நீலகண்ட பிரம்மச்சாரி – 13
காட்சி 13 காலம் : 1911 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்இடம் : பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் வெள்ளவாரி ஓடைபாத்திரங்கள் : நாகசாமி, கண்ணுப்பிள்ளை, வாஞ்சிநாதன்.(நாகசாமி, வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடப் பயிற்சி தருகிறார்) நாகசாமி : வாஞ்சி, உமக்குத் துப்பாக்கிச் சுடுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கையில் நடுக்கம் குறைந்துவிட்டது. குறி வைப்பதிலும் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது. இன்னும் சிலநாள் பயிற்சி போதும். இலக்கைத் தவறவிடமாட்டாய். வாஞ்சிநாதன் : வந்தனம் ஐயா. நாகசாமி : உமது இலக்கு 6 அடி முதல் 10 அடிக்குள் இருக்குமாறு உமக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது. எதிரி இந்த இலக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டு நீர் துப்பாக்கியை இயக்க வேண்டும். எதிரியின் மார்புதான் சரியான இலக்கு. அப்படியான இலக்கு எல்லைக்குள் எதிரி இருக்கும்போது துப்பாக்கி வெடிக்க வேண்டும். கொஞ்சம் குறி விலகினாலும் தோட்டா பிசகிப் பாய்ந்து எதிரி தப்பித்துவிட அதிகம் வாய்ப்பு உண்டு. வாஞ்சிநாதன் : நல்லது ஐயா. நாகசாமி : வாஞ்சி ஐயர், உம்மை நினைத்து மிகுந்த பெருமை கொள்கிறேன். தென் தமிழ்நாட்டு விடுதலைப் போர்ச் சரித்திரத்தில் உமக்கு அழியாத பெயரும் கீர்த்தியும் உருவாகப் போகிறது. உமது தியாகத்திற்கு இணை சொல்ல வேறு யாரும் இல்லை. வாஞ்சிநாதன் : நானும் கர்வமாகவே இருக்கிறேன் அண்ணா. இந்தக் கடமையை என்னை நம்பி ஒப்படைத்தீர்களே..! உங்களுக்கும் ஐயருக்கும் எத்தகைய நன்றி சொன்னாலும் தகும். நாகசாமி : உண்மையில் நீர் முதலில் இங்கு வந்தபோது எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. அய்யர்தான் உன்மேல் பெரிய நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பணியைத் தந்துள்ளார். வாஞ்சிநாதன் : பாரத மாதாவுக்கு என் கடமையை நிச்சயம் செய்து முடிப்பேன். கண்ணுப்பிள்ளை : வாஞ்சி அண்ணா, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நாகசாமி : அநேகமாக பிரான்ஸ் தேசத்திலிருந்து துப்பாக்கி இந்த வாரத்தில் வந்துவிடும். வந்ததும் திட்டத்திற்குத் தயாராகிவிடலாம். வாஞ்சிநாதன் : ஆனா, நீலகண்டர் எங்கே போனார் என்ன ஆனாருன்னு தெரியவில்லையே அண்ணா? (மேடையில் இருள் பரவி ஒளி வரும்போது ஓம்காரின் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்கள் வாஞ்சியின் பயிற்சியின்போது எங்குதான் இருந்தீர்கள்..? ஓம்கார் : பாண்டிச்சேரியை விட்டு வெளியேறிய சில நாட்களில் காசிக்குச் சென்றுவிட்டேன். ஆஷ் கொலைச் சதியில் என்னையும் சேர்க்கப்பட்டிருந்ததை காசியில் பத்திரிகைச் செய்தியாகத்தான் நான் தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : நாகசாமி சொன்னதுபோல வாஞ்சிநாதனின் பெயர் தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில் நிலைகொண்டுவிட்டது அல்லவா..? ஓம்கார் : ஆமாம், வாஞ்சி அந்தக் கொலைக்குத் தயாரானதைவிட, தற்கொலைக்குத் தயாரானதுதான் பெரிய சவால். புரட்சிக்குத் தயார் ஆகிறவன் மரணத்திற்கும் சேர்ந்தேதான் தயார் ஆகிறான். ஆனால், அந்த மரணம் சமரில் அமைய வேணடும்; அல்லது அந்த மரணம் தொடர்ந்து புரட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டும் அல்லவா..? வாஞ்சியின் தியாகம் மகத்தானது. ஆனால் அவர் செயலும் தியாகமும் புரட்சியைத் துடைத்துப் போட்டுவிட்டது. வாஞ்சியின் மரணத்தோடு தமிழ்நாட்டு புரட்சிப் இயக்கமும் தனது இறுதி மூச்சை விட்டது. ஆகவேதான் அவரது தியாகம் அர்த்தமில்லாது போய்விட்டது. (மேடை இருளில் போகிறது. ஒளி வரும்போது தர்மாலயம் இல்லத்தின் அறை) காலம் : 1911ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஒருநாள் முன்னிரவு.பாத்திரங்கள் : வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், கண்ணுப்பிள்ளை, நாகசாமி வ.வே.சு.அய்யர் : துப்பாக்கி வந்துவிட்டது (துப்பாக்கியை எடுத்துக் காட்டுகிறார்) மேடம் காமாவின் முயற்சியினால் பிரான்ஸ் தேசத்திலிருந்து வந்த துப்பாக்கி இது. இதில் இரண்டு குண்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. ஒன்று ஆஷ் கலெக்டர் மார்பைத் துளைக்க வேண்டும். இன்னொன்று உனக்கானது; தியாக வேள்வியின் ஆகுதிக்கானது. நீர் உமது வேலையை எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்? வாஞ்சிநாதன் : ஊருக்குப் போனதும் செய்துவிடுவேன் ஐயா. வ.வே.சு.அய்யர் : நல்லது.. நீர் செய்யப் போகும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதை இங்கே திட்டமிட முடியாது. அதை நீங்கள் உங்கள் ஊரில் சென்றுதான் முடிவு செய்ய வேண்டும். உமக்கும் புதுச்சேரியில் உள்ள எங்களுக்குமான தொடர்பு இன்றுடன் முடிகிறது. இனிமேல் இந்தப் பணி திருநெல்வேலியின் பணி. ஜாக்கிரதை.!பராசக்தி உமக்குத் துணையிருப்பாள். பாரத மாதாவின் பரிபூரண ஆசிகள் உம்முடன் இருக்கும். சென்று வாருங்கள். நாகசாமியும் கண்ணுப்பிள்ளையும் உம்மைப் புதுச்சேரி எல்லையைக் கடந்து விட்டு வருவார்கள்.(நாகசாமியைப் பார்த்து), எப்படி அழைத்துப் போகப்போகிறீர்கள்..? நாகசாமி : இன்னைக்கு இராத்திரி 11 மணிக்குக் கிளம்புகிறோம். வில்லியனூர் போய், அங்கிருந்து பாகூர் சென்று ஆற்றுக்கு அக்கரை போய் திருப்பாப் புலியூரில் ரயிலேற்றி விட்டுவிட்டு வருவோம். வ.வே.சு. அய்யர் : நல்லது.. பத்திரமாக அனுப்பிவிட்டு வாருங்கள். காரியம் ஜெயம் ஆகட்டும். (வாஞ்சிநாதன் வணங்கிக் கொள்கிறார். வ.வே.சு. அய்யர் விடைபெற்றுச் செல்கிறார்) (மேடையில் காட்சி மாறுகிறது. மீண்டும் ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமி, காரியம் ஜெயம் ஆனது அல்லவா..? ஓம்கார் : காரியம் ஜெயம்தான். புரட்சி இயக்கத்திற்கு ஜெயம் இல்லையே. தன் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்றுதானே வாஞ்சி தன்னைச் சுட்டுக்கொண்டார்? அப்படியானால் அவர் தன் பெயரையும் ஊரையும் எழுதிக்கொண்டது தவறல்லவா? சங்கர கிருஷ்ணன் : கொலைக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதற்குத்தானே அந்தக் கடிதத்தை அவர் வைத்துக்கொண்டார்? ஓம்கார் : அந்த வேலையை இயக்கம் செய்ததாக இருக்க வேண்டும். தன் பெயரையும் ஊரையும் எழுதி வைத்தது, தன் முனைப்பால் வந்த அறிவு மயக்கம், ஒரு புரட்சிக்காரனுக்கு வரக்கூடாதது. அவரை அடையாளம் காட்டிய கடிதத்தை வைத்தது மட்டுமின்றி அவர் வீட்டிலும் தன் சகாக்களின் கடிதங்களை அழிக்காமல் வைத்திருந்து, எல்லாரையும் அவரே காட்டிக் கொடுத்தவரானார். இது மிகப் பரிதாபம். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு..? ஆஷ் கொலைச் சதியில் தம்மைச் சேர்த்துவிடுவார்களோ என்றும் செய்த சத்தியத்தை மீறி இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க வேண்டி வந்துவிடுமோ என்றும் நினைத்து இன்னும் இருவர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒருவர் செங்கோட்டையைச் சேர்ந்த தர்மராஜ ஐயர்; வாஞ்சிநாதனுக்கு நெருங்கிய நண்பர். இயக்கத்தின் சார்பில் எனக்கு மணியார்டர் அனுப்பி வந்தவர். அவர் பாதரச நஞ்சை உட்கொண்டு மரணமடைந்தார். இன்னொருவர் வெங்கடேச அய்யர்; புனலூர்க் காரர். இவர் கத்தியால் தொண்டையில் குத்திக்கொண்டு சாவை வரவேற்றார். இவர்களின் மரணத்தை நீங்கள் வீரச் சாவில் சேர்க்கமாட்டீர்கள் அல்லவா? ஏனெனில் இவர்கள் ஆஷைக் கொல்லவில்லை. வெறும் பயத்தில் உயிரைவிட்டார்கள் என்பதால்தானே? தனிநபர்க் கொலைச் சதிக்கான தண்டனையையோ, போலீஸ் சித்திரவதையையோ ஏற்றுக்கொள்ளத் தேவையான மனோதிடத்தை, இவர்களுக்குப் புரட்சியைப் போதித்த தலைவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை அல்லவா? சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்களும் புரட்சியைப் போதித்தவர் அல்லவா? நீங்கள் இல்லாத இடத்தை வேறொருவர் நிரப்பிக்கொள்ளும் வகையில் உங்கள் போதனை பலவீனமானதாய் இருந்ததாகச் சொல்லலாமா? ஓம்கார் : எனது தோல்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் உடனடிச் செயலை அவர்கள் மனம் விருப்பத்துடன் நாடியது. தகுந்த தருணத்திற்காக அவர்கள் காத்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (திரை விழுகிறது)