வேர்

வேர்

சிறுகதை ஆறு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. கைப்பையை விரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். இந்தப் பயணம் மூன்றாவது முறை. மிக நீண்ட பயணம் ஒன்று பள்ளிக்காலத்தில் கிடைத்தது. இப்போது இருக்கும் வாந்தி மாத்திரைகள் இல்லாத காலம். எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்து பசுமையை அதற்குண்டான இளம் சாரளைக் கொண்டு நகர்த்திய நாள் அது. சுமை என்ற ஒன்று இல்லாத காலம் இருந்ததில்லை அப்பாவிற்கு. ‘அவளுக்கு இல்லாம என்ன?’ என்ற வார்த்தைகளைத் தவிர வேறெதையும் பகிராத குணம் அது. அப்பாவும் அம்மாவும் சிரித்துப் பேசிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் ஒரே பெண்தான் நான் அவர்களுக்கு. பெரியதாக சண்டை ஏதும் நடந்ததாக ஞாபகம் இல்லை. ‘இன்றைக்கு ஏன் இத்தனை ஆராய்ச்சி?’ என்று தோன்றிய நொடியில், காரின் சத்தம் கேட்டுக் கலைந்து கைப்பையோடு வெளியேறி தொற்றிக்கொண்டேன். பழைய வீட்டிலிருந்து இந்தப் பயணம் தொடங்கியிருந்தால் இந்நேரம் அப்பா கதவருகில் வந்து நிற்பார். எல்லா தைரியங்களை கற்றுத் தந்துவிட்டாலும் இன்னும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதற்கான சந்தேகமது. ‘என்ன பார்த்தாலும் எல்லாம் பார்க்க முடியாது’ என்பதை அம்மா ஒருமுறை வேறொரு மொழியில் சொல்லும்போது அவருக்கு இன்னும் இரக்கம் வந்தது. பெண் பார்த்துவிட்டுப் போனவர்களைப் பற்றித் தனியாகக் கட்டுரை ஒன்றைத் தயார் செய்துகொண்டு வந்து சமர்ப்பித்தார். தேர்வுத் தாளில் என் மதிப்பெண்ணைக் கூட்டி சரி பார்க்கும் மனநிலையில் வளர்த்தவருக்கு வேறென்ன தெரியும்! ஒன்று நூறு அல்ல; ஆயிரம் முறை எந்த அர்த்தத்தில் கேட்டாலும் எனக்கென்று எந்தத் தனிப்பட்ட விருப்பமுமில்லை என்று நானாகவே நேரடியாகச் சொன்ன பின்புதான் திருமணத்தின் அடுத்த பக்கத்தைப் பார்க்கப் போனார். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. “நீ சாப்பிடல.. என்ன பண்ணப் போற…?” அவளுக்கு வேறென்ன கேட்கத் தெரியும்? நிழலில் வளர்ந்த செடி அவள். புதிதாக எதையும் அனுமதிக்காத பூங்காச் செடி. அப்பாவையும் என்னையும் தவிர வேறொரு உலகம் அறியாதவள். ஒருவேளை நானும் அம்மாவை ஒத்திருந்தால், இந்தப் பயணத்திற்குத் தேவை இருந்திருக்காதுதான். பறக்கத் தொடங்கி, பேசும் நேரம் நீண்டு, ஒரே மாதத்தில் இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டோம் என்ற முதல் பொய் வானம் போல நீலமாய் இருந்த நாள் அது. என்னுடைய வருமானத்தையும் இன்ன பிற சாகச விருப்பங்களையும் சொல்லிகொண்டிருந்தேன் அப்போது. எதிரிலிருந்து வரும் வார்த்தைகளின் கனத்தைக் கூர்ந்து கவனிக்கும் சாகசத்தை அப்பா எனக்குக் கற்றுகொடுக்கவில்லை. துணை என்ற ஒன்றை இருபாலரும் இவ்வளவு உணர்வுகளைக் கொண்டு அணுகவேண்டிய அவசியமில்லை என்பதை நான் புரிந்துகொள்ள இருபது மாதங்களாயின. ‘நடுவில் அறுத்தாலும் வளரும் மரம் உள்ளபோது, மனிதனுக்கு வேர் இல்லாமலா போகும்?’ என்ற சொலவடை எதன் வழியாக வந்ததோ?! இதோ, இந்தப் பயணமும் அதன் வழியாகத்தான் நிகழ்ந்தது. எனக்காக இளையராஜாவை நிறுத்தி வைத்துவிட்டு, உணவகம் ஒன்றில் நுழைந்தார் ஓட்டுநர். பசிக்கிறது. எதையாவது விழுங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். “நான் வீட்டுல சாப்பிட்டு வந்துட்டேன்… நீங்க சாப்பிடுங்க” என்று விலகிக்கொண்டார். மணி பத்தைத் தாண்டியிருந்தது. மாநகரத்தை நோக்கிய சாலையில் இருக்கும் உணவகம் அது. மென்சூட்டில் வந்த சப்பாத்தியை, அன்றொரு நாள் மாத்திரை விழுங்கியதைப் போல விழுங்கினேன். ‘நீ அப்படியேதான் இருக்கிறாய் ‘என்ற குற்றவுணர்வும் வந்து போனது. வெகுவிரைவாக வாகனம் ஏறி அமர்ந்து பயணமானோம். கடைசியாக, அடம்பிடித்த குழந்தையின் வாயில் திணித்த மிச்சச் சோற்றோடு ஒரு தகப்பன் அங்கிருந்தான். எனக்கு அப்பாவைத் தவிர வேறொருவரை அங்கு நிறுத்தி ஒப்பிட முடியவில்லை. ‘இனி உன்னோடு வாழ முடியாது’ என்ற வாக்கியம் நேரடியாக வரும்வரை காத்திருக்கப் பழகியவள் எவ்வளவு முட்டாளாக இருப்பாள்?! ஆம், நான் முட்டாள்தான். இல்லையென்றால் அப்படிக் கேட்டிருப்பேனா? ‘இந்தப் புகைப்படத்தில் இருப்பவள் யார்?’ பரவலாக திருமணத்திற்கு முன்பு பேசிய பொய்யைப் போல, ஏதாவது சொல்லியிருக்கலாம். ‘மவுனம் பொய்யைவிடக் கனமானது’ என்று யார் எனக்கு சொல்லித் தந்தார்கள்?! இரண்டாம் நாள் இரவில், இருவரில், எனக்கு எந்த நெருடலும் இல்லைதான். மிக வேகமாக வெளியேறிப்போன உன் குற்றவுணர்வு, என்னுடன் படுக்கையில்தான் இருந்தது. நீ மறந்து, விட்டுச் சென்றுவிட்டாய். ஒரு கேள்வியில் இத்தனை பதில் கிடைக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது. என் அப்பாவை நீ, ‘வா’ என்றாவது அழைத்திருக்கலாம். மகளைப் பெற்ற அப்பாக்கள் பெரும்பாலும் மரியாதையைக்கூட எதிர்பார்ப்பதில்லை. ‘எனக்கு வெளியில் வேலை இருக்கிறது. நீ உன் வீட்டில் இரு’ என்று சொன்ன நீ, ரயில் நிலைய வாசல் வரை ஏன் எதுவும் சொல்லவில்லை? எல்லா அழைப்புகளிலும் விருப்பமில்லாமல் பேசிய உன் வார்த்தைகள் என் வீட்டுச் சுவற்றில்கூட இல்லை. ஆண்கள் என்றால் தைரியசாலிகள் என்ற மனநிலையை, கண்டிப்பாக நான் என் அப்பாவிடம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் வாழ்வில் தைரியம் என்பது வேறொன்று. இருபுறமும் காவேரி, எந்த இரைச்சலும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். சொல்லப்போனால், நதியின் வாழ்வுதானே பெண்ணின் வாழ்வு! வேறு வழியில்லாமல் இருவரும் தானாக உருவாக்கியதைப் பெருமையாகக் கருதாமல் கரைந்துபோகிறார்கள். நதிதானே இங்கே கடலை உருவாக்கியது?! வேறு காட்சி வேண்டாம் என்று கண்ணாடியை ஏற்றிக்கொண்டேன். “முதல்ல அவருக்கு சொல்லு. இல்ல.. நான் சொல்லட்டா?” அம்மாதான் தொடங்கினாள். சில சம்பவங்களை உடனடியாகக் கடத்திவிடுவதுதான் சரி எனப் புரிந்துகொண்ட சந்தர்ப்பமது. “அதுக்கு என்ன…?” என்ற உன் கேள்வி, திருமண வாழ்வில் முதன்முறையாக எனக்கு கண்ணீரைத் தந்தது. “நான் ரெண்டு நாள்ல வந்துருவேன்… அப்படியே இரு” என்பதன் அர்த்தம், ‘எந்தக் கற்பனையும் என் கற்பமும் வேண்டாம்’ என்ற அறிகுறியாக எனக்குத் தென்படவில்லை. அம்மாவை வெளியில் அமர்த்திவிட்டுதான் பேசத் தொடங்கினோம். எனக்கு உன்னோடு வாழ விருப்பமில்லை என்கிற வார்த்தைகளை மிக நாசூக்காக வெளியில் கொட்டிக் கிளறிக்கொண்டிருந்தாய். மீண்டும் ஒருமுறை நான் அழத் தயாராக இல்லை என்பதே உனக்கு அதிர்ச்சியாகவும் ஆசுவசமாகவும் இருந்திருக்கலாம். எனக்கு அங்கேயும் ஒரு ஆறுதல் இருந்தது. என் அப்பாவின் தேர்வு தவறானது என்பதை, அவர் அறியாமலே இறந்து போனது. குழந்தை எனக்கு வேண்டாம் என்பதை, எவ்வளவு அழகாக உன்னால் சொல்ல முடிந்தது?! ‘உன் வாழ்வு எதிர்காலம் இல்லாமல் போகும்’ என்று எனக்கு நீ தந்த அறிவுரை, தேவையான ஒன்றுதான். அதனால்தான் உன் கையெழுத்து கொண்டு கரு கலைத்தேன். நாளை அது கேட்கும் கேள்விகளுக்கும் உன்னிடம் மவுனம்தானே இருக்கும்? இதோ, மாநகர எல்லை வந்துவிட்டது. நாளைய இறுதித் தீர்ப்பில் எல்லாம் முடிந்துபோகும். என்னிடம் எல்லாப் பெண்கள் முன்வைக்கும் கேள்வி இருக்கிறது. ‘என்னைவிட எதில் அவள் உயர்ந்தவள்?’ என்ற கேள்வி. நிச்சயமாக நான் அதைக் கேட்கமாட்டேன். உன்னைவிட நானும் தாழ்ந்துவிடவில்லை என்ற நம்பிக்கை வந்த பின்பு, உன் மவுனத்தைவிட இந்த வாழ்வு பெரியதாகத் தெரிகிறது. அன்பைச் சுமந்து வளர்ந்தவளிடம் வேறென்ன வெளிவரும்? எப்படி எல்லாப் பெண்களும் உனக்கு ஒன்றுபோல் இல்லையோ, அப்படியே எனக்கும் எல்லா ஆண்களும் ஒன்றுபோல் இல்லை. ‘நீ வெட்டியது மேல் கிளைதான். எனக்கு இன்னும் வேர் இருக்கிறது’ என்ற எண்ணம் வந்தபோது அனிச்சையாக இளையராஜா பாடிக்கொண்டிருந்தார். நன்றாகத் தூக்கம் வந்தது.

அழகு எங்கள் அடையளமல்ல

அழகு எங்கள் அடையளமல்ல

வேர்களாகும் விழுதுகள் 2 “டீச்சர்… டீச்சர்… இனிமேல் இவ  வீட்டுக்கு  ஓடி வந்தா மூஞ்சிலேயே ஆசிட்ட ஊத்துங்க” என்ற குரல் கேட்டு, குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். ஐந்து வயதுப் பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்து வந்த அந்த இளம் தாய்க்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து  வயதுக்குள்  தானிருக்கும். அந்தத் துறு துறு குட்டிப்பெண் என் வகுப்பு இல்லையென்றாலும், அரசுப் பள்ளிகளில் ஒரு வசதி உண்டு. பள்ளிக்கு ‘செட்’ ஆகும் வரை பிடிச்ச டீச்சர்களிடம் இருக்க ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. அப்படி என்னிடம் வந்த வாண்டு  அது. கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் வீட்டுக்கு ஓடி ஓடிப் போவதால், தன் தீப்பெட்டி ஒட்டும்  வேலை கெடுகிறதே என்ற கவலை தாய்க்கு. அது மட்டுமல்ல, “தலைச்சான் ஆம்பளப்புள்ள பொறந்தா நீ அமோகமா வருவ” என்று குறி கேட்டு வந்ததற்கு மாறாக, பெண்குழந்தை பிறந்ததால், தாய்க்கும் தகப்பனுக்கும் அந்தக் குழந்தை மேல் கோபம். அதை அவ்வப்போது வெளிப்படையாய்க் காட்டுவதுண்டு. ‘அதற்காக இப்படியெல்லாமா ஐந்து வயதுக் குழந்தையைத் திட்டுவார்கள்?’ ஆச்சர்யமாக இருந்தது.   உடலையும் மனதையும் சிதைக்கும் ஆசிட் கொடூரம் பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? திருமணமான இரண்டு வாரத்தில் ஓடும் இரயிலில் ஆசிட் அடிக்கப்பட்ட பிரயாக் சிங், சொந்த சகோதிரியால் ஆசிட் வீசப்பட்ட தௌலத்,வேலூர் குரிசிலாபட்டி பெண் காவலர் லட்சுமி அகர்வால், பெங்களூர் ஹசீனா இவர்களெல்லாம் ஆசிட்டின் தழும்புகளைத் தாங்கி துயரம் சுமப்பவர்கள். உயிரிழந்தவர்கள் பட்டியல் தனி. அவ்வளவு ஏன்? அரசியல் காரணங்களுக்காக பெண் ஐ.ஏ.எஸ். ஆட்சியர் மீதே ஆசிட் அடித்து  சாதனை படைத்ததுதானே தமிழகம்? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்கள் சொல்வார்கள், ஆசிட் தங்கள் கனவுகளை, தங்கள் மகிழ்ச்சியை எப்படி சிதைத்ததென்று?  இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 250 முதல் 300 அமில வீச்சுகள் என்ற பதிவு செய்யப்பட்ட  தரவுகளோடு, உலகின் முதலிடத்தில் நிற்கிறது இந்தியா. ஆனால் உண்மையில் நிகழ்வுகள் ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்கிறது ஆசிட் சர்வைவர்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேசனல் எனும் அமைப்பு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமில வீச்சுகளுக்கான காரணம் காதலும் குடும்ப வன்முறையாகவுமே இருக்கும் அதே சமயத்தில், உலகெங்கிலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப் படுவோரில் 80 சதவீதம் பெண்களே என்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. இரு ஆண்களுக்கிடையே பிரச்சினை என்றாலும்கூட எங்கும்  அந்த வீட்டுப்  பெண்தானே  பழிவாங்கப்படுகிறாள்? ஆசிட் வீச்சுக்கு 10 வருடங்கள் வரை  சிறைத்தண்டனை உண்டு என்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தைத் தருவதில்லை. “எனக்கு கிடைக்கலேன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாது’   என்ற ஆணாதிக்க சிந்தனையின் பொருட்டே, தன் காதல் மறுக்கப்படும்போது, எந்த அழகால் ஈர்க்கப்பட்டானோ அந்த  அழகை அழிப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவ முயற்சிக்கிறான் ஆண்.   பெண்களைச்சிதைக்கும் குற்றவாளிகளின்  வாழ்க்கை சில வருட  சிறைத்தண்டனைக்குப் பிறகு இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட, அமில வீச்சுகளுக்கு ஆளாகும் பெண்கள்,  வாழ்க்கை முழுவதும் வலிகளுடன்   வடுக்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது.   தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் ஆசிட் வீச்சால் ஒரு பெண் படும் துயரை, வலியை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. வழக்கம்போல பணக்காரக் குற்றவாளியை மறைக்க, ஒரு ஏழைப் பையனை பகடைக்காயாக்கி செய்யும் சித்தரவதையையும்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதி மறுக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியது. இறுதிக்காட்சியில் அதுவரை  தழும்புகளை மறைத்து வந்த பெண்,  தன் முகம் காட்டி தனக்கு அநீதி இழைத்த காவலர் மீது அதே ஆசிட் ஊற்றுவதாக முடிவடையும். ஆனால் ஆசிட்டுக்கு ஆசிட் தீர்வல்ல என்பதுதான் நியதியென்றாலும் கூட அந்தப் பெண்ணின் வலியை நமக்கு உணர்த்துவதற்காக இந்த முடிவை இயக்குநர் பாலாஜி சக்திவேல் அமைத்திருக்கலாம்.  இதுபோன்று, தன் மீது விழுந்த ஆசிட் அபிசேகத்தால் சாவின் விளிம்பு தொட்டுத் திரும்பியவள், சற்றும் துவண்டுவிடாமல் தன் போன்ற பெண்களுக்கான விடியலுக்கு துவக்கவுரை எழுதியிருக்கிறாள் ஒரு பெண். இல்லையில்லை, ஒரு குழந்தை. 17.11.1994 அரபிக் கடலோரம் மும்பையில் அந்த அழகுப்  பிஞ்சு இப்பூமிக்கு வந்தநாள். அன்மோல் ரோட்ரிக்ஸ் என்ற பெயருடன். இந்தக் கொடூர உலகையும், மனிதர்களையும் அறியாத, பிறந்து 60 நாட்களேயான அக் குழந்தை பெருஞ்சிரிப்புடன் தாயின் மார்புகளில் புதைந்து தன் பசி தீர்த்துக் பொண்டிருந்தது. பெற்ற தகப்பனே தன்னை கொல்லத் துணிவான்  என அந்த குழந்தைக்குத்  தெரியவில்லை பாவம். தன் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்கு தன்னுடைய குரோமோசோம்களே காரணம் என்பதை அறியாது மனைவிகளைக் குற்றவாளியாக்கும்  இலட்சக்கணக்கானோரில் ஒருவன் அக் குழந்தையின் தகப்பன். தான் விரும்பாத  பெண்குழந்தையை, தாயுடன் சேர்த்துக் கொன்றுவிடும் நோக்கில், ஒரு கேன் ஆசிட்டுடன் வந்தான். வந்த வேலையை முடித்தான். சலனமின்றித் திரும்பி நடந்தான்.  பச்சிளம் குழந்தை துடியாய்த் துடித்தது. தாய்க்கு முகம், உடலெங்கும் எரிந்து, சிதைந்தது. அன்மோலின் ஒரு கண் சிதைய முகம், உடலைங்கும் கொடூரக் காயங்கள். முழுவதும் சிதைந்த தாய் மரணிக்க, தந்தை சிறைக்குச் செல்ல குழந்தை உடல் முழுக்கக் காயங்களுடன், ஒரு கண்ணை இழந்து உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை.  அடுத்த ஐந்து வருடங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்  அக் குழந்தையைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டனர். பற்பல அறுவை சிகிச்சைகள், பராமரிப்பு என அத்தனை செலவுகளையும் ஏற்று அந்தப் பூவைத் தாங்கிக் கொண்டனர். தன் கோர முகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாததால்  அன்மோல் இயல்பாகவே வளர்ந்தாள். சிகிச்சைகளின் வலியைத் தாங்கிக் கொண்டாள். ஐந்து வயதான அன்மோலை ஸ்ரீ மானவ் சேவா சங் என்ற ஆதரவற்றோர் மையத்தில்  சேர்ப்பித்தனர்.  அங்கும் அன்பும், கவனிப்பும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், இவரது தழும்பேறிய முகம் கண்டு பயந்த  பிற குழந்தைகள் மற்றும் மும்பை SNDT பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரும்பத்தகாத பார்வைகளைப் புன்னகையுடன் எதிர்கொண்டே, கடினமான பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களைக் கடக்க நேரிட்டது. சாப்ட்வேர் டெவலப்பராக முதன் முதலில் பணியேற்றபோது, வாழ்வை வென்றுவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அழகை முகத்திலும் நிறத்திலும் உடல் அளவுகளிலும் தேடிக் கொண்டிருக்கும் சமூகம்,   அவரின்  சிதைந்த முகத்துடன் தினம் தினம் பயணிக்க விரும்பாததை உணர்ந்து பணியை உதறினார்.  வேலை தேடிச் செல்லுமிடமெங்கும்  நிராகரிப்பே பரிசாகக் கிடைத்தது.  ஆனாலும் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. சக ஊழியர்கள் வெறுத்த, அருவெறுத்த தன் முகத்தை உலகுக்குக் காட்ட விரும்பியவர், நிதானமாக யோசித்தார். இந்த முகம்தான் என் அடையாளம், இந்தச் சிதைந்த முகத்துடன் உலகை எதிர்கொள்வேன் என உறுதி எடுத்தார். அவரது தன்னம்பிக்கை   தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவியது. இயல்பிலேயே அழகாக உடுத்துவதும் புதுப்புது நாகரிக அணிகலன்கள் அணிவதும் அன்மோலுக்கு  விருப்பமான ஒன்று. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இவரது ஸ்டைலும்  தன்னை நேர்த்தியாகக் காட்டிக் கொள்வதில் காட்டிய அக்கறையும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தது.  எனவே ஃபேஸ்புக்கில் தன்னுடைய படங்களைத் தொடர்ந்து  பதிவிட, அவருடைய நேர்மறையான  குணங்களும் தன்னம்பிக்கையும் நேர்த்தியான உடையலங்காரமும் நவீன பேஷன்  குறித்த ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது. அவரை நோக்கி புகைப்படக்காரர்கள் படையெடுக்க, மிக உற்சாகமாக இன்ஸ்டாகிராம் நோக்கி நகர்ந்தார். இப்போது பாராட்டுகளுடன் ஆடையலங்கார வல்லுநர்களும் பெரிய பெரிய கம்பெனிகளும் இவரைக் கவனிக்கத் துவங்கினர்.  கோடக் மகேந்திரா ஈவன்ட்டில் ரன்வீர் சிங்குடனான ஓர் உரையாடலுக்குப் பிறகு,  நூற்றுக்கணக்கான மாடலிங் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இன்ஸ்டாகிராமில் 232000 பேர் இவரைப் பின் தொடர, சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்கிறார்.  நூற்றுக்கணக்கான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார்.  ஷப்னா ஆஸ்மியுடன் இணைந்து ஆன்டி ஜி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகையாகப் புதுப் பரிமாணம் எடுத்துள்ளதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் கேஸ்ட்ரி திரைப்பட விழாவில் 2018-ல்  பெற்றுள்ளார். தன்னை வெறுத்தவர்களை, ஒதுக்கியவர்களைக் கண்டு மூலையில் அமர்ந்து விடாமல், தனக்குப் பிடித்த துறையில் புயலாய் நுழைந்து, தனக்கென ஒரு அடையாளத்தைப்  பதிவு செய்துள்ள அன்மோல், பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்து வாழும், ஆசிட்டால் முகம் சிதைந்த பெண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார்.   தான் உயர்ந்ததோடு மட்டுமல்ல, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ‘ஆசிட் சர்வைவர் சகாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக,  உளவியல் ஆலோசனைகளும் வாழ்வியலுக்கான உதவிகளும் செய்து  வருகிறார். அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதையே  இந்நிறுவனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20 பெண்களுக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார். தூக்கியெறியப்படும் தருணங்களில்தான் பெண்கள் தங்கள் சிறகுகளை விரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆம், பெண் குழந்தை வேண்டாம் என  பெற்ற தகப்பனால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்ட அன்மோல், வெளித்தோற்றம் கண்டு சமூகத்தால் வெறுத்து  ஒதுக்கப்பட்ட அன்மோல் இன்று பேஷனுக்கான  குறியீடாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டுள்ளார்.  “வாழ்க்கை என்பது ஆசிட்டுடன் முடிந்து விடுவதில்லை. அமிலம் எங்களின் முகத்தை மாற்றலாம். ஆனால் எங்களது  ஆன்மாவை அழிக்க முடியாது. உங்களது அநுதாபமும் பச்சாதாபமும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை எங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நீங்கள் எங்களுக்குச் செய்யும் உதவி” எனக் கூறும் அன்மோல், இன்று உலகெங்கும்  வாழும் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் மீட்பராக இருக்கிறார். பெண்ணை அழகுசார் அடையாளமாகவே பார்க்கிறது இச்சமூகம். அழகியல் சார்ந்த விஷயங்களால் அவளை ஆராதித்து, அழகு நோக்கியே வழிநடத்தி, வேறு எச்சிந்தனையுமின்றி பெண்ணை எளிதாய் வீழ்த்த  எத்தனிக்கிறது. நீண்ட முடியழகு, சிவந்த நிறமழகு, வடுக்களில்லா முகமழகு, எல்லாவற்றிற்கும் மேலாக மென்மையே பெண்மைக்கழகு என்று நம்ப வைக்கிறது.     அழகோடிருந்தால் மட்டுமே நீ ஜெயிக்க முடியும், முகத்தில் பருக்களுடைய பெண்ணோ, கருமை நிறமுடைய பெண்ணோ தங்கள் நிறுவன முகப் பூச்சுகளின்றி வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது என்று விளம்பரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களும் மூளைச் சலவை செய்துகொண்டிருக்க, உடல் முழுக்க வடுக்களுடன் ஒரு கண் பார்வையின்றி தன் தன்னம்பிக்கையின் மூலம்  வாழ்வை வென்றிருக்கும் அன்மோல், பெரும் சமுதாய மாற்றத்திற்கான முதல் விடியல். பார்வையைச் செலுத்துவோம் வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து 

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து