தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

[குழந்தைகளின் கல்வி நலனில் கவலையும் அக்கறையும் கொண்டு, ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை சுவடு இதழ் மனதாரப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரை அவர்களைக் குறித்தது அல்ல.] ‘உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதனால் பல வருடங்கள் பின் தங்கிய சூழலுக்குப் போய் விட்டோம்’ என்று யூனிசெஃப் குழந்தைகள் அமைப்பு உட்பட பல தனியார் அமைப்புகள் ஆய்வு செய்து, தங்கள் ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வழியே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இவை தமிழகத்திற்கும் பொருந்தும். கூடுதலாக இங்கு தனியார் மயமும் தலைவிரித்தாடுகிறது. பெண் குழந்தைகள் திருமணம் எல்லா மாவட்டங்களிலும் நடப்பது பற்றிய புள்ளி விபரங்கள் வெளியாவது தொடர்கிறது. அதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆசிரியைகளைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. நமது சுவடு இதழ் A3 ஆசிரியர்கள் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில், இவற்றையெல்லாம் விரிவாக விவாதித்து அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.  அடித்தட்டு மக்களின்  பிரதிநிதியாகவும், கல்வி வரி, தொழில் வரி, வருமான வரி, சாலை வரி உள்ளிட்ட பலப்பல வரிகளைக் கட்டி வரும் சாதாரண குடிமகன்கள் சார்பாகவும், கல்வி மீதும் எதிர்காலத் தலைமுறை மீதும் அக்கறையும் பொறுப்பும் கொண்டவர்களாகவும் இங்கு சில நியாயங்களைக் கேள்விகளாக முன் வைக்கிறோம்.  அரசுப் பள்ளி ஆசிரியர்களே, வேலையே செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்க வெட்கமாக இல்லையா? தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முழுவதுமே ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. இன்று வரை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் பல லட்சங்களை சம்பளமாகப் பெற்றுள்ளீர்கள். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘உறவினர் வீடே என்றாலும் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, அது தன்மானத்துக்கு இழுக்கு’ என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களோ  கடந்த 15 மாதங்களாக  சும்மா இருந்து கொண்டே சம்பளம் வாங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  பல்லாயிரம் ஆசிரியர்கள் பணி புரியும் நமது கல்வி அமைப்பில் மிகச் சொற்ப விழுக்காடு ஆசிரியர்கள்தான்  குழந்தைகளுக்காக ஏதாவது ஒரு வகையில் பேசிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றனர். மீதமுள்ள பெரும்பான்மை ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் அரசு வழங்கும் சம்பளத்தைக் கொஞ்சமும் கூச்சமின்றி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் சொந்தமாக  ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டும் விவசாயம் பார்த்துக் கொண்டும்  வேறு ஏதாவது  சொந்தத் தொழில் செய்துகொண்டும் ஏதோ ஒரு வகையில் இன்னும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதோடு அரசு தரும் மாத ஊதியத்தை ஒரு பைசா குறையாமல் வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.  ஆனால் மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பொது மக்கள், வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமே இல்லாமல் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலப்பல சிக்கல்களைச் சந்தித்து வரும் அந்த மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்கள் வாங்கும் சம்பளம். ஆனால், அந்த மக்களின் குழந்தைகளது கல்வி குறித்து அக்கறை எதுவுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு, ‘அரசு பள்ளியைத் திறக்கவில்லை, அரசாங்கம் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்’ என்று சொல்லி அரசின் மீதே பழியைச் சுமத்தி தப்பித்துக் கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த உணர்வே இல்லாமல் கற்பித்தல் பணியையே அவமதிக்கும் இந்த ஆசிரியர்களுக்கு தங்கள் பணி குறித்த பொறுப்புணர்வும் சொரணையும் என்று வரும்? தண்டச்சோறு தின்னும் ஆசிரியர் சங்கங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும், பதவி உயர்வு, சம்பளப் பற்றாக்குறை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு போன்ற தங்களது சொந்த நலன் சார்ந்து அரசை எதிர்க்கும், போராட்டங்கள் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சமாவது கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இந்தக் கல்வியாண்டாவது பள்ளிகளைத் திறக்க எங்காவது குரல் கொடுத்தீர்களா? முதல்வரிடம் நல்ல பேர் வாங்க கொரோனா நிதியை (குழந்தைகளின் கல்விக்காக வாய் திறக்காத ஆசிரியர்களிடம் இருந்து) வசூலித்து அரசிடம் கொடுக்கத் தெரிந்த சங்கங்களுக்கு, தங்கள் வாழ்வதாரத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளது கல்வி நலன் பேணப்பட வேண்டும் என்று கொஞ்சமும் தோன்றவில்லையா?  குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லையென்றால் உங்களுக்கு வேலை ஏது? சம்பளம் ஏது?  உங்கள் சங்கங்களின் உறுப்பினராக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வகுப்பறைகளில் பயின்ற லட்சக் கணக்கான குழந்தைகள் இப்போது எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? குழந்தைத் தொழிலார்களாகப் போய்விட்டனரா?  திருமணம் செய்துகொண்டு போய்விட்டனரா? போன்ற தகவல்கள் ஏதாவது தெரியுமா? அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வர ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டீர்களா?  கொரோனா சூழல் இப்படியே நீடித்தால், அரசு உங்களுக்கு வாழ்நாள் முழுக்க தண்டச்சோறு போட்டுக்கொண்டிருக்கும் என்ற கனவில் மிதக்கிறீர்களா? இதனால் அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும்  அபாயம் உள்ளதை உணர முடியவில்லையா? இந்தச் சூழலில் மாற்று வழிகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லையா? உழைக்காமல் ஓசிச்சோறு தின்ன உங்களுக்குக் கூசவில்லையா?  கல்வி அதிகாரிகளே, நீங்கள் பூம்பூம் மாடுகளா? ஆசிரியர்களாவது கற்பித்தல் பணியைச் செய்கின்றனர். ஆனால் நமது தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை முன்னேற்றத் திட்டமிடும் இடத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியை மட்டும் சுற்றறிக்கைகளாக அனுப்பிக்கொண்டு இருப்பீர்கள்? ஆசிரியர்களை விட ஒன்றிரண்டு மடங்கு அதிக ஊதியம் பெறும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்களும் கடந்த 15 மாதமாக வேலை செய்யாமல்தானே சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லைகளில் எத்தனைக் குழந்தைகள் வேலைக்குப் போய், அவர்களின் கல்வி நாசமாகப் போய்விட்டது என்று தெரியுமா? மாநிலமெங்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை நிர்வகிக்கும் அலுவலுக்காகத்தானே அத்தனை சம்பளமும் பெறுகிறீர்கள்? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு? இன்னும் எத்தனைக் காலம் கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிக்கூடங்களை மூடி வைத்து, குழந்தைகளைக் கற்றலில் இருந்து விலக்கி வைத்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? படிக்காத குழந்தைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகம் அச்சடிப்பது எதற்காக? கமிஷன் அடிக்கவா? பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்ற எந்த விவரமும் இல்லை. இந்தச் சூழலில் மாற்று வழி குறித்து கொஞ்சமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆட்சியாளர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சொல்வதற்குத் தலையாட்டும் பூம்பூம் மாடுகளா நீங்கள்?  லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த ஆண்டு தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஆங்கில வழியில் படித்தவர்கள் அல்லவா? கல்வித் தொலைக்காட்சியில், பாடங்களைத் தமிழ் வழியில் மட்டும்தானே ஒளிபரப்புகிறீர்கள்? எனில், ஆங்கில வழியில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன? இதுகூடத் தெரியாமல்தானே அதிகாரிகளாக அமர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் கல்வித் தொலைக்காட்சி பாடத்திட்டத்தை எழுதச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புகிறீர்கள்? சம்பளம் பெறுவதற்கு உங்களுக்குப் பதிவேடுகள் வேண்டும். குழந்தைகள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? பள்ளிகள் திறந்தால் என்ன? திறக்காவிட்டால் உங்களுக்கு என்ன? 8ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது இந்த வருடம்தான் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. அது கல்வி உரிமைச் சட்டம் 2010-லிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் 9 , 10 , 11 வகுப்பு முடித்து,  கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமலும் அரசுப் பள்ளியில் சேர முடியாமலும் தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினீர்களா? இந்தப் பிரச்சினை குறித்து அரசுக்கு ஏதேனும் வழிகாட்டினீர்களா?  கொரோனா காலத்தில் எத்தனைக் குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்றும் அவர்களை எப்படி மீட்டு பள்ளிக்குள்  கொண்டுவருவது என்றும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? இந்தப் பணிகள் எல்லாம் நடக்கிறதா இல்லையா என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? எந்தப் பணியும் செய்யாமல் கல்வித் துறையின் வட்டார, ஒன்றிய, மாவட்ட, மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் எதற்காக இருக்கிறீர்கள்? அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் உறங்குகிறதா?  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படை கல்வி வாய்ப்புகள்தான். ஆனால் அது தற்போது எதிர்த்திசையில் பயணிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அவர்களே, தமிழக முதல்வர் அவர்களே, கடந்த ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே கொரோனா தாக்கம், பள்ளிகள் மூடல் என்ற நிலை இருந்ததே? அது அடுத்த வருடமும் தொடர்ந்தால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? அது கூடப் பரவாயில்லை. உழைக்கும் மக்களிடமிருந்து வாங்கும் வரிப்பணத்தில் ஆசிரியர்களை வேலையின்றி உட்கார வைத்து ஓசிச் சம்பளம் கொடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கொரானா நீடிக்கும் எனத் தெரியாத சூழலில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க வேண்டாமா? இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டாமா? சிறந்த கல்வியாளர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டாமா?  குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாமல், தங்கள் மன உணர்வுகளை, அழுத்தத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தவறான  நடத்தை மாற்றங்களுக்கும் உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இந்தக் கோணத்தில் பள்ளிக் கல்வித்துறை இப்பிரச்சினைகளை அணுகியதா? சமூகத்தைப் பல வருடங்கள் பின்னுக்கு தள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழலையே தற்போது வளர்த்து வருகிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை இழந்து தங்கள் உயிரையே இழந்து வரும் செய்திகள் கூட வருகின்றன. இணையவழிக் கல்வி பெருகி வருகிறது. இது நம் எதிர்கால சந்ததிக்கு நல்லதல்ல. பள்ளிகள் மூடல் தொடர்ந்தால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் அருகிவிடும். பள்ளிகள் வெறும் பாடம் கற்பிக்கும் இடமல்ல, குழந்தைகளின் நடத்தை மாற்றங்களைச் செதுக்கும் சிற்பக் கூடங்கள். தயவு செய்து பள்ளிகள் திறப்பில் மாற்று முறைகளைக் கையாளுங்கள்.  எங்கே போயின எதிர்க்கட்சிகள்?  பள்ளிகள் நிரந்தரமாக மூடிக் கிடக்கின்றன. குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிறது. ஆசிரியர்கள்  வேலையே செய்யாமல் ஒன்றரை ஆண்டு காலமாக