ஷாம் சிங்கா ராய்

ஷாம் சிங்கா ராய்

திரை விமர்சனம் சமீப காலங்களில் திரையுலகம் சமூக இழிவுகளை, மனித அவலங்களைத் துணிச்சலுடன் திரும்பிப் பார்க்க விழைந்துள்ளதும் சராசரி ரசிகர்களையும் அக்கறையுடன் அவற்றைக் கவனிக்கச் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது, பாராட்டவும் தக்கது. அந்த வகையில், ஜங்கா சத்யதேவ் கதைக்கு, ராகுல் சாங்கிருத்தியன் அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உடன் இரட்டைவேடங்களில் நானி  நாயகனாக நடித்து, தெலுங்கில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘ஷாம் சிங்கா ராய்’. தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு. அறிமுக இயக்குனர் வாசுதேவ் கந்தா (நானி) மீது கதைத் திருட்டு வழக்காகத் துவங்கி, அந்தக் குற்றச்சாட்டை அறவே மறுக்கும் அவன், அதிலிருந்து மீண்டு வர  மேற்கொள்ளும் முயற்சிகளாக விரிந்து, எதிர்பாராத முடிவாக முடிவது, அவனுக்கு மட்டுமல்ல; ரசிகர்களுக்கும் கூடத்தான். “நாங்க கேணிகிட்ட போ கூடாதுங்கய்யா” – “அப்படின்னு கேணி சொல்லுச்சா? உன் குடம் நிறையனும்னா உடனே மழை வரணும்; இல்லன்னா உனக்குள்ள தைரியம் வரணும்”,  “அவங்கள்லாம் தாழ்த்தப்பட்டவங்க” – “அதுக்காக தாகமும் தாழ்ந்து போயிடுமா? அவன் தீண்டத்தகாதவன்னா, அவன் நடந்து போற பாதையில நீங்க ஏன் நடந்து போறீங்க? அவன்  சுவாசிச்சு விடற காத்த நீங்க ஏன் சுவாசிக்கிறீங்க? நிறுத்திக்க வேண்டியதானே? காற்றுக்கும் நீருக்கும் நிலத்துக்கும் காப்பாற்றுகிற குணம் இருக்குமே தவிர, காவு வாங்கற குணம் இருக்காது. இது குலத்தோட காலைப்பிடித்துத் தொங்கிட்டு இருக்கறதுக்கு ரிக்வேதம் காலம் கிடையாது, சுதந்திர பாரதம்”, “இப்போ இந்தக் கேணியும் தாழ்த்தப்பட்டதுதான், அவனுக்கே சொந்தம். தாகம் இருக்கிறவங்க மொண்டு குடிங்க, சாதி இருக்குங்கிறவன் நாவறண்டு சாவுங்க. அவன் குடிசையை எரிக்கப் போனீன்னா, உன் வீடு எங்கிருக்குன்னு ஷாம் சிங்கா ராய்க்கு நல்லாத் தெரியும்” “மனுஷன மனுஷனா பார்க்காதவன் ஊரா இருந்தா என்ன, வீடா இருந்தா என்ன, என்னால இருக்க முடியாது”, ” சமுதாயத்தை மாத்தற சக்தி எழுத்தாளனுக்கு மட்டும்தான் உண்டு, நான் போகணும், நான் எழுதணும்”, “பண்டிகை ஒவ்வொரு வருஷமும் வரும், என் காலம் போனால் திரும்பி வராது” போன்ற அர்த்தபூர்வமான காட்சிகளும் வசனங்களும் அசத்தல். “இந்த உலகத்ல ஒவ்வொரு வேலையையும் ரெண்டு விதமா செய்யலாம். ஒண்ணு பயத்தோட, இன்னொன்னு காதலோட”,  “தெய்வத்தின் துரோகத்தால் தேகமெங்கும் முள்ளாகி, மனமெல்லாம் தெய்வீகம் நிரம்பிய ரோஜாமலர்”, “பெண் யாருக்கும் தாசி இல்லை; தனக்குத் தாசி வேணும்னு  நெனக்கிறவன் கடவுளே கிடையாது”, “ஆத்ம அபிமானத்தவிட, எந்த ஆகமும் தப்பு கிடையாது. தப்புன்னு தெரிஞ்சா கடவுளே ஆனாலும் எதிர்க்கறதுல தப்பே கெடையாது. பயந்தவங்கதான் கர்மா சித்தாந்தம் பேசுவாங்க”, “எம்.எஸ். சுப்புலட்சுமி பேரை கேள்விபட்டிருக்கியா, ஒரு காலத்தில் தேவதாசி, இப்ப பத்மபூஷன் அவார்டு வாங்கி இருக்காங்க. பரதநாட்டியத்தில் பாரத தேசத்தில் மிகப் பெரிய டான்சர் பாலசரஸ்வதி, தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்”,“பெண் யாருக்கும் தாசி அல்ல; அந்தக் கடவுளுக்கும் கூட” எந்த ஒரு சமூகத்திலே தன் பசியைப் போக்கிக்கறதுக்கு ஒரு பெண் மேலேயும் கீழேயும் இருக்கற அவயங்கள விற்கிறாளோ, அந்தச் சமூகத்தில இருக்கிற ஆம்பளைங்க, ஆம்பளைங்களே கிடையாது, பெண்கள் விற்பனைப் பொருள்கள் அல்ல” இப்படி மனதை வருடும், சிந்தையில் அறையும் வசனங்கள் படமெங்கும். காளி கோவிலில் உள்ள தேவதாசிகளில் தினமொருவளை சுகித்து வரும் தலைமை அர்ச்சகர் மஹந்தாவிடம், “யார் வேணா தொட்டுப் பார்க்கறதுக்கு நாங்க கோயில்ல உள்ள தூண்கள் கெடயாது, மானமுள்ள மனுஷிங்க. எங்க மேல யாருக்கும் உரிமை கெடயாது, அந்த தெய்வத்துக்கும் கூட” என்று ரோஸி சொல்ல, “நீ கடவுளுக்குத் தாசி கிடையாது; எனக்குதான் தாசி” என்று சொல்லி, ரோஸியைப் பல பெண்களுக்கு மத்தியில் கடுமையாகத் தாக்கி, மனுசாஸ்திரம் பாதுகாப்பில் பூணூலைக் காதிலே சுற்றி, அவள்மீது சிறுநீர் கழித்து அவமதித்த மகாதேவ் மஹந்தாவின் ஆணுறுப்பை, காளி சிலை கையில் இருந்த அரிவாளைக் கொண்டு அறுத்தெறிந்து, அவனை நெருப்புச் சட்டியில் ஷாம் சிங்கா ராய் எறியும் காட்சி புல்லரிக்கச் செய்கிறது. வித்தியாசமான உருவ அமைப்பில்,  உடல் மொழியில், இருவேடங்களில் நானியும், வயது வித்தியாசங்களில் சாய்பல்லவியும், பக்குவப்பட்ட சிறப்புக்குரிய நடிப்பை வழங்கியுள்ளது அருமை. இருவருக்குமே திரை வாழ்க்கையில் இப்படம், குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமையலாம். க்ருத்தி ஷெட்டி (காதலி கீர்த்தி), மடோனா செபாஸ்டியன் (லாயர் பத்மாவதி), நண்பன் பிரமோத் (அபிநவ் கோமடம்), உளவியல் நிபுணர் (லீலா சாம்சன்), ஜிசு சென்குப்தா (தேபேந்திர சிங்கா ராய்), ராகுல் ரவீந்திரன் (மனோஜ் சிங்கா ராய்), முரளி சர்மா (அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி), மனீஷ் வத்வா (மகாதேவ் மஹந்த்), சுபலேகா சுதாகர் (நீதிபதி) ஆகிய கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே செய்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, சாய் பல்லவி நடனக் காட்சிகள், நானியின் சண்டைக் காட்சிகள்,  பரந்த கங்கை நீர் நிலை, கொல்கத்தா காளிகாட் (செட்) நகரம். மிக்கி ஜே மேயரின் பின்னி எடுக்கும் பின்னணி இசையும், ஈர்க்கும் பாடல்களும் சிறப்பு. பழுதில்லாத படத்தொகுப்பு, நவீன் நூலி. கதைத் திருட்டு புகாரின்பேரில் கைது செய்வது எல்லாம், சற்று அதீதம். அறிவியல் ரீதியான பாலி கிராப் முறையை ஏற்கும் சாட்சிகள் சட்டம், அதே ரீதியிலான உளவியல் நிபுணரின் ஹிப்னாஸிஸ் அறிக்கையை ஏற்காதது, வினோதம். ரோஸி குழந்தை பெற வாய்ப்பில்லை என  போகிற போக்கில் மருத்துவர் சொல்வதுபோல் சொல்வது, தெளிவில்லை. மறு ஜென்மத்திற்கு அறிவியல் ரீதியான சாட்சி இல்லை என்கிற வாதத்தை மறுப்பதற்கு, விஷ்ணு மறு ஜென்மத்தில் ராமராக வந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ( ! )  மேற்கோள்காட்டி நிறுவ முற்படுவது, அபத்தமானது; கதைக் கருவுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கக் கூடியது. நல்லவேளை, இந்த நீதிமன்றம் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்காதது! திரை உத்திக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்ட, படத்தில் அறிவியலுக்குப் புறம்பான சிலவற்றை, சினிமா லாஜிக்,  லிபர்டி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப,  ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதாகவோ இருந்தாலும் அதையும் தாண்டி புரிய வேண்டியவர்களுக்கு, அவரவர்களுக்குப் புரிகிற மொழியில், உத்தியில் கதைக்கருவும் வசன – காட்சி அமைப்புகளால் அதனை அழுத்தம் திருத்தமாக மனதில் உறைக்கும்படியும் பதியும்படியும் கட்டமைத்தும் வழங்கப்பட்டிருப்பதில் இயக்குனரின் திறமையையும் நேர்த்தியையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

பண்டிகைக்காரி

பண்டிகைக்காரி

சின்னதாய்ச் சிங்காரித்துச்சின்னக்கண்ணில் மையிட்டுபுருவமிரண்டின் மத்தியிலேவண்ணக் குப்பிப் பொட்டுமிட்டேன்!உச்சி வகிடின் நடுவினிலேநெற்றிச்சுட்டி ஆடவிட்டேன்! மணிக்கட்டு அது நோகாது `சிறு வளையல்கள் பூட்டிவிட்டேன்,வீடெங்கும் நீ இசை நிரப்பகால்சலங்கைக் கட்டிவிட்டேன்! வண்ணமணி மேகலையும்தொங்கும் மணிஆரமும்அதன் இடங்கள் சேர்த்துவிட்டேன்!கூண்டுகிளிப் பொருத்தியகாதணியும் தொங்கவிட்டேன்! முல்லைப்பூக் கரங்களுக்குமருதாணி நிலாக்கள் வைத்தேன்!மல்லிப்பூ வாசனை நுகர்ந்துஅம்மா… இது வேண்டுமென்றாய்!அழகாய்ச் சரமொன்று கட்டிபின்னலிலே சூட்டிவிட்டேன்! அத்தனையும் முடித்துபாவாடை நுனிபிடித்து,பாட்டொன்றுப் பாடிபாங்காய் உன் தலைசாய்த்துகேட்டாய்…!“அம்மா, நல்லா இருக்குல்ல…”இதோ வந்துவிட்டது மகளேநம்வீட்டில் பண்டிகை நாள்! ஊரெங்கும் பொங்கலோநாடெங்கும் தீபாவளியோநீதானே என் பண்டிகைநீதானே என் திருவிழா அம்மா நான் உன்னை அலங்கரித்துகவியொன்றும் பாடிவைத்தேன்மகளே நீ என் தமிழ்ச்சாமி!

சண்டிகர் கரே ஆஷிகி

சண்டிகர் கரே ஆஷிகி

திரைவிமர்சனம் எத்தனையோ வாதப் பிரதி வாதங்களையும் தாண்டி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நாடாளுமன்றம் இயற்றிய சட்ட அங்கீகாரத்தின்படி, இந்நிகழ்வு இன்றைய நிலையில் இயல்பான ஒன்று என்றாலும், அத்தனை சுலபமாக இல்லாமல், நடைமுறையில் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள், வலிகளின் நேர்த்தியான திரை வடிவம்தான், சுப்திக் சென், துஷார் பரஞ்சிபே எழுதி, அபிஷேக் கபூர் இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஹிந்தியில் வெளியாகியுள்ள ‘சண்டிகார் கரே  ஆஷிகி’. பாடி பில்டர் மனு முஞ்சள் (ஆயுஷ்மான் குரானா) சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறான். அதன் ஒரு பகுதியில், ஜும்பா நடனப் பயிற்சி தரும் ஆசிரியை மான்வி (வாணி கபூர்) இடையே மலர்ந்து பயணிக்கும் காதல், திருமணத்தை எட்டும் நிலையில், அவள் சொல்லும் ‘அந்த’ உண்மையை அவன் சகித்துக் கொள்ள முடியாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனைகிறான். தனது நேர்மையை உணராமல் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதையும், யாதொரு தவறும் செய்யாத நிலையில், சுயமரியாதை  காயப்படுத்தப்பட்டதையும் ஜீரணிக்க முடியாது தவித்துப் போகிறாள் மான்வி. இந்நிலையில், இவர்களிடையேயான பிரச்சனை எவ்விதம் தீருகிறதென்பதே சண்டிகார் கரே  ஆஷிகி படத்தின் மீதிக் கதை. புரிந்து கொள்ளாமல் மனு கிளம்பும்போது,  உடைந்து போவதில் ஆகட்டும், ஒரு சிறு கீரலுக்குக் குழந்தை போல அழுததைச் சுட்டிக்காட்டி, எத்தனை வெட்டு, ரண வலிகளை தான் தாங்கியதைச் சொல்லி, “இனி இதைவிட என்னைக் காயப்படுத்த ஏதுமில்லை, அப்படியான வலி ஏதாவது உனக்கு இருந்தா காட்டு” என்று சவாலாகச் சொல்வதில் ஆகட்டும், அப்பா, மகன் என்று குறிப்பிடும்போது, உடன் ‘மகள்’ என்று திருத்துவதில் ஆகட்டும், ஜிம்மை விட்டு நின்று விடும்படி கோரும் அப்பாவிடம், “என்னோட ஸ்கூல், என்னோட வீடு, என்னோட ஊர விட்டுட்டேன். இப்போ ஜிம்மையும் விட்டுட்டு எங்க ஓடுவேன்? நான் நான்தான். நானா இருக்கிற  எனக்கு எந்த அவமானமும் கிடையாது” என்று ஸ்திரமாக சொல்வதில் ஆகட்டும், “என்னோட கௌரவத்தை என்னால பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று சொல்வதில் ஆகட்டும் மான்வி பாத்திரத்தில் வாணி கபூர், அதேபோல, அவளின் நிலையை, அவளுடனான உறவை ஏற்றுக்கொள்வதிலான தயக்கத்தால், தேய்த்துத் தேய்த்துக் குளிப்பதில் ஆகட்டும், தனது நண்பர்களுடன் அவற்றைப் பகிர்ந்து தவறு இழைத்ததாகத் தடுமாறிப் புலம்புவதில் ஆகட்டும், அதே சந்தர்ப்பத்தில் அவர்கள் அவளை இழிவாகக் குறிப்பிடுவதை ஏற்காமல் சண்டையிடுவதில் ஆகட்டும், மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு தெளிவு பெறுவதில் ஆகட்டும் மனு முஞ்சள் பாத்திரத்தில் ஆயுஷ்மான் குரானா என இருவருமே ஏற்ற பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தத்தம் நடிப்பின் பன்முகத் தன்மையை வெளிக்காட்டியுள்ளது சிறப்பு. மான்வியின் தந்தை மொஹிந்தர் (கன்வல்ஜித் சிங்), மனுவின் நண்பர்கள் (கௌரவ் சர்மா, கௌதம் சர்மா), மனுவின் அப்பா நவீன் (கிரிஷ் தாமிஜா), மனுவின் சகோதரிகள் (தான்யா அப்ரால், சாவன் ரூபாவாலி) ஆகிய கலைஞர்களும் சிறப்பாகவே பங்களிப்பைச் செய்துள்ளனர். ஒளிப்பதிவும் (மனோஜ் லோபோ) அருமை.  மாண்டேஜ் வகைப் பாடல்கள் இனிமை. இசை, சச்சின்-ஜிகர். சந்திரன் அரோரா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் படத்தில், முதல் நாற்பதாவது நிமிடத்திலேயே ‘அந்த’ உண்மையைப் போட்டுடைத்தும், படத்தின் இறுதிவரை இக்கதைக் கருவில் ரசிகர்களை அக்கறைப்படுத்தி,  ஈடுபாட்டுடன் கொண்டு செல்லும் இயக்குனர் அபிஷேக் கபூரின் துணிச்சலான திறமை பாராட்டுக்குரியது. மதிப்பெண்:7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)

கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)

திரை விமர்சனம் ஒரு வாரத்தில் மதுரையில்  மாண்டி என்கிற மந்தாகினியுடன், வெங்கடேஷ் விஸ்வநாத் ஐயர் என்கிற விஷுவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பீகாரில் ரிங்கு சூரியவன்ஷியுடன் திருமணம் நடந்தேறிட, அதை இருவருமே விரும்பாத நிலையில், அவர்களது வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கொஞ்சம் லாஜிக் தவிர்த்தும் கூறும் ஹிந்திப்  படம்தான், ஹிமன்ஷு ஷர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆனந்த் எல்.ராய் இயக்கி, தமிழ்  மொழி மாற்றத்தில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள ‘அத்ராங்கி ரே’, தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’. “இந்த வாயாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கேன், இல்லேன்னா என்னை எப்பவோ வெட்டி இந்த அடுப்புல போட்டுப் பொசுக்கி இருப்பீங்க, என்னை என்ன கோயில் பிரசாதம்னு நினைச்சியா? கையை நீட்றவனுக்கெல்லாம் தூக்கி கொடுக்கறதுக்கு, இதென்ன கருமம் பிடிச்ச லவ்வு? லவ்வுன்னா நாலஞ்சி தலைங்க உருளனும், ரெண்டு வீட்டுக்காரர்களும் அடிச்சுக்கணும், ஊர்ல பேரு கெடணும், ரெண்டு குடும்பமும் பத்திக்கிட்டு எரியணும். இதெல்லாம் இல்லேன்னா பீகார்ல அது அரேஞ்ச்ட் மேரேஜ் தான்”  ரிங்கு பேசும் இத்தகு வசனங்களிலிருந்து பீகாரின் சமூக நிலையைத் தெளிவாகப் புரிந்து  கொள்ளலாம். ரொமான்டிக் காமெடி வகையான இப்படத்தில், அக்ஷய் குமார் (சஜ்ஜாத் அலி கான்), சாரா அலி கான் (ரிங்கு), தனுஷ் (விசு) போன்றோரின் பண்பட்ட நடிப்பால், அழகான அழுத்தமான பங்களிப்பை வழங்கி, இரண்டே கால் மணி நேரம் போவதே தெரியாமல், ரசிகர்களைப் படத்தோடு லயித்துப் போகச் செய்து விடுகின்றனர். சாரா அலி கானின் மனப்போராட்டம், வெகுளித்தனம், காதல் வயப்படுதல் என, அசத்தலான நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதேபோன்று, நிச்சயதார்த்தத்தின்போது திருமணம் நின்ற பின்பு, முதன்முதலாக ரிங்குவிடம் தனது காதலை தனுஷ் வெளிப்படுத்துவதும் அருமை. சாரா அலி கான் – அக்ஷய் குமார் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பானவை. “டெல்லி… கொஞ்சம் மூச்சுதான் விட முடியல, மத்தபடி நல்லா இருக்கு” ஆட்டோவுக்கு வெளியே தலை நீட்டிச் சொல்லும் ரிங்கு, “விஷு சார், இந்த உலகத்லேயே நான் ஒரே பொண்டாட்டின்னு நெனைக்கிறேன், சொந்தப் புருஷனோட எங்கேஜ்மெண்ட்ல இவ்வளவு குஷியா இருக்கேன்”, விஷுவிடம் ரிங்கு, “இவன் பாடு ரொம்பக் கஷ்டம்ப்பா, ஒரு மொபைலில் ரெண்டு சிம் போடப் பாக்கறான்”, எம்.எஸ்.  சஜ்ஜாத் கொண்டு வரும் ஆட்டைக் கட்டி, மது பால் கறக்கும் பரிதாபம், ஆக்ராவில் தாஜ்மகாலை மறைய வைக்க முயன்று,  முடியாத தோல்வியை ரிங்கு உணரும் சோகம், தொடர்ந்து விஷுவை அவள் உணர்ந்து கொள்ளல் போன்றவை, பசுமையாக நினைவில் நிற்கும் காட்சிகள். துணைப் பாத்திரங்களான, ஆஷிஷ் வெர்மா (எம்எஸ்), டிம்பிள் ஹயாதி (மாண்டி), சீமா பிஸ்வாஸ் (துல்ஹயன்), நித்யா ரவீந்திரன் (விசுவின் அம்மா), ஜி மாரிமுத்து (மாண்டியின் அப்பா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பில் நிறைவைத் தருகின்றனர். படத்தின் இன்னுமொரு சிறப்பு, இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் துள்ளலான பாடல் இசையும் அருமையான பின்னணி இசையும்தான். மதன் கார்க்கி, யுகபாரதி, கபிலன், தனுஷ், ரோகிணி, விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களும், மனோ, ஹரிசரன் சேஷாத்ரி, ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர். ரகுமான், கே.எஸ்.சித்ரா, தனுஷ்  குரல் இனிமையால், பன்முக உணர்வுகளில் மூழ்கடித்து விடுகின்றன, பாடல்கள் அனைத்தும். பங்கஜ் குமாரின் காமிரா, பீகார் சிவன் ஜங்ஷன், டெல்லி, ஆக்ரா, செட்டிநாடு வெளிப்புறம் உள்புறமுமாகவும், பகலும் இரவுமாகவும் சுழன்று சுழன்று கண்களைக் கவர்ந்து விடுகிறது. ஹிமல் கோத்தாரியின் படத்தொகுப்பும் நிறைவைத் தருகிறது. சுவைக்காகவும் சுலபத்திற்காகவும் அமானுஷ்யம், பேய் பிசாசு என்று பூ சுற்றி விடாமல், உளவியலை  (பாராகசம்) முன்வைத்து, தெளிவான ஒரு கதையை அழகான பொழுதுபோக்குச் சித்திரமாக்கித் தந்திருக்கும் இயக்குனரின் நேர்மை பாராட்டுக்குரியது. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்