இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

நேற்றைய பதிவின் தொடர்ச்சி. முந்தைய பதிவை வாசிக்க https://hexamedia.in/p-2023-0619-01/ 2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவொரு ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருக்கும் சட்டங்களிலேயே மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது. புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன? இந்தச் சட்டங்கள் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாஜக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஆண்டொன்றுக்கு  13 ஊபா வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு  34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான ஊபா வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித் திட்டம் தீட்டுவதற்கான பிரிவு 18 பயன்படுத்தப்படுகிறது.  என்.ஐ.ஏ.வால் புலனாய்வு செய்யப்படும் 357 ஊபா வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18  பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றிலெல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை;  சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஊபா வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது மூன்றிலிருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே ஊபாவின் குறி. ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி ஊபா வழக்குகளில் சிறைப்பட்டோரில் 2018இல் 16.32%, 2019இல் 32.08%, 2020இல் 16.88%  பேர் மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர். ஊபா வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57 (2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் ஊபாவில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே. மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கடந்த  2022 அக்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும். ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால், ’குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வழக்கமான சட்ட நடைமுறைக்கு முரணாக, ‘மெய்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல’ என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது ஊபா.  ஊபா சொல்லும் ‘அதிருப்தி’ என்றால் என்ன? இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை அரசுக்கு வழங்குகிறது. அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய நபர்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது. இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ அல்லது தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ அல்லது இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம். யாரைத்தான் விட்டுவைத்தது ஊபா? மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கில், கனிம வளங்களைக் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு எதிராக, பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணை நின்றவர்கள்,  தலித் மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டனர். நாடறிந்த மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்கள்,  கலைஞர்கள்,  பேராசிரியர்கள், அருட்தந்தை ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது. பீமா கோரேகான் வழக்கில் மூன்று முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புதிய புதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்லச் சதி செய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருன்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித், சர்ஜீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா ஜார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்பால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா உள்ளிட்ட மாணவர்கள் ஊபாவின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர். ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராஜ்தீப் சர்தேசாயும் வினோத் கே ஜோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைத் திறனாய்வு செய்ததற்காக அரச துரோகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத் ஜாக்ரா, பீர்சாடா ஆசிக் ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்மீது ஊபாவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக் கப்பான்மீது உத்தரபிரதேச அரசு ஊபா பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது. பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின்போது அவர்கள் மீது ஊபாவின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு. அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்களும் தனியார் சுரங்க நிறுவனங்களும் சட்ட விரோதச் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள் மற்றும் பிற பழங்குடிகளை  இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். ஜார்க்கண்டின் மஸ்தூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இஸ்லாமியர் என்றால் ஊபா பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இஸ்லாமிய இளைஞர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றமற்றவர் என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்காக வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் ஊபா பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தெலங்கானாவைச் சேர்ந்த  9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் என ஊபா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களைச் சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இஸ்லாமியர்கள் ஒருபக்கம். இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொரு பக்கம். இந்துத்துவத்தின் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்சல்பாரி அமைப்பினர்,  உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஊபா கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19  வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஊபா சட்டம் அமைந்துள்ளது. மேலும் ஊபா சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும்  அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14, வாழ்வுரிமையையும் ஆள்வகைச் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும். பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ. 2008இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லை கடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப்போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது. தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறு செய்யக்கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் என்.ஐ.ஏ. நிறுவப்பட்டது. அதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதை, ஒன்றிய ’காவல்துறை’க்கு மாற்றிவிட வழிவகுக்கும் சட்டம் இது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு என்.ஐ.ஏ. என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. என்.ஐ.ஏ. சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் ஊபா சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள்,  வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட என்.ஐ.ஏ. சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டுவரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும்  சொல்லப்படவில்லை. இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை என்.ஐ.ஏ. எடுத்துக்கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது. இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு என்.ஐ.ஏ.வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை  நடத்திய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சலைன்  2015 ஜூன் 25 அன்று தெரிவித்தார். இவ்வாறாக, ஊபா சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மக்கள் அமைப்பாகத் திரள்வதையும் தடுக்கிறது. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தங்களைக் குற்றமற்றவர்கள் என உறுதிப்படுத்த வேண்டும் என்பது எவர்மீதும் பொய்யான குற்றச்சாட்டைப் பதிவு செய்து, அவர்களை முற்றாக முடக்கிச் சிறையில் அடைத்துவிட வழிவகை செய்கிறது. என்.ஐ.ஏ. அமைப்பானது ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் துணை போவதாகவும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. இந்தச் சூழலில், முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இவ்விரண்டுக்கு எதிராகவும் இவற்றை முற்றாக அகற்றவும் குரல் எழுப்புவதும் செயல்படுவதும் தற்போதைய முக்கியத் தேவையாகும்.

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act) எனப்படும் ‘சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் எதிர்த்து முனைப்புடன் இயக்கம் நடத்த வேண்டிய தேவையை பாசிச எதிர்ப்பு மற்றும் குடியாட்சிய ஆற்றல்கள் போதிய அளவு உணரவில்லை எனத் தோன்றுகிறது. இந்நிலை குறித்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில், என் ஐ ஏ குறித்தும் ஊபா குறித்தும் அண்மைக்காலத்தில் இவை ஏவப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் மக்களிடையே முனைப்புடன் பரப்புரை செய்யத் தீர்மானித்துள்ளோம். இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்துவிட்டதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துவிட்டனர். ஆனால் சுமார் ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் நிர்வாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அப்துல் ரசாக் உள்ளிட்ட ஐந்து இசுலாமியர்கள் கடந்த மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்காக முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் வாதாடினார்கள். எந்த வழக்குக்காக அவர்கள் வாதாடிக்கொண்டிருந்தார்களோ அதே வழக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிடுகின்றனர்; சட்டவிரோதச் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர்; இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்; தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்க்கின்றனர்; பேரணி நடத்துகின்றனர்; ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றனர் போன்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இவ்வழக்கைப் போட்டிருப்பதாகச் சொல்கிறது என்.ஐ.ஏ.. பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த செப்டம்பர் 28ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(B), 153-A, 153-AA ஆகியவற்றின் கீழும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13,17,18, 18(B), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். ஊபா உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித் முகமதுவும் அந்த 9 பேரில் ஒருவர். கடந்த ஏப்ரல் 13 அன்று மேற்சொன்ன பிரிவுகளுடன் ஊபா பிரிவுகள் 20, 22B-ஐயும் சேர்த்து இன்னொரு வழக்கு போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்ரலில். ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை என்.ஐ.ஏ. மேற்கொண்டது செப். 22இல். இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர். உரத்து எழுப்ப வேண்டிய கேள்விகள்: பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததாக என்.ஐ.ஏ. சொல்கிறது. அந்தத் தகவல்களைக் கொண்டு ஏப்ரலில் ஒரு வழக்குப் போட்டுள்ளது. பின்னர் அதே தகவல்களைக் கொண்டு இன்னொரு புதிய வழக்கை செப்டம்பரில் பதிந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இவ்விரு வழக்கிலும் இல்லை. ஒரே குற்றத்திற்கு இரு வேறு வழக்குகள் போடுவது சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பானது இல்லையா? பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்ரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு, ஐந்து மாதங்கள் கழித்து புதிய வழக்குக்காகக் கைது செய்திருப்பதிலிருந்தே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை அம்பலமாகிறது இல்லையா? ஊபா பிரிவு 13, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது பற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டவிரோதச் செயல்கள் என்ன? இது பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லாமல் பிரிவு 13ஐ வழக்கில் சேர்த்தது சட்டப் புறம்பானதில்லையா? இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் எங்கு, எப்போது, என்ன பேசப்பட்டது? பிரிவு 38,39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. பாப்புலர் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை. மாறாக, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்படித் தடைசெய்யப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்பே ஊபாவின் இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தமுடியுமா? வழக்கம்போலவே, ஊபாவின் பிரிவு 18, பயங்கரவாதச் செயல்களை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே, எவ்வித பயங்கரவாதச் செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்: இவ்வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை ரத்து செய்யக் கோரி குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ் சாட்டப்பட்டவர்களை என்.ஐ.ஏ. தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர். முகமது அப்பாஸ் இவ்வழக்கை எதிர்த்த 10 வழக்குகளில் வாதாடியவர்; 4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார். இதற்கிடையே 05.03.2023 அன்று மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரை ‘விசாரணை’ என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரி டி.எஸ்.பி. செந்தில்குமார் கூட்டிச் சென்றார். என்.ஐ.ஏ அதிகாரிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதால் மயங்கி விழுந்த ஜின்னா இறந்துவிடுவாரோ என்று அஞ்சி உடனே அவரை மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேர்த்தனர். ஆனால், அவருக்கு வலிப்பு வந்த நிலையில் மருத்துவமனைக்கு அருகில் கிடந்ததாக இட்டுக்கட்டுகின்றனர். இவ்விசயத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கையும் களவுமாகச் சிக்கும் வகையில் மருத்துவமனையில் ஜின்னாவை சேர்க்கும்போது பதிவான சிசிடிவி காணொளிகளை வழக்கறிஞர் முகமது அப்பாசு பெற்றுவிட்டார். இது டி.எஸ்.பி. செந்தில்குமாருக்கு ஆத்திரமூட்டுகிறது. என்.ஐ.ஏ. வின் சித்திரவதையை அம்பலப்படுத்தி முகமது அப்பாஸ் ஒரு முகநூல் பதிவை எழுதினார். இதனால் ஆத்திரம் அடைந்த என்.ஐ.ஏ. டி.எஸ்.பி செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ‘என்.ஐ.ஏ. மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாஸ் மீது புகார் செய்தார். இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களைச் சேர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டிக் கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? என்.ஐ.ஏ. வழக்குகளுக்கு எதிராக வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்து சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன? இதைக் கண்டித்து மதுரை ‘பார் அசோசியேசன்’ தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரியது. முகமது அப்பாசையும் முகமது யூசுப்பையும் பொய் வழக்குகளில் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். வழக்கறிஞர்களுக்கு எதிரான இதுபோன்ற பயங்கர அச்சுறுத்தல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மே 30 அன்று சென்னையில் நடந்த ஊடகச் சந்திப்பில் மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்கண்டேய கட்ஜூ முழங்கினார். இஸ்லாமியர்களைக் குதறும் என்.ஐ.ஏ. திறந்த வீட்டில் நுழைந்த நாய் போல் என்.ஐ.ஏ. தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொதுச்சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரை குத்தி அச்சுறுத்த நினைக்கிறது பாசிச பாஜக அரசு. கடந்த செப்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிக்கையை அணியமாக்க மார்ச் 27 வரை இழுத்தடித்தது என்.ஐ.ஏ. அதையும்கூட நீதிமன்றத்தில் முன்வைக்காமல் காலந்தாழ்த்தியது; குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான் ‘குற்றப்பத்திரிக்கையை என்.ஐ.ஏ. வெளியிட்டாக வேண்டும்’ என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்து, கூடுதல் குற்றப்பத்திரிக்கையை அணியமாக்கியுள்ளது என்.ஐ.ஏ. கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைகட்டத் துடிக்கிறது என்.ஐ.ஏ. கேட்பார் யாரும் இல்லை என்பதுபோல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கின்றன. பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா! ஊபா வந்த பாதை: திமுக திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிக்கொண்டிருந்த பின்புலத்தில், தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை தேசிய ஒருமைப்பாடு மற்றும் வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 19ஐத் திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு இணங்க 1963ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16வது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக்கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. மேலும் பிரிவினைக் கோரிக்கையைக் கொண்டிருக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவல்ல திருத்தங்களும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, ‘நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்து நிற்பேன்’ என்று உறுதிமொழி ஏற்கும் திருத்தமும் அப்போது செய்யப்பட்டது. 16ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் செயல்படுத்தும் நோக்கில் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதுவரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாகக் காரணம் சொல்லப்பட்டது. மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறை சட்டங்கள் ஜனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தைக் கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதை ஆளும்