மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

இன்றோடு என் மகன் வி.பிரபாகரனின் இளங்கலை வணிகவியல் படிப்பு நிறைவடைகிறது. இனி எதிர்காலப் படிப்பு மற்றும் வாழ்க்கைக் குறித்து அவன்(ர்)தான் முடிவெடுக்க வேண்டும். அவர் படித்த ஏ.வி.சி. கல்லூரி குறித்து சில குறிப்புகளை எழுத விரும்புகிறேன். அன்பனாதபுரம் வகையார் அறத்துறை கல்லூரி, (A.V.C.College) மயிலாடுதுறை காலம் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழில்மிகு காவிரியின் வடகரையின்பால் துவங்கி, கொள்ளிடத்தின் தென்கரை வரை, மாயூரத்திலிருந்து (மயிலாடுதுறை) மணல்மேடு செல்லும் மார்க்கத்தில் பரந்து விரிந்திருந்த பரப்பிற்கு நாயனாகிய மூலவரின் பெயர் திரு. சடையப்பர் அவர்கள். அவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார் திரு. இராமலிங்கம். அவருடைய பிள்ளைகள் அறுவருள் முதல்வராகத் தோன்றி, சில காலம் வாழ்ந்து, திருமணம் முடிக்கும் முன்னரே மறைந்தார் திரு. வேலாயுதம். இவ்வறத்துறை தோன்ற உறுதுணையாக இருந்தது, ஆறு பங்குகளை ஐந்து ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம், இவர்களை ஈன்றெடுத்த திரு. இராமலிங்கம் அவர்களுக்கோ அல்லது உடன் பிறந்த ஐவருக்கோ ஏற்படாதுதான். அறத்துறையின் பணி நலன்களை அதற்கெனப் பணித்துப் பரிபாலனம் செய்ய வேண்டிய பொறுப்பினை இந்த ஐந்து குடும்பத்தினரின் மூத்தவரிடம் ஒப்படைக்கும்படி தீர்மானிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கல்லூரி வெள்ளி விழா உரையில் குறிப்பிட்டது போல, இப் பெரிய நிறுவனமோ அதைச் சார்ந்த கல்லூரியோ தனியார் பெயரில் அமைக்கப்படாமல் இருப்பது அவற்றை அமைத்த பெரியவர்களின் பண்பினைக் காட்டுகின்றது. எனினும் மற்ற ஐவரின் பெயர்கள், அவர்கள் தம் வழித் தோன்றல்கள் மூலம் நினைவு கூறப்படும் பொழுது, பெருந்தகை வேலாயுதம் அவர்கள் தவப்பெயரையும், பல்லாயிரவர் வாய்மொழி மூலம் கேட்டு மகிழும்வண்ணம், கல்லூரியின் கலையரங்கத்திற்கு ‘வேலாயுதம் பிள்ளை கலையரங்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.வி.சி. கல்லூரி தோற்றம்30 ஏழை மாணவர்களைக் கொண்ட சடையப்ப மாணவர் இல்லத்தினைத் தொடங்கி, மாணவர்களுக்கு மூன்று வேளை உணவும், இடவசதியும், அறங்காவலர் குழுவில் ஒருவரான டாக்டர் திரு. சிறீ. சொக்கலிங்கம் அவர்களால் இலவச மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு, அதற்கான செலவுகளை ஏற்கொண்ட இவ்வறத்துறை நிர்வாகம் 1947 வரை செயல்பட்டது. இவ்வறத்துறையின் நிர்வாகத்தை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் குடும்பத்துப் பெரியவர்கள், மயிலாடுதுறை சார்பு நீதி மன்றத்தின் ‘Scheme’முறையின் கீழ் இந்த நிர்வாகப் பொறுப்பை 1950 இல் கொண்டு வந்தனர். 1947 முதல் 1950 வரையுள்ள இடைக்காலத்தில் நீதிமன்றப் பொறுப்பாளர் மூலம் நிர்வாகம் நடைபெற்றது. இந்த நிர்வாகச் சீர்திருத்தித்தின் பயனாக, 1955 இல் மிகவும் அரும்பாடுபட்டு இந்தக் கல்லூரி தொடங்கப் பெற்றது. அந்தக் காலத்தில் ஒரு கல்லூரி தொடங்க எவ்வளவு முயற்சிகள் தேவைப்பட்டன என்பதை அதில் பங்கு கொண்ட பெருந்தகைகள்தான் அறிவர். 9 ஆசிரியர்களுடனும், 120 மாணவர்களுடனும், நகரப் பூங்காவில் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது திருக்கரங்களால் தொடங்கப்பெற்ற கல்லூரி, ஸ்ரீலஸ்ரீ 26 ஆவது குருமகா சந்நிதானம் அவர்களது வாழ்த்துகளுடன் வெள்ளி விழா கொண்டாடியபோது, 1300 மாணவர்களுடனும் நூற்றுக்கு சற்றே மேற்பட்ட ஆசிரியர்களுடனும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்களுடனும் எல்லா பட்டப்படிப்புகளுடனும் நான்கு பட்ட மேற்படிப்பு பிரிவுகளோடும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்ற பேறினைப் பெற்றது. புதுமுக வகுப்புகள் இருந்தபொழுது, 2000 மாணவர்கள் வரை பயின்றனர். ரூ.2,00,000 முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு ரூ. 20,00,000 வரை இந்த அறத்துறை கொடையளித்தது. நல்ல பல ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள், நூலகம், கலையரங்கு, 150 மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றையும் ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி நாள் விழாவில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்கள் கூறியது போல, மன்னம்பந்தலை மணப்பந்தல் போலக் காட்சியளிக்க வைத்திருக்கின்றது இக்கல்லூரி. அறத்துறையின் பங்கு போக கட்டிடங்களுக்காகவும், புத்தகங்கள் மற்றும் சாதனங்களுக்காகவும் ரூ 5,00,000 க்கும் மேலாக அன்புடன் அரசு உதவியுள்ளது. இந்த ஆண்டு NAAC ஆய்வில் A+ தர வரிசையை பெற்றது மட்டுமல்லாமல், டெல்டா பகுதியில் சிறந்த கலை அறிவியல் கல்லூரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொழிப் போர் தியாகி சார்ங்கபாணி பயின்ற கல்லூரி இது என்பது, இக்கல்லூரியில் பயிலும் அனைவருக்கும் பெருமை தரும் செய்தி. அவர் நினைவாக, கல்லூரி முன்பு நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியால் பயனடைந்த, பயனடையும், பயன்பெறப்படுகின்ற மாணவர்கள் எத்தனைப் பேர்கள்! ஆசிரியப் பெருந்தகைகள், அலுவலர்கள் எவ்வளவு பேர்கள்! காவிரி பாலம்: மயிலாடுதுறை நகரத்தில் பேருந்துகள், வாகனங்கள் செல்வதற்காக, காவேரி ஆற்றில் அமைக்கப்பெற்றுள்ள பாலக்கரை பாலம், ஏ.வி.சி. அறத்துறையினரால் கட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கந்தசாமி விநாயகம்