பாசிசத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

பாசிசத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் சமூக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது. அந்தக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று இந்திய அரசு கேட்டுக்கொண்ட பின் ஊடகங்களில் மறைப்புச் செய்து காட்டப்படுகிறது. இருப்பினும் அயல்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சிலவற்றில் அது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. மே 3ஆம் நாள் மைதேயி இனத்துக்கும் குக்கி இனத்துக்குமான மோதலாகத் தொடங்கிய வன்முறை, உள்நாட்டுப் போர் என்னுமளவுக்கு முற்றி, இன்று வரை தொடர்கிறது. இரட்டை எஞ்சின் அரசுகள் என்று பாசக பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய நடுவணரசும் மணிப்பூர் மாநில அரசும் சேர்ந்து இந்த இன மோதலை, குக்கிகளுக்கு எதிரான இனவழிப்புப் போராகவே மாற்றிவிட்டன. குக்கிகளில் பெரும்பாலார் கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் என்பதால், நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. காணொளியாக வெளிவந்துள்ள பாலியல் வன்கொடுமை மே 4ஆம் நாள் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. கொடுமைக்கு ஆளான ஒரு பெண், மே 18ஆம் நாள், காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இத்துணைக் காலமும் இது குறித்துக் காவல்துறையும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்ச்சியை மூடி மறைத்தே வந்துள்ளன. எதிர்க் கட்சிகள் வன்மையான கண்டனங்கள் தெரிவித்த பின், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அணியமாய் இருப்பதாக அறிவித்த பாசக அரசு, உருப்படியான விவாதம் நடந்து தலைமையமைச்சர் மோதி விளக்கமளிக்க வேண்டிய நிலைமையைத் தவிர்க்கவே எல்லாத் தந்திரங்களும் செய்து வருகிறது. முதலில் குற்றவாளி ஒருவரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்த மாநில அரசு, இப்போது நால்வரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இத்துணைக் காலம் இவர்களை ஏன் கைது செய்யவில்லை? என்ற கேள்விக்கு மாநில அரசு தரும் விடை: இரண்டு திங்களாகக் கிடைக்காத ஆதாரம் இப்போதுதான் கிடைத்ததாம். எது? இந்தக் காணொளிதான் அந்த ஆதாரமா? இதுபோன்ற இன்னும் பல காணொளிகள் இருப்பதாக மாநில முதல்வர் பிரேன் சிங்கே சொல்கிறார். அப்படியானால் இன்னும் பல வன்கொடுமைகள் நடந்துள்ளன என்று பொருள். தேசிய மகளிர் ஆணையமும் தங்களுக்குப் பல முறைப்பாடுகள் வந்திருப்பதாகச் சொல்கிறது. இந்த வன்கொடுமைக் குற்றங்களைத் தண்டிக்கவும் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மாநில அரசு தானாக எதுவும் செய்யாது, காணொளிகள் வெளிவரும் வரை அது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், பிறகு ஒரு சிலரைக் கைது செய்து கணக்குக் காட்டும் என்பதுதான் இதன் பொருள். வன்கொடுமையால் பாதிப்புற்ற பெண்களில் ஒருவர் காவல்துறைதான் தங்களை வெறிக் கும்பலிடம் விட்டுப்போனது என்று குற்றஞ்சாட்டுகிறார். வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கணவர் – நடந்ததை நேரில் பார்த்தவர் – இந்தியப் படையில் இருந்தவராம்! கார்கில் போரில் பங்கேற்றவராம்! இலங்கையிலும் இந்தியப் படையில் இருந்தவராம்! இந்த முன்னாள் இந்தியப் படையாள், இப்போது தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்: ‘அந்த இரண்டு மூன்று பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் இந்தப் பெண்களை ஆடைகளைக் களையும்படிக் கட்டாயப்படுத்தினார்கள். எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முயன்றபோது, ஒரு பெண்ணின் தந்தையை அவர்கள் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்தார்கள். காவல்துறையினர் மைதேயி கும்பலுக்குத் துணை நின்றனர். அவர்கள் இந்தக் கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.’இப்படிப்பட்ட நிலைமையில் குக்கிகளால் மைதேயிகளுடன் சேர்ந்து வாழ முடியுமா? ‘நாங்கள் தனித் தனியாகத்தான் வாழ முடியும், அதுதான் சரி’ என்று குக்கிகள் சொல்கிறார்கள். நடுவணரசிலும் பாசக, மணிப்பூர் மாநில அரசிலும் பாசக! இதற்குப் பெயர் ‘இரட்டை எஞ்சின் சர்க்கார்’! வலுமிக்க ஆட்சியாம்! பாசக ஆட்சியில் வகுப்புவெறி வன்முறைக்கு இடமிருக்காது என்ற பீற்றல் மணிப்பூரில் பிய்ந்து தொங்குகிறது. இது பற்றிய கவலை பிரேன் சிங்குக்கும் இல்லை, அமித்சாவுக்கும் இல்லை. அகன்ற மார்போடு அகிலம் சுற்றும் அசகாய சூரர் நரேந்திர மோதிக்கு இருக்க வேண்டாமா? எவன் செத்தால் எனக்கென்ன என்று வெள்ளை மாளிகையில் விருந்துண்டு, பிதேன் இணையருக்கு வைரம் பரிசளித்து, கொசுறாக ஆய்தக் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொண்டு தேச நலன் காத்து நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார். மற்றதெல்லாம் இருக்கட்டும்; குசராத்து – 2002, மணிப்பூர் – 2023 இரண்டையுமே மறந்தும் மறைத்தும் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இல்லையோ என்ற சிறு ஐயத்தையே எள்ளி நகையாடுகின்றார். மே 4 வன்கொடுமைக் காணொளி வந்தது; உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது; மோதி வாயிலிருந்த கொழுக்கட்டையும் விழுந்துவிட்டது. மணிப்பூர் பற்றி மோதி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்: ‘மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது’ என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், அங்கு குற்றம் இழைத்தவர்கள் மீது இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மீது மோதி நடவடிக்கை எடுப்பாரா?! ‘மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் மோதி. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிற நாளில் இந்தக் கருத்தை அவர் நாடாளுமன்றத்தில் பேசினாரா? இல்லையே! காசுமீரில் அசீபா பானுவுக்கும் குசராத்தில் பில்கிஸ் பானுவுக்கும் உ.பி. ஹத்ராசில் அந்த தலித் பெண்ணுக்கும் – இப்படி எத்தனை எத்தனையோ பெண்களுக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகளில் பாசக உறுதியாகக் குற்றவாளிகளின் பக்கம் நின்றதைக் கண்ட யாரும் ‘மணிப்பூர் மகள்கள்’ என்று மோதி பேசுவதில் மயங்கமாட்டார்கள். மணிப்பூர் குற்றவாளிகளை மன்னிக்கவே முடியாது என்கிறார் மோதி. அப்படியானால் மோதி, அமித்சா, பிரேன் சிங் ஆகிய முதல் மூன்று குற்றவாளிகளையும் மன்னிப்பதற்கில்லை. ‘உண்மையிலேயே மணிப்பூர் நிலை குறித்துப் பிரதமர் மோடிக்கு கோபம் இருந்தால், முதல்வர் பிரேன் சிங்கை முதலில் பதவி நீக்கம் செய்யட்டும் பார்க்கலாம்!’ – என்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. ‘மணிப்பூர் தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும்’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியத்தில் எப்படி இப்படி நிகழ முடியும்? என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார். இவ்வாறான கொடுமைகள் திரும்பத் திரும்ப நிகழுமானால், இது அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியம்தானா? அல்லது இந்த அரசமைப்பே குடியாட்சிய அரசமைப்புதானா? என்ற கேள்வி எழத்தான் செய்யும். அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், மணிப்பூர் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதும் பேசுபொருளாயிற்று. இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோதி ‘மணிப்பூர் மகள்கள்’ பற்றிப் பேசுகிறார். இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் மயங்கமாட்டார்கள். பாசிச வெறியர்களுக்குப் படுகொலையும் பாலியல் வன்மொடுமையும் அரசியல் கருவிகள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்களின் பாசிச அரசியலை முறியடிக்காமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

“பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தால், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்றமாகாது” என்று கேரள நீதிமன்றம் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான சிவிக் சந்திரன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டிற்கு, நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் வருடம் நந்தி கடற்கரையில் நடந்த எழுத்தாளர்கள் முகாமின்போது தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அவர் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பு சாட்சியாக அளிக்கப்பட்ட புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடை, பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் விதமாக இருந்ததாக நீதிபதியே கூறுவது “விக்டிம் ப்ளேம்” செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்கள் எழும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண் மீதே முன்வைக்கப்படும் இது போன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வெகுசனத்தைத் தாண்டி நீதிமன்றங்களே தெரிவிப்பது வேதனைக்குரிய விசயம். இதுதான் சாக்கு என்று சில ஊடகங்களும் “ஆபாச ஆடை அணிவது பாலியல் இச்சையைத் தூண்டுகிறது” என்று தன் பங்கிற்கு அந்த விசயத்தை ஆதரிக்கின்றன. பாலியல் குற்றங்களுக்கு ஆடை காரணமல்ல என்று தொடர்ச்சியாகப் பெண்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், சமூகம் இன்றளவும் பெண்ணின் ஆடை மீதே விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று “ஒழுக்க விதிகள்” கற்பிப்பதில் மட்டுமே இந்தச் சமூகம் கவனம் செலுத்துகிறது. பொதுசனம், ஊடகம், நீதிமன்றம் என்று அனைவரும் பொதுவெளியில் பெண் மீதான மாண்பைக் குறைக்கும் வகையில் இது போன்ற பிற்போக்குக் கருத்துகளைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கின்றனர். உண்மையிலேயே பெண்கள் குறித்த முற்போக்குப் பார்வை இருந்தால், ஊடகத்துறையில் வேலை செய்யும் பெண்களிடமே கேட்டுப் பாருங்கள். அவர்களில் எத்தனைப் பெண்கள் தங்கள் வீட்டில் பெரும் எதிர்ப்பைச் சுமந்துகொண்டு தினந்தோறும் பணிக்குச் செல்கிறார்கள் என்று தெரியும். ஊடகம் என்றாலே “நோ” என்று சொல்லி விடும் போக்கு இன்னும் மாறாத சமூகத்தில் இருந்து கொண்டு, இது போன்ற கருத்துகள் வெளிவருவது ஆரோக்கியமான போக்கிற்கு வழி காட்டாது. பொதுவெளியில் ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும், ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடத்தில் அவள் எங்கே நிற்க வேண்டும், எந்தப் பேருந்தில், எத்தனை மணிக்குப் பயணிக்க வேண்டும் என்று அவளுக்கான வரையறைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.   அப்படியானால் பெண் உடல் காம ஆசையைத் தூண்டுவது இல்லையா? பெண்ணின் உடல் பகுதிகள் காம இச்சைகளைத் தூண்டும் என்பதில் எனக்கும் துளி சந்தேகமும் இல்லை. ஆனால் அவை எப்போதும் காமத்தையே தூண்டிக் கொண்டிருக்கிறதா? சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் இடத்தில் அக்குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் ஒருபுறம் தாய் பாலூட்டிக் கொண்டே இருக்க, மறுபுறம் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த மார்புடன் அவள் பாலூட்டுவதைப் பார்த்துக் கூடியிருந்தவர்கள் காமத்தில் வெறி கொண்டு விட்டார்களா? அதில் ஓர் அழகியல் இருந்ததால் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தர்கள். இங்கே ஆபாசம் எங்கிருந்து வந்தது. பெண்ணின் சம்மதமின்றி நடக்கும் பாலியல் வல்லுறவை நியாயப்படுத்தும் விதமாக அவளின் ஆடையை, அவளின் நிர்வாணத்தை – பகடையாய் உபயோகிப்பது முறையல்ல. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் மூன்று வயது குழந்தையின் ஆடை என்ன செய்தது? இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று அவர் பக்கம் நியாயங்களை அடுக்கும் சில ஊடகங்கள், சௌமியாவை இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன்‌. ஆண் உடல் போன்று பெண் உடலும் இயல்பு என்று எத்தனை முன்னெடுப்புகள் செய்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகிப் போகின்றன. இச்சமூகம் பெண்கள் மீது நடத்தும் உடல் ரீதியான வன்முறைகளுக்கு இணையாக இது போன்ற வார்த்தை வன்முறைகளும் மிகுந்த கண்டனத்துக்குரியது. பெண்களை ஒடுக்கி வைக்கும் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனை, படித்தவர்கள் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகின்ற, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கின்ற மாநிலத்திலேயே இவ்வளவு வலுவாக உள்ளது எனில், நாட்டின் பிற பகுதிகளில், பிற்போக்கு சக்திகளின் பிடியில் சிக்கி இருக்கும் மாநிலங்களில் எந்த அளவில் இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் குறித்த இத்தகு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட நபர்களை அரசியல், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற அமைப்புகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். சாந்தி சண்முகம்

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. எல்லாம் சரி, தமிழக அரசின் பார்வையில் போதைப்பொருள் என்பது குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவையாகத்தான் இருக்கிறது. அரசால் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்களின் கணக்கில் வராதது, வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.  மதுபானங்கள்தான் தற்போது மிக மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக, அரசின் அனுமதியுடன் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய போதைப்பொருட்களாக இருக்கின்றன. அதேபோல, தினசரிச் செய்தித்தாள்களைத் திறந்து, கொலை, கொள்ளை, வன்புணர்வு, தற்கொலை எனப் பத்து செய்திகளை வாசித்தோமானால், அவற்றில் ஏழெட்டு சம்பவங்களுக்கு அடிப்படையாகவோ, பின்புலமாகவோ மதுப்பழக்கம் இருக்கும். மது போதையில் வன்புணர்வு, மதுப் பழக்கத்தால் கணவன் மனைவி இடையே தகராறு, மதுப் பழக்கத்தால் கடனாளியாகித் தற்கொலை, மதுபானம் வாங்கப் பணம் தராததால் மனைவி அடித்துக் கொலை, இப்படியான செய்திகள் மிகச் சாதாரணமாகிவிட்டன. இவையொன்றும் அரசின் பார்வைக்குப் போகாத ரகசியச் செய்திகள் அல்ல. ஆனால், இவற்றையெல்லாம் இத்தனைக் காலமாக அரசாங்கங்கள் கண்டுங்காணாமல்தான் கடந்து வருகின்றன. மதுபான விற்பனையாலும், மதுப் பழக்கத்துக்குப் பலர் அடிமையாவதாலும் அரசுக்கும் அரசியலுக்கும் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே அதற்குக் காரணம். குடி நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, குடிநோயால் கணவன் உயிரிழந்ததால் இளம் விதவையான பெண்களின் எண்ணிக்கை, மது போதையால் நடக்கும் கொலை, கொள்ளை, வன்புணர்வு, விவாகரத்துகள் என அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரித்தால், தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகத்தீமையின் வீரியம் பளிச்சென அனைவருக்கும் புரியும். அவ்வளவு ஏன், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பம், உறவினர்கள் மட்டத்தில் தீவிர மதுப்பழக்கத்தில் சிக்கியவர்கள் குறித்துக் கணக்கெடுத்தாலே இதன் தீவிரத்தன்மை புரியும். இவற்றைத் தடுத்து நிறுத்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதலில், குடிப்பழக்கம் ஒரு சமூகக்கேடு என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாக்காச்சி போர்டில் எழுதிவைப்பதல்ல இது. தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகக்கேடுகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும். குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒருவர் மீதான மரியாதை எந்த அளவுக்கு இழிவு நிலைக்குச் செல்கிறது, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பது குறித்த பிரச்சாரங்கள் திண்ணைப் பிரச்சாரம் போல முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சாரங்கள், நேரடியாக மக்கள் மத்தியிலும், அனைத்து ஊடகங்களின் வழியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமூக அக்கறையுடனும் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதால் விளையும் தீமைகள் குறித்து ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும். தீவிர மதுப்பழக்கம் தவறென்ற சிந்தனை பரவத் தொடங்கும். இதுதான் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சரியான முன்னெடுப்பாக இருக்கும். பொதுவாக, மதுபானக்கடைகளை ஒழித்துவிட்டால், மதுப்பழக்கத்தை ஒழித்துவிடலாம் என்ற சிந்தனை பலருக்கும் உண்டு. ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதற்குப் பல்லாண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் தொடரும் கள்ளச்சாராயச் சாவுகளும், அங்கே விற்பனையாகும் போலி மது பானங்களும், சாராயம் குறித்த புள்ளிவிவரங்களுமே சாட்சி. அதேவேளை, மதுபானக்கடைகளை முற்றாக மூடுவதற்குப் பதிலாக, எண்ணிக்கையை இஷ்டத்துக்கு அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது, சிறு கிராமத்திலும்கூட இரண்டு மூன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் மதுபானக்கடைகளும் ரெக்கரியேஷன் கிளப் என்ற பெயரில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, ஊருக்கு வெளியே மதுபானக் கடைகளைக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் அருகிலுள்ள மதுபானக் கடைகளை ஒழிக்க வேண்டும். நம்மூரில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்க வேண்டிய கல்விக்கூடங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தொலைவில் இருக்கின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டிய மதுபானக்கடைகள் குடியிருப்புப்பகுதியில் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். இறுதியாக, மது பானங்கள், போதைப்பொருட்கள் பயன்பாடென்பது, தமிழ்நாடு என்றில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவாலான பிரச்சனையாக தற்போது உள்ளது. குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் கடந்த ஆண்டில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. அடுத்தடுத்து, அதே துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலும், 350 கோடி ரூபாய் மதிப்பிலுமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், குஜராத்திலுள்ள மற்ற துறைமுகங்களிலும் போதைப் பொருட்கள் பிடிபட்டன. அதாவது, மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலம்தான், போதைப்பொருட்களின் சர்வதேசச் சந்தையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது, போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் அங்குதான் அதிக அளவில் நடக்கிறது. குஜராத் மட்டுமல்லாது, இந்தியா முழுக்கவே போதைப்பொருட்கள் சப்ளை அதிதீவிரமாக நடக்கிறது. பெருமுதலாளிகளின் உலகமாக மாறிவரும் இன்றைய சூழலில், போதைப்பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதோடு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வைத் தீவிரமாக முன்னெடுப்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடும். அந்த விழிப்புணர்வு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நம் எதிர்காலம் நம் கைகளில். வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்