அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

‘ஆண்களைப் போலவே சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்று பெண்கள் தங்கள் கருத்துக்களை, அவர்கள் அனுபவத்தில்  கண்ட அடக்குமுறையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாதிடுவது இயல்பான ஒன்று. குர்ஆன் மற்றும் பல்வேறு தீர்க்கதரிசனங்கள் பற்றிய விளக்கங்கள் அளித்துள்ள பாகிஸ்தானின் ரிஃபத் ஹாசன் (1943), அமெரிக்காவின் அமினா வதூத்-முஹ்சின் (1952), மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா மெர்னிஸ்ஸி (1940), எகிப்து நாட்டின் நவல் எல் சாதவி (1931) போன்ற பெண்ணியவாதிகளின் எழுச்சி, இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் இயக்கம் இன்னும் உறுதியாக உள்ளது என்பதற்குச் சான்று. ஆனால் இஸ்லாமிய ஆண் பெண்ணியவாதிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?  சமகால இஸ்லாமிய உலகின் சீர்திருத்தச் சிந்தனையாளரான ஆண் பெண்ணியவாதிகளில் ஒருவரான அஸ்கர் அலி இஞ்ஜினியர், ஆண்-பெண் சமத்துவம், திருமண உரிமைகள், ஹிஜாப் போன்ற பல விஷயங்களில் குர்ஆனின் அடிப்படையில், விளக்கங்கள் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர். இஸ்லாமிய சமுதாயத்தில் அதற்குப் பெரும் பங்கு வகித்தவர் அஸ்கர் அலி இஞ்ஜினியர். முனைவர். அஷ்கர் அலி இன்ஜினியர், 1939 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் உதய்பூருக்கு அருகிலுள்ள சலும்பரில் பிறந்தார். அவர் தனது தந்தையிடமிருந்து இளம் பிராயத்திலேயே இஸ்லாமியக் கல்வியில் ஆரம்பப் பயிற்சி பெற்றார். அரபு மற்றும் பாரசீக மொழிகளையும் இதற்காகக் கற்றுக்கொண்டார். மேலும் இந்த இரு மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார். அவரது இளம் வயதிலிருந்தே, அறிவார்ந்த பகுத்தறிவுச் சிந்தனையை வெளிக் காட்டினார். அவர் ‘ஆசியாவின் எஸ்பினோசா’ (Espinoza) என்று மேனாள் இந்தியத் துணை ஜனாதிபதி முனைவர் ஹமீத் அன்சாரியால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் மற்றும் அது கூறும் மனிதாபிமான விழுமியங்களைப் பற்றி எப்பொழுதும் அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்று, பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனில் பொறியாளராக தனது பணியைத் தொடங்கினார். இருபது ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றார். அஷ்கர் ஒரு எழுத்தாளராக நாட்டில் அமைதி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அசாத்தியத் துணிச்சலுடன் செயல்பட்டவர். சமூகம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு மையத்தின் நிறுவனத் தலைவர். அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்ட பல நாடுகளில் இருந்து உலக மதச்சார்பின்மையின் போக்குகளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அவரது சுயசரிதை நூலான ‘A Living Faith: My Quest for Peace, Harmony and Social Change’ 2011 ஆம் ஆண்டில் அன்றைய இந்தியத் துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரி அவர்களால் வெளியிடப்பட்டது. அவரது அரும்பணி அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. மத நல்லிணக்கத்திற்கான அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசாங்கம் 1997-இல் அவருக்கு ‘வகுப்புவாத நல்லிணக்க’ விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் வகுப்புவாத வன்முறை மசோதாவை உருவாக்கிய தேசிய ஆலோசனைக் குழுவின் ஒரு அங்கத்தினராகவும் தம் பங்களிப்பைச் செலுத்தினார். “அஸ்கர் சமகால இஸ்லாமிய உலகில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட, அதே சமயத்தில் எளிதில் அணுகக்கூடிய சீர்திருத்த சிந்தனையாளர்களில் ஒருவர்” என்று பன்முகக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர், மொஹமத் இம்ரான் மொஹமத் தயிப் மேற்கோள் காட்டியுள்ளார். இஸ்லாமிய சமூகத்தில் சீர்திருத்தம் குறித்த பிரச்சனைகள் பற்றிய அவரது கருத்துக்கள், முஸ்லீம் சட்டம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியப் பங்களிப்பாகும். ஆயினும், அவை உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களில் காணப்படும் அடிப்படைவாத மீளுறுதிப்பாட்டின் கருத்தாடலினால் முட்டுக்கட்டை ஏற்பட்டு, மேற்செல்ல முடியாத நிலையை அனுபவித்துள்ளது. இஞ்ஜினியர், உலகெங்கிலும், அனைத்து சமூகங்களுக்கிடையில்  பெண்-நிலை பெற்ற முக்கியத்துவம் குறித்துத் தனது மிகுந்த கவனத்தை செலுத்தினார். ​​அஸ்கரின் கூற்றுப்படி பல விஷயங்கள், குறிப்பாக சமூகத்தின் நிலை மாறியுள்ளன. எனவே, மதநூல்களின் வசனங்களையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கருதினார். மற்றொரு அர்த்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், அடிமை நிலைக்கு தெய்வீக சட்டங்களின் தத்துவங்கள் இனி பொருந்தாது என்று அவர் தீர்ப்பளித்தார். இவ்வாறாக, சமய மறைகள் கைவிடப்பட்டு, மதச்சார்பற்ற அடிப்படையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லது நவீன நிலைக்கு ஏற்றவாறு அவற்றை மீள் வாசிப்பு செய்து மறுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.  அதே சமயத்தில், ‘அர்ரிஜாலு கவ்வாமுனா அலனிசா’ (arrijaalu qawwamuuna alannisaa) என்ற குர்ஆனின் வசனம் பெண்களை ஒடுக்கி ஆண்களின் கீழ் நிலையில் வைக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த வசனம், பெண்கள் மீது கடுமையாக உள்ளதாக அவர் கருதினார். ஆனால் ‘பெண்கள் தங்கள் வீடுகளில் பிணைக்கப்பட்டிருந்த காலங்களில், ஆண்களே அவர்களுக்குத் தேவைகளை வழங்குபவர்களாக இருந்தனர்’ என்கிற அக்காலச் சூழலையும் பார்க்கிறார். எனவே, குர்ஆன் அத்தகைய சமூக அமைப்பை மகிமைப்படுத்தவோ அல்லது அதை நெறிமுறையாக அறிவிக்கவோ இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் நிகழும்போது, பெண்கள் ஆண்களுடன் இணைப் பங்காளிகளாகும்போது, பெண்கள் ஆண்களுக்கு சமமாகவோ அல்லது உயர்ந்தவளாகவோ ஆக வேண்டும்; மேலும் ஆண்களைப் போலவே குடும்பத்தில் மேலோங்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றுரைக்கிறார். இன்னொரு எடுத்துக்காட்டாக, திருமண விஷயத்தில் ஆடவர் மற்றும் பெண்டிர், இருவருடைய நிலையைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு பெண்களை விட சிறப்புரிமை ஏதுமின்றி, மாறாக, ஆண்களை விடவும் பெண்களுக்கும் எவ்விதச் சலுகையுமின்றி, சமமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கடவுளால் வேண்டப்படுவனவற்றை மீறாதவரை, ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பியபடி மண ஒப்பந்தத்தை வைத்திருக்க உரிமை உண்டு. விவாகரத்து உரிமை (talaq tajwiz) உட்பட, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்துடன் அவள் அந்த உடன்பாட்டில் ஈடுபடலாம். உண்மையில், பாதுகாவலர் (guardian) என்ற கருதுகோளையே குர்ஆன் அங்கீகரிக்கவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார்; ஒரு பெண் அவள் தெரிவு செய்யும் பட்சத்தில், ‘பாதுகாவலர்’ யாருமின்றி மணம் செய்து கொள்ளச் சுதந்திரம் உள்ளது என்கிறார். ‘இஸ்லாமிய அமைப்பு, அதன் சட்டதிட்டங்களின் படி, பெண்களின் நிலைக்கு ஒரு சாபம்’ என்று சொல்லும் மதச்சார்பற்ற பெண்ணியவாதிகள், இஸ்லாத்தை ஒரு ஒடுக்குமுறையாகச் சித்தரித்து, மேற்கத்திய மதச்சார்பற்ற மாற்றுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களை மதக்கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். குர்ஆனின்  முறையான விளக்கத்தைப் பார்க்கும்போது, பெண் விடுதலையைப் புரிந்துகொள்வது உண்மையில் ஒரு பிரச்சனையா அல்லது தேவையா? பெண் விடுதலை இஸ்லாத்திற்கு இயைந்ததா? இல்லையா? என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்கிறது.   இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, இஸ்லாத்தின் பார்வையிலிருந்து, பெண் விடுதலையைக் காண்பதற்கான விளக்கங்கள், பெண் விடுதலைக்கான சிந்தனை எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன என்கிறார். இன்றைய சமூகம் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக, பெண் விடுதலை தொடர்பான சமகாலப் பிரச்சனை இஸ்லாமிய சமூகம் முழுவதும் பரவலாகப் பரவியுள்ளது. எனவே, இந்த நவீன யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஏற்ற விளக்கத்தை, அந்தச் சமூகமே பயன்படுத்திக்கொள்ள, மதிப்புமிக்க பங்களிப்பை அஸ்கர் அலி இஞ்ஜினியர் வழங்கிவிட்டு, அழியாச் சுவடுகள் பதித்துச் சென்றிருக்கிறார். ஆனந்த் பாசு

அழகு எங்கள் அடையளமல்ல

அழகு எங்கள் அடையளமல்ல

வேர்களாகும் விழுதுகள் 2 “டீச்சர்… டீச்சர்… இனிமேல் இவ  வீட்டுக்கு  ஓடி வந்தா மூஞ்சிலேயே ஆசிட்ட ஊத்துங்க” என்ற குரல் கேட்டு, குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். ஐந்து வயதுப் பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்து வந்த அந்த இளம் தாய்க்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து  வயதுக்குள்  தானிருக்கும். அந்தத் துறு துறு குட்டிப்பெண் என் வகுப்பு இல்லையென்றாலும், அரசுப் பள்ளிகளில் ஒரு வசதி உண்டு. பள்ளிக்கு ‘செட்’ ஆகும் வரை பிடிச்ச டீச்சர்களிடம் இருக்க ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. அப்படி என்னிடம் வந்த வாண்டு  அது. கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் வீட்டுக்கு ஓடி ஓடிப் போவதால், தன் தீப்பெட்டி ஒட்டும்  வேலை கெடுகிறதே என்ற கவலை தாய்க்கு. அது மட்டுமல்ல, “தலைச்சான் ஆம்பளப்புள்ள பொறந்தா நீ அமோகமா வருவ” என்று குறி கேட்டு வந்ததற்கு மாறாக, பெண்குழந்தை பிறந்ததால், தாய்க்கும் தகப்பனுக்கும் அந்தக் குழந்தை மேல் கோபம். அதை அவ்வப்போது வெளிப்படையாய்க் காட்டுவதுண்டு. ‘அதற்காக இப்படியெல்லாமா ஐந்து வயதுக் குழந்தையைத் திட்டுவார்கள்?’ ஆச்சர்யமாக இருந்தது.   உடலையும் மனதையும் சிதைக்கும் ஆசிட் கொடூரம் பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? திருமணமான இரண்டு வாரத்தில் ஓடும் இரயிலில் ஆசிட் அடிக்கப்பட்ட பிரயாக் சிங், சொந்த சகோதிரியால் ஆசிட் வீசப்பட்ட தௌலத்,வேலூர் குரிசிலாபட்டி பெண் காவலர் லட்சுமி அகர்வால், பெங்களூர் ஹசீனா இவர்களெல்லாம் ஆசிட்டின் தழும்புகளைத் தாங்கி துயரம் சுமப்பவர்கள். உயிரிழந்தவர்கள் பட்டியல் தனி. அவ்வளவு ஏன்? அரசியல் காரணங்களுக்காக பெண் ஐ.ஏ.எஸ். ஆட்சியர் மீதே ஆசிட் அடித்து  சாதனை படைத்ததுதானே தமிழகம்? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்கள் சொல்வார்கள், ஆசிட் தங்கள் கனவுகளை, தங்கள் மகிழ்ச்சியை எப்படி சிதைத்ததென்று?  இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 250 முதல் 300 அமில வீச்சுகள் என்ற பதிவு செய்யப்பட்ட  தரவுகளோடு, உலகின் முதலிடத்தில் நிற்கிறது இந்தியா. ஆனால் உண்மையில் நிகழ்வுகள் ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்கிறது ஆசிட் சர்வைவர்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேசனல் எனும் அமைப்பு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமில வீச்சுகளுக்கான காரணம் காதலும் குடும்ப வன்முறையாகவுமே இருக்கும் அதே சமயத்தில், உலகெங்கிலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப் படுவோரில் 80 சதவீதம் பெண்களே என்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. இரு ஆண்களுக்கிடையே பிரச்சினை என்றாலும்கூட எங்கும்  அந்த வீட்டுப்  பெண்தானே  பழிவாங்கப்படுகிறாள்? ஆசிட் வீச்சுக்கு 10 வருடங்கள் வரை  சிறைத்தண்டனை உண்டு என்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தைத் தருவதில்லை. “எனக்கு கிடைக்கலேன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாது’   என்ற ஆணாதிக்க சிந்தனையின் பொருட்டே, தன் காதல் மறுக்கப்படும்போது, எந்த அழகால் ஈர்க்கப்பட்டானோ அந்த  அழகை அழிப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவ முயற்சிக்கிறான் ஆண்.   பெண்களைச்சிதைக்கும் குற்றவாளிகளின்  வாழ்க்கை சில வருட  சிறைத்தண்டனைக்குப் பிறகு இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட, அமில வீச்சுகளுக்கு ஆளாகும் பெண்கள்,  வாழ்க்கை முழுவதும் வலிகளுடன்   வடுக்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது.   தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் ஆசிட் வீச்சால் ஒரு பெண் படும் துயரை, வலியை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. வழக்கம்போல பணக்காரக் குற்றவாளியை மறைக்க, ஒரு ஏழைப் பையனை பகடைக்காயாக்கி செய்யும் சித்தரவதையையும்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதி மறுக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியது. இறுதிக்காட்சியில் அதுவரை  தழும்புகளை மறைத்து வந்த பெண்,  தன் முகம் காட்டி தனக்கு அநீதி இழைத்த காவலர் மீது அதே ஆசிட் ஊற்றுவதாக முடிவடையும். ஆனால் ஆசிட்டுக்கு ஆசிட் தீர்வல்ல என்பதுதான் நியதியென்றாலும் கூட அந்தப் பெண்ணின் வலியை நமக்கு உணர்த்துவதற்காக இந்த முடிவை இயக்குநர் பாலாஜி சக்திவேல் அமைத்திருக்கலாம்.  இதுபோன்று, தன் மீது விழுந்த ஆசிட் அபிசேகத்தால் சாவின் விளிம்பு தொட்டுத் திரும்பியவள், சற்றும் துவண்டுவிடாமல் தன் போன்ற பெண்களுக்கான விடியலுக்கு துவக்கவுரை எழுதியிருக்கிறாள் ஒரு பெண். இல்லையில்லை, ஒரு குழந்தை. 17.11.1994 அரபிக் கடலோரம் மும்பையில் அந்த அழகுப்  பிஞ்சு இப்பூமிக்கு வந்தநாள். அன்மோல் ரோட்ரிக்ஸ் என்ற பெயருடன். இந்தக் கொடூர உலகையும், மனிதர்களையும் அறியாத, பிறந்து 60 நாட்களேயான அக் குழந்தை பெருஞ்சிரிப்புடன் தாயின் மார்புகளில் புதைந்து தன் பசி தீர்த்துக் பொண்டிருந்தது. பெற்ற தகப்பனே தன்னை கொல்லத் துணிவான்  என அந்த குழந்தைக்குத்  தெரியவில்லை பாவம். தன் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்கு தன்னுடைய குரோமோசோம்களே காரணம் என்பதை அறியாது மனைவிகளைக் குற்றவாளியாக்கும்  இலட்சக்கணக்கானோரில் ஒருவன் அக் குழந்தையின் தகப்பன். தான் விரும்பாத  பெண்குழந்தையை, தாயுடன் சேர்த்துக் கொன்றுவிடும் நோக்கில், ஒரு கேன் ஆசிட்டுடன் வந்தான். வந்த வேலையை முடித்தான். சலனமின்றித் திரும்பி நடந்தான்.  பச்சிளம் குழந்தை துடியாய்த் துடித்தது. தாய்க்கு முகம், உடலெங்கும் எரிந்து, சிதைந்தது. அன்மோலின் ஒரு கண் சிதைய முகம், உடலைங்கும் கொடூரக் காயங்கள். முழுவதும் சிதைந்த தாய் மரணிக்க, தந்தை சிறைக்குச் செல்ல குழந்தை உடல் முழுக்கக் காயங்களுடன், ஒரு கண்ணை இழந்து உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை.  அடுத்த ஐந்து வருடங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்  அக் குழந்தையைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டனர். பற்பல அறுவை சிகிச்சைகள், பராமரிப்பு என அத்தனை செலவுகளையும் ஏற்று அந்தப் பூவைத் தாங்கிக் கொண்டனர். தன் கோர முகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாததால்  அன்மோல் இயல்பாகவே வளர்ந்தாள். சிகிச்சைகளின் வலியைத் தாங்கிக் கொண்டாள். ஐந்து வயதான அன்மோலை ஸ்ரீ மானவ் சேவா சங் என்ற ஆதரவற்றோர் மையத்தில்  சேர்ப்பித்தனர்.  அங்கும் அன்பும், கவனிப்பும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், இவரது தழும்பேறிய முகம் கண்டு பயந்த  பிற குழந்தைகள் மற்றும் மும்பை SNDT பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரும்பத்தகாத பார்வைகளைப் புன்னகையுடன் எதிர்கொண்டே, கடினமான பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களைக் கடக்க நேரிட்டது. சாப்ட்வேர் டெவலப்பராக முதன் முதலில் பணியேற்றபோது, வாழ்வை வென்றுவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அழகை முகத்திலும் நிறத்திலும் உடல் அளவுகளிலும் தேடிக் கொண்டிருக்கும் சமூகம்,   அவரின்  சிதைந்த முகத்துடன் தினம் தினம் பயணிக்க விரும்பாததை உணர்ந்து பணியை உதறினார்.  வேலை தேடிச் செல்லுமிடமெங்கும்  நிராகரிப்பே பரிசாகக் கிடைத்தது.  ஆனாலும் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. சக ஊழியர்கள் வெறுத்த, அருவெறுத்த தன் முகத்தை உலகுக்குக் காட்ட விரும்பியவர், நிதானமாக யோசித்தார். இந்த முகம்தான் என் அடையாளம், இந்தச் சிதைந்த முகத்துடன் உலகை எதிர்கொள்வேன் என உறுதி எடுத்தார். அவரது தன்னம்பிக்கை   தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவியது. இயல்பிலேயே அழகாக உடுத்துவதும் புதுப்புது நாகரிக அணிகலன்கள் அணிவதும் அன்மோலுக்கு  விருப்பமான ஒன்று. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இவரது ஸ்டைலும்  தன்னை நேர்த்தியாகக் காட்டிக் கொள்வதில் காட்டிய அக்கறையும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தது.  எனவே ஃபேஸ்புக்கில் தன்னுடைய படங்களைத் தொடர்ந்து  பதிவிட, அவருடைய நேர்மறையான  குணங்களும் தன்னம்பிக்கையும் நேர்த்தியான உடையலங்காரமும் நவீன பேஷன்  குறித்த ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது. அவரை நோக்கி புகைப்படக்காரர்கள் படையெடுக்க, மிக உற்சாகமாக இன்ஸ்டாகிராம் நோக்கி நகர்ந்தார். இப்போது பாராட்டுகளுடன் ஆடையலங்கார வல்லுநர்களும் பெரிய பெரிய கம்பெனிகளும் இவரைக் கவனிக்கத் துவங்கினர்.  கோடக் மகேந்திரா ஈவன்ட்டில் ரன்வீர் சிங்குடனான ஓர் உரையாடலுக்குப் பிறகு,  நூற்றுக்கணக்கான மாடலிங் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இன்ஸ்டாகிராமில் 232000 பேர் இவரைப் பின் தொடர, சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்கிறார்.  நூற்றுக்கணக்கான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார்.  ஷப்னா ஆஸ்மியுடன் இணைந்து ஆன்டி ஜி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகையாகப் புதுப் பரிமாணம் எடுத்துள்ளதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் கேஸ்ட்ரி திரைப்பட விழாவில் 2018-ல்  பெற்றுள்ளார். தன்னை வெறுத்தவர்களை, ஒதுக்கியவர்களைக் கண்டு மூலையில் அமர்ந்து விடாமல், தனக்குப் பிடித்த துறையில் புயலாய் நுழைந்து, தனக்கென ஒரு அடையாளத்தைப்  பதிவு செய்துள்ள அன்மோல், பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்து வாழும், ஆசிட்டால் முகம் சிதைந்த பெண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார்.   தான் உயர்ந்ததோடு மட்டுமல்ல, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ‘ஆசிட் சர்வைவர் சகாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக,  உளவியல் ஆலோசனைகளும் வாழ்வியலுக்கான உதவிகளும் செய்து  வருகிறார். அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதையே  இந்நிறுவனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20 பெண்களுக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார். தூக்கியெறியப்படும் தருணங்களில்தான் பெண்கள் தங்கள் சிறகுகளை விரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆம், பெண் குழந்தை வேண்டாம் என  பெற்ற தகப்பனால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்ட அன்மோல், வெளித்தோற்றம் கண்டு சமூகத்தால் வெறுத்து  ஒதுக்கப்பட்ட அன்மோல் இன்று பேஷனுக்கான  குறியீடாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டுள்ளார்.  “வாழ்க்கை என்பது ஆசிட்டுடன் முடிந்து விடுவதில்லை. அமிலம் எங்களின் முகத்தை மாற்றலாம். ஆனால் எங்களது  ஆன்மாவை அழிக்க முடியாது. உங்களது அநுதாபமும் பச்சாதாபமும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை எங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நீங்கள் எங்களுக்குச் செய்யும் உதவி” எனக் கூறும் அன்மோல், இன்று உலகெங்கும்  வாழும் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் மீட்பராக இருக்கிறார். பெண்ணை அழகுசார் அடையாளமாகவே பார்க்கிறது இச்சமூகம். அழகியல் சார்ந்த விஷயங்களால் அவளை ஆராதித்து, அழகு நோக்கியே வழிநடத்தி, வேறு எச்சிந்தனையுமின்றி பெண்ணை எளிதாய் வீழ்த்த  எத்தனிக்கிறது. நீண்ட முடியழகு, சிவந்த நிறமழகு, வடுக்களில்லா முகமழகு, எல்லாவற்றிற்கும் மேலாக மென்மையே பெண்மைக்கழகு என்று நம்ப வைக்கிறது.     அழகோடிருந்தால் மட்டுமே நீ ஜெயிக்க முடியும், முகத்தில் பருக்களுடைய பெண்ணோ, கருமை நிறமுடைய பெண்ணோ தங்கள் நிறுவன முகப் பூச்சுகளின்றி வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது என்று விளம்பரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களும் மூளைச் சலவை செய்துகொண்டிருக்க, உடல் முழுக்க வடுக்களுடன் ஒரு கண் பார்வையின்றி தன் தன்னம்பிக்கையின் மூலம்  வாழ்வை வென்றிருக்கும் அன்மோல், பெரும் சமுதாய மாற்றத்திற்கான முதல் விடியல். பார்வையைச் செலுத்துவோம் வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து 

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து