நடக்கலாம் வாங்க

ஏன் நடக்க வேண்டும்? க்ளப் ஹவுஸ் செயலியின் ‘உணவும் உள்ளமும்’ ஹவுசில் கொரோனா தொற்று சமயத்தில் நோய்த்தொற்று சம்பந்தமாக சில சாமான்யர்கள் மருத்துவர்களிடம் நேரடியாக சந்தேகங்களைக் கேட்டனர். பிறகு தடுப்பூசி பற்றி கேட்டனர். நாளடைவில் உடல்நிலை சம்பந்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேச குழு உறுப்பினர்கள் சேர்ந்தனர். இதில் பலர் ‘நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்றும், சிலர் ‘நடைப்பயிற்சியை முறையாகத் தொடர முடியவில்லை’ என்றும் சிலர் ‘நடப்பதற்கு முன் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார்கள். இவற்றை எல்லாம் முன்வைத்து, எப்பொழுது எனக்கு வாக்கிங் போகும் பழக்கம் வந்தது என்பதை ஞாபகப்படுத்தவே ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நடைப்பயிற்சி என்பது ஒரு கட்டத்தில் போதையாயிருந்தது. நடப்பது என்பது போதையாகவே தொடரவும் செய்கிறது. “உனக்கு மோசமான மன நிலை இருந்தால் ஒரு முறை நடந்து செல். இன்னும் மோசமான மனநிலை தொடர்கிறதா மறுபடியும் நடந்து கொண்டே இரு” என்பது ஹிப்போக்ரேட்ஸ் சொன்ன ஞாபகம். நான் வாக்கிங் செல்ல ஆரம்பித்த நான் எதிர்கொண்ட சவால்கள் என்று சில இருந்தன. அவை பொத்தாம் பொதுவாய் பலருக்கும் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் நடைப்பயிற்சியைத் தொடரும்பொழுது ஏற்படும் அல்லது உணரும் உணர்வுகளையும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒரு சேர மறுபடியும் எழுதிப்பார்க்க ஆசை. பொதுவாய் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் தங்களுக்கு நேரும் தடைகள் எனப் பட்டியலிடுபவை: என்னால் தினமும் எழ முடியவில்லை. என்னால் தினமும் நடக்க முடியவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். அதனால் வாக்கிங் செல்ல நேரம் இல்லை. ஒரு நாள் நடந்தபின் அடுத்த நாள் கால் வலி. எழவே முடியவில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் உடல் எடை குறையவில்லை. பிறகு எதற்கு நடக்கவேண்டும்? அலுவலகத்தில் ஒரு இருக்கைக்கும் இன்னொரு இருக்கைக்கும் நடந்தே போகிறேன். (பிறகு ஹெலிகாப்டரிலா போவாங்க என்ற மைண்ட் வாய்சை கவுண்டமணி குரலில் படிக்கவும்) அலுவலகத்தில் ஃபோன் வந்தால் நடந்துகொண்டே பேசுவேன். இது தவிர எதற்காகத் தனியாக நடக்கவேண்டும்? என்ற எண்ணம். உலகில் நடப்பவர்கள் எல்லாம் சுகர் வந்தவர்கள் அல்லது ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் என்ற பார்வை. காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள், இப்படியான கண்ணோட்டம். எனக்கு சுகர் இன்னும் வரவில்லை. நன்றாக இருக்கிறேன். எனக்கு டாக்டரிடம் போவதற்கு எந்த அவசியமும் இல்லை என்ற மனநிலை. என்னை வாக்கிங் போகச்சொல்லி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. பிறகு எதற்காகப் போகவேண்டும்? என்ற கேள்வி. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்க இத்தனைக் காரணங்கள் இருக்கலாம். இதை விடக் கூடுதலாகவும் இருக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்தால் புது வருட சபதம் எடுத்து நடக்க வருபவர்கள் வருவார்கள். மூன்றே நாளில் பாதி பேர் காணாமல் போவார்கள். மீதிக் கூட்டமும் பொங்கல் விடுமுறையில் காணாமல் போவார்கள். எங்கள் வாக்கர்ஸ் க்ளப்பில் ஜனவரி 1ம் தேதி இந்தச் சபத க்ரூப்களைத் தனியாக அடையாளம் காணுவோம். முதல் நாளே ஐந்து கி.மீ. பத்து கி.மீ. என நடந்து உடல் எடையைக் குறைத்துவிடுவோம் என்ற வெறியுடன் நடப்பார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமியை நிறுத்தி பிறகு எதிர்திசையில் சுற்றிவிடும் வெறி இருக்கும் அவர்களிடம். ஆனால் அவர்கள் தலை கீழாக நின்றாலும் வெறுமனே நடப்பதன் மூலமாக மட்டும் உடல் எடையைக் குறைக்கமுடியாது என்பது அவர்களுக்கு தாமதமாகத்தான் புரியும். இந்த யோசனைகள் எல்லாவற்றையும் தாண்டி, ‘ஏன் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்? நடப்பதனால் ஆய பயன் என்ன?’ என்று பலர் கூகுளாண்டவரைத் துழாவி பார்த்திருப்பார்கள். அது போக, க்ளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் வெல்னெஸ் கோச், டாக்டர்கள் என எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தும் நல்ல அறிவியல் பூர்வமான விசயங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததுதான் மறுபடியும் மீள் பார்வையாக இங்கே. *நடப்பதனால் உங்களுக்கு உடல் எடை குறைய சில வாய்ப்புகள் உண்டு. ஆனால் முறையான பயிற்சியில் நீங்கள் உங்கள் எடை கூடுவதைத் தவிர்க்க நடக்கலாம். *தூக்கமின்மைக்குச் சில மருத்துவர்கள் நடக்கப் பரிந்துரை செய்கிறார்கள். உடனே ‘நடந்தால் தூக்கம் வருமா?’ என்று நீங்கள் வாங்கும் மிக்ஸி க்ரைண்டருக்கு கேரண்டி, வாரண்டி கார்ட் கேட்பது போலக் கேட்கக்கூடாது. உடல் தசைகள் முறையான இரத்தம் ஓட்டம் பெறும்பொழுது, மூளையும் முறையான இரத்த ஓட்டம் பெற்று தசைகள் சுருங்கி விரிந்து உங்களது உடல் ஓர் இறுக்கமற்ற சூழலை உணரும். அது பல வகைகளில் உங்களுக்கு உதவலாம். இரவு படுத்தால் அயர்ச்சியின் காரணமாகச் சிலர் உடனே உறங்கிவிடுவார்கள். அப்படியான அயர்ச்சியை நீங்கள் நடந்தே பெற்றுக்கொள்ளலாம். *காலையில் நடப்பது, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற காரணங்கள் தவிர்த்து, PRE OCCUPIED மன நிலையில் இருப்பவர்கள், தொடர் வேலை அழுத்தங்கள் இருப்பவர்கள், காலை எழுந்தால் ஏகப்பட்ட வேலைகள், எந்த வேலையை முதலில் செய்வது? என்று குழம்புவோர் இப்படியானவர்கள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் அழுத்தச் சூழலிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது. தங்களின் வேலைகளை அதனதன் முக்கியத்துவம் கருதி நிரல்படுத்தி (PRIORITY) எதை முதலில் முடிக்கலாம் என்ற முடிவு எட்டுவது எளிதாக இருக்கலாம். நிதானமான முடிவுகளை எட்டுவதற்கு மூளை பழக்கப்படலாம். எனக்குத் தெரிந்த சில தொழில் முனைவர்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்க யோசிப்பதற்காகவே காலையில் வாக்கிங் வருகிறார்கள். *உடல் தசைகளுக்கு முறையான இரத்தம் ஓட்டம் செல்லும்பொழுது அன்றைய நாள் முழுதும் புத்துணர்வோடு உடல் இயங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து அதிகாலை எழுவது பழக்கம் ஆவதால் மூளையும் புத்துணர்வு பெறுவதை காலப்போக்கில் உணரலாம். நண்பர்களில் சிலர் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களும், நடப்பதனால் ஏற்படும் பயன்களில் சிலவற்றையும் பார்த்தோம். ‘ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா?’ என்பது போன்ற கேள்விகளை என் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. ஒரு கட்டுரையாக எழுத எத்தனித்த இந்த விசயம், சற்றே நீளலாம். இந்தகே கட்டுரையைப் படித்தவர்கள், தங்களது நடைப்பயிற்சி பற்றிய அனுபவங்களையோ யோசனைகளையோ சொன்னால் கம்பெனி அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்று நடை பணிந்து சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து ‘நடைக் குறிப்புகளோடு’ நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து