திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

மெத்தனப் போக்கில் மத்திய மாநில அரசுகள் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை உள்ளடக்கியது. பல்லடம் தாலூகாவின் கீழ் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், நாளது தேதியில் ஒரு மாவட்டத்தின் தலைநகராக, மாநகராட்சியாக உயர்ந்துள்ளதென்றால் அதற்கான முக்கியக் காரணம் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி. மாநில அரசிற்கும் சரி, மத்திய அரசிற்கும் சரி, வரி வருவாயினை ஈட்டித் தரும் முதன்மை மாவட்டங்களில் ஒன்று திருப்பூர். கூடுதலாக, அந்நியச் செலாவணியைக் கணிசமாக ஈட்டித் தருவதிலும் திருப்பூர் முன்னணி வகித்தது. கடந்த காலத்தில் பெருகிய மென்பொருள், மின்ணனுக் கருவிகள் உள்ளிட்ட ஏற்றுமதியின் காரணமாக, பிற மாவட்டங்களும் அந்நியச் செலாவணி ஈட்டுதலில் தற்போது திருப்பூரைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருப்பூரின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் நாம் காணலாம். மாநில அரசைப் பொறுத்தமட்டில், திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதிக்கு உரிய முக்கியத்துவத்தைத் தேவையான காலகட்டத்தில் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும். ஒருபுறம் தொழிற்சாலைப் பெருக்கம், மறுபுறம் குடியேற்றங்கள் என்று அசுர வளர்ச்சியில் பயணித்த காலகட்டத்தில், முறைப்படுத்தவேண்டிய பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு செய்யத் தவறிவிட்டது. மத்திய அரசுக்குத்தானே அந்நியச் செலவாணி செல்கிறது என்கிற எண்ணமும் இதற்கு ஒரு காரணம். மத்திய அரசு திருப்பூரின் ஏற்றுமதி வளர்ச்சியைக் கருதி அளித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியினை, மத்திய அரசிற்குப் பெயர் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பி அனுப்பிய வரலாறு உண்டு. சில வருடங்களுக்கு முன், வட இந்தியாவிலிருந்து பிரபலமான ஆங்கில மாத இதழின் நிருபர் ஒருவர் திருப்பூரைப் பற்றிய கட்டுரை ஒன்றுக்காகத் திருப்பூர் வந்திருந்தார். திருப்பூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர் சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. “திருப்பூர் நகரம் மிகுந்த நெருக்கடிகளைக் கொண்ட அசுத்தமான நகரம்; புழுதி நிறைந்த சாலைகள், சாக்கடை ஓடும் தெருக்கள் என்றே என்னளவில் நண்பர்கள் வாயிலாக அறிந்திருதேன். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், சராசரி இந்திய நகரத்தைக் காட்டிலும் நன்றாகவே உள்ளது” எனக் குறிப்பிட்டார். உள்ளபடியே வருத்தமாக இருந்தது. ஏனெனில் இந்தியாவுடன், குறிப்பாக திருப்பூருடன் வர்த்தகம் செய்யாத பல இறக்குமதியாளர்கள் எண்ணம் இப்படியாக இருப்பதே. இரு மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த ஊரைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி, தங்களுடைய கொரியா வாடிக்கையாளர் பூஜ்ய முறை சுத்திகரிப்பு உள்ள உற்பத்தி நிலைகளில் தங்களின் ஆடைகளைத் தயாரிக்க விரும்புகிறார். இந்தியாவில் அந்த வசதி எங்கு உள்ளது எனக் கேட்டார். கடந்த 10 வருடங்களுக்கு மேல், சுமார் 1000 கோடி ரூபாய் செலவிட்டு பூஜ்ய முறை சுத்திகரிப்பில் உலகளவில் எங்குமே இல்லாத அளவு இயங்கிவரும் கட்டமைப்பினைப் பற்றி 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருவருக்குத் தெரியவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளித்தது. மத்திய அரசு, மாநில அரசு என இரு தரப்புமே, சுயம்புவாக உருவாகி, இன்று 10 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை அளிக்கும் ஒரு குழுசார் உற்பத்தி அமைப்பினைப் பற்றி உலகளவில் பேசுபொருளாக்கத் தவறிவிட்டனே என்றே கருதுகிறேன். வங்கதேசத்தின் அசுர வளர்ச்சியின் பின்னணியில், அந்த நாட்டைப் பற்றி அந்த அரசாங்கம் உலகளவில் தொழிலை ஈர்க்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றதே பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது. நம் மாநில அரசைப் பொறுத்தமட்டில், தற்போது நடக்கின்ற ஆட்சியில்தான் ஜவுளித்துறை அமைச்சகம் இரு பிரிவுகளாக பிரித்து இயங்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், ஜவுளித்துறை மட்டுமே வேண்டிய உதவிகளைச் செய்ய இயலாது. தொழில்துறை மற்றும் நிதித் துறையும் இணைந்து ஜவுளித்துறையின் பரிந்துரைகளை ஏற்கவேண்டும். ஆனால் அப்படியான ஒரு இசைவு குறைவாகவே உள்ளது. இதைத் தவிர, அதிகாரிகள் மட்டத்தில் மாநிலத்தில் உள்ள பிரதான மற்றும் முதன்மைச் சங்கங்களின் கருத்துகளுக்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், சிறு உற்பத்தியாளர்களின் குரல் அவர்களுக்கு எட்டுவதில்லை. மத்திய அரசைப் பொறுத்தமட்டில், எதுவுமே செய்யவில்லை எனச் சொல்ல இயலாது. இங்குள்ள தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசாங்கம் வழங்கியதே காரணம். அதேசமயம் வளர்ச்சியைத் தேங்கச் செய்ததற்கும் மத்திய அரசே பொறுப்பாகும். சிறு குறு நடுத்தரத் தொழில்களின் மீது கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் தொழில்முனைவில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றே. நாடு முழுவதும் தொடர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டு வரும் வருத்தமான செய்திகளைக் கடந்தே நாம் பயணிக்கிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வரிச் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் கிஞ்சித்தும் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை முறைசாராத் தொழில்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கின. ஆயத்த ஆடைத் தொழிலும் அதில் விதிவிலக்கல்ல. பல்வேறு முறையீடுகள், பல்வேறு மனுக்கள் எனத் தொடர் கவன ஈர்ப்பிற்குப் பிறகு, ஏறத்தாழ இரண்டாண்டுகள் கடந்த பிறகே நிலைமை சீரானது என்றாலும் அந்த இரண்டாண்டில் ஏரளமான நிறுவனங்கள் தொழிலை விட்டு வெளியேறின. வங்க தேசத்திற்கு அளித்த வரியில்லா வர்த்தகச் சலுகை, பெரும் தலைவலியாகத் தற்போது உருவெடுத்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வங்கி சீர்திருத்த நடைமுறைகள் மற்றும் வங்கிகளை ஒன்றிணைத்தல், இவை இரண்டும் தொழிலுக்குக் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ் (Ease of doing business) என்று குறிப்பிடுவதற்கும் நடைமுறைக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை என்பதே நிதர்சனம். முன்னைக் காட்டிலும் கடுமையான விதிகள், நடைமுறை மாற்றங்கள் ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதில் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றன. வங்கதேசச் சிக்கல், வங்கி நடைமுறைச் சிக்கல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மத்திய மாநில அரசுகள் செய்துகொடுக்கவேண்டிய தேவைகள் குறித்தும் அடுத்து வரும் அத்தியாயங்களில் விவாதிப்போம். முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அரசுகள் குறித்து எழுதும்போது, எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், ஒரு தொழில்முனைவோனின் பார்வையில் மட்டுமே இவற்றை எழுதுகிறேன். வாசிப்பவர்கள் நினைவில்கொள்ள வேண்டியது, நீங்கள் எந்தச் சார்பாக இருந்தாலும் உங்களுக்குமான குரலாகவே இதை எழுதுகிறேன் என்பதை அன்புடன் குறிப்பிட விரும்புகிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் பதிவிடுங்கள். என் கருத்தில் பிழை இருப்பின் திருத்திக்கொள்கிறேன்; இல்லையெனில் உரிய விளக்கத்தை அளிக்கிறேன்.   வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்.