வாழும் கவிஞன் வாலி

வாழும் கவிஞன் வாலி

கவிஞர் வாலியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர் பாடல்களோடு சிறு பயணம்: “நன்றி சொல்லவே உனக்குஎன் மன்னவா வார்த்தை இல்லையேதெய்வம் என்பதே எனக்குநீயல்லவா வேறு இல்லையே” இன்று அதிகாலை காரில் உட்கார்ந்தபோது, பனிக்குளிரைக் கிழித்துக்கொண்டு எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும்போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்; அவர் எழுதிய பாடல் முக விசேடம். கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,தான் ஒரு படைப்பாளி, என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை அவர் நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார். அதே சமயம், கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார். அதனால்தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டப்பட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு, என் மன்னவா வார்த்தை இல்லையே” பாடலும் பிடிக்கும்; அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும், “சின்ன ராசாவே…..சித்தெறும்பு என்னைக் கடிக்குது” பாட்டும் பிடிக்கும். இரண்டுமே வாலியின் பாடல்கள்தான். இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார். “அந்த நாள் ஞாபகம்நெஞ்சிலே வந்ததே வந்ததேநண்பனே…..” என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர்தான், “நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமா…நாம் வாழும் வீட்டுக்குள்வேறாரும் வந்தாலே தகுமா…..” என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன?!! “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி? சமைஞ்சது எப்படி?” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.“டாலாக்கு டோல் டப்பிமா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் போடுவது வாலியின் பண்பு. ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.எப்படி, அழுத்தமான சூழல் ஒன்றில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ, அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ, அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் – இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால்தான் நமக்கும் “யாப்போடு சேராதோபாட்டு தமிழ்ப் பாட்டுதோப்போடு சேராதோகாற்று பனிக்காற்று….” என்று இதயத்திலும் “ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்அன்பே உன் பேரைச் சிந்தித்தால்தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்கண்ணே நம் கண்கள் சந்தித்தால்நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..” என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது. “அன்னமிடும் கைகளிலேஆடிவரும் பிள்ளை இதுஉன்னருகில் நானிருந்தால்ஆனந்தத்தின் எல்லையதுகாயத்ரி மந்திரத்தைஉச்சரிக்கும் பக்தனம்மாகேட்கும் வரம் கிடைக்கும் வரைகண்ணுறக்கம் மறந்ததம்மா” தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி – இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை “தாமரை மேலே நீர்த்துளி போல்தலைவனும் தலைவியும் வாழ்வதென்னநண்பர்கள் போலே வாழ்வதற்குமாலையும் மேளமும் தேவையென்ன?” என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில் “நிலவினை நம்பி இரவுகள் இல்லைவிளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லைஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…” எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது. அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில் முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம். “மல்லிகை முல்லைப் பூப்பந்தல்” என்று “அன்பே ஆருயிரே” (1975) க்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக எழுதி, அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சுவீகரித்துக் கொண்டவர், 30 வருடங்கள் கழித்து மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் “மயிலிறகே மயிலிறகே” என வருடும் வரிகளோடு அதே “அன்பே ஆருயிரே” தலைப்பில் வெளிவந்த இன்னொரு படத்திலும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இவையெல்லாம் தன்னைப் பிரச்சாரப்படுத்திக் கவர்ந்து கொண்ட வாய்ப்புகள் அல்ல. அவர் மீதான ஈர்ப்பால் தானாகத் தேடி வந்தவை. கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை; அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.இன்னொரு பரிமாணமும் இருக்கிறது, அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும். தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத்தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி. கானா பிரபா

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி யின் வெற்றியும்தான். நிறைய பேர் நா.முத்துக்குமார் குறித்துப் பேசுகிறபோது, யுவனைப் பேசுகிற அளவுக்கு ஜி.வி. குறித்துப் பேசுவதில்லை. ஆனால் வெயில், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய ஜி.வி.யின் முக்கியமான ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார்தான். ‘தலைவா’விலும் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய பாடல்கள் உண்டு (பலர் ஜி.வி.இசையமைத்த பாடல்களையும் யுவன் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர்). இந்த இருவரைத் தவிர பிறருக்கும் எழுதியிருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் ஊடுருவி விட முடியாத ரஹ்மானின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி, ஆறு படங்களில் பாட்டு எழுதி விட்டார் (பல்லேலக்கா – சிவாஜி, வளையபட்டித் தவிலு- அழகிய மகன், ராத்திரியின் சொந்தக்காரா- பார்த்தாலே பரவசம், டாக்ஸி டாக்ஸி- சக்கரக்கட்டி, ஜோதா அக்பர், சர்வம் தாளமயம்) பட்டுக்கோட்டையின் பலம் சமூகம். கண்ணதாசன் மரபு சார்ந்த தமிழ் வாழ்வியலையும் பக்தி மரபையும் எளிமைப்படுத்தித் திரையில் தந்தவர். வைரமுத்து மரபு இலக்கியத்தை நவீன சிந்தனைகளோடு இணைத்தவர்; கூடுதலாக கிராமிய வாழ்வியலையும் நவீன வாழ்வின் பல்வேறு கூறுகளையும் திரையில் வடித்தவர். அறிவுமதி தனக்கான தனித்துவத்துடன் கூடிய கவிஞர்; அப்துல் ரகுமானின் திரையுலக பிம்பம்‌. பழநி பாரதி நவீன மெட்டுகளுக்கேற்ப, தாளங்களுக்கேற்ப கவித்துவத்துடன் கூடிய புதுமையான வரிகளைக் கண்டறிந்தவர். தாமரை காதலின் பெண் மொழியை பாடல்கள் வழி பேசியவர். வாலி இந்தக் கணக்கில் வர மாட்டார். அவர் பாத்திரத்தின் வடிவத்தைத் தானும் அடைந்து விடும் நீர் போன்றவர். அவர் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். ஆனால், இயற்கை சார்ந்த ஜென் மனநிலையையும் பித்தேறிய காதலின் உளறல்களையும் தனித்துவமாக பாடல்களில் வடித்தவர் நா.முத்துக்குமார்தான். ‘மின்சாரக் கம்பியின் மீதுமைனாக்கள் கூடு கட்டும்’என்பதெல்லாம் அழகிய படிமம். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்காற்றிடம் கோபம் கிடையாது’என்று கேட்பதற்கு மரங்களோடு உறவாடுகிற மனநிலை வாய்த்திருக்க வேண்டும். ‘தாராளமா மனசிருந்தாகேரளான்னு தெரிஞ்சுக்க’என்றெழுதிய ரசனை நிறைந்த குறும்புக்காரன். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்கு தானே மருந்து’என்றார் வள்ளுவர். பிற நோய்களுக்கு மருந்து வேறிடத்தில் இருக்கும்; காதல் நோய்க்கு அதுவே மருந்து என்கிற வள்ளுவரின் சிந்தனையை‘காதல் நோய்க்கு மருந்து தந்துநோயைக் கூட்டுமே’என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றவர். பெண்ணின் கண்களைப் பார்த்து‘உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களென்பேன்’என்று சொல்வதற்கெல்லாம் எப்படிப்பட்ட ரசனை இருக்க வேண்டும்..!! ஆழமாக மட்டுமல்ல, எளிமையான வரிகளிலும் காதலைச் சொல்லி விட முடியும் அவரால்.‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லைஅவள் அப்படி ஓன்றும் கலரில்லைஆனால் அது ஒரு குறையில்லை’என்பதுதானே சாமானியக் காதலனின் குரலாக இருக்க முடியும்..! ‘கொடுத்ததை திருப்பி நா கேட்ககடனா கொடுக்கலையேஉனக்குள்ளதானே நா இருக்கேன்உனக்கது தெரியலயேபாக்காத பாக்காதகுத்தும் பார்வையால்என்ன பார்க்காதேபோகாத தள்ளிப் போகாதேஎன்ன விட்டு விட்டுதள்ளித் தள்ளிப் போகாத’எவ்வளவு எளிமையான சொற்களில் மிகப்பெரிய உணர்வு சொல்லப்பட்டிருக்கிறது..! ‘கதைகளைப் பேசும் விழியருகேஎதை நான் பேச என்னுயிரே’என்று சொற்கள் திகைத்து நிற்கிற இடத்தையும் எல்லா கவிஞர்களையும் போலவே இவரும் அடையாளம் காட்டியிருக்கிறார். ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்‌‌காற்றுவெளியில் கலந்தே இருக்கும்சாம்பல் உதிரும்.. வார்த்தை உதிருமா?பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்உயிரும் போகும்.. உருவம் போகுமா?உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்‌விரல்கள் இன்று எங்கே?தோளில் சாய்ந்து கதைகள் பேசநமது விதியில் இல்லைமுதல் கனவு கண்டிடும் முன்னரேதூக்கம் கலைந்ததே’என்றெல்லாம் எழுத, காதலின் அமானுஷ்யத்தை உணர்கிற அரூப மொழியில் உழன்றவனாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் ஊரறிந்தவை. பெண் குழந்தை பற்றிய திரைப்படப் பாடல்களில் ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும் (வைரமுத்து).ஆனால், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் கவித்துவமும் கற்பனையும் நன்றாக இருக்கும்.‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’என்பது அழகான தொடக்கம்; சந்தேகமே இல்லை. ‘இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்பது அழகான ஏக்கம்; அதிலும் சந்தேகமே இல்லை. ‘தூரத்து மரங்கள் பார்க்குதடிதேவதை இவளா கேக்குதடிதன்னிலை மறந்து பூக்குதடிகாற்றினில் வாசம் தூக்குதடிஅடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?உனது புன்னகை போதுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்ற வரிகளிலும் அதே வாசம். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடிவானத்து நிலவு சின்னதடிமேகத்தில் மறைந்தே பார்க்குதடிஉன்னிடம் வெளிச்சம் கேட்குதடிஅதைக் கையில் பிடித்து ஆறுதல் உரைத்துவீட்டுக்கு அனுப்பு நல்லபடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்கிற இடத்தில் டோஸ் ரொம்ப கூடி, காதல் பாடலின் மிகை வந்து விடுகிறது. சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்துக்குப் பிறகு, கவிதைத் தொகுப்புகளும் நன்றாக அமைந்தது பழநி பாரதி, யுகபாரதி, முத்துக்குமாருக்கு மட்டுமே. கதை வடிவில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படத்தான் தோன்றுகிறது. மானசீகன் ஓவியங்கள்: ரம்யா ரோஷன்