உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுகவும் முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைப் பரவல் உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள், பலமான கூட்டணி, பத்தாண்டுகால அதிமுக ஆட்சி மீதான சலிப்பு, பாஜக அதிமுக கூட்டணி மீதான வெறுப்பு  என திமுக வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நூறு நாள் ஆட்சி குறித்தான நமது சில மதிப்பீடுகள் இவை. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வருக்கு முக்கிய சவாலாக இருந்தது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது முடக்கம் இருக்காது என்று அறிவித்திருந்த முதல்வர், வேறு வழியின்றி பொதுமுடக்கத்தைச் செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவமனைகளில்  படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பல சிக்கல்கள் நிலவின. திமுக முழுமூச்சாக எதிர்த்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்க அரசு அனுமதி அளித்தது. லாக் அறிவித்த நேரத்தில் பேருந்துகளை இயக்கி அரசே நோய்ப்பரவலுக்கு வழி செய்தது. சிறு குறு நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்க பெரும் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி இயங்கின. இதனால் பெரும் பணக்காரர்களின் தொழில் தடையின்றி நடைபெற்ற அதே வேளை, எளிய மக்களின் தொழில்கள் முடங்கிப் போயின. கடந்த ஆண்டின் பொதுமுடக்கம் ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்டது என்பதால் வங்கிக் கடன் தவணை செலுத்துதல் போன்றவற்றில் கிடைத்த சலுகைகள் இந்த ஆண்டு கிடைக்காததால் நலிவடைந்தவர்கள் எளிய மக்களே. அதேநேரம், வாக்குறுதி அளித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் பணமும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையே தடுப்பூசி வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது. கொரொனாவைக் காரணம் காட்டி இன்று வரை பள்ளிகள் திறக்கப்படாதது கல்வித் துறையில் நிகழ்ந்துவரும் பெரும் பின்னடைவாகும். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு சற்றே ஆறுதல் அளித்தாலும் இனி வரும் காலங்களில் இத்தகைய சூழலைச் சமாளித்து, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதற்கான மாற்று வழிகள் குறித்து அரசு இன்னமும் சிந்திக்கத் தொடங்காதது பெரும் ஏமாற்றமே. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஏராளமான அறிவிப்புகளை மட்டுமே அள்ளித் தெளித்துள்ளதோடு, முந்தைய ஆட்சியின் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கடப்பதாக உள்ளது. பட்ஜெட்டுக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் பண வீக்கம், வளர்ச்சி வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் இன்றி அரசு கடனில் மூழ்கிக் கிடப்பதான தோற்றத்தை மட்டுமே உருவாக்கியது. முந்தைய ஆட்சியைக் குறை சொன்ன நிதியமைச்சர், கடன் வாங்குவதில் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். போலவே எல்லோருக்கும் இலவசம் கூடாது என்ற நிதியமைச்சரின் பதவிக்காலத்தில்தான் எல்லோருக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறை கடுமையான நட்டத்தில் இருப்பதாகவும் எல்லோருக்கும் பொதுவாக இலவசம் இருக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் சொல்லிக்கொண்டே அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்று அவருக்கே வெளிச்சம். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே முடியாது என்று அடம்பிடித்த நிதியமைச்சர், பட்ஜெட்டில் வேறு வழியின்றி 3 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளார். ஆனால்‌ டீசலுக்கு விலைக்குறைப்பு செய்யவில்லை.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் பள்ளிக்கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘சுவரொட்டி இல்லா சென்னை’ அறிவிப்பு, அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து, அந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள சூழலில் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாக சிறிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றோர் தங்கள் விளம்பரங்களுக்கு சுவரொட்டிகளை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விவசாயத்திற்கு முதன்முறையாக தனி பட்ஜெட் அறிவித்தாலும் ஏராளமான அறிவிப்புகள் மட்டுமே அதிலும் இடம்பெற்றுள்ளன. கரும்பு மற்றும் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பமான கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யாது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட உயர்வுத் தொகையோடு இந்த உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பனை மரம் வெட்டத் தடை, பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மைப் பாதுகாப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஓதுவாராகப் பெண்களை நியமித்துள்ளதும் வரவேற்கத்தக்கதே. அதே நேரம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலும் மாரியம்மன் கோயில், சிறிய சிவன் கோயில்களில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது முதல்படி என்பதால் குளறுபடிகளைக் களைந்து அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் குறிப்பாக 50% அர்ச்சகர்கள் பெண்களாகவும் இருக்கும் நிலையை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். ஏ.கே.ராஜன் கருத்துக் கேட்புக் குழு அமைத்தது தவிர்த்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் திமுக அரசும் முந்தைய அதிமுக அரசின் அணுகுமுறையிலேயே செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதற்கும் ஆட்சியாளர்களாக செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முன்பு ஆட்சியில் இருந்த கட்சி என்ற முறையில் திமுக அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஊழல் வழக்குகள், சொத்துக்குவிப்பு வழக்குகள் என்று முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குகள் பாயத்துவங்கியுள்ளன. இதற்கு முன்பாகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்டுள்ளோம். ஆனால், வழக்குச் செலவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறு பயன்கள் விளைந்ததில்லை. ஊழல் பணம் மீட்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்பட்ட வரலாறு இங்கே இல்லை என்பதால் இனியாவது காட்சிகள் மாறும் என நம்புவோம். மொத்தத்தில் நிறைகளும் குறைகளும் வழக்கமான நடைமுறைகளும் கலந்து நடைபோட்டு வருகிறது நூறு நாள் ஆட்சி.