நீலகண்ட பிரம்மச்சாரி
நாடகம் காட்சி 1 காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலைகளம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடுபாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார் வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.” (வாசலில் குரல் கேட்கிறது) குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..” சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது. சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..” வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.” சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..” நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார். நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?” செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.” சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார். செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..” நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..” செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?” நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..” செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?” நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..” செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..” (வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்) பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..” நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..” பாரதியார்: “யார்..?” நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?” பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?” நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..” பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..” நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..” பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?” நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..” பாரதியார்: “ஏன்..?” நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..” பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?” செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம் செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..” நீலகண்டர்: “வந்தனம் மன்னி..” (நீலகண்டர் வெளியே நடக்கிறார்) பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”(பாடுகிறார்) “இனியொரு விதிசெய்வோம் – அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக் குணவிலையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்” (திரை விழுகிறது) (நாளை தொடரும்)