கோணூசி என்னும் ஆயுதமும் கோபம் கொண்ட குழந்தை மனமும்
நூல் விமர்சனம் கதைகள் நம் வாழ்வின் காட்சியாக நம்முன் விரியும்பொழுது ஏற்படும் உணர்வு அலாதியானது. அந்தக் கதைகள் நம் சமூக அமைப்பின் சிக்கல்களையும் முறையற்ற தன்மைகளையும் விளக்குவதாக அமையும்போது மனம் கனத்து, இப்படிப்பட்ட உலகில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோமே என்கிற குற்றவுணர்வையும் கூடுதலாகத் தருகிறது என்பது உண்மைதான். “என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளின் தவறுகள் என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கின்றன” என்பார் மண்டோ. நம் காலத்தில் நடந்துகொண்டிருக்கிற வன்முறைகள், சாதிப் பாகுபாடுகள், சமுதாயத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், படைப்பு மனத்தினை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்த பாதிப்பின் வெளிப்பாடாக விளையும் கதைகளாகவே சேதுவின் கதைகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நூலுக்கான முன்னுரை என்பது அதை எழுதுபவரின் கருத்தாக மட்டும் நின்றுவிட்டால் அது புதிதாக வாசிக்கிற மனங்களை இடைஞ்சல் செய்துவிடக்கூடும். எழுத்தாளரின் புதிய முயற்சிகளை, அவர் எடுத்துக்கொண்ட கரு சொல்லப்படுகிற கோணத்தை என்று, கதைகளைத் தொட்டும் தொடாமலும் அழகாக அறிமுகம் செய்துவைப்பதுடன். என்னதான் சொல்ல வருகிறது இந்தத் தொகுப்பு என்று தேடுகிற மனநிலையை உருவாக்குகிறது அமிர்தம் சூர்யாவின் முன்னுரை. வாசகருக்குப் புதிய பாதைகளைத் திறந்து விடுகிறது. அதன் மூலம் தடையின்றிக் கதைகளுக்குள் நுழைய முடிகிறது. சமூகத்தை மாற்றிவிடவும் அல்லது சமூக அவலத்தைக் களைந்துவிடவும் துடிக்கிற படைப்பு மனம், அல்லல்படுகிற மனிதர்களையும் காட்சிகளையும் கூர்ந்து கவனித்துத் தன் எழுத்தில் வெளிப்படுத்தும். அந்த வகையில், தன்னுடைய கதைகளின் மூலமாக, இந்தச் சமூகம் காட்டுகின்ற மனிதர்களையும் அவர்களது வலிகளையும் அவர்களை இந்தச் சமூகம் எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதையும் நம்மிடம் சொல்ல முனைகிறார் சேது. எளிய மக்களின் வாழ்வை, கைவிடப்பட்டவர்களின் வலியை, ஏமாற்றப்பட்டவர்களின் ஆற்றாமையை மட்டுமே கதைகளாக மாற்றுவதற்கு, இந்தச் சமூகத்தின் மீது அக்கறையும் எளிய மனிதர்களின் மீது ஆதுரமும் இருக்க வேண்டும். அந்த இரண்டும் வழிந்தோடும் கதைகளாகவே சேதுவின் கதைகள் உள்ளன. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு சொல்வதோ அல்லது எழுத்தின் மூலமாக மட்டுமே புதிய உலகை உருவாக்குவதோ இயலாத விஷயம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால், அவருடைய கதைகளை, இது இது இப்படி இப்படி நடந்துகொண்டிருக்கிறது என்கிற விதமாக, ஒரு அன்றாடப் பதிவைப்போல எழுதி வைக்கிறார். அந்தப் பதிவுகள் நமக்குள் கடத்தும் உணர்வுகள் அதிர்ச்சியும் வலியும் நிறைந்ததாக இருக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் சிலர் முன்னேறுகிறார்கள், வாய்ப்புக் கிடைக்காதவர்களில் சிலரோ, கிடைத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க எந்த எல்லைக்கும் போகத் துணிகிறார்கள். எப்போதுமே, இல்லாதவர்கள்தான் எல்லாப் பழிகளுக்கும் ஆளாகி வாழ்வைத் தொலைக்கிறார்கள். எந்தக் கூடுதல் சொற்களும் அறவுரைகளும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் இ.பி.கோ. கதையின் சண்முகம்போல, அன்றாட வாழ்வில் பலரையும் கடந்துதான் போகிறோம் என்பது உணர்த்தப்படும் இடத்தில் நம்முள் எழும் கேவல்தான் அந்தக் கதையின் வெற்றி. பள்ளிகொண்ட பெருமாள் எம்.பி.ஏ. என்ற கதை, தொகுப்பின் முதலாக இருப்பதோடு தொகுப்பை வாசித்த அனைத்து மனங்களிலும் நிலைத்து நிற்கும் புதிய கதையாகவும் உள்ளது. ஒரு தேர்ந்த நிர்வாகவியல் மாணவனாக மாறி, பக்தனையும் கடவுளையும் அவர்கள் இருவருக்கும் நடுவில் நிற்கிற விற்பனைப் பிரதிநிதியையும் நடமாடவிட்டிருக்கும் இந்தக் கதை சிரிப்பையும் ‘அட!’ என்ற ஆச்சரியத்தையும் தவறாமல் தந்து செல்கிறது. புராணங்களும் இதிகாசங்களும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படும்போது, புதிய புரிதல்களும் புதிய கருத்தாக்கங்களும் உருவாவதும் அதன் வழி நின்று இன்றைய நிலையில் தேவையான சமூகக் கருத்தியல்களுடன் அவற்றைப் பேசுவதும் எழுதுவதும் அவசியமாகிறது. அந்த வகையில், நிறம் கதையில், வாழ்வின் எதார்த்தத்தில் நின்று புராணப் பாத்திரத்தின் மனதைப் பேச வைத்திருப்பது மட்டுமல்லாமல் காலந்தோறும் விதந்தோதப்படுகிற ஒரு கதாபாத்திரத்தைக் கேள்விகளுக்குள்ளாக்கி நிறங்களால் கட்டமைக்கப்பட்டதை நிறங்களால் உடைக்கும் நல்ல முயற்சி. இதுபோன்ற புதிய முயற்சிகள் தொடர்ந்தால், இவர் எழுத்தால் எதிர்காலத்தில் இன்னும் மெருகேறுவார் என்றும் நம்பலாம். கற்பக்கிரகம் என்றொரு கதை. அடைப்புக்குறிக்குள் வல்லினம் மிகும் இடம் என்ற சுட்டுதல். எல்லா இடங்களிலும் வல்லினங்கள் மிகுவது இலக்கணப் பிழைதானே?! படித்து முடிக்கும்போது ஏற்படுகிற வலியும் ஆயாசமும் நன்றாகச் சொல்லப்படிருக்கிற கதை என்று தலையாட்ட வைக்கிறது. இந்த உலகம் குறித்துக் கவலைப்படுகிற மனத்துக்குள் இருக்கிற அந்தத் தவிப்பும் தவறுகளைச் சரி செய்துவிடத் துடிக்கிற துடிப்பும் கதையில் சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது. வாசித்து முடித்தபின் கண்மூடி அமர வைத்துவிடுகிறது, கதையைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம். கோணநிலா, கிரகப்பிரவேஷம் என்ற கதைகளின் வழியாக இந்தச் சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பகடிக்குள்ளாக்கும் சேதுவை, தாராளமாகப் பாராட்டலாம். இந்தத் தன்னலம் மிகுந்த அரசியலில்தான் வெள்ளைச்சாமியைப் போல் எத்தனை அத்திக்குளவிகள்?! இந்தக் கதையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் கரு வழக்கமானதுதான் என்றாலும் எழுதப்பட்டிருக்கும் விதம் வித்தியாசமாக உள்ளது. கதையினூடாக வருகிற அத்திக்குளவியின் வாழ்வின் கதை, சமூக எதார்த்தத்தைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. இதைப்போலவே குருதியின் விழையம் என்ற கதை எழுதப்பட்டிருக்கும் விதத்தில் சிறப்பாக உள்ளது. வித்தியாசமான முறைகளில் கதைகளைச் சொல்லி, எடுத்துக்கொள்ளும் கரு வழமையானதாக இருந்தாலும் கதை சொல்லலின் மூலம் அதைப் புதியதாக மாற்றும் திறன் இருக்கிறது சேதுவின் எழுத்துக்கு. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு புதிய முயற்சியாகச் செய்து பார்த்திருக்கிறார். வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு சில தலைப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதும் பல கதைகளை இன்னும்கூட விரிவாக எழுதியிருக்கலாம் என்பதும் சின்ன விமர்சனம். முதல் தொகுப்பு என்ற வகையில் இந்த விமர்சனங்கள் மட்டுமே போதும். அடுத்தடுத்த தொகுப்புகளில் இன்னும் சிறப்பான கதைகளுடன் அவர் மிளிர்வார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் மனத்தில் தோன்றிய எண்ணங்களைச் சேகரித்து, சொற்களைக் கூட்டிக் கோணிப்பையில் சேகரித்துத் தைக்கும் முயற்சி என்கிறார் கோணூசியை. வாசித்து முடிக்கும்போதோ, கத்தியால் குத்த முடியாத கையாலாகாத நிலையிலோ கோபம் கொண்ட குழந்தையொன்று கையிலிருக்கும் கோணூசியால் எதிராளியைக் குத்துவதைப்போல், சின்ன சின்ன ஆறுதல்களைத் தேடிக்கொள்கிற கதைகள் நிறைந்த தொகுப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. அழகியலும் மொழியழகும் வாசிக்க மயக்கும் நடையழகும் கதைகளுக்குத் தேவையென்றாலும்கூட, இந்தச் சமூகத்தின் புரையோடிப்போன புண்களைக் கழுவி மருந்திடுகிற எண்ணவோட்டம் கொண்ட கதைகளும் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது. அந்த வகையில், இப்போதுதான் தொடங்கியிருக்கும் சேது இன்னுமின்னும் சிறப்பாக எழுதுவார். சமூகத்துக்குப் பயனுள்ள எழுத்துகளைத் தொடர்ந்து தருவார் என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்தத் தொகுப்பு. கோணூசி தன் பணியைச் செவ்வனே செய்யும். சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு சேதுவை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இப்படியான எழுதுவினைமை கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளரை நமக்கும் அறிமுகம் செய்துள்ளது. சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலின் உயரிய அங்கீகாரத்தில் ஒன்றாகத் திகழும் ‘சௌமா’ இலக்கிய விருதை இந்த ஆண்டில் கோணூசி சிறுகதைத் தொகுப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.