்தாள். “எக்காவ், உங்க வயலுக்குத்தான் அறுப்புக்குப் போறேன்” என்று ‘போற போக்குல’ சொல்லிக்கொண்டே போனாள் குருவம்மா. நேற்று, வயலில் வேலை செய்யும் ஆட்கள்,  “தினம் கூழு வேண்டாம்; அரிசிக் கஞ்சி வேணும்” என்று சொன்னதால் மரகதம் அடுப்பில் உலை வைத்து, பெரிய படியில் ஐந்து படி நொய் அரிசியை ஊறப் போட்டுவிட்டு,  பக்கத்துத் தெருவில் இருக்கும் இருக்கற நாவிதர் வீட்டுக்குப் போனாள். மரகதத்தைப் பார்த்ததும் ஓடி வந்த இருளாயியிடம், “நாளைக்கு புனிதாவுக்குத் தீட்டு எடுக்கணும். வயக்காட்டுல வேலை கெடக்கு,  கொஞ்சம் வெள்ளனயே வந்துடு” என்று சேதி சொல்லிவிட்டுக் கிளம்பினாள். வீட்டுக்கு வந்து கஞ்சி காய்ச்சி எடுத்துக்கொண்டு, தூதுவளை துவையலை  வாழையிலையில் மடித்து அண்டா மேல் வைத்துக்கொண்டு, முந்தானைத் தலைப்பை சிம்மாடு மாதிரி சுருட்டித் தலை மேல் வைத்துக்கொண்டு, ‘ஒத்த கையால’ அண்டாவைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒத்த கையை வீசி வீசி அவள் நடந்த தாள லயத்துல வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாரை மயங்கியது. நெல்லு பொறுக்கிக்கிட்டு இருந்த தேன்சிட்டு, அந்த அண்டா மேல இருந்த தட்டு விளிம்புல ஊஞ்சல் ஆடிக்கிட்டு வந்தது.’ இந்த காட்சியில் மயங்கிய சூரியனும், ‘தனக்கு ஒருவாய் கஞ்சி கிடைக்காதா?’ என்று, மரகதம் பின்னாலேயே ஓடிவர, மேகக் கூட்டங்கள் அலைஅலையாக ஒன்றோடு ஒன்று துரத்திக் கொண்டு சூரியனை முந்திக்கொண்டு ஓடிவர, ஒருவழியாக வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் மரகதம். சுடச்சுட கஞ்சியைப் பார்த்ததும், கதிர் அரிவாளைப் போட்டுவிட்டு ஓடிவந்தாங்க. கும்பலா உட்கார்ந்து ஊரு கதையைப் பேசி உரண்டை இழுத்து கஞ்சி குடிக்கற சுகமும் வெஞ்சனம் இல்லாம உடல் உழைச்சி, வயிறாற கஞ்சி குடிக்கற சுகமும் சொர்க்கத்துக்குச் சமம். செந்தாமரை பெரிய மகளை கூவத்தூரில் உள்ள மச்சானுக்கே திருமணம் செய்து கொடுத்தார். நடு மகளை தேவாதூரில் கொடுத்தார். ‘இரண்டு  ஊரும் பக்கம் பக்கம்தான்; இருந்தாலும் நடந்து போக முடியாது’ என்று பொட்டி வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்புகிற நேரத்தில், வயக்காட்டில் வேலை செய்தவங்க எல்லாம் வேலையை விட்டுவிட்டு கும்பல் கும்பலாக ஓடினார்கள். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 8

கரைசேராப் படகுகள் – 8

தொடர்கதை சேதி  சொல்லப்  போன மனுஷன்  வெள்ளையத்தேவன் மாதிரி  வெள்ளைப் பசுவைப் பிடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் குழம்பித்தான் போனாள் மரகதம். “மதனி, நான்தான் அந்த ஊருதானேன்னு மாடு வாங்க அண்ணனைக் கூப்பிட்டுகிட்டுப் போனேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிச் சென்றான்   மாணிக்கம். ‘வெளைஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர்றதுக்கே பணத்துக்கு  பவுசத்து நிக்கயிலே, இந்த மனுஷன் கூறு கெட்டுப்போய்  மாட்டைப் புடிச்சிட்டு வந்துட்டாரே’ன்னு மனதிற்குள்  பயந்த மரகதம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “சரி… சரி… வெளக்கு வைக்கப் போவுது. வீட்டுக்கு வந்து கஞ்சித் தண்ணி குடிச்சிட்டு, பொறவு களத்து காவலுக்கு வரலாம்”  என்று  கணவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அருக்காணி  ஆய்ந்து வச்ச கீரையெல்லாம்  சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடவை முந்தானையை விரித்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள் மரகதம். “அடியே…. எத்தனை பேரு வேலை செஞ்சாங்க? எவ்வளவு வேலை செஞ்சாங்கன்னு  சொல்லாமலேயே கிளம்பறயே…”  என கூப்பாடு போட்டார் செந்தாமரை. “ஆம்பள ஆளு 25, பொம்பள ஆளு 10, நம்ம அருக்காணியை எனக்கு ஒத்தாசைக்கு வச்சிருந்தேன். கணக்கு தீர்க்கும்போது  அவ வந்து நிக்கப் போறா. அவ கணக்கை  நான் பாத்துக்கறேன்” என்று படபடவென்று சொல்லிக் கொண்டே நடந்தாள் மரகதம். அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே பக்கத்தில் ஓடினார் செந்தாமரை. நாலு தளை தாண்டியதும்  கோவாலு  நாயக்கர் தோட்டம் வந்தது. “அண்ணாத்த, புள்ள பெத்தவளுக்கு கத்தரி பிஞ்சும் முருங்கைப் பிஞ்சும் பறிச்சுகறேன்” என்று தூர நிக்கற உருவத்தைப் பார்த்துக் கத்திவிட்டு வேகமாக கத்தரி பிஞ்சைப் பறிச்சா. “மச்சான் ரெண்டு முருங்கை பிஞ்ச ஒடியேன்”னு சொன்னவள், காய்களைப் பறிச்சதும் செந்தாமரை தோளில் இருந்து துண்டை எடுத்து அதுல பறிச்சதெல்லாம் போட்டு மூட்டை கட்டிக்கொண்டு நடையைக் கட்டினர் இருவரும்.  வீட்டிற்கு வந்ததும் இருவரும் அரப்புப்  பொடி போட்டு நன்கு குளித்துவிட்டு வந்தனர். “எலே செந்தாமரை, இன்னிக்கு ஏன் இவ்வளவு நேரம்?” என்று  கேட்ட  அம்மாவுக்கு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே, களத்து காவலுக்குப் போனதில் இருந்து முருங்கைக்காய் பறிச்சது வரைக்கும்  வெட்டி ஒட்டி படம் ஓட்டினார் செந்தாமரை.  காதில் தொங்கிய  பாம்படம் ஊஞ்சல் ஆட, மஞ்சள் நிறத்தில்  ஓரத்தில் மட்டும் காபி நிறத்தில் லேசான  கோடு போட்ட புடவை முந்தானையால் அடிக்கடி முகத்தை துடைத்துக் கொண்டும் ரவிக்கை அணியாத  மேலுக்கு  விசிறி   விட்டுக் கொண்டும் கதை கேட்டாள் பட்டம்மா பாட்டி. பின்பக்கம் இருக்கும் சமையல் அறையில் அடுப்பை ஊதி ஊதி நொந்து கொண்டிருந்த மரகத்திற்கு, ‘ஆத்தாளும் மவனும் அப்படி என்னதான் பேசுவாங்களோ!” என்று மனசுல உலை கொதித்தது. ஒரு வழியாக  சமைத்து  முடித்து   சாப்பாடு தட்டில்  வரும்போது  இரவு  ஏழு மணி சங்கு கூவியது. “ஏண்டி.. இந்த பச்ச புளிக்குழம்புக்கும், பருப்புத் துவையலுக்குமா இம்புட்டு நேரம்?” என்று வியாக்கனம் பேசினார் பட்டம்மா.  “ம்… உங்க அதட்டலுக்கு நான் பயப்படலாம், பச்சை மட்டை கூடவா பயப்படும்?”  என்று  வெடுக்கென்று  பதில் சொல்லிட்டு, “ஏனுங்க, நாளைக்கு கழிச்சுப் போட்ட புளியமரத்தை வெறவுக்கு ஏத்தி அனுப்புங்க” என்று பட்டம்மாள் மேலிருந்த எரிச்சலைக் கணவனிடம் காட்டினாள் மரகதம். நாலு முழ வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு, துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கழியை ஒரு கையிலும்  லாந்தர் விளக்கை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு நின்ன  செந்தாமரையைப் பார்த்து, “என்  ராசா அப்படியே  மாறு வேசத்தில வரும் ராசராச சோழனாட்டம் இருக்கேடா”  என்று பட்டம்மா நெட்டை முறித்தாள். இதை ரசித்துக்கொண்டே தூக்குச் சட்டியை எடுத்துவந்து கொடுத்து, “மாமா, காசற கீரை சாதம். நிறைய  பூண்டு போட்டு நல்லெண்ணெய்யில்  பண்ணது; வீணாக்கிபுடாதீங்க. பருப்பு துவையலும் வச்சிருக்கேன். உங்களுக்குத்தான் வாயில்  வேப்பங்குச்சியை வச்சதுமே வயிறு பசிக்குமே…” என்றாள் மரகதம். “நாளைக்கு அமட்டச்சிக்கு  சொல்லணும். புனிதாவுக்கு தலைக்கு ஊத்த பச்சில மருந்தைத் தேடி எடுத்து வரணும். இதெல்லாம் முடிச்சிட்டு அப்பறம் வயக்காட்டுக்கு போ” என்று மரகதத்திற்குக் கட்டளையிட்டார் பட்டம்மா. “மரகதம் நீ சீக்கிரம் வந்து மாத்தினாதான் ஆச்சு. எனக்கும் நிறைய வேலையிருக்கு. ஐயர்கிட்ட  பேரு வாங்கணும்; பொண்ணுங்களுக்கும்  அங்காளி, பங்காளிக்கும்  சொல்லிட்டு வரணும். டவுனுக்குப் போய் காப்பு வாங்கணும்” என்று இழுத்த செந்தாமரையிடம்,  “என்னது..! காப்பா?” என்று மாமியாரும் மருமகளும் ஒத்து ஊதினார்கள். “தவள  மாட்டிகிச்சு” என்று செந்தாமரை நினைத்தார். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 7

கரைசேராப் படகுகள் – 7

தொடர்கதை` வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம்  முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் செந்தாமரை;  “எலே மாணிக்கம்.. எலே மாணிக்கம்….” என்று கத்தினார். மாணிக்கம் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றுகொண்டான். கிட்ட நெருங்கியதும் மாணிக்கத்தைப் பார்த்து, “ஏதோ விசயமா விரசா போற போலிருக்கு” – எங்கே  செல்கிறாய் என்று கேட்காமல் நாசூக்காகக் கேட்டார். “ஆமாண்ணே, பெரிய கருப்பன் வீட்ல மாடு பிடிக்கறதுக்காக மாம்பாக்கம் போறண்ணே” என்று மகிழ்வாகச் சொன்னான் மாணிக்கம். “நல்லதா போச்சு; நானும் என் சின்ன மவள கொடுத்த வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவனுடன் சேர்ந்து நடந்தார் செந்தாமரை. “ஏம்பா.. மாடு வாரத்துக்கு பிடிக்கப் போறயா? மொத்தமா பிடிக்கப் போறயா?” என்று கேட்ட செந்தாமரைக்கு, “விலைக்குதான்ணே.. நல்ல  கறவை மாடா வேணும்ணே” என்று சொல்லிவிட்டு, “ரெண்டு பொட்ட புள்ள ஆயிடுச்சி. அதுங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு பாக்கணும். காடு கழனியை மட்டும் நம்பி என்ன பண்றதுண்ணே? அதான் மாடு வாங்கலாம்னு” இழுத்தா மாதிரி சொன்னான் மாணிக்கம். “அதுவும் சரிதான்; நல்ல ரோசனைதான்” என்று சொல்லிக்கொண்டே தலையை அண்ணாந்து பார்த்தார். மணி 12 இருக்கும் என நினைத்துக் கொண்டு, “எலே.. இது கோணங்கி வீட்டுக் கிணறுடா; தண்ணி தேனாட்டம் இருக்கும்” என்று சொன்ன செந்தாமரை, படியில இறங்கி தண்ணீரைக் கையில் அள்ளிக் குடிக்க, மாணிக்கமும் இணைந்துகொண்டான். துண்டை ஈரமாக்கி  வெயில் தெரியாமல் இருக்க, தலையில போட்டுக் கொண்டு நடந்தார்கள் இருவரும். மாம்பாக்கம் வந்ததும், “அண்ணே, நீங்க சம்பந்தி வீட்டுக்கு போயிட்டு, கருப்பன் வீட்டுக்கு வந்து மாடு வாங்கித் தாங்கண்ணே” என்றான் மாணிக்கம். “வேலியில போன ஓணானை வேட்டியில விட்ட கதையாயிடுச்சே; வயல்ல வெள்ளாமை இருக்கு, இவன்கிட்ட வியாபாரம் பேசறது தெரிஞ்சா மரகதம் வைவாளே” என்று மனதிற்குள் புலம்பினார். ஆனால் வாய் “வரேன் மாணிக்கம்” என்றது. சம்பந்தி வீட்டுக்குப் போனதும், “தங்கச்சி.. தங்கச்சி…” என்று கூப்பிட்டார். “அடடே! வாங்கண்ணே… என்று வரவேற்றபடி புனிதாவின் மாமியார் பவுனு  வெளியே வந்தார். “புள்ள பெத்த தீட்டு உள்ள வரக்கூடாது; இங்கேயே உட்காந்துக்கறேன்” என்று துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார் செந்தாமரை. “புனிதாவும் பேத்தியும் எப்படிண்ணா இருக்காங்க? எங்கண்ணா வயல் வேலை அதிகமா இருக்கு; கை உழைச்சாதான் கஞ்சிங்கற கதையா இருக்கு. இப்பகூட பொட்ட புள்ளைங்களும் அவரும் வயக்காட்டுலதான் இருக்காங்க. பேத்திய கூட வந்து பாக்க முடியல” என்று புலம்பினாள் பவுனு. “ஏழாம் காப்புக்கு குடும்பத்தோட வந்துடுங்கன்னு சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்றார் செந்தாமரை.   “ஆமாண்ணே, என் பேத்திக்குக் காப்பு செய்து போடணும். புள்ள பணம் அனுப்பவே இல்ல, வர்றது வயிறுக்கும் வாய்க்குமே பத்த மாட்டேங்குது” என்று பஞ்சப் பாட்டு பாடினாள் பவுனு. “அதனாலென்ன, காப்புதானே? நான் பார்த்துகறேன்” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு, “மச்சான் வந்தா சொல்லிடுமா” நான் கிளம்பறேன் என்றார். “இருங்கண்ணே, சாப்பிட்டு போவீங்க” என்ற பவுனிடம்  “வேணாம்” என்று மறுத்துவிட்டுக் கிளம்பினார். வழியெல்லாம், ‘அறுவடைச் செலவையே எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை; இப்ப காப்பு செலவு வேறயா?’ என்று கவலைப் பட்டுக்கொண்டே வந்தார், கருப்பன் வீட்டுக்குச் சென்று மாட்டைப் பல்லு பிடித்துப் பார்த்தார். மடியில  கை வைத்துப் பார்த்தார். “என்ன மாணிக்கம், விலை பேசிடவா?” என்று கேட்டார். “ஆமாண்ணே, பேசி முடிச்சிடுங்க” என்றான் மாணிக்கம். கருப்பனும் செந்தாமரையும் துண்டைப் போட்டு விரலைப் பிடித்து விலை பேசினார்கள். ரொம்ப நேரம் பேரம் பேசி, கடைசியாக மாணிக்கத்திற்குத் திருப்தியாக விலையை முடித்துக் கொடுத்தார். மாட்டை ஓட்டிகொண்டு கிளம்பி வந்தான் மாணிக்கம். வரும் வழியெல்லாம் “;அந்த ஐயனாரப்பன்தான் உங்களைப்போல வந்து, எனக்கு மாடு வாங்கி கொடுத்தாரு” என்று  செந்தாமரையைப் புகழ்ந்து கொண்டே வநதான் மாணிக்கம். வயக்காட்டில் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள்  மரகதம். “கதிரெல்லாம் சீக்கிரம் களம் போய்ச் சேரணும். உங்க ஆண்ட வந்தார்னா என்னை ஆஞ்சிடுவார் ஆஞ்சி” என்று விசனப்பட்டாள். “அடியே.. அருக்காணி.. வாய்க்கால் ஓரத்துல கொஞ்சம் காச்சற கீரைய பறிச்சுக் கொடேன்” என்று அதிகாரம் பண்ணினாள் மரகதம். “புள்ள பெத்தவளுக்கா கீரை?” என்று அதிர்ந்தாள் அருக்காணி. “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்; கத்தாழ முள்ளு கொத்தோட புடுங்குசாம்னு,  நடிக்காதடி. புள்ள பெத்தவளுக்கு எங்கனயாவது கீரை தருவாங்களாடி?” என்று அதட்டலாகச் சொன்னாள் மரகதம். கதிர் எல்லாம் களம் வந்து சேர்ந்ததும், கட்டெல்லாம் எண்ணி வைக்கோல் பிரி போட்டுக் கட்டி, மூலைக்கு மூலை அடையாளம் வைத்துவிட்டு  மாமனுக்காகக் காத்திருந்தாள் மரகதம். வயக்காட்டில் வேலை செய்த பெண்கள் எல்லாம் வாய்க்கால் தண்ணியில் குளித்துவிட்டு, முந்தானையைப் போட்டு அந்த வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்ப்பதற்கு வானில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் நிலவு ஓடி ஓடிப் பிடிப்பது போல அழகாக இருந்தது. வயக்காட்டில் யாரும் இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தாள் மரகதம். தூரத்தில் ஓநாய் கத்தும் சத்தம் கேட்டது. ‘பச்ச உடம்புக்காரிக்கு சோறு போடணுமே; இந்த மனுசனை இன்னும் காணோமே’ என்று தவித்தாள். தூரத்தில் மாமன் மாடு பிடித்து வருவதைப் பார்த்ததும், குழம்பினாள் மரகதம். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 6

கரைசேராப் படகுகள் – 6

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் குழந்தையைக் கொஞ்சிய செந்தாமரை, கயிற்றுக் கட்டிலைத் தலைமேல்  தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கைக் கொளுத்திப் பிடித்துக்கொண்டு, களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பினார். “அம்மா… நான் காவலுக்குக் கிளம்பறேன்”  என்ற செந்தாமரையின் குரல் கேட்டு, “டேய்… நேத்து எத்தன தள டா அறுத்தீங்க? எத்தனை மூட்டை தேறும்?” என்று பட்டம்மா  ஆர்வமாய்க் கேட்டார். “அரிகராம் மேடும் அரசமர தளையும் அறுத்ததுமா. என்ன, அரிகராம் மேடு பத்து மூட்டையும் அரசமரம் எட்டு மூட்டையும் தேறும். கூலிக்குதான் என்ன பண்றதுன்னு தெரியல. குப்புசாமி ரெட்டி  நெல்லா கொடுக்கலாம்னு சொல்றாரு. நான் பணமா  கொடுக்கலாம்னு யோசிக்கறேன்” என்று அம்மாவிடம்  அனைத்தையும் கொட்டினார் செந்தாமரை.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மரகதம், “இதே விசயத்த நம்மகிட்ட சொன்னா  கேட்டுக்க மாட்டோமா..? ஆம்பளங்கற  கவுரதி  குறைஞ்சிடுமோ?” என்று மனதிற்குள்  பொருமினாள்.  “மரகதம், வீட்டை பத்திரமா பாத்துக்க. புழக்கடை பக்கம் ராத்திரில போக வேணாம். கதவை அழுத்தி தாப்பா போடு”  என்று  எச்சரிக்கை செய்துவிட்டு, போருக்குச் செல்வதுபோல  கட்டிலைக் கம்பீரமாகத் தலையில் வைத்துக்கொண்டு  செந்தாமரை கிளம்பினார். அந்த சமயத்தில் கோழி விற்பவன், பெரிய கூடையில் கோழிக்குஞ்சுகளை அடைத்து தலைமேல் தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் எடுத்துக்கொண்டு வந்தான். செந்தாமரை அவனிடம், “நீ எந்த ஊரு பா? வியாபாரம் எப்படிப் போகுது?” என்று பேச்சுக் கொடுத்து, அவனோடு பேசிக்கொண்டே களத்துமேடு வந்து சேர்ந்தார். தூரத்தில்  விளக்கு வெளிச்சம் தெரிந்தது.   “யாருப்பா அது?” என்று அதட்டலாக ஒரு கத்தல்  வந்தது. கத்தியது  குப்புசாமிரெட்டி. “மச்சான் நான்தான் செந்தாமரை” என்று பதிலுக்குக் கத்தினார். “ஏய் செந்தாமரை..  உனக்கு கீழண்டை  மாணிக்கம் வயல்ல  மணிலா போட்டிருக்கான். நாலு கொடி புடுங்கிட்டு வா; சுட்டு சாப்பிடுவோம்”  என்று அதிகாரம் பண்ணினார் குப்புரெட்டி. செந்தாமரையும்  கொஞ்சம் கொடி பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்து, இரண்டு களத்துமேட்டுக்கும் நடுவில் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொளுத்தினார். “மச்சான் ஒரு கொடிமட்டும் கையில அகப்படாம, வழவழன்னு புடுங்கவே முடியலை மச்சான்” என்று கடுப்பாகக் கூறினார் செந்தாமரை. மணிலா கொடியைத் திருப்பிவிட்டு கொளுத்திக் கொண்டிருந்த குப்புசாமி, திடீரென்று சிரித்தார். கையில் கொம்பு வைத்துக்கொண்டு கொளுத்திய கொடியைப் புரட்டிப் போட்டு  சிரித்துக் கொண்டே, “செந்தாமரை, உனக்கு எத்தனை நாளா பாம்பு கறி சாப்பிடணும்னு ஆசை?” என்று கேட்டார். “க்குவா… வாந்தி வருது. பாம்பு கறியா..?” என்று குமட்டினார் செந்தாமரை. “பின்ன, மணிலா கொடிகூட பாம்பு சேர்த்து பிடிச்சி வந்திருக்க? நாம அதையும் சேர்த்து சுட்டுகிட்டு இருக்கோம்” என்று சொன்னார் குப்புரெட்டி. இருட்டில் மணிலா கொடிக்கும் பாம்புக்கும்  வித்தியாசம் தெரியாமல், பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டதை உணர்ந்த செந்தாமரை, குப்பு ரெட்டியோடு சேர்ந்து சிரித்தார். குடும்பக்  கதையைப் பேசிக்கொண்டு  களத்து மேட்டில்  இருவரும் படுத்துத் தூங்கினார்கள். சூரியன் உச்சந்தலையைப் பிடித்து இழுத்ததும், எழுந்து மோட்டரைக் கிளப்பிவிட்டு, வேப்பங்குச்சியை வாயில் வைத்துக் கொண்டே   வயக்காட்டைச் சுத்திவந்து  அண்டைவெட்டி, மடைமாற்றி, குளித்துவிட்டு, களத்துமேடு வருவதற்கும் எட்டு மணி சங்கு கூவறதுக்கும்  சரியாக இருந்தது. மரகதம் அதிகாலையிலேயே எழுந்து  அருக்காணி கொடுத்துவிட்ட பிஞ்சு அவரைக்காயில்  கால் கிலோ பூண்டைக் கொட்டி நல்லெண்ணெயில் முக்கி, குளிசெலவு போட்டு  நல்ல மணமா அவரைப்பிஞ்சு வதக்கலும் சுடச்சுட சாதமும் புனிதாவுக்குக் கொடுத்தாள். கருப்பட்டி காபி போட்டு மாமியாருக்கு கொடுத்தாள். இன்று சற்று அசந்து தூங்கியதில், கன்றுக்குட்டி ஊட்டிவிட்டது. மரகதத்தால் பால் கறக்கமுடியவில்லை. மரகதம் தூக்குசட்டியில் கெட்டிக் கூழும், புதுசா வெள்ளையா இருக்கற நெத்திலிக் கருவாடு, மொச்சை, கத்தரிக்காய், வாழைக்காய், உருளை, முருங்கை, சொரக்காய் எல்லா காய்கறிகளையும்  போட்டு சும்மா தகதகன்னு மின்னுகின்ற  நெத்திலி கருவாட்டுக்  குழம்பும்  எடுத்துக்கொண்டு வயலுக்கு வந்தாள். ஒரு கை தலையில் இருக்கும் கூழ்  அண்டாவைப் பிடித்துக்கொண்டிருக்க, தோளில் செந்தாமரையின் சட்டையைப் போட்டுக்கொண்டு, ஒரு கையில் தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வயல் வரப்பில்  மரகதம் நடந்துவரும் அழகில்  மயங்கி, சூரியனும் கூடவே ஓடி வருகிறான். அதற்குள்  ஆட்கள் எல்லாம் கதிர் அறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  செந்தாமரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, “மாமா.. ஏழாம் காப்புக்கு சம்பந்தி வீட்டுக்கு சொல்லணும்” என்று இழுத்தாள் மரகதம். “கூறு கெட்டவளே, அறுவடை நடக்குது. இப்ப போயி,,,” என்று கருவாட்டுக் குழம்பை நக்கிச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் செந்தாமரை. “அதான்.. நான் இருக்கேனுங்க.. இதோ இருக்குது  மாம்பாக்கம். வயலில் குறுக்கால போனா பொழுது சாயறதுக்குள்ள வந்திடலாம்” என்று வழி சொன்னாள் மரகதம். செந்தாமரை மெளனமாக  சாப்பிட்டு முடித்து, சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். பெண்கள் ஆண்களிடம் காரியம் சாதிக்கும் இரண்டு இடம், ஒன்று சாப்பிடும் இடம்; இன்னொன்று திருமணம் ஆனவர்களுக்குத் தெரியும். பெண்களைப் பெற்றவர்கள் செல்வதற்குச் சங்கடப்படும் இடம் பெண்ணைத் திருமணம் செய்து  கொடுத்த வீட்டிற்குத்தான். செந்தாமரையும் அதே சங்கடத்துடன்  மாம்பாக்கம் நோக்கி நடந்தார். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 5

கரைசேராப் படகுகள் – 5

தொடர்கதை – சாம்பவி சங்கர் சூரியன் தத்தளித்து, தகதகத்துக் கிளம்பும் காலைப்பொழுது. அந்த ஓட்டு வீட்டு வாசலில் பெரிய வேப்பிலைக் கொத்து சொருகி இருந்தது.  பெரிய அகலமான பித்தளைச் சட்டியில் ஆலம் கரைத்து, அதில் வேப்பிலை, கரித் துண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வாசலில் அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர். மரகதம் மூன்றாம் நாள் புனிதாவுக்கு சாதம் கொடுப்பதற்காக, அதிகாலையிலேயே எழுந்து, குளிசெலவு எல்லாம் மண் சட்டியில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். முதல்நாளே பட்டம்மாள் பாட்டி கால்கிலோ பூண்டை உரித்து வைத்திருந்தாள். அலமு பாட்டி, அவள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பிஞ்சுக் கத்தரிக்காயைப் பறித்துவந்து மரகதத்திடம் கொடுத்து இருந்தார். நல்லெண்ணெய் நிறைய ஊற்றி, பூண்டைப் போட்டு, அதன் தலையில் கொஞ்சமாகப் பெருங்காயத்தைக் கொட்டி, நன்றாக வதங்கியதும் பிஞ்சுக் கத்திரிக்காயைப் போட்டு, நல்லெண்ணெயில் மூழ்க விட்டு, தட்டு போட்டு மூடி வைத்து வதக்கி, கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த குளி செலவு போட்டு சட்டியை மூடி வேகவைத்தாள் மரகதம். அந்த வாசனை தெருவில் செல்பவர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தது. “அடியே… மரகதம், அந்த கத்திரிக்காய் சட்டியில் சுடச்சுட சாதம் போட்டு எடுத்துட்டு வாடி…” என்று பட்டம்மா பாட்டி நாவில் நீர் ஊற சொன்னார். “பாரேன் இந்தக் கிழவிக்கு, அங்க புள்ளை பெத்தவ பசியோட இருக்கா. இங்கே இவங்களுக்கு சாப்பாடு கேட்குதாம்” என்று மாமியாரை மனதிற்குள் கிண்டல் அடித்துவிட்டு, தன் மகள் புனிதாவிற்குச் சுடச்சுட சாதமும் கத்தரிக்காய் வதக்கலும் சேர்த்து காலையில் 7 மணிக்கு உணவு கொடுத்தாள். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த புனிதாவிற்கு, இந்தச் சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது. அவசரமாக வேலை முடித்துக் கொண்டிருக்கும்போதே, “வயலில் ஆளுங்களுக்கு சாப்பாடு வேணும்” என்று செந்தாமரை மரகதத்தை அவசரப்படுத்தினார். நேற்று  செய்து வைத்த கூழில் இருந்து ஒரு அண்டா கூழைக் கரைத்து, அதற்கு ஊறுகாய் மிளகாயும் நார்த்தங்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாயை ஒரு டப்பாவிலும் எடுத்துக்கொண்டாள். கூழ் அண்டாவை, தலையில் சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டாள். மரகதமும் செந்தாமரையும் மாறி மாறி அந்தக் கூழ் அண்டாவை ரெண்டு பர்லாங்கு  தூரத்தில் உள்ள வயலுக்கு எடுத்துச் சென்றனர். வயலில் அறுவடை வேகமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு இருந்த பாதாம் மரத்திலிருந்து கிடுகிடுவென்று வாதாம் இலைகளைப் பறித்த மரகதம், இலைகளை வேகவேகமாக தொண்ணை ஆக்கி, அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் கூழ் ஊற்றிக் கொடுத்தாள். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த அருக்காணியையும் கூப்பிட்டுக் கூழ் கொடுத்தாள் மரகதம். மரகதம் வயல் வேலை செய்து கொண்டிருந்தாளே தவிர, ‘பட்டம்மா பாட்டியும் அலமு பாட்டியும் புனிதாவையும் குழந்தையையும் நன்றாகப்  பார்த்துக்கொள்வார்களா?’ என்ற கவலையிலேயே அவள் மனம் இருந்தது. மதியம் ரெண்டு மணி இருக்கும். வீட்டு வாசலில் தபால்காரர் வந்து, “ஐயா… ஐயா…” என்று கத்திக் கொண்டிருந்தார். வாசலில் வேப்பிலை சொருகவில்லை என்றால், அவர் நேரடியாக உள்ளே சென்று இருப்பார். வேப்பிலையைப் பார்த்ததும் தயங்கி, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். ஆடி அசைந்து, திருவாரூர் தேராட்டம் பட்டம்மா பாட்டி வெளியில் வந்தார். “யார் அது? நம்ம ராமுவா? வாப்பா… என்ன வெளியிலேயே நின்னுட்ட?” என்று அக்கறையுடன் கேட்டார் பாட்டி. “வெளியில்தான் வேப்பிலை வேலி போட்டுட்டீங்களே, அப்புறம் எப்படி உள்ளே வர்றது?” என்று அங்கலாய்த்தார் கடுதாசி கொண்டுவந்தவர். “பாட்டி இந்தாங்க, இதை பத்திரமாக உங்க பிள்ளைகிட்ட கொடுத்துடுங்க” என்று கூறி, கவரைப் பாட்டியிடம்  கொடுத்துவிட்டுச் சென்றார். பாட்டி அதை எடுத்து வந்து, பத்திரமாக சாமி மாடத்தில் முருகர் படத்திற்குப் பின்னால் வைத்தார். ‘யார் கண்ணிலும் படாமல், பத்திரமாக என்னிடமே இரு’ என்று படத்திலிருந்த செந்திலாண்டவன் சிரித்தார். வயக்காட்டில் அறுவடை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் கதிர் அறுத்து, அரி அரியாக  வைத்தனர். அதை மரகதம், செந்தாமரை, இன்னும் சிலர் கட்டுக் கட்டாகக் கட்டினர். சில கட்டுகள் கட்டி முடித்ததும், ஆண்கள் அந்தக் கதிர்களைத் தலையில் வைத்துக்கொண்டு களத்து மேட்டுக்குச் சென்றனர். கதிர்களை அறுத்து முடித்ததும் பெண்களும் அந்தக் கதிர்களைத்  தலையில் சுமந்து, களத்து மேட்டுக்குக் கொண்டு வருவார்கள். இதில் அழகு என்னவென்றால், ஆண்கள் வேகமாக வாய்க்கால் வரப்புகளில் நடந்து களத்து மேட்டுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் பாவம், தட்டுத்தடுமாறி வரப்புகளில் மேடு பள்ளங்களில் கால்வைத்து நடந்து வருவது நடனமாடிக்கொண்டே வருவதுபோல அழகாக இருக்கும். இந்த ஆண்கள் கட்டுகளைக் களத்தில் போட்டுவிட்டு, பாதி வழியில் வந்து தன் தங்கையோ,  மனைவியோ,  அம்மாவோ,  அத்தை மாமன் மகளோ, தூக்கி வரும் கட்டுகளை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள். அந்தக் கதிர் மாற்றும் அழகு, வானத்தில் அலை அலையாகச் சென்று கொண்டிருக்கும் மேகங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்த் திசையில் வரும் மேகத்துடன் மோதிக் கலைந்து செல்வது போல இருக்கும். கதிரெல்லாம் களம் வந்து சேர்வதற்குள், சூரியன் கீழ் வானம் வந்து சேர்ந்துவிட்டான். அவசர அவசரமாகக் கதிர்க் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டு, ஆட்கள் எல்லாரும் அங்கேயே கரண்ட் கொட்டாயில் மோட்டார் கிளப்பி குளித்துவிட்டு, துணிகளைக் காய வைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். பெண்கள் மார்பையும் உடலையும் மூடுவது போல, ஒற்றை சேலைத் தலைப்பை ஏற்றிக் கட்டிக்கொள்வார்கள். இன்னொரு தலைப்பை மறுகையால் பக்கவாட்டில் தூக்கிப் பிடித்தது  போல நடந்து வருவார்கள். கடலில் பாய்மரக் கப்பல், பாய்மரம் கட்டி கடலின் அலைகளில் ஆடி அசைந்து நகர்வது மாதிரி இருக்கும், பெண்கள் சேலை உலரவைத்து நடந்து வரும் அழகு. அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, செந்தாமரையும் மரகதமும் பேசிக்கொண்டே வந்தார்கள். “இன்னும் அறுவடை செய்ய வேண்டிய தளைகள் 4 துண்டு இருக்கு. இன்னைக்கு இரண்டு துண்டுதான் முடிஞ்சிருக்கு. இதுவே சின்ன தளைகள்தான்” என்று வேலையின் கடினத்தை வருத்தமாகக் கூறினார் செந்தாமரை. “ஆமாங்க, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வயல் வேலைகளையும் பார்க்க முடியலைங்க” என்று அலுப்புடன் கூறினாள் மரகதம். “அடி போடி, எள்ளு எண்ணெய்க்குக் காயுதாம், எலிப்புழுக்கையும், ‘ஆமாம், கூட சேர்ந்து நானும் காயுறேன்’னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசறது. நான் கூலி கொடுக்க பணத்துக்கு என்ன பண்றதுன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா வேலை அதிகமா இருக்குன்னு புலம்பறா”   என்று குறைபட்டார் செந்தாமரை. “ஆமா, பொம்பளைங்க வேலை செய்யறது ஆம்பளைங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாதே” என்று மனதுக்குள் புலம்பினாள் மரகதம். வேக வேகமாக வீட்டிற்குள் வந்த மரகதம், அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, அதைவிட அவசரமாக மிளகு பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைத்து, அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு உடைத்த கடலையும் பூண்டும்  சேர்த்துத் துவையல் செய்தாள். புனிதாவிற்கு வறுத்த ரொட்டியைக் காபியில் ஊறவைத்து மாலை 6 மணிக்கே பட்டம்மா பாட்டி  கொடுத்திருந்தார். வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையிடம் சென்று, கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தாமரை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு முழுவதும் மரகதம்தான் அந்தப் பச்சை சிசுவைப் பார்த்துக்கொள்வாள். புனிதாவால் எழுந்து உட்காரக்கூட முடியாது. இன்னும் சரியான சத்தான ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. குழந்தை பிறந்த ரணம் குடல் முழுக்க உள்ளாகவே இருக்கும். அந்த ரணம் ஆறுவதற்கு ஒரு வாரமாவது ஆகும். அது வரைக்கும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடணும். புனிதா வெளியில் அனைவரிடமும் சிரித்துப் பேசிப் பழகினாலும், அவள் மனம் முழுவதும் அவள் கணவனின் நினைவே நிறைந்திருந்தது. “என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும், நான் எப்படி இருக்கேன்னு விசாரித்து ஒரு கடுதாசிகூடப் போட முடியாதா?” என்று புனிதாவிற்குக் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது. “நொண்டியாகக்கூட இருந்துவிடலாம்; திருமணத்திற்குப் பிறகு ஒன்டியாக மட்டும் இருக்கக்கூடாது” என அடிக்கடி பாட்டி சொன்னது புனிதாவிற்கு நினைவுக்கு வந்தது. ‘இவள் வாழ்வின் சதியில் எனக்கும் பங்கு’ என்று செந்தில் ஆண்டவரும் அவருக்குப் பின்னிருந்த கடுதாசியும் சிரித்துக் கொண்டிருந்தது. தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 3

கரைசேராப் படகுகள் – 3

தொடர்கதை மனிதன் பிறக்கும்போதே பல உறவுகளுடன்தான் பிறக்கிறான். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எங்கோ பிறந்து வளர்ந்த ஆணும் பெண்ணும்  இணைகின்றனர். வெறும் மஞ்சள் கயிறும் மோதிரமும் மட்டுமா  இருவரையும் இணைக்கிறது?! அவை வெறும் அடையாளம் மட்டுமே. கணவன் – மனைவி உறவு என்பது பூர்வ ஜென்ம பந்தம், நம்பிக்கை இருப்பவர்களுக்கு; இந்த ஜென்மத்து சொர்க்கம் அன்பு இருப்பவர்களுக்கு. பிரசவம் முடிந்த மறுநொடியில், பிறந்திருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூட கேட்கத் தோன்றாமல், கணவனைத் தேடுகிறாள் என்றால், ‘எனக்குக் குழந்தை பிறந்தாலும்  அவர்தான் முக்கியம்’ என்று உணர்த்தும் மறைபொருள் இது என்பதை அனைவரும் அறிந்தனர். “அம்மாடி தாயே, நீ படிச்சிருக்க; உன் கணவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? நீதான் மனசைத் தேத்திக்கணும்” என்று செந்தாமரை, தன் மகளுக்கு ஆறுதல் கூறினார். “நீ பார்த்து வச்ச மாப்பிள்ளைதானே? அவ ஏன்டா மனசைத் தேத்திக்கணும்?” என்று மகன் மீது பாய்ந்தாள் பட்டம்மா பாட்டி.  மருத்துவச்சி குழந்தையை சுத்தப்படுத்தி, பழைய நூல் புடவையில் சுற்றி எடுத்து வந்து  செந்தாமரையிடம் காட்டினாள். ரோஜாக் குவியலுக்கு மத்தியில்  தாமரைப் பூ மலர்ந்திருப்பதைப் போன்று அந்தக் குழந்தை பூத்திருந்தது.  புனிதாவைப் போன்று அழகான பெண் குழந்தை. குழந்தையைப்  பார்த்ததும், முதலில்  அதன்  காதைத் திருப்பிப் பார்த்து, “என்  நிறமெல்லாம் வரமுடியாது” என்று அலட்டிக் கொண்டாள் அலமு பாட்டி.  “ஆமா, ஆமா. நீ  காக்கா சிவப்பாச்சே” என்று கிண்டலடித்தாள் பட்டம்மா  பாட்டி. “ஏம்பா செந்தாமரை, குழந்தை  உனக்குச் சொந்தமா? இல்ல, ஊருக்குச் சொந்தமா?” என்று  கோபால் நாயக்கர் கேட்டார்.   “என் பொண்ணு மாதிரியே  தங்கச்சிலை பொறந்திருக்கா  நாயக்கரே” என்று மகிழ்ச்சியுடன் வெளியில் இருந்த அனைவரின் கைகளையும் பிடித்துக் கொண்டார் செந்தாமரை.  “சரிப்பா, இந்தப் பேப்பரில் குழந்தை பிறந்த நேரம், தேதியெல்லாம்  குறிச்சிருக்கேன். வெள்ளனயே  போய்  நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குழந்தைக்கு ஜாதகம் எழுதிக்கோ” என்று சொல்லிவிட்டு பெரிசுகள்  திண்ணையைக் காலி செய்தனர். பாட்டிகளும் ஆளுக்கொரு காரணம் சொல்லிவிட்டுக் கிளம்பினர். “வள்ளி, பொறந்த குழந்தை பையனா பொண்ணான்னு கேட்க மறந்துட்டோமே?” என்று சுகுணா தண்ணி மோந்துகொண்டே ஆதங்கப்பட்டாள்.  “அதுக்கு ஏன் அம்புட்டு விசனப்படற? என் மாமியாளும் உன் ஆத்தாளும் வந்தா தெரிஞ்சிடப் போகுது” என்று  வள்ளி  நீட்டி முழக்கினாள். “சுகுணா, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வச்சிருக்கேன். வந்து எடுத்துகிட்டு போ” என்று  சொன்ன  வள்ளிக்கு, ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு, “வள்ளி, என் குடம் ரொம்பிடுச்சு. நீ மோந்துக்கோ” என்று வாளியை நீட்டினாள் சுகுணா.  “சுகுணா, மதியம் நெல்லு குத்தியது மேலெல்லாம் வலிக்குது. நாலு குடம் தண்ணி இறைச்சி கொடேன்”  என்று  கேட்டாள்  வள்ளி. “அதானே பார்த்தேன், என்னடா ‘செட்டியார் ஆத்தைக் கட்டி இழுக்கறாரே’ன்னு”  என்று  வள்ளி குழம்பு கொடுத்த  காரணத்தைச் சொல்லிவிட்டு,  நீர் இறைத்தாள் சுகுணா. “அம்மா, நாக்கு வறட்சியா இருக்கு; கொஞ்சம் தண்ணி கொடும்மா” என்று புனிதா குரல் கொடுத்தாள்.  மரகதம் எடுத்துக்கொண்டு சென்ற தண்ணீர் டம்ளரை  வெடுக்கென்று பிடுங்கினாள்  பட்டம்மா  பாட்டி.  தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் 2

கரைசேராப் படகுகள் 2

தொடர்கதை வாழ்க்கை , எந்தத் துன்பமும் இல்லாமல்  மகிழ்ச்சியாகச் செல்லும்வரை  மனிதனுக்கு  தான்தான்  பெரிய சக்தி என்ற எண்ணம். கொஞ்சம் துன்பம் தலை தூக்கும்போதுதான்  தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர்கிறான்; அதையும்  மதங்களில் தேடுகிறான்; மனித மனங்களை விட்டுவிட்டான்.  புனிதாவின்  அலறல் ஓலம் , ஈரக்குலையே  வாய்வழியே  வந்துவிடும் அளவிற்கு  வெளியில்  இருப்பவர்களுக்கு  வேதனையளித்தது. பெண்கள் உள்ளே போகலாம் என்று நினைத்தால், வெளியே திண்ணையில்  பெருசுகள் இருக்கிறார்கள். அவர்களை மீறிப் போனால் மரியாதையாக இருக்காது என்று வாசல் தெளிக்கும் இடத்திலேயே இளவட்டப் பெண்கள்  தத்தளித்து நின்றனர். தெருத்திண்ணையில் பட்டம்மா  பாட்டியுடன்  வட்டமேசை போடவரும் வல்லரசு நாடுகள் அலமு பாட்டி, கருப்பாயி  பாட்டி, கோமளா பாட்டி என, அனைவருக்கும் தகவல் தெரிந்து, அடித்துப்பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினர்.  “ஏம்பா  செந்தாமரை, பொட்டி வண்டிய கட்டுப்பா. டவுன் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போகலாம்” என்று பால் ரெட்டியார்  குரல் கொடுத்தார்.  “யார்ரா இவன் மடையன், இந்த நேரத்தில எந்த டவுன் ஆஸ்பித்திரி திறந்திருக்குமாம்?” என்று  கோபால் நாயக்கர் பதில் கொடுத்தார். கூடியிருந்தவர்களின்  தவிப்பு  செந்தாமரையை மேலும்  கலக்கமாக்கியது. உள்ளே வந்த பாட்டிகள் நேராக பட்டம்மா பாட்டியிடம் போனார்கள். குழந்தை கீழே விழுந்தால்,  யாரும் பார்க்கலைன்னா அழாம அது பாட்டுக்கும் எழுந்து விளையாடும்; யாராவது  பார்த்தால்தான் ஒப்பாரி வைக்கும். அது மாதிரி, இது வரைக்கும் தேமேன்னு வெற்றிலை இடித்த பட்டம்மா பாட்டி, தோழிகளைப் பார்த்ததும் , “அடி ஏய்!! என் பேத்தி நிலைமையை  பார்த்தீங்களாடி”ன்னு  ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.  “ஏய் கிழவி, சும்மா இருக்க மாட்டியா? எழவு வீடு மாதிரி ஒப்பாரி வைக்கற?” என்று செந்தாமரை அதட்டினார். உடனே எல்லா பாட்டிகளும் எழுந்து, புனிதா இருக்கும் அறைக்குள் சென்றனர். செந்தாமரை செய்வதறியாது தலையில் அடித்துக் கொண்டார். “ஏம்மா மருத்துவச்சி, கர்ப்பப் பை வாய் திறந்திடுச்சா?”ன்னு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அதட்டல் விட்டாள் அலமு பாட்டி.  யாரும் பேசற நிலையிலா இருக்காங்க அங்க? மருத்துவச்சி கட்டில்ல ஏறி, முட்டியால புனிதா வயிற்றில் அழுத்திக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் கோமளா பாட்டி அலறினாள்.   “ஏம்மா, என்னம்மா பண்ற? இப்படி  முட்டியால அழுத்தினா குழந்தை  தலை அழுந்தும்மா. மூளை நரம்பு பாதிச்சு மனவளர்ச்சி இல்லாம போயிடும். சில நேரங்களில்  அது மலத்தையே சாப்பிட்டு விடும். இப்படி தூர வாம்மா”ன்னு மருத்துவச்சியை தூர வரச்சொல்லிட்டு  கோமளா பாட்டி புனிதாவின் வயிற்றை அழுத்திவிட்டுக் கொண்டே கீழிறக்கினாள். “புனிதா, ஐயோ ஐயோன்னு  கத்தாதே. குழந்தை நல்லபடியா பொறக்கணும்னு  மனசுல நினைச்சுகிட்டு, சாமி பேரை சொல்லிக் கத்து” என்று  கோமளா பாட்டி புனிதாவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே குழந்தை வரும் பாதை வழுக்கிக்கொண்டு வருவதற்காக அங்கு விளக்கெண்ணெய் தடவி விட்டு, மீண்டும் கைகளால்  வயிறை அழுத்தினாள். இப்போது புனிதாவுக்கு வலி உச்சத்தைத் தொட்டது. அவளுடைய அலறல் வெளியில் இருப்பவர்களின் இதயத்தைக் கையில் வைத்துத் துடிக்க வைத்தது. கோமளா பாட்டி அதிக அழுத்தம் கொடுக்கவும், தலையைத் திருப்பி குழந்தை வெளியே வர ஆரம்பித்தவுடன், அதன் தலையை லாவகமாகப் ,பிடித்து குழந்தையை வெளியே எடுத்தாள்.   குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்டதும்,  பால் ரெட்டியார் தயாராக வைத்திருந்த பேப்பர் பேனாவில் நேரம்   குறித்தார். 20-10-1965, நேரம்: சூரியன் அஸ்தமனமாகும் 6:15 என எழுதினார். வெளியில் நின்றிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். “வாங்கடி, பொழுது இருட்டுது. சீக்கிரம் தண்ணி மோந்துட்டு போகணும்”னு ஒருத்தி குரல் கொடுத்ததும், அனைவரும் கிணற்றடி நோக்கி ஓடினர்.  புனிதா கொஞ்சம் நிதானமானதும் செந்தாமரை  உள்ளே வந்து பார்த்தார். செந்தாமரையைப் பார்த்ததும், “அவர் வரலையாப்பா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் புனிதா.  “அதுக்குதான்  நான் அப்பவே சொன்னேன். ஊரில் இல்லாத மாப்பிள்ளைன்னு தூக்கிவச்சிகிட்டு ஆடுனீங்க” என்று  பப்படம்  மாதிரி பொரிந்தாள் பட்டம்மா பாட்டி.  தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள்

கரைசேராப் படகுகள்

தொடர்கதை – பகுதி 1 ‘ஜல் ஜல்’ என்ற சலங்கை ஒலி வானில் எதிரொலிக்க, புழுதிப் படலமொன்று மேகத்தினைத் திரையிட, அதற்குள் சூரியன் ஒளிந்து கொள்ள, சூரியனைத் தேடி நிலாமகள் வரும் மந்தகாசமான மாலைப் பொழுது. அருங்குணம் என்னும் கிராமத்து நாற்சந்தியில், வயல் வேலை முடித்து வரும் மக்கள், மந்தை மாடு ஓட்டிவரும் மக்கள், இரவு உணவுக்குக் கடைகளில் பொருள் வாங்கும் மக்கள், தெரு விட்டு தெரு சென்று கதை பேசும் மக்களென, அந்த இடமே வெங்கலப் பானையில் இரும்புக் குண்டை உருட்டியது போன்று கலகலப்பாக இருந்தது. தென்னன்ட தெருவில் ஒரு வீட்டின் நடுக்கூடத்தில், சாய்வு நாற்காலியில் சாய மனமில்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது ஒரு உருவம். கிட்டத்தட்ட சினிமா நடிகர் செந்தாமரை மாதிரி அதே உருவம், அதே குரல், அதே நடை, அட! பெயர் கூட அதேதான். ஆனால் இவர் அவரல்ல. விசு படத்தின் கதாநாயகி கமலா காமேஷ் மாதிரி ஒரு உருவம். அதே உயரம், அதே ஒல்லி, ஆனால் பெயர் மட்டும் மரகதம். கூடத்தின் ஒரு முனையில் இருந்து ‘டொக்.. டொக்.. டொக்..’ என்று தாள லயத்துடன் ஒரு ஓசை. தவில் வித்துவான் வீட்டிற்கு வந்தால் இருவரும் கச்சேரி வாசிப்பார்கள். சில நேரங்களில் தவில் தாளம் தப்புமே தவிர, பட்டம்மா பாட்டியின் வெற்றிலை இடிக்கும் ஓசை தாளம் தப்பாது. ஒரு அறையின் கதவைத் திறந்து கொண்டு மரகதம்மா அவரசமாக வெளியே ஓடிவந்து சமையலறைக்குள் நுழைந்தார்கள். மரகதம்மா கதவைத் திறந்த அந்த இடைவெளியில் அறைக்குள் இருந்து ஒரு பெண் அலறும் ஓசையும் கதறி அழும் ஓசையும் கலவையாகக் கேட்டது. மரகதம்மா செந்தாமரையைத் தாண்டிப் போகும்போது, “மரகதம் இப்ப எப்படி இருக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டார் செந்தாமரை. “பயமாதாங்க இருக்கு” என்று பாத்திரத்தில் ஏதோ எடுத்துப் போகும் மரகதம் அழுதபடியே சொல்லிவிட்டுப் போனாள். வெளியில் திண்ணையில் அமர்ந்திருந்த பெரிசுகள், “என்னப்பா செந்தாமரை, என்னாச்சு?” என்று குழுவாகக் குரல் கொடுத்தனர். ஒலிபெருக்கி இல்லாமலே பெரிசுகளின் குரல் தெருவெல்லாம் எதிரொலித்தது. “ஏம்பா உன் மருமவனுக்கு தகவல் சொல்லி விட்டயா?” என்று ஒரு பெரிசு ஏதோ மாபெரும் யோசனை சொன்னமாதிரி சபையைப் பார்த்தார். “ம்..ம்.. மதியமே சொல்லிவிட்டுட்டேன். ஆனா பதில் தகவல்தான் வரல” என்று விரக்தியுடன் சொன்னார் செந்தாமரை. “சீராட்டி, பாராட்டி, தங்கப் பாலாடையில் பாலூட்டி வளர்த்த தங்க மயிலை, மலைக் குரங்கு கையில் பிடிச்சுக் கொடுத்துட்டானே.. இந்த அக்கிரமம் எங்க நடக்கும்?” என்று புலம்பினாள் பட்டம்மா பாட்டி. “ஏய் கிழவி, அனத்தாம சும்மா இரு. இங்க அவனவன் உயிரைக் கையில பிடிச்சிட்டு நிற்கிறான். நீ வேற எசப்பாட்டு பாடிக்கிட்டு..” என்று அதட்டினார் செந்தாமரை. தெருவில் உள்ள பெண்களில் பாதிப்பேர் வெண்கலக் குடத்தை வைத்துக் கொண்டும், பானையை வைத்துக்கொண்டும் தண்ணீர் மோந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் ஓடிவந்து, “நம்ம மரகதம்மா பொண்ணு வலியில் துடிக்குதாமே” என்று தகவல் சொல்ல, பெண்கள் அனைவரும் சிட்டாய்ப் பறந்தனர். செந்தாமரை வீட்டு வாசலில் ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. உள்ளேயிருந்து புனிதா அலறுவது கல்லிலும் நார்வரும் போல், அனைவர் மனதையும் உருக வைத்தது. கூடியிருந்த பெண்கள், “கன்னியம்மா தாயே! புனிதாவ காப்பாத்து” என வேண்டினர். தொடரும்.. சாம்பவி சங்கர்