காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21 புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் ‘புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் அங்கு இருக்க வேண்டும். தாவரங்கள் வளர வேண்டுமென்றால் அங்கு நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஒரு காட்டில் நீர்நிலைகள் இருக்கின்றன என்றால் அங்கு தொடர்ந்து மழை பொழிகிறது என்று பொருள். ஓர் இடத்தில் தொடர்ந்து மழை பொழிகிறது என்றால் அங்கு வனச் சூழலும் , வானலாவிய உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்று பொருள். இப்படி வளமான ஒரு சூழலுக்கு அடுத்தாற் போல்தான்அதைச் சார்ந்து வாழும் ஊர்களும் இருக்க முடியும். இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் ஏன் ஒவ்வொரு உயிரும் அவற்றுக்குத் தேவையான உணவு, உடை ,உறைவிடம் ஆகியவற்றோடு நிம்மதியோடு வாழ இந்த சூழலியல் சங்கிலி சமநிலையோடு இருந்தாக வேண்டியது அவசியம். அதைப் பாதுகாக்கிற மையப் புள்ளியாக புலிகள் இருப்பதனால்தான் புலிகளுக்கு முக்கியத்துவமும் புலிகள் தினக் கொண்டாட்டமும். காட்டுக்குப் புலிகள் எப்படி அவசியமோ அப்படித்தான் நாட்டுக்குக் கவிஞர்களும். கவிஞர்கள் இயற்கையின் அழகுகளைப் பாடுகிறவர்களாகவும், சமுதாயச் சமநிலையை நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஓடும் நதிகளும், உயர்ந்த மலைகளும், பூத்துக் குலுங்கும் செடிகொடிகளும், வான் நோக்கி வளரும் மரங்களும், துள்ளி ஓடும் மான்களும், துதிக்கை உயர்த்தும் யானைகளும், கர்ஜனை புரியும் சிங்கங்களும்,பாடும் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும், புல் பூண்டுகளும், புழு பூச்சிகளும் அவ்வளவு ஏன் சிறு கூழாங்கற்கள் கூடஅவர்கள் கண்களுக்கு அற்புதங்களாகவும் அதிசயங்களாகவும் தெரிகின்றன. அவற்றைத் தங்கள் கவிதைகளில் அழகியலோடு பாடி வைக்கிறார்கள். மேலும் அவர்கள் உலகின் ஆதாரமான அறத்தைப் பாடுகிறார்கள். நீதியைத் தங்கள் கவிதைகளில் போற்றி வழிபடுகிறார்கள். அநீதிக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள். கனிம வளங்களுக்காக ஒரு மலை உடைக்கப்படுகிறது என்றால், மணல் கொள்ளைக்காகஒரு நதியின் சுரண்டப்படுகிறது என்றால், மரங்களுக்காக ஒரு வனம் மொட்டையடிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிற முதல் மனிதனாகக் கவிஞன் இருக்கிறான். அவற்றைத் தன் சொந்தச் சொத்தாகவே அவன் நினைக்கிறான். அது மட்டுமல்ல..சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகிறவர்களின் குரலாக அவன் இருக்கிறான். கண்ணீரைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் ஏந்த முடியாதவர்களுக்காகத் தன் சொற்களை ஆயுதமாக ஏந்துகிறான். விவசாயம் அழிக்கப்படும்போதுஉழவர்களின் குரலாக மட்டுமல்ல…. எதிர்காலச் சந்ததியினருக்காக அவன் அறச்சீற்றம் கொள்கிறான். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் மலிந்து வரும் சூழலில் அவர்களின் சார்பாக அவன் கொதித்தெழுகிறான். வருங்காலத் தலைமுறைகளுக்காக வாதாடும் வழக்கறிஞன் அவன். சூரியனுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்கிற சிந்தனையாளன் அவன். அவை ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் இயைபை உணர்ந்து அவை ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் காவலனாகத் தன்னைத் தானே நியமித்துக் கொள்கிறான். அவை மீறப்படும்போது நீதிபதியாகவும் மாறி வாழ்வியல் சட்டங்களை வகுக்கிறான். அவை அற நூல்களாகி காலத்தின் கல்வெட்டுகளாக நிலைக்கின்றன. ஆகவேதான் “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்றான் நம் பாட்டன் மகாகவி பாரதியும். ஒரு கவிஞன் எழுதும் அழகியல் பாடல்கள் அவற்றை வாசிப்பவர்களின் இதயங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன. ஆகவேதான் கவிஞன் வாழ்கின்ற நாடுவளமான பண்பட்ட சமுதாயமாக போற்றப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைப் பாரம்பரியத்துடன் தொடரும் ஒரு சமுதாயமாக தமிழகம் இருந்து வருகிறது. அதுதான் அதன் வரலாற்றுப் பெருமை. அந்தச் சங்கிலி இன்றும் தொடர்கிறது. ஆங்கில வழிக் கல்வி எனும் மொழிக் கொலையினையும் தாண்டி இந்தச் சங்கிலி உயிர்ப்புடன் தொடர்கிறது. ஆரம்ப நிலைகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞன் கூட மொழியைப் பாதுகாக்கிறவன் என்ற முறையில் போற்றப்பட வேண்டியவனே. ‘உலகக் கவிதை நாள்’ கொண்டாடப்படும் (மார்ச் 21) இன்று ‘உலக வன நாளா’கவும் கொண்டாடப்படுவது எவ்வளவு பொருத்தம்! worldpoetryday internatonaldayofforests

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி யின் வெற்றியும்தான். நிறைய பேர் நா.முத்துக்குமார் குறித்துப் பேசுகிறபோது, யுவனைப் பேசுகிற அளவுக்கு ஜி.வி. குறித்துப் பேசுவதில்லை. ஆனால் வெயில், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய ஜி.வி.யின் முக்கியமான ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார்தான். ‘தலைவா’விலும் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய பாடல்கள் உண்டு (பலர் ஜி.வி.இசையமைத்த பாடல்களையும் யுவன் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர்). இந்த இருவரைத் தவிர பிறருக்கும் எழுதியிருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் ஊடுருவி விட முடியாத ரஹ்மானின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி, ஆறு படங்களில் பாட்டு எழுதி விட்டார் (பல்லேலக்கா – சிவாஜி, வளையபட்டித் தவிலு- அழகிய மகன், ராத்திரியின் சொந்தக்காரா- பார்த்தாலே பரவசம், டாக்ஸி டாக்ஸி- சக்கரக்கட்டி, ஜோதா அக்பர், சர்வம் தாளமயம்) பட்டுக்கோட்டையின் பலம் சமூகம். கண்ணதாசன் மரபு சார்ந்த தமிழ் வாழ்வியலையும் பக்தி மரபையும் எளிமைப்படுத்தித் திரையில் தந்தவர். வைரமுத்து மரபு இலக்கியத்தை நவீன சிந்தனைகளோடு இணைத்தவர்; கூடுதலாக கிராமிய வாழ்வியலையும் நவீன வாழ்வின் பல்வேறு கூறுகளையும் திரையில் வடித்தவர். அறிவுமதி தனக்கான தனித்துவத்துடன் கூடிய கவிஞர்; அப்துல் ரகுமானின் திரையுலக பிம்பம்‌. பழநி பாரதி நவீன மெட்டுகளுக்கேற்ப, தாளங்களுக்கேற்ப கவித்துவத்துடன் கூடிய புதுமையான வரிகளைக் கண்டறிந்தவர். தாமரை காதலின் பெண் மொழியை பாடல்கள் வழி பேசியவர். வாலி இந்தக் கணக்கில் வர மாட்டார். அவர் பாத்திரத்தின் வடிவத்தைத் தானும் அடைந்து விடும் நீர் போன்றவர். அவர் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். ஆனால், இயற்கை சார்ந்த ஜென் மனநிலையையும் பித்தேறிய காதலின் உளறல்களையும் தனித்துவமாக பாடல்களில் வடித்தவர் நா.முத்துக்குமார்தான். ‘மின்சாரக் கம்பியின் மீதுமைனாக்கள் கூடு கட்டும்’என்பதெல்லாம் அழகிய படிமம். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்காற்றிடம் கோபம் கிடையாது’என்று கேட்பதற்கு மரங்களோடு உறவாடுகிற மனநிலை வாய்த்திருக்க வேண்டும். ‘தாராளமா மனசிருந்தாகேரளான்னு தெரிஞ்சுக்க’என்றெழுதிய ரசனை நிறைந்த குறும்புக்காரன். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்கு தானே மருந்து’என்றார் வள்ளுவர். பிற நோய்களுக்கு மருந்து வேறிடத்தில் இருக்கும்; காதல் நோய்க்கு அதுவே மருந்து என்கிற வள்ளுவரின் சிந்தனையை‘காதல் நோய்க்கு மருந்து தந்துநோயைக் கூட்டுமே’என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றவர். பெண்ணின் கண்களைப் பார்த்து‘உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களென்பேன்’என்று சொல்வதற்கெல்லாம் எப்படிப்பட்ட ரசனை இருக்க வேண்டும்..!! ஆழமாக மட்டுமல்ல, எளிமையான வரிகளிலும் காதலைச் சொல்லி விட முடியும் அவரால்.‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லைஅவள் அப்படி ஓன்றும் கலரில்லைஆனால் அது ஒரு குறையில்லை’என்பதுதானே சாமானியக் காதலனின் குரலாக இருக்க முடியும்..! ‘கொடுத்ததை திருப்பி நா கேட்ககடனா கொடுக்கலையேஉனக்குள்ளதானே நா இருக்கேன்உனக்கது தெரியலயேபாக்காத பாக்காதகுத்தும் பார்வையால்என்ன பார்க்காதேபோகாத தள்ளிப் போகாதேஎன்ன விட்டு விட்டுதள்ளித் தள்ளிப் போகாத’எவ்வளவு எளிமையான சொற்களில் மிகப்பெரிய உணர்வு சொல்லப்பட்டிருக்கிறது..! ‘கதைகளைப் பேசும் விழியருகேஎதை நான் பேச என்னுயிரே’என்று சொற்கள் திகைத்து நிற்கிற இடத்தையும் எல்லா கவிஞர்களையும் போலவே இவரும் அடையாளம் காட்டியிருக்கிறார். ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்‌‌காற்றுவெளியில் கலந்தே இருக்கும்சாம்பல் உதிரும்.. வார்த்தை உதிருமா?பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்உயிரும் போகும்.. உருவம் போகுமா?உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்‌விரல்கள் இன்று எங்கே?தோளில் சாய்ந்து கதைகள் பேசநமது விதியில் இல்லைமுதல் கனவு கண்டிடும் முன்னரேதூக்கம் கலைந்ததே’என்றெல்லாம் எழுத, காதலின் அமானுஷ்யத்தை உணர்கிற அரூப மொழியில் உழன்றவனாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் ஊரறிந்தவை. பெண் குழந்தை பற்றிய திரைப்படப் பாடல்களில் ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும் (வைரமுத்து).ஆனால், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் கவித்துவமும் கற்பனையும் நன்றாக இருக்கும்.‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’என்பது அழகான தொடக்கம்; சந்தேகமே இல்லை. ‘இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்பது அழகான ஏக்கம்; அதிலும் சந்தேகமே இல்லை. ‘தூரத்து மரங்கள் பார்க்குதடிதேவதை இவளா கேக்குதடிதன்னிலை மறந்து பூக்குதடிகாற்றினில் வாசம் தூக்குதடிஅடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?உனது புன்னகை போதுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்ற வரிகளிலும் அதே வாசம். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடிவானத்து நிலவு சின்னதடிமேகத்தில் மறைந்தே பார்க்குதடிஉன்னிடம் வெளிச்சம் கேட்குதடிஅதைக் கையில் பிடித்து ஆறுதல் உரைத்துவீட்டுக்கு அனுப்பு நல்லபடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்கிற இடத்தில் டோஸ் ரொம்ப கூடி, காதல் பாடலின் மிகை வந்து விடுகிறது. சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்துக்குப் பிறகு, கவிதைத் தொகுப்புகளும் நன்றாக அமைந்தது பழநி பாரதி, யுகபாரதி, முத்துக்குமாருக்கு மட்டுமே. கதை வடிவில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படத்தான் தோன்றுகிறது. மானசீகன் ஓவியங்கள்: ரம்யா ரோஷன்