தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

விடுதலைப் போரின் முன்னத்தி ஏராக விளங்கி, தியாகம் என்ற சொல்லுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்திருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று. அவரது அரசியல் பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது தமிழ்த் தொண்டு பற்றிய தகவல்களை அவரது பிறந்தநாள் செய்தியாக சுவடு வழியாகத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராகத் திகழ்ந்த வ. உ. சி.க்கு தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையும் பற்றும் இருந்தது. 1918இல் மணக்குடவர் எழுதிய அறத்துப்பாலுக்குரிய உரையை ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதலாக அச்சேற்றிய பெருமை இவரையே சாரும். இந்தப் பதிப்பு வெளிவர வ. உ. சி. க்குப் பெரிதும் உதவியாக இருந்தவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். பரிமேலழகர் தவறாக உரை எழுதிய சில குறள்களுக்கு, இப்பதிப்பில் புதிய விளக்கங்களைத் தந்துள்ளார். ‘புதல்வரைப் பெறுதல்’ என்ற தலைப்பை ‘மக்கட் பேறு’ என்று மாற்றியவர் வ. உ.சி. கல்வி அறிவு இருபாலருக்கும் பொதுவானது என்ற விளக்கத்தையும் தந்தவரும் அவரே. “திருக்குறள் ஆசிரியரைக் குறை கூறினால்கூடச் சிலருக்குக் கோபம் வருவதில்லை. ஆனால் அதன் உரையாசிரியர்களைக் குறை கூறினால் கோபம் வந்துவிடுகிறது. எதிலும் நன்மையும் தீமையும் உண்டு. எதில் தீமை இருந்தாலும் களைய வேண்டியதுதான்” என்று காரைக்குடியில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் குறித்தும் பரிமேலழகர் குறித்தும் கூறியுள்ளார் வ.உ.சி. திருக்குறளை அடுத்து, வ.உ.சி.யைக் கவர்ந்த நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதியான பொருள் அதிகாரத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொல்காப்பியப் பதிப்பில், ‘பொருளதிகாரத்தை நான் படித்தபோது, அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் இல்லாத நிலப் பாகுபாடு, செடிகள், மலர்கள், மக்களது ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருப்பதைக் கண்டேன்’ என்கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான இளம்பூரணர்மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தின் சில இயல்களைத் தாமே பதிப்பித்து வெளியிட்டார். சில இயல்களைத் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை துணையுடன் வெளியிட்டார். 1935இல் சிவஞானபோதம் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். செய்யுள் இயற்றும் ஆற்றல் கொண்ட வ.உ.சி. திருக்குறள் கருத்துகளை மெய்யறம் என்ற நூலில் செய்யுள் வடிவில் எழுதினார். தமது சுய சரிதையையும் செய்யுள் வடிவிலேயே எழுதியிருக்கிறார். வ.உ.சி. எழுதிய நூல்கள் எனது பாடல் திரட்டுமெய்யறம்மெய்யறிவுசுய சரிதைஎனது அரசியல் பெரும் சொல்வ.உ.சி. கண்ட பாரதி மேலும் தனது வாழ்நாளில் இருமுறை (1917 – 1930) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை விருத்தி உரையை வெளியிட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர், இன்னிலை என்று சொல்லி ஒரு ஏட்டை வ. உ. சி. யிடம் கொடுத்து, அதற்காகப் பணமும் பெற்றிருக்கிறார். அந்த நூலை வ. உ. சி. வெளியிட்ட பிறகு மயிலை சீனி வேங்கடசாமி போன்ற தமிழறிஞர்கள் அந்த நூல் போலியானது என்று குறிப்பிட்டனர். இதனால் வ. உ. சி. மிகவும் மனம் வெதும்பினார். சொர்ணம் பிள்ளை இதேபோல வ. வே. சு. அய்யர் உள்ளிட்ட பலரையும் ஏமாற்றியிருக்கிறார். ‘அகமே புறம்’, ‘மனம் போல் வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ என தனது மனம் கவர்ந்த எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலனின் நூல்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒருவகையில் வ.உ.சி.யின் வாழ்க்கைக்கு ஜேம்ஸ் ஆலன் பெரிதும் உதவியிருக்கிறார் என்றே கூறலாம். வ.உ.சி. போற்றுதும்!

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

காட்சி 4 (மேடையில் முந்தைய காட்சியில் ஓம்கார் சுவாமிகள் பேசிக்கொண்டிருந்த இடம் இருட்டாகவும் இன்னொரு பகுதி ஒளியிலும் இருக்க வேண்டும். ஒளி விழும் பகுதியில் காட்சிகள் விரிகின்றன) காலம் : 1907ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் முற்பகல் வேளைகளம் : சென்னையில் இந்தியா பத்திரிகை அலுவலகம்பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை (பாரதியார் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். நீலகண்டர் படித்துக்கொண்டிருக்கிறார். வ.உ.சி. உள்ளே வருகிறார்) வ.உ.சி : வணக்கம் மாமா..! பாரதி : வாரும் மாப்பிள்ளை.. பட்டனத்திற்கு எப்போ வந்தீர்..? வ.உ.சி : இன்னைக்குக் காலையிலேதான் மாமா.. பாரதி : சுதேசிக் கப்பல் ஓட்டமெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது..? வ.உ.சி. : வழக்கம்போல நெருக்கடிதான். இருந்துமென்ன? தூத்துக்குடி வர்த்தகப் பெரியவர்களும் மக்களும் தரும் பேராதரவில் சுதேசிக் கம்பெனி நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது மாமா. அது விஷயமாகவும் உங்களைப் பார்க்க வந்தேன். பாரதி : ‘சொல்லுங்க பிள்ளைவாள்.. வ.உ.சி. : கம்பெனிக்கு இன்னும் பங்குகள் சேகரிக்க வேண்டும். தேசபக்தியும் வர்த்தக நிபுணத்துவமும் தெரிந்த இளைஞர் ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் மாமா. பாரதி : கிடைச்சாச்சுன்னு வச்சுக்குங்க மாப்ளே.. (நீலகண்டரைப் பார்த்து) தம்பி.. இங்கே கொஞ்சம் வாரும். சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமல்லவா..? நீலகண்டன் : பிள்ளைவாளைத் தெரியாமலா..? (வ. உ. சி. யைப் பார்த்து) “வணக்கம் அண்ணா.. பாரதி : (வ.உ.சி.யிடம்) இவர் நீலகண்டன். இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற வர்த்தகக் கம்பெனி ஒன்றில் கணக்கராகவும் சரக்குப் பிடிக்கிறவராகவும் வேலை பார்க்கிறார். விபின் சந்திரபாலர் இங்கே வந்தபோது, அவரது பேச்சினால் தேசபக்தராகி இந்தியாவுக்கும் வேலை பார்க்கிறார். இப்போ பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழுமையாக தேச வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான்தான் நேரம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். வ.உ.சி. : ஆஹா..! சந்தோஷம். பாலரைக் கேட்ட பிறகும் ‘இந்தியாவுக்கு‘ வேலை செய்யாமல் போவாரா..? பாரதி : (வ.உ.சி.யின் சிலேடையைக் குறித்து) சபாஷ்.. (நீலகண்டனைப் பார்த்து) இனிமேல் பிள்ளைவாளிடம் நீ வேலை பார்க்கலாம். சுதேசிக் கம்பெனிக்கு பங்குகளைச் சேகரித்துக் கொடுக்கவேண்டும். அப்படியே பிள்ளைவாளுக்குத் துணையாக தேச சேவையும் செய்யலாம். என்ன சொல்கிறாய் தம்பி..? நீலகண்டன் : அண்ணா பேச்சுக்கு அட்டியேது..? இன்னைக்கே பிள்ளைவாளுடன் சேர்ந்துடறேன். வ.உ.சி. : இப்போது வேண்டாம் நீலகண்டன். நான் சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் சேர்த்து அழைத்துப் போக வந்திருக்கிறேன். மாமாவைப் பார்க்க வந்த முக்கிய வேலையே அதுதான். நான் தூத்துக்குடி சென்றபிறகு ஒருநாள் அழைக்கிறேன். வந்து விடுங்கள். நீலகண்டன் : சரி அண்ணா.. வ.உ.சி. : (நீலகண்டனைப் பார்த்து) பாலரின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள்.. எப்படி இருந்தது..? நீலகண்டன் : ஒரே நேரத்தில் வெயிலும் சாரலும் சேர்ந்ததுபோல.. ஒரே நேரத்தில் கள்ளும் தேனும் அருந்தியதுபோல.. ஒரே நேரத்தில் பிள்ளைவாளையும் பாரதியாரையும் கேட்பதுபோல.. வ.உ.சி. : பலே பலே.. மாமா.. தம்பிக்குக் கவிதையும் வரும்போல.. சகவாச வரமா..? பாரதி : இவன் சிங்கம்.. உங்களிடம் சேர்ந்தால் தங்கமாகவும் மின்னுவான்.. பராசக்தி அருள் பொழிவாள்..! வ.உ.சி. : கவி வாக்கு பலிக்க வேண்டும். இப்போ சூரத் காங்கிரஸ் வேலைகள் பற்றிப் பேசலாமா மாமா..? (மேடையில் மூவரும் இருக்கும் பகுதியில் ஒளி மங்கி, ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்த பகுதியில் ஒளி பரவுகிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. கவி வாக்கு பலித்ததா..? ஓம்கார் சுவாமிகள் : ஆஹா..! பாதி பலித்தது.. பாதி பலிக்கவில்லை தம்பி. சங்கர கிருஷ்ணன் : அது எப்படி சுவாமிஜி? ஓம்கார் சுவாமிகள் : சிதம்பரம் பிள்ளையே பெரிய சிங்கம். நான் அவர் பக்கத்தில் மின்னுவதெப்படி..? ஆகவே பாரதியார் சொன்ன நீலகண்ட சிங்கம், வேறு தங்கங்களைத் தயார் செய்யப் போய்விட்டது. அதற்கும் பிள்ளைவாள் பாசறையில் கற்றதுதான் காரணம் தம்பி. அதுதான் பாதி பலித்தது என்றேன். சிதம்பரம் பிள்ளை ஒரு வசீகரமான தலைவர். கனவான்கள், தொழிலாளிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என்று, எல்லாத் தரப்பாளர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. சுருக்கமாச் சொன்னால், அவர் பின்னால் தூத்துக்குடி நகரமே இருந்தது. அது மட்டுமல்ல; சூரத் காங்கிரசுக்குப் போய்விட்டு வந்தபிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைவருமாகிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! சுவாமிஜி, வ.உ.சி.யின் ஆளுமையை எத்தனை உணர்ச்சி பொங்க வர்ணிக்கிறீர்கள்..! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, பிள்ளைவாளின் ஆதர்சம் அப்படி.(கொஞ்சம் நிறுத்துகிறார்)சங்கர கிருஷ்ணன் : என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (குரல் தழுதழுக்க) பாரதியார் சொன்னாரே.. “வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார் மன்னனென மீள்வான்” என்று. அந்த வாக்கு, சிதம்பரம் பிள்ளைக்குப் பலித்திருக்க வேண்டும் தம்பி.. (சீடர் உள்ளே வருகிறார்) சீடர் : சுவாமி.. கோவில் பூஜைக்கு நேரமாகிறது. ஓம்கார் சுவாமிகள் : பூஜை முடித்து வந்தபிறகு பேசலாம் தம்பி.. (ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை பேசுவோம்.

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய் கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி வீசிப்பறக்கிறது பாரெங்கும் நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீபொருள் ஈட்டியிருக்கலாம் மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உன்னை ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டியநீதிமன்றத்துக்குகுற்றவாளியாகக் கொண்டு போய்நிறுத்தியது காலம் கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை நீதி தேவதையா?அநீதி தேவதையானஅவள் வழங்கியதோஇரட்டை தீவாந்திரம் அத்தோடு மூழ்கியதுஉன் வாழ்க்கைக் கப்பல் முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டும் என்பதால்கப்பலில் வந்த வெள்ளையனைகப்பலோட்டியே கப்பலேற்றலாம்என நீ நினைத்தாய் சட்டம் படித்த உன் நெஞ்சில்இருந்தது நீதிஅதனால் உன் முள் கூடதராசு முள்ளாகத்தான் இருந்தது வணிகம் செய்ய வந்துஆட்சியைப் பிடித்தவெள்ளையன் வைத்திருந்ததோவிஷம் தடவிய முள் ஆயுள் தண்டனை விதித்துசிறையில் அடைத்துஉன் சிறகுகளைப் பிய்த்து எறிந்ததுஆங்கில ஏகாதிபத்தியம் செக்கிழுத்து செக்கிழுத்துசிறையிலேயே நீசிதைந்து போனாய் விடுதலை அடைந்து வெளியே வந்ததும்உன் துடுப்புகளையும்உடைத்துப் போட்டதுஎமது அலட்சியம் ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீஅதனால் உள்ளமும்ஓய்ந்து போனாய் அடியோடு வீழ்ந்துபோனதுஅரசோடு போட்டி போட்ட உன்அகண்ட பொருளாதாரம் அன்றாட வாழ்க்கைக்கேதள்ளாடும் நிலைக்குப் போனதுஉன் வாழ்வாதாரம் பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்கொடும் வெயிலானதுகடன்காரர்கள் பட்டியலேஉன் உயிலானது கடிதம் எழுதி எழுதியேகாலாவதி ஆனதுன் காலம் கணக்குப் பார்த்தாதீர்க்க முடியும் உன் தியாகத்தை? கடலில் கரைத்த பெருங்காயமானதுஉன் தியாகம்கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானதுஎங்கள் இயலாமை காந்தி கணக்கானதுஉன் வாழ்வு மன்னிக்கச் சொல்லிஉன் முன் மன்றாடுவதன்றிவேறொன்று தோன்றவில்லை எனக்கு இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையேஎப்படி உனக்குள்அப்படி ஒரு இலக்கிய தாகம்? கடலையே குடித்துவிடுவதுபோல்எழுதித் தள்ளியிருக்கிறாய்! பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்கவிதை எழுதினாய்உரை எழுதினாய்சிறையிலும் எழுதினாய் எங்கள் பாரதியின் தோழனேஉன்னை எழுதாமல் இன்று நான்வேறு யாரை எழுதிஎன்ன பயன்? கப்பலால் கவிழ்ந்தகலங்கரை விளக்கேஒன்றை மட்டும் யாரும்மறைக்கமுடியாது எங்கே எப்போதுகப்பலைப் பார்த்தாலும்உன் ஞாபகம்தான்எங்கள் நெஞ்சில் எழுகிறது ஏனெனில்தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்உன்னுடையதல்லவா?அதில் பட்டொளி வீசிப் பறந்ததுஇந்த மண்ணின் மானம் அல்லவா? அதிகாரத்துக்கு அஞ்சாமல்நெஞ்சு நிமிர்த்திய வீரனேசட்டத்தால் போராடிய சூரனே சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்இந்திய விடுதலை வரலாற்றில்என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்உன் சரித்திரம் காலக் கடலில் கரைந்து போகும்எத்தனையோ மனித வாழ்க்கையில்என்றென்றும் கரையாமல் வாழும்கப்பல் ஓட்டிய உன் கம்பீரம் இந்தியப் பெருங்கடல் அலைகள்உன் பெயரை ஓயாமல்பாடிக்கொண்டே இருக்கும் எங்கள் நெஞ்சின் அலைகளும்.