மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம்
அன்பார்ந்த சுவடு வாசகர்களுக்கு வணக்கம். நலமே சூழ்க. இந்தக் கொடுந்தொற்றுக் காலம் தொடர்ந்து நமக்குப் பல படிப்பினைகளை வழங்கி வருகிறது. பல ஆண்டுகள் அச்சிதழாக வந்துகொண்டிருந்த நம் சுவடு இதழ் இடையில் தடைப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக் காலத்தில்தான் மின்னிதழ் வடிவில் அதனை மீட்டெடுத்தோம். மே முதல் நாள், உழைப்பாளர் தினம் முதலாக அச்சிதழாக மீண்டும் சுவடு உருமாற்றம் பெரும் என்று அறிவித்திருந்த நிலையில், அடுத்து வந்த இரண்டாம் அலை கொரோனா பரவல் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. கொரோனா முதல் அலையில் தப்பிய மக்கள் மற்றும் நிறுவனங்களில் பெரும்பான்மை, இரண்டாம் அலையில் சிக்கிக்கொண்டார்கள். நம் சுவடு இதழும் அதற்குத் தப்பவில்லை என்றாலும், நாம் “விழ விழ எழுவோம், முன்பிலும் வலுவோடும் துணிவோடும்” என்ற ஊக்கத்துடன் இயங்கிவருவதால் இன்னொரு முறை மீண்டெழுந்துள்ளோம். இம்முறை இணைய இதழ் வடிவில் வந்து உங்கள் எண்ணங்களில் சுவடு பதிக்க உள்ளோம். இணைய இதழுக்கான சிறப்பு யாதெனில், மின்னிதழைக் காட்டிலும் வாசிக்க எளிதாக இருக்கும். அதேவேளை படைப்புகளை உடனுக்குடன் பதிவேற்றிடவும் இயலும். தினந்தோறும் நம் தளத்துக்கு வருபவர்கள் புதிய படைப்புகளையும் செய்திகளையும் வாசிக்க இயலும். அவ்வப்போது வருபவர்களுக்காக இணைப்புகளின் தொகுப்பு அனுப்பப்படும். உள்ளடக்கத்தில் எப்போதும்போல தரமான படைப்புகளே இடம்பெறும் என்றாலும் சிறுகுறை யாதெனில் புத்தக வடிவமைப்பு இருக்காது என்பது மட்டுமே. வாசகர்கள் அன்போடு அதனைப் பொறுத்தருள்க. சமூகத்தின் மேம்பாட்டுக்காக எப்போதும்போலவே முழு ஈடுபாட்டுடனும் முழு வீச்சுடனும் சுவடு குழு தொடர்ந்து பயணிக்கும், உங்கள் அனைவரின் ஆதரவோடு என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன், ஆசிரியர்