தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி பல ஆண்டுகளாக நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நிறுத்தியது.   இந்தக் கல்லூரியில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் கல்லூரியை முழுமையாக அபகரித்துக்கொள்ள, கல்லூரியின் செயலர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சுவடு தளத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். https://hexamedia.in/save-dbj/ அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அக்கல்லூரியின் நிர்வாகக் குழுவை முற்றிலுமாக நீக்கிவிட்டு, முறைகேடுகளைக் களையவும் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தவும் ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976, பிரிவு  14 A’இன் படி, அக்கல்லூரியை நிர்வகிப்பதற்காக ‘சந்தோஷ் டி சுரானா’ என்பவரை சிறப்பு அலுவலராக (Special Officer) நியமித்தது (அரசாணை எண்:153, தேதி:12.08.2022). தமிழக அரசு நியமனம் செய்த சிறப்பு அலுவலருக்கு எதிராக, அக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. ஆனால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கம்போல் எந்த உத்தரவையும் மதிக்காத கல்லூரி நிர்வாகம், உயர்நீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு, கடந்த ஆண்டு (2022-23) மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. மாறாக, நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக, கல்லூரி நிர்வாகம் நடத்தும் சுயநிதிப் பாடப்பிரிவான பி.காம்-இல்  மட்டும் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்துள்ளது. இவ்வாறான தாராள மனப்பான்மையோடும் கல்வி வள்ளலாகவும் இருக்கும் இக்கல்லூரி நிர்வாகத்தினர், கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு  நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யாமல் (ரூபாய் 795) சுயநிதிக் கட்டணமாக ரூபாய் 42,000 வரை வசூல் செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர். நடப்புக் கல்வி ஆண்டில் (2023-24) அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தாமல் கடந்த ஆண்டைப் போலவே சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்த நிர்வாகம், நடப்புக் கல்வி ஆண்டில் அந்தக் கட்டணத்தையும் 7,210 ரூபாயாக உயர்த்தியுள்ளதோடு, பொருளாதாரத்தில்  பின்தங்கியோருக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும் எனவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 17க்குப் பிறகு, ஏறத்தாழ 10 மாதங்களாக இந்தக் கல்லூரி மீதான வழக்கானது நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து உயர்கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, வழக்கை விரைவுபடுத்தக் கோரியும் தமிழக அரசு இவ்வழக்கின்மீது அக்கறை காட்டவில்லை. மேலும் தமிழக அரசின் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்து முறையிட்டும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இக்கல்லூரி நிர்வாகம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை மறுவிசாரணைக்கு வரவிடாமல்  தடுக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இக்கல்லூரியைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள 164 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நிறுத்தினால், தமிழக அரசின் சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் மாணவர்களின் உயர்கல்வியும் கேள்விக்குறியாகும். நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்தாமல், தமிழக அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இக்கல்லூரி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டிய உயர்கல்வியைப் பறித்துக்கொண்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக (2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24) இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் உயர்கல்வி பெறவேண்டிய மாணவர்கள், கல்வி கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரியின் முறைகேடுகளைத் தட்டி கேட்டதற்காக, இக்கல்லூரியால்  பழிவாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பேராசிரியர்களின் பணிநீக்கம் செல்லாது என்றும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டும் கல்லூரி நிர்வாகம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் முடக்கி வைத்துள்ளது. இக்கல்லூரியை மீட்டெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என்று பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் முத்தரசன்,  மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் இக்கல்லூரியை மீட்டெடுக்க வேண்டும் என்று தங்களின் அறிக்கைகள் மூலம் தமிழக அரசை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்ட பிறகு, கல்லூரியை முழுமையாக அபகரிக்க நடக்கும் இத்தகைய முயற்சிகளை அரசு கால தாமதமின்றி முறியடிக்க வேண்டும். மேலும் இனி எந்தவொரு அரசு உதவி பெறும் கல்லூரியையும் மூடுவதற்கோ அல்லது சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கோ அனுமதிக்காத வகையில், ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976’இல் உரிய சட்டத் திருத்தங்களைத் தமிழக அரசு செய்து, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதுவே சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான திராவிட மாடல் அரசின் கடமையாகும்.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார்  கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர்.  மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான  CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும்  கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து  பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிபிஎஸ்சி பள்ளிகளைப்  பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான  தேர்வு விடைத்தாட்கள்  திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில்  முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன.  கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம்  தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு,  தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

இன்றோடு என் மகன் வி.பிரபாகரனின் இளங்கலை வணிகவியல் படிப்பு நிறைவடைகிறது. இனி எதிர்காலப் படிப்பு மற்றும் வாழ்க்கைக் குறித்து அவன்(ர்)தான் முடிவெடுக்க வேண்டும். அவர் படித்த ஏ.வி.சி. கல்லூரி குறித்து சில குறிப்புகளை எழுத விரும்புகிறேன். அன்பனாதபுரம் வகையார் அறத்துறை கல்லூரி, (A.V.C.College) மயிலாடுதுறை காலம் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழில்மிகு காவிரியின் வடகரையின்பால் துவங்கி, கொள்ளிடத்தின் தென்கரை வரை, மாயூரத்திலிருந்து (மயிலாடுதுறை) மணல்மேடு செல்லும் மார்க்கத்தில் பரந்து விரிந்திருந்த பரப்பிற்கு நாயனாகிய மூலவரின் பெயர் திரு. சடையப்பர் அவர்கள். அவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார் திரு. இராமலிங்கம். அவருடைய பிள்ளைகள் அறுவருள் முதல்வராகத் தோன்றி, சில காலம் வாழ்ந்து, திருமணம் முடிக்கும் முன்னரே மறைந்தார் திரு. வேலாயுதம். இவ்வறத்துறை தோன்ற உறுதுணையாக இருந்தது, ஆறு பங்குகளை ஐந்து ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம், இவர்களை ஈன்றெடுத்த திரு. இராமலிங்கம் அவர்களுக்கோ அல்லது உடன் பிறந்த ஐவருக்கோ ஏற்படாதுதான். அறத்துறையின் பணி நலன்களை அதற்கெனப் பணித்துப் பரிபாலனம் செய்ய வேண்டிய பொறுப்பினை இந்த ஐந்து குடும்பத்தினரின் மூத்தவரிடம் ஒப்படைக்கும்படி தீர்மானிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கல்லூரி வெள்ளி விழா உரையில் குறிப்பிட்டது போல, இப் பெரிய நிறுவனமோ அதைச் சார்ந்த கல்லூரியோ தனியார் பெயரில் அமைக்கப்படாமல் இருப்பது அவற்றை அமைத்த பெரியவர்களின் பண்பினைக் காட்டுகின்றது. எனினும் மற்ற ஐவரின் பெயர்கள், அவர்கள் தம் வழித் தோன்றல்கள் மூலம் நினைவு கூறப்படும் பொழுது, பெருந்தகை வேலாயுதம் அவர்கள் தவப்பெயரையும், பல்லாயிரவர் வாய்மொழி மூலம் கேட்டு மகிழும்வண்ணம், கல்லூரியின் கலையரங்கத்திற்கு ‘வேலாயுதம் பிள்ளை கலையரங்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.வி.சி. கல்லூரி தோற்றம்30 ஏழை மாணவர்களைக் கொண்ட சடையப்ப மாணவர் இல்லத்தினைத் தொடங்கி, மாணவர்களுக்கு மூன்று வேளை உணவும், இடவசதியும், அறங்காவலர் குழுவில் ஒருவரான டாக்டர் திரு. சிறீ. சொக்கலிங்கம் அவர்களால் இலவச மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு, அதற்கான செலவுகளை ஏற்கொண்ட இவ்வறத்துறை நிர்வாகம் 1947 வரை செயல்பட்டது. இவ்வறத்துறையின் நிர்வாகத்தை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் குடும்பத்துப் பெரியவர்கள், மயிலாடுதுறை சார்பு நீதி மன்றத்தின் ‘Scheme’முறையின் கீழ் இந்த நிர்வாகப் பொறுப்பை 1950 இல் கொண்டு வந்தனர். 1947 முதல் 1950 வரையுள்ள இடைக்காலத்தில் நீதிமன்றப் பொறுப்பாளர் மூலம் நிர்வாகம் நடைபெற்றது. இந்த நிர்வாகச் சீர்திருத்தித்தின் பயனாக, 1955 இல் மிகவும் அரும்பாடுபட்டு இந்தக் கல்லூரி தொடங்கப் பெற்றது. அந்தக் காலத்தில் ஒரு கல்லூரி தொடங்க எவ்வளவு முயற்சிகள் தேவைப்பட்டன என்பதை அதில் பங்கு கொண்ட பெருந்தகைகள்தான் அறிவர். 9 ஆசிரியர்களுடனும், 120 மாணவர்களுடனும், நகரப் பூங்காவில் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது திருக்கரங்களால் தொடங்கப்பெற்ற கல்லூரி, ஸ்ரீலஸ்ரீ 26 ஆவது குருமகா சந்நிதானம் அவர்களது வாழ்த்துகளுடன் வெள்ளி விழா கொண்டாடியபோது, 1300 மாணவர்களுடனும் நூற்றுக்கு சற்றே மேற்பட்ட ஆசிரியர்களுடனும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்களுடனும் எல்லா பட்டப்படிப்புகளுடனும் நான்கு பட்ட மேற்படிப்பு பிரிவுகளோடும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்ற பேறினைப் பெற்றது. புதுமுக வகுப்புகள் இருந்தபொழுது, 2000 மாணவர்கள் வரை பயின்றனர். ரூ.2,00,000 முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு ரூ. 20,00,000 வரை இந்த அறத்துறை கொடையளித்தது. நல்ல பல ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள், நூலகம், கலையரங்கு, 150 மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றையும் ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி நாள் விழாவில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்கள் கூறியது போல, மன்னம்பந்தலை மணப்பந்தல் போலக் காட்சியளிக்க வைத்திருக்கின்றது இக்கல்லூரி. அறத்துறையின் பங்கு போக கட்டிடங்களுக்காகவும், புத்தகங்கள் மற்றும் சாதனங்களுக்காகவும் ரூ 5,00,000 க்கும் மேலாக அன்புடன் அரசு உதவியுள்ளது. இந்த ஆண்டு NAAC ஆய்வில் A+ தர வரிசையை பெற்றது மட்டுமல்லாமல், டெல்டா பகுதியில் சிறந்த கலை அறிவியல் கல்லூரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொழிப் போர் தியாகி சார்ங்கபாணி பயின்ற கல்லூரி இது என்பது, இக்கல்லூரியில் பயிலும் அனைவருக்கும் பெருமை தரும் செய்தி. அவர் நினைவாக, கல்லூரி முன்பு நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியால் பயனடைந்த, பயனடையும், பயன்பெறப்படுகின்ற மாணவர்கள் எத்தனைப் பேர்கள்! ஆசிரியப் பெருந்தகைகள், அலுவலர்கள் எவ்வளவு பேர்கள்! காவிரி பாலம்: மயிலாடுதுறை நகரத்தில் பேருந்துகள், வாகனங்கள் செல்வதற்காக, காவேரி ஆற்றில் அமைக்கப்பெற்றுள்ள பாலக்கரை பாலம், ஏ.வி.சி. அறத்துறையினரால் கட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கந்தசாமி விநாயகம்

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

கல்லூரி வரலாறு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் அரை நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றை அபகரிக்க தனிநபர் ஒருவர் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தாமல், அரசு உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகம், அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை முழுமையாக அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பியுள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் 1972ஆம் ஆண்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது டி. பி. ஜெயின் கல்லூரி. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் உள்ள ஒரே அரசு உதவி பெறும் கல்லூரி இது மட்டுமே. இதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏராளமானோர் உயர்கல்வி பெறமுடிந்தது. மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் சமூக நீதியும் பாதுகாக்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் சமூக நீதியும் கேள்விக்குறியாகியுள்ளது.   மேலும் பல ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத எந்த ஒரு பணிக்கும் கல்லூரி நிர்வாகம் உரியவர்களை நியமிக்காமல், சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றுபவர்களைக் கொண்டே கல்லூரியை நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தியதுடன் அதிலும் சமூக நீதியைப் பலி கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். பல ஆண்டுகளாகவே காலிப்பணியிடங்களில் உரியவர்களை நியமிக்காமல் இருந்ததே, அவர்கள் திட்டமிட்டே கல்லூரியை அபகரிப்பதற்கான சான்று ஆகும். அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடும் முயற்சி இந்நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் பணியிடங்களைத் திரும்ப ஒப்படைப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் கல்லூரியின் செயலர் ஹரீஷ் L மேத்தா கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தின்மீது இயக்குனர் முடிவெடுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். கல்லூரி செயலர் கொடுத்த விண்ணப்பம், முறைப்படி இல்லாததால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976-ன் படி முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்படியும் அது குறித்து மூன்று மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த அடிப்படையில் மீண்டும் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த கல்லூரிக் கல்வி இயக்குனர், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவை பாதிக்கப்படும் என்பதாலும், அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை திரும்ப ஒப்படைப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்ற நிதி மற்றும் அந்த நிதி செலவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் ஆகியவை இல்லாததாலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் அரசு வழங்கிய நிதியுதவி தொடர்பான தணிக்கை நடைபெறாததாலும், கல்லூரி மீதான பஞ்சமி நிலம் அபகரிப்பு, மாணவர் சேர்க்கை முறைகேடுகள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் இருப்பதாலும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் திரும்ப ஒப்படைக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனாலும், கல்லூரி நிர்வாகம் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கு  அரசிடம் ஆணை பெற்றுவிட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பபுவதோடு சுயநிதிப் பிரிவில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. முன்னறிவிப்பில்லாத பணிநீக்கங்கள் இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடும் நடவடிக்கைக்கும் துணைபோக மறுத்த பத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால அவகாசம் எதுவும் கொடுக்காமலும் காரணங்கள் எதுவும் தெரிவிக்காமலும்  கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தங்கள் தரப்பு நியாயத்தையும் கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு மனுவாக அளித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால் அந்த ஆணையையும் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் செயலர் ஆகியோர் மதிக்காமல், மூன்று ஆண்டுகளாக வேலை மற்றும்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பணியில் சேர்க்க மறுத்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்கள்   மேலும், கல்லூரியில் நடைபெற்றுவரும் நிதி மற்றும் மாணவர் சேர்க்கை முறைகேடுகள், அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதிக் கல்லூரியாக மாற்றும் முயற்சி, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் மீதான அடக்குமுறை இவற்றை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்வேறு மாணவர் அமைப்புகள், ஜெயின் கல்லூரி முன்னாள் இந்நாள் மாணவர்கள், தமிழ்நாடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக SC/ST ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஏராளமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். பட்டியல் இனத்தவர் மீதான தாக்குதல் இந்தக் கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்மீது நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. கூடுதல் கட்டணக் கொள்ளை அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு முதல், அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக மாணவர்களிடம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஒரு வங்கிக் கணக்கிலும் கூடுதல் கட்டணத்தை வேறொரு வங்கிக்கணக்கிலும் பெற்றுள்ள தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் யு.ஜி.சி. வழங்கிய நிதியிலும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதும் புகார்களாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ளன.   கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின்  அனுமதி பெறாமலே நிர்வாக அறக்கட்டளையின் பெயரை மாற்றியது, தற்காலிக முதல்வரைக் கொண்டே ஐந்து ஆண்டுக்கும் மேலாகக் கல்லூரி நடத்துவது, அதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரைத் துணை முதல்வராக நியமித்தது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நிறுத்திவிட்டு சுயநிதிப் பிரிவுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் அதன் செயலர் ஹரீஷ் மேத்தா மீதும் குவிகின்றன. யார் இந்த ஹரீஷ் மேத்தா? கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளை உறுப்பினராகவும் கல்லூரி செயலராகவும் இருந்த C.L.மேத்தா என்பவரின் மகனான ஹரீஷ் மேத்தா, தந்தையைத் தொடர்ந்து அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.   பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இந்திய உணவுக் கழகம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர்  அல்லது தலைவர் பதவிகளையும்  அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் சிண்டிகேட் உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்லூரிப் பணியாளர்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத இவர், தமிழ்நாடு சமச்சீர் கல்வி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் புகாரில் சிபிஐ விசாரணையின் கீழ் கல்லூரியின் செயலர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த இவர்மீது சி.பி.ஐ.இல் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் அலுவலகச் செயலாளர் அளித்த ஊழல் புகார் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இவர், தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை வைத்துக்கொண்டு, அவர்களோடு நெருங்கிய நட்பு இருப்பதாகச் சொல்லி கல்லூரியில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உடனடித் தேவை அரசின் தலையீடு தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் செயலர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை முடக்க நினைக்கும் நிர்வாகத்திடம் இருந்து கல்லூரியை மீட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல டி.பி.ஜெயின் கல்லூரியையும் அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும். மேலும், உடனடியாக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடைய குழந்தைகளின் மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு சமூக நீதியை நிலைநாட்டும் முடிவாகவும் இருக்கும். சட்டத்திருத்தம் தேவை ஒருவேளை, இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டால், அதையே பின்பற்றி மற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது என்பதால், இனி வரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அந்த இடங்களைத் திரும்ப ஒப்படைக்கவோ அக்கல்லூரிகளை முழுநேர சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றவோ இயலாதவாறு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.