தமிழ்த் தொண்டர் வ.உ.சி.
விடுதலைப் போரின் முன்னத்தி ஏராக விளங்கி, தியாகம் என்ற சொல்லுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்திருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று. அவரது அரசியல் பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது தமிழ்த் தொண்டு பற்றிய தகவல்களை அவரது பிறந்தநாள் செய்தியாக சுவடு வழியாகத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராகத் திகழ்ந்த வ. உ. சி.க்கு தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையும் பற்றும் இருந்தது. 1918இல் மணக்குடவர் எழுதிய அறத்துப்பாலுக்குரிய உரையை ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதலாக அச்சேற்றிய பெருமை இவரையே சாரும். இந்தப் பதிப்பு வெளிவர வ. உ. சி. க்குப் பெரிதும் உதவியாக இருந்தவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். பரிமேலழகர் தவறாக உரை எழுதிய சில குறள்களுக்கு, இப்பதிப்பில் புதிய விளக்கங்களைத் தந்துள்ளார். ‘புதல்வரைப் பெறுதல்’ என்ற தலைப்பை ‘மக்கட் பேறு’ என்று மாற்றியவர் வ. உ.சி. கல்வி அறிவு இருபாலருக்கும் பொதுவானது என்ற விளக்கத்தையும் தந்தவரும் அவரே. “திருக்குறள் ஆசிரியரைக் குறை கூறினால்கூடச் சிலருக்குக் கோபம் வருவதில்லை. ஆனால் அதன் உரையாசிரியர்களைக் குறை கூறினால் கோபம் வந்துவிடுகிறது. எதிலும் நன்மையும் தீமையும் உண்டு. எதில் தீமை இருந்தாலும் களைய வேண்டியதுதான்” என்று காரைக்குடியில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் குறித்தும் பரிமேலழகர் குறித்தும் கூறியுள்ளார் வ.உ.சி. திருக்குறளை அடுத்து, வ.உ.சி.யைக் கவர்ந்த நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதியான பொருள் அதிகாரத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொல்காப்பியப் பதிப்பில், ‘பொருளதிகாரத்தை நான் படித்தபோது, அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் இல்லாத நிலப் பாகுபாடு, செடிகள், மலர்கள், மக்களது ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருப்பதைக் கண்டேன்’ என்கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான இளம்பூரணர்மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தின் சில இயல்களைத் தாமே பதிப்பித்து வெளியிட்டார். சில இயல்களைத் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை துணையுடன் வெளியிட்டார். 1935இல் சிவஞானபோதம் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். செய்யுள் இயற்றும் ஆற்றல் கொண்ட வ.உ.சி. திருக்குறள் கருத்துகளை மெய்யறம் என்ற நூலில் செய்யுள் வடிவில் எழுதினார். தமது சுய சரிதையையும் செய்யுள் வடிவிலேயே எழுதியிருக்கிறார். வ.உ.சி. எழுதிய நூல்கள் எனது பாடல் திரட்டுமெய்யறம்மெய்யறிவுசுய சரிதைஎனது அரசியல் பெரும் சொல்வ.உ.சி. கண்ட பாரதி மேலும் தனது வாழ்நாளில் இருமுறை (1917 – 1930) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை விருத்தி உரையை வெளியிட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர், இன்னிலை என்று சொல்லி ஒரு ஏட்டை வ. உ. சி. யிடம் கொடுத்து, அதற்காகப் பணமும் பெற்றிருக்கிறார். அந்த நூலை வ. உ. சி. வெளியிட்ட பிறகு மயிலை சீனி வேங்கடசாமி போன்ற தமிழறிஞர்கள் அந்த நூல் போலியானது என்று குறிப்பிட்டனர். இதனால் வ. உ. சி. மிகவும் மனம் வெதும்பினார். சொர்ணம் பிள்ளை இதேபோல வ. வே. சு. அய்யர் உள்ளிட்ட பலரையும் ஏமாற்றியிருக்கிறார். ‘அகமே புறம்’, ‘மனம் போல் வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ என தனது மனம் கவர்ந்த எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலனின் நூல்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒருவகையில் வ.உ.சி.யின் வாழ்க்கைக்கு ஜேம்ஸ் ஆலன் பெரிதும் உதவியிருக்கிறார் என்றே கூறலாம். வ.உ.சி. போற்றுதும்!