ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் காந்தி பிறந்ததினத்தை நேற்று நாடே பெருமையுடன் நினைவு கூர்ந்தது. அவரின் அறவழிப் போராட்டங்கள் குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில், காந்தி காட்டிய அறவழியில் ஆசிரியர்கள் போராட்டக் களம் கண்டு வருகின்றனர். காந்தி நடத்திய அறப்போராட்டம் ஆங்கிலேயரின் மனத்தையே மாற்றி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது. ஆனால் ஆசிரியர்களது அறப் போராட்டம் நமது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழர்களின் நெஞ்சையே தொட மறுக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடக்கும் பல நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், அவற்றுள் முதன்மையாக இருப்பது ஆசிரியர்களது போராட்டம். கல்வி கொடுக்கும் பள்ளிகளில் மிக முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். பிறகுதான் கட்டமைப்பு, வகுப்பறைகள், இன்ன பிற வசதிகள் யாவும். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஏராளமான சிக்கல்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஆசிரியர்கள் நியமனமே இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் இருக்கின்றன. பெயரளவுக்கு நியமனம் செய்து, அவர்களைப் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற பெயரில் வாரத்தில் மூன்று அரை நாட்கள் – அதாவது மொத்தமாக ஒன்றரை நாட்கள் மட்டுமே வரவழைப்பது; ஒரு மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிப்பது என்று, சுமார் 16000 ஆசிரியர்களது வாழ்க்கையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தது அரசு. மத்திய அரசின் வழிகாட்டுதல்தான் இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்  என்றாலும், நம் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமெனில் முழு நேரமும் ஆசிரியர்களது தேவை பள்ளிகளுக்கு இருக்கிறது என்று மாநில அரசுக்குத் தெரியாதா? அதைக் குறித்து அப்போது முதல் இப்போது வரை எவருக்கும் அக்கறை இல்லை. இருந்திருந்தால் இத்தனை வருடங்களாகத் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிக் குழந்தைகள் இந்த அவலத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். ஆம்; ஒரு பள்ளியின் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையாளர் உடற்கல்வி ஆசிரியர்தான். வகுப்பறை ஒழுங்கை வகுப்பாசிரியர் பார்த்துக்கொள்வார் என்றாலும் பள்ளியின் மொத்த ஒழுங்கை, அனைத்து ஆசிரியர்களது உதவியுடன் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் கவனிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அவர்களது பணியும் அதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  மூன்று அரை நாட்கள் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால், மற்ற மூன்றரை நாட்கள் பள்ளிகளில் ஒழுங்கை யார் கவனிப்பது? அந்த மீதி மூன்றரை நாட்களில் உடற்கல்வி வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளை விளையாட வைப்பது யார்? விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார் செய்வது எப்படி? இதையே மற்ற துறை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் எனில், நம் குழந்தைகளுக்கு எத்தனை தூரம் கல்வி மறுக்கப்படுகிறது, அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று நாம் உணர முற்படுதல் அவசியம். படைப்பாற்றல் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் களம் கலை ஆசிரியர்களது கையில்தான் இருக்கிறது. மற்றபடி அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று நாம் பேசலாம். ஆனால் பாட ஆசிரியர்களுக்குத் தேர்வு மதிப்பெண் என்ற வட்டத்துக்குள் நின்று வாளைச் சுழற்றும் அளவிலான இடமே உள்ளது. ‘வானமே எல்லை; நீ உன் திறமையைக் காட்டு’ என்று மாணவர்கள் பார்வையை விசாலமாக்கும்  உத்தியை ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்களால்தான்  செய்ய இயலும். கணினிச் செயல்பாடு  உள்ளிட்ட பல திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் இந்தச் சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிக்குள் இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலைமையைக் கடந்த பத்தாண்டுகளில் எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, ஆசிரியர்கள் தேவைப் பட்டியலில்  இவர்கள் பணியாற்றும் எந்தப் பள்ளிக்கும் புதிய ஆசிரியர் நியமனம் கிடையாது. இந்தப் பத்தாண்டு காலமாக எந்தவித ஆசிரியர் நியமனமும் இல்லை என்பது மற்றொரு துக்க வரலாறு. ஆனால், இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தில் மாணவர்கள் நலனுக்கும் கேடு; ஆசிரியர் நலனுக்கும் கேடு. அவர்கள் பெறும் ஊதியம் தற்போது பத்தாயிரம் மட்டுமே.  மாதம் பன்னிரண்டு நாட்களுக்குப் பத்தாயிரம் போதாதா என்ற குரல்களும் இங்கே ஒலிக்கின்றன. அது மிகப்பெரிய தவறு. ஒரு மாதத்தில் மீதி பதினெட்டு நாட்கள் அந்த ஆசிரியர்கள் எங்கே செல்வார்கள்? வேறு இடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய முடியுமா? வேலை தருவார்களா? இன்றுள்ள விலைவாசியில் இந்த ஊதியத்தை வைத்துக் குடும்பம் நடத்துவது இயலாத காரியம் என்பதை சமூகப் பார்வையுடன் சிந்திக்கும் அனைவராலும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். அத்தோடு பதினோரு மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு ஊதியம்  தரப்படுகிறது. மே மாதத்தில் அவர்களுக்குப் பசி எடுக்காதா? வாடகை வீட்டில் வசிப்போரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்க மாட்டாரா? அந்த மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் யாருக்கும் எந்தப் பணத் தேவையும் இருக்காதா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். இந்த  ஊதியச் சிக்கலைத் தீர்க்கவும் மாணவர் நலன் கருதியும் எங்களை நிரந்தரப் பணியாளர் ஆக்குங்கள் என்று பகுதி நேர ஆசிரியர்கள் இன்று வரை 52க்கும் மேற்பட்ட முறைகள் போராட்டக் களத்தில் நின்றுள்ளனர். அந்தப் போராட்டங்களின் பலனாக முதலில் ஐந்தாயிரமாக இருந்த அவர்களது ஊதியம் தற்போது பத்தாயிரமாக மாறியுள்ளது; அவ்வளவே. ஊதியத்தைக் கடந்து, பணியாற்றும் பள்ளியிலோ சமூகத்திலோ வீட்டிலோ அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது மற்றொரு வகை மன உளைச்சல். கடந்த பத்தாண்டுகளில் இறந்தவர், வேலையை விட்டவர், வேறு வேலைக்குச் சென்றவர், ஓய்வு பெற்றவர் என நான்காயிரம் ஆசிரியர்கள் காணாமல் போக, எஞ்சியுள்ளவர்கள் 12000 சொச்சம் ஆசிரியர்கள்தான். செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன.  இந்த நேரத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கி, சில நாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, தற்போது தொடர் போராட்டத்தில் இன்று ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றனர். இதுவரை ஐந்தாயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் நாட்கள் செல்லச் செல்லப் பெண் ஆசிரியர்களுக்கு அங்கு தங்க, உடைமாற்ற, கழிப்பறை செல்ல என்று எதற்கும் இயலாத சூழல். ஆகவே போராடுவோருக்குக் கடும் சிக்கல்கள் நிலவுகின்றன எனவும் சங்கப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தடைகளை மீறி ஒன்பதாவது நாளாக இன்றும் களத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இதற்கிடையே போராட்டம் தொடங்கியது முதல் நேற்று வரையிலான எட்டு நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உடல்நலக் குறைவால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளார்.  மற்றொரு பகுதி நேர ஆசிரியரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மணிகண்டன் என்ற ஓவிய ஆசிரியர், கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிருக்கிறார். இருவருக்கும் பணம்தான் பிரச்சனை. அதற்கு இவர்களது ஊதியம் மிக முக்கியமான காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மனிதாபிமானமற்ற முறையில் இப்படி ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இவர்கள் துன்பம் சமூகத்தை அதிர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த காலங்களில் 2016 தேர்தலின்போதும், 2021 தேர்தலின்போதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்தது. அதை நம்பி குடும்பம் குடும்பமாக இவர்களுக்கு வாக்களித்தோம். ‌எங்கள் உறவினர்கள் குடும்பங்களையும் இவர்களுக்கே வாக்களிக்க வைத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் நாங்கள் பலமுறை போராடிவிட்டோம்.  இப்போதும் எட்டு நாட்கள் ஆகியும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்கள் கல்வி அமைச்சரும் முதல்வரும் என்று வெளிப்படையாகப் புலம்பித் தீர்க்கின்றனர் பகுதி நேர ஆசிரியர்கள். இவர்களின் போராட்ட முழக்கமே 181ஆவது கோரிக்கை என்ன ஆயிற்று? என்பதுதான். இந்த நேரத்தில் பல ஆசிரியர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் செல்வது என்ற சூழலும் நிலவுகிறது. கடந்த எட்டு நாட்களில் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பள்ளிக்கல்வி இயக்குனர், கல்விச்செயலர், இணை இயக்குநர், சமக்ஷ்ர சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் வெறும் ஊதிய உயர்வு மட்டும் தருவதாகக் கூறிப் போராட்டத்தை முடித்துவிடப் பார்ப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதியாக நேற்று எட்டாவது நாள் மாலை, கல்வி அமைச்சர் தனது வீட்டிற்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் சங்கதினரிடம் கேட்டபோது, “பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று மாலை (அக்டோபர் 2) எங்களை அழைத்துப் பேசினார். அப்போது எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் பேசிய வகையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்பும் பலமுறை அமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசியுள்ளோம். அப்போதும் அமைச்சரின் பதில் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது உடனிருக்கும் அதிகாரிகள், அமைச்சர் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவர்களைத் தனியே சந்திக்கும்போது வேறு மாதிரியும் பேசுகின்றனர். அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முனைந்தாலும் அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது,  அவர்கள் இந்த அரசுக்கு எதிராகச் செயல்பட எங்களைத் தூண்டி விடுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டால் ‘உங்கள் கோரிக்கையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நிதித்துறையைக் கை காட்டுகின்றனர். ஆனால் நிதித்துறையிலிருந்து எங்களுக்குச் சாதகமான எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் நிதித்துறையும் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆசிரியர்களைத் திசை திருப்புகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. ‘திமுக அரசு ஆசிரியர்களுக்கானது’ என்ற நிலையை ‘ஆசிரியர்களுக்கு எதிரானது திமுக அரசு’ என்று மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். கல்வித்துறையில் அவுட் சோர்சிங்கில், ஃபெல்லோசிப் நியமனங்களுக்கே அரை லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் தரும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமல்  வஞ்சித்து, அவர்களை நிரந்தரமாக்காமல் குழந்தைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம்  அடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கும் அதே டிபிஐ வளாகத்தின் புதிய கட்டிட வாகன நிறுத்துமிடத்தில் நிரந்தர ஆசிரியர்களும் பல ஆயிரக்கணக்கில் இணைந்து கடந்த ஐந்து நாட்களாக நீர் அன்ன ஆகாரம் இன்றிப் போராடி வருவது மற்றொரு வேதனை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 2009ஆம் ஆண்டு பணியில்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

திருப்பூர் எனும் திருப்புமுனை – 13

மெத்தனப் போக்கில் மத்திய மாநில அரசுகள் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை உள்ளடக்கியது. பல்லடம் தாலூகாவின் கீழ் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், நாளது தேதியில் ஒரு மாவட்டத்தின் தலைநகராக, மாநகராட்சியாக உயர்ந்துள்ளதென்றால் அதற்கான முக்கியக் காரணம் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி. மாநில அரசிற்கும் சரி, மத்திய அரசிற்கும் சரி, வரி வருவாயினை ஈட்டித் தரும் முதன்மை மாவட்டங்களில் ஒன்று திருப்பூர். கூடுதலாக, அந்நியச் செலாவணியைக் கணிசமாக ஈட்டித் தருவதிலும் திருப்பூர் முன்னணி வகித்தது. கடந்த காலத்தில் பெருகிய மென்பொருள், மின்ணனுக் கருவிகள் உள்ளிட்ட ஏற்றுமதியின் காரணமாக, பிற மாவட்டங்களும் அந்நியச் செலாவணி ஈட்டுதலில் தற்போது திருப்பூரைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருப்பூரின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் நாம் காணலாம். மாநில அரசைப் பொறுத்தமட்டில், திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதிக்கு உரிய முக்கியத்துவத்தைத் தேவையான காலகட்டத்தில் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும். ஒருபுறம் தொழிற்சாலைப் பெருக்கம், மறுபுறம் குடியேற்றங்கள் என்று அசுர வளர்ச்சியில் பயணித்த காலகட்டத்தில், முறைப்படுத்தவேண்டிய பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு செய்யத் தவறிவிட்டது. மத்திய அரசுக்குத்தானே அந்நியச் செலவாணி செல்கிறது என்கிற எண்ணமும் இதற்கு ஒரு காரணம். மத்திய அரசு திருப்பூரின் ஏற்றுமதி வளர்ச்சியைக் கருதி அளித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியினை, மத்திய அரசிற்குப் பெயர் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பி அனுப்பிய வரலாறு உண்டு. சில வருடங்களுக்கு முன், வட இந்தியாவிலிருந்து பிரபலமான ஆங்கில மாத இதழின் நிருபர் ஒருவர் திருப்பூரைப் பற்றிய கட்டுரை ஒன்றுக்காகத் திருப்பூர் வந்திருந்தார். திருப்பூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர் சொன்னது இன்னும் என் நினைவில் உள்ளது. “திருப்பூர் நகரம் மிகுந்த நெருக்கடிகளைக் கொண்ட அசுத்தமான நகரம்; புழுதி நிறைந்த சாலைகள், சாக்கடை ஓடும் தெருக்கள் என்றே என்னளவில் நண்பர்கள் வாயிலாக அறிந்திருதேன். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், சராசரி இந்திய நகரத்தைக் காட்டிலும் நன்றாகவே உள்ளது” எனக் குறிப்பிட்டார். உள்ளபடியே வருத்தமாக இருந்தது. ஏனெனில் இந்தியாவுடன், குறிப்பாக திருப்பூருடன் வர்த்தகம் செய்யாத பல இறக்குமதியாளர்கள் எண்ணம் இப்படியாக இருப்பதே. இரு மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த ஊரைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி, தங்களுடைய கொரியா வாடிக்கையாளர் பூஜ்ய முறை சுத்திகரிப்பு உள்ள உற்பத்தி நிலைகளில் தங்களின் ஆடைகளைத் தயாரிக்க விரும்புகிறார். இந்தியாவில் அந்த வசதி எங்கு உள்ளது எனக் கேட்டார். கடந்த 10 வருடங்களுக்கு மேல், சுமார் 1000 கோடி ரூபாய் செலவிட்டு பூஜ்ய முறை சுத்திகரிப்பில் உலகளவில் எங்குமே இல்லாத அளவு இயங்கிவரும் கட்டமைப்பினைப் பற்றி 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருவருக்குத் தெரியவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளித்தது. மத்திய அரசு, மாநில அரசு என இரு தரப்புமே, சுயம்புவாக உருவாகி, இன்று 10 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை அளிக்கும் ஒரு குழுசார் உற்பத்தி அமைப்பினைப் பற்றி உலகளவில் பேசுபொருளாக்கத் தவறிவிட்டனே என்றே கருதுகிறேன். வங்கதேசத்தின் அசுர வளர்ச்சியின் பின்னணியில், அந்த நாட்டைப் பற்றி அந்த அரசாங்கம் உலகளவில் தொழிலை ஈர்க்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றதே பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது. நம் மாநில அரசைப் பொறுத்தமட்டில், தற்போது நடக்கின்ற ஆட்சியில்தான் ஜவுளித்துறை அமைச்சகம் இரு பிரிவுகளாக பிரித்து இயங்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், ஜவுளித்துறை மட்டுமே வேண்டிய உதவிகளைச் செய்ய இயலாது. தொழில்துறை மற்றும் நிதித் துறையும் இணைந்து ஜவுளித்துறையின் பரிந்துரைகளை ஏற்கவேண்டும். ஆனால் அப்படியான ஒரு இசைவு குறைவாகவே உள்ளது. இதைத் தவிர, அதிகாரிகள் மட்டத்தில் மாநிலத்தில் உள்ள பிரதான மற்றும் முதன்மைச் சங்கங்களின் கருத்துகளுக்கு மட்டுமே பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், சிறு உற்பத்தியாளர்களின் குரல் அவர்களுக்கு எட்டுவதில்லை. மத்திய அரசைப் பொறுத்தமட்டில், எதுவுமே செய்யவில்லை எனச் சொல்ல இயலாது. இங்குள்ள தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசாங்கம் வழங்கியதே காரணம். அதேசமயம் வளர்ச்சியைத் தேங்கச் செய்ததற்கும் மத்திய அரசே பொறுப்பாகும். சிறு குறு நடுத்தரத் தொழில்களின் மீது கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் தொழில்முனைவில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றே. நாடு முழுவதும் தொடர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டு வரும் வருத்தமான செய்திகளைக் கடந்தே நாம் பயணிக்கிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வரிச் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் கிஞ்சித்தும் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை முறைசாராத் தொழில்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கின. ஆயத்த ஆடைத் தொழிலும் அதில் விதிவிலக்கல்ல. பல்வேறு முறையீடுகள், பல்வேறு மனுக்கள் எனத் தொடர் கவன ஈர்ப்பிற்குப் பிறகு, ஏறத்தாழ இரண்டாண்டுகள் கடந்த பிறகே நிலைமை சீரானது என்றாலும் அந்த இரண்டாண்டில் ஏரளமான நிறுவனங்கள் தொழிலை விட்டு வெளியேறின. வங்க தேசத்திற்கு அளித்த வரியில்லா வர்த்தகச் சலுகை, பெரும் தலைவலியாகத் தற்போது உருவெடுத்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வங்கி சீர்திருத்த நடைமுறைகள் மற்றும் வங்கிகளை ஒன்றிணைத்தல், இவை இரண்டும் தொழிலுக்குக் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ் (Ease of doing business) என்று குறிப்பிடுவதற்கும் நடைமுறைக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை என்பதே நிதர்சனம். முன்னைக் காட்டிலும் கடுமையான விதிகள், நடைமுறை மாற்றங்கள் ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதில் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றன. வங்கதேசச் சிக்கல், வங்கி நடைமுறைச் சிக்கல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மத்திய மாநில அரசுகள் செய்துகொடுக்கவேண்டிய தேவைகள் குறித்தும் அடுத்து வரும் அத்தியாயங்களில் விவாதிப்போம். முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அரசுகள் குறித்து எழுதும்போது, எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், ஒரு தொழில்முனைவோனின் பார்வையில் மட்டுமே இவற்றை எழுதுகிறேன். வாசிப்பவர்கள் நினைவில்கொள்ள வேண்டியது, நீங்கள் எந்தச் சார்பாக இருந்தாலும் உங்களுக்குமான குரலாகவே இதை எழுதுகிறேன் என்பதை அன்புடன் குறிப்பிட விரும்புகிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் பதிவிடுங்கள். என் கருத்தில் பிழை இருப்பின் திருத்திக்கொள்கிறேன்; இல்லையெனில் உரிய விளக்கத்தை அளிக்கிறேன்.   வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்.