கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார்.  அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும்.   முகப்புப் படம்: இணையத்திலிருந்து

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த எழுவரும் இன்று (11.11.2022) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு போன்றவற்றில் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் அதே நீதிமன்றம், இப்படியான தீர்ப்புகளையும் அவ்வப்போது வழங்குவதே நமக்கான ஆறுதலாகவும் நீதிமன்றத்தின் மீதான பிடிப்பாகவும் இன்னும் நீடிக்கிறது. எழுவர் விடுதலையின் கிரெடிட்டை எடுத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், தனி நபர்கள் இப்படி ஏராளனமானோர் வரிசையில் இருக்கிறார்கள். ஆனாலும்கூட, இந்த விடுதலைக்கு – தீர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக எவரொருவரும் உரிமை கோர முடியாது. இருப்பினும், எந்த ஒன்றுக்கும் தொடக்கப்புள்ளி என்ற ஒன்று வேண்டுமல்லவா? ஒரு கட்டடம் கட்ட முதல் கல், ஒரு கோலம் போட முதல் புள்ளி, ஒரு காடு வளர்க்க முதல் விதை.. இந்த வரிசையில், எழுவர் விடுதலைக்கு முதல் விதை போட்டவர் யார்? ஒருவேளை,  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்குத் தூக்கு உறுதி செய்யப்படாமல், அவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருந்தால், இந்த ஏழு பேரும் வாழ்நாள் முழுக்க சிறையிலே கிடந்துக்கூட மரணம் எய்தியிருக்கக்கூடும். ஆனால், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டி, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து வாதாடி, அவர்கள் தூக்கிலிடப்படுவதைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் வழியே நிரந்தரமாக அவர்களின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிந்தவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ. மூவரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் முடிவையும் மாநில அரசே எடுக்கலாம் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்புதான்  பேரறிவாளன் முதலான எழுவரின் விடுதலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அந்தத் தீர்ப்பை முன்வைத்துதான் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன; அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது. அம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால்தான், இன்றைய தீர்ப்பில், ஆளுநர் தன் கடமையைச் செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதை முன்வைத்தே இன்று அறுவர் விடுதலை பெற்றுள்ளனர். இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சியாக, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் விதமாக, சட்டமன்றமும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளும் ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி மட்டுமன்று. எதிர்காலத்தில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டால், அதை முறியடிக்க உதவும் வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டப் போராட்டங்களுமே இன்றைய விடுதலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன. நளினியின் தாயார் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதைப் போல, இந்த விடுதலையானது ஒரு கூட்டு முயற்சியே. அந்த முயற்சியில் மேலே குறிப்பிட்டதைப்போல, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், பொருளாதார ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் உதவியவர்கள் என்று அனைவரின் பங்களிப்பும் உள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மூவர் தூக்கை எதிர்த்து மீண்டும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியதன் வழியே, ‘இன்றைய மகிழ்ச்சிக்கான விதையை அன்றே ஊன்றியவர் வைகோ’ என்பதை யாரும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை, தேவர் மகன் திரைப்படத்தில், “நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ; பிறகு உன் மகன் சாப்பிடுவான், அதன்பிறகு அவன் மகன் சாப்பிடுவான். ஆனா விதை.. நான் போட்டது” என்று சொல்வாரே அதைப் போல.   

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து  மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது.  மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும்  பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை,  இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக  பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி

பட்ஜெட்டும் பி. எஸ். வீரப்பாவும்

பட்ஜெட்டும் பி. எஸ். வீரப்பாவும்

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வழக்கம்போலவே வளர்ச்சி, டிஜிட்டல் போன்ற சொற்களுக்குப் பஞ்சமில்லை. இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலச்சூழலில் வாழ்வாதாரம் இழந்து கிடக்கும் ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு மட்டுமே பஞ்சம் நிலவுகிறது பட்ஜெட்டில். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்ற வெற்று அறிவிப்பு ஒன்றைத்தவிர, பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும்கூட ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு மருந்துக்கும் அறிவிப்பு இல்லை. பல ஆண்டுகளாக மாற்றமின்றித் தொடரும் வருமானவரி விலக்குக்கான உச்ச வரம்பு இன்னமும் 2.5 லட்சமாகவே இருக்கும் என்ற அறிவிப்புடன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12% இருந்து 7% ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது. நூற்றுக்கணக்கான கோடிகளை ஈட்டும் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு, ஆனால் சில லட்சங்கள் ஈட்டுவோர் வரி கட்டவேண்டும். வழக்கம்போல சாலை விரிவாக்கம், எட்டு வழிச் சாலைகள் என்ற அறிவிப்புகள், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு, பின்னர் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட சாலையில் அதே மக்கள் பயணிக்க சுங்கச் சாவடி அமைத்துப் பணமும் வசூலிப்பார்கள், எந்தவிதக் கால வரையறையும்கூட இல்லாமல் என்பதை உறுதி செய்கின்றன. ஏதிலிகள் ஆக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பொதுமக்கள்தான். நதிகளை இணைக்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர். வெளிப்பார்வைக்குப் பயனுள்ள திட்டமாக இது தோன்றினாலும், இதன் பின்னால் உள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இதற்காக ஏற்படுத்தப்படவுள்ள வழித்தடங்களுக்காகத் தங்கள் வாழிடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கப்போகும் மக்கள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிப்பு, நதி நீர் கடலில் கலக்காமல் தடுப்பதால் கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை அளவு, இதனால் பாதிப்புக்கு ஆளாகும் கடல்வாழ் உயிரிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காகக் கடலை நம்பியுள்ள மக்கள் என இதன் பின்விளைவுகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது அந்த அறிக்கை மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்குமான வேறுபாட்டை இன்னமும் நிதியமைச்சர் உணர்ந்தாரா என்றே நமக்குப் புரியவில்லை. கிரிப்டோ கரன்சி முதலீட்டு வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு அநீதியின் உச்சம் மட்டுமல்ல அறியாமையின் உச்சமும்கூட. ரயில்வே துறைக்கென தனியே பட்ஜெட் போடப்பட்டதை மாற்றி பொது பட்ஜெட்டுடன் இணைத்தார்கள். தற்போது ரயில்வே திட்டங்கள் குறித்த அறிவிப்பை ரயில்நிலைய பிளாட்பாரங்களில்தான் தேட வேண்டியுள்ளது. சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்த பல ரயில்களை, கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்கள் என்று பெயர் சூட்டி ஏமாற்றினார்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான ரயில்களை நிறுத்திவிட்டார்கள். அவற்றை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்ணுக்கு எட்டியவரை காணமுடியவில்லை. எல். ஐ. சி. பங்குகளை விற்கும் முடிவு முன்பே அறிவிக்கப்பட்டதுதான் என்றாலும், விற்பனை விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பைப் பெருமையாக வெளியிட்டுள்ளார் அமைச்சர். ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினால் அதை நடத்தும் தகுதி நடத்துபவருக்கு இல்லை என்று பொருள். அதேவேளை, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் கிடைக்கிறது என்று பொருள். சமூக மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானதும் அடிப்படையானதுமான கல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் கல்வித் தொலைக்காட்சி எண்ணிக்கையை 200 ஆக உயர்த்துவோம் என்ற அறிவிப்பு கல்வியை மேலும் சிதைக்க இவர்கள் கொண்டுள்ள திட்டத்தின் வெளிப்பாடு அன்றி வேறில்லை. எந்தச் சூழலிலும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் வகுப்புகள் நேரடிக் கற்றலுக்கு ஈடாகாது. கல்வி மேம்பாடு குறித்த வேறு எந்த அறிவிப்பும் இல்லை என்பது இவர்களுக்குக் கல்வி மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது. டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வேதனை தரும் நகைச்சுவை. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறு குறு தொழில்கள் மீட்டெடுப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்தத் தளத்திலும் இந்த பட்ஜெட் எந்தப் பயனையும் எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குத் தரப்போவாதில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரமின்றித் தவிக்கும் மக்களை எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட், ஆட்சியாளர்கள் யாருக்காக இயங்குகிறார்கள் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. நடப்பது ஜனநாயக ஆட்சி என்ற சிந்தனை சிறிதுமின்றி, எளிய மக்கள் மீது எவ்விதக் கருணையுமின்றி, சர்வாதிகார மன்னராட்சி மனப்பான்மையில் இருப்பவர்களால் மட்டுமே இத்தகைய பட்ஜெட்களைத் தயாரிக்க முடியும். பி. எஸ். வீரப்பா ஒரு திரைப்படத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ‘இந்த நாடும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், அவர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் மக்களும் நாசமாய்ப் போகட்டும்’.

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. கடந்த ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணங்களை முன்வைத்து முழங்கியவர்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், இந்நேரம் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்களால் ஆற்றாமையும் அறச்சீற்றமும் பீறிட்டு எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, நீட் தேர்வை முன்வைத்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்பாக நீட் தேர்வு கடந்து வந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். கடந்து வந்த பாதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India -MCI) கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்து, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிரிப்பு காரணமாக தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது. கெசட் அறிவிப்பு வந்ததுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு, பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தனர். மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. கல்லூரி உள்ளிட்டோர் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தனர். அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற நாளில் அவரது கடைசித் தீர்ப்பாக நீட் தீர்ப்பு வெளியானது. “நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. நீட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது, நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தவே, ஓய்வு பெறும் நாள் வந்துவிட்டதால், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி கபீர் மீது குற்றம் சாட்டினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, முந்தைய வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த, நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்த கபீர் மீது குற்றம்சாட்டிய நீதிபதி தவே தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் 2017-ல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கி அன்றைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் ஆணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அது சட்ட ரீதியாக செல்லாது என்ற அட்டார்னி ஜெனரலின் கருத்தால் கைவிடப்பட்டது. இத்தனை இடர்களைக் கடந்து, 2020 ஆம் ஆண்டில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய அதிமுக அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. சுமார் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க அந்தச் சட்டம் வழிவகை செய்தது. 7.5% இடஓதுக்கீட்டை ஏற்க முடியாது என்றவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக அரசுமீது குற்றம் சாட்டிவந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கில், ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துக் கேட்பு நடத்தி சட்டமுன்வடிவைத் தயாரித்து வருகிறது. விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீட் தேர்வு இல்லாத நிலை உருவாகுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வார் இங்கே யாருமில்லை. பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் கல்வி முறையில், அனைவருக்குமான ஒற்றைத் தேர்வு என்பது, அரசியல் சாசனம் வழங்கும் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். பெரு நகரங்களில் பல லட்சங்களைக் கொட்டி, தனிப்பயிற்சி பெற்று வரும் மாணவனோடு, எங்கோ தொலைதூரக் கிராமத்திலும், மலைப்பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவனைப் போட்டியிடச் செய்வது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாகும். இடைக்கால நடவடிக்கைகள் ஏன் இல்லை? நீட் தேர்வு அறிவிப்பு வெளியான 2010, நீட்டுக்கு எதிரான தீர்ப்பின் மீதான மேல் முறையீடு செய்யப்பட்ட 2013 ஆகிய ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்தது. திமுகவின் காந்திச்செல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் 85% இடங்களை, சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் தீரப்பைப் பெற்றுத் தந்தவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் முந்தைய திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனராலாக இருந்த பி.எஸ்.ராமனும் ஆவர். தீர்ப்பு வெளியான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நளினி சிதம்பரம், “இனி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அப்போது எதிர்க்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் இருந்து நீட்டுக்கு எதிராகப் பேசிவரும் திமுக, இன்றுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு வெறும் ஐந்து நீதிபதிகளின் சிந்தனையோடு முடிந்துவிடுவதில்லை. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. ஐந்து நீதிபதிகள் அமர்வோடு நீதி நின்றுவிடுவதில்லை. இதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஏழு மற்றும் ஒன்பது நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. சபரிமலை வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. 1973-ல் கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்கில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடையே உள்ளது. ஆனால், நீட் தேர்வைப் பொறுத்தவரை, இவ்வளவு தீவிரமாக நீட்டை எதிர்ப்பவர்களும், எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்பவர்களும் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் +2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை, பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்ணை முற்றாகப் புறம் தள்ளுகிறது. குறைந்தபட்சம், மாநில அரசின் இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களே அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்திக்கொள்ளக் கூட இங்கே உரிமை கோரப்படவில்லை. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முகமையாக, தகுதி பெற்ற அமைப்பாக வரையறை பெற்றது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிப்பார் யாருமில்லை. முந்தைய அதிமுக ஆட்சி மீதும், 2014 – 2019 வரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதே எண்ணிக்கையில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிராக டெல்லியில் எழுப்பிய குரல்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? கருத்துக் கேட்புக் குழு அமைத்த தற்போதைய திமுக அரசு, மேல்முறையீட்டு வாய்ப்புகள் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை? அதிகாரம், பொருளாதாரம், எண்ணிக்கை என அனைத்திலும் பலம் பொருந்தியவர்கள் மாணவர்களின் மரணங்களுக்கு விலை வைத்துக் கொண்டிருக்க, இவை எதுவுமே இல்லாத எளியவர்கள் இப்படியான கேள்விகளை மட்டுமே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. நீட் தேர்வு ஒழிக்கப்படுமா? அந்த அதிசயம் எப்போது நிகழும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்வரை மாணவர்கள் மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும். போராட்ட முடிவில் வெற்றி வசப்படாவிடில்

திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?

திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?

சங்க இலக்கிய நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்பாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. திராவிடம் ஆரியத்துக்கு எதிரான சொல் என்று ஒரு தரப்பும் திராவிடமும் தமிழும் வேறு வேறல்ல, தமிழ் என்ற சொல்லின் திரிந்த வடிவம்தான் திராவிடம் என்று ஒரு தரப்பும் சொல்லிக்கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்தேசியப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், கார்ட்டூனிஸ்ட் பாலா போன்ற தூயமைவாத தமிழ்த்தேசியவாதிகள் திராவிடக் களஞ்சியம் என்ற பெயருக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருக்கிறார்கள். அரசியல்வாதியும் நடிகருமான சீமான் ஆரியத்தின் செல்லக்குழந்தைதான் திராவிடம் என்றும் திராவிடத் திருட்டுத்தனம் என்றும் தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே சீமான்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் பெரும்பாட்டன் மாயோன்தான் கிருஷ்ணன் என்று சொல்லி வழிபாடு நடத்துவதாகச் சொன்னார். மாயோன் கிருஷ்ணனாகத் திரிபடையும்போது, தமிழ் திராவிடமாகத் திரிபடைந்திருக்காதா என்ன? அவ்வளவு ஏன், பெரியாரின் பேரனாக இருந்த சீமான், பெரும்பாட்டன் மாயோனின் பேரனாக மாறி இருக்கும்போது, தமிழ் என்ற சொல் பிற இடங்களில் திராவிட எனத் திரிபடையாதா என்ன? திராவிடம் ஆரியத்தின் குழந்தை எனில், எச் ராஜா, நாராயணன், ராகவன், அண்ணாமலை வகையறாக்கள் எல்லாம் ஏன் திராவிடத்தைக் கண்டு பதறப்போகிறார்கள்? ஆனால் அந்த நபர்கள் யாருமே சீமான், மணியரசன் போன்றோர் குறித்து எதுவுமே பேசுவதில்லையே, அது ஏன் ? எப்போதும்போல இப்போதும் திராவிட தமிழ்தேசிய சர்ச்சை, சமூக ஊடகங்களில் மட்டுமே பேசுபொருளாகும். சீமான், பாலா போன்றோரின் திராவிடத் திருட்டு என்ற விமர்சனத்துக்கு திராவிடத் தலைவர்கள் எதிர்ப்பு அறிக்கை வெளியிடப்போகிறார்களா? அல்லது வழக்கம் போலவே மௌனம் காப்பார்களா? என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும். மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவிலிருந்து என்கிறது அறிவியல். ஆளுக்கு ஒரு இனம் எனில் ஒவ்வொரு இனக்குழுக்கள் வாழும் இடத்திலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான ஆதாரங்கள் எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை. எனில், அறிவியல் கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான். குடும்ப அமைப்பு உருவாகும் முன்பாக ஆண் பெண் கலப்பு என்பதற்கான வரைமுறைகள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தாய் வழிச்சமூகக் காலத்தில் பெண்ணே தன் விருப்ப ஆணைத் தேர்வு செய்திருப்பதால், இனக்கலப்பு என்பது இயல்பாகவே இருந்திருக்கும். அதனால், நான் தூய்மையான இனத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவர்கூட சொல்லிக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஊருக்கு ஒரு தமிழ் பேசப்படுகிறது. எழுத்துகளின் பண்டைய வரிவடிவம் ஏராளமான மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. போலவே அந்தந்த ஊரில் வரி மற்றும் ஒலி வடிவங்கள் மாறியிருக்கக்கூடும். அதனால் திராவிட மொழிக்குடும்பம், தமிழ் மொழிக்குடும்பம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. சங்க இலக்கியங்கள் தமிழில் இருப்பதால் தமிழ்க் களஞ்சியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறில்லை. அதுவே நியாயமானதும் கூட. ஏனெனில், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பிற்போக்குவாதக் கருத்துகளை முன்வைக்கும் நூல்களையும் உள்ளடக்கிய தொகுப்புக்கு திராவிடக் களஞ்சியம் என்று பெயரிடுவதே அபத்தம்தான். நாளடைவில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவிளையாடல் புராணம் போன்றவையும்கூட திராவிடக் களஞ்சியத்தில் சேர்ந்துவிடக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது. பகுத்தறிவு மற்றும் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட பெரியார், அண்ணா, பாரதிதாசன், சுரதா, கலைஞர் கருணாநிதி, எஸ்.எஸ்.தென்னரசு, இரா.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, டி.கே.சீனிவாசன், குடியரசு, கி.வீரமணி, உள்ளிட்ட ஏராளமான திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்களை ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரில் கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், திராவிடம் என்பது வெற்றுப் பழம் பெருமை பேசும் கோட்பாடாக மாறிவிடாமல், முற்போக்குடனும் தொலைநோக்குடனும் அறிவியல் பார்வையுடனும் சமத்துவ நோக்குடனும் சிந்திப்பதற்கான அடையாளச் சொல்லாகவே இருக்க வேண்டும். திராவிடம் என்பது எப்போதும் ஆரியத்தின் நேரடி எதிர்ச்சொல்லாக இருப்பதே காலத்தின் தேவை. இதற்கிடையே, இந்தக் கட்டுரையை நிறைவு செய்து வெளியிடவிருந்த நேரத்தில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். “சர்ச்சையை எழுப்புபவர்கள், வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படிக்காமல் விமர்சிக்கிறார்கள். சங்ககால நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு, இளைய தலைமுறையினர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும். திராவிடக் களஞ்சியம் என்பது கடந்த 150 ஆண்டுகளில் வெளிவந்துள்ள திராவிட இயக்க உணர்வாளர்கள் சமூக சீர்திருத்தம் சார்ந்து எழுதிய, மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்டவை சார்ந்த நூல்கள், கால்டுவெல் முதல் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சமகால ஆய்வாளர்கள் வரையிலான ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல், இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம்” என்று கூறியுள்ளார். அவ்வகையில் நமது எண்ணத்தின் வெளிப்பாடே அரசின் நிலைப்பாடாக உள்ளது எனபது மகிழ்வான செய்தியாகும். இந்தக் குழப்பத்துக்குக் காரணமான, செய்தி – மக்கள் தொடர்புத்துறை அறிவிப்புப் பதாகையும் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுகவும் முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைப் பரவல் உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள், பலமான கூட்டணி, பத்தாண்டுகால அதிமுக ஆட்சி மீதான சலிப்பு, பாஜக அதிமுக கூட்டணி மீதான வெறுப்பு  என திமுக வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நூறு நாள் ஆட்சி குறித்தான நமது சில மதிப்பீடுகள் இவை. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வருக்கு முக்கிய சவாலாக இருந்தது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது முடக்கம் இருக்காது என்று அறிவித்திருந்த முதல்வர், வேறு வழியின்றி பொதுமுடக்கத்தைச் செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவமனைகளில்  படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பல சிக்கல்கள் நிலவின. திமுக முழுமூச்சாக எதிர்த்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்க அரசு அனுமதி அளித்தது. லாக் அறிவித்த நேரத்தில் பேருந்துகளை இயக்கி அரசே நோய்ப்பரவலுக்கு வழி செய்தது. சிறு குறு நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்க பெரும் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி இயங்கின. இதனால் பெரும் பணக்காரர்களின் தொழில் தடையின்றி நடைபெற்ற அதே வேளை, எளிய மக்களின் தொழில்கள் முடங்கிப் போயின. கடந்த ஆண்டின் பொதுமுடக்கம் ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்டது என்பதால் வங்கிக் கடன் தவணை செலுத்துதல் போன்றவற்றில் கிடைத்த சலுகைகள் இந்த ஆண்டு கிடைக்காததால் நலிவடைந்தவர்கள் எளிய மக்களே. அதேநேரம், வாக்குறுதி அளித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் பணமும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையே தடுப்பூசி வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது. கொரொனாவைக் காரணம் காட்டி இன்று வரை பள்ளிகள் திறக்கப்படாதது கல்வித் துறையில் நிகழ்ந்துவரும் பெரும் பின்னடைவாகும். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு சற்றே ஆறுதல் அளித்தாலும் இனி வரும் காலங்களில் இத்தகைய சூழலைச் சமாளித்து, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதற்கான மாற்று வழிகள் குறித்து அரசு இன்னமும் சிந்திக்கத் தொடங்காதது பெரும் ஏமாற்றமே. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஏராளமான அறிவிப்புகளை மட்டுமே அள்ளித் தெளித்துள்ளதோடு, முந்தைய ஆட்சியின் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கடப்பதாக உள்ளது. பட்ஜெட்டுக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் பண வீக்கம், வளர்ச்சி வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் இன்றி அரசு கடனில் மூழ்கிக் கிடப்பதான தோற்றத்தை மட்டுமே உருவாக்கியது. முந்தைய ஆட்சியைக் குறை சொன்ன நிதியமைச்சர், கடன் வாங்குவதில் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். போலவே எல்லோருக்கும் இலவசம் கூடாது என்ற நிதியமைச்சரின் பதவிக்காலத்தில்தான் எல்லோருக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறை கடுமையான நட்டத்தில் இருப்பதாகவும் எல்லோருக்கும் பொதுவாக இலவசம் இருக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் சொல்லிக்கொண்டே அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்று அவருக்கே வெளிச்சம். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே முடியாது என்று அடம்பிடித்த நிதியமைச்சர், பட்ஜெட்டில் வேறு வழியின்றி 3 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளார். ஆனால்‌ டீசலுக்கு விலைக்குறைப்பு செய்யவில்லை.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் பள்ளிக்கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘சுவரொட்டி இல்லா சென்னை’ அறிவிப்பு, அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து, அந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள சூழலில் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாக சிறிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றோர் தங்கள் விளம்பரங்களுக்கு சுவரொட்டிகளை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விவசாயத்திற்கு முதன்முறையாக தனி பட்ஜெட் அறிவித்தாலும் ஏராளமான அறிவிப்புகள் மட்டுமே அதிலும் இடம்பெற்றுள்ளன. கரும்பு மற்றும் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பமான கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யாது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட உயர்வுத் தொகையோடு இந்த உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பனை மரம் வெட்டத் தடை, பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மைப் பாதுகாப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஓதுவாராகப் பெண்களை நியமித்துள்ளதும் வரவேற்கத்தக்கதே. அதே நேரம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலும் மாரியம்மன் கோயில், சிறிய சிவன் கோயில்களில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது முதல்படி என்பதால் குளறுபடிகளைக் களைந்து அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் குறிப்பாக 50% அர்ச்சகர்கள் பெண்களாகவும் இருக்கும் நிலையை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். ஏ.கே.ராஜன் கருத்துக் கேட்புக் குழு அமைத்தது தவிர்த்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் திமுக அரசும் முந்தைய அதிமுக அரசின் அணுகுமுறையிலேயே செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதற்கும் ஆட்சியாளர்களாக செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முன்பு ஆட்சியில் இருந்த கட்சி என்ற முறையில் திமுக அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஊழல் வழக்குகள், சொத்துக்குவிப்பு வழக்குகள் என்று முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குகள் பாயத்துவங்கியுள்ளன. இதற்கு முன்பாகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்டுள்ளோம். ஆனால், வழக்குச் செலவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறு பயன்கள் விளைந்ததில்லை. ஊழல் பணம் மீட்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்பட்ட வரலாறு இங்கே இல்லை என்பதால் இனியாவது காட்சிகள் மாறும் என நம்புவோம். மொத்தத்தில் நிறைகளும் குறைகளும் வழக்கமான நடைமுறைகளும் கலந்து நடைபோட்டு வருகிறது நூறு நாள் ஆட்சி.

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

[குழந்தைகளின் கல்வி நலனில் கவலையும் அக்கறையும் கொண்டு, ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை சுவடு இதழ் மனதாரப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரை அவர்களைக் குறித்தது அல்ல.] ‘உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதனால் பல வருடங்கள் பின் தங்கிய சூழலுக்குப் போய் விட்டோம்’ என்று யூனிசெஃப் குழந்தைகள் அமைப்பு உட்பட பல தனியார் அமைப்புகள் ஆய்வு செய்து, தங்கள் ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வழியே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இவை தமிழகத்திற்கும் பொருந்தும். கூடுதலாக இங்கு தனியார் மயமும் தலைவிரித்தாடுகிறது. பெண் குழந்தைகள் திருமணம் எல்லா மாவட்டங்களிலும் நடப்பது பற்றிய புள்ளி விபரங்கள் வெளியாவது தொடர்கிறது. அதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆசிரியைகளைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. நமது சுவடு இதழ் A3 ஆசிரியர்கள் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில், இவற்றையெல்லாம் விரிவாக விவாதித்து அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.  அடித்தட்டு மக்களின்  பிரதிநிதியாகவும், கல்வி வரி, தொழில் வரி, வருமான வரி, சாலை வரி உள்ளிட்ட பலப்பல வரிகளைக் கட்டி வரும் சாதாரண குடிமகன்கள் சார்பாகவும், கல்வி மீதும் எதிர்காலத் தலைமுறை மீதும் அக்கறையும் பொறுப்பும் கொண்டவர்களாகவும் இங்கு சில நியாயங்களைக் கேள்விகளாக முன் வைக்கிறோம்.  அரசுப் பள்ளி ஆசிரியர்களே, வேலையே செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்க வெட்கமாக இல்லையா? தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முழுவதுமே ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. இன்று வரை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் பல லட்சங்களை சம்பளமாகப் பெற்றுள்ளீர்கள். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘உறவினர் வீடே என்றாலும் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, அது தன்மானத்துக்கு இழுக்கு’ என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களோ  கடந்த 15 மாதங்களாக  சும்மா இருந்து கொண்டே சம்பளம் வாங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  பல்லாயிரம் ஆசிரியர்கள் பணி புரியும் நமது கல்வி அமைப்பில் மிகச் சொற்ப விழுக்காடு ஆசிரியர்கள்தான்  குழந்தைகளுக்காக ஏதாவது ஒரு வகையில் பேசிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றனர். மீதமுள்ள பெரும்பான்மை ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் அரசு வழங்கும் சம்பளத்தைக் கொஞ்சமும் கூச்சமின்றி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் சொந்தமாக  ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டும் விவசாயம் பார்த்துக் கொண்டும்  வேறு ஏதாவது  சொந்தத் தொழில் செய்துகொண்டும் ஏதோ ஒரு வகையில் இன்னும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதோடு அரசு தரும் மாத ஊதியத்தை ஒரு பைசா குறையாமல் வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.  ஆனால் மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பொது மக்கள், வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமே இல்லாமல் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலப்பல சிக்கல்களைச் சந்தித்து வரும் அந்த மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்கள் வாங்கும் சம்பளம். ஆனால், அந்த மக்களின் குழந்தைகளது கல்வி குறித்து அக்கறை எதுவுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு, ‘அரசு பள்ளியைத் திறக்கவில்லை, அரசாங்கம் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்’ என்று சொல்லி அரசின் மீதே பழியைச் சுமத்தி தப்பித்துக் கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த உணர்வே இல்லாமல் கற்பித்தல் பணியையே அவமதிக்கும் இந்த ஆசிரியர்களுக்கு தங்கள் பணி குறித்த பொறுப்புணர்வும் சொரணையும் என்று வரும்? தண்டச்சோறு தின்னும் ஆசிரியர் சங்கங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும், பதவி உயர்வு, சம்பளப் பற்றாக்குறை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு போன்ற தங்களது சொந்த நலன் சார்ந்து அரசை எதிர்க்கும், போராட்டங்கள் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சமாவது கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இந்தக் கல்வியாண்டாவது பள்ளிகளைத் திறக்க எங்காவது குரல் கொடுத்தீர்களா? முதல்வரிடம் நல்ல பேர் வாங்க கொரோனா நிதியை (குழந்தைகளின் கல்விக்காக வாய் திறக்காத ஆசிரியர்களிடம் இருந்து) வசூலித்து அரசிடம் கொடுக்கத் தெரிந்த சங்கங்களுக்கு, தங்கள் வாழ்வதாரத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளது கல்வி நலன் பேணப்பட வேண்டும் என்று கொஞ்சமும் தோன்றவில்லையா?  குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லையென்றால் உங்களுக்கு வேலை ஏது? சம்பளம் ஏது?  உங்கள் சங்கங்களின் உறுப்பினராக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வகுப்பறைகளில் பயின்ற லட்சக் கணக்கான குழந்தைகள் இப்போது எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? குழந்தைத் தொழிலார்களாகப் போய்விட்டனரா?  திருமணம் செய்துகொண்டு போய்விட்டனரா? போன்ற தகவல்கள் ஏதாவது தெரியுமா? அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வர ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டீர்களா?  கொரோனா சூழல் இப்படியே நீடித்தால், அரசு உங்களுக்கு வாழ்நாள் முழுக்க தண்டச்சோறு போட்டுக்கொண்டிருக்கும் என்ற கனவில் மிதக்கிறீர்களா? இதனால் அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும்  அபாயம் உள்ளதை உணர முடியவில்லையா? இந்தச் சூழலில் மாற்று வழிகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லையா? உழைக்காமல் ஓசிச்சோறு தின்ன உங்களுக்குக் கூசவில்லையா?  கல்வி அதிகாரிகளே, நீங்கள் பூம்பூம் மாடுகளா? ஆசிரியர்களாவது கற்பித்தல் பணியைச் செய்கின்றனர். ஆனால் நமது தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை முன்னேற்றத் திட்டமிடும் இடத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியை மட்டும் சுற்றறிக்கைகளாக அனுப்பிக்கொண்டு இருப்பீர்கள்? ஆசிரியர்களை விட ஒன்றிரண்டு மடங்கு அதிக ஊதியம் பெறும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்களும் கடந்த 15 மாதமாக வேலை செய்யாமல்தானே சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லைகளில் எத்தனைக் குழந்தைகள் வேலைக்குப் போய், அவர்களின் கல்வி நாசமாகப் போய்விட்டது என்று தெரியுமா? மாநிலமெங்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை நிர்வகிக்கும் அலுவலுக்காகத்தானே அத்தனை சம்பளமும் பெறுகிறீர்கள்? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு? இன்னும் எத்தனைக் காலம் கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிக்கூடங்களை மூடி வைத்து, குழந்தைகளைக் கற்றலில் இருந்து விலக்கி வைத்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? படிக்காத குழந்தைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகம் அச்சடிப்பது எதற்காக? கமிஷன் அடிக்கவா? பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்ற எந்த விவரமும் இல்லை. இந்தச் சூழலில் மாற்று வழி குறித்து கொஞ்சமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆட்சியாளர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சொல்வதற்குத் தலையாட்டும் பூம்பூம் மாடுகளா நீங்கள்?  லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த ஆண்டு தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஆங்கில வழியில் படித்தவர்கள் அல்லவா? கல்வித் தொலைக்காட்சியில், பாடங்களைத் தமிழ் வழியில் மட்டும்தானே ஒளிபரப்புகிறீர்கள்? எனில், ஆங்கில வழியில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன? இதுகூடத் தெரியாமல்தானே அதிகாரிகளாக அமர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் கல்வித் தொலைக்காட்சி பாடத்திட்டத்தை எழுதச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புகிறீர்கள்? சம்பளம் பெறுவதற்கு உங்களுக்குப் பதிவேடுகள் வேண்டும். குழந்தைகள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? பள்ளிகள் திறந்தால் என்ன? திறக்காவிட்டால் உங்களுக்கு என்ன? 8ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது இந்த வருடம்தான் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. அது கல்வி உரிமைச் சட்டம் 2010-லிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் 9 , 10 , 11 வகுப்பு முடித்து,  கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமலும் அரசுப் பள்ளியில் சேர முடியாமலும் தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினீர்களா? இந்தப் பிரச்சினை குறித்து அரசுக்கு ஏதேனும் வழிகாட்டினீர்களா?  கொரோனா காலத்தில் எத்தனைக் குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்றும் அவர்களை எப்படி மீட்டு பள்ளிக்குள்  கொண்டுவருவது என்றும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? இந்தப் பணிகள் எல்லாம் நடக்கிறதா இல்லையா என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? எந்தப் பணியும் செய்யாமல் கல்வித் துறையின் வட்டார, ஒன்றிய, மாவட்ட, மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் எதற்காக இருக்கிறீர்கள்? அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் உறங்குகிறதா?  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படை கல்வி வாய்ப்புகள்தான். ஆனால் அது தற்போது எதிர்த்திசையில் பயணிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அவர்களே, தமிழக முதல்வர் அவர்களே, கடந்த ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே கொரோனா தாக்கம், பள்ளிகள் மூடல் என்ற நிலை இருந்ததே? அது அடுத்த வருடமும் தொடர்ந்தால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? அது கூடப் பரவாயில்லை. உழைக்கும் மக்களிடமிருந்து வாங்கும் வரிப்பணத்தில் ஆசிரியர்களை வேலையின்றி உட்கார வைத்து ஓசிச் சம்பளம் கொடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கொரானா நீடிக்கும் எனத் தெரியாத சூழலில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க வேண்டாமா? இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டாமா? சிறந்த கல்வியாளர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டாமா?  குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாமல், தங்கள் மன உணர்வுகளை, அழுத்தத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தவறான  நடத்தை மாற்றங்களுக்கும் உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இந்தக் கோணத்தில் பள்ளிக் கல்வித்துறை இப்பிரச்சினைகளை அணுகியதா? சமூகத்தைப் பல வருடங்கள் பின்னுக்கு தள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழலையே தற்போது வளர்த்து வருகிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை இழந்து தங்கள் உயிரையே இழந்து வரும் செய்திகள் கூட வருகின்றன. இணையவழிக் கல்வி பெருகி வருகிறது. இது நம் எதிர்கால சந்ததிக்கு நல்லதல்ல. பள்ளிகள் மூடல் தொடர்ந்தால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் அருகிவிடும். பள்ளிகள் வெறும் பாடம் கற்பிக்கும் இடமல்ல, குழந்தைகளின் நடத்தை மாற்றங்களைச் செதுக்கும் சிற்பக் கூடங்கள். தயவு செய்து பள்ளிகள் திறப்பில் மாற்று முறைகளைக் கையாளுங்கள்.  எங்கே போயின எதிர்க்கட்சிகள்?  பள்ளிகள் நிரந்தரமாக மூடிக் கிடக்கின்றன. குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிறது. ஆசிரியர்கள்  வேலையே செய்யாமல் ஒன்றரை ஆண்டு காலமாக

மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம்

மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம்

அன்பார்ந்த சுவடு வாசகர்களுக்கு வணக்கம். நலமே சூழ்க. இந்தக் கொடுந்தொற்றுக் காலம் தொடர்ந்து நமக்குப் பல படிப்பினைகளை வழங்கி வருகிறது. பல ஆண்டுகள் அச்சிதழாக வந்துகொண்டிருந்த நம் சுவடு இதழ் இடையில் தடைப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக் காலத்தில்தான் மின்னிதழ் வடிவில் அதனை மீட்டெடுத்தோம். மே முதல் நாள், உழைப்பாளர் தினம் முதலாக அச்சிதழாக மீண்டும் சுவடு உருமாற்றம் பெரும் என்று அறிவித்திருந்த நிலையில், அடுத்து வந்த இரண்டாம் அலை கொரோனா பரவல் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. கொரோனா முதல் அலையில் தப்பிய மக்கள் மற்றும்  நிறுவனங்களில் பெரும்பான்மை, இரண்டாம் அலையில் சிக்கிக்கொண்டார்கள். நம் சுவடு இதழும் அதற்குத் தப்பவில்லை என்றாலும், நாம் “விழ விழ எழுவோம், முன்பிலும் வலுவோடும் துணிவோடும்” என்ற ஊக்கத்துடன் இயங்கிவருவதால் இன்னொரு முறை மீண்டெழுந்துள்ளோம். இம்முறை இணைய இதழ் வடிவில் வந்து உங்கள் எண்ணங்களில் சுவடு பதிக்க உள்ளோம். இணைய இதழுக்கான சிறப்பு யாதெனில், மின்னிதழைக் காட்டிலும் வாசிக்க எளிதாக இருக்கும். அதேவேளை படைப்புகளை உடனுக்குடன் பதிவேற்றிடவும் இயலும். தினந்தோறும் நம் தளத்துக்கு வருபவர்கள் புதிய படைப்புகளையும் செய்திகளையும் வாசிக்க இயலும். அவ்வப்போது வருபவர்களுக்காக இணைப்புகளின் தொகுப்பு அனுப்பப்படும். உள்ளடக்கத்தில் எப்போதும்போல தரமான படைப்புகளே இடம்பெறும் என்றாலும் சிறுகுறை யாதெனில் புத்தக வடிவமைப்பு இருக்காது என்பது மட்டுமே. வாசகர்கள் அன்போடு அதனைப் பொறுத்தருள்க. சமூகத்தின் மேம்பாட்டுக்காக எப்போதும்போலவே முழு ஈடுபாட்டுடனும் முழு வீச்சுடனும் சுவடு குழு தொடர்ந்து பயணிக்கும், உங்கள் அனைவரின் ஆதரவோடு என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன், ஆசிரியர்

தீயிட்டுக் கொளுத்துவோம்!

ஒரு சமூகம் மேம்படுவதற்கான மிக முக்கிய அடிப்படைத் தேவைகள் கல்வியும் சுகாதாரமும். இத் தேவைகளை முழுமையாக வழங்குவதே ஒரு அரசின் கடமை. அதுவே நாட்டை முன்னேற்றும். மக்களின் ஒரு பகுதியினருக்கு இவ்விரண்டு அடிப்படைத் தேவைகளும் கிடைக்கவிடாமல் தடுத்துக்கொண்டு, அவர்களின் உழைப்பையும் வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்து, தங்களை மேல்தட்டுச் சமூகமாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கீழ்த்தரமான சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வேரூன்றி உள்ளது. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அத்தகைய பல்லாயிரம் ஆண்டுகாலப் புரட்டர்களை, தங்கள் புரட்சிகரச் சிந்தனைகளால் வீழ்த்தி, மக்களிடம் பெரும் எழுச்சியை உண்டாக்கினார்கள். பின்னாளில் தமிழ்நாட்டில்  ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும், மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளும் சமூக நீதியைச் சட்டமாக்கின. ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள சனாதனக் கும்பல், வெறும் ஆறு ஆண்டு காலத்திலேயே நூறு ஆண்டு காலத்தில் உருவான மாற்றங்களைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுக்கும் கல்வி தரவேண்டிய அரசு, தன் கடமையிலிருந்து விலகி, அடித்தட்டு மக்களுக்குக் கல்வியை எட்டாக் கனியாக மாற்றி, அதனை ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமானதாக விளங்கிய பழங்கதைக்கு மாறி வருகிறது. இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடித்தளத்தையே தகர்த்து, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்வு, என ஒற்றை முனையத்தை நோக்கி அதிகாரக் குவிப்பைத் தீவிரமாக்கி, சர்வாதிகாரத்துடன் நடந்து வருகிறது. கொரோனா காலத்தில் நாட்டை மொத்தமாக முடக்கிப் போட்டுவிட்டு, தங்கள் கையில் அதிகாரம் உள்ளது என்ற ஆணவத்தில் மாநில உரிமைகளைப் பறித்து அனைவரையும் அடிமைகளாக மாற்ற முயன்றுவருகிறது மோடி அரசு. வெளியிடப்பட்டது முதலே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்துவரும் புதிய கல்விக் கொள்கைக்கு, மத்தியா அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. முடக்கக் காலம் எப்போது முடியும், பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாத சூழலில், புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிப்பது என்பது, சனாதனக் கொள்கைகளை கொல்லைப்புற வழியே திணிக்கும் திருட்டுத்தனமாகும். மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மொத்தக் கல்வித் துறையையும் கண்காணிக்கும் ஒற்றை தேசியக் கல்வி ஆணையம், இந்தி சமஸ்கிருத சனாதனத் திணிப்பு, ஒரே பொதுத் தேர்வு, ஒரே நுழைவுத் தேர்வு, பள்ளிகள் ஒருங்கிணைப்பு, குலக்கல்வி முறை என அடித்தட்டு மக்களின் கல்வி உரிமைக்கும் சமூக நீதிக்கும் வேட்டு வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முழுமையாகப் புறக்கணித்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வரும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். ஒரு நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால்தான் சுகாதாரம் பேணப்படும். இதை உணர்ந்தே, வளர்ந்த நாடுகள் பலவும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழில்கள் அனைத்தையும் வளரும் நாடுகளின் மீது திணிக்கின்றன. அவ்வகையில், மைய அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுத் திருத்த அறிவிப்பு நாட்டிற்கும் இயற்கைக்கும் மோடி அரசு விளைவிக்கத் துணிந்துள்ள பெருங்கேடு ஆகும். நாட்டின் பன்முகத் தன்மைக்கும், சமூக நீதிக்கும் வேட்டு வைக்கும் புதிய கல்விக் கொள்கையும், இயற்கையின் கருவறையையே சிதைக்க முனையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுத் திருத்தமும் தீயிலிட்டுக் கொளுத்தப்பட வேண்டியவை. எந்தப் போராட்டத்துக்கும் வழி இல்லாத இச்சூழலில், நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் திட்டங்களை இந்தக் கோழை அரசு எதிர்ப்பின்றி நிறைவேற்றிவிடத் துடிக்கிறது. பொதுமக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், மோடி ஆட்சியின் பலனாக நாம் ஒருசில நூற்றாண்டுகள் பின்னோக்கி வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

சமூக விரோதிகளின் கூடாரமா சாத்தான்குளம் காவல்நிலையம்?

சமூக விரோதிகளின் கூடாரமா சாத்தான்குளம் காவல்நிலையம்?

சாத்தான்குளம் படுகொலைச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மட்டுமல்லாது ஐ.நா. அமைப்பும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. வேலியே பயிரை மேய்வதுபோல, மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவலர்களே மக்களின் உயிரைப் பறிக்கும் கொலைகாரர்களாக மாறியிருக்கிறார்கள்.  இந்தப் படுகொலைகளை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேரடி விசாரணைக்குச் சென்ற நீதிபதியையே சாத்தான்குளம் காவல்நிலையக் காவலர்கள் மிரட்டி இருக்கிறார்கள். விசாரணைக்குச் சென்றபோது தன்னை அவமதிக்கும் விதமாகக் காவல்துறையினர் நடந்துகொண்டதாகவும், தங்கள் உடல் பலத்தைக் காட்டும்விதமாகவே அவர்களின் நடவடிக்கைகள் இருந்ததாகவும், காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே மகாராஜன் என்ற காவலர் தன்னைப் பார்த்து “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என்று மிரட்டியதாகவும் விசாரணை நீதிபதி பாரதிதாசன் உயர்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல்  அனுப்பியுள்ளார். மேலும், “ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடியத் தாக்கப் பட்டுள்ளார்கள் என்பதை நேரடி சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் மாஜிஸ்திரேட் உறுதி செய்துள்ளார். லத்தியைக் கேட்டபோது ஒரு காவலர் தப்பி ஓடியதாகவும் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் ஒருநாள் மட்டுமே இருக்கும் வகையில் செட்டிங் செய்துள்ளதால், அன்றையதினம் காவல்நிலையத்தில் நடந்த அனைத்து வீடியோ பதிவுகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் நீதிபதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். சாட்சியம் அளித்த பெண் காவலர் ஒருவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஒரு சாதாரண காவலர், மாவட்ட நீதிபதியையே மிரட்டும் அளவிற்குக் கொடூரமானவராக இருக்கிறார் என்றால், அந்தக் காவல் நிலையத்தில்  பொதுமக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள்? வீடியோ பதிவுகள் அனைத்தையும் அழியும்படி செட்டிங் வைத்திருக்கிறார்கள் என்றால், எத்தனை பேர் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி யிருப்பார்கள்? இப்படியான கொடுஞ்செயல்கள் காவல் நிலையத்தில் அரங்கேறுவது உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் கொலைக்குக் காரணமான காவல்துறைக் கொலைகாரர்களைத் தற்காலிகப் பணிநீக்கம்கூடச் செய்யாமல், இதுவரை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாமல் அவர்களைப் பாதுகாத்துவரும் தமிழக அரசு, தற்போது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்து நாடகமாடுகிறது. இந்தக் கொலைகளுக்கு சாத்தான்குளம் காவலர்கள் மட்டும் பொறுப்பல்ல. அவர்களின் உயரதிகாரிகள், இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், கோவில்பட்டி கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருமே இந்தக் கொலைகளில் கூட்டுக் குற்றவாளிகள்தான். அவர்கள் அனைவரையுமே பணியிலிருந்து நீக்கம் செய்து, வழக்கை முறையாக விசாரித்து தண்டனை வழங்கவேண்டும். சி.பி.ஐ. வழக்கு விசாரணையைத் துவங்கும்வரை இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். யார் இந்த வழக்கை விசாரித்தாலும், விசாரணையானது நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். சாட்சியம் அளிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு வழங்கும் காவலர்கள், நேர்மையாகப் பணியாற்றுபவர்களாக இருப்பது மிக அவசியம். இல்லையேல், பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை வைத்தே சாட்சிகளைக் கொலை செய்யவும் இந்தக் கொடூரர்கள் தயங்கமாட்டார்கள். மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அரசு என்பது மக்களுக்கானது. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, இனியும் கொலைகாரர்களைப் பாதுகாக்க முயலாமல், மக்களைப் பாதுகாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபடுவதோடு, காக்கி உடைக்குள் ஒளிந்திருக்கும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு களையெடுக்கவும் வேண்டும். மேலும் காவல்துறையில் உரிய சீர்திருத்தம் மேற்கொண்டு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்களோடு இணைந்த ஒரு குழு ஒவ்வொரு காவல்நிலையத்திலும் அமைக்க்கப்பட வேண்டும்.  காவலர்கள் உண்மையிலேயே மக்களின் காவல்காரர்கள்தான் என்ற நிலையை உருவாக்கி, இனி ஒரு உயிரும் அதிகார வெறிக்குப் பலியாகாது என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் கொலைக்கு வழங்கப்படும் நீதியாக இருக்கமுடியும்

இன்னும் எத்தனை லாக் டவுனோ!

இன்னும் எத்தனை லாக் டவுனோ!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் கடந்த மூன்று மாதங்களைக் காட்டிலும் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் சமூகப்பரவல் இல்லை என்ற அதே பழைய பல்லவியை அரசு இன்னமும் பாடிக் கொண்டுள்ளது. பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை, ஆவடி ஐ.சி.எஃப். மருத்துவ மனைகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் அரசின் பட்டியலில் வராதது, சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் அரசின் செயல்பாட்டில் உள்ள குளறுபடி களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தற்போது சென்னை மற்றும் சுற்றுபுற மாவட்டங்களுக்கு மீண்டும் ஒரு பொது முடக்கத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். கூடவே இம்மாவட்டங்களைச் சேர்ந்த அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையும் அறிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை மட்டுமே எதிர் வரிசையில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து குறைகூறி வருகின் றன. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை களால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்க்கைத் தரமும் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது என்றாலும், மக்களின் ஒட்டுமொத்தப் பொருளாதார இழப்பையும் ஈடுகட்டும் நிலையில் அரசு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை மக்கள் முறையாகப் பின்பற்றியிருந்தால் தற்போது இத்தனை பெரிய பரவல் நிகழாமல் தடுத்திருக்க முடியும். கோயம்பேடு காய்கறிச் சந்தையை அரசு முதல் கட்டத்திலேயே மூடியிருக்க வேண்டும். போலவே அதிகப் பரவல் நிகழும் மண்டலங்களில் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி, பரிசோதனைகளை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். நாம் எவ்வளவுதான் அரசின்மீது குறைப்படுக்கொண்டாலும் நோய் வந்தால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள் மட்டுமே. எனவே அன்றாட வாழ்வில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், இனியாவது மக்கள் மிக மிக அவசியமின்றி வெளியே நடமாடுவதைக் குறைத்துக்கொண்டு, பொது முடக்கத்தை முழுமையாகப் பின்பற்றினா லன்றி பரவலைத் தடுக்க இயலாது. ஏற்கனவே சென்னையில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 400ஐத் தொட்டுவிட்ட நிலையில், முகக் கவசம் அணிவதிலும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பதிலும்கூட மக்கள் அலட்சியம் காட்டுவது வேதனை தருகிறது. சமூகமும் நாமும் வேறு வேறல்ல என்பதை உணர்ந்து, நம் குடும்பத்தினரையும் நம்மோடு வாழும் மக்களையும் இழந்து விடாமல் இருக்க, நாம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால் மீண்டுவிடலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது நம்மிடம் உள்ள ஒரே வழி, நம்மை நாமே காத்துக்கொள்வது மட்டுமே!

சுவடு கடந்து வந்த பாதை

சுவடு கடந்து வந்த பாதை

2007 சனவரியில் ‘சுவடு’ மாத இதழ் வெளிவந்தது. ஒரு தாய் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பிரசவிக்கும்போது ஏற்படும் வலியையும் துன்பத்தையும் எப்படிப் பொறுத்துக்கொண்டு பெற்றெடுக்கிறாளோ, அப்படியே ‘சுவடு’வும் மாத இதழாகப் பிரசவமானது. ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க ஏகாதிபத்திய அரசால் தூக்கிட்டுக் கொல்லப் பட்டபோது… மனித இனமே அழுதது; அந்த ஒளிப்பட அட்டையுடன் 2007 சனவரியில் சுவடு வெளிவந்த நினைவு உள்ளத்தில் அழியாச்சுவடாகப் பதிந்துள்ளது. 2007 சனவரி முதல் 2012 டிசம்பர் வரை தொடர்ந்து பல்வேறு இன்னல்களைச் சந்தித்து ‘சுவடு’ ஒவ்வொரு மாதமும் வெளிவந்தாலும் நினைத்த இலக்கை அடையாமல் முடிவாகிப் போனது! மீண்டும் மின்னிதழாக இம்மாதம் ஜூனில் நண்பர்கள் பவா சமத்துவன், மணியன் கலியமூர்த்தி, நல்லு இரா.லிங்கம், தமிழன் இளங்கோ, எம்.செய்யது முகம்மது ஆஸாத் ஆகியோருடைய உதவியால் உங்கள் கரங்களில் சுவடு தவழ்வதுகண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  மானுடத்தின் பாதையில் சுவடு தொடர்ந்து தடம் பதிக்கும். உங்கள் ஆதரவோடு! நன்றியுடன், சா. அஹமது மன்சூர்