நீலகண்ட பிரம்மச்சாரி – 13

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

காட்சி 13 காலம் : 1911 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்இடம் : பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் வெள்ளவாரி ஓடைபாத்திரங்கள் : நாகசாமி, கண்ணுப்பிள்ளை, வாஞ்சிநாதன்.(நாகசாமி, வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடப் பயிற்சி தருகிறார்) நாகசாமி : வாஞ்சி, உமக்குத் துப்பாக்கிச் சுடுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கையில் நடுக்கம் குறைந்துவிட்டது. குறி வைப்பதிலும் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது. இன்னும் சிலநாள் பயிற்சி போதும். இலக்கைத் தவறவிடமாட்டாய். வாஞ்சிநாதன் : வந்தனம் ஐயா. நாகசாமி : உமது இலக்கு 6 அடி முதல் 10 அடிக்குள் இருக்குமாறு உமக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது. எதிரி இந்த இலக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டு நீர் துப்பாக்கியை இயக்க வேண்டும். எதிரியின் மார்புதான் சரியான இலக்கு. அப்படியான இலக்கு எல்லைக்குள் எதிரி இருக்கும்போது துப்பாக்கி வெடிக்க வேண்டும். கொஞ்சம் குறி விலகினாலும் தோட்டா பிசகிப் பாய்ந்து எதிரி தப்பித்துவிட அதிகம் வாய்ப்பு உண்டு. வாஞ்சிநாதன் : நல்லது ஐயா. நாகசாமி : வாஞ்சி ஐயர், உம்மை நினைத்து மிகுந்த பெருமை கொள்கிறேன். தென் தமிழ்நாட்டு விடுதலைப் போர்ச் சரித்திரத்தில் உமக்கு அழியாத பெயரும் கீர்த்தியும் உருவாகப் போகிறது. உமது தியாகத்திற்கு இணை சொல்ல வேறு யாரும் இல்லை. வாஞ்சிநாதன் : நானும் கர்வமாகவே இருக்கிறேன் அண்ணா. இந்தக் கடமையை என்னை நம்பி ஒப்படைத்தீர்களே..! உங்களுக்கும் ஐயருக்கும் எத்தகைய நன்றி சொன்னாலும் தகும். நாகசாமி : உண்மையில் நீர் முதலில் இங்கு வந்தபோது எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. அய்யர்தான் உன்மேல் பெரிய நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பணியைத் தந்துள்ளார். வாஞ்சிநாதன் : பாரத மாதாவுக்கு என் கடமையை நிச்சயம் செய்து முடிப்பேன். கண்ணுப்பிள்ளை : வாஞ்சி அண்ணா, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நாகசாமி : அநேகமாக பிரான்ஸ் தேசத்திலிருந்து துப்பாக்கி இந்த வாரத்தில் வந்துவிடும். வந்ததும் திட்டத்திற்குத் தயாராகிவிடலாம். வாஞ்சிநாதன் : ஆனா, நீலகண்டர் எங்கே போனார் என்ன ஆனாருன்னு தெரியவில்லையே அண்ணா? (மேடையில் இருள் பரவி ஒளி வரும்போது ஓம்காரின் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்கள் வாஞ்சியின் பயிற்சியின்போது எங்குதான் இருந்தீர்கள்..? ஓம்கார் : பாண்டிச்சேரியை விட்டு வெளியேறிய சில நாட்களில் காசிக்குச் சென்றுவிட்டேன். ஆஷ் கொலைச் சதியில் என்னையும் சேர்க்கப்பட்டிருந்ததை காசியில் பத்திரிகைச் செய்தியாகத்தான் நான் தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : நாகசாமி சொன்னதுபோல வாஞ்சிநாதனின் பெயர் தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில் நிலைகொண்டுவிட்டது அல்லவா..? ஓம்கார் : ஆமாம், வாஞ்சி அந்தக் கொலைக்குத் தயாரானதைவிட, தற்கொலைக்குத் தயாரானதுதான் பெரிய சவால். புரட்சிக்குத் தயார் ஆகிறவன் மரணத்திற்கும் சேர்ந்தேதான் தயார் ஆகிறான். ஆனால், அந்த மரணம் சமரில் அமைய வேணடும்; அல்லது அந்த மரணம் தொடர்ந்து புரட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டும் அல்லவா..? வாஞ்சியின் தியாகம் மகத்தானது. ஆனால் அவர் செயலும் தியாகமும் புரட்சியைத் துடைத்துப் போட்டுவிட்டது. வாஞ்சியின் மரணத்தோடு தமிழ்நாட்டு புரட்சிப் இயக்கமும் தனது இறுதி மூச்சை விட்டது. ஆகவேதான் அவரது தியாகம் அர்த்தமில்லாது போய்விட்டது. (மேடை இருளில் போகிறது. ஒளி வரும்போது தர்மாலயம் இல்லத்தின் அறை) காலம் : 1911ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஒருநாள் முன்னிரவு.பாத்திரங்கள் : வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், கண்ணுப்பிள்ளை, நாகசாமி வ.வே.சு.அய்யர் : துப்பாக்கி வந்துவிட்டது (துப்பாக்கியை எடுத்துக் காட்டுகிறார்) மேடம் காமாவின் முயற்சியினால் பிரான்ஸ் தேசத்திலிருந்து வந்த துப்பாக்கி இது. இதில் இரண்டு குண்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. ஒன்று ஆஷ் கலெக்டர் மார்பைத் துளைக்க வேண்டும். இன்னொன்று உனக்கானது; தியாக வேள்வியின் ஆகுதிக்கானது. நீர் உமது வேலையை எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்? வாஞ்சிநாதன் : ஊருக்குப் போனதும் செய்துவிடுவேன் ஐயா. வ.வே.சு.அய்யர் : நல்லது.. நீர் செய்யப் போகும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதை இங்கே திட்டமிட முடியாது. அதை நீங்கள் உங்கள் ஊரில் சென்றுதான் முடிவு செய்ய வேண்டும். உமக்கும் புதுச்சேரியில் உள்ள எங்களுக்குமான தொடர்பு இன்றுடன் முடிகிறது. இனிமேல் இந்தப் பணி திருநெல்வேலியின் பணி. ஜாக்கிரதை.!பராசக்தி உமக்குத் துணையிருப்பாள். பாரத மாதாவின் பரிபூரண ஆசிகள் உம்முடன் இருக்கும். சென்று வாருங்கள். நாகசாமியும் கண்ணுப்பிள்ளையும் உம்மைப் புதுச்சேரி எல்லையைக் கடந்து விட்டு வருவார்கள்.(நாகசாமியைப் பார்த்து), எப்படி அழைத்துப் போகப்போகிறீர்கள்..? நாகசாமி : இன்னைக்கு இராத்திரி 11 மணிக்குக் கிளம்புகிறோம். வில்லியனூர் போய், அங்கிருந்து பாகூர் சென்று ஆற்றுக்கு அக்கரை போய் திருப்பாப் புலியூரில் ரயிலேற்றி விட்டுவிட்டு வருவோம். வ.வே.சு. அய்யர் : நல்லது.. பத்திரமாக அனுப்பிவிட்டு வாருங்கள். காரியம் ஜெயம் ஆகட்டும். (வாஞ்சிநாதன் வணங்கிக் கொள்கிறார். வ.வே.சு. அய்யர் விடைபெற்றுச் செல்கிறார்) (மேடையில் காட்சி மாறுகிறது. மீண்டும் ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமி, காரியம் ஜெயம் ஆனது அல்லவா..? ஓம்கார் : காரியம் ஜெயம்தான். புரட்சி இயக்கத்திற்கு ஜெயம் இல்லையே. தன் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்றுதானே வாஞ்சி தன்னைச் சுட்டுக்கொண்டார்? அப்படியானால் அவர் தன் பெயரையும் ஊரையும் எழுதிக்கொண்டது தவறல்லவா? சங்கர கிருஷ்ணன் : கொலைக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதற்குத்தானே அந்தக் கடிதத்தை அவர் வைத்துக்கொண்டார்? ஓம்கார் : அந்த வேலையை இயக்கம் செய்ததாக இருக்க வேண்டும். தன் பெயரையும் ஊரையும் எழுதி வைத்தது, தன் முனைப்பால் வந்த அறிவு மயக்கம், ஒரு புரட்சிக்காரனுக்கு வரக்கூடாதது. அவரை அடையாளம் காட்டிய கடிதத்தை வைத்தது மட்டுமின்றி அவர் வீட்டிலும் தன் சகாக்களின் கடிதங்களை அழிக்காமல் வைத்திருந்து, எல்லாரையும் அவரே காட்டிக் கொடுத்தவரானார். இது மிகப் பரிதாபம். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு..? ஆஷ் கொலைச் சதியில் தம்மைச் சேர்த்துவிடுவார்களோ என்றும் செய்த சத்தியத்தை மீறி இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க வேண்டி வந்துவிடுமோ என்றும் நினைத்து இன்னும் இருவர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒருவர் செங்கோட்டையைச் சேர்ந்த தர்மராஜ ஐயர்; வாஞ்சிநாதனுக்கு நெருங்கிய நண்பர். இயக்கத்தின் சார்பில் எனக்கு மணியார்டர் அனுப்பி வந்தவர். அவர் பாதரச நஞ்சை உட்கொண்டு மரணமடைந்தார். இன்னொருவர் வெங்கடேச அய்யர்; புனலூர்க் காரர். இவர் கத்தியால் தொண்டையில் குத்திக்கொண்டு சாவை வரவேற்றார். இவர்களின் மரணத்தை நீங்கள் வீரச் சாவில் சேர்க்கமாட்டீர்கள் அல்லவா? ஏனெனில் இவர்கள் ஆஷைக் கொல்லவில்லை. வெறும் பயத்தில் உயிரைவிட்டார்கள் என்பதால்தானே? தனிநபர்க் கொலைச் சதிக்கான தண்டனையையோ, போலீஸ் சித்திரவதையையோ ஏற்றுக்கொள்ளத் தேவையான மனோதிடத்தை, இவர்களுக்குப் புரட்சியைப் போதித்த தலைவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை அல்லவா? சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்களும் புரட்சியைப் போதித்தவர் அல்லவா? நீங்கள் இல்லாத இடத்தை வேறொருவர் நிரப்பிக்கொள்ளும் வகையில் உங்கள் போதனை பலவீனமானதாய் இருந்ததாகச் சொல்லலாமா? ஓம்கார் : எனது தோல்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் உடனடிச் செயலை அவர்கள் மனம் விருப்பத்துடன் நாடியது. தகுந்த தருணத்திற்காக அவர்கள் காத்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

காட்சி 12 காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..? சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் கூட்டமாக வந்தார்கள். இங்கே வந்து சில ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்குப் பல காரணங்களாக பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. நான் தொந்தரவுக்கு உள்ளானேன். தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சிக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஆகவே மலை மேலே போய் இருந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் காந்தியடிகள் வந்திருந்தார். முதலில் அவரது பிரதம சீடர் குமரப்பா மலை ஏறி வந்து என்னைப் பார்த்தார். அவர் சொல்லி, காந்திஜி என்னைப் பார்க்க விரும்பினார். அவர் என்னைப் பார்க்க மேலேறி வருவது சரியாக இருக்காது என்று கருதி நான் கீழிறங்கி வந்து பார்த்தேன். சங்கர கிருஷ்ணன்: ஆஹா.. இங்கே காந்தியடிகள் வந்திருக்கிறாரா..? நேற்று பாரதியின் இறுதிச் சடங்கை செய்ய உங்களை அழைத்தார்கள் என்று சொன்னீர்கள். இன்று காந்தியடிகள் இங்கே வந்திருக்கிறார் என்கிறீர்கள். ஒரு பக்கம் வாஞ்சிநாதன் கதை போய்க்கொண்டிருக்கிறது. நான் எதை முதலில் கேட்கட்டும் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக் கொண்டே) எதைக் கேட்டால் என்ன..? பேச்சின் போக்கில் போவோம்.. தானாக எல்லாம் வரும். சங்கர கிருஷ்ணன்: ஆசிரமத்தில் உங்களிடம் சிலர் வைத்தியத்துக்கு வருவதைப் பார்க்க முடிந்தது.. அது எப்படி சுவாமி..? வைத்தியம் தெரியுமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமம் மேலே போனதற்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு சித்த வைத்தியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும். இங்கே இருக்கும் குடிகளுக்கும் வருகிற பக்தர்களுக்கு அவசரக் காலத்திலும் மருத்துவ யோசனைகள் சொல்லி வந்திருக்கிறேன். (சிரிக்கிறார்) அவை அதிசயமாகப் பலிக்கத் தொடங்கின தம்பி. மக்கள் ரொம்பவும் நம்பிவிட்டார்கள். (மீண்டும் சிரிக்கிறார்) சாமியாரின் மருத்துவம் வேறு பலனைத் தருவதற்கு முன்பு ஆசிரமத்தை மேலே கொண்டுபோவதுதான் சரியென்று போனேன். என்னைக் கேட்காமல் யாரும் வரக்கூடாது என்று திட்டம் சொல்லி இருந்தேன். நல்ல மக்கள்..! என் பேச்சை மீறவில்லை.அவர்களும் எனக்கு உத்தரவு போடுவார்கள்; நானும் சிலவற்றைக் கேட்டுக்கொள்வேன். அப்படி ஒரு உத்தரவு, ‘சாமியாருக்கு வயதாகி விட்டது.. மேலே தங்கக்கூடாது. கீழே தங்கள் பார்வையில் இருக்க வேண்டும்’ என்று. சங்கர கிருஷ்ணன்: நல்லது சுவாமிஜி, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : மீதிக்கதை வேகம் நிறைந்தது. வாஞ்சிநாதனை தர்ம இல்லம் தயார்படுத்தியது. தினமும் காலை வேளையில் வ.வே.சு. அய்யரின் போதனைகள்; மாலையில் கிளர்ச்சியூட்டும் உடற்பயிற்சிகள்; சிலம்ப வித்தைகள். அதன் மூலம் வீர சாகச உணர்வுகளால் மனத்தில் போதையூட்டுவது; பாரத இராமாயண யுத்தக் கதைகள் மூலமாக வன்முறையை மிகச் சாதாரணமானதாக இரத்தத்தில் ஏற்றுவது; தனிநபர்க் கொலைகளை வீரம் என்று நம்பச் செய்வது.. இப்படி நெஞ்சில் வேண்டிய உரம் ஏறின பிறகு வாஞ்சிநாதன் சில இயக்கப் பிரசாரப் பிரசுரங்களோடு செங்கோட்டை வந்து சேர்ந்தார். அவர் தனது இறுதியான வேலையைச் செய்வதற்கான பிரயத்தனங்களைச் செய்தார். மீண்டும் அவர்கள் ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டிலும் புனலூரிலும் கூடியதாகத் தெரிகிறது. சங்கர கிருஷ்ணன்: (சிரித்துவிடுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : ஏன் சிரிப்பு தம்பி..? சங்கர கிருஷ்ணன்: மன்னிக்க வேண்டும் சுவாமி, நீங்கள் தயார் செய்த நண்பர்களை, ‘அவர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டீர்களே..? ஓம்கார் சுவாமிகள் : அது அப்படித்தானே ஆயிற்று தம்பி.. என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லையே.. சங்கர கிருஷ்ணன்: சரி சுவாமிஜி, ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : அவை எல்லாமே நான் இல்லாத நிகழ்வுகள்.. கேட்டவற்றிலிருந்தே சொல்கிறேன்.. ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் வாஞ்சிநாதன் இந்த செயலைச் செய்யப்போகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது.கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டுத் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கற்பனை செய்து பார்த்தால் வாஞ்சிநாதன் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள். (மேடையில் ஒளி மங்கி மாடசாமி வீடாக ஒளி விரிகிறது) காலம் : 1911ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒருநாள் பகல் வேளை.இடம் : மாடசாமி வீடு, ஓட்டப்பிடாரம்.பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரகிருஷ்ணய்யர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை மற்றும் சிலர். வாஞ்சிநாதன் : (தான் கொண்டுவந்த பிரசுரங்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு) ‘ஆரியர்களுக்கு ஒரு ஆப்த வாக்கியம்’ (என்ற பிரசுரத் தலைப்பை வாசித்துவிட்டு) எல்லோரும் இந்தப் பிரசுரத்தைப் படிக்க வேண்டும். நமது நாட்டின் கீழ்மைகளுக்கெல்லாம் காரணங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பரங்கியரின் அக்கிரமங்களையும் நமது நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதையும் பஞ்சத்திலும் நோயிலும் நமது ஜனங்கள் மடிந்துகொண்டிருப்பதையும் வெள்ளையர்கள் உல்லாசமாகத் திரிந்துகொண்டு தேசபக்தர்களை ஒடுக்கி வைப்பதையும் மக்களுக்குப் புரியும் விதமாகக் குறித்திருக்கிறோம். மாடசாமி : இந்தப் பிரசுரங்களை என்ன செய்ய வேண்டும்..? வாஞ்சிநாதன் : மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். நமது இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். சங்கரகிருஷ்ணய்யர் : அது சரி, நமது அடுத்த திட்டம் என்ன..? நீலகண்டரைப் பார்த்தீர்களா.? வாஞ்சிநாதன் : நீலகண்டர் பாண்டிச்சேரியில் இல்லை; எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. வ.வே.சு. அய்யர்தான் பாண்டிச்சேரியில் இப்போது இயக்கத்தை நடத்துகிறார். புதிய பரங்கி அரசன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் முடிசூடப் போகிறானாம். நமது நாட்டிலும் வந்து அந்த வைபவத்தைச் செய்யப் போகிறானாம். அவன் இந்தியாவில் காலை வைக்கும் நாளில், பரங்கியர் எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாடெங்கிலும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றனவாம். நமது கடமையாக நமது ஜில்லாவில் நாம் கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும். அந்த வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.(வாஞ்சிநாதன் நிறுத்துகிறார். எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பல கணங்கள் கனமாக நகர்கின்றன) சங்கரகிருஷ்ணய்யர் : அபாயமான திட்டம். இது நீலகண்டருக்குத் தெரியாது என்பது தெரிகிறது; நீ தயார் நிலையில் வந்திருப்பதும் தெரிகிறது. இன்றைய தேதியில், இந்த ஜில்லாவின் பெரிய மனிதர்கள், கனவான்கள், தனவான்கள் எல்லாரையும் கலெக்டர் ஆஷ் பயத்தாலும் நயத்தாலும் தன் வசப்படுத்தி இருக்கிறான். கொஞ்சகாலம் முன்பு பெரிய கூட்டத்தின் நடுவில் மாலையும் கழுத்துமாக அவன் வீற்றிருக்கிற படத்தைப் பார்த்தேன். நீ செய்யப்போகிற காரியத்திற்குப் பிறகு நமக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாம் தலைமறைவாகவே வாழ வேண்டியிருக்கும். வாஞ்சிநாதன் : இது தெரிந்ததுதானே.. நாம் எல்லாரும் இரத்தத்தில் சங்கல்பம் செய்திருப்பது மறந்துவிட்டதா..? காரியத்திற்குத் தயாராகும்போது தயக்கமோ பயமோ நமக்குள் வரலாமா..? சிதம்பரம் பிள்ளை சிறையில் துன்பப்பட்டதைக் கேட்டு நமக்கு எத்தனை கோபம் வந்தது..? அதுவெல்லாம் ஆறிப்போனதா..? சொல்லுங்கள்.. மாடசாமி : சகோதரா, நான் துணிந்துவிட்டேன். உன் மகத்தான தியாகத்தை ஆசீர்வதிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறேன். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : சரி, நானும் சம்மதிக்கிறேன். சங்கர கிருஷ்ணய்யர் : நானும் துணிகிறேன். மற்றவர்கள் : நாங்களும் சம்மதிக்கிறோம்.. (மீண்டும் எல்லோரும் சேர்ந்து இந்த இரகசியத்தைக் காப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்) வாஞ்சிநாதன் : இன்னும் சில வேலைகள் பாண்டிச்சேரியில் பாக்கி இருக்கின்றன. முக்கியமானது, துப்பாக்கியும் அதற்கான பயிற்சியும். அதற்காக நான் மீண்டும் எனது விடுப்பை நீட்டித்துக்கொண்டு பாண்டிச்சேரி போகிறேன். நான் திரும்பியதும் நம் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். பாரதமாதாவுக்கு நம்மை அர்ப்பணிப்போம். அன்னை நம்மை ஆசீர்வதிப்பாள். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது. இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம். பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? – உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? – பன்றிச் சேய்களோ? என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார். வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன். ‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி) யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது. வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா? வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்? வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா.. வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..? ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி.. சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்.. சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி. சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..? ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..? சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..? ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே! வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார். எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை. ‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை. இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை. பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது. இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

காட்சி 10 காலம் : 1911ஆம் வருடம்.ஜனவரி மாதத்தில் அதே நாள்இடம் : பாண்டிச்சேரி ‘தர்ம இல்லம்’பாத்திரங்கள் : வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், நாகசாமி. (வ.வே.சு.அய்யரும் வாஞ்சிநாதனும் ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள். வாசலில் ஒரு இளைஞர் நிற்கிறார்) வ.வே.சு.அய்யர் : வாஞ்சிநாதன்.. இதுதான் ‘தர்மம்’ பத்திரிகாலயம்.. இவர் நாகசாமி. இவர்தான் ‘தர்மம்’ பத்திரிகையைக் கவனித்துக்கொள்கிறார். நாகசாமி : வாருங்கள் அய்யர்.. வாரும் தம்பி.. தம்பி யார்..? வ.வே.சு.அய்யர் : இவர் வாஞ்சிநாதன். நீலகண்டரின் தயாரிப்பு. அவரைத் தேடித்தான் வந்திருக்கிறார். (நீலகண்டர் பெயரைச் சொன்னதும் நாகசாமியின் முகம் மாறுகிறது. வ.வே.சு.அய்யரும் அதைக் கவனிக்கிறார்) நாகசாமி : நீலகண்டரைத் தேடி வந்தாரா..? அவர்தான் இப்போ இங்கு இல்லையே.. வ.வே.சு. அய்யர் : ஆமாம்.. அவர் வரும் வரை இங்கேதான் இவர் தங்க வேண்டும்.. நீர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். நாகசாமி : சரி.. அப்படியே ஆகட்டும்.. ஆனால்… வ.வே.சு. அய்யர் : மற்றதை அப்புறம் பேசிக்கொள்வோம்.. இவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடும்.. மாலை சந்திக்கலாம்.(வ.வே.சு. அய்யர் புறப்படுகிறார்)(மேடையில் இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவும்போது வ.வே.சு. அய்யரின் வீடு. வ.வே.சு.அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே.. நீலகண்டன் நம் காரியத்துக்கு ஒத்து வர மாட்டார் என்றுதானே தர்ம இல்லத்தில் இருந்து அவரை நான் வெளியேற்றினேன்.. நம் ரகசியங்கள் பல அவருக்குத் தெரியும்.. அவர் நம் கருத்திலிருந்து கொஞ்சநாள் விலகிப் பேசி வந்தார். அவர் நம்முடன் இருந்தால் போலீசுக்குக்கூட விவரங்கள் போய்விடலாம். வ.வே.சு. அய்யர் : என்ன நாகசாமி.. நீலகண்டன் நம்முடன் மாறுபடுகிறாரே தவிர, நம்பிக்கைத் துரோகி அல்ல. இயக்க சபதம் செய்திருப்பவர். அவரைப் பற்றி இந்த சந்தேகம் வேண்டாம். நாகசாமி : சரி அய்யரே.. இந்த வாஞ்சி, நீலகண்டரின் ஆள் ஆயிற்றே.. இவரை வைத்து என்ன செய்யப் போகிறோம்..? வ.வே.சு. அய்யர் : துணிச்சல் மிகுந்த பையனாக இருக்கிறான். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கும் தேசபக்தர்களின் தொடர்பு இருக்கிறது. நீலகண்டர் மீது இவனுக்கு மனக்குறை இருக்கிறது. நமது திட்டத்தை இவனை வைத்து நிறைவேற்றலாம். அவனிடம் இணக்கமாகப் பேச்சுக் கொடுத்து அவனது மனநிலையைப் புரிந்துகொள்ளும். நாம் பிறகு சந்திப்போம். (மேடையில் இருள் பரவி மீண்டும் ஒளி பரவுகையில் ‘தர்மாலயம்’ வீட்டில் நாகசாமியும் வாஞ்சிநாதனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : தம்பி வாஞ்சி.. நம்ம வீட்டுச் சாப்பாடு பிடித்திருந்ததா..? பிரம்மச்சாரி செய்த சாப்பாடாயிற்றே..? வாஞ்சிநாதன் : நல்லா இருந்தது அண்ணா.. நாகசாமி : சந்தோசம் தம்பி. தம்பிக்கு திருவிதாங்கூர் ராஜ்யத்தில் செங்கோட்டைன்னு அய்யர் சொன்னார். கலியாணம் ஆகிவிட்டதா..? வாஞ்சிநாதன் : ‘ஆம் அண்ணா. திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நாகசாமி : ஓ..! இளம் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து தேச சேவைக்கு வந்திருக்கிறீர். உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது தம்பி. தம்பிக்கு என்ன வேலை..? வாஞ்சிநாதன் : காட்டிலாகா ரேஞ்சர். நாகசாமி : ஆஹா..! இப்படி ஒரு வேலையை வைத்துக்கொண்டா இந்த ரகசிய இயக்கத்திற்கு வந்தீர்கள்..? கேட்கவே அதிசயமாய் இருக்கிறது தம்பி.. நீர் நீலகண்டரைத் தேடி வந்ததைப் பற்றி அய்யர் சொன்னார். அப்படித் தலை போகிற அவசரம் என்ன வந்தது தம்பி..? வாஞ்சிநாதன் : திருநெல்வேலியில் நடப்பதெல்லாம் பிரம்மச்சாரிக்குத் தெரியுமா..? அவர்பாட்டுக்கு பாண்டிச்சேரிக்குப் போனவர் ஒரு தகவலும் தரவில்லை. புனலூர் சங்கர கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதிலும் உருப்படியாக ஒன்றுமில்லை. எனக்கு ஒரு கடிதம் எழுதி, மான் தோல் ஒன்று ஏற்பாடு செய்து தரும்படிக் கேட்டிருந்தார். வேறு செய்தி இல்லை. நாகசாமி : இதற்கெல்லாமா அவசரப்பட்டு அவரைப் பார்க்க வந்திருக்கிறீர்..? வாஞ்சிநாதன் : அது மட்டுமில்லை அண்ணா. பரலிக்கோட்டை நெல்லையப்பர், சிதம்பரம் பிள்ளையை ஜெயிலில் பார்த்துவிட்டு வந்து சொன்ன செய்தி எங்களை உருக்கிவிட்டது. ஜெயிலில் அந்த மேதையைச் செக்கிழுக்க வைக்கிறார்களாம். அடிக்கக்கூடச் செய்கிறார்களாம். நெல்லையப்பரிடம் சொல்லி வருந்தியிருக்கிறார் பிள்ளைவாள்.. (கண் கலங்கி அழுகிறான்)இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணமான கலெக்டர் ஆஷின் அக்கிரமங்களுக்கு ஒரு முடிவே இல்லையான்னு அவர் நெல்லையப்பரிடம் சொன்னாராம்.ஆஷ் கலெக்டர் அக்கிரமமும் கூடிப் போச்சுங்க ஐயா. குற்றாலத்தில் வெள்ளையர்கள் குளிப்பதற்குத் தனியாக நேரம் வைத்துச் சட்டம் போட்டிருக்கிறான், அந்த இன வெறியன். வெள்ளையர்கள் குளிக்கும்போது நம்ம ஜனங்கள் யாரும் அருவிப் பக்கமே போகக்கூடாதாம்.திருநெல்வேலியில் இப்போ யாரும் சுதந்திரமா பேசக்கூட முடியாது. நீலகண்டர் வந்தால் அவரிடம் கேட்டு, இவன் அக்கிரமத்திற்கு ஏதாவது பாடம் பண்ணணுமுன்னு யோசிச்சோம். அவரைக் கேட்காம எதையும் செய்யவும் தயக்கமாயிருக்கு. அதான் நேரே பார்த்துட்டு வந்திரலாமுன்னு சகோதரர்கள் அனுப்பி வச்சாங்க. நாகசாமி : நெல்லையப்பர் இங்கேயும் வந்திருந்தார். எங்களுக்கும் இந்தச் சேதி தெரியும். நாங்களும் கொதிச்சுப் போய்த்தான் இருக்கோம். இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந்து இழிவுற்றாலும்விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்று பாரதியார் பாடியது பிள்ளையவர்களுக்கே பொருந்தும். அந்த மகானுக்காகவேனும் ஏதும் செய்துதானாக வேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது தம்பி. கவலைப்படாதே தம்பி, இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை காலை பேசுவோம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. ஒளி விரியும்போது வ.வே.சு. அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே, இந்தப் பையன் வேண்டாம். புதிதாகத் திருமணம் ஆனவன். பெண் குழந்தை இருக்கிறது. இவனுக்கு ஏதேனும் ஆனால் இவனது இளம் மனைவியின் நிலை என்னவாகும்..? வ.வே.சு.அய்யர் : தேச இயக்கம் என்று வந்துவிட்டால், இப்படியெல்லாம் பார்க்க முடியமா..? நமது திட்டத்தை இவனை வைத்துச் செய்ய முடியுமா என்று பார்ப்போம். முடிந்தால் செய்ய முனையலாம்.. நாளை கரடிக் குப்பத்திற்கு எல்லாரையும் வரச்சொல்லி இருக்கிறேன். நீரும் வாஞ்சிநாதனை அழைத்துக்கொண்டு வந்துவிடும்.. அங்கே பேசிக்கொள்வோம். (மேடை இருளாகிறது.. மீண்டும் ஒளி பரவ, ஓம்கார் ஆசிரமத்தில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. உங்களைத் துரோகி என்று வெளியேற்றினார்களா..? ஏன் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : பலாத்கார இயக்கம் என்பது ஆயதந்தாங்கிய யுத்தம் என்றே நான் நம்பி வந்தேன். அப்படியான நேரடிப் போரைத்தான் எதிர்பார்த்து நான் சந்தித்தவர்களிடமெல்லாம் சொல்லியும் நம்பிக்கையும் கொடுத்து வந்தேன். தனிநபர் கொலையில் எனக்கு நம்பிக்கையும் சம்மதமும் இல்லை. ஆனால் சில நாட்களாக பாரிஸிலிருந்து வ.வே.சு.அய்யருக்கு வந்திருக்கும் செய்தியின் அடிப்படையில், அவர்கள் தனிநபர் கொலைகள் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அந்த முரண்பாடு முற்றவே, அவர்கள் என்னை ஒதுக்கிவைத்துப் பேசினார்கள். என்மீது ஐயமும் கொண்டார்கள். அதிலும் நாகசாமி என்னைப் போலீஸ் உளவாளி என்று சந்தேகம் கொண்டுவிட்டார். என்னை தர்மாலயத்திலிருந்து வெளியேற்றவும் செய்தார். இது அரவிந்தருக்குத் தெரிந்திருக்கும். பாரதியாருக்குத் தெரியாது. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்ன ஆச்சு சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : வாஞ்சிநாதனை உயிர்த் தியாகம் செய்யத் தயார் செய்தார்கள். (திரை விழுகிறது) (நாளை தொடரும்)

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

காட்சி 9 காலம் : 1911 ஜனவரி மாதத்தில் ஒருநாள்இடம் : ஈசுவரன் தர்மராஜா வீதி, பாண்டிச்சேரிநேரம் : காலை 8 மணிபாத்திரங்கள் : வாஞ்சிநாதன், வ.ரா., வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதன் : (வீதி முனையில் நின்றுகொண்டு எதிரே வரும் நபரிடம்) ஐயா, இங்கே பாரதியார் வீடு எங்கே இருக்கிறது..? எதிரே வந்த நபர் : இதே தெருவில் கடைசி வீடுதான்.. நீர் யார்? பாரதியாருக்கு என்ன உறவு..? வாஞ்சிநாதன் : ஐயா, நான் பாரதியாரைப் பார்க்க வரவில்லை. அவர் வீட்டில் தங்கியிருக்கும் என் நண்பர் ஒருவரைப் பார்க்க வேண்டும். எதிரே வந்த நபர் : பாரதியின் வீட்டிலா..? நானும் அங்குதான் இருக்கிறேன். அங்கு வேறு யாரும் இல்லையே.. (வந்தவரை ஏற இறங்கப் பார்க்கிறார்) வாஞ்சிநாதன் : ஐயா, ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்..? எதிரே வந்த நபர் : இல்லை.. பாரதி வீட்டைத் தேடி வருகிற பாதிப் பேர் மாறுவேடத்தில் வரும் போலீஸ்காரர்கள். மீதிப் பேர் போலீசுக்கு உளவு சொல்கிறவர்கள். அதனால்தான் பார்த்தேன். உம்மைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நீர் யாரைத் தேடிவந்திருக்கிறீர்..? வாஞ்சிநாதன் : ஐயா. என்பெயர் வாஞ்சிநாதன்.. எனக்கு ஊர் செங்கோட்டை. நான் பிரம்மச்சாரியைத் தேடி வந்திருக்கிறேன். எதிரே வந்த நபர் : யாரை..? பிரம்மச்சாரியையா..? (பலமாகச் சிரிக்கிறார்) பிரம்மச்சாரிதான் பெண்ணைத் தேடுவார். நீர் எந்த பிரம்மச்சாரியைத் தேடுகிறீர்..? (மீண்டும் சிரிக்கிறார்) இங்கே நிறைய பிரம்மச்சாரிகள் உண்டு. கல்யாணம் பண்ணிய, பண்ணாத பிரம்மச்சாரிகள்.. நானும் பிரம்மச்சாரிதான். வாஞ்சிநாதன் : ஐயா, நான் நீலகண்டரைத் தேடி வந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி. எதிரே வந்த நபர் : ஓ..! அவரா..? அட்டைக் கரி பாய்ந்த தேகத்தில் இருப்பாரே.. புரட்சிக்காரர் என்று பாரதி சொல்லுவார். பாரதியைவிட என்ன புரட்சி செய்துவிட்டார் என்று தெரியவில்லை. அவர் பாரதியைவிட அரவிந்தரிடத்தும் வ.வே.சு.அய்யரிடமும்தான் அந்தரங்கம் பேசுவார். இப்போ வ.வே.சு. அய்யரிடம் கேட்கலாம் வாரும். வாஞ்சிநாதன் : ஐயா, உங்களைத் தெரிந்து கொள்ளவில்லையே.. நீங்கள்..? எதிரே வந்த நபர் : அதனால் ஓன்றும் ஆகிவிடாது. என்னைத் தெரிந்துகொள்ளாததால் பாண்டிச்சேரியில் புயல் ஒன்றும் வந்துவிடாது. நான் இந்தப் பாண்டிச்சேரியில் அவ்வளவு முக்கியமானவன் அல்ல. என்பெயர் ராமசாமி. வ.ரா. என்று சுருக்கி அழைப்பார்கள். (இருவரும் பேசிக்கொண்டே சென்று ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள்) வ.ரா. : இதுதான் வ.வே.சு. அய்யருடைய வாசஸ்தலம்.. ஐயரே.. ஐயரே.. வ.வே.சு. ஐயர் : வாரும் ஓய் வ.ரா.. என்ன இந்தக் காலை வேளையில்..? வ.ரா. : எனக்கு ஒன்றுமில்லை.. இந்தப் பையன்தான் நீலகண்டரைத் தேடி வந்திருக்கிறார். நீலகண்டர் உம்மோடு இருப்பார் என்று அழைத்து வந்தேன். வ.வே.சு. ஐயர் : நீலகண்டர் இரண்டு நாளைக்கு முன்னால் இங்கு இருந்தார். ஏதோ அவசரம் என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்கப்புறம் காணவில்லை ஓய்.. அந்த ஆளைத் தேடி இவரு வந்தாராமா..? என்ன விஷயம்..? வ.ரா : உள்ளே அழைத்துப்போய் விசாரியுங்கள் ஐயரே.. நான் கிளம்புகிறேன்.. பாரதியார் தேடுவார்.வ.வே.சு. ஐயர் : சரி ஓய்.. பாரதியாரை வரச்சொல்லும். (ஒளி மங்கி இருளாகிறது. ஒளி பரவும்போது மேடை ஒரு வீட்டின் அறையாக இருக்கிறது) வ.வே.சு. ஐயர் : உன் பேரு என்ன தம்பி? நீலகண்டருக்கும் உமக்கும் எப்படிப் பழக்கம்..? வாஞ்சிநாதன் : என் பேரு வாஞ்சிநாதன். தேசபக்த வேலையிலதான் நீலகண்டருடன் பழக்கம். அவரைப் பார்த்து முக்கிய விஷயம் பேசணும். வ.வே.சு. ஐயர் : அவரு வெளியூர் போயிட்டாரு. எங்கப் போனாரு, எப்ப வருவாருன்னு தெரியாது தம்பி. வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் ஊருக்குப் போக வேண்டியதுதான். வ.வே.சு.ஐயர் : தம்பி.. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா உமக்கு உதவலாம். வாஞ்சிநாதன் : மன்னிக்கணும் ஐயா, அதைச் சொல்ல முடியாது. வ.வே.சு.ஐயர் : ஓ..! ரகசிய இயக்கமா..? நானும் உங்க இயக்கத்தோட பழக்கம்தான். நீலகண்ட பிரம்மச்சாரியோட எல்லா ரகசியமும் எனக்கும் தெரியும். அதனால தைரியமா உன்னோட பிரச்சினையைச் சொல்லலாம். வாஞ்சிநாதன் : (அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு) பிரம்மச்சாரி உங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறார். ஆனா.. வ.வே.சு.ஐயர் : (வாஞ்சியின் தோளில் கை போட்டவாறே) பயம் வேண்டாம். இந்தப் பாண்டிச்சேரில நாங்க போலீஸ் பரிவாரத்தோடத்தான் இருக்கோம். பயந்தா எப்படி..? பயப்படாமச் சொல்லும். வாஞ்சிநாதன் : சரி ஐயா.. இப்போ திருநவேலி ஜில்லாவுல பரங்கியர் அதிகாரம் சகிக்கலே. கலெக்டர் ஆஷ் தேசபக்தர்களைத் தொடர்ந்து வேட்டையாடுறார். எத்தனை நாள் அவரைச் சகிச்சுக்கிட்டுப் போறது..? வ.வே.சு.ஐயர் : அதெல்லாம் சரி.. நீலகண்டரைப் பார்க்க இவ்வளவு தூரம் வர்றதுக்கு என்ன அவசரம் வந்தது? வாஞ்சிநாதன் : வெள்ளைக்காரங்களைக் கொன்னு சுயராஜ்யம் சமைப்போம்ன்னு நீலகண்டர் சொல்லிக்கிட்டே இருக்காரு. ஆனா ஒன்னும் நடந்த பாடில்லை. ஆயுதங்கள் வரணும். சந்தர்ப்பம் வரணுமுன்னு சொல்றாரே தவிர, ஒன்னும் ஆரம்பிச்ச பாடில்லை.(கொஞ்சம் தயங்கியவாறு)இப்போ ரெண்டு மாசமா ஆளையும் காணலை. சூர்யோதயம் பத்திரிகையும் வரலை. அதுக்குக் கணக்கும் சொல்லலை. அதுதான் அவரை நேரில் பார்த்து ரெண்டுல ஒன்னு கேட்டுறலாமுன்னு நம்ம ஆளுங்க அனுப்பிச்சு இந்த ஊருக்கு வந்தேன். வ.வே.சு.ஐயர் : தம்பி, நீலகண்டரின் காரியங்கள் எப்படி இருந்தாலும், பண விஷயத்தில் அவர் ரொம்பக் கறார். நீங்க கொடுத்த பணத்திற்குச் சரியாகக் கணக்கு வைத்திருப்பார். பட்டினி கிடந்தாலும் பொதுப் பணத்தில் கை வைக்கவே மாட்டார். அந்த விஷயத்தில் உமக்குக் கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டியதில்லை. வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் கிளம்ப வேண்டியதுதான். நீலகண்டர் வந்த உடனே, நான் வந்து போனதைச் சொல்லிவிடுங்கள். வ.வே.சு.ஐயர் : சரி.. அப்போ உடனே கிளம்பணுமா..? ரெண்டு மூனு நாள் இருந்து நீலகண்டர் வந்துட்டா பார்த்துட்டே போயிறலாமே.. வாரும்.. பின்னால கிணற்றடியிலே ஸ்நானம் பண்ணிட்டு சாப்பிட வாரும்.. மத்தத அப்புறம் பேசலாம்..’ (மேடையில் இருள் பரவி திரும்ப ஒளி வரும்போது ஓம்காரின் அறையில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இது என்ன..? நீலகண்டரிடம் அவர் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதுபோல..? ஓம்கார் சுவாமிகள் : இந்த ரகசிய இயக்கங்களின் பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிது தொடர்பு விட்டுப்போனாலும் சந்தேகம் கிளை விட்டுவிடும். பண விவகாரம் இருந்தால் இன்னும் ஆபத்து. ரெண்டு மாச காலமா நானும் போகவில்லை. சூரியோதயமும் அனுப்ப முடியவில்லை. பத்திரிகையை நடத்த மிகச் சிரமமாக இருந்தது. அச்சடிச்ச பிரதிகளையும் அனுப்ப முடியவில்லை. போலீஸ் கெடுபிடி அப்படி இருந்தது. இன்னொரு விஷயம், சந்தாப் பணம் வேறு வேலையில் செலவு ஆகிவிட்டது. இயக்க வேலைதான். இருந்தாலும் அதை நான் திருநெல்வேலி சென்றால் அல்லவா சொல்ல முடியும்..? சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : அப்புறம் என்ன.. வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதனை மடை மாற்றினார். ஆசிரமப் பணிகள் முடிந்தபிறகு, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்கிறேன். (திரை விழுகிறது) நாளை பார்க்கலாம். (நாளை பார்க்கலாம்)