நீலகண்ட பிரம்மச்சாரி – 23

நீலகண்ட பிரம்மச்சாரி – 23

காட்சி 23 காலம் : 1936ஆம் வருடம் மே மாதம் இரண்டாம் தேதிஇடம் : ஓம்கார் ஆசிரமம்பாத்திரங்கள் : ஜே.சி.குமரப்பா மற்றும் சிலர் ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (அங்கிருக்கும் ஆசிரமவாசியிடம் கன்னடத்தில்) இதோ, இவர் பெயர் ஜே.சி.குமரப்பா. மகாத்மா காந்திஜியின் சீடர். சுவாமிஜியைப் பார்க்க வந்திருக்கிறார். ஆசிரமவாசி : சுவாமிஜி அந்தக் குன்றின் மேல் இருக்கிறார். இப்போதெல்லாம் அவர் கீழே வருவதில்லை. அவரைப் பார்க்கவேண்டுமென்றால் நீங்கள்தான் மேலே போய்ப் பார்க்க வேண்டும். ஜே.சி.குமரப்பாவுடன் வந்தவர் : (குமரப்பாவிடம் இந்தியில்)ஐயா, சுவாமிஜி இப்போது அந்தக் குன்றின் மேல் இருக்கிறாராம். கீழே வருவதில்லையாம். நாம்தான் மேலேறிப் போய்ப் பார்க்க வேண்டுமாம். குமரப்பா : அதற்கென்ன? அவரைப் பார்க்கத்தானே வந்திருக்கிறேன்! குன்றேறலாம் வாருங்கள். (மேடை, குன்றின் மீதிருக்கும் ஓம்கார் சுவாமிகளின் குடில் அமைப்புக்கு மாறுகிறது) குமரப்பா : (தன்னுடன் வந்தவரிடம் இந்தியில்) ஆசிரமம் மிகுந்த எளிமையுடன் காட்சி அளிக்கிறது. ஒரு பிராமணன் வசிக்கும் ஆசிரமத்தில் பிராமணரல்லாதவரும் சேர்ந்து வசிப்பது வியப்பளிக்கிறது. (‘வாருங்கள் குமரப்பா’ என்ற தமிழ்க் குரல் குமரப்பாவை வரவேற்க, சிலிர்த்துத் திரும்புகிறார். கனிவும் சிரிப்பும் பொங்கிப் பொலியும் தோற்றத்தில் ஓம்கார் சுவாமிகள் குடிலின் வாசலில் வந்து கும்பிட்ட கைகளுடன் குமரப்பாவை வரவேற்கிறார்.) குமரப்பா : (தானும் கும்பிட்டவாறே தமிழில்) தாங்கள்…? ஓம்கார் சுவாமிகள் : அடியேன்தான் நீங்கள் தேடி வந்திருக்கும் ஓம்கார். குமரப்பா : வணக்கம் சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா வந்திருக்கிறார் என்றவுடன், நானே வந்து வரவேற்க வேண்டும் என்று வந்துவிட்டேன். உள்ளே வாருங்கள்.. (எல்லோரும் உள்ளே வருகிறார்கள். குடிலின் உள்ளே சுவாமியைத் தவிர இருவர் அமர்ந்தாலே இடித்துக்கொண்டுதான் அமர வேண்டும் என்பதுபோலச் சிறிய அறை) குமரப்பா : இத்தனை சிறிய அறையா? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) குமரப்பா கேட்டதாலேயே இந்தக் கேள்வி அர்த்தமுடையதாகிவிட்டது. ஆமாம், என் தனிமையின் பொருட்டு ஏற்படுத்திக்கொண்ட குடில் இது. குமரப்பா : என்னை அறிவீர்களா? ஓம்கார் : தமிழர் என்றும் தஞ்சாவூர்க்காரர் என்றும் காந்தியின் சீடர்களில் மிகவும் கறாரானவர் என்பது வரையிலும் அறிவேன். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. காந்திஜியும் அவர் சீடர்களும் நந்தி மலைக்கு வந்திருக்கிறீர்கள் என்று காலைப் பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். காந்திஜி நலமா? ஓய்வெடுக்க வந்திருப்பதாகப் போட்டிருந்தார்களே? குமரப்பா : ஆமாம். இரத்த அழுத்தம் சீராக இல்லை. மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் இந்த மலைச்சாரலுக்கு ஓய்வெடுக்க வந்திருக்கிறார். சில நாட்கள் இங்குதான் இருப்பார். ஓம்கார் : என்னைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது என் நற்பேறு. குமரப்பா : நாங்கள் நந்திமலைக்கு வந்த ஓரிரு நாட்களில் உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அடிவாரத்தில் நாங்கள் தங்கியிருக்கும் விருந்தினர் விடுதியிலிருந்து பார்க்கும்போது, இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மலையிலிருந்து அடிவாரத்தை நோக்கி விளக்கு ஒன்று அசைவதும் பதிலுக்கு கீழே இருந்து மேலே ஒளி செல்வதையும் பார்க்க முடிந்தது. இந்த சமிக்ஞை குறித்து விசாரித்தபோது, மேலே ஒரு சாது இருக்கிறார் என்றும் அவர் ஆசிரமத்தின் தலைவர் என்றும் தெரிந்தது. மேலும் விசாரிக்க, பூர்வோத்திரத்தில் புரட்சிக்காரராக இருந்த நீலகண்ட பிரமச்சாரிதான் அவர் என்பதும் தெரிந்தது. ஆகவே ஆவல் மேலிட்டுக் கிளம்பி வந்தேன். விசாரித்ததில் உங்கள் ஆசிரமப் பணிகளும் வியப்பளித்தன. சுவாமிஜி, அது என்ன சமிக்ஞை? ஓம்கார் சுவாமிகள் : கீழே ஆசிரமத்தில் போதிய தனிமை எனக்குக் கிடைக்கவில்லை. மக்கள் தங்கள் லோகாயதச் சிக்கல்களுக்கெல்லாம் என்னிடம் தீர்வைத் தேடி வந்துவிடுகிறார்கள். கடவுள் பக்தியில் சிந்தையைச் செலுத்தியும் சுயநலமின்றியும் உங்கள் மனம் சொல்லும் முடிவை நாடுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு தீர்வு என்னிடம் ஏது? ஆகவே தனிமைக்காக மேலே வந்துவிட்டேன். யாரும் சொந்தக் காரணங்களுக்காக மேலே வரவேண்டாம் என்றும் கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். நான் மேலே நலத்துடன் இருக்கிறேன் என்பதை ஆசிரமவாசிகள் தினமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அதற்காகவே இந்த ஒளி உரையாடல். குமரப்பா : நல்லது. உங்கள் பழைய புரட்சி வாழ்க்கையை இந்த ஆன்மீக மாற்றம் செரித்துக்கொண்டதா? அவை எந்தப் புள்ளியில் பொருந்திப் போகின்றன? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், செரித்துக்கொண்டது. அவை முற்றிலும் மாறுபட்டவை. புரட்சிக்காரன் என்ற அடையாளத்தை உதறிக்கொண்டு பிறரோடு இணங்கி இருப்பதற்கு நான் தேடிக்கொண்ட புதிய வாழ்க்கை இது. தனித்த சிறை வாழ்க்கையில் என் உள்ளத்துடன் மட்டுமே பேசிக்கொண்டு என்னை நான் கண்டுகொண்ட எனது ஆன்ம வெளிப்பாட்டை, ஆசிரமம் என்ற கூட்டு வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறேன். தொண்டு என்பதை மட்டுமே இரண்டு வாழ்க்கையிலும் பொருந்திப்போகிற புள்ளி என்று சொல்லுவேன். அது இருக்கட்டும்.. உங்கள் பழைய கிறித்தவ மரபு சார்ந்த வாழ்க்கையும் காந்தியடிகளுடன் உங்கள் சேவையும் எந்தப் புள்ளியில் பொருந்திப்போயின அன்பரே? குமரப்பா : நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள்? அவையும் பொருந்தாதவைதான். தேசத் தொண்டு, சுயத்தை முன்னிறுத்தாத அரசியல், அஹிம்சையும் சத்தியமும் இணைந்த வாழ்க்கை நெறி, சலிப்பில்லாத போராட்டம், இப்படிப் பல புள்ளிகளில் என் வாழ்க்கை அடியோடு மாறிப்போனது. (உரையாடலுக்குப் பிறகு குமரப்பா விடை பெறும் நேரத்தில்) ஒரு வேண்டுகோள். நான் ஆசிரமத்தைப் பார்வையிட விரும்புகிறேன். அனுமதிக்க வேண்டும். ஓம்கார் சுவாமிகள் : நீங்கள் ஆசிரமத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்பதே பெருமை அல்லவா? (ஆசிரமவாசியிடம்) இவருக்கு ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டுங்கள். குமரப்பா : வருகிறேன்.. வணக்கம். ஓம்கார் சுவாமிகள் : காந்திஜியிடம் நலம் விசாரித்தததாகச் சொல்லுங்கள். குமரப்பா : சொல்கிறேன்.. யார் கண்டது? அவரே உங்களைப் பார்க்க விரும்பினாலும் ஆச்சரியமில்லை. வருகிறேன். ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள். (குமரப்பா விடைபெற்றுச் செல்கிறார். ஆசிரமவாசியும் அவருடன் செல்கிறார். மேடையில் காட்சி மாறி, சங்கர கிருஷ்ணனுடன் ஓம்கார் சுவாமிகள் பேசுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : தம்பி.. குமரப்பா பற்றி உங்களுக்குத் தெரியுமா? சங்கர கிருஷ்ணன் : தெரியாது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : மிகச் சிறந்த பொருளாதார மேதை. காந்தியப் பொருளாதாரத்தை விளக்கிச் சொல்வதில் அவருக்கு இணை அவர்தான். காந்திஜியின் சீடர்களிலேயே மிகவும் கறாரானவர். ஒரு சமயம் குமரப்பா பீகார் நிலநடுக்க நிவாரணப் பணியில் இருந்தார். அவர்தான் நிவாரண நிதிப் பொறுப்பைக் கவனித்து வந்தார். நிவராணப் பணியில் இருக்கும் தொண்டர்களுக்கு ஒருநாள் உணவுக்கு மூன்றணாதான் விதித்திருந்தார். அப்போது நிவாரணப் பணிகளைப் பார்வையிட காந்தியடிகள் வந்திருந்தார். அவருக்காக பால் மற்றும் பழங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். காந்தியடிகளின் செயலாளர் தேசாயிடம் மூன்றணாவுக்கு மேல் செலவு செய்ய முடியாது, காந்தியடிகளிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் குமரப்பா.அடுத்த நாள் காந்தியடிகள் வந்த காருக்குப் பெட்ரோல் போட்ட பில் வந்தது. முடியாது என்று மறுத்தார் குமரப்பா. காந்தியடிகள் இதை அறிந்ததும், ‘நான் நிவாரணப் பணிக்கு வந்திருக்கும் பெட்ரோல் செலவையும் மறுப்பீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘பொதுமக்கள் தந்திருக்கும் நிவாரண நிதியை, நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்பதால், இந்தச் செலவு மறுக்கப்பட்டது’ என்று சொல்லிவிட்டார். காந்திஜி அதை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் நிவாரணப் பணியில் சேராத செலவுகள் எதையும் கோர வேண்டாம் என்று தன் செயலர் தேசாயிடம் சொல்லிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா! எப்படியான மனிதர்கள்..! சரி, காந்திஜியுடனான உங்கள் சந்திப்பு குறித்துச் சொல்லுங்கள் சுவாமி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

நீலகண்ட பிரம்மச்சாரி – 19

காட்சி 19 இடம் : ஓம்கார் ஆசிரமம்(ஓம்கார் சுவாமிகள் – சங்கர கிருஷ்ணன் உரையாடல் தொடர்கிறது) ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமத்தின் பக்கத்தில் ஓடும் தென்பெண்ணை நதியைப் பார்த்தீர்கள் அல்லவா சங்கர கிருஷ்ணன்..? ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாக ஓடுகிறது. மலைச் சரிவில் ஆர்ப்பரிக்கும் புனல், சமவெளியில் அமைதியாகப் போவது போல, என் வாழ்க்கை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகித்து வயலுக்குப் பொசியும் வாய்க்கால் போல அமைதி ஆனது. இங்கு வந்தபோது நான் இந்த நதியைப் போல அமைதியாக இருந்தேன். எனக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருந்தேன். ஆனால், தொண்டு செய்வதை விட்டுவிடவில்லை. இப்போது வரை 41 வருடங்களாக இங்குள்ள எளிய மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறேன். எனது ஆன்மீக சாதனைகள் மட்டுமல்ல இந்த ஆசிரம வாழ்க்கை. தொண்டின் மீது நான் கொண்ட தணியாத தாகத்தின் ஒரு பாகமும்தான். தேசத் தொண்டு என்பது, தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்காரவேலரும்தான். சங்கர கிருஷ்ணன் : சிங்கார வேலரின் கம்யூனிஸ்ட் இயக்க வேலைதானே உங்களை இரண்டாவது சிறைவாசத்திற்குக் கொண்டு சென்றது..? ஓம்கார் சுவாமிகள் : என் கூடவே பிறந்தது போன்ற முரட்டுத்தனம்தான் அதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து நான் முரடனாகவே இருந்திருக்கிறேன். ஒரு நிலைகொள்ளாத உள்ளம் என்னை உந்தித் தள்ளி வந்திருக்கிறது. அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கிறேன். பாலர் சந்திப்புக்குப் பிறகு, முற்றிலுமாக ஒரு பரதேசி போலச் சுற்றல் வாழ்க்கைதான். புரட்சி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது என்பது ஒரு சாக்கு போலத் தொடர்ந்து வந்தது.பாய்ந்து வரும் காட்டாறு, பள்ளம் கண்டால் தங்கிவிடும் அல்லவா? அதுபோலத் தங்கியிருக்கிறேன். பள்ள மனது நிறைவானதும் பயணப்பட்டு விடும் அல்லவா? அதுபோல தங்குதலும் தாவிப் போவதுமாக ஓடிக் கொண்டிருந்தேன். மேடுகள் பிரவாகத்திற்கு லட்சியமில்லை. தள்ளிச் சரித்துவிட்டுத் தன் பாதையை அமைத்துக்கொள்ளும். அந்த ஓட்டத்தில் ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய விவேக மனோபாவம் எனக்குக் கைகூடவில்லை. நான் ஏற்றுக்கொள்ளாத எந்த விஷயத்தோடும் நான் சமரசம் கொள்ளவில்லை. அதுவே எனது அடையாளம். அதுவே என் பலமும் பலவீனமும். நான் இரண்டாம் தடவை சிறைப்பட்டதைச் சொல்கிறேன்; உங்களுக்கே புரியும். சங்கர கிருஷ்ணன் : சொல்லுங்கள் சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : அது 1922ஆம் வருடம் ஜூலை மாதம். அப்போது சிங்காரவேலர், கயாவில் நடக்கப்போகும் காங்கிரசில் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டிய உத்திகளை வகுத்துக்கொண்டிருந்தார். நிறைய பயணங்களைச் செய்துகொண்டிருந்தார். அந்தக் காங்கிரசில்தான் பூரண சுயராஜ்யத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் முனைப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், காங்கிரசின் திட்டம் அப்போது பூரண சுயராஜ்யம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா..? அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது சிங்காரவேலர்தான். அந்தக் காங்கிரஸ் நிகழ்ச்சிகளெல்லாம் நான் சிறை சென்ற பின்பு நிகழ்ந்தவை. நான் பத்திரிகை பார்த்துத் தெரிந்துகொண்டவை. ஆகவே சென்னை வேலைகளை நாங்களாகவே செய்துகொண்டிருந்தோம். அப்போது, நான் தயாரித்த பிரசுரம் ஒன்று போலீஸ் உளவாளிகளிடம் சென்றது. அதை தயாரித்தவன் நான் என்பதும், நான் ஆஷ் கொலை வழக்கின் பிரதானக் குற்றவாளி என்பதும், பழைய சிறைப் பறவை என்பதும் அவர்களைப் பதற வைத்தன.இவன் இன்னும் இயங்குகிறான் என்பதும் அதுவும் கம்யூனிஸ்ட் பிரசாரகன் என்பதும் தெரிந்தவுடன் சுறுசுறுப்பானார்கள். அந்தப் பிரசுரத்தை ராஜதுவேசப் பிரசுரம் என்று கொண்டு, அதைப் பிரசுரித்த என்மீது வாரண்ட் கொண்டுவந்தார்கள். நான் தலைமறைவானேன். சங்கர கிருஷ்ணன் : ஏன் தலைமறைவானீர்கள்..? உங்கள் தோழர்களிடம் ஆலோசிக்கவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : அதுதான் என் விவேகமின்மை. போலீஸ் என்னைத் தேடினார்கள். 1922 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, திருவல்லிக்கேணி இடுகாட்டில் மறைந்திருந்த என்னைக் கைது செய்யச் சுற்றி வளைத்தார்கள். (மேடையில் ஓம்கார் சுவாமிகள் அறையில் இருள் பரவி மறுபக்கம் ஒளிர்கிறது) காலம் : 1922ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிஇடம் : விசாரணை நீதிமன்றம், சென்னைபாத்திரங்கள் : விசாரணை அதிகாரி, நீலகண்டர் விசாரணை அதிகாரி : மிஸ்டர் நீலகண்டர், உம்மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.முதலாவது, நீர் ராஜ துவேஷப் பிரசுரங்கள் அச்சிட்டு, மக்களிடம் அரச விரோதத்தைத் தூண்டியுள்ளீர்.இரண்டாவது, நீர் உரிமம் இல்லாமல் கைத் துப்பாக்கி வைத்திருந்தீர்.முன்றாவதாக, அந்தத் துப்பாக்கியால் உம்மைக் கைது செய்ய வந்த போலீஸ் ஜவான்களில் ஒருவரைச் சுட்டீர். அந்தத் துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் அந்த ஜவான் தப்பித்தார். இருப்பினும் அது கொலை முயற்சியே.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உமது பதில் என்ன? நீலகண்டர் : பிரிட்டிஷார் சட்டத்தையும் கோர்ட்டையும் நான் மதிப்பதில்லை. இந்தியர்கள் உருவாக்காத சட்டங்களுக்குக் கீழ்ப்படிய எனக்கு விருப்பமில்லை.உங்கள் சட்டத்தின் முன்பு ராஜதுவேஷமாகச் சொல்லப்படும் எமது அறிக்கை, எமது மக்களின் எதிர்கால விடுதலைக்கானது. அந்த விடுதலைக்காக அவர்களை அணி சேர்ப்பதற்கானது. மற்ற குற்றச்சாட்டுகளில், நானே என் நடத்தையின் மீது விளக்கம் சொல்வது அவசியம் என்று தோன்றவில்லை. நீங்கள் உங்கள் தீர்ப்பைக் கூறலாம். எதுவாயினும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன். (மேடையில் ஒளி இடம் மாறி ஓம்கார் ஆசிரமத்தில் விரிகிறது) ஓம்கார் சுவாமிகள் : எனக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அளித்தார்கள். பழைய புரட்சிக்கார குற்றவாளி என்பதாலும் என் பழைய சிறை வரலாறுகள் கலகச் சாயையைக் கொண்டிருப்பதும் சிறையிலும் நான் மற்ற கைதிகளின் உரிமைகளைப் பேசுபவன் என்பதை அடையாளப்படுத்தி நின்றன என்பதாலும் சிறை அதிகாரிகள் என்னைக் குறித்து அச்சத்தில் இருந்தனர். ஆகவே என்னை இந்தியாவுக்கு வெளியே அனுப்பிவைத்தார்கள். ஆனால் சிறைவாசத்தில் அமைதியானவனாக மாறிக்கொண்டு வந்தேன். என் மனப் புயல்கள் ஓய்ந்து வந்தன. சங்கர கிருஷ்ணன் : உங்கள் வாழ்க்கைமீது மிகுந்த மரியாதை வருகிறது சுவாமி.. உங்கள் தற்போதைய ஆசிரம வாழ்க்கையின்மீதுகூட என்னால் விளக்க முடியாத பிரியம் வருகிறது. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

நீலகண்ட பிரம்மச்சாரி – 18

காட்சி 18 (திரை விலகும்முன் மேடையில் செவ்வொளி பரவியிருக்க குரல் மட்டும் கேட்கிறது) குரல் : மீண்டும் ஒருமுறை உங்களிடம் பேசவேண்டியதாகிவிட்டது. நீலகண்டரின் கதையில் பாரதியின் இறுதி நாளில் அவர் அங்கிருந்தார் என்பதாலேயே, பாரதியின் பிரிவை நாடகத்தில் விரிவாகக் காட்டவேண்டி வந்தது. இந்த நாடகம் தொடங்கிய பாரதி வீட்டிலேயே முடிந்தும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஒரு காவியப் பூச்சுகூடக் கிடைத்து விடும். ஆனால், இன்னும் கொஞ்சதூரம் நாம் போய்த்தான் ஆக வேண்டும். (திரை விலகி ஓம்கார் ஆசிரம அறையில் காட்சி தொடங்குகிறது. சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : எனக்கு அப்போது பெரிய பலம் பாரதியார்தான். என் மீது கடைசி வரை பிரியம் காட்டியவர். அவருடைய மறைவால் நான் நிராதரவாக உணர்ந்தேன். பதினாறு வயதில் தேச விடுதலை இயக்கத்திற்கு வந்த எனக்கு, அப்போது 32 வயது. என் எதிர்காலம் குறித்த கவலை என்னை அலைக்கழித்தது. சங்கர கிருஷ்ணன் : புரிகிறது சுவாமிஜி, அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : சிங்காரவேலரிடம் சென்றேன். அவருடன் கொஞ்சகாலமே இருக்க முடிந்தது. சுமார் ஒரு வருடம் போலத்தான். (மேடையில் ஒளி மாறியதில் ஒரு வீட்டின் வரவேற்பறை) காலம் : 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஒருநாள்இடம் : சிங்காரவேலர் இல்லம்பாத்திரங்கள் : சிங்காரவேலர், நீலகண்டர் சிங்காரவேலர் : நீலகண்டரே, எம்மோடு இருப்பதை நீர் எவ்வாறு உணர்கிறீர்..? நீலகண்டர் : இதுவரை நான் அறிந்திருந்த உலகத்திற்கு இப்போது புதிய விளக்கங்களைக் காண்கிறேன். தேச விடுதலை என்பது தொழிலாளர், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன். படைப்பில் மேல் – கீழ் என்பதும் ஆண்டான் – அடிமை என்பதும் கீழ்மைச் சிந்தனைகள் என்பதை பாரதி பாடல்கள் மூலம் தெரிந்திருந்த எனக்கு, உங்கள் பழக்கம் வந்தபிறகு அவற்றின் பொருள் சார்ந்த காரணங்கள் புரியவந்தன. சிறிய குழுக்களாக வேலை செய்து வந்தவன், இப்போது கட்டற்ற விடுதலையை உணர்கிறேன். தொழிலாளர் சங்கங்களில்,தலைவரும் உறுப்பினர்களும் வெளிப்படையாகப் பேசி, பெரும்பான்மை முடிவை அமுல்படுத்தும் பாங்கு எனக்குப் பிடித்திருக்கிறது. சிங்காரவேலர் : நல்லது.. உம்மைப் பிரசாரக் குழுவில் வேலை செய்யச் சொன்னோம். மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்து செய்து வாரும். நாம் தயாரிக்கும் பிரசுரங்களை நீரும் கவனமாகப் படித்து, போகிற இடங்களில் தெளிவாக விளக்கிப் பேச வேண்டும். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இயங்க வேண்டும். நாம் காங்கிரசு இயக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. காங்கிரசில் காந்தியாரின் தலைமை விரைவில் வரும். வருகிற டிசம்பரில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கப்போகும் காங்கிரசில், திலகர் விட்டுப்போயிருக்கிற இடமும் செல்வாக்கும் காந்தியாருக்குப் போய்விடலாம். சம்பாரண் விவசாயிகளுக்காக நான்காண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய போராட்டம், அதைத் தெளிவாக இந்த ஏழை தேசத்திற்குப் புரிய வைத்திருக்கிறது. நீலகண்டர் : அப்படியானால் அது தேசத்திற்கு என்ன மாற்றத்தைக் கொண்டுவரும்..? சிங்காரவேலர் : இப்போ எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால் மக்களை பேரலையாக இயக்கத்தில் கொண்டு வரும் சக்தி, காந்தியாரிடம் உண்டு. அரசியல் என்பது மக்களின் பங்களிப்போடு, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பற்காகப் போராடுவது என்பதை, காங்கிரசில் கொண்டு வந்தது காந்தியார்தான்.இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று, பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் இருப்பதாக, காங்கிரசில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது. அகமதாபாத் காங்கிரசில் காந்தியார் தமது பாதையை அறிவிக்கலாம். இனிமேல் அந்நிய ஆட்சியை எதிர்ப்பதோடு, காந்தியாரோடும் பயணிக்கிற கடினமான பணி நமக்குக் காத்திருக்கிறது. பார்ப்போம்.. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறையில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : காங்கிரசில்தான் இருப்பதாக சிங்காரவேலர் சொன்னாரே, அப்படியானால் 1921இல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கட்சியாக உருவாகவில்லை. ஆனால் ‘இந்தியப் பொதுவுடமை நிறுவனங்களின் இணைப்பு’ என்ற அமைப்பாக இயங்கினார்கள். வங்காளத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் மத்திய பாரதத்திலும் சென்னை மாகாணத்திலுமாகக் குழுக்களாக இயங்கி வந்தார்கள். காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டே இயங்கினார்கள். சங்கர கிருஷ்ணன் : உங்கள் வேலை என்னவாக இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட் பிரசாரப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வது.. சங்கர கிருஷ்ணன் : பழைய பயங்கரவாத இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கண்ட வேறுபாடுகள் என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : பழைய இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு இல்லை; மக்களோடு ஐக்கியமும் இல்லை. இயக்கம் செய்யும் வேலைகளால் வரும் பின்னடைவைச் சரி செய்யவே முடியாமல் போனது. ஆனால், அந்தப் பழைய குழுக்களின் தோழர்களே பெரும்பாலும் புதிய இயக்கத்திற்கு மாறிக்கொண்டார்கள். அவர்களின் புரட்சிகர குணாம்சங்களைக் குறை சொல்ல முடியுமா..? சங்கர கிருஷ்ணன் : சிங்காரவேலர் பற்றிய உங்கள் அபிப்பிராயம் எப்படி இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : அவர் பேரறிஞர்.. நிரம்பிய நூல் பழக்கம் கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த நூல்களின் சேகரத்தைப் பார்த்து வியந்து போனேன். கடினமான உழைப்பாளி. தொழிலாளர் மேன்மை பற்றியே சிந்தித்து வந்தார். மார்க்சிய வழியில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொன்னார். சங்கர கிருஷ்ணன் : காந்தியின் வருகையைக் கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் பரிசீலித்தார்கள் என்பது அவர் பேச்சில் தெரிகிறதே..! ஓம்கார் சுவாமிகள் : காந்தியின் பாதையைக் கம்யூனிஸ்டுகள் போல யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள் தம்பி. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, உங்கள் பேச்சு மிக வியப்பாக இருக்கிறது. இத்தனை தூரம் கம்யூனிஸ்ட்கள் பற்றிப் பேசுகிற நீங்களா சாமியாராக மாறினீர்கள்..?! பெரிய புதிராக இருக்கிறது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட்களோடு, அதுவும் சிங்காரவேலர் போன்ற ஒரு சிலரோடு ஒரு வருட காலமே என் தொடர்பு. அதற்குப் பிறகு இன்னுமோர் நெடிய சிறைவாசம் என் மனப்போக்கை மாற்றி, இப்போதைய வாழ்வுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்தது. (திரை விழுகிறது) நாளை தொடரும்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

காட்சி 17 காலம் : 1921 செப்டம்பர் 11ஆம் நாள் முற்பகல்இடம் : இந்த வரலாற்றின் ஆரம்பக் காட்சியில் நாம் பார்த்த திருவல்லிக்கேணி பாரதியார் வீடுபாத்திரங்கள் : பாரதியார், செல்லம்மா, சகுந்தலா, வ.வே.சு.அய்யர், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, பரலி நெல்லையப்பர், குவளை கிருஷ்ணமாச்சாரி, ஹரிஹரசர்மா, வைத்தியர், இன்னும் சிலர். (பாரதி கண்மூடிப் படுத்திருக்கிறார். பக்கத்தில் செல்லம்மாவும் சகுந்தலாவும் இருக்கிறார்கள். நீலகண்டரும் குவளை கிருஷ்ணமாச்சாரியும் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாசலில் சத்தம் கேட்கிறது. பலர் உள்ளே வரும் சலசலப்பில் செல்லம்மாவும் சகுந்தலாவும் எழுந்து வாசலைப் பார்க்கிறார்கள்.முதலில் வ.வே.சு.அய்யர் உள்ளே வர, சில போலீஸ் ஜவான்கள் பின்னால் வருகிறார்கள்) செல்லம்மா : வாருங்கள் சுவாமி, உங்கள் சிநேகிதரைப் பாருங்கோ. பயமாக இருக்கிறது சுவாமி. வ.வே.சு.ஐயர் : பயப்பட வேண்டாம் செல்லம்மா. பாரதி குணமாகிவிடுவார். ஆகாரம் ஏதேனும் பண்ணினாரா..? செல்லம்மா : காலையில் சிறிது கஞ்சி மட்டும் குடிச்சார். வைத்தியரை அழைக்க ஹரி போயிருக்கிறார். வ.வே.சு.ஐயர் : (பாரதியின் பக்கத்தில் அமர்ந்து) பாரதி.. பாரதி.. பாரதியார் : (மெதுவாக கண்விழித்து) யார்? ஐயரா..? வாரும்.. வ.வே.சு.ஐயர் : எப்படி இருக்கிறீர்..? பாரதியார் : ஒன்றுமில்லை ஐயரே, வயிற்றுக் கடுப்பு இருக்கிறது; களைப்பாகவும் இருக்கிறது. சரியாகிவிடும். (சுற்றுமுற்றும் பார்க்கிறார். போலீஸ் ஜவான்கள் கண்ணில் பட) செல்லம்மா இந்த ஜவான்கள் நம் வீட்டுக்கு ஏன் வந்திருக்கிறார்கள்..? வ.வே.சு.ஐயர் : அவர்கள் என்கூட வந்தார்கள். என்னைப் போலீஸ் நிலையம் அழைத்துப் போகிறார்கள். போகும் வழியில் உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்துவிட்டேன். செல்லம்மா : என்ன விஷயம் சுவாமி? வ.வே.சு.ஐயர் : ‘தேசபக்தன்’ பத்திரிகையில் ஒரு வியாசம் வந்திருந்தது. அது ராஜ துவேசத்தைக் கொண்டிருக்கிறது என்று என்மீது வாரண்ட்டு. நான் ‘தேசபக்தன்’ ஆசிரியன் என்பதால், என்னை அழைத்துப் போகிறார்கள். அது இருக்கட்டும்.. (பாரதியைப் பார்த்து)பாரதி.. நான் போய்வருகிறேன். உடம்பைக் கவனித்துக்கொள்ளும். அசட்டையாக இராமல் வைத்தியர் தரும் மருந்தைச் சாப்பிடும்.. வரட்டுமா..? பாரதியார் : (வ.வே.சு. அய்யரின் கரத்தைச் சிறிது பற்றி, பின் விடுகிறார்) சரி அய்யரே.. விசாரணை முடிந்ததும் வாருங்கள். வ.வே.சு.அய்யர் : (எல்லாரையும் கும்பிட்டுக்கொள்கிறார். நீலகண்டரையும் கும்பிட்டுக்கொண்டே) நல்லது.. வருகிறேன்..(வ.வே.சு.அய்யரும் அவருடன் வந்தவர்களும் சென்றுவிடுகிறார்கள்) சகுந்தலா : (குவளையில் கஞ்சியுடன்) அப்பா.. இன்னும் கொஞ்சம் கஞ்சி தரட்டுமா..? (பாரதி தலையாட்ட, சகுந்தலா கஞ்சியைப் புகட்டுகிறார். அப்போது வைத்தியருடன் ஹரிஹர சர்மாவும் வருகிறார்) வைத்தியர் : (பாரதியிடம் நெருங்கி) பாரதி.. எப்படி இருக்கிறீர்? (கேட்டுக்கொண்டே பாரதியின் மணிக்கட்டைப் பிடித்து நாடி பார்க்கத் தொடங்க) பாரதியார் : (கையை உதற முற்படுகிறார். பலம் இல்லாததால் பெருமூச்சு விடுகிறார்) எனக்கு என்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். செல்லம்மா.. இது என்ன, வைத்தியரை அழைத்தாயா? ஏன் என்னை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? என்னை விட்டுவிடுங்கள்; எனக்கு ஒன்றுமில்லை. வைத்தியர் : சரிதான் பாரதி, உமக்கு ஒன்றுமில்லைதான். நான் தரும் மருந்தை மட்டும் சாப்பிட்டுவிடுங்கள்; உமது களைப்பெல்லாம் போய்விடும். (செல்லம்மாவிடம் மருந்துப் பொட்டலங்களைக் கொடுத்தவாறே) இந்த மருந்தை இரண்டு மணிக்கொரு தடவை கொடுங்கள். நாளைக்கு வந்து பார்க்கிறேன். தொடர்ந்து கஞ்சியே கொடுத்து வாருங்கள். (பாரதி முனகுவதும் மருந்தை உட்கொள்ள மறுப்பதும் சகுந்தலா அவரைக் கெஞ்சியே மருந்தையும் கஞ்சியும் கொடுப்பதாகப் பகல் பொழுது கடந்து மாலை வருகிறது) செல்லம்மா : பாப்பா.. விளக்கேற்றிவிடம்மா.. (சகுந்தலா விளக்கேற்றுகிறாள்) பாரதியார் : (முன்னிரவில் கண்விழித்து) நீலகண்டரே, ஹரிஹரனும் நீங்களும் பக்கத்தில் வாருங்கள். (பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்) இப்போ கொஞ்சம் பரவாயில்லை.ஆப்கானிஸ்தானத்து மன்னன் அமானுல்லாகான் பற்றி ஒரு வியாசம் மனத்தில் வருகிறது. அதை எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பவேண்டும். நீலகண்டர் : சரி, செய்யலாம். உங்களுக்குக் கொஞ்சம் தெம்பு வரட்டும். பாரதியார் : இப்போ தெம்பாகத்தான் இருக்கிறேன். அமானுல்லாகான் யார் தெரியுமா..? உலக யுத்தத்தில் ஜெர்மனிப் பக்கம் இருந்தவன். இப்போ வெள்ளைக்காரர்கள் யுத்தத்தில் ஜெயித்திருப்பதால், அவனை அவதூறு பண்ணிக்கொண்டு வருகிறார்கள். (மூச்சுவிடத் திணறுகிறார்) ஹரிஹர சர்மா : அமைதியாக இருங்கள், பிறகு பேசலாம். சகுந்தலா இங்கே வா. அப்பாவுக்குக் கொஞ்சம் தீர்த்தம் கொடேன்.. செல்லம்மா : மருந்து கொடுக்கும் நேரம்தான். பாப்பா மருந்தும் கஞ்சியும் கொடுத்துவிடு. (சகுந்தலா மருந்து கொடுக்க முயல, பாரதி சாப்பிட மறுக்கிறார். சகுந்தலா வற்புறுத்திப் புகட்ட, மருந்து பாதி இறங்கியும் இறங்காமலும் போகிறது) பாரதியார் : எனக்கு ஒன்றுமில்லை, விடுங்கள்… (படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறார். பரலி நெல்லையப்பரும் சுதேந்திரநாத் ஆர்யாவும் வருகிறார்கள். பாரதியாரோடு இருந்த நினைவுகளைப் பேசிக்கொள்கிறார்கள். நள்ளிரவு கடந்த பின்னர் பாரதியார் சிந்திப்பதை நிறுத்திக்கொள்கிறார். மறுநாள் காலையில் பாரதியாருக்கு இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி யோசிக்கிறார்கள்.) காலம் : 1921 செப்டம்பர் 12ஆம் நாள் காலை சகுந்தலா : (செல்லம்மாவிடம்) அக்காவுக்குச் சொல்லணுமே அம்மா.. அக்காவும் அத்திம்பேரும் வந்துருவாங்களா..? குவளை : நானும் ஹரிஹரனும் போய் எல்லாருக்கும் தந்தி கொடுத்துட்டோம். ஆனா அவா எல்லோரும் இன்னைக்கே வந்துட முடியாதே.. வந்திருந்தவர்களில் ஒருவர் : எல்லாரும் வரவரைக்கும் காத்திருக்க முடியுமோ ஓய்..? வந்தவாளை வச்சுக் காரியங்களை செய்ய ஆரம்பிச்சுடணும். நீலகண்டர் : அண்ணாவோட சென்னை சிநேகிதர்களாவது வரவேண்டாமோ.? பரலி நெல்லையப்பர் : பத்திரிகைச் செய்திகூட இனிமேல்தான் வரணும். காத்திருந்து செய்யலாமா..? வந்திருந்தவர்களில் இன்னொருவர் : சம்பிரதாயப்படி இறந்த நாளிலேயே காரியங்களைச் செய்யணும். அஸ்தமனம் வரை போகக் கூடாது. மீண்டும் முதல் நபர் : வருகிறவர்கள் வரட்டும்.. நாம ஆரம்பித்து விடலாம். இரண்டாமவர் : சரி.. பாரதிக்குக் கிரியைகள் யார் செய்யறது..? தம்பி நீலகண்டர், உன்மேல் அவருக்கு ரொம்பப் பிரியம் அல்லவா..? பாரதிக்கு ஈமக் கிரியைகள் நீ செய்யலாமே..? நீலகண்டர் : என்ன..! நானா..? என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சடங்குகளில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.. பாரதிக்கு எப்படிச் செய்ய முடியும்?! இன்னொருவர் : அப்போ, ஹரிஹர சர்மாவைச் செய்யச் சொல்லலாம். (ஹரிஹர சர்மா பாரதிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வது என்று முடிவாகிறது. பாரதியின் இறுதிப் பயணம் தொடங்குகிறது)

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

காட்சி 15 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்.இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். ஆர்யா : நீலகண்டரே, சரணடையும் முடிவைக் கல்கத்தா போய் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? நீலகண்டர் : நான் இயங்கி வந்த இயக்கத்தின் நண்பர்கள் வங்கத்தில்தான் இருந்தார்கள். உண்மையில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். புதுச்சேரி நண்பர்கள் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று அறிந்திருந்தேன். அவர்களின் இலக்கு ஆஷ் என்பது தெரியாது.புதுச்சேரியைவிட்டு வெளியேறிய நான், திருநெல்வேலிக்குச் சென்று தோழர்களைப் பார்த்து என் நிலைமையை விளக்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எத்தனைத் தவறாகப் போய்விட்டது..?!என்மேல் அவர்களுக்கிருந்த சந்தேகங்களையேனும் நிவர்த்தி செய்திருக்கலாம். இந்தக் கொலையைப்பற்றித் தெரிய வந்திருந்தால் தடுக்க ஒரு முயற்சியும் எடுத்திருக்கலாம். ஆஷ் கொலையுண்டதைப் பத்திரிகைகளில் பார்த்த நான், என் பெயர் தேடப்படும் சதிகாரர்கள் பட்டியலில் இருப்பதை அறிந்ததும், இதுபற்றி யோசித்துத் தெளிவு பெற எனக்குக் கல்கத்தா நண்பர்களே உதவமுடியும் என்பதால், நான் அங்கு சென்றேன். சரணடைந்துவிடலாம் என்று அங்குதான் முடிவு செய்தோம். ஆர்யா : சரணடைவது உமது குணமில்லையே நீலகண்டர்..? நீலகண்டர் : சரணடைவதைத் தவிர வேறு இரண்டு வழிகளை யோசித்தோம்..முதலாவது, நண்பர்கள் உதவியைப் பெற்று எங்கேனும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவது. இரண்டாவது, நமது தேசத்திலேயே தலைமறைவாக வாழ்வது. முதல் வழியில் போனால் இந்தியா விடுதலை பெறும்வரை தேசத்திற்குள் வர முடியாது. சுதந்திரம் பெறப் பல காலம் ஆகலாம். அதுவரை தேச சேவைக்கு வரவே முடியாது. இரண்டாம் வழியில் தேசத்தில் இருக்கலாம். ஆனால் பல காலம் ஒளிந்து வாழ வேண்டும். பயந்துகொண்டே தேச சேவை செய்ய வேண்டும். அது ஆபத்தானது. ஆஷ் கொலையில் எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததாலும் சதியின்போது நான் திருநெல்வேலியில் இல்லாததாலும் வழக்கிலிருந்து தப்பிக்க சரணடைவதே சரியாக இருக்கும் என்று யோசித்தோம். சிறைத் தண்டனை என்றாலும் சிறிய காலமே அமையும் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து தேசப் பணியைத் தொடரலாம் என்று கருதியதால், கல்கத்தாவிலேயே சரணடைந்து வாக்குமூலம் கொடுத்தேன். ஆர்யா : (பாரதியாரைப் பார்த்து) ஏன் பாரதி.. கடலூரில் உன்னைக் கைது செய்தபோது, ஆஷ் கொலை வாரண்டில் உன் பெயர் இருந்ததைச் சாக்காக வைத்துக்கொண்டார்கள் என்கிறார்களே? பாரதியார் : 1908இல் நான் புதுச்சேரி வந்தபோது, என் பேரில் எந்த வாரண்டும் இல்லை. ஆஷ் கொலைச் சதியில் புதுவையில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பதை வாஞ்சிநாதன் மற்றும் அவரது சகாக்களின் கடிதங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு, எங்கள் மீது 1911இல் வாரண்ட் பிறப்பித்தது. பல ஆண்டுகள் சென்றபின்னும் அதற்கு உயிர் இருந்தது, கடலூரில்தான் தெரியவந்தது. ஆர்யா : அப்போ நீலகண்டர் வாக்குமூலத்திற்கு முன்பே பாண்டிச்சேரியின் தொடர்பு பிரிட்டிஷ் அரசுக்கு தெரிந்திருக்கிறதே.. அப்படியானால் நீலகண்டர் புதுவைச் சுதேசிகளை காட்டிக்கொடுத்தார் என்ற பேச்சு வந்தது எப்படி..? நீலகண்டர் : என் வாக்குமூலம் திருநெல்வேலியில் இரண்டு நாட்களாகப் பெறப்பட்டது. ஆனால் இரண்டாவது நாள் வாக்குமூலத்தை என்னை நிர்ப்பந்தித்து வாங்கினார்கள். ஜூலை 12 அன்று, முதல் வாக்குமூலத்தில், நான் அறிந்த விவரங்களையே சொன்னேன். இதில் எனது புதுச்சேரித் தொடர்புகள் பற்றிச் சொல்லவேண்டியிருந்தது. பாரதியார் : உண்மையில், புதுச்சேரி தர்மாலயத்தில் என்ன நடந்தது என்றே எனக்கும் அரவிந்தருக்கும் தெரியாது. எங்களைத் தவிர்த்தே எல்லாம் செய்தார்கள். நீலகண்டரும் அப்போது அங்கு இல்லை என்பதால் அவருக்கும் திட்டங்கள் தெரிந்திராது. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறை வருகிறது. ஓம்கார் அறையில் சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கின்றனர்) சங்கர கிருஷ்ணன் : உங்களிடம் ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்..? ஓம்கார் சுவாமிகள் : அவர்கள் வழக்கில் ஒரு உருவத்திற்கு வந்திருக்க வேண்டும். என்னைத் தனியாகவே வைத்திருந்தார்கள். வழக்கு என்ன, யார் என்ன சொல்லியிருப்பார்கள் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். இரண்டாம் நாள் வாக்குமூலத்தை அதிகாரிகள் ஒருபக்கம் அச்சம் காட்டியும் மறுபக்கம் விடுதலைக்கு ஆசை காட்டியும் தயார் செய்து வாங்கினார்கள். மாஜிஸ்டிரேட் தம்பு என்பவர் முன்னிலையில் அப்ரூவர் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை கொடுத்த வாக்குமூலத்திற்கு ஒத்துப்போகிற மாதிரி என் வாக்குமூலத்தை மாற்றினார்கள். என் குழப்பத்தாலும் எனக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை என்று நம்பியும் அப்படிக் கொடுக்கவேண்டியதாயிற்று. ஆனாலும் முழுமையாக எதுவும் சொல்லிவிடவில்லை. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : உயர்நீதிமன்றத்தின் விசாரணையின்போது நீதிபதியிடம் நடந்த உண்மையைக் கூறினேன். என்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து அவ்வாறு பொய் சொல்ல நேர்ந்த என் பலவீனத்தை நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் அதை வெட்கப்படும் செயலாகவே உணர்கிறேன். நீதிமன்றம் என் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் தீர்ப்பு என்னவோ அப்ரூவர் வாக்குமூலத்தை ஒட்டியதாகவே அமைந்தது. அதுவும் கொலை வழக்கின் தீர்ப்பில் நான் காசிக்குப் போனதை, எனது திருநெல்வேலி நண்பர்களிடம் வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட திருடனாகச் சித்தரித்துச் சொல்லியிருந்தார்கள். புதுச்சேரியிலிருந்து நானாக வெளியேறினேனா அல்லது மற்றவர்கள் என்னை வெளியேற்றினார்களா என்பதைச் சந்தேகமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். சங்கர கிருஷ்ணன் : தீர்ப்பை எதிர்த்து நீங்கள் அப்பீலுக்குப் போகவில்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : (புன்னகைக்கிறார்) (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

காட்சி 7 இடம் : ஓம்கார் ஆசிரமம்காலம் : மறுநாள் காலை 10 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : நேற்று ராவுல நல்லா தூங்கினீங்களா..? சங்கர கிருஷ்ணன் : நல்லா தூங்கினேன் சுவாமிஜி. காலை வேளையில் இந்த மலைச் சாரல் மிக ரம்மியமாக இருக்கிறது. அதிலும் தெளிந்த கண்ணாடி போன்ற நதியின் பிரவாகத்தில் என்னை மறந்து போனேன். ஓம்கார் சுவாமிகள் : இந்த நதியை இங்கே ‘தட்சிணப் பிநாகினி’ என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறாள். இந்த நதி வனத்திற்குள் ஒரு சுனையில் பிறந்து வருகிறது. இந்த ஆசிரமத்தைத் தொடங்கிய சில நாட்களில் அந்தச் சுனையைக் கண்டுபிடித்து, இந்தப் பகுதி மலைக் குடிகளின் உதவியோடு அந்தப் பாதையைச் சீர் செய்தேன். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! இது தென்பெண்ணை நதியா..!நல்லது சுவாமிஜி. நேற்று வ.உ.சி. வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னபோது, காந்திஜி பத்திப் பேச்சு வந்ததே.. அவரு அப்பவே பிரபலமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா, அப்ப அவரு தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகச் சோதனைகளைச் செய்து வந்தார். அவர் இந்தியாவுக்குள்ள கொஞ்சம் முன்னால வந்திருந்தா, என் சரித்திரம் இப்படி இருந்திருக்குமா..? (சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : காந்தியடிகளைச் சந்தித்திருந்தால் உங்கள் மனம் மாறியிருக்குமுன்னு சொல்றீங்களா..? ஓம்கார் சுவாமிகள் : அப்படிச் சொல்ல வரவில்லை. அவரால் நாட்டின் அரசியல் போக்கு மாறிப்போனதைச் சொன்னேன். அதனால் என் போன்றவர்களின் அரசியல் வழிகளில் மாற்றம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். தேசத்தின் சரித்திரத்தை, மக்கள் என்ற மகாசமுத்திரத்தின் சக்தியை முன்னிறுத்தி மாற்றிய போக்கு அல்லவா அது..! பின்னாளில் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு இது தோன்றியது. சங்கர கிருஷ்ணன் : ஆஹா.. அதையும் கேட்க வேண்டும். பிறகு கேட்கிறேன்.சுவாமிஜி, பரோடா மகராஜான்னு மாடசாமிக்கிட்டே சொன்னீங்களே.. அவரு யாரு..? ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. அதை லண்டன்ல இருந்த இந்தியா விடுதியில் இருந்து சொல்லணும். சிதம்பரம் பிள்ளை கேட்டாருல்ல.. ‘உனக்கு தேசபக்திப் பாடம் யாரு போதிச்சது’ன்னு.. அந்த மகானுபவர்களின் நண்பர்கள் எல்லாம் அங்கேதான் இருந்தாங்க. அவங்க ஆரம்பிச்ச இயக்கத்திற்குப் பெயர் ‘அபிநவ் பாரத் சமிதி‘. சியாம்ஜி கிருஷ்ண வர்மான்னு ஒரு தேசபக்தக் கனவான் இருந்தாரு. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கில அரசில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அபாயகரமான மனிதர் என்ற பிரசித்தியுடன் ஆங்கில அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் மீண்டும் லண்டன் வந்து, இந்தியாவிலிருந்து அங்கே படிக்கப் போனவங்களுக்கு நிதி உதவி செய்றதுக்கு ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செஞ்சு, அதைக் கவனித்து வந்தார். இந்த உதவியில் படித்தவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை செய்யக் கூடாதுன்னும் தேச விடுதலைக்கு உழைக்கணும் என்ற நிபந்தனையுடன் அதைச் செஞ்சார். அப்படி திலகர் சிபாரிசுல படிக்க வந்தவருதான் விநாயக தாமோதர் சாவர்க்கர். திலகர் இவரை அனுப்பிய உண்மையான நோக்கம், பலாத்காரப் புரட்சிக்குத் திட்டமிடுவது குறித்தும் வெளிநாட்டில் இருந்துகொண்டு புரட்சியை நடத்த ஆட்களைத் தேர்ந்து, வழிநடத்தி, தயார் செய்வதற்கும்தான். சாவர்க்கர் அந்த வேலையில் வெகு கெட்டிக்காரர். வ.வே.சு. அய்யரும் லண்டனில் படிக்க வந்தார். இவங்கல்லாம் இந்தியா ஹவுஸ்ல இருந்து அந்த இயக்கத்த நடத்திக்கிட்டு இருந்தாங்க. பாரிஸ் நகரத்திலேயும் அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. சியாம்ஜி கிருஷ்ண வர்மா பேரில் இங்கிலாந்து உளவுத்துறைக்கு ஐயம் தோன்ற, அவர் பாரிஸ் சென்றுவிட்டார். சாவர்க்கரும் அய்யரும் விடுதியைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவுல இவங்க இயக்கத்திற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர்-ன்னு செல்வாக்கு இருந்தது. 1857 போல சிப்பாய்ப் புரட்சி ஒன்னு நடத்தணுமின்னு அவங்க எண்ணம். அதுல சில இந்து ராஜாக்களும் இருந்தாங்க. அவங்கள்ள ஒருத்தருதான் பரோடா மகராஜா ஸாயாஜிராவ். சங்கர கிருஷ்ணன் : லால் பால் பால் அப்படின்னு சொல்வாங்களே.. அது இவங்க மூனு பேரைத்தானே சுவாமிஜி..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, அரவிந்தரும் உண்டு. அப்போ லண்டன்ல ஒரு கொலை நடந்தது.. 1909ஆம் வருசம் மதன்லால் திங்கரான்னு ஒரு சுதேசி இளைஞன், கர்சான் வைலி என்ற வெள்ளைக்கார அதிகாரி ஒருத்தன சுட்டுக் கொலை பண்ணினான். கொலையில் இந்தியா ஹவுஸ் ஆட்களுக்குத் தொடர்பு இருந்ததுன்னு மோப்பம் பிடிச்சு சாவர்க்கரை பிடிச்சுக்கிட்டு போச்சு பிரிட்டிஷ் அரசு. அவரை அந்தமான்ல கொண்டு போட்டாங்க. வ.வே.சு. அய்யர் பலே கில்லாடி. தப்பிச்சுப் போயிட்டாரு. 1910ஆம் வருசம் பாண்டிச்சேரிக்கு வந்து என் தலையெழுத்தை அவருதான் எழுதினாரு. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, சாவர்க்கர்ன்னு சொன்னீங்களே.. காந்தி அடிகள் கொலைச் சதியில் சேர்க்கப்பட்டிருந்தாரே அந்த சாவர்க்கரா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா அவருதான்.. (சிரிக்கிறார்) காலம் எப்படில்லாம் மாறிடுச்சு பாருங்க.. நான் சாமியாராகி இருக்கேன்.. அரவிந்தர் வேதாந்தியாப் போய் ஆசிரமம் நடத்துனாரு.. வ.வே.சு. அய்யர் காந்திஜி தயவால பிரிட்டிஷ் அரசின் பொதுமன்னிப்ப வாங்கிட்டு ஆசிரமம் நடத்துனாரு. சாவர்க்கர் அந்தமான் சிறைக்கொடுமை தாங்காம மன்னிப்புக் கடிதங்கள் போட்டு வெளியே வந்தாரு. கடைசியிலே காந்திஜி கொலைச் சதியில் சேர்க்கப்பட்டு நிரூபணம் ஆகாம விடுதலையானாரு. சங்கர கிருஷ்ணன் : நீங்க மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கிட்ட எந்த விதத்திலேயும் சரணடையாம, ரொம்ப காலம் ஜெயில்ல இருந்தவரு.. இல்லையா சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) அதுதான் தம்பி வேடிக்கை. இரண்டு தடவை நான் ஜெயிலுக்குப் போனபோதும் வெறும் சதிக் குற்றம்தான். ஆஷ் கொலையை நான் திட்டமிடாமலே முதல் குற்றவாளி. ஏழரை வருடம் சிறை. இரண்டாம் தடவை கம்யூனிஸ்ட் பிரச்சார நோட்டீஸ் கொடுத்தேன்.. இன்னொரு எட்டு வருசம் சிறை. இது பெரிய குற்றமில்லியா? இந்தியாவுக்கு வெளியே ரங்கூன்ல கொண்டு போட்டான்..(சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : நேற்று தூத்துக்குடிச் சம்பவங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. 1908 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடிக்கு ஒரு பெரிய புயல் வந்தது. அதோட பேரு சுப்பிரமணிய சிவா. அப்போ தூத்துக்குடி தேசபக்த வெறி பிடிச்சுக் கிடந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க. நான் திருநெல்வேலி வந்து கூட்டங்களில் பேசிக்கிட்டிருந்தேன். மார்ச் மூனாம் தேதி வேலை நிறுத்தம் ஜெயிச்சது. 50 சதமானம் சம்பளம் ஒசத்துனாங்க. வார விடுமுறையும் கொடுத்தாங்க. சம்பளம் இல்லாம விடுப்பு எடுத்துக்கிடலாம். நெனச்சுப் பாரு தம்பி, 66 வருசத்திற்கு முன்னே இத நடத்துனாரு பிள்ளைவாள்.. சங்கர கிருஷ்ணன் : உண்மையில் இது பெரிய சாதனைதான் சுவாமிஜி.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, ஏகாதிபத்தியத்தின் முதுகில் விழுந்த அடி இது. அப்புறம் பாலர் விடுதலையைத் தூத்துக்குடியில் கொண்டாடத் திட்டம் போட்டார் பிள்ளைவாள். இது பெரிய மக்கள் எழுச்சி ஆகிவிடும் என்று திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் பயந்தான். தூத்துக்குடியில் சப் கலெக்டரா இருந்த ஆஷ் அதிகார ஆணவம் கொண்ட இன வெறியன். கூடவே சிதம்பரம் பிள்ளை நடத்திய தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க நினைத்தும் முடியாத தோல்வியில் குரோதம் கொண்டு இருந்தான். கலெக்டர் விஞ்ச், பாலர் விடுதலைக் கொண்டாட்டத்திற்குத் தடை போட்டான். வ.உ.சி.யும் சிவாவும் அய்யங்காரும் தடையை மீறி பாலர் விழாவை நெல்லையில் கொண்டாடினார்கள். மூனு பேரையும் கைது பண்ணினாங்க. திருநெல்வேலியிலேயும் தூத்துக்குடியிலேயும் பெரிய எழுச்சி நடந்தது. விஞ்ச்சும் ஆஷூம் இந்த ரெண்டு ஊரையும் ரணகளமாக்கி, பேயாட்டம் ஆடினாங்க.என் இயக்கத்தை நடத்த வேண்டியிருந்ததால நான் கடையநல்லூருக்குப் போய் இருந்துகிட்டேன். பிறகு சென்னைக்கு வந்து, இந்தியா பத்திரிகையில் வேலை பார்த்தேன். பாரதியார் பாண்டிச்சேரி போனப்போ, இரண்டு வாரம் நான்தான் இந்தியாவைக் கொண்டு வந்தேன். அப்புறம் இந்தியா பாண்டிச்சேரியிலிருந்து வந்தது. அவ்வளவுதான்.. ஒரு இரண்டரை வருசம் பேயா அலைஞ்சு ஆள் புடிச்சேன். 1910ஆம் வருசம் வந்தது; சித்திரையா வைகாசியா.. சரியா ஞாபகமில்லை. அப்போ.. (மேடையில் ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை தொடரும்.