திருப்பூர் எனும் திருப்புமுனை – 17
தொழில் முனைவோராக எங்கு பெரிய அளவில் தவறுகிறோம்? திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் நிலவும் பல்வேறு சவால் நிலைகளைப் பல அத்தியங்களாகப் பார்த்து வந்தோம். போட்டி உற்பத்தி நாடாக விளங்கும் வங்கதேசச் சவால் குறித்துக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். வங்கதேசம், வியட்நாம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எவ்வாறு இந்தியாவைக் காட்டிலும் தொடர்ந்து ஜவுளித்துறையில் முன்னேறுகின்றனர், நாம் எங்கே பின்தங்கியுள்ளோம் என்பதை விரிவாகப் பார்ப்போம். வங்கதேசம், வியட்நாம் மற்றும் இலங்கையில் பஞ்சு விளைச்சல் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்களின் பருத்தி ஆடை ஏற்றுமதிக்கும் அவர்களின் பஞ்சு உற்பத்திக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. ஏற்கனவே சில அத்தியாயங்களில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளேன். வியட்நாமைப் பொறுத்தமட்டில் இங்குள்ள 90% நிறுவனங்கள், சீனா, கொரியா, இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து துணிகளை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயார் செய்து ஏற்றுமதி செய்கின்றனர். குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரும் நிறுவனங்கள் என, 5000க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் அந்த நாடு முழுவதிலும் வியாபித்துள்ளன. இதில் 20% நிறுவனங்கள் நேரடி அந்நிய முதலீடு வகையைச் சார்ந்தவை. சீனா, கொரியா, இந்தியா மற்றும் ஜப்பானியர்கள் இந்தத் துறையில் இங்கு பெருமளவு முதலீடு செய்துள்ளனர். இது தவிர, அரசின் பொதுத்துறை என்ற அளவில், 50 பெரிய நிறுவனங்கள் வினா டெக்ஸ் என்ற பெயரின் கீழ் இயங்குகின்றன. வியட்நாமின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு 12%. கடந்த சில வருடங்களாகத் தனியார்த் துறை முதலீடுகள் அதிகரிக்கப்பட்டதால், இன்றளவில் அரசு, 26% பங்குகளை இந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதிகபட்சம் 300 தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் முதலீட்டின் அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்படுகின்றன. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களைப் பெற்ற தேதியிலிருந்து 90 நாட்களில் தயார் செய்து அனுப்புகின்றனர். நிரந்தரமான வழக்கத்தில் உள்ள ஆர்டர்கள் 45 நாட்களில் தயாரித்து அனுப்பப்படுகிறது. நிர்ண்யக்கப்பட்ட உற்பத்தித் திறன் இலக்கை, ஒவ்வொரு தொழில் நிறுவனமும் 90% எட்டுவது மிகவும் வியந்து கவனித்த ஒரு விஷயமாகும். MMR எனச் சொல்லக்கூடிய மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம், 1:1.25 என்ற அளவில் உள்ளதும் மிகச் சிறப்பான ஒன்றாகும். தொழிற்பேட்டைகளுக்கு அரசு செய்து கொடுத்துள்ள உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசத் தரத்தில் உள்ளன. வங்கதேசத்தைப் பொறுத்தமட்டில், கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இங்குள்ள பெரிய தொழிற்சாலைகள் நூலை வாங்கி, அதை ஆடையாக ஏற்றுமதிக்கு அனுப்பும் அத்தனைப் படிநிலை உற்பத்திகளையும் ஒரே வளாகத்தினுள் செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் சீனா, தைவான், கொரியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து துணியாக இறக்குமதி செய்து ஆடைகளாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 80% அளவு ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கும் மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 1:1.25 என்ற அளவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் இந்தியா, தைவான், கொரியா, சீனா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து துணிகளை இறக்குமதி செய்து ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெறுகிறது. இங்கும் தொழிற்சாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 80% அளவு ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கும் மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 1:1.25 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இந்தியச் சூழலைப் பார்ப்போம். குறிப்பாக, திருப்பூர் சூழல். இன்றும் 80% ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் நூலை வாங்கி ஒவ்வொரு உற்பத்திப் படிநிலைகளில் உள்ள துணை நிறுவனங்களிடம் கொடுத்து, துணியாக மாற்றி, ஆடை உற்பத்தியை மேற்கொள்கின்றனர். சுயம்புவாக உருவான தொழில் என்கிற நிலையில், இது சரியான முறை என்றாலும் காலத்திற்கேற்ற தகவமைப்பு மட்டுமே நம்மை வளரச் செய்யும் என்பதைச் சிந்திக்காமல் விட்டதன் விளைவு, இன்றைய பின்னடைவுக்கு ஒரு பெரும் காரணம் என்பதாகவே பார்க்கிறேன். திருப்பூரின் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இயந்திரத் திறனில் 40% அளவு மட்டுமே ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு மனித ஆற்றலுக்கு ஏற்ற இயந்திர ஆற்றல் விகிதம் 2 என்கிற அளவில் உள்ளது. மேலே குறிப்பிட்ட மற்ற 3 நாடுகளின் தரவுகளோடு இதைப் பொருத்திப் பார்த்தால், பல்வேறு நிதர்சனங்களைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு, 10000 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு தொழிற்சாலையில், அடிப்படை செலவுகளான வாடகை, பராமரிப்பு, நிர்வாக ஊழியர்கள், மின் கட்டணம் உள்ளிட்ட நிலையான செலவுகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால் அன்றாட உற்பத்தி என்பது திருப்பூர் ஆலைகளில் 40% என்கிற விகிதத்தில் எடுத்துக்கொண்டால், அடிப்படைச் செலவுகளை உற்பத்தி செய்த ஆடைகளுக்கு ஏற்பப் பிரித்தால், பெரும் தொகை வேறுபாட்டினைக் காணலாம். இது நமக்கான போட்டியை நாமே உருவாக்கிக்கொள்ளும் நிலையே. இந்த விடயங்களில் நாம் மிக அவசியமாகவும் போர்க்கால அடிப்படையிலும் செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் நூலை வாங்கித் துணிகளாக மாற்றுவதைக் காட்டிலும், துணியாக வாங்கும் முறைக்கு மாற வேண்டும். அதே நேரத்தில், படிநிலை உற்பத்தி நிறுவனங்கள் கூட்டாக இணைந்து துணி தயாரிக்கும் நிறுவனங்களாக மாற வேண்டும். அப்படி மாறும்பட்சத்தில் நிலையான உற்பத்தி, அதற்குரிய ஆர்டர்கள், செலவீனங்கள் குறைப்பு, துணிகளில் ஏற்படும் எடை மற்றும் தரக் குறைபாடுகள் பெருமளவில் குறையும். இது ஒரு புதிய மாற்றத்திற்கு மட்டுமல்ல, உற்பத்தியை அதிகரிப்பதுடன், தரம் மற்றும் கால அளவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இதன் வாயிலாக, உற்பத்தி நிறுவனங்கள் தடையின்றி இயங்கி, குறித்த நேரத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும்பட்சத்தில், ஆர்டர்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, லாப விகிதங்களும் அதிகரிக்கும் என்பதே என்னளவிலான அவதானிப்பு. இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மேலே கொடுக்கப்பட்டுள்ள வியட்நாமின் தரவுகள், 4 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, மத்திய அரசின் தொழிலாளர் துறை, வர்த்தக துறை மற்றும் ஜவுளித்துறை உயர் அதிகாரிகளுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு அங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிறுவனங்களைப் பார்வையிட்ட பின், அங்குள்ள அரசு அதிகாரிகள், நிறுவன மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் உரையாடியதில் சேகரித்த தரவுகளே. மேற்படித் தரவுகள் மூலம், திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழில் முனைவோராக நாம் எங்கு பெரிய அளவில் தவறுகிறோம் என்பதைக் குறித்து விவரித்துள்ளேன். அடுத்த பகுதியிலும் நாம் மேலும் எங்கு தவறுகிறோம் எனப் பார்ப்போம். வெள்ளியன்று சந்திப்போம்.