கிழவனிடம் காதல் கொண்டேன்

புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும் ஒடுக்குமுறையாளர்களைக் கனவிலும் கிலி கொள்ள வைக்கும் அக்கிழவனைப் பற்றிப் பேச என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது?! ஆனாலும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை நேசிக்கும் அதே வேளையில், எனது அதீத நேசிப்பென்பது இவ்வுலகில் இருவர் மீது மட்டுமே. அதிலொருவர், புரட்சியாளன் சேகுவேரா; மற்றொருவர், கலகக்காரன் ஈ.வே.ராமசாமி. தனது இனம் ஒடுக்கப்பட்டது, தனது மொழி ஒடுக்கப்பட்டது, தனது சாதி ஒடுக்கப்பட்டது, தனது மதம் ஒடுக்கப்பட்டது, தனது நாடு ஒடுக்கப்பட்டது, தனது வர்க்கம் ஒடுக்கப்பட்டது, தனது நிறம் ஒடுக்கப்பட்டது என்பதன் பொருட்டுப் புயலாய் எழுந்த மரியாதைக்குரியவர்கள் ஏராளம். ஆனால், தனிப்பட்டவிதத்தில் எந்தவித ஒடுக்குதலுக்கும் ஆளாகாமல் ராஜபோகமாய் வாழ்ந்துகொண்டிருக்கையிலேயே, தான், தனது, என்பதைத் தாண்டி  பிற மனிதர் துன்பம் காணச் சகியாது களத்தில் குதித்தார்களே, அதன்பொருட்டே ‘காதல் கொண்டேன்’ இவ்விருவர் மீதும். ஒட்டுமொத்த மானுடத்தையே நேசித்த டாக்டர் சேகுவேரா பிறந்ததோ அர்ஜன்டைனா. போராடியதோ கியூபா, புரட்சிக்கான விதைகளைத் தூவியதோ காங்கோ உட்படப் பல நாடுகள், மாவீரனாய்ச் சரிந்ததோ பொலிவியா. ஓரளவுக்கு அப்படித்தான் நமது கிழவனும். சமூகப் பணிக்கு வரும்போது ஈரோட்டில் அங்கம் வகித்த பதவிகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒலிக்கத் தொடங்கிய பெரியாரின் குரல் இருபதாம் நூற்றாண்டின் முக்கால்பாகம் வரை சுழன்றடித்த பின்பே ஓய்வு கொண்டது.  ஓய்வு கொண்டதென்னவோ உடல்தான். ஆனால் ஒடுக்குதல்களுக்கு எதிரான அவரது முழக்கங்கள் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றும் தென்னாட்டைத் தாண்டி, வடக்கு கிழக்கென வியாபித்து, போர்க்குரல் எழுப்புவோர் இடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது. யானையின் தும்பிக்கையினைப்போலப் போட்டுக்கொண்டிருந்த  ‘லை’யினையும் ‘னை’யினையும் சீர்திருத்தி, இன்றைக்கு இதனைக் கணினியில் தட்டச்சும்போதும்கூடப் பயன்படுகிற எழுத்துச் சீர்திருத்தத்தினை எண்பதாண்டுகளுக்கும் முன்னரே அறிமுகப்படுத்தியவர்தான் தந்தை பெரியார். தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் சங்கீத சபாக்களின் முன் தமிழில் பாடச் சொல்லிப் போர்க்குரல் கொடுத்ததோடு நில்லாமல் தமிழகமெங்கும் தமிழிசை விழாக்களை நடத்தத் துணை நின்றவர்தான் தந்தை பெரியார். இனம், நிறம், பால், மொழி, சமயம், பிறப்பு, உட்பட எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற ஐ.நா.வினது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration on Human Rights) கூட 1948இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்னரே அதைச் செயலாக்கத் துணிந்த அக்கிழவனை என்னென்பது?! ஆம், ‘தான் யார்?’ என்பதைக் காட்டிலும் ‘தான் யாருக்கானவன்?’ என்பதில் அம்மனிதனுக்கு இருந்த தெளிவுதான் இன்றைக்கும் அம் மாமனிதனை எண்ணிச் சிலாகிக்க வைக்கிறது நம்மை. சாதி ரீதியாகப் பார்த்தால் தந்தை பெரியாரின் குடும்பமோ ‘முற்பட்ட’ வகுப்பு. ஆனால் குரல் கொடுத்ததோ ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்காக. மொழி ரீதியாகப் பார்த்தால் வீட்டார் கன்னடம். ஆனால் குரல் கொடுத்ததெல்லாம் தமிழ் மக்களுக்காக. நம்பிக்கையின் அடிப்படையிலோ நாத்திகர். ஆனால் இறைத்தலங்களில் சமத்துவம் நிலவக் குரல் கொடுத்ததென்பதோ ஆத்திகர்களின் சுயமரியாதைக்காக. மத ரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை. ஆனால் ஓங்கி ஒலித்த குரல் சிறுபான்மை மக்களுக்காக. பாலின ரீதியில் ஆண். ஆனால், குரல் கொடுத்ததெல்லாம் பெண்ணினத்திற்காக. இவை போதாதா இப்பூவுலகு இன்னமும் இந்த மனிதனை நேசித்துக்கொண்டிருக்க? (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)