வெளியேறு

வெளியேறு

சிறுகதை தயங்கி தயங்கித் தன்னுடைய இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்கக் காத்திருக்கும்போதுதான் ஜான்சியைப் பார்த்தேன். பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊருக்குத் திருமணமாகி வந்தவள். வேறு எங்கும் அவள் நின்று பார்த்ததில்லை. ஓரிரு முறை வாகனப் பயணத்தில் எதிரில் பார்த்திருக்கிறேன். ஒல்லியான தேகத்தோடு பயத்தைச் சதையாகக் கொண்டு நடமாடும் மாந்தர் ஒன்றில், நிழல் அவள். மிக மெத்த ஒப்பனை ஒன்றும் இல்லாமல் ஊடுருவும் காலை வெயிலைப்போல, எப்போதும் மெல்லியதாகவே இருப்பாள். ஊரே கூடியிருக்கும் அம்மன் கோவில் கும்மி ஆட்டத்தில் பார்வையாளர் பகுதியில்கூட அவளைப் பார்க்கமுடியாது. இயேசுவின் பிள்ளைகளும் கும்மி ஆடும் பழக்கம் எங்கள் ஊரில் உண்டு. நானூறு குடும்பம் உள்ள ஊரில், அவளைப் போலவே பலர் இருக்கக்கூடும். எனக்கு அவளைத்தானே தெரியும்..?! மவுனமாக இருவர்கள் எப்போதும் மவுனமானவர்கள் கிடையாதுதான். தன் வயதை ஒத்த பெண்கள் இருக்கும் இடத்தில் சட்டென்று பூத்துவிடுவார்கள். விரல்களைக் கோர்த்து, தோள்கள் உரசி, கன்னம் தொட்டுப் பேசுபவர்களை நீங்களும் நானும் பெண்களாகத்தான் பார்க்கமுடியும். பிடுங்கி நட்டுவைத்த மரம் போலவோ அல்லது பருவம் தவறிய பயிர் போலவோ, திருமணம் முடிந்த சில பெண்கள் மெதுவாகத்தான் நகருகிறார்கள். ‘என்ன பிரச்னை..?’ என்று கேட்டதற்கு, எனக்குக் கேட்கும்படியான பதில் அவள் சொல்லவில்லை. ஆயில் கேன் கொண்டுவந்து அமர்ந்த மெக்கானிக் எனக்கு நல்ல பழக்கம். சொல்லவேண்டும் என்றுதான் நினைத்தேன், ‘எங்க ஊர்ப் பெண்… நல்லா பார்த்து அனுப்புங்க’ என்று. ஆனால் தயக்கம். உடைக்கப்படுகிற மவுனம் ஒன்று, அதீத வேறுபாடாவோ அல்லது விளக்கமுடியாத பற்றாகவோ மாறிவிடக்கூடும் என்று நினைக்கிறேன். அவள் அப்படியே இருக்கட்டும். மேல்வீதி பஜனைக் கோவிலுக்கு முன்பாக இருக்கும் ஒரு பாட்டியை நான் பார்த்திருக்கிறேன். கிருஷ்ணஜெயந்தி அன்றுதான் நான் கவனித்திருக்கவேண்டும் அல்லது புரட்டாசி சனிக்கிழமை பஜனையில் இருக்கலாம். அழகாகப் பாடும் என்றில்லை. சக்கரைப் பொங்கலுக்குக் காத்திருக்கும் எங்களுக்கு என்ன சங்கீதம் தெரியும்? ஆனால் அந்தப் பாடல் ஏதோ செய்யும். மிக வேகமாக, மிக சத்தமாகப் பேசி விளையாடிய எங்களை, அந்தப் பாடல் மெதுவாகத் திருணையில் அமர்த்தி, வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லும். அந்தக் குரலை நாங்கள் வேறு எங்கேயும் எப்போதும் கேட்டிருக்க முடியாது. நாமம் இட்ட அந்தப் பாட்டியை அதற்குப் பின்பாக எத்தனையோ முறை பார்த்தாலும் அவளிடமிருந்து எங்களுக்கு எந்தச் சத்தமும் சொல்லும் வந்ததில்லை. கடைசியாகப் பாட்டி இறந்தபோது அதே பஜனை பாடப்பட்டது. ஆனால் அது அவள் பாடியதுபோல் இல்லை. இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு என்னிடம் நகர்ந்தார் மெக்கானிக். நிறைய பேசிக்கொண்டோம். ஆனால் எனக்குள் இரண்டு சொற்கள்தான் இருந்தன. ஒரு பாடலும் ஒரு மவுனமும் ஒன்றா? இரண்டும் வேறு வேறல்லவா? தன் துயரை, மகிழ்வை ஒரு பாடலால் வெளிப்படுத்த முடியும் என்றால். மவுனமானவர்களின் துயர் எது? மவுனம் ஒரு துயர்தானா..? அது இயல்பு இல்லையா..? அல்லது மகிழ்வை எப்படி மவுனமானவர்கள் கொண்டாடுகிறார்கள்? பஜனைப் பாட்டியின் பாடலில் துயர் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஆசுவாசம் என்று எனக்குத் தோன்றியதுண்டு. ஜான்சியைத்தான் என்னால் ஊடுருவ முடியவில்லை. சில நாட்களில் எனக்குத் தோன்றியதுண்டு, இரண்டு பேருக்கும் குழந்தைகள் இல்லை என்ற ஒற்றுமை உண்டென்று. ஆனால் விஜயா அப்படி இல்லை. எல்லா நேரங்களிளும் ஒரே குரல் அளவோடு பேசுவாள். பேசுவாள் என்பது அத்தோடு முடிவது இல்லை, அவளாக நிறுத்த வழியில்லை. நாமாக விடுவித்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் எனக்கு அவள் குழந்தையாகத் தெரிவாள். தனக்குக் கிடைக்காத ஒன்றாக இருக்கும் குழந்தையை மனத்தால் வளர்க்கத் தொடங்கியவள் அவள். எல்லாக் குழந்தைகள் மீதும் அவளுக்கு அன்பு மட்டுமில்லாமல் உரிமையும் இருக்கும். குழந்தையின் தாய் மட்டும் செய்யும் செயலைக்கூட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வாள். ‘உனக்கு அந்தக் கவலை இல்லையா?’ என்று எனக்குக் கேட்கத் தோன்றும். ஆனால் அதற்கும் அவள் சிரித்துக்கொண்டேதான் பதில் சொல்லுவாள் என்பதால், இதுவரை கேட்கவில்லை. ஒரே ஊருக்குள் நான் பார்க்கும் இந்த மூன்று முகங்களில் பஜனைப் பாட்டி இல்லை. இனி அவள் மவுனமும் பாடலின் அர்த்தமும் தேவையில்லை.  ஆனால், ஜான்சியின் மவுனத்தை உடைக்க ஒரு குழந்தையால்தான் முடியுமென்றால் இரண்டு தெய்வங்களில் ஒன்று விஜயாவைவிட முதலில் ஜான்சிக்கு அருளட்டுமே!

வில்லிசை நாயகன்

வில்லிசை நாயகன்

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியவர். 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டுக் கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வில்லுப்பாட்டினால் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர். வில்லுப் பாட்டுக் கலை தமிழ் நாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அவருக்குப் பிறகு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளவில் பரவியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு, வித்துவான் ஆ.க.நவநீத கிருஷ்ணன் பிள்ளை என்பவர் ஆவார். இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன்பிறகு ‘மதுரை தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற நூலை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்தி மகான் கதையை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். திரையுலகில் கலைவாணர் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்த பல படங்களுக்கான நகைச்சுவைக் காட்சிகளையும் எழுதியுள்ளார். 1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி ‘கருணைக்கடல் காஞ்சி காமாட்சி’ என்ற தலைப்பில் அரங்கேறியது. ‘காந்தி வந்தார்’ என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது. கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார். கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசால் ‘கலைமாமணி’ என்ற கௌரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் சுப்பு ஆறுமுகம் பெற்றுள்ளார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றான வில்லிசையின் நாயகராகத் திகழ்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். தாணப்பன் கதிர்

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி யின் வெற்றியும்தான். நிறைய பேர் நா.முத்துக்குமார் குறித்துப் பேசுகிறபோது, யுவனைப் பேசுகிற அளவுக்கு ஜி.வி. குறித்துப் பேசுவதில்லை. ஆனால் வெயில், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய ஜி.வி.யின் முக்கியமான ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார்தான். ‘தலைவா’விலும் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய பாடல்கள் உண்டு (பலர் ஜி.வி.இசையமைத்த பாடல்களையும் யுவன் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர்). இந்த இருவரைத் தவிர பிறருக்கும் எழுதியிருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் ஊடுருவி விட முடியாத ரஹ்மானின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி, ஆறு படங்களில் பாட்டு எழுதி விட்டார் (பல்லேலக்கா – சிவாஜி, வளையபட்டித் தவிலு- அழகிய மகன், ராத்திரியின் சொந்தக்காரா- பார்த்தாலே பரவசம், டாக்ஸி டாக்ஸி- சக்கரக்கட்டி, ஜோதா அக்பர், சர்வம் தாளமயம்) பட்டுக்கோட்டையின் பலம் சமூகம். கண்ணதாசன் மரபு சார்ந்த தமிழ் வாழ்வியலையும் பக்தி மரபையும் எளிமைப்படுத்தித் திரையில் தந்தவர். வைரமுத்து மரபு இலக்கியத்தை நவீன சிந்தனைகளோடு இணைத்தவர்; கூடுதலாக கிராமிய வாழ்வியலையும் நவீன வாழ்வின் பல்வேறு கூறுகளையும் திரையில் வடித்தவர். அறிவுமதி தனக்கான தனித்துவத்துடன் கூடிய கவிஞர்; அப்துல் ரகுமானின் திரையுலக பிம்பம்‌. பழநி பாரதி நவீன மெட்டுகளுக்கேற்ப, தாளங்களுக்கேற்ப கவித்துவத்துடன் கூடிய புதுமையான வரிகளைக் கண்டறிந்தவர். தாமரை காதலின் பெண் மொழியை பாடல்கள் வழி பேசியவர். வாலி இந்தக் கணக்கில் வர மாட்டார். அவர் பாத்திரத்தின் வடிவத்தைத் தானும் அடைந்து விடும் நீர் போன்றவர். அவர் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். ஆனால், இயற்கை சார்ந்த ஜென் மனநிலையையும் பித்தேறிய காதலின் உளறல்களையும் தனித்துவமாக பாடல்களில் வடித்தவர் நா.முத்துக்குமார்தான். ‘மின்சாரக் கம்பியின் மீதுமைனாக்கள் கூடு கட்டும்’என்பதெல்லாம் அழகிய படிமம். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்காற்றிடம் கோபம் கிடையாது’என்று கேட்பதற்கு மரங்களோடு உறவாடுகிற மனநிலை வாய்த்திருக்க வேண்டும். ‘தாராளமா மனசிருந்தாகேரளான்னு தெரிஞ்சுக்க’என்றெழுதிய ரசனை நிறைந்த குறும்புக்காரன். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்கு தானே மருந்து’என்றார் வள்ளுவர். பிற நோய்களுக்கு மருந்து வேறிடத்தில் இருக்கும்; காதல் நோய்க்கு அதுவே மருந்து என்கிற வள்ளுவரின் சிந்தனையை‘காதல் நோய்க்கு மருந்து தந்துநோயைக் கூட்டுமே’என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றவர். பெண்ணின் கண்களைப் பார்த்து‘உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களென்பேன்’என்று சொல்வதற்கெல்லாம் எப்படிப்பட்ட ரசனை இருக்க வேண்டும்..!! ஆழமாக மட்டுமல்ல, எளிமையான வரிகளிலும் காதலைச் சொல்லி விட முடியும் அவரால்.‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லைஅவள் அப்படி ஓன்றும் கலரில்லைஆனால் அது ஒரு குறையில்லை’என்பதுதானே சாமானியக் காதலனின் குரலாக இருக்க முடியும்..! ‘கொடுத்ததை திருப்பி நா கேட்ககடனா கொடுக்கலையேஉனக்குள்ளதானே நா இருக்கேன்உனக்கது தெரியலயேபாக்காத பாக்காதகுத்தும் பார்வையால்என்ன பார்க்காதேபோகாத தள்ளிப் போகாதேஎன்ன விட்டு விட்டுதள்ளித் தள்ளிப் போகாத’எவ்வளவு எளிமையான சொற்களில் மிகப்பெரிய உணர்வு சொல்லப்பட்டிருக்கிறது..! ‘கதைகளைப் பேசும் விழியருகேஎதை நான் பேச என்னுயிரே’என்று சொற்கள் திகைத்து நிற்கிற இடத்தையும் எல்லா கவிஞர்களையும் போலவே இவரும் அடையாளம் காட்டியிருக்கிறார். ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்‌‌காற்றுவெளியில் கலந்தே இருக்கும்சாம்பல் உதிரும்.. வார்த்தை உதிருமா?பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்உயிரும் போகும்.. உருவம் போகுமா?உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்‌விரல்கள் இன்று எங்கே?தோளில் சாய்ந்து கதைகள் பேசநமது விதியில் இல்லைமுதல் கனவு கண்டிடும் முன்னரேதூக்கம் கலைந்ததே’என்றெல்லாம் எழுத, காதலின் அமானுஷ்யத்தை உணர்கிற அரூப மொழியில் உழன்றவனாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் ஊரறிந்தவை. பெண் குழந்தை பற்றிய திரைப்படப் பாடல்களில் ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும் (வைரமுத்து).ஆனால், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் கவித்துவமும் கற்பனையும் நன்றாக இருக்கும்.‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’என்பது அழகான தொடக்கம்; சந்தேகமே இல்லை. ‘இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்பது அழகான ஏக்கம்; அதிலும் சந்தேகமே இல்லை. ‘தூரத்து மரங்கள் பார்க்குதடிதேவதை இவளா கேக்குதடிதன்னிலை மறந்து பூக்குதடிகாற்றினில் வாசம் தூக்குதடிஅடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?உனது புன்னகை போதுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்ற வரிகளிலும் அதே வாசம். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடிவானத்து நிலவு சின்னதடிமேகத்தில் மறைந்தே பார்க்குதடிஉன்னிடம் வெளிச்சம் கேட்குதடிஅதைக் கையில் பிடித்து ஆறுதல் உரைத்துவீட்டுக்கு அனுப்பு நல்லபடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்கிற இடத்தில் டோஸ் ரொம்ப கூடி, காதல் பாடலின் மிகை வந்து விடுகிறது. சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்துக்குப் பிறகு, கவிதைத் தொகுப்புகளும் நன்றாக அமைந்தது பழநி பாரதி, யுகபாரதி, முத்துக்குமாருக்கு மட்டுமே. கதை வடிவில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படத்தான் தோன்றுகிறது. மானசீகன் ஓவியங்கள்: ரம்யா ரோஷன்