புரட்சியாளர் பெரியார் (2)

பெரியார் பக்கம் 20 இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம். https://hexamedia.in/pp3301/ தாழ்த்தப்பட்டவர் வாழ்வில் மறுவாழ்வு கீழ்வெண்மணி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர் ஆகிய ஊர்கள் ஆதிதிராவிடர்களுக்கு இழைத்த கொடுமைகள் வேதனையின் நினைவாலயங்களாகக் காட்சியளித்தாலும் இன்று ஆதிதிராவிடர்களைக் கட்டிவைத்து, அடித்து, சாணிப்பால் ஊற்றமுடியாது. பேருந்துகளில், இரயில்வண்டிகளில், எட்டி உட்காரு என்று எவரையும் நாட்டுப்புறங்களில்கூடச் சொல்லமுடியாது. சிற்றூர்களிலும் உள்ளூர்களிலேயே ஆதிதிராவிட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேட்டுக்குடி மாணவர்கள், அவர்களைக் கண்டால், எழுந்து நின்று, ‘வணக்கம் அய்யா’ என்று கும்பிடும் நிலை பெரும்பாலான ஊர்களில் உருவாகிவிட்டது.  நீதியரசர் அ. வரதராஜன், உச்சநீதிமன்றத்தின் முதல் பட்டியல் இன நீதிபதி நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றம் உட்பட ஆதிதிராவிட நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்; பெரியாரின் தொண்டு அந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது. அந்த நீதிபதிகளை உயர் சாதி இந்துக்கள் பார்ப்பனர்கள் உள்பட ‘மை லார்ட்’ (My Lord) அல்லது ‘யுவர் ஆனர்’ (Your Honour) என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். எத்தனையோ ஊர்களில், ஊராட்சித் தலைவர்களாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.  சாதிப் பெயர் மறைவு சாதிக் குறிகளைப் போட்டுக்கொள்ளக்கூடாதென்று முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு தொடக்கத்தில் கிண்டலும் ஏளனச் சிரிப்பும் பரிசாகக் கிடைத்தன. ஆனால் கால ஓட்டத்தில் அம்முடிவு நடைமுறையாகி விட்டது. வெறும் சந்தானமாக, ஈசுவரனாக, சிவச்சைலமாக, பக்தவத்சலமாக, நடராசனாக, சாமிநாதனாக, மகாராசமாக, சோமசுந்தரமாகப் பெயரை மடக்கிக் கொள்வதே இக்கால நாகரீகம். துண்டு போட்டுக்கொண்டு நாயனம் வாசிக்கக்கூடாதென்று சிவக்கொழுந்துவுக்கு கானாக்காத்தான் ஆணையிட, அதை எதிர்த்துத் தன்மான இயக்கத்தின் பீரங்கி அஞ்சாநெஞ்சம் அழகிரிசாமி போராடிய நிலையிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி விட்டோம்! 1971 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சென்னையில் நடந்த தமிழ் இசை விழாவில், தொடக்க நாளன்று, மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த அய்வரில் செட்டிநாட்டு அரசர், ஆளுனர் K.K.ஷா தவிர, மற்ற மூவரும் கலைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாயனக் கலைஞர் வீராசாமி, நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு ஆவார்கள். அம்மூவரும் பளபளக்கும் சொக்காய் போட்டிருந்தார்கள்; அழகிய நீண்ட மேல் துண்டு அணிந்திருந்தார்கள். இவற்றையெல்லாம்விட மேலான பெருமை ஒன்றை உணர்ந்தேன். இம்மூவரில் எவரும் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு அரசருக்கு, ஆளுனருக்குச் சமமாக உட்காரலாமா என்று சங்கடப்படவில்லை. அத்தகைய சிறப்புக்கே பிறந்தவர்கள்போல், தன்னம்பிக்கையோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இதுதானே பெரியாரின் வெற்றி?!  நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு எதிர்க்கருத்து கொண்டோரும் புறந்தள்ள முடியாதது சுயமரியாதை இயக்கம். இயக்கத்தைச் சாடிக்கொண்டிருந்த ஒருவரின் வாயால் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை உளமாரப் பாராட்டப்பட்டதை நான் நேரில் கேட்டு மகிழும் பேறுபெற்றேன். பெரியார் ஆதரித்த நீதிக்கட்சியைச் சாடுவதையே காங்கிரசுத் தொண்டாகக் கொண்டிருந்த மூத்த தியாகி ஒருவரின் படப்பிடிப்பு இப்போது நினைவிற்கு வருகிறது. திரு.மீ.பக்தவத்சலம் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த காலம். நான், தமிழ்நாட்டின் பொதுக்கல்வி இயக்குநராக இருந்தேன். அலுவல் பற்றி, கல்வி அமைச்சரைக் காண, அவர் இல்லத்திற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிலும் மூத்தவர். தமிழ்நாட்டு காங்கிரசு வட்டாரத்தில் பெரிய புள்ளி. நான் உள்ளே வருவதைக் கண்டதும் அவர் எழுந்து, முன்னே வந்து, என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.  ‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று நான் அவரைக் கேட்டேன். பொங்கும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், ‘மிக நன்றாயிருக்கிறேன். ஒரு குறையும் இல்லை. மகாத்மா காந்தி புண்ணியத்தில், நாட்டுக்கிருந்த இழிவு போயிற்று. பெரியார் எங்கள் கோவை செங்குந்தர் (இசை வேளாளர்) சாதிக்கு இருந்த இழிவைப் போக்கிவிட்டார். அதில் உங்களுக்கும் பங்கு உண்டு அது பற்றித்தான் உங்களிடம் எனக்குப் பற்று. இரண்டு இழிவுகளும் துடைக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு வாழ்கிறேன் என்றார். இருவர் கண்களிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிகள் கரைகட்டின. கோவை சி.பி.சுப்பய்யா இப்படிப் பாரட்டியபோது, நான் பெரியார் கொள்கையாளனாக வாழ்வதைப் பற்றிப் பரவசமானேன்.  அரசியல் சூழலில் மாற்றம் பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமுதாய மாற்றத்தோடு நிற்கவில்லை; அரசியல் சூழ்நிலையையே மாற்றிவிட்டது. ஏழைப் பங்காளர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர்களாக விளங்கிய சமுதாய நிலையை உருவாக்கியது, பெரியாரின் சமுதாயப் புரட்சி வெற்றி பெற்றதற்கு அடையாளம். திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களும் அதை மதிக்கிறவர்களும்தான் தமிழ்நாட்டை ஆளமுடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. இது பெரியார் அளித்த கொடையாகும்.  1925இல் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் காஞ்சி மாநில மாநாட்டில் வாதிப்பதற்கும் விடவில்லை. ஆனால் அதே காங்கிரசின் சார்பில் காமராசர் அமைச்சரவை அவ்வகுப்புரிமையைக் கருத்திற்கொண்டு செயல்பட்டது. எல்லாப் பகுதியினருக்கும் கல்வி நிலையங்களில், அரசுப் பதவிகளில் உரிய பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது. ஆகவே, வகுப்புரிமை பற்றிய பெரியாரின் கொள்கை வென்றது, பெரியார் வென்றார். இலவசக் கல்வி பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் அவர்களுக்குச் சமமாகக் கல்வி அறிவு பெறவேண்டுமென்று கனவிலும் நனவிலும் பெரியார் நினைத்து வந்தார். அக்கொள்கையும் வெற்றி பெற்றதைக் கண்டோம். நம் மக்கள் உள்ளங்களையும் சமுதாயச் சூழ்நிலையையும் ‘எல்லார்க்கும் கல்வி’ என்னும் கொள்கைக்கேற்பப் பண்படுத்தி வந்தார், தந்தை பெரியார். உழுது பரம்படித்து வைத்திருந்த தமிழ்நாட்டு வயல்களில், கல்விப் பயிரைச் செழிக்க வைத்தார், கர்மவீரர் காமராசர். பகல் உணவு என்னும் நீரைப் பாய்ச்சினார்; இலவசக் கல்வி என்னும் உரத்தையிட்டார்; சீருடை என்னும் களையெடுப்பைச் செய்தார். எல்லாச் சாதிப் பையன்களும் பெண்களும் படிக்கப்போனார்கள்; முன்னர்க் காணாத அக்கறையோடு படித்தார்கள். நன்றாகத் தேர்ச்சி பெறவும் தலைப்பட்டார்கள். இவ்வளர்ச்சி பொதுக் கல்வியோடு, பள்ளிக் கல்வியோடு நிற்கவில்லை. கல்லூரிக் கல்விக்கும் தொழில் கல்விக்கும் பரவிற்று.  பள்ளி இறுதிவரை இருந்துவந்த இலவசக்கல்வி முறையை 1969இல் புகுமுக வகுப்பிற்கும் விரிவுபடுத்தி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டார். இது ஏழைகளின் மேல்படிப்பிற்குத் தூண்டுகோலாயிற்று. முன்னர், மேல்சாதிக்காரர்களே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அலுவல் பற்றி போவார்கள். இப்போது பல சாதிக்காரர்களும் பிற நாடுகளில் பணிபுரிகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் நீங்கிய மற்ற எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பதைக் காணலாம். வடநாட்டில் எதிரொலி இன்றைக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு நூற்றுக்கு இருபது இடங்களைக் கல்லூரிப் படிப்பிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்க முனையும்போது சொல்லி முடியாத கலவரங்கள் நடக்கக் காண்கிறோம். இங்கோ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, வகுப்புரிமை விரிந்த அளவில் செயல்பட்டது. புதிய அரசியல் சட்டம் அதை ஓரளவு முடமாக்கியது. இருப்பினும் பெரியார் கிளர்ச்சி செய்து, பின்தங்கியவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யலாம் என்னும் திருத்தத்தைக் கொண்டுவரச் செய்து வெற்றி கண்டார். உயர் கல்வியில் முன்னேற்றம் அதன் விளைவாக, தொழிற் கல்வியிலும் வேலைகளிலும் பின் தங்கியவர்களுக்கும் பெருமளவு நீதி வழங்க முடிந்தது. 1975ஆம் ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். சேர்க்கைகளில், தாழ்த்தப் பட்டவர்களும் பின்தங்கியவர்களும் சேர்ந்து மொத்தத்தில் நூற்றுக்கு எழுபது இடங்கள் போல் பிடிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குப் பத்துப்பதினைந்து விழுக்காடு கிடைத்திருக்கலாம். இந்தச் சமவாய்ப்புப் பெருக்கு பெரியாரின் இயக்கத்தின் பெரும்பயனாகும். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் படிக்கவேண்டும் என்பது பெரியாரின் சூடுதணியாத கொள்கை. இன்னும் அந்நிலை கைகூடாவிட்டாலும் அதை நோக்கித் தமிழ்நாடு விரைகிறது. 1978ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்காக 1055 பேர்களைப் பொறுக்கியெடுத்தார்கள். அந்தப் பட்டியலில் 196 பெண்கள் இருந்தார்கள். இன்னும் அய்ந்தாண்டுகளில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் சமமாகி விடுவார்களென்று எதிர்பார்க்கலாம். பெண்களை ஆசிரியர் தொழிலுக்கும் மருத்துவத் தொழிலுக்கும் மட்டும் எடுப்பது போதாது. காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டுமென்று 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டில் முடிவு செய்தார்கள். தற்போது காவல்துறையில் பெண்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுகின்றனர்.  கல்விமுறை, மாணாக்கரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையவேண்டும் என்னும் திட்டம் இன்றும் இலட்சியமாகவே இருக்கிறது. இலக்கியப் பகுதி என்னும் பேரால், நாம் தலைமுறை தோறும் மூடநம்பிக்கைப் பகுதிகளை நுழைத்துக்கொண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் வருகிறோம். இம்முறையை மாற்றுவது வருங்காலத் தலைமுறையின் பொறுப்பாகும். இந்தி எதிர்ப்புக் கொள்கையில் பெரியார் இன்றுவரை வெற்றி பெற்று வந்துள்ளார். பள்ளிகளில் இந்திப் பாடம் எடுக்கப்பட்டுவிட்டது. நாளை என்ன ஆகும்? சமூகவியல், பொருளியல் முறைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு கண்டு, அவற்றை அடியோடு மாற்றி அமைக்க அரும்பாடுபட்ட பெரியார், மொழிபற்றியும் புதிய, புரட்சிகரமான கண்ணோட்டம் உடையவராக விளங்கினார். தமிழ் மொழி பற்றிய ஆய்வு கடவுள், சமயம் ஆகியவற்றிற்குப் புனிதத்தன்மை கற்பித்து வந்ததை வன்மையாகத் தாக்கிய பெரியார், நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மரபுவழி கூறப்படும் புனிதத்தன்மையை எள்ளி நகையாடினார். அதே சமயம் தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துக்காட்டத் தவறியதில்லை. அவரது கூற்றுப்படி தமிழ், நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டின் வேறெந்த மொழியையும்விடத் தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூயதமிழ் பேசுவதால் – மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன்மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன. தென்னாட்டு மொழிகளை ஒப்பிட்டுக் கூறும்போது, அவர் ‘என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்களைப்பற்றி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தினார். ‘தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும்.’ ஆகவே, பிறர் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளவும், எளிதாக அச்சுக்கோக்கவும், தட்டச்சு அடிக்கவும், தமிழ் எழுத்துகளை மாற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு அடிப்படைக் காரணத்தையும் தெளிவுபடுத்தினார். ‘மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக்