கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

மீண்டும் வளம் பெறுமா? நாம் அறிந்த வரையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முற்றிலும் புதிதாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்தலமென்றால் அது பூம்புகார்தான். சிலப்பதிகாரத்தின் கதை மாந்தரின் ஊரான பூம்புகார், பழைய காலத்தில் புகார் நகரம் என்றே அழைக்கப்பட்டது. காவிரி புகும், பகைவர்கள் புகார் எனும் பொருள்படும், ‘புகும் புகார்’ என்பதே பின்னாளில் பூம்புகார் என்றானது. காவிரிப்பூம்பட்டினம் என்றொரு பெயரும் உண்டு இதற்கு. சங்க காலம் முதலே சோழர்களின் துறைமுக நகராகவும் முதல் தலைநகராகவும் விளங்கியது. காலப்போக்கில் கடல்கொண்ட புகார் நகரம் போய், ஒரு சிறு மீனவ கிராமமாகச் சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் சிலப்பதிகாரத்தின் நினைவாக ஒரு சுற்றுலாத்தலம் அமைக்க விரும்பினார் கலைஞர். அதன்படி இங்கே சிலப்பதிகாரக் கதையை விளக்கும் அழகிய சிற்பங்கள் அடங்கிய சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், கண்ணகி கோட்டம் ஆகியவையும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் முகப்பு அக்கால எழுநிலை மாடத்தின் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளே சிலப்பதிகாரக் காட்சிகளும் நடு முற்றத்தில் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு ஆளுயரத்துக்கு மேற்பட்ட கலைநயம் கொஞ்சும் சிலைகளும் அமைக்கப்பட்டன. அக்காலப் புகார் நகரின் அமைப்பை விளக்கும் முப்பரிமாண மாதிரி வடிவம் ஒன்றும் இதில் இருந்தது. கலைக்கூடத்தைச் சுற்றி கண்ணைக் கவரும் தோட்டங்களும் நடைபாதைகளும் இளைப்பாறும் இடங்களும் அமைக்கப்பட்டன. இளங்கோ அடிகளுக்கும் கரிகால் சோழனுக்கும் கம்பீரமான சிலைகள் அமைக்கப்பட்டன. வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமாய் ஜொலித்தன. இந்தக் கலைக்கூட எழுநிலை மாடம்தான் முன்பு தமிழ்நாடு செய்திப் பிரிவின் இலட்சினையாக (லோகோ) விளங்கியது. இதனைத் தவிர சிலப்பதிகாரத்தில் ஐவகை மன்றங்கள் பூம்புகாரில் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. 1.வெள்ளிடை மன்றம், 2.இலஞ்சி மன்றம், 3.நெடுங்கல் மன்றம், 4.பூத சதுக்கம், 5.பாவை மன்றம் ஆகியவையே அவை. இவற்றில் வெள்ளிடை மன்றம், பூத சதுக்கம் தவிர மற்ற மூன்று மன்றங்கள் இக் கலைக்கூடத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. 1. இலஞ்சி மன்றம் கூன் முதுகுடையோர், குள்ளமாய்ப் பிறந்தோர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்கள் மூழ்கி எழுந்து, அந்தக் குறைபாடுகள் நீங்க சுற்றிவந்து வழிபட, பொய்கையும் மண்டபமும் கூடிய இலஞ்சி மன்றம்! “கூனும் குறளும் ஊமும் செவிடும்அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்றுவலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” – சிலப்பதிகாரம். இது தற்போது, ஒரு பூங்காவின் நடுவே இரண்டு தடாகங்களும் (நீச்சல் குளம்) இரண்டுக்கும் இடையில் ஒரு மண்டபமும் அதன் இருபுறமும் உடை மாற்றும் அறை போன்ற வட்ட வடிவ அறைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலும் நீராடும் பெண்ணின் பல்வேறு நிலைச் சிற்பங்கள் – நீராடச் செல்லுதல், உடை அணிதல், ஒப்பனை செய்து கொள்ளல், மாலை சூடுதல் என்ற நிலைகளில் பெண்களின் கலைநயமிக்க சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2. பாவை மன்றம் அரசன் நீதி தவறும்போதும் நீதி வழங்கும் அவையில் தவறான தீர்ப்பு – நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பில் வழங்கப்படும்போதும் அந்தத் தவறை வாய் திறந்து சொல்லாமல் குறிப்பாலே கண்ணீர் வடித்துக் காட்டிக்கொடுக்கும் பாவை நிற்கும் பாவை மன்றம் ! “அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்” – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் நேர் எதிரே பூங்காவிற்கு இடையில் ஒரு வட்ட வடிவ மண்டபமாக உள்ளது. இதில் சிலப்பதிகார வரிகளுடன் பெண்களின் சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளன. 3. நெடுங்கல் நின்ற மன்றம் பிறரால் வஞ்சிக்கப்பட்டு பித்துப் பிடித்தவர்களும் நஞ்சு உண்டு அவதிப்படுவோரும் பாம்பு தீண்டியவர்களும் பேய் பிடித்தவர்களும் சுற்றி வர, அவர்களின் துயரத்தைப் போக்கும் நெடிய கல் நிற்கின்ற நெடுங்கல் நின்ற மன்றம்! இது ஒரு Menhir கல்போல இருந்திருக்கலாம். வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்சுழல வந்து தொழத்துயர் நீங்கும்நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்! – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் பின்புறம் ஒரு கலைநயமிக்க நெடுந்தூணும் அதனைச் சுற்றிலும் சிற்பங்களும் கொண்ட அழகிய கலை வடிவம். இதன் மினியேச்சர் வடிவத்தைதான் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோவாகப் பயன்படுத்தினார். இதைத்தவிர சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு ஓட்டலும் உணவு விடுதியும் நத்தாங்கூடு மற்றும் முத்துச்சிப்பிகளின் வடிவில் காட்டேஜ்களும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் வெளி நுழைவாயிலிலிருந்து, கதவு, கைப்பிடி, பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையம்கூட சிலம்பு வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டது. இந்திரவிழா நடத்தும் பொருட்டு ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டது. இது தவிர ஊருக்கு ஏழு கிலோமீட்டர் முன்னதாகவே பூம்புகார் நுழைவு வாயில், கரிகால் சோழன் தோரண வாயில், இளங்கோ அடிகள் தோரண வாயில், கோவலன் தோரண வாயில், கண்ணகி தோரண வாயில், மாதவி தோரண வாயில் போன்ற வாயில்களும் அமைக்கப்பட்டன. சுற்றுலாவை மேம்படுத்த, தமிழ்நாட்டில் எங்கு பேருந்துகளுக்கு சுற்றுலா ரூட் பர்மிட் கேட்டாலும் அதில் தஞ்சை மாவட்டத்திற்கான பர்மிட் கட்டாயமாக சேர்த்தே அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் இந்திரவிழா, அரசு விழாவாக மாவட்ட நிர்வாகத்தால் கலை/இலக்கிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இவையெல்லாம் கலைஞர் ஆட்சியிலிருந்த வரை சிறப்பாக நடைபெற்றன. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த இடம் கேட்பாரற்று விடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி கலைஞர் தலைமையில் வந்தபோதும் இந்த இடம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. இந்திர விழா மட்டும் பெயரளவில் நடைபெற்றது. பூங்காக்கள் அழிந்தன; கட்டடங்கள் சிதிலமுற்றன; முத்துச் சிப்பி, நத்தாங்கூடு வடிவக் காட்டேஜ்கள் எலும்புக்கூடாய்ப் போய் இன்று தரை மட்டமாகி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பாவை மன்றம் நாய்களும் சமூக விரோதிகளும் புழங்கும் இடமாயிற்று. நெடுங்கல் மன்றத்தைச் சுற்றி இருந்த பூங்காக்கள் அழிந்து, இன்று அருகில் செல்லக்கூடப் பாதை இல்லாமல் திறந்த வெளியில் நிற்கின்றன. இலஞ்சி மன்றத்தின் நீச்சல் குளங்கள் வறண்டு போய், பூங்காக்கள் அழிந்து, அதன் கருமை நிற கிரானைட் கட்டடங்களின் மேல் தற்காலக் காவியக் காதலர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளனர். இதன் நுழைவாயில் வாசமிகு கருவாட்டுக் கடைகளால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஓட்டலும் உணவகமும் காணாமல் போய்விட்டன. ஒரே ஒரு சுற்றுலா அலுவலகம் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ளவர்களிடம் பூம்புகார் பற்றியோ சிலப்பதிகாரம் பற்றியோ எந்த ஒரு தகவலும் கிடைக்காது. சுக ஜீவனம் நடத்தும் அரசு ஊழியர்கள். தற்போது கலைக்கூடத்தையும், ‘புதுப்பிக்கிறோம் என்ற பெயரில்’ நீண்ட காலமாக மூடி வைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மற்ற இடங்களை, திறந்த வீட்டில் குக்கல்கள் போலச் சுற்றி வரலாம். சிலம்பு வடிவப் பேருந்து நிலையம் பழுதுபட்டுள்ளது. அதனைச் சுற்றி ஜேசிபிக்கள் ஏதோ பணி செய்கின்றன. கலைஞரின் கனவு சுற்றுலாத்தலமான பூம்புகாரை ஏனோ கலைஞரே பின்னாளில் கண்டுகொள்ளவில்லை; தொகுதியையும்தான். நீண்டகாலம் தொகுதியைக் கூட்டணி வேட்பாளர்களுக்கே ஒதுக்கினார். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் தற்போது திமுக எம்.எல்.ஏ. பார்க்கலாம், பூம்புகார் மீண்டும் நலம் பெறுகிறதா, வளம் பெறுகிறதா என்று.

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார்.  அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும்.   முகப்புப் படம்: இணையத்திலிருந்து