ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

நூல் அறிமுகம் இருபத்தி ஆறு தலைப்புகளில், இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப் புதினம். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ‘ஜனவரி 30, 1948’ தான் இறுதி இயலின் தலைப்பு. இந்நூல், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்து விட்டுத் தம் பசுமையான நினைவுகளோடு பிரியா விடை கொடுக்கும், புதினத்தின் முக்கியக் கதைமாந்தர்களான சீனிவாச ராகவன், பிரான்சிஸ், மற்றும் செந்தூர் பாண்டியன் ஆகியோரது எதிர்காலத் திட்டங்கள் பற்றிய உரையாடலோடு தொடங்குகிறது. ஆதரவற்ற அநாதையான பிரான்சிஸ், தான் வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தினைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள கண்டியில் கிறித்துவப் பாதிரியாவதற்குப் படிக்கச் செல்கிறான்.  செந்தூர் பாண்டியன், தன் தந்தையின் வணிகத்தை மேம்படுத்த லாகூருக்குப் பயணிக்கிறான். பயணத்தின்போது, அரசு உயர் அதிகாரி ஒருவரோடு பரிச்சயம் ஏற்பட, அந்த அதிகாரி, காந்தியம் பற்றி அறிந்து கொள்ளச்சொல்லி, ரொமன் ரொலைந்த் எழுதிய நூல் ஒன்றையும், தன்வரலாற்றுப் புத்தகமான ‘சத்திய சோதனை’ நூலையும் வாசிக்கத் தருகிறார். அந்த நூல்களைப் பயணத்தின் போதே வாசிக்கத் தொடங்குகிறான் செந்தூர் பாண்டியன். பிராமண குலத்தைச் சேர்ந்த ராகவன், தன் தந்தையின் வழி, வழக்குரைஞர் தொழில் செய்யாது, புனேயில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் நிருபர் பணிக்குச் செல்கிறான். அந்தப் புதிய சூழலில், ராகவன் வரலாற்றுப் பாத்திரங்களான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கர்க்கரே, சாவர்க்கர் போன்றோர்களோடு தொடர்பு ஏற்பட்டு அவர்களோடு தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடுகிறான். இதனால், காந்தியத்தைப் பற்றியும், பிராமணீயத்தின் மறுபுறத்தையும், இந்துத்துவ அமைப்புகளின் வெறுப்பு அரசியலை மய்யமாகக் கொண்ட தீவிரவாதத் தன்மையையும் அவனால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சமயங்களின்  நல்லிணக்கத்திற்குப் பெயர் போன லாகூர் மாநகரம், அங்கு நிகழ்ந்த முஸ்லீம் லீக் மாநாட்டுப் பிரிவினைவாதத் தீர்மானத்தின் பின்புலத்தில்  தீவிரவாத இஸ்லாமியர்களின் போக்கினால் எவ்வாறு அமைதியற்றுப் போயுள்ளது என்பதை லாகூர் சென்றடைந்தவுடன், செந்தூர் பாண்டியன் கண்கூடாகப் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனுடைய சினேகிதன் யாகூப் கூட மதவெறியால் மாறிப் போயிருப்பதைக் கண்டு வருத்தம் கொள்கிறான். ஆனால், யாகூப்பின் அன்னையும், சகோதரியும் இவன் மீது எப்போதும் போல சகஜமாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில், யாகூப்பின் இளைய சகோதரி சலேலாவிற்கு, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் தாய், செந்தூர் பாண்டியனுக்கு மணம் முடிக்க யோசனையை முன்வைக்கிறார். பிறகு, தேசப் பிரிவினையுடனான சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், லாகூர் பாகிஸ்தானின் பக்கம் என்று தகவல் கசிந்தவுடன், லாகூரில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. இதன் தீவிரத்தை உணர்ந்த செந்தூர் பாண்டியனின் தந்தை சற்குணம் தன் வீட்டுப் பத்திரத்தை சலேலாவின் பெயருக்கும், தன் பெரிய கடையினை யாகூப்பின் பெயருக்கும் மாற்றம் செய்து, அவர்கள் அன்னையிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டுத் தன் மகனுடன் சொந்த ஊர் திரும்புவதாகச் சொல்கிறார். தன் தொழிலில் ஈட்டிய சொத்தையே எழுதிக் கொடுத்து விட்ட சற்குணத்திற்கு, தன் சொத்தான சலேலாவைத் தருகிறாள் அவளுடைய அன்னை. தான் மனதால் நேசித்த சலேலா, மனைவியாகப் போகும் குதூகலத்துடன்  தன் தந்தையுடன் ஊர் திரும்பும் வழியில், காவலர்கள் வழி மறிக்கிறார்கள்.  சலேலாவின் மீது கொண்ட இச்சை காரணமாக, ஒரு வாரம்  வைத்துக் கொண்டு அனுப்புவதாகக் கூறித் தன் வண்டியில் ஏற்றச் சொல்கிறார்கள். அதை எதிர்த்து மற்ற இருவரும் போராடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறான் செந்தூர் பாண்டியன். அதே சமயத்தில், சலேலாவும், காவலர் பிடியிலிருந்து திமிறி, காவலரின் கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தன்னைக் கீறிக் கொண்டு சாய்கிறாள். ஓட்டுனர் பகதூர், அதிர்ச்சியில் உறைந்து போகும் செந்தூர் பாண்டியனைத் தேற்றி,  தில்லி நோக்கிச் செல்லலாம் என்கிறான். அங்கு காந்தி தங்கியிருந்த குடியிருப்பையும், அவரது சமாதான நடவடிக்கைகளையும் கண்ணுற்ற பாண்டியன், பழி வாங்கும் எண்ணம் ஏதுமின்றி, சொல்லொணாத் துயரைத் தாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்த்து, ராகவனைச் சந்திப்பதற்காகப் புனே செல்கிறான். அங்கு ராகவனோடு கழிக்கும் கால கட்டத்தில், காந்தியைக் கொல்ல சதிவலை பின்னப்படுவதாக இருவரும் உணர்கிறார்கள். தேசப் பிரிவினையால், உலகு கண்டிராத மதக் கலவரமும், தேசம் கண்டிராத அகதிகள் பிரச்னையும் ஏற்படுகிறது. முஸ்லீம் லீக ஆட்சி செய்யும் வங்காளம் கொலைக் களமாக மாறுகிறது. வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டதுபடி, 55000 ராணுவ வீரர்கள் தில்லியில் கொண்டு வர இயலாத அமைதியை, ஒற்றை வீரராக காந்தி, நவகாளியில் தன் சாகும் வரை உண்னாவிரதப் போராட்டத்தால் கல்கத்தாவில் கொண்டு வருகிறார். அதன் பின் தில்லி வருகிறார் காந்தியடிகள். தன்னுடைய சமாதான நடவடிக்கைகள் பலனளிக்காது போகவே, பிர்லா மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரதத்தால் 79 வயது நிரம்பிய காந்தியின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்தாலும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட உறுதியுடன் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார் மகாத்மா காந்தி.    காந்தியைக் காண செந்தூர் பாண்டியன் தில்லி செல்கிறான். ஐந்து நாட்களில் நிலைமை சீரடைகிறது. ‘காந்தி செத்தொழியட்டும்’ என்று பழித்த அகதிகள், காந்தியின் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும், அமைதிக்கான உறுதிமொழியைக் காந்தியிடம் அளித்தபின், அந்த உறுதிமொழிகள் மன உறுதியுடன் நிறைவேற்றப் படாவிட்டால், தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியதிருக்கும் என்று காந்தி எச்சரிக்கை விடுக்கிறார். மௌலானா ஆசாத் பழச்சாறு கொடுக்க உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின், வழக்கம் போல காந்தி தன் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஆனால், அவரைக் கொல்வதற்கான திட்டம் புனாவில் தீட்டப்பட்டு, அதை நிறைவேற்றத் தில்லியில் திரள்கிறது மதவெறி பிடித்த கோட்சே கும்பல். ஒரு மாகாத்மாவின் கொலைச் செயலின் பின்புலமாக இருந்த மதவெறி பிடித்த பிராமணீயக் கொள்கையை மட்டுமின்றி, அந்தப் படுகொலை செயல்படுத்தப்பட்ட நுட்பமான விவரங்களையும் இந்த அற்புதமான நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  நூலாசிரியர்: கன்யூட் ராஜ் பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2022)  விலை: ரூ. 460/- ஆனந்த் பாசு