பழம்பெருமை பேசுவதுதான் கல்வியா?

பழம்பெருமை பேசுவதுதான் கல்வியா?

தொடக்கக் கல்வியில் நுழைந்துள்ள NCFFS ஆபத்து குறித்து AISEC அமைப்பு முன்னெடுத்துள்ள தொடர் உரையாடலின் முதல் அமர்வின் நிறைவுப் பகுதி;   NCFFSஇன் பல்வேறு இடங்களில் பண்டைய (ancient) என்ற சொற்பயன்பாடு குறித்தும் அதன்வழியே தொடக்கக் கல்வியைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சி குறித்தும் முந்தைய பகுதியில் பார்த்தோம். நடைமுறையில் இருக்கும் சில புதிய தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் மற்றும் கல்வியின் நோக்கம் குறித்து இதில் கூறப்பட்டுள்ளவை குறித்த உரையாடலைத் தொடர்கிறார் பேராசிரியர் யோகராஜன். (NIPUN) National Initiative for proficiency in Reading with Understanding and Numeracy) நிபுன் பாரத் திட்டம் என்ற இந்தத் திட்டம்தான் NEP 2020இன் திட்டம். அதைத்தான் நமது தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டம் என்று கூறி நடைமுறைப்படுத்தி வருகிறது. வித்யா பிரவேஷ் (Vidya Pravesh) – கல்விக்குள் நுழையும் குழந்தைகளுக்கு 4 மாத காலத்திற்கு ஓரியண்டேஷன் தரும் திட்டம். இதற்கான கலைத் திட்டங்களை NCERT உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர். பாலவாடிகா (Balvatika) – இத்திட்டம் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு ECCE தகுதியுள்ள ஆசிரியர்களை வைத்துக் கற்பிப்பதாகக் கூறுகின்றனர். இதை நம் தமிழகம் 2020இல் எல்லாப் பள்ளிகளிலும் அவசர அவசரமாகக் கொண்டுவரும்படி கட்டாயமாக்கி, முழு வீச்சில் நடத்தியது. அதன்பிறகு அது கவனிக்கப்படவில்லை என்பதும் உண்மை. மேலே சொன்ன பல்வகைத் திட்டங்களை, இந்தக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த வழி விளையாட்டுகள் என்கின்றனர். விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும்  விளையாட்டுகளின் வகைகள் குறித்து மிக மிக நுட்பமாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களை வலியுறுத்தும் விதமாகவும்  விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொள்கை என்னவோ நாம் முன்னர் பார்த்ததுதான்.  இதுவரை சொல்லப்பட்ட யாவும் வெறும் முன்னுரை மற்றும் நோக்கங்கள்தான். இனி இதன் இரண்டாவது பகுதியான பாடத்திட்ட இலக்குகள் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து NCFFS கூறுவதைப் பார்ப்போம்.   ஏற்கனவே நாம் பார்த்த நோக்கங்களையும் ஒவ்வொரு (domain) துறையிலும் உடற்கல்வி, மொழிக் கல்வி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய உடற்தகுதி என, அந்தத் துறையில் இந்த நோக்கத்தை பிரயோகித்து Manifesto உருவாக்கி, அதற்கேற்றவாறு அதிலிருந்து, கற்றல் இலக்குகள் Curricular Goalஐ உருவாக்கி, அந்தக் கற்றல் இலக்குகள்  நிறைவேறினால் அந்த மனிதரிடம் என்ன திறன் அல்லது வல்லமை வரும் என்று (Competency) பார்த்து வரிசைப்படுத்தி, அந்தத் திறன் இருப்பதை உறுதிப்படுத்த, Check list உருவாக்குகின்றனர். வல்லமை ஒரே நாளில் தோன்ற முடியாது. சிறிது சிறிதாக வளரும்.. அந்தச் சிறு பகுதிகளை learning outcome (கற்றல் அடைவுகள்) என்று வரிசைப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, பேசுதல் திறன். இத்திறன் ஒருவரிடம் இருப்பதற்கு என்னென்ன காரணிகள் இருக்க வேண்டும் என்று ஒரு கடினமான கட்டமைப்புக்குள் (rigid frame work) கொண்டுவந்துவிடுகின்றனர். இந்த இடத்தில்தான் உண்மையான பயம் உருவாகிறது. Aims – Curricular goals – Competency – Learning Outcome இதுதான் முறை. இந்தக் கற்றல் அடைவுகள் என்ன வேண்டுமோ அதற்கேற்றபடிதான் கலைத்திட்டம் இருக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, இந்த முறைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான கல்வியை அமைத்துக்கொள்ளலாம் என்கிறது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறதென்றால், இந்த முறைப்படி  ‘கலைத் திட்ட (Curriculum & Syllabus) உருவாக்கும் பணியை NCERT வசம் கொடுத்துவிட்டது. NEP சொல்வதோ, பள்ளிக் கல்வியில் என்ன மதிப்பெண் பெற்றாலும் அதற்கு முக்கியத்துவம் இல்லை. மேலும் அது அந்தளவிற்குத் தேர்வு முறையே இலகுவாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், சாதாரண மக்கள், தேர்வு என்றால் பரீட்சை, குழந்தைகளுக்கு அறிவு இருக்கின்றதா எனச் சோதிக்கிறார்கள் என அவர்கள் நினைப்பார்கள். ஆனால் கற்றல் – கற்பித்தல் பணியில்  ஈடுபடுவோர்க்கும் கல்வியாளர்களுக்கும், தேர்வு என்பது கற்றல் கற்பித்தல் நிகழ்முறைப் போக்கை நாமே பரிசோதனை செய்துகொள்வது என்பது தெரியும். ஒரு தேர்வின்  மதிப்பீட்டு முறை எதற்காக என்றால், அது இல்லையேல் கற்றலும் கற்பித்தலும்  நடந்ததா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இப்போது தேர்வையே  மிக எளிமையாக்க வேண்டும் என்கின்றனர். அந்தத் தேர்வில் மாணவன் பெறும் மதிப்பெண்ணுக்கு  முக்கியத்துவம்  இல்லை. ஏனென்றால், இந்தியாவில் பன்னிரண்டாம், பத்தாம் வகுப்பு முடித்த அத்தனை பேரும்  உயர் கல்விக்குச்  செல்ல வேண்டும் என்றால், அந்த மதிப்பெண் இனிமேல் தகுதியாக இருக்க முடியாது. அதற்குப் பதிலாக (NTA ) என்ற அகில இந்திய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கி இருக்கின்றனர். National Testing Agency. இது வைக்கும் தேர்வு, மிகவும் கடினமாக இருக்கும். அந்த National Testing Agency என்ன தேர்வு வைக்கிறதோ, அதில் யார் தேர்ச்சி பெறுகிறாரோ, அவர்கள்தான் இனிமேல் கல்லூரிகளுக்கே செல்ல முடியும். இதுதான் NEP 2020 சொல்லக்கூடிய விசயம். இந்தக் கற்றல் அடைவுகள் (learning outcome) என்னவென்பதை NCERT  புத்தகங்கள் தீர்மானிக்க ஆரம்பித்தால், இந்த NTA வைக்கக்கூடிய தேர்வுகளில் NCERTஇன் புத்தகங்களே அடிப்படையாக இருக்கும். அதாவது இந்த learning Outcome உருவாக்கும் முறையை எல்லா மாநிலங்களும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்  என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எந்த மாநில அரசாவது NCERT பாடத்திட்டத்திற்கு மாறாக, வேறு சிலபஸை வைத்திருக்க முடியுமா? என்ன பெயரில் வேறு சிலபஸ் வைத்திருந்தாலும் அதனுடைய கற்றல் விளைவுகளும் NCERTஇன் கற்றல் விளைவுகளும்  ஒரே மாதிரிதான் இருக்கும்; இருக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய  aim – அதிலிருந்து உருவாக்கப்படும் Curricular goal – அந்த Curricular goal இலிருந்து உருவாக்கப்பட்ட Competency – அதிலிருந்து உருவாக்கப்பட்ட learning outcome – இந்த learning Outcome குழந்தைகளுக்குக் கிடைப்பதற்குத் தேவையான Curriculum and சிலபஸ் – இப்படியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒரு சிக்கலான அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். இறுதியில் இவர்கள் சொல்வது, எதிக்ஸ் வேல்யூஸ் – நெறிமுறைகளுக்கு மதிப்பாளிக்க வேண்டும் என்கின்றனர். அதில் பலவற்றைக் கூறினாலும் முக்கிய இடம் தந்திருப்பது இந்தியப் பண்டைய பெருமையே. எந்தவிதப் பெருமைவாதத்துக்கும் இடம் தராமல், உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களையும் இனம், சாதி, மதம், மொழி, பால் பேதமின்றி அனைவரையும் சமமாகப் பார்ப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் பெருமைவாதத்தையே தொடர்ந்து பேசுகின்றனர்; வழியுறுத்துகின்றனர். அடுத்த அமர்வில், NCFFSஇல் கூறப்பட்டுள்ள அடுத்த சில பிரிவுகள் குறித்து உரையாடுவோம். உரையாடல் தொடரும்.

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.  இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், ‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும். அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்? மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்? ‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம். கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்? தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?   தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை? உளவியல் சிக்கல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள். தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும். முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன? அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின்