சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்ட விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று 50ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். விளையாட்டு என்பது மனத்தையும் உடலையும் பலப்படுத்துவதற்கான, செழுமைப்படுத்துவதற்கான ஒரு செயல்முறை. மற்றவர் திறனைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஊக்கமளிப்பது. தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றிபெற வேண்டும் என்ற பாடத்தைக் கொடுப்பது. தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி என்பதைப் பயிற்றுவிப்பது. இறுதிவரை போராடும் குணத்தைக் கற்றுக் கொடுப்பது. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் இயல்பானவை என்பதை உணர்த்துவது. இவற்றையெல்லாம் முறையான பயிற்சிகள் மூலம் கைவரப் பெறலாம்; மேம்படுத்தலாம். எனவேதான் விளையாடுபவர்களை வீரர்கள் என்று சொல்கிறோம். அந்த அடிப்படையில்தான் மனிதனை மனிதனாக்கும் செயல்முறைப் போக்கான கல்வியில், விளையாட்டும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நடைமுறையில் அது எப்படி உள்ளது என்பது வேறு விஷயம். ஆனால் சூதாட்டம் அப்படி அல்ல. ஒருவரிடம் ஆசையைத் தூண்டி ஏமாற்றுவது என்பதே சூதாட்டத்தின் தத்துவம். எப்படியாவது அதிகமாகப் பணம் ஈட்டலாம் என்ற நப்பாசையைத் தூண்டி, அதற்கு அவரை அடிமைப்படுத்தி, அதன் மூலம் அவரிடம் கொள்ளையடிப்பது. சூதாட்டம் என்பது திரைமறைவு வேலைகள், நேர்மையற்ற தந்திரங்கள், ஏமாற்று வித்தைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பவைப்பது. இது ஒரு இழிவான செயல். இதனை எவரும் பாடமாக ஏற்கமுடியாது. இந்த நிலையில், சூதாட்ட விளையாட்டு என்ற பதம் சரியான ஒன்றா? நிச்சயமாக இல்லை. சூதாட்டமும் விளையாட்டும் எதிரெதிர் குணாம்சங்களைக் கொண்டவை. சூதாட்டம் ஒரு முறைகேடான செயல். முறைகேட்டிற்கு வழிவகுக்கும் செயல். இத்தகைய சூதாட்டங்கள் மிக மோசமான விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்திக்கொண்டிருப்பதை அறிவோம். குறிப்பாக, இன்றைய இணையவழித் தொடர்பு உலகில், ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் ஏராளமான ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏதோ விரும்பிச் செல்பவர்களை மட்டும் இந்த சூதாட்டங்கள் ஏமாற்றவில்லை. மொபைல் ஆப்கள் மூலமாகவும் குறுஞ்செய்திகள் வாயிலாகவும் வண்ணமயமான படங்களையும் போலியான தகவல்களைக் காட்டி விளம்பரங்கள் செய்கின்றனர். ‘ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தின் வசனத்தைப் பின்பற்றி, ‘உங்கள் கணக்கில் சில ஆயிரங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது; வந்து விளையாடுங்கள்’ என்று, நப்பாசையைத் தூண்டும் விதமாகச் செய்திகளை அனுப்புகின்றனர். இவையெல்லாம் கணினி மென்பொருட்கள் வாயிலாக நடைபெறுபவை. பிதாமகன் திரைப்படத்தில், கதாநாயகன் சூதாட்டம் நடத்துவார். கதாநாயகி முதலில் ஒரு ரூபாயை வைத்து சூதாடத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்ததும் அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது, அவரைக் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து சூதாட வைத்து, அவரிடமிருந்த பொருட்கள் அனைத்தையும் நாயகன் பறித்துக்கொள்வார். இதே வழிமுறையைத்தான் இணைய வழியில் நடக்கும் சூதாட்ட மென்பொருட்கள் பின்பற்றுகின்றன. அதாவது, சூதாட்டக் களத்தில் இறங்கிய ஒருவர், அதிலிருந்து மீள வழியே இல்லாதவாறே அவை வடிவமைக்கப்படுகின்றன. முதலில் குறிப்பிட்ட திறனுடையவர்களை, அல்லது அனைவரையும் வெற்றிபெற மென்பொருளானது அனுமதிக்கும். குறைந்த தொகையை வென்றதாக அறிவிப்பும் கிடைக்கும். ஆனால் அந்தத் தொகையை நம்மால் வங்கிக் கணக்குக்கு மாற்ற இயலாது. நீங்கள் மேலும் பணம் செலுத்தி விளையாடவேண்டும் என்று நிர்பந்திப்பர். அது கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி, சூதாட்ட வளையத்திற்குள் ஆழமாக இழுத்துச் செல்லும். இப்படிப்பட்ட சூதாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழக்கின்றனர். எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுவிட வேண்டும் என்ற வேட்கையில், கடன் வாங்கிப் பணத்தைச் செலுத்தி விளையாடி அதையும் இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய சூதாட்டங்கள் மனநோயாளிகளையும் உருவாக்கி வருகின்றன. சிலர் பெரும் பணத்தை இழந்து, இறுதியில் மன அழுத்தத்தாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர். வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை இதற்கு பலியாகின்றனர். அபரிமிதமான கேளிக்கை வெறியை உண்டாக்கும். எனவேதான் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்ததையும் தமிழ்நாடு கண்டது. ஏற்கனவே விளையாட்டுகளையே சூதாட்டமாக்கிவிட்டனர். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சூதாட்டம் நடப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐபிஎல்-லில் சூதாட்டமென்று நடவடிக்கையே எடுத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். பல விளையாட்டு வீரர்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், சூதாட்டத்துக்கு வரி விதிப்பு என்பது, உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய சூதாட்டத்தை நடத்த அனுமதிப்பதுபோல் உள்ளது. இத்தகைய சூதாட்டங்களில் நிழலுக தாதாக்கள், சமூக விரோதிகள் ஈடுபடுவதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில் பார்த்தால் மது, போதைப் பழக்கங்களைப் போலவே, சொல்லப்போனால் அதைவிட, சூதாட்டமும் மிகவும் மோசமானது. இப்படிப்பட்ட நிலையில் சூதாட்ட விளையாட்டு என்று பெயரிட்டு அதற்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பது எத்தகைய செயல்? ஒரு மக்கள் நல அரசாங்கம் இப்படிச் சிந்திக்க முடியுமா? சூதாட்டங்களுக்கு வரி வசூல் செய்ய நினைப்பது எரிகிற பிணத்திலிருந்து எதையாவது உருவும் செயலுக்கு ஒப்பாகும். இப்படியே போனால் கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிப்பார்களோ!!!??? “நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்களுக்கு வரி கொடுங்கள்” என்று கூறுவது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் காட்சிகளையே நினைவூட்டுகிறது. வளர்ச்சிக்கான ஒரு அரசாங்கம் மனிதகுலத்திற்கு நன்மை தரும் பொருளுற்பத்தி, அறிவு உற்பத்திகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் இன்று அரசாங்கங்கள் மது, சூதாட்டம் போன்ற மனிதர்களுக்குக் கேடிழைக்கும் செயல்களை அரசாங்கத்தின் வருவாயாகப் பார்ப்பது மோசமானது, ஆபத்தானது, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கே எதிரானது. ஒரு பொருள் அல்லது சேவையின் மீது வரி விதிப்பது என்பது, அந்தப் பொருள் அல்லது சேவை விற்பனையைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் செயலாகும். சூதாட்டத்துக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் அது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்படும். அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அதே வகைமையில் வரும் இன்னொரு மோசடிக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது வேடிக்கையான செயல் அல்லவா? சூதாட்டத்துக்கு வரி விதிக்கத் தயாராக இருக்கும் அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்களை வரி வளையத்துக்குள் கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசவையிலேயே மனைவி முதலான அனைத்தையும் வைத்து சூதாடியவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு ஆள்பவர்களின் ஆட்சியில் இதெல்லாம் மிகச் சாதாரணம்தானே?

தேச பக்தக் கலைஞர்

தேச பக்தக் கலைஞர்

மதுரகவி பாஸ்கர தாஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது.கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, விஸ்வநாத தாஸ் என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. அந்தப் படடியலில் பிரதானமாக முன்னால் வருபவர் கலைஞர் மதுரகவி பாஸ்கர தாஸ். மதுரகவி பாஸ்கர தாஸ் தமது படைப்பாற்றலால் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அக்கினிப் பொறி தட்டும் தேசிய எழுச்சிப் பாடல்களால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்களிடம் தேசபக்த உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தார்.பிரிட்டிஷ் அரசு நாடகத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது பக்திப் பாடல்கள் என்ற போர்வையில் விடுதலைக் கிளர்ச்சிப் பாடல்களை உருவாக்கினார். இவர் எழுதிய பாடல்களை கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா போன்ற கலைஞர்கள் மேடைகளில் பாடிவந்தனர். 1892ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று, விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார் பாஸ்கர தாஸ். இவரது இயற்பெயர் வெள்ளைச்சாமி. இருள் நீக்கி மக்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற நோக்கில் வெள்ளைச்சாமி என்று இவரது பெற்றோர்கள் பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ! நாகலாபுரத்தில் நான்காம் வகுப்பு வரை படித்தபிறகு, தனது பாட்டியின் ஊரான மதுரைக்குச் சென்றார். அங்கு ஆரம்பத்தில் கட்டட வேலைக்குச் சென்ற இவர், தெருக்கூத்து, நாடகம் ஆகியவற்றில் கலந்துகொள்வதில் நாட்டம் கொண்டார். சிறுவயதிலேயே பாடல்கள் எழுதுவதிலும் பாடுவதிலும் ஆற்றல் பெற்றவராக இருந்தார். சிலகாலம் மதுரை அனுமந்தராயன் கோயில் தெருவில் வாழ்ந்திருந்தபோது, அதே தெருவில் வசித்து வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இவரிடம் பாடல்களைக் கேட்பார். இவர், 11 நாடகங்கள் மற்றும் 110 நாட்டுப்பற்றுப் பாடல்களை இயற்றியுள்ளார். மதுரை திருநகரில் சித்திரகலா என்ற புகைப்பட நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு ஏழு ஆண்கள், 7 பெண்கள். மொத்தம் 14 குழந்தைகளில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துவிட்டனர்.ஐந்தாவது மகளின் பெயர் சரஸ்வதி. இவரது கணவர் எம். எஸ். சண்முகம் நில அளவைப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது எழுத்து மற்றும் நாடகத்துறையில் செயல்பட்டுவரும் தமிழ்ச்செல்வன், கோணங்கி, பூபதி ஆகியோர் இவர்களது மகன்களே. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மகாகவி காளிதாஸ் பற்றி, தமிழில் முதல் பேசும் படமாக காளிதாஸ் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை’ போன்ற தேசபக்திப் பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். தொடர்ந்து பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார் பாஸ்கர தாஸ். இதன்மூலம் முதல் சினிமா பாடலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார். திரைப்படங்களாக இருந்தாலும் நாடக மேடைகளாக இருந்தாலும் இவரின் பாடல்கள் தேசபக்திக் கனலை ஊட்டி வளர்க்கும் பாடல்களாகவே இருந்தன. இவரது பாடல்களில் உள்ள கருத்துகள் பாமர மக்களுக்கு உதவிகரமாக இருந்தன. திரையில், திரை இசைப் பாடல்களில் பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்துப் பாடல்கள் இயற்றிக்கொண்டிருந்த காலத்தில் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில்பாடல்களை இயற்றியவர் இவர். இவரது பாடல்களால் மக்கள் எழுச்சிபெற்று வருவதைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், இவர்மீது பல வழக்குகளைத் தொடுத்தபோது அவற்றை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டார். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவரைப் பாராட்டி முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ் என்று பெயரிட்டுப் பெருமிதம் கொண்டார். எட்டையபுரம் மன்னர் இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் விளைநிலங்களைப் பரிசாகக் கொடுத்தார். இவரது பெருமையை கவியோகி சுத்தானந்த பாரதியார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், அவ்வை தி.க. சண்முகம், தீரர் சத்தியமூர்த்தி என பலதுறைப்பட்ட பெருமக்களும் பாராட்டியுள்ளனர். மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் நூலாக வெளிவந்திருக்கிறது. 1926ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம் முதன்முதலாக நாடக நடிகர்களுக்காகத் தொடங்கப்பட்டு அதன் முதல் தலைவராக மதுரகவி பாஸ்கரதாஸ் இருந்தார். மதுரையில் தொடங்கி, பின்னாளில் சென்னையில் நாடகச் சங்கம் தொடங்குவதற்கு இப்பெயரைப் பயன்படுத்த அனுமதி கேட்டபோது மதுரை நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். தேசபக்தர், கவிஞர், பாடகர், நடிகர், தொழிற்சங்கவாதி என பன்முகத்தன்மை கொண்ட மதுரகவி பாஸ்கரதாஸ், மகாத்மா காந்தியின் பாசத்திற்குரியவர். சுப்ரமணிய சிவா, வ.உ.சிதம்பரம்பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற தமிழ்நாட்டு தேசபக்தர்களைப் பற்றி வரலாற்றில் குறைந்த பதிவுகளே உள்ளன. அந்த வரிசையில் மதுரகவி பாஸ்கர தாஸூம் இருக்கிறார். இது அவலமல்லவா! இந்த அவலத்தைப் போக்க மதுரகவி பாஸ்கரதாஸிற்கு மணி மண்டபம் கட்டி இவரது வரலாறு தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியச் செய்தல் வேண்டும்.

இலக்கியம் ஒரு தொழில் அல்ல

இலக்கியம் ஒரு தொழில் அல்ல

புதுமைப்பித்தன் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சமூக விமர்சனத்தையே முனைப்பாகக் கொண்டு எழுதிய படைப்பாளி புதுமைப்பித்தன். கூர்மையான சமூக விமர்சனங்களை, பகடியுடனும் முற்போக்குச் சிந்தனையுடனும் இலக்கியச் சுவை பொலிந்திட எழுதியவர். இவரது இயற்பெயர் சொக்கலிங்கம் விருத்தாச்சலம் (சொ.வி) ஆகும். 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25இல் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்றார். இவரது தந்தை நிலப்பதிவுத் தாசில்தாராகப் பணிபுரிந்து 1918இல் ஓய்வுபெற்ற பிறகு திருநெல்வேலிக்குத் தனது குடும்பத்துடன் திரும்பினார். புதுமைப்பித்தனின் தாயார் பெயர் பர்வதத்தம்மாள். பின்னாளில் அவரது பெயரில் பர்வதக்குமாரி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, திரைப்படத் தயாரிப்பில் இறங்கினாலும் அதில் அவரால் வெற்றி பெற இயலவில்லை. பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் திருநெல்வேலியில் முடித்த இவர் 1931இல்தான் பி.ஏ. பட்டம் பெற முடிந்தது. 1932 ஜூலையில் புதுமைப்பித்தனுக்கும் திருவனந்தபுரம் பி.டி. சுப்பிரமணியப் பிள்ளை மகள் கமலாவிற்கும் திருமணம் நடந்தது. இவரது முதல் படைப்பான குலோப்ஜாம் காதல் 1933 அக்டோபர் 18இல் காந்தி இதழில் வெளிவந்தது. 1934 ஏப்ரல் முதல் இவரது படைப்புகள் மணிக்கொடி இதழில் வெளிவரத் தொடங்கின. மணிக்கொடியில் வெளியான முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். 1934 முற்பகுதியில் சென்னைக்குக் குடிவந்த புதுமைப்பித்தனது படைப்புகளில் அவர் வாழ்ந்த இடங்களின் வட்டாரத் தமிழ் இடம் பெற்றிருப்பதை வாசகர்கள் காண இயலும். குறிப்பாக, திருநெல்வேலியும் வண்ணாரப் பேட்டையும் திருநெல்வேலி வட்டார மொழியில் அவரது படைப்புகளில் துலங்கும். கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணி ஆண்டுமலர், நந்தன் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றிருந்தன. எழுத்துலகப் பணியில் 15 ஆண்டு காலம் இவரது எழுத்துக்கள் புதிய வழித்தடத்தை உருவாக்கின. இவரது படைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிப்பதைக் காண முடியும். புதிய பரிசீலனைகளுக்கு இ டம் கொடுக்கும், உற்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிக்கையாகத் திகழ்ந்த மணிக்கொடியில், இவரது 45 படைப்புகள் வெளிவந்துள்ளன. அவர் தனது கடைசிக் காலத்தில் ஏற்பட்ட கடும் பண நெருக்கடியின் காரணமாக, பல பத்திரிகைகளுக்குத் தமது கதைகளை வெளியிடக் கொடுத்திருக்கிறார். தமக்கே உரிய வைரம் பாய்ந்த சொல்லாட்சித் திறன், எழுதும் கதைகளின் காலம், களம், பாத்திரங்கள் ஆகியவற்றுக்கேற்பக் கையாளுகின்ற மொழிநடை, கதைக் கருத்துக்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தனித்தன்மை, சமுதாயச் சிறுமைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராகச் சாட்டையடிபோல் எழுப்பும் கலகக் குரல், நகைச்சுவைத் திறன், வாழ்க்கையை எதார்த்தபூர்வமாகவும் விமர்சனப் பார்வையோடும் சித்தரிக்கும் பாங்கு, கதையின் வடிவமைப்பில் பலப்பல புதுமைகள் முதலிய பல்வேறு சிறப்புகளால் தமது காலத்தைச் சார்ந்த ஏனைய சிறுகதை எழுத்தாளர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்ட, மாறுபட்ட ஈடு இணை இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவராக விளங்கியவர் புதுமைப்பித்தன். இவரது படைப்புகளைத் தமிழ்நாடு அரசு 2002இல் நாட்டுடைமையாக்கியது. 1934 ஆகஸ்ட் முதல் 1935 பிப்ரவரி வரை ஊழியனிலும் 1935 ஜூலை முதல் 1943 செப்டம்பர் வரை தினமணியிலும் உதவி ஆசிரியராக இருந்துள்ளார். தினமணி நிர்வாகத்துடனான மோதலில் அதன் ஆசிரியராக இருந்த டி. எஸ். சொக்கலிங்கம் பொறுப்பிலிருந்து விலகியபோது, இதர உதவியாசிரியர்களுடன் சேர்ந்து புதுமைப்பித்தனும் விலகினார். 1944இல் டி. எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய தினசரியில் சேர்ந்து பணியாற்றினார். வாசிப்பைப் பொறுத்தவரையில் எப்போதுமே புதுமைப்பித்தனுக்கு ஒரு தணியாத தாகம் இருந்தது. சொந்தத்திலேயே ஏராளமான புத்தகங்கள் வைத்திருந்தார். கையில் பணம் புரள்கிற வேளையில், புத்தகக் கடைக்குள் நுழைந்து விலையைக்கூடப் பாராமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவது அவரது பழக்கமாக இருந்தது. வாங்கிய புத்தகங்களை வாங்கிய சூட்டோடு படிக்கவும் செய்தார்; மாதக்கணக்கில் படிக்காமல் போட்டும் வைப்பார். தனியாக இருக்கும் வேளையில் எதையாவது படித்துக்கொண்டுதானிருப்பார். பழைய இலக்கியங்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. புதுமைப்பித்தனின் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் மண்டிக் கிடந்தன. இருப்பினும், தான் ஒரு இலக்கிய கர்த்தாவாக ஆக வேண்டும் என்ற தாகமும் வேகமும் அவரிடம் இருந்தன. அந்தப் பிடிப்பு மட்டும் இல்லாது போயிருந்தால், அவர் என்றோ தற்கொலைகூடச் செய்துகொண்டிருக்கக் கூடும். வாழ்க்கையில் அவர் அனுபவித்த கசப்பு, அவரது படைப்புகளிலும் பிரதிபலித்தது. அதனால்தான் அவரது சிறு கதைகளில் நம்பிக்கை வறட்சி தென்படுவதைக் காண இயலும். அதனை அவரே, ‘தம் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சிதான்’ என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். மணிக்கொடி பத்திரிக்கையில் வேலை பார்த்தபோது, சிறிது காலம் சம்பளம் எதுவும் இல்லாமல் சேவை செய்தார். பத்தாண்டு காலத்திற்கும் மேலாக தினமணி, தினசரி ஆகிய இதழ்களில் மாதச் சம்பளம் பெற்று வேலை பார்த்துவந்தார். தினசரியை விட்டு விலகியதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வேறு பத்திரிக்கையில் சேர்ந்து வேலை பார்த்தாலும், தினசரி இதழில் வந்த அளவுக்கு வருமானம் வராது போல் இருந்தது. எனவே பொருளாதார நெருக்கடி காரணமாக, திரைப்படத்துறையில் நுழைந்தார். அவருக்கு கலைச் சாதனத்தில் தனித்த ஈடுபாடு எதுவும் கிடையாது. தமது போக்குக்கும் எழுத்துக்கும் அந்தத் துறை ஒத்து வராது என்று தெரிந்திருந்தும் துறையின் போக்குக்கு ஒத்துப்போய் சினிமாவுக்கு எழுத முற்பட்டார். ஜெமினி நிறுவனத் தயாரிப்பான அவ்வை, காமவல்லி ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார். சினிமாவில் வரும் பணத்தைக்கொண்டு தமது ஆத்ம திருப்திக்காக அவர் ‘சோதனை’ என்ற பெயரில் ஓர் இதழ் தொடங்கிடத் திட்டமிட்டார். ஆனால் அவரது ஆசைக் கனவு கருகிப் போய்விட்டது. பிறமொழிக் கதைகளைத் தழுவி எழுதுவது என்பது புதுமைப்பித்தனுக்குப் பிடிக்காத விஷயம். பிறமொழிக் கதைகளை மொழிபெயர்த்துதான் தர வேண்டும் என்பது அவரது விருப்பம். திருட்டு இலக்கியம் படைப்பவர்களைப்பற்றி புதுமைப்பித்தன் கூறும்போது, ‘இன்னொருவன் கதையைத் திருடி, தன் சொந்தக் கதை என்று கூசாமல் உரிமை கொண்டாடிக்கொள்பவர்களை, சோரம் போன மனைவிக்குப் பிறந்த பிள்ளைக்குத் தானே தகப்பன் என்று கூறிக்கொள்ளும் வெட்கம் கெட்டவர்களுடன்தான் ஒப்பிடலாம்’ என்று ஒருமுறை கூறியுள்ளார். ‘நேர்மையான புகழ்தான் இலக்கியக் கர்த்தாவுக்கு ஊக்கம் அளிக்கும் உணவு. அதைக் கொடுக்கக்கூடிய சக்தியற்ற கோழையாக இந்தச் சமூகம் இருக்கிறது’ என்று அவர் கூறுகிறார். ‘கம்பன்தான் எனக்குத் தமிழ் நடையைக் கற்றுத்தந்தவன்’ என்று கூறும் புதுமைப்பித்தன், தனது உயிர் ஊசலாடும் வேளையிலும் இலக்கியத்தைப் பற்றிதான் நினைத்துக்கொண்டிருந்தார். எண்ணற்ற சிறுகதைகள், சிறந்த கட்டுரைகள், அருமையான கவிதைகள் என்று எழுதி எழுதிக் குவித்தும் சலியாத புதுமைப்பித்தனால், தனது இறுதிக் காலத்தில் ஒரு வரிகூட எழுத முடியாத நிலை ஏற்பட்டது. காச நோயால் உருக்குலைந்த உடலுடன் புனேவிலிருந்து வந்திருந்த புதுமைப்பித்தனைப் பார்த்து அவரது நண்பர் திருவனந்தபுரம் சிதம்பரம், ‘இத்தகைய உடல் நிலையில் இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள்?’ என்று கேட்டார். புதுமைப்பித்தனோ, ‘உணர்ச்சிதான் காரணம். எனது மகள் தினகரியின் நினைவு என்னை இங்கே இழுத்துக்கொண்டு வந்தது’ என்றார். சுகத்தை விரும்பிச் சென்ற புதுமைப்பித்தனது புனே வாழ்க்கை, அவருக்கு வேதனையைத்தான் தந்தது. அவர் எழுதிய ‘மகா மாசானம்’ என்ற சிறுகதையில், சென்னை மவுண்ட் ரோட்டில் யாருடைய கவனிப்புக்கும் ஆளாகாது செத்துக்கொண்டிருந்த துலுக்கப் பிச்சைக்காரனைப்போல, புதுமைப்பித்தன் செத்துக்கொண்டிருந்தார். தான் சாவதற்கு முந்தைய தினம் சிதம்பரத்திடம், தமது பாட்டரி விளக்கைக் கொடுத்து, ‘இதற்குப் பாட்டரி போட்டு அனுப்பு’ என்று சொல்லிவிட்டு, ‘எழுத்தாளனுக்கே ஒளி பேரிலேதான் ஆசை போலிருக்கு. நான் போகிற பாதை எல்லாம் வெளிச்சமாக்க விரும்பினேன். இப்போ இருட்டிலே நடக்க ஒளியை விரும்புகிறேன்’ என்றார். உலகத்திற்குத் தமது இலக்கியத்தால் ஒளி தந்த புதுமைப்பித்தன், தான் மட்டும் இருட்டில் மறைந்து போவதற்கு அஞ்சவில்லை. சாகின்ற காலத்திலேயும் அவர் சிரித்துக்கொண்டுதான் மரணத்தை வரவேற்றார். புதுமைப்பித்தன் செத்துக்கொண்டிருக்கும்போது, ‘கமலா, கடைசியாக இந்த உலகத்துக்கு நான் விட்டுச்செல்வது ‘ராஜ முக்தி’ படமும் தினகரியும்தான். கவலைப்படாதே! உன்னை நல்ல நிலையில் வைக்க விரும்பினேன்; ஆசைப்பட்டேன். ஆனால் விதி என்னை இந்தக் கோலத்துக்குக் கொண்டுவந்துவிட்டது’ என்று பேசினார். அவரது மனைவியும் ‘வானத்து அமரன் வந்தான் கான், வந்தது போல் போனான் கான்’ என்று புலம்பவில்லை. ‘எழுதி எழுதிக் கையும் வீங்கிற்றே! உயிரும் கொடுத்தாயே!’ என்றுதான் புதுமைப்பித்தனின் மனைவி கமலா ஊனுருகக் கதறினார். தமிழுக்காக உழைத்து, தமிழ் வாழத் தம் உயிரை மாய்த்த, விலைமதிக்க முடியாத எழுத்துக்களைத் தந்தவர் புதுமைப்பித்தன். தீ நாக்குகளுக்கு அவர் இரையான இந்த நாளில், “இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. அது உன்னைக் கொன்றுவிடும்” என்று அவர் சொன்னதை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

தீராக் காதல்

தீராக் காதல்

திரை விமர்சனம் நிறைவேறாத காதலின் நாயகன் கௌதமுக்கு வந்தனாவுடன் திருமணமாகி, ஐந்து வயதில் ஆர்த்தி என்கிற மகள் இருக்கிறாள். நாயகி ஆரண்யா, பிரகாஷ் என்பவனுக்கு மனைவியாக இருக்கிறாள். எதிர்பாராதவிதமாக, கௌதம் – ஆரண்யா சந்திப்பு பாலக்காடு சந்திப்பில் நிகழ்கிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த பழைய காதல் நினைவுகளை அச்சந்திப்பு விசிறிவிட, மீண்டும் காதல் உணர்வு தீப்பற்றிக்கொள்கிறது. விளைவு என்ன ஆனது என்பதுதான், ஜி.ஆர்.சுரேந்திரநாத்துடன் இணைந்து ரோகின் வெங்கடேசன் எழுதி இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள  ‘தீராக் காதல்’ தமிழ்த் திரைப்படத்தின் மொத்தக் கதை. கதை பழையது. என்ன.. அமைந்த அமைதியான வாழ்க்கையில், நிறைவேறாத காதலை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணை, காதலன் துரத்துவதாக இல்லாமல்,  உல்டாவாக அப்படியான ஒரு ஆணை, காதலி துரத்துவதான ‘புதுமை’.   ஆரண்யாவுக்கு வாழ்க்கை என்று இல்லாமல் போனதற்குக் காரணம், சாடிஸ்ட் கணவன் பிரகாஷ். ஆனால் அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் கௌதம். இந்நிலையில், ‘வந்தனாவை விட்டுவிட்டு வந்துவிடு’ என்று ஆரண்யா அவனைக் கேட்பதில் என்ன நியாயமோ?! “ஆரண்யா இப்ப பிரச்சனயில இருக்கா. அவ சாயறத்துக்கு ஒரு தோள் வேணும். தேவையே இல்லாம நீ பிரச்சனயில மாட்டிக்காத” என்று நண்பன் அருண் அறிவுறுத்தியும், “இங்க நடந்தத இங்கேயே மறந்துடுங்க. அதுதான் நம்ம ரெண்டுபேருக்கும் நல்லது” என்று கௌதமே ஒரு கட்டத்தில் ஆரண்யாவிடம் கூறும் தெளிவிருந்தும், அவளது பேச்சிலும் செயலிலும் அவ்வப்போது சரிந்துபோகும் பரிதாப நிலையையும் வந்தனா மற்றும் குழந்தை ஆர்த்தி மீதான பாசத்தால் குமைந்துபோவதையும் கௌதமாக வரும் ஜெய்,  தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். ஒருபக்கம் வாழ்ந்தும் வாழாத வாழ்க்கை, மறுபக்கம் எதிர்பாராத சந்திப்பால் அடிமனத்தில் அமிழ்ந்துபோய் மீண்டும் துளிர்த்த காதல் நினைவுகள் ஊடே சிக்கித் தவிக்கும் ஆரண்யா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட நடிப்பை வழங்கி, அப்பாத்திரத்தையே மெருகூட்டியுள்ளது சிறப்பு. மேம்போக்கில் ‘வொர்க்காலிக்’காகத் தெரியும் வந்தனா, கணவன் கௌதம் மீதும் மகள் ஆர்த்தி மீதும் அளவில்லாத அன்பைக் கொண்டுள்ள நிலையில், அவன் வெளிப்பட்டு நிற்கும்போது, “நீங்க எல்லா பொறுக்கித்தனமும் பண்ணுவீங்க. அப்புறம் வந்து ‘சாரி’ கேட்ட உடனே, நாங்க எல்லாத்தையும் தொடச்சி எறிஞ்சிட்டு, ‘ஈ’ன்னு இளிச்சுட்டு வந்துடணும்… இதே தப்ப நான் பண்ணி இருந்தா?” என்று கொதித்து வெடிப்பதும் குழந்தை காணாமல் போகும்போது பதைத்துப் போவதுமாக, வந்தனவாக வரும் ஷிவதா நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். கௌதமின் நண்பன் அருணாக வரும் அப்துல் லீ,  “என்னடா, எரியற பல்ப முழுசா முழுங்குன மாதிரி முகம் எல்லாம் பிரகாசமா இருக்கே!” என்று சூழலைக் கலகலப்பாக வைத்திருப்பதுடன், “ஒரே வழிதான் இருக்கு. வந்தனாகிட்ட போய் உண்மையைச் சொல்லி, அவ கால்ல விழுந்துரு” என்று இடையிடையே கருத்துள்ள ஆலோசனையும் வழங்கி, மிகையில்லாத நடிப்பைத் தந்திருப்பது அருமை. ஆரண்யாவின் கணவன் பிரகாஷை, ஒரு கட்டத்தில் ஆரண்யா அறையும்போதுதான், ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதல் அடைகிற வகையில், சேடிசத்தை வெளிப்படுத்தும் கணவன் பாத்திரத்தில் அம்ஜத்கான் சோபித்துள்ளார். குழந்தை ஆர்த்தியும் (வ்ருத்தி விஷால்) இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். “என்னடா.. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் வைஃப்புங்கள்லாம் நல்லவங்களா மாறிட்டாங்களோன்னு பார்த்தேன்..” (கௌதம்) “புடிச்சவங்களோட ஒரு இடத்துல இருக்கும்போது அந்த இடம் இன்னும் ரொம்ப அழகா ஆயிடுது இல்ல..?!” (கௌதம்) “என்ன மோசமான உலகம் இது கௌதம்?! சேந்து வாழ வேண்டியவங்கள எல்லாம் பிரிச்சு வெக்கறாங்க; பிரிஞ்சி வாழ விரும்பறவங்கள எல்லாம் சேத்து வெக்றாங்க” (ஆரண்யா) “என்ன பண்றது.. வேலை நடக்கணும்னா பிளைட், வேலை முடிஞ்சுச்சுடுச்சுனா ட்ரெய்ன்னு..” (கௌதம்) “எல்லாக் கம்பெனியும் ஒரே மாதிரியாதான் இருக்காங்க” (ஆரண்யா) “இங்க வந்தா ஒன்னரை மணி நேரம் முன்னாடியே உன்ன பாக்கலாமில்ல..” (ஆரண்யா) போன்ற ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் அருமை. மங்களூர், மும்பை, சென்னை நகரங்களில் இரவு பகலாக வலம்வந்து அழகை வாரி இறைத்த ரவிவர்மன் நீலமேகனின் ஒளிப்பதிவு, கண்களுக்கு விருந்து. சித்து குமாரின் பின்னணி இசை அருமை. ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு நிறைவு. கதையில் புதுமை இல்லை என்றாலும் கத்தி முனையில் நடக்கும் கதைக் கருவை, கீறல் இல்லாமல்  வழங்கிய விதமும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும்  ரோகின் வெங்கடேசன் இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. மதிப்பெண் : 6.5/10

நித்தியத் தேவை

நித்தியத் தேவை

கவிதைகள் நித்தக் கோடி மூச்சுமுட்டும் நெருக்கடியில்சேமிப்பைத் திரட்டிய களைப்போடுவிதவிதமான காரணங்கள் சுமந்துதிரள்கிறது கூட்டம் எப்போதும் வரம்பெல்லைக்கு உட்படாமலேகையில் வந்து சேர்கிறதுமானம் மறைக்கக் கண்டுபிடிக்கப்பட்டஆடம்பரம் துண்டு விழும் பணத்தைஎதில் சரிக்கட்டுவதென்ற யோசனையானதுமழுப்பித் திணிக்கப்படுகிறதுகட்டைப் பைகளுக்குள் வெளியே வரும்போதுபொறாமையோடு திரும்பிப்பார்க்க வைக்கின்றனதினமொரு புத்தாடையுடுத்தும்ஜவுளிக்கடை பொம்மைகள் தேவை உங்கள் இருப்பை மீறியாராவது ஏங்கினால்உடனே விட்டுக்கொடுத்துவிடுங்கள் கசியும் விழிநீரையாரும் அறியாதபடிதுடைத்துக் கொள்ள சிறிது நேரமேனும்சுதந்திரக் காற்றைச்சுவாசிக்க அருகில் கடக்கும்பேருந்திலிருந்து வரும்எதிர்பாராத சிறு புன்னகையைத்தரிசிக்க வயிற்றுவலியை முகபாவத்தில்பிறரறியாவண்ணம்மறைத்துக்கொள்ள பழைய காதலைபயணப் பொழுதுகளில் அசைபோட்டுஉயிர்த்திருக்க தேவைப்படலாம்அவர்களுக்கு ஒருஜன்னல் இருக்கை

1946 இறுதிச் சுதந்திரப் போர்

1946 இறுதிச் சுதந்திரப் போர்

கடற்படை எழுச்சியின் கதை ஆங்கில மூலம் : பிரமோத் கபூர்தமிழில் : ச.சுப்பாராவ் நூலறிமுகம் ஒரு புரட்சியைத் தயார் செய்யும் கட்சியானது வெகுஜனப் பரப்பில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல குழுக்களாக இயங்கும். தகவல் தொடர்பு, தபால் தந்தி, தொலைபேசி மற்றும் போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் புரட்சிக்காரர்கள், புரட்சியின்போது துறைகளின் செயல்பாட்டைத் தமது கரங்களில் எடுத்துக்கொள்வார்கள். மக்கள் திரளிலிருந்து உருவாகும் புரட்சிகர இராணுவத்தோடு அரசின் படையும் ஒன்றிணையும் நேரத்தில் ஒரு புரட்சி வெற்றி பெறும். அந்த வேலையை இராணுவத்தில் இருக்கும் புரட்சிக்காரர்கள் செய்வார்கள். ஆனால் இராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படையிலிருந்து கிளர்ச்சி தொடங்கி, அது மக்கள் திரளோடு இணைய முற்பட்டது சரியா தவறா? வெகு மக்கள் திரளை வழிநடத்திய இயக்கங்களின் திருப்தியும் சம்மதமும் அதற்கு இல்லாமல் போனால் என்னவாகும்? அதுதான் ‘1946 கடற்படை எழுச்சி’. இந்த முன்னுரையோடு நூலறிமுகத்தில் நுழையலாம். மகத்தான மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிற தோழர் சுப்பாராவ் அவர்கள் சமீபத்தில் மொழிபெயர்த்து, பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் ‘1946’ நம்மில் பலருக்குத் தெரியாத வரலாற்றை மிகத் தெளிவாகப் பேசுகிறது. 1946 என்றவுடன் 70களில் பள்ளிப் பருவத்தை முடித்தவர்களுக்கு, வரலாற்றுப் பாடத்தில் ‘கடற்படை மாலுமிகள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள்’ என்ற ஒரு வரிச் செய்தியாகத் தெரிந்திருக்கூடிய இந்த நிகழ்வு, 400 பக்கங்களில் பிரமோத் கபூரின்கடின உழைப்பினால் நம் கவனம் ஈர்க்கிறது. இப்போதைய பாடங்களில் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்தில் உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்கள் வலுப்பெற்று, காலனிய நாடுகள் அடிமை நுகத்தடியை உதறி விடுதலை பெற்றுவந்த தருணம். 1942இல் பிரிட்டிஷ் படை வசம் இருந்த சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தபோது, அந்தப் படையில் இருந்த பெரும்பாலான இந்திய வீரர்களை பிரிட்டிஷ் படை கைகழுவிப் போய்விட்டது. அந்த வீரர்கள் தம்மை இந்திய தேசிய இராணுவமாக மாற்றிக்கொண்டு ஜப்பானுடன் சேர்ந்துகொண்டார்கள். இந்த INA, 1943இல் நேதாஜியின் தலைமைக்குப் போனபோது இந்திய மக்கள் வாழ்த்தி வணங்கினார்கள். நேதாஜியும் இந்திய தேசிய இராணுவமும் இந்திய பர்மா எல்லையில் நாட்டின் கதவைத் தட்டியதை தேச மக்களுடன் பிரிட்டிஷ் படையும் வியந்து பார்த்தது. இந்திய தேசிய இராணுவம், இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டிஷ் படையிடம் ஜப்பான் தோற்றபோது பின்வாங்க நேர்ந்தது. பிரிட்டிஷ் படையினால் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நீண்ட நாட்களுக்குப் பின்னர் வழக்கறிஞர் கோட்டை மாட்டிக்கொண்டு நமது வீரர்களுக்காக வழக்காடினார். அந்த வீரர்கள் தூரக்கிழக்கு ஆசியாவில் செய்த சாகசங்களினாலும் அவர்கள் மீதான தேச பக்த ஆவேசத்தினாலும் மக்கள் உளக் கிளர்ச்சி கொண்டிருந்த காலம். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனின் நேச நாட்டுப் படை வென்றிருந்தது. அந்தப் படையில் போரிட்டு வெற்றிக்குக் காரணமாயிருந்த இந்திய வீரர்களும் கடற்படை மாலுமிகளும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளால் பாராட்டுப் பெற்றிருந்தார்கள். தேசம் விடுதலை பெற்றுவிடும் என்ற நம்பிக்கை தேசியவாதிகளிடம் ஏறக்குறைய வந்துவிட்ட நேரம். 1942 ஆகஸ்ட் போராட்டம் ஒரு எரிமலை போல நடந்து முடிந்து, தேசம் முழுவதும் அந்த வெம்மை குறையாமல் இருந்த நான்கு வருடங்கள், இத்தகைய சர்வதேச மற்றும் தேசிய சூழ்நிலைகள் இந்தியாவில் விடுதலை ஆர்வத்தை உந்திக் கொண்டிருந்தன. போர் முடிந்தவுடன் தேசத் தலைவர்கள், நாட்டிற்கு விடுதலை தரப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரிட்டன் இநதியாவுக்கு விடுதலை தருவதில் தாமதம் காட்டிக்கொண்டுதான் இருந்தது. பம்பாய் கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் அரபிக் கடலைப் பார்த்தவாறு இருந்த வீடு ஒன்றில் வசித்துவந்த பிரான் நாயர் மற்றும் குஸூம் நாயர் தம்பதியரை (இவர்கள் மலையாளிகள் இல்லை என்று அறிக) சந்திக்க, காங்கிரசில் இருந்த அருணா ஆசப் அலி உள்ளிட்ட சோசலிஸ்ட் தலைவர்கள் வந்து போனார்கள். IPTA (Indian People’s Theatre Associastion) என்ற இந்திய முற்போக்கு நாடகக் கலைஞர்களின் அமைப்பைச் சேர்ந்த K.A.அப்பாஸ், சலீல் சௌத்ரி, பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களும் முன்னாள் இராணுவத்தினரும் வந்து போனார்கள். கப்பற்படையில் இருந்த இளம் மாலுமிகள் சிலரும் வந்தார்கள். தேச விடுதலைக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பேச்சு ஆயுதமேந்திய புரட்சியாக வடிவம் கொண்டது. பலாய் சந்திர தத், (சுருக்கமாக பி.சி.தத்) சலீல் ஷியாம், மதன் சிங், ரிஷிதேவ் பூரி, முகமது சாஹிப் கான், (சுருக்கமாக எம்.எஸ்.கான்) ஆகிய இளம் மாலுமிகள்தான் புரட்சியின் நாயகர்கள். நூலாசிரியர் பிரோமத் கபூர் தேடித் தேடிக் கண்டடைந்து தந்திருக்கிற இந்த வரலாற்றைப் படிக்கப் படிக்க, மனம் அந்தக் காலத்திற்கே சென்றுவிடுகிறது. பிரிட்டிஷ் ஆவணங்கள், அரசுமுறைக் கடிதங்கள், சுய சரிதைகள், விசாரணை அறிக்கைகள், தேசத் தலைவர்களின் கருத்துரைகள், பத்திரிகைகளில் வந்த செய்திகள், கள ஆய்வுகள் என்ற சலிப்பில்லாத தேடல் அதிசயிக்க வைக்கிறது. 1946 பிப்ரவரி முதல் நாள், ஆர்.கே.சிங் என்ற மாலுமி கடற்படையிலிருந்து இராஜினாமா செய்கிறார். அவ்வாறு விலகிக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை என்பது அன்றைய விதி. இது அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டபோது, தனது தொப்பியைக் கழற்றிக் காலால் உதைத்து, ‘நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். அரண்டு போகிறது கடற்படை அதிகார பீடம். ‘என்னவோ நடக்கப் போகிறது’ என்பதற்கான அபாய அறிவிப்பு. அவர் கைது செய்யப்பட்டார். ஏன் அவர் ராஜினாமா செய்தார்? இரண்டாம் உலகப்போரில் சண்டையிடுவதற்கு பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருந்தது. பல விதமாக விளம்பரங்களில் ஆசைகாட்டி ஆள் சேர்த்தார்கள். பதின் பருவம் முடிந்தும் முடியாத பொடியன்களைச் சேர்த்துக்கொண்டு உலகப் போரில்ஆட்டம் போட்டது காலனி அரசு. நல்ல சம்பளம், பணி நிரந்தரம் என்பதெல்லாம் இந்தப் பையன்களைப் போரிட வைத்தன. போர் முடிந்ததும் அவர்கள் மிக எளிதாகக் கழற்றிவிடப்பட்டார்கள். இந்த பச்சைப் பொய்களைச் சுமந்துகொண்டிருந்த வெளியேற்றம், பணியில் இருந்த மாலுமிகளுக்கு அச்சத்தைக் கொடுத்தது. ஐம்பது பேர் தங்கக்கூடிய இடத்தில் 200 பேரை அடைத்துத் தங்கவைப்பது, சுகாதாரமற்ற, சுவையற்ற, தேவைக்கும் குறைவான உணவு, அதிலும் வெள்ளைக்காரர்களுக்கு முதல் தர உணவு, இந்தியர்களுக்குக் கடைத்தரம். இன்னொரு கொடுமை, வெள்ளை அதிகாரிகளின் இனவெறி, மிஞ்சிய அழுத்தத்துடன் கூடிய திமிர்ப் பேச்சுகள். இவற்றுக்கு எதிரான ஒரு ஆரம்பம்தான் ஆர்.கே.சிங்கின் ராஜினாமா. வெளியிலிருந்த எரிமலையின் வெடிப்புக்கான புறச் சூழ்நிலை, கப்பற்படை மாலுமிகளின் அகச் சூழ்நிலைக்கு நெருங்கி வந்திருந்ததன் ஒத்திகை, தல்வார் சிக்னல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே 1945 டிசம்பர் 1இல் நடந்த கடற்படை தினத்தன்று நடந்திருந்தது. பி.சி.தத் தனது தோழர்களுடன் அதை நிகழ்த்தியிருந்தார். கடற்படை தினத்திற்கு வந்திருந்த நிறவெறி பிடித்த அதிகாரிகளை மேடையிலிருந்து வெளியேறச் சொல்லும் அரசியல் முழக்கங்கள் முகத்தில் அடித்ததை, அவர்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திருக்கமாட்டார்கள். யார் இதைச் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத வெள்ளை நிர்வாகம், அதிகாரியை மாற்றி ஒரு மோசமான இனவெறியனைக் கொண்டுவந்து எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது. அதற்கும் ஒரு பதிலடி கொடுத்தார்கள் தோழர்கள், அடுத்த மாதத்தில். 1946 ஜனவரி 21இல், இதே போன்று ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோஷங்களுடன் பரேட் மைதானம் அதிர்ந்தது. ஆனால் இந்த முறை பி.சி.தத். மாட்டிக்கொண்டார். தொடர்ந்து அவரது லாக்கர் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது புரட்சியின் பொறிகள் வெள்ளை நிர்வாகத்தின் முகத்தில் அடித்தன. பிறகு என்ன? பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தே மாலுமிகளை மோசமான வார்த்தைகளால் சீண்டி வந்த கிங், பிப்ரவரி 8ஆம் தேதி பாசறைக்கு வந்தபோது, மாலுமிகள் எழுந்து மரியாதை தரவில்லை. பிப்ரவரி 16க்குள் வேகமாக சம்பவங்கள் நடந்தன. கூட்டாக மாலுமிகள் கிங் மீது எழுத்தில் புகார் கொடுத்தனர். உலகம் முழுவதும் ஆணவத் திமிருடன் நடந்துகொண்டிருந்த ஏகாதிபத்திய வெள்ளை அதிகாரம் திடுக்கிட்டுப்போனது. கிங்கின் மிரட்டல் ஆணவம் தொடரவே, பிப்ரவரி 17இல் கடற்படை மாலுமிகள் தங்களுக்குத் தந்த உணவை மறுத்துப் போராட்டத்தைத் தொடங்கினர். உண்ணா நோன்பு உக்கிரமானது. தல்வார் சிக்னல் பள்ளி, புரட்சியாளர்கள் கையில் வந்தது. தல்வாரில் இருந்து எழுச்சி, கடற்படையின் தரைக் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் முழுதும் பரவியது. போராட்டக்காரர்கள் தங்களுக்கு ஒரு தலைமைக் குழுவை உருவாக்கினர். பெரும்பான்மை இந்துக்களாக இருந்த மாலுமிகளின் போராட்டக் குழுவிற்கு ஒரு முகமதிய மாலுமி எம்.எஸ். கான் தலைவர். அடுத்த இடத்தில் மதன் சிங். சீக்கிய மாலுமி. தரை அலுவலகங்களிலிருந்து, புரட்சி கப்பல்களுக்குப் பரவியது. பிரித்தானிய சாம்ராஜ்யக் கொடியும் கப்பற்படைக் கொடியும் இறக்கப்பட்டு தேசியக் காங்கிரசின் மூவர்ணக் கொடியும் முஸ்லீம் லீக்கின் பச்சைக் கொடியும் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியும் ஏற்றப்பட்டன. இந்தக் கொடிகள் ஏற்றப்பட்டதன் செய்தி என்ன? நாங்கள் தேசிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம்; நாங்கள் மதங்கள் கடந்து ஒன்றுபட்டிருக்கிறோம்; நாங்கள் வர்க்கமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இணைந்திருக்கிறோம் என்பதே. இந்தச் செய்தி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிட்டில் அறைந்தது. புரட்சியை அடக்க இராணுவத்தின் பிற பிரிவுகளும் காவலர்களும் ஏவப்பட்டனர். ஆனால் அவர்கள் சொந்தச் சகோதரர்களைச் சுட மறுத்தனர். 1942 ஆகஸ்ட் போராட்டத்தை ஒடுக்கிய இந்திய இராணுவமும் போலீசும் 1946இல் உதவிக்கு வராது என்பதை ஏகாதிபத்தியம் புரிந்துகொண்டது. இந்தியாவுக்கு விடுதலை கொடுத்துவிடலாம் என்பதற்கான திட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றம் அறிவித்து, அதை ஏற்பாடு செய்ய சர்.ஸ்டாப் போர்டு கிரிப்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழுவையும் அறிவித்தது. இந்தப் புள்ளியில்தான் 1946 எழுச்சி இறுதி சுதந்திரப் போர் ஆனது. பம்பாய் தாண்டி பல துறைமுகங்களுக்குப் புரட்சி பரவியது. கராச்சியில் தீவிரம் ஆனது. இசுலாமியர்களுக்கு தனி தேசம் இல்லாமல் இந்திய விடுதலைப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்ற நிலை எடுத்த முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக், கராச்சியில் பரவிய மதம் தாண்டிய கிளர்ச்சியை ரசிக்குமா? கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் புரட்சிக்கு ஆதரவு நிலை எடுத்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், வெகுஜன மக்களைக் கொண்டு வேலை நிறுத்தங்கள் செய்தது. பம்பாய் மக்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கினர். சாலைத் தடுப்பரண்களுக்குப் பின்னால் நின்று வெள்ளைக்கார போலீசையும் இராணுவத்தையும் எதிர்த்தனர். கலகம் வன்முறையானது. துப்பாக்கிச் சூட்டில் மக்களின் பிணங்கள் விழுந்தன. ரத்தம் சிந்தாமல் விடுதலை கனியப்போகிற தருணத்தில் ஏகாதிபத்தியத்துடன் அமர்ந்து பேசி வரவேண்டிய விடுதலை, இப்படிக் கனிவதிலோ அல்லது இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி விடுதலை தள்ளிப்போவதிலோ

மர(ற)ப்பேனா?

மர(ற)ப்பேனா?

சிறுகதை அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொண்டுதான் பிரசவிக்கிறாள் பெண். பெற்றெடுத்த குழந்தையின் பிஞ்சு முகத்தில் விழித்துப் பார்க்கும் அந்தக் கண்களில்தான் தன் அத்தனை வேதனைகளையும் ஒளித்து வைத்துக்கொண்டு பூரிப்பு அடைக்கிறாள். அக்குழந்தையின் முதல் சிணுங்கலில் அவளின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒரு ஆண் உணர வேண்டுமென்றால், அவனும் ஒரு படைப்பாளியாக இருந்தால் மட்டுமே முடியும். படைப்பாளர்கள் தங்கள் படைப்பை எழுதி முடித்தபின் ஏற்படும் மனநிலையை ஒத்தது அந்தத் தாயின் மனது. உணர்வுகளுக்கும் மூளையின் எண்ணங்களுக்கும் இடையில் விரல்கள் படும்பாட்டை அவ்வளவு எளிதில் எந்த எழுத்தாளனாலும் கூறிவிடமுடியாது. அப்படி ஒரு மனநிலையில்தான் இருந்தேன். எழுதும்போது நான் நினைக்காத சிலவற்றையும் என் விரல்கள் எழுதியதாக உணர்ந்தேன். விரல்களும் படைப்பாளிகள்தானே! தொடுதிரை, தட்டச்சு என வந்துவிட்டாலும், மை சிந்தும் பேனா முனையும் காகிதமும் முத்தமிடும்போது வரும் நறுமணம், நாசியில் ஏறி மூளையைக் கிளறி, பற்றி எரியவிட்டு, மனத்தைக் குளிர்விக்கும். அந்த போதையை வென்ற ஒரு “….” இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. எழுதிமுடித்தபின் அந்தப் பேனா முனையைப் பார்த்துப் பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தேன். இந்தப் பேனா எனக்கு அவள் கொடுத்தது. அவளுக்குத் தெரியாது நான் ஒரு எழுத்தாளன் ஆவேன் என்று. இந்தப் பேனாவுக்கும்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் வாழ்க்கையில் பரிசாகக் கிடைத்த இரண்டாவது பேனா இது. அதன்பின் நான் யார் பேனா கொடுத்தாலும் வாங்கிக்கொள்வதில்லை. சிலரின் அன்பைத் தட்டமுடியாமல் பெற்றாலும் அதை யாருக்காவது கொடுத்துவிடுவேன்; பயன்படுத்துவது கிடையாது. இந்த இரண்டாவது பேனாவை அவளிடம் இருந்து பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு. இதுவும் அந்த முதல் பேனா போன்றே மரத்தாலான பேனா. என் முதல் பேனாவின் கதை எனக்குக் கோர்வையாக ஞாபகம் இல்லை. அப்போதுதான் பலப்பக் குச்சியில் இருந்து பென்சிலுக்கு மாறியிருந்தேன். ஔவையார் ஆரம்பப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு. கடற்கரையை ஒட்டிய வீடு என்பதால் உப்புக் காற்றால் கறுத்துப்போன நிறம் எனக்கு. என் அம்மாவும் இதே பள்ளியில் படித்தவர் என்பதாலும் என் ஆசிரியை அவர் பள்ளிக்கால நண்பர் என்பதாலும் சற்று கவனிப்பு அதிகம்தான், எல்லாவற்றிலும். அன்று கடன் வாங்கிக் கழிப்பது பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டு இருக்க, அவள் தன் தந்தையோடு வந்து சேர்ந்தாள். அகண்டு விரிந்த கண்கள் அவளுக்கு. இப்போதும் நான் கண்களை மூடி அவளை நினைக்கும்போது அந்தக் கண்களை மட்டும் அப்படியே என் மனக் கண்களால் பார்க்கமுடிகிறது. ஆசிரியர் அவள் பெயரைக் கேட்க, அவளின் விரிந்த கண்கள் குளமாகிக்கொண்டிருந்தன. அவளின் தந்தைதான் ‘செண்பகம்’ என்றார். நான் இப்போது வைத்திருக்கும் இந்தப் பேனாவை எனக்குக் கொடுத்தவளை நினைத்துப் பார்த்தால், அவளின் கண்கள் என்மீது கோபத்தைக் கொட்டியதுதான் நினைவுக்கு வருகிறது. அதுவும் கல்லூரி முடித்துப் பத்து வருடங்களுக்குப் பின் ஒருநாள், வங்கி ஒன்றில் சந்திக்கும்போது தற்செயலாகப் பார்த்தேன். சலான் எழுதப் பேனா இல்லாமல் அருகில் நிற்கும் அவளிடம் கேட்கும்போதுதான் அவளைப் பார்த்தேன். மகிழ்ச்சியையும் ஆச்சிரியத்தையும் அரை விநாடி தேக்கிவைத்த அந்தக் கண்கள், கொஞ்சம் கொஞ்சமாகச் சிவந்து தீயாய் எரிவதை அமைதியாய்ப் பார்த்து ரசித்துக்கொண்டே நின்றேன். “சாந்தி… பேனா குடு; எழுதிட்டுத் தந்துடுறேன்” எனச் சொல்லும்போதே சிரித்துவிட்டேன். செண்பகம் கண்களைத் துடைத்தவாறு நான் பார்க்கும் தூரத்தில் அமர்ந்தாள். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தாள். அருகில் போய் ஆறுதல் சொல்லி, கண்களைத் துடைத்துவிட வேண்டும் எனத் தோன்றியது. பின் ஒருநாள் அம்மாச்சி கொடுத்த மூனு பைசாவில் மதியம் சுட்ட பனங்கிழங்கு வாங்கி அவளுக்கும் கொடுத்தேன். ‘வேண்டாம்’ என்றவள், பின் வாங்கி அதை உரித்துத் தின்னத் தெரியாமல் முழித்தாள். உரித்து நார் எடுத்துக் கொடுத்தேன். ஒருநாள் வகுப்பு முடிந்து வீட்டுக்குப் போகும்போது அவளின் தந்தை எப்போதும் போல சைக்கிளில் அவளை அழைத்துப்போக வந்திருந்தார். என்னையும் ஏற்றிக்கொண்டு வீட்டில் இறக்கிவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, அவள் வீடு என் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறது என்று. என் அம்மாச்சி என்றாலே ஊரில் அனைவருக்கும் பயம். எனக்கு விவரம் தெரியும்போதே என் தாத்தாவுக்குக் கண்பார்வை குறைந்துவிட்டது. ஐந்து குழந்தைகளையும் படிக்கவைத்து, வளர்த்து, கல்யாணம் செய்துவைத்து என, மொத்தக் குடும்பத்தையும் பார்த்துகொண்டு தாத்தாவையும் பார்த்துக்கொண்டாள். படிப்பறிவு இல்லாததால் யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என எல்லோரிடமும் சண்டைக்கு நின்று, பின்னர் அதுவே அவளின் குணமாகி இருக்கும் என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. எங்கள் வீட்டின் பின்புறம் மல்லிகைத் தோட்டம் இருக்கும். தென்னை, வாழை, கொய்யா, எலுமிச்சை, முருங்கை என பலவகை மரங்களும் இருக்கும். அதைப் பறித்து பக்கத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சு காசு, பத்து காசு என விற்பதுதான் பிரதானத் தொழில் என் அம்மாச்சிக்கு. முருங்கைக்காய், கருவேப்பிலை எல்லாம் நானும் பலமுறை பறித்துக் கொடுத்திருக்கிறேன். செண்பகமும் நானும் அந்த மல்லிகைத் தோட்டத்துக்குள் கோவில் கட்டி விளையாடுவது என்பது எல்லா விடுமுறை நாட்களிலும் நடக்கும். ஒருநாள் விளையாட்டாகக் கற்களை அவள்மீது எறிய, அவள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வீட்டில் அனைவரும் கூடிவிட்டார்கள். எனக்கு பயத்தில் உடல் நடுங்கி வியர்த்துக் கொட்டியது. அதுபோலத்தான் அன்று சாந்தியின் முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. கோபத்தை அடக்கமுடியாமல் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். அன்று வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லாருக்கும் முன் என்னை அறைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. கல்லூரி படிக்கும்போது எனது இறுதி ஆண்டு வகுப்பறையின் பக்கத்தில்தான் இளங்கலை ஆங்கிலம் முதலாம் வருட வகுப்பறை. என் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்தான் அந்த ஜன்னலின் வழியே அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்து, அருகில் இருக்கும் அவளின் தோழியிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் வகுப்பறையில் ஆசிரியரும் அப்போது இல்லை. ராகிங் செய்யும் எண்ணத்தில் நேரே உள்ளே சென்று அவளின் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். சாந்தி என எழுதி இருந்தாள். “சாந்தி… பேனா குடு.. எழுதிட்டுத் தாரேன்” என்றேன். அவள் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றாள். என் அம்மாச்சி, செண்பகத்தின் அப்பா, அம்மா, மாமா என இன்னும் பலர் கூடி நிற்க, நான் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றேன். அப்போது செண்பகம் வாதாம் மரத்தைக் காட்டி, யாரோ இந்தக் காயை அடித்துப் பறிக்கக் கல் எறிந்துவிட்டு ஓடிவிட்டதாகக் கூறி அழுதாள். நானும் அழ ஆரம்பித்தேன். அம்மாச்சியும் இன்னும் சிலரும் அசிங்க அசிங்கமாகக் கல் எறிந்தவனைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வார்த்தைகளுக்குள் எனக்கு மட்டும் அவர்களே தெரிந்தார்கள். இன்றுவரை அவள் மண்டையை நான்தான் உடைத்தேன் என நானும் யாரிடமும் சொல்லவே இல்லை. அவள் தலையில் மஞ்சள் தூளும் காப்பித்தூளும் வைத்து அமுக்கினார்கள் என் அம்மாவும் சித்தியும். அவளின் அப்பா சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனைக்குப் பறந்தார். அடுத்தநாள் சுட்ட பனம்பழத்தை அவளுக்காகப் பத்திரமாக வைத்திருந்து கொடுத்தேன். “வெட்டி நார் உரித்துக் கொடேன்” என்றாள். அதை இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். சாந்தியிடம் “சாந்தி.. சாந்தி..” என முணுமுணுத்தபடி வங்கியில் சுற்றியும் கூட்டம் இருக்கிறது என்பதை உணர்த்தித் தப்பித்தேன். சாந்தி கொஞ்சம் சாந்தியடைந்ததாகத் தெரிந்தது. கண்களை ஒருமுறை மூடித் திறந்தவள், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள், பழைய நினைவுகளையும் சேர்த்தே. தன் கைப்பையிலிருந்து மரப்பேனா ஒன்றை எடுத்து என் கையில் திணித்துவிட்டு யாரையோ தேடினாள். அந்த வகுப்பில் அனைவரும் எங்களையே பார்க்க அவள் அந்த டப்பாவைப் பல்லால் கடித்துத் திறந்து, பேனாவை எடுத்து என்னிடம் நீட்டினாள். இப்படித்தான் நிகழ்ந்தது எங்களின் முதல் சந்திப்பு. பின் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் பேனாவைக் கேட்பாள். அல்லது, அந்தப் பேனாவைக் கேட்பதற்காகவே பார்ப்பாள். நான் ‘வா, போ’வில் இருந்து வாடி போடி வரைக்கும் வளர்ந்துவிட்டேன். ஆனால் அவள் மரியாதையைக் குறைத்து என்னைப் பெயர் சொல்லிக்கூட அழைத்ததில்லை. எங்கள் கல்லூரி இறுதி நாளும் வந்தது. சாந்தியின் கண்கள் பட்டாம்பூச்சிபோலப் படபடக்க, என் முன் வந்து நின்றாள். அவள் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றுகொண்டு இருந்தாள். வார்த்தைகளைத் தேடுவதைக் கண்கள் காட்டிக் கொடுத்தன. சில வார்த்தைகளை விழுங்குவதை அவள் சங்குக் கழுத்து படம்பிடித்துக் காட்டியது. ஒரு வழியாக வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியங்களாக்கி என்னைப் பார்த்துக் கொட்டிவிட இதழ் திறந்தாள். “இந்தா.. நீ கேட்ட உன் ராசியான பேனா..” என அவளின் கைகளில் திணித்தேன். அவள் கண்கள் சிவக்க ஏதோ சொல்லவந்தாள். செண்பகம் எதுவும் சொல்லாமல் என்னைக் காப்பாற்றினாள் என்பதாலேயே அவளை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளுக்கு அழிரப்பர் வைத்த பென்சில் ஒன்றைப் பரிசளித்தேன். ஒருமுறை அழகான மரப்பேனா ஒன்றை என்னிடம் கொடுத்தாள். அதில் அவள் பெயரை எழுதி முகர்ந்து பார்த்திருக்கிறேன். செண்பக வாசனை அதிலும் வந்தது. அன்று அவர்கள் மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அழுதபடி கை அசைத்தாள். அப்போது அவளின் அப்பா என் அருகில் வந்து, “இந்தப் பேனா எனக்கு ராசியானது. உனக்கு எப்படிக் கிடைத்தது?” எனக் கூறி, பறித்துச் சென்றுவிட்டார். அவள் தன் அப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் கொடுத்திருக்கிறாள் என்பதை என்னால் அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாததுதான் வாழ்க்கை. சாந்தியிடம் அன்று பேனாவைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவே இல்லை. அன்று அவள் கடைசியாகச் சொல்ல வந்த வார்த்தையை இப்போது கொட்டப்போகிறாள் என்பது மட்டும் புரிந்தது. “டேய்… இந்தப் பேனாவாவது உன்கிட்டயே இருக்கட்டும்” என்றாள். நான் அவளையே பார்த்து நின்றுகொண்டிருக்க, நான்கு கண்களிலிருந்தும் நீர் சுரந்தது. அதன் சுவை உப்பா? இனிப்பா?

செவ்வகக் கூண்டு

செவ்வகக் கூண்டு

கவிதை அடைத்து வைக்கத் தோதானசதுர வடிவத் தர்ப்பூசணிகள்தம் இடம் தாண்டிபெட்டியின் மூலைகளைச் சுவாசிக்கஇடம் கேட்டு நச்சரிப்பதில்லை இதய வடிவத் திராட்சைகள்ஏற்கனவே ஏற்றிருந்தகோள வடிவை நீங்கியதில்ஏதொரு பதட்டமுமின்றித்தான்காற்றிலாடுகின்றன குண்டுக் கத்தரிக்காய்கள்புடலங்காயைப் பிரதியெடுத்ததில்குட்டையாகிப் போனதுகல் கட்டும் காய் மென்தோல் தக்காளிகள்வன்முறைக்கு மாறிவெகுநாட்களாயிற்று மெழுகிட்ட ஆப்பிள்ஆறு மாதமாய் அழுகாமலிருப்பது கண்டுகடித்துப் பார்க்கும் ஆசைகடவுளுக்கே வருகிறது ஒட்டுருவாக்கத்தில்குயில் முட்டையெனஆரஞ்சையும் ஏற்கிறதுமாமரம் வயலோரங்களில் குலுங்கிக் கிடந்தநினைவு மறந்துபாக்கெட்டுகளில் தஞ்சமடையத்தயாராகவே இருக்கின்றனஹைபிரிட்டில் சுட்ட பழங்கள் வெட்டி ஒட்டும் கலையில் தேறியசிற்றினம் ஒன்றின்மொத்த வாழ்வையும்செவ்வகத்துக்குள் அடக்கிச்சிரிக்கிறது இயற்கை

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

கவிதை நீள் சன்மார்க்க வெண் தந்தம்வண்ணத்துப் பூச்சிகளுக்குவளைந்துகொடுப்பதைக் கண்டுஉங்கள் எண்ணப் புழுக்களால்துளையிட்டு நுழைய முயல்கிறீர்கள் நெருப்பைத் துளையிடபுழுக்களால் முடியுமோ? சன்மார்க்கத்தைத் துளையிட்டுசனாதன இசை கேட்க விரும்பும்உங்கள் செவிகளால்சத்ய தரும சாலையின்சடசடப்பைத் தாங்க இயலுமா? உங்கள் அகப் பைகுப்பைகளை வாரக்கூடியதுதரும சாலையின் அகப்பைஎளியோரின் தவிப்பைத் தீர்க்கக் கூடியது இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்களெனமீண்டும் சொல்கிறோம் மட்கும் மட்கா என்றஇரண்டுள்ளும் அடங்காதவற்றைமறுசுழற்சி செய்ய முயன்றுசூழலுக்கு ஏன் சீர்கேடு செய்கிறீர்கள்? ஞானசபைக்கு வந்துநாடக சபையின் வசனமானஇந்திரசபை போலிருக்கிறது என்கிறீர்கள்இல்லைஇங்கே கற்பகத் தரு ஏதுமில்லை தனித்திரு இருக்கிறதுஉங்களிடமிருந்து தனித்திருக்கிறோம் விழித்திரு இருக்கிறதுஉங்களிடம் விழிப்போடிருக்கிறோம் பசித்திரு இருக்கிறதுஉங்கள் ஆறிப்போன ஆரியச் சுவை விலக்கிபகுத்தறிவுப் பசியோடிருக்கிறோம்

அவன் என்னைப் போலவே இருப்பான்

அவன் என்னைப் போலவே இருப்பான்

சிறுகதை கம்பீரமான சிவப்புக் கட்டடத்தில் பரபரப்பான திருவல்லிக்கேணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான மகப்பேறு மருத்துவமனை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை. இப்போதும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் கோஷா ஆஸ்பிடல் என்றால் சின்ன குழந்தைகூட வழி சொல்லிவிடும். கிட்டத்தட்ட முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இது ஓய்வின்றி இயங்கிவருகிறது. அன்றைய மெட்ராஸில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் இங்கே பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இது அரசு இலவச மருத்துவமனையாக இருப்பதால் இன்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதம் எனலாம். அந்த கம்பீரமான சிவப்புக் கட்டடத்திற்கு வெளியே உள்ள மேடைகளிலும் பெஞ்சுகளிலும் இரவும் பகலும் தங்கள் பெண்களைப் பிரசவத்திற்காக அனுமதித்துவிட்டு நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்று தங்கள் குலதெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். அங்கே பார்வையாளர்கள் நேரம் என்பது காலை ஏழிலிருந்து ஒன்பது, மாலை நான்கிலிருந்து ஆறு என்பது பெயருக்குத்தான். வாசலில் இருக்கும் வாட்ச்மேனிடம் காசைத் திணித்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்று பார்த்து வருபவர்களும் உண்டு. இரவில் யாரும் பேஷண்டுடன் தங்குவதற்கு அனுமதியில்லை. ஆனாலும் வார்டுகளை ஒட்டியுள்ள வராண்டாக்களில் வார்டு ஆயாக்களை கவனித்துவிட்டு ஒளிந்து அமர்ந்து தங்கள் பெண்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் பெண்மணிகளைக் காணலாம்,. அவர்களை விரட்டுவதுபோல் விரட்டிக் காசு வாங்கும் ஆயாக்கள் சரியாக மாலை ஆறு மணிக்கெல்லாம் கையில் ஒரு சிறு கம்பினால் கட்டில்களைத் தட்டிக்கொண்டு வந்து “யாரும்மா அங்கே..? டைம் முட்ஞ்ச்சி போச்சி.. போ..போ.. அட இன்னாமா.. நா சொல்லிகினே கீறேன்.. குந்திகினே கீறே.. டாக்டரு வந்தா நா தான் மாட்டிக்கிவேன். போ..போ..” என்று கூவிக்கொண்டே வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வராண்டா சுவருக்குப் பின்னால் ஒளியும் தாய்மார்களின் அருகில் வந்து, “ஐய.. நீ இங்க ஒளிச்சிகின்னா.. இன்னா.. எனக்குத் தெலியாதா?  எம்மாங் காலமா ஆஸ்பத்திரில குப்பை கொட்டிக்கினு கீறேன்.. கெளம்பு கெளம்பு..” என்றதும் அவர்கள், “எம்மா எம்மா.. பச்சப் புள்ளம்மா.. கொஞ்சம் இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும்..” என்று கெஞ்சிக்கொண்டே தங்கள் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் காசை எடுப்பார்கள். அதைப் பார்த்ததும் “சரி சரி.. பச்சப் புள்ளனு சொல்ற.. பாவமாதான் கீது.. இன்னிக்கி ஒரு தபா மட்டும்தான்.. ராத்திரி டாக்டர் ரவுன்ஸ் வரப்போ கக்கூசுல போயீ டபாய்ஞ்சுக்கோ.. இன்னா பிரிதா..? என்ன மாட்டி வுட்றாத..” என்று சொல்லிவிட்டு 50 ரூபாயைப் பிடிங்கிக்கொண்டு போய்விடும். டெலிவரி வார்டின் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. ‘டப் டப்’பென்று டியூப் லைட்டுகளை நிறுத்திக்கொண்டே சென்றாள் ஒரு ஆயா. இப்போது மெலிதான நைட் லேம்புகள் மட்டும் ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தன. ஸ்டாப் நர்ஸ் ஒவ்வொரு பெட்டுக்கும் சென்று அதில் மாட்டியிருந்த சீட்டைப் பார்த்து மாத்திரைகளை கொடுத்துக்கொண்டே சென்றாள். “ம்ம்.. மாத்திரையெல்லாம் ஒழுங்கா போட்டுகிட்டு படுங்க” என்று சொன்னபடி நகர்ந்தாள். அந்த வார்டின் கடைசி பெட்டின் அருகில் வந்தவுடன், “ஏம்மா உன் பேரு தானே செவப்பி..” என்றாள். தன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையை அரவணைத்தபடி படுத்திருந்த செவப்பி, “ஆங்.. நா தான் சிஸ்டர்..” என்றதும் “என்ன நீ.. சரியா மாத்திரை போட மாட்டேறேன்னு டே டியூட்டி நர்ஸ் சொல்லிட்டுப் போறா.. இத பாரு.. மாத்திரைதான் குடுக்க முடியும். அதை நீதான் ஒழுங்கா போட்டுக்கணும். அப்பதான் உனக்கும் நல்லது உன் பிள்ளைக்கும் நல்லது.. தெரியுதா? இந்தா மாத்திரை.. எழுந்திரு.. சாப்பிட்டியா . மாத்திரையை என் முன்னாடியே போடு.. உன்னை நம்ப முடியாது” என்று சொல்லிக் கொண்டே மாத்திரையை அவள் கையில் கொடுத்தாள். அதை எழுந்து உட்கார்ந்து வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தவள், சரிந்து தன் குழந்தையின் அருகில் ஒருக்களித்துப் படுத்தாள். அப்போது வார்டின் சுவர்க் கடிகாரம் ‘டங்க்.. டங்க்.. டங்’கென்று பத்து முறை அடித்து ஓய்ந்தது. அந்தக் கடிகாரத்தின் சத்தம் அவளின் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ஆறு வருடங்களுக்கு முன்னால் சாந்தோம் தேவாலயத்தின் மணி இதேபோல் ஒலிக்க, சர்ச்சின் இசைக் குழுவினர் இசைக்க, அந்த இசை மனத்திலும் உடலிலும் ஒருவித சிலிர்ப்பைக் கூட்ட, நீலப் பட்டுடுத்தி தலையில் வெள்ளை ரீத்தும் மெல்லிய பூக்கள் கோர்த்தது போல் கிரீடமும் அணிந்து, காற்றில் மிதப்பது போல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வந்து, மைக்கேல் ராஜூவோடு ஃபாதர் செபஸ்டியன் முன் சென்று மண்டியிட்ட காட்சி நெஞ்சில் நிழலாடியது. ‘ஃபாதர் செபஸ்டியன் இருவர் கைகளையும் இணைத்து வைத்துப் புனித நீர் தெளித்து, “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்று தன் கம்பீரமான குரலில் சொல்லவும், அந்த வார்த்தைகள் சாந்தோம் தேவாலயச் சுவரின் எல்லாப் பக்கங்களிலும் பட்டு எதிரொலித்ததே அது என்னவாயிற்று?!’ என்று நினைத்தவள் கண்களில் வெளிப்பட்ட கண்ணீர் அவள் காதுகளைத் தாண்டித் தலையணையை நனைத்தது. செவப்பி என்று அவளுக்குப் பெயர் வைத்திருந்தாலும் அவள் சற்றே கறுத்த நிறம்தான். ஆனால் வடித்து வைத்த சிலைபோல் அழகான முகமும் மினுமினுப்புக் கூடிய வடிவமும் கொண்டவள். மைக்கேல் ராஜூவும் அப்படியொன்றும் வெளுத்த நிறமுடையவன் இல்லைதான். ஆனால் செவப்பியைவிடச் சற்று வெளுத்த தோலுடன், கடலில் வலைவீசி வீசி இறுகிய கட்டான தேகம் கொண்டவன். அவன் தீவிர எம்,ஜி,ஆர் ரசிகன் என்பதால் எப்போதும் கலர்கலராகப் பூப்போட்ட மினுமினுவென்ற முழுக்கைச் சட்டை போட்டு, அதைத் தன் புடைத்த புஜங்கள் தெரியுமாறு சுருட்டி விட்டுக்கொள்வான். வாத்தியார் ரசிகனாக இருந்துகொண்டு பீடி சிகரெட்டு, குடிப்பழக்கம் எல்லாம் கூடாது என்ற கொள்கை உடையவன். அவனுக்கு அப்பா இல்லை, அம்மா ஆரோக்கிய மேரி மட்டும்தான். மைக்கேலைக் கரம்பிடித்து, சாந்தோம் சர்ச்சின் பின்னால் இருந்த மீனவக் குப்பத்தில் இருக்கும் பழைய ஹவுசிங் போர்டின் மூன்றாவது தளத்தில உள்ள அந்தச் சிறிய வீட்டிற்குக் குடிவந்த பிறகுதான் ‘வாழ்க்கை இத்தனை இனிமையானதா!’ என்று தெரிந்துகொண்டாள் செவப்பி. மைக்கேலும் அவளை ஒருநாளும் கோபமாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. மைக்கேலுக்கு அவள் மேல் கொள்ளை ஆசை. ஆரோக்கிய மேரியும் ஆரம்பத்தில் அவளை மிகவும் அன்பாகத்தான் பார்த்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அக்கம்பக்கத்தார், “இன்னா ஆரோக்கியம்.. உம்புள்ளைக்கி நல்லா வஜ்சிரம்மாட்டம் வெளுப்பா மருமவ கொண்டாருவேனு பாத்தா.. கறுத்த வௌவாலு மாதிரி புட்சாந்து கீறியே..” என்று சீண்டுவார்கள். உடனே ஆரோக்கியத்துக்குக் கோவம் மூக்குக்கு மேல் வந்துவிடும். “அடியேய் செவத்த சிறுக்கிய.. செவப்ப்பு என் காலு பாதத்தில கீதுடி.. என் மருமவ கருப்பு வுங்க கண்ணில கீதுடி.. போங்கடி போக்கத்தவகளே.. போயி வேலையைப் பாருங்கடி.. வந்துட்டாளுங்க என் மருமவள பத்தி பேச.. ஆய்ஞ்சு பூடுவேன் ஆய்ஞ்சி..” என்று வாயடிப்பாள். அப்படி இருந்தவள், ஆண்டுகள் இரண்டு மூன்று நான்கு என்று ஓடியும் செவப்பி உண்டாகாமல் இருக்க, “ஏசப்பா.. இது வுனுக்கே நாயமா கீதா.. நேத்து கண்ணாலம் கட்டிக்கிட்ட சிறுக்கியெல்லாம் கையில ஒன்னு வவுத்துல ஒன்னுனு இஸ்த்துகினு திரியுதுங்க.. எம் மவனுக்கு இன்னாயா கொறச்சலு..? பாவி மவ வவுத்துல ஒரு புழு பூச்சி இல்லியே.. ஏசப்பா.. நீ எப்பதான் கண்ணு தொறப்பியோ..” என்று வாசற்படியில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டாள். “அடியே உன் வவுத்துல இன்னாடி கல்ல கட்டி வைச்சினுகிரியா..? அல்லாரும் இன்னா இன்னுமா உம் மருமவ உண்டாகலனு கேக்கறப்போ அவுமானமா கீதுடி” என்று செவப்பியிடமும் சிடுசிடுப்பாள். ஆனால் அதற்காக ஒருநாள்கூட ஆரோக்கியத்தை எதிர்த்து ஒரு சொல் சொல்லமாட்டாள் செவப்பி. “இன்னாதான் சொல்றுதுனு தெலியல.. எம்மாந் திட்னாலும் கம்முனு பூட்ற.. வேற எவளா இருந்தா இன்னேரம் பிலுபிலுனு புட்சிக்குவாலுங்க.. சட்டிய தூக்கினு தனியா பூட்றனுவாளுங்க..  ஏசப்பா ஏந்தான் வுனுக்கு ஒரு புள்ளைய குடுக்காத சோதிக்கிறாரோ.. தெலியலயே” என்றும் சொல்லுவாள். அதற்கும் மௌனமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, “அயித்த வா.. கொயம்பு கொச்சிட்சி.. சூடா துன்னு வா” என்று கூப்பிட்டு தட்டில் சோற்றைப் போடும்போது அவள் முகத்தைப் பார்த்து அப்படியே கண் கலங்குவாள் ஆரோக்கியம். செவப்பிக்கு மட்டும் பிள்ளை பெற்றுகொள்ள ஆசையில்லையா என்ன? தினமும் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு சர்ச்சுக்குப் போய் தோமையர் கல்லறையில் மண்டியிட்டு ‘ஒரு புள்ளையைக் கொடு’ என்று மனத்தாலேயே மன்றாடுவாள். அப்படித்தான் ஒருநாள் கல்லறையில் கண்ணை மூடிக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் இருந்துவிட்டாள். அதற்குள் இருட்டிவிட்டது. ‘இவ்வளவு நேரமாகியும் செவப்பி வரலையே..’ என்று கலவரப்பட்ட ஆரோக்கியம், “அடியே சுந்திரி… என் மருமவள பாத்தியா? அடேய் அந்தோணி மவனே.. என் மருமவள காணோம்டா.. ஓடிப்போய் மைக்கேல கூட்டியாடா.. ஐயோ நா என்னா பண்ணுவேன்..” என்று ஒப்பாரி வைத்து குப்பத்தையே கலக்கிவிட்டாள். இவள் போட்ட கூச்சலில் ஆளுக்கொரு பக்கமாக ஓடி செவப்பியைத் தேட ஆரம்பித்தார்கள். சிலர் சர்ச்சுக்கும் ஓடிப்போய்த் தேடினார்கள். ஆனால் யாருக்கும் பின்னால் இருக்கும் கல்லறைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. சேதி கேட்டு ஓடிவந்த மைக்கேலுக்கு, தன் வீட்டின் முன்னால் கூடியிருந்த கும்பலைப் பார்த்ததும் அடிவயிறு கலங்கியது. கும்பலை விலக்கிக்கொண்டு வாசல்படியில் காலை விரித்துக்கொண்டு தலைவிரி கோலமாக அரற்றிக்கொண்டிருந்த ஆரோக்கியத்திடம், “எம்மா.. இன்னாமா ஆச்சி..? ஏம்மா கூவிகினு கீற..?” என்றவனைப் பார்த்து “ஐயோ நா என்னத்த சொல்லுவன்.. செவப்பி எங்கியோ பூட்டாடா.. எல்லா எட்திலயும் தேடிட்டோம்.. எங்கிமே இல்லடா.. ஏசப்பா நீ தாம்ப்பா அவள கண்ணுல காட்டணும்” என்று ஓவென்று புலம்பி அழுதாள். “ஆமா.. அல்லாம் உன்னாலதான்.. எப்பப்பாரு புள்ள பெத்துக் குடுக்கலனு அவள திட்டிக்கினே இருந்தா.. எத்தினி நாளிக்கித்தான் பொறுத்துப்பா.. இப்ப எங்கியோ பூட்டா.. போம்மா” என்றவன் மூளையில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. ஃபாதர் செபஸ்டியனைப் பார்த்தால் ஏதாவது செய்வார் என்ற எண்ணத்தில் வேகமாக சர்ச்சை நோக்கி ஓடினான். ஃபாதர் செபஸ்டியன், அப்போது கல்லறை வாசல் விட்டிறங்கி சர்ச்சை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர் முன் மண்டியிட்டு அவர் கையைப் பிடித்துக்கொண்டு, “ஃபாதர்.. ஃபாதர்.. எஞ் செவப்பி.. எஞ் செவி..” என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் தேம்பினான். அவன் கைகளிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட ஃபாதர் செபஸ்டியன், சிரித்துக்கொண்டே “மைக்கேல்.. என்ன ஆச்சு உனக்கு..? அழாம சொல்லு” என்றார். “செவப்பியைக் காணோம் ஃபாதர்..” என்றவனைப் பார்த்து, அவன் தோளைப் பிடித்து எழுப்பி, “மைக்கேல், கர்த்தர்

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு

உள்ளங்கையின் இதயரேகையைவிரல்முனைகள் நான்கும் அழுத்தஒலிவாங்கிமுன் விரைப்புடன்பாடிக்கொண்டிருக்கும் தேசியகீதத்தின்ஏதோவொரு ஏகார ஓசையில்வந்துத் தொலைக்கும்கொட்டாவியை எப்படித் தடுப்பது?! சுதேசி கோஷத்துடன்பரிந்துரைக்கப்பட்டதால்251 ரூபாய் செலுத்திவிட்டுக் காத்திருக்கும்எனக்கான செல்போன்தயாராகிவிட்டிருக்குமா?! பேரிடரில் பிழைத்தவர்கள்அளித்த கொடையில்பிழைப்பு நடத்தியவர் யாரோ?! உலகப் பணக்காரர்களின்வரிசைக் கோடுகளைபரோட்டோ சப்ளையர் கோடுகளாக்கிவிளையாடும் கபடிக் குழுவில்எனக்கும் இடம் கிடைக்குமா?! சற்றுப் பொறுங்கள் தேசத்துரோகச் சட்டம் பாயும்முன்ஆளுங்கட்சியில்ஐக்கியமாகிவிடுகிறேன்

முடிந்தது

முடிந்தது

கவிதை நெஞ்சைத் திருகிய வலியைசொல்லக்கூட நேரமில்லாதுநொடியில் முடிந்து போனான்ஒரு தகப்பன்சாமி அழுதழுது வற்றிப்போயிருந்தாள்தாய் அவள் மடிவிட்டு இறங்காதுஅழுகைகளை வேடிக்கை செய்துகொண்டிருந்தனசேய்களிரண்டு அணைந்து போகாதுஅழுகையைப் பற்றவைத்துக்கொண்டேயிருந்ததுகூட்டம் அவனின் மிச்சமெனஇனி இருக்கப்போகிறவர்களுக்காகத்தொழுதுவிட்டு வந்தேன்நான் அப்போதைக்குஅவரவர்க்குமுடிந்தது

இரைச்சல்

இரைச்சல்

சிறுகதை நரசிங்கபுரத்தின் கடைக்கோடி மூலையில் இருந்தது சேவல் வீடு. ஊர் ஒன்றும் பெரிதானது இல்லை. ஆள் இல்லாத வீடுகளையும் கணக்கில் கொண்டால் சரியாக நூற்றி இருபது இருக்கலாம். வேலைக்கு என்றும்  பஞ்சம் பிழைக்க என்றும் ஒற்றைப் பெண் குழந்தைகள் பின்னால் வாழப்போனவர்கள் என்றும் மனிதர்கள் ஊரைப்போல் நிற்காமல் நகர்ந்துவிட்டார்கள். சேவலுக்கும் பந்தங்கள் உண்டு. ஆனால் மனுசன் வாய் சும்மா இருக்காது. இரண்டொரு உறவுகள் நிலைத்திருக்க, பொய்யும் வேசமும் அவசியம் என்பதை வார்த்தை அளவுக்குக்கூட சரி என்று ஏற்றுக்கொள்ளாதவர் அருகில் யார்தான் இருப்பார்கள்? கிழவியைக் காடு சேர்த்ததும் தனிமையைத் துணையாக்கிகொண்டு நாள் கடத்தினார். எப்போதாவது பேச்சுச் சத்தம் கேட்கும். இரண்டு மூன்று தடவை எட்டிப் பார்த்தவர்கள், தனியாகப் பேசிக்கொள்கிறார் என்பதறிந்து விலகிக்கொண்டார்கள். லாடம் கட்டும் மேட்டுப்பட்டித் தாத்தாதான் சேவலின் கூட்டாளி. பொடி டப்பாவை நடுவில் வைத்துவிட்டு இருவரும் குத்துக்கால் போட்டு அமர்ந்து பேசத் தொடங்கினால், அடைக்கோழி ஆகிவிடுவார்கள். லாடக் கயிறு முடி அவிழ்ந்து முன்னாங்கால் எலும்பில் சீனிக் காளை விட்ட அடியில், மேட்டுப்பட்டித் தாத்தாவும் இப்போதால்லாம் வருவதில்லை.. எலும்பு முறிவுக் கட்டோடு இரண்டு தரம் காலை இழுத்துக்கொண்டு வந்தவர்தான். பிள்ளைக்கு வாக்கப்பட்டுக் கஞ்சி குடிப்பவர் வேறென்ன செய்யமுடியும்? நடையை நிறுத்திக்கொண்டு அடங்கிப்போனார். சேவலின் கஞ்சிக்கு மூனு குறுக்கு கிணத்து வயக்காடு இருந்தது. வழக்கமான சித்திரை வெயிலைவிட, முன்னதாகப் பங்குனி வெயில் காய்ச்சி எடுத்தது. மூனாவது வாரத் திருவிழாவிற்கு இளவட்டங்கள் ஊர் வசூலுக்குக் கிளம்பினர்கள். வழக்கமான வசூல்தான். பெரிய தலைக்கு ஆயிரம் என்றால் சின்ன தலைக்கு நூறு வரையில்கூட இறங்கும். ஆனால் வசூல் கேட்காமல் வரக்கூடாது என்பது சம்பிராதாயம். ‘சேவல் வீட்டுக்குப் போனீங்களா?’ என்ற கேள்விக்கு, ‘அவரு என்னத்த குடுப்பாரு?’ என்பதுதான் பதிலாக வந்தது. “என்னத்தையும் குடுக்குறாரு.. இல்லைங்குறாரு… நீ போனயாடா.?” “இல்ல மாமா”  என்றான் வண்டி முத்தையா மகன்.  “கூறு கெட்டவனே.. நாள பின்ன ஊரு மந்தையில யாருடா வசவு வாங்குறது..? போங்கடா.. கேட்டுட்டு வாங்க..” என்று அனுப்பிவைத்தார் நல்லசிவம். வண்டிப் பாதையில் இருந்து இறங்கி ஒத்தயடிப் பாதைக்கு வந்ததும் அவ்வளவு அமைதி. “பெருசே…” என்ற வார்த்தைக்கு எந்த பதிலும் இல்லாததால், தட்டியை விலக்கிப் பார்த்தான். மலையைச் சுற்றிய காட்டருவி போல வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு கட்டிலில் கிடந்தார். திரும்ப ஒருமுறை “தாத்தே…” என்றவனின் குரல் அடங்கும் முன் விருட்டென்று எழுந்தவர், தலைக்கு வைத்த துண்டை எடுத்து அவன் முகத்தில் எறிந்தார். “எடுபட்ட பயலே.. எதுக்கு கத்துற..? செத்தா போய்ட்டேன்…” என்றவாறு எழுந்தார். வரி கேட்கப் போன வண்டி முத்தையாவின் மகன் வெலவெலத்துப் போனான். திரும்பிவிடலாம் என்ற எண்ணம் வந்தது. வரி கேட்காமல் போனால் நாட்டாமை பழைய பாட்டு திரும்பப் பாடுவார். ஊரு சோலியில் தலையிடுவது கொள்ளிக்கட்டையில் மண்டையைச் சொரிவது போலத்தான். கிழம் வாயைத் திறப்பதற்கு முன்னால், “’முத்தையா பையன் வந்துருக்கேன்.. கோவில் கொடைக்கு வசூல் கேட்டாக..” “நீ பெரிய மசுரு.. வந்துட்ட வசூல் பண்ண.. என்னைக்கிடா கொடை? சித்திரை பவுர்ணமிக்கு இன்னும் நாள் இருக்குள்ள… அதுக்குல என்ன.?” “அப்போ… நா வேணா போய்ட்டு செத்த நாள் கழிச்சி வர்றேன்..” “ஆமாடா.. முந்நூறு மூட்டை நெல் இருக்கு.. நீ செத்த நாள் கழிச்சி வந்து வண்டி ஏத்து..” மௌனமாக நின்றான். “சரி.. அந்த கோளாய் சத்தம் இந்த வருசமும் உண்டா..?” குழாய் ரேடியோவைத்தான் சொல்கிறார் என்று முத்தையாவின் மகனுக்கு விளங்கியது. போன வருசம் கொடை நடக்கவில்லை. அதுக்கு முந்தின வருசக் கொடையில் சேவல்தான் ஊர் வாயில் நிறைந்திருந்தார். வழக்கம்போல லிங்கம் சீரியலும் ரேடியோவும் கட்ட, அதில் ஒன்று சேவல் வீட்டருகில் இருந்த கரண்டு கம்பத்திலிருந்து வாசலைப் பார்த்துப் பாடியது. வழக்கமான இடமில்லை என்றாலும் அரசாங்கம் ஒரு கம்பத்தை மிச்சப்படடுத்த, லிங்கம் ஒரு குழாய் ரேடியோ வசூலை விட மனமில்லாமல் சேவல் வீட்டுக் கம்பத்தில் கட்டிவிட்டான். ‘விநாயகனே..’ என்ற முதல் பாடல் முடியும் முன்னால் லிங்கத்தை சரவெடியின் நடுவில் நிறுத்தி வெடித்துகொண்டிருந்தார் சேவல். கூட்டத்தில் இருந்த விடலை ஒன்று, “உம்ம சத்தத்தை விடவா அந்த ரேடியா சத்தம் இருக்கப்போகுது?” என்று கேட்ட நொடியில் விறுவிறுவென்று வீடு பார்த்துப் போனவர் சாணியைக் கரைத்துக் குழாய் ரேடியோவில் விசிறி நிறுத்திவிட்டார். ஒருவழியாக லிங்கத்தைச் சமாதானப்படுத்தி திருவிழாச் செலவில் மிச்சம் இருந்ததைத் தந்தனுப்பினர்கள். “ஏ….. அதே.. அதெல்லாம் இருக்கு.. ஆனா இங்கன கட்ட மாட்டாக… போதுமா..?” “அப்போ நாளைக்கு வந்து உன் வசூலை வாங்கிக்கோ…” என்று முத்தையாவின் மகனை அனுப்பிவைத்தார். வம்பிழுத்துப் பழகிய இளவட்டங்களுக்கு விவகாரமான விசயங்கள்தான் முதலில் ஞாபகம் வரும். சேவல் விஷயமும் அப்படித்தான் ஞாபகம் வந்தது. கூடவே அதற்கான திட்டங்களையும் தயார் செய்தார்கள். ‘அம்மன் கண் திறக்கும் நடுச்சாமத்தில் மட்டும் சேவல் வீட்டருகில் ரேடியோவைக் கட்டி அலறவிட வேண்டும். விடியற் காலையில எல்லாரும் பொங்கல் வைக்க மைதானத்தில இருக்கும்போது கழட்டிவிடலாம்’ என்பது யோசனை. இதில் வண்டி முத்தையாவின் மகனுக்குத்தான் அதிகப் பங்கிருந்தது. அதீத குடும்ப உறவுகளுக்குள்ளாக வாழ்ந்து பழக்கப்பட்ட மனிதர்தான் சேவல். ஒரே மகள் தன்னுடைய பங்குதான் முக்கியம் என்று இரட்டைக் காளைகளையும் ஊர் மந்தைக் காட்டையும் எழுதி வாங்கும்போதுகூட மனிதர் கலங்கவில்லை. சாவு முதல் என்று அப்பா வைத்திருந்த நிலம், அவள் நிலம் ஆகும் வரை விடக்கூடாது என்று எல்லாக் கூத்தையும் நடத்திப் பார்த்தாள். ஒன்றும் பலிக்காமல் ஊர் மந்தைக்கு விவகாரம் வந்தபோது சேவல் பேசிய வார்த்தை இதுதான். “வேலை பார்த்த பண்ணையில அவன் வீட்டுச் சொத்தா இருந்த உங்க அம்மையை விரும்பிக் கட்டும்போது எங்களுக்குன்னு ஒரு கன்னுக்குட்டிகூட அவனுங்க அவுக்கல. அதுமாதிரி உன்ன அனுப்பக் கூடாதுன்னுதான் உனக்குப் பங்கு விரிச்சது. இந்தச் சொத்து இல்ல.. நீ வச்சிருக்கிறதும் அவ வேர்வைலயும் என் உழைப்புலயும் வந்ததுதான். நம்ம புள்ளதானன்னு கை ஏந்தித் திங்கிறதுக்கு நான் பழக்கப்படல.. எனக்கு அப்புறமா இந்த மசுரு யார்க்கு வேணாலும் போகட்டும்” என்று சொல்லிவிட்டு வீடு அடைந்தவர், எப்போதாவது வரும் சத்தத்தோடு உலகைச் சுருக்கிக்கொண்டார். வசூல் தந்த நாளைக்கூட மறந்து போனார் சேவல். திடல் பக்கம் கொட்டுச் சத்தம் கேட்பதை மட்டும் காதை ஒருபக்கமாகச் சாய்த்து உறுதிப்படுத்திக்கொண்டார், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல. இரண்டாம் நாள் இரவுக்கு ஊரே திடலில் இருந்தபோது இளவட்டங்களின் வேலை தொடங்கியது. முளைப்பாரி முடிந்த இரவுதான் இளசுகளுக்கான நேரம். தன்னுடைய சத்தமே பிடிக்காத சேவலுக்கு ஊர்ச் சத்தம் எப்படி ஒத்துப்போகும்? கயிற்றுக் கட்டிலை வீட்டுக்குள் தூக்கிப் போட்டுப் படுத்துக்கொண்டார். கம்பத்தில் இரவில் ஒலித்த ரேடியோ சத்தம் அவரைக் கோபமடையச் செய்யும் என்றுதான் நினைத்தர்கள். ஆனால் எல்லாச் சத்தமும் இரைச்சலாக மாறி ஒருவரை அடையும்போது கொன்றுவிடும் வல்லமை உடையது என்று யாரும் அறியவில்லை. சேவல் அதை உணர்த்திவிட்டு செத்துக்கிடந்தர். ‘கொடை நடக்குறப்பவா சாவு விழணும்..?’ என்று பேசிக்கொண்டார்கள். ஊரே அமைதியாக இருந்தது, சேவலுக்காக.

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

இன்று சர்வதேச யோகா தினம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதங்கள் ஏதுமற்ற பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகக் கலை, உடல் ஆரோக்கியத்திற்கான கருவியாகப் பயன்பட்டு வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட அந்தக் கலையை, பின்னாட்களில் வேத மதத்தினர் தங்களதாக்கிக்கொண்டதால், பிற மதத்தினர் அக்கலையை மதச்சார்பு கொண்டதாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இறை மறுப்பாளர்களும்கூட தங்கள் உடல்நலம் பேண யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யோகப் பயிற்சிகள் செய்யும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய பிரதமரின் முன்னெடுப்பு இதில் உள்ளது என்பதாலேயே முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வோரின் ஏளனத்திற்கு யோகக் கலை ஆளாகியுள்ளது. இதற்கிடையே யோகக்கலை தமிழர்களின் சொத்து என்று வாதிடுவோரும் உண்டு. யோகக் கலை மதச் சார்பு கொண்டதா, குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே  அது சொந்தமானதா, பிற மதத்தினர் யோகப் பயிற்சிகள் செய்ய மத ரீதியான தடைகள் உண்டா, யோகக் கலையின் பின்னணி என்ன போன்ற பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னை புழல் அருகிலுள்ள விநாயகபுரத்தில் யோகப் பயிற்சி மையம் நடத்திவரும் யோக ரத்னா சி. முத்துசாமி. அரியலூர் மாவட்டம் இலந்தங்குழி கிராமத்தில் பிறந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகச் சென்னைக்கு வந்த இவர், கடந்த 18 ஆண்டுகளாக சென்னையின் புறநகர்ப் பகுதியான விநாயகபுரம் VMK நகரில் M. P. யோகா மையம் என்ற யோகப் பயிற்சி மையத்தை நிறுவி யோகக்கலை பயிற்றுவித்து வருகிறார். யோகக் கலையில் முதுநிலை அறிவியல் பட்டமும் யோகா சிகிச்சை முறையில் முதுநிலைப் பட்டயமும் பெற்றுள்ளார். இவர் மட்டுமல்லாது இவரது இணையர் பொற்கொடி, மகன்கள் அருண் ராஜா, அசோக் ராஜா ஆகியோரும் யோகக் கலையை முறையாகப் பயின்று மக்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றனர். இனி, யோகக் கலை குறித்த நம் கேள்விகளும் யோக ரத்னா முத்துசாமி அவர்களின் பதில்களும்: யோகக் கலை எப்போது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? யோகக் கலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழமையான கலையாகும். பதஞ்சலி முனிவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யோகக் கலை, தமிழகத்தில் சிறந்து விளங்கிய 18 சித்தர்களில் ஒருவரான திருமூலர் எழுதிய திருமூலம் என்ற நூல் வழியாக நாம் அறியக் கிடைக்கிறது. அஷ்டாங்க யோகம் ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்ததாக பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது. அதையே நாங்கள் எங்கள் பயிற்சி மையத்தில் பின்பற்றி வருகிறோம். யோகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா? யோகா மதம் சார்ந்ததா? உடலினை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தக் கலை. முந்தைய காலங்களில் ஆன்மிகம் மற்றும் மதச்சார்புகள் இந்தக் கலையோடு இணைந்திருந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட காலத்திலும்கூட அது இருந்தது. ஆனால் தற்காலத்தில் அவை பெரும்பாலும் களையப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகங்களிலேயே யோகக் கலைக்கான படிப்புகள் வந்துவிட்டன. எங்கள் பயிற்சி மையத்தில் அத்தகைய சார்பு நிலைகள் எதுவும் கிடையாது. எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். யோகா கற்றுக்கொள்ள உணவுக் கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா? குறிப்பாக புலால் உணவுக்குத் தடை உள்ளதா? எந்தவிதமான உணவுக்கும் தடை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு. எனவே எந்த உணவாக இருந்தாலும் அளவோடும் சரியான நேரத்துக்கும் எடுத்துக்கொள்ளும்படி மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம். சூரிய நமஸ்காரம் போன்றவை வழிபாட்டு முறைகள்தானே? அதிகாலைப் பயிற்சி உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் என்பதால், பண்டைக் காலத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்துப் பயிற்சியை உருவாக்கி இருக்கலாம். பிற்காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது மந்திரங்களையும் சிலர் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் பயிற்சி மையத்தில் மந்திரம் சொல்லித் தருவதுமில்லை. அது அவசியமும் இல்லை. 12 நிலைகளையும் எண்களில் குறிப்பிட்டு அந்தந்த நிலைக்கான பயன்களைச் சொல்லியே கற்றுத் தருகிறோம். நீங்கள் யோகா மையம் தொடங்க குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா? ஆம். நான் லாரி ட்ராஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்துவந்தேன். மூட்டு வலி காரணமாக வண்டி மேலே ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் எதுவும் நிரந்தரத் தீர்வாக அமையவில்லை. வேலை போய்விடும் என்ற நிலையில் என் உடல்நிலை இருந்தது. அந்த நேரத்தில்தான் எனது ஆசான் முனைவர் ஆசன ஆண்டியப்பன் அவர்களின் விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். யோகாவில் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் என்று இருந்தது. தொடக்கத்தில் யோகப் பயிற்சிக்குப் போகும்போது படி ஏற முடியாமல் சிரமப்பட்ட நான், இரண்டே மாதத்தில் வலி குறைந்து உற்சாகமாக ஆகிவிட்டேன். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்குக் கிடைத்த நிம்மதி எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்று எனக்குள் எழுந்த சிந்தனையின் விளைவுதான் இந்த மையம். எத்தனை ஆண்டுகளாக யோகா செய்கிறீர்கள்? இந்த மையத்தை எப்போது தொடங்கினீர்கள்? 2000-ஆவது ஆண்டில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் யோகக்கலையில் டிப்ளமோ முடித்தேன். அதைத் தொடர்ந்து நானும் என் மனைவியும் பட்டப் படிப்பை முடித்து 2005இல் மையம் தொடங்கினோம். எங்கள் மகன்களும் எங்களோடு இணைந்துகொண்டார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதில் ஆர்வம் வந்தது எப்படி? நான் மூட்டு வலியில் கஷ்டப்பட்டதையும் யோகா கற்றுக்கொண்டு அதைத் தொடர்ந்து பின்பற்றும்போது நான் சரியாகி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்து, அவர்களும் ஆர்வத்தோடு இணைந்து கற்றுக்கொண்டார்கள். எந்த ஒரு நடைமுறையைத் தொடங்கினாலும் ஏதாவது ஒரு தடங்கல் வரும். உங்களுக்கு ஏதேனும் தடங்கல் வந்ததா? எங்களுக்கு அதைப்போல எந்தத் தடையும் வரவில்லை. மக்கள் ஆர்வத்தோடுதான் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அழைத்து வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. உங்கள் பயிற்சி அனுபவத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதாவது? நிறைய உள்ளது. 2007இல் ஒரு ஆசிரியை மெனோபாஸ் பிரச்சனையால் அதிகமான உதிரப்போக்கின் காரணமாக வகுப்பில் நின்று பாடம் எடுக்க முடியாத நிலையில் பயிற்சிக்கு வந்தார். முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கிய நான்கு ஐந்து மாதங்களில் பிரச்சினை நீங்கியது. ‘நீங்கதான் என் தெய்வம்’ என்று அவர் நெகிழ்ச்சியாகச் சொன்னபோதுதான் நான் யோகா பயிற்றுவித்ததின் முழுமையை நானே உணர்ந்தேன். அடுத்து, தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்ட ஒரு இளம்பெண் பயிற்சியில் சேர்ந்தார். தொடர் பயிற்சிக்குப் பிறகு தைராய்டு பிரச்சினை நீங்கி திருமணமும் முடிந்தது. சாதாரண பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து அவர் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் மறக்க முடியாதது. உங்களின் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஆரோக்கியத்தைத் தேடி ஆண்கள் அதிகம் வருகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் வருகிறார்களா? தொடர்ச்சியான வருகையில் யார் அதிகம்? இங்கே பெண்கள்தான் அதிகளவில் வருகிறார்கள். தொடர்ந்து வருவதும் அவர்கள்தான். வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்களா? ஆரம்பத்தில் அப்படிக் கலந்துகொண்டோம். ஆனால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கள் நிறைவு பிறர் எங்களால் நன்மை அடையும்போதுதான் என்று புரிந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டோம். அதேபோல எங்களின் இரண்டு மகன்களும் கல்வி பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதல் எங்களுக்கு உருவானது. எனவே நாங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக யோகா பயிற்சி வழங்கியுள்ளோம். யோகா முறைகளில் ஏதேனும் புதுமைகள் புகுத்தியிருக்கிறீர்களா? அல்லது பாரம்பரிய முறையிலேயே தொடர்கிறீர்களா? பயிற்சிகளில் நாங்கள் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். முன்பு இருந்ததோடு சேர்த்து அவரவர் உடல்நிலைக்குத் தகுந்த பயிற்சிகள் வழங்குகிறோம். எங்களுடைய அனுபவங்களோடு வேறு பல யோகா சார்ந்த தரவுகளின் உதவியுடன் யோகா எனும் அற்புத சக்தி என்ற புத்தகத்தைக் கடந்த ஆண்டில் வெளியிட்டுள்ளோம். யோகா செய்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டாகுமா? பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டால் பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா? அதைப்போல எந்தவிதமான பக்கவிளைவுகளும் யோகாவில் கிடையாது. தொடர்ந்து யோகா செய்ய முடியாதவர்களுக்கு ஏதேனும் எளிய வழிமுறைகள் உண்டா? தொடர்ந்து மூச்சுப் பயிற்சி மட்டுமாவது மூன்று வேளையும் செய்து வந்தாலே ஓரளவு ஆரோக்கியமாக இருக்கலாம். உங்களுடைய பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக.. எங்களுக்குப் பணம் நோக்கமில்லை. வசதியற்ற சிலருக்கு நாங்கள் கட்டணம் இல்லாமலும் கற்றுத் தந்திருக்கிறோம். பல அரசுப் பள்ளிகளிலும் கட்டனமில்லா வகுப்புகள் எடுத்திருக்கிறோம். ‘ஒரு தெருவில் குறைந்தது நான்கு யோகா பயிற்சி மையங்கள் வரவேண்டும். அப்போதுதான் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்’ என்று எங்கள் ஆசான் சொல்வார். அதேபோல ஒருநாள் கூட விடுமுறை விடக்கூடாது என்றும் சொல்வார். அதை இன்றுவரை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். எங்கள் மூச்சு நிற்கும்போதுதான் இங்கே வகுப்புகள் நிற்கும். உடல் ஆரோக்கியத்துடன் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதற்கும் வளரும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியிலும் இங்கே வரும் மாணவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது புத்தகங்கள் பரிசளிக்கிறோம். இளம் பேச்சாளர்களுக்கான மேடையாக திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கதின் 31ஆவது கிளையைத் தொடங்கியுள்ளோம். அதன் மூலம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை அவர்களுக்கே அறிமுகம் செய்கிறோம். உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள்? வலிகளைச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்காமல் வாழும் வழிகளைச் சொல்லி நெறிப்படுத்துவது, எண்ணிக்கையைப் பார்க்காமல் எண்ணங்களால் மேம்பட்டவர்களோடு இணைந்து பயணிப்பது, தேகநலன் காத்தலில் உள்ளடங்கியதே சமூகநலன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது ஆகியவற்றோடு ஆரோக்கியமாக இருப்பவனே உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதை உர(ரை)க்கச் சொல்வதும்.

நிர்பந்தங்கள்

நிர்பந்தங்கள்

சிறுகதை கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம். ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் செண்பகத்திற்கு உண்மையாகவே கதவு தட்டப்படுகிறதா அல்லது பிரம்மையா எனும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் யார் இவ்வளவு வேகமாக கதவைத் தட்டுகிறார்கள்..! இன்னும் சற்று நேரத்தில் தர்காவில் வாங்கு சொல்லிவிடுவார்கள். நான்கு மணிக்கு எழுந்து வேலையைத் தொடங்கினால்தான் ஒன்பது மணிக்குள் சமையல் முடித்து மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியும். ‘இப்படி மூன்றுமே பெண்ணாக பிறந்துவிட்டதே, ஒரு ஆண்குழந்தை இருந்தால் கணவனின் டீக்கடைக்கு எத்தனை உதவியாக இருக்கும்!? அதுனாலென்ன? ஊரில் உள்ள பிள்ளைகள் மாதிரியா என் குழந்தைகள் அடம்பிடிகின்றன? எத்தனை பொறுப்பு இந்தக் குழந்தைகளுக்கு! எத்தனை அறிவு! முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்த மாதிரி, எத்தனை விதமாக நான் சோர்ந்திருக்கும் வேளைகளில் என்னைத் தேற்றுகிறார்கள்! மூத்தவள், இதோ இன்றோ நாளையோ, தென்னம்பாளை வெடிப்பதுபோல் சமைந்து உட்கார்ந்துவிடப் போகிறாள். ‘பெண் வளர்த்தியும் பீர்க்கங்காய் வளர்த்தியும் ஒன்னு’ என்பார்களே. அய்யோ! மூத்தவள் வயதுக்கு வந்துவிட்டால் சடங்கு செய்ய வேண்டுமே. பணத்திற்கு என்ன செய்வது? கணவன் குணசேகரனின் டீக்கடை மூலம் கிடைக்கும் வருமானம் மூன்று வேளை சாப்பிடுவதற்கே போதவில்லை.’ கணவனின் நினைவு வந்ததும் அரைத் தூக்கத்தில் ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்தவளின் இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது. ‘எத்தனை அழகன்! சந்தன நிறமும் அடர்ந்த மீசையும் வறுமையின் சாயல் சிறிதும் தெரியாத முகமும்.. டீக்கடையிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஒரு ஜிப்பாவும் செயினும் போட்டுவிட்டால் போதும்; சினிமா கதாநாயகர்களெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். நல்லவேளை.. மூன்று குழந்தைகளுமே அப்பாவின் சாயலில் தங்க விக்கிரங்களாகப் பிறந்திருக்கின்றன’ என்று எண்ணி உடம்பு மகிழ்ச்சியில் பூரித்தது செண்பகத்திற்கு. தீடிரென வீட்டிற்கு நடுவே உள்ள சிறிய முற்றத்தில் கல் வந்து விழுந்த சத்தம் கேட்டது. நன்றாக முழித்துக்கொண்டாள் செண்பகம். அய்யோ! கதவைத் தட்டுவது கணவனாகத்தான் இருக்கும். ஆமாம்.. செண்பகம் என்று கூப்பிடும் குரல் வேறு கேட்கிறது. அவன்தான் ரொம்பத் தாமதமாக வரும் வேளையில், இதுமாதிரி கதவைத் திறக்காமல் செண்பகம் அசந்து தூங்கும் சமயத்தில், முற்றத்தில் கல்லை வீசி எறிவான். அவசர அவசரமாக அவிழ்ந்திருந்த புடவையை ஏனோதானோவென்று உடலில் சுற்றிக்கொண்டு போய் கதவைத் திறந்தாள் செண்பகம். “இல்லேங்க.. ரொம்ப அசதியா இருந்துச்சி. டீக்கடை பாத்திரமெல்லாம் படு கறுப்பா இருந்துச்சி. சபீனா வாங்கக் காசு இல்ல. அதான் செங்கல்லை உடைச்சு கல்தூளைப் போட்டு வெளக்குனேன். அதான்ங்க ரொம்ப அசதியாயிட்டு. தூக்கத்திலேர்ந்து எழும்பவே முடியலேங்க. நீங்க சரக்கெடுக்க வெளியூர் போறதால்ல சொல்லிட்டுப் போனீங்க? திடும்முன்னு வந்து நிக்கிறீங்க? ஏன் மூஞ்செல்லாம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு?” என்று வினாக்களாகக் கேட்டுக்கொண்டே, பதில் சொல்லாமல் வீட்டிற்குள் நுழையும் கணவனை ஏறிட்டாள் செண்பகம். கைகளில் கொண்டு வந்த மஞ்சள் பைகளையும் சாக்குப் பையையும் தூக்கி ஓரமாக வீசினான் குணசேகரன். அவன் ஒருநாளும் இப்படி வீசி செண்பகம் பார்த்ததே இல்லை. சிறிது தள்ளாடிக்கொண்டே வந்தவன், செண்பகத்தைப் பார்த்துக் கண்களை கீழிறக்கிக் கொண்டு லேசாக எச்சில் வழியுமாறு சிரித்தான். முதன்முதலாக குணாவின் சிரிப்பு வேட்டைக்குப் புறப்படும் விலங்கொன்றின் உறுமுகிற கோரைப்பற்களின் சாயலாகத் தெரிந்தது செண்பகத்திற்கு. அவனுடைய சாம்பல் நிறச் சட்டையின் மேல் அங்காங்கே லேசாக அணைந்த நெருப்பில் பூத்த சாம்பலாய் மணல் திட்டுக்கள் அப்பியிருந்தன. அவன் மேலே சாராய நெடி வீசியது. செண்பகத்திற்கு விவரம் தெரிந்து குணா சாராயம் குடித்து அவள் பார்த்ததே இல்லை. அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவளின் கைகளைப் பிடித்துத் தரதரவென்று அடுப்படிக்கு இழுத்துக்கொண்டு போனான். அந்தச் சிறிய வீட்டில் படுக்கும் இடத்தையும் அடுப்படியையும் ஒரு மெல்லிய திரைச்சீலைதான் பிரித்துக் காட்டிக்கொண்டிருந்தது. அப்படியே அவளைக் கீழே தள்ளியவன், படுவேகமாக அவளின் மேலேறி இயங்கத் தொடங்கினான். அத்தனை ஆங்காரமாக அவன் இதுவரை நடந்துகொண்டதே இல்லை. மூன்று குழந்தைகள் வந்ததும் அத்திப் பூத்தாற்போல் என்றாகிவிட்டது. ஒருநொடி அதிர்ந்தவள், அவனின் வேகத்தின் ஒத்திசையோடு உடன்படத் தொடங்கினாள். குணா அவள் கூந்தலைப் பற்றிக்கொண்டு கீழே அழுத்த, இதுவரை இப்படி வலியோடு கூடிய உறவை அனுபவித்தேயிராத செண்பகத்திற்குக் கண்களில் கண்ணீர் பெருகியது. மேலும் அவன் மேல் வீசிய சாராய வாடை வேறு வயிற்றைக் குமட்டியது. வலியினால் சிறிது சுருங்கியிருந்த நெற்றியும் இறுக்கி மூடியிருந்த கண்களும் அவனை இறுக்கிப் பற்றியிருந்த விரல்களும் அவனை மேலும் வேகத்தோடு அவளைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல்படத் தூண்டின. கைகளில் ஈரம் பட்டதும் கண்கள் சொருகியவாறே கிறக்கத்திலும் வேகத்திலும் இருந்தவன், செண்பகத்தின் முகத்தை நோக்கினான். கண்களை மூடியபடியே இருந்த அவளை நோக்கி, “என்னை விட்டுப் போகாதடி.. என்னை விட்டு தயவுசெஞ்சு போயிடாதடி.. அதை என்னால தாங்கமுடியாது” என்று புலம்பியவாறே, வெள்ளம் வடிந்த அருவிக்கரையைப்போல கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்த குணா, அவள் மேலிறந்து இறங்கி அப்படியே வயிற்றில் தலைவைத்து செண்பகத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்திருந்தான். இது அத்தனையும் செண்பகத்திற்குப் புதிது. வலித்த உடலின் பாகங்களைத் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டாள். இந்த ஆவேசம் அவளுக்குப் பிடித்திருந்தது. இதுவரை இந்த உடலுக்குப் பழக்கமில்லாத ஒன்று இது. எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான பழக்கம் சுவாரஸ்யம் குறைவுதானே! மூன்று குழந்தைகள் பிறந்தும் ஒவ்வொரு உறவுக்கு முன்பாகவும் உனக்கு உடம்பு நல்லாருக்கா? செய்யலாமா? என உத்தரவு கேட்பவனைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கும் செண்பகத்திற்கு. ‘இது என்ன கேள்வி? உன் மனைவி நான். வாடீ.. படு..ன்னு சொன்னா படுக்கப்போறேன்.’ இன்னமும் உரிமை எடுத்துக்கொள்ளாமல் உத்தரவு கேட்கும் கணவனை எண்ணி மனத்திற்குள் சில சமயம் குமைந்திருக்கிறாள். ‘மாமா பொண்ணு என்ற முறையில் கட்டிவைத்துவிட்டார்களே என வாழ்கிறானோ?! உண்மையில் என்னைப் பிடிக்கவில்லையா? ஆனால் பிடிக்காமல் போயிருந்தால்கூட அதை எந்த விதத்திலும் குறைசொல்ல முடியாது. குணசேகரன் எவ்வளவு அழகாக இருக்கிறான்! கறுப்பாக, நச்சலாக, சிறிது பல் எடுபட்டு இருக்கும் தன்னைப் பார்க்கவந்த இரு மாப்பிள்ளைகளும் வேண்டாமென்று சொல்லிவிட்டுப்போக, எந்தக் குறையும் சொல்லாது, அம்மா சொல்லிவிட்டாள் என்பதற்காக மறுபேச்சில்லாமல் தன்னைக் கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரிது. என்ன பிரச்சினை வந்திருந்தாலென்ன? இது மிகவும் பிடிக்கிறது. இது மாதிரி உரிமையோடு உறவோடு, இது மாதிரி வயிற்றில் தலைவைத்து குணா படுத்திருப்பது மிகவும் பிடிக்கிறது’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே அவனின் தலையை வயிற்றோடு அழுத்தி, தலைமுடியை அமைதியாகக் கோதிக்கொண்டிருந்தாள். ‘என்ன நடந்திருக்கும் எனத் தெரியவில்லை. குணா குடித்திருக்கிறான். வியாபாரத்தில் ஏதாவது நஷ்டம் வந்திருக்குமோ? இதற்கெல்லாமா நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன்?! அதென்ன புதிதாக வாடி போடி என்கிறான்?! என்னை அப்படி அழைக்கமாட்டானே! குடித்திருப்பதால் அப்படி அழைக்கிறானோ!?’ என யோசித்துக்கொண்டே வெளியே மழை பொழியும் ஓசையை வெறுமனே நிரம்பிக்கொண்டிருக்கும் கிணறுபோல கவனித்துக்கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு குணா செண்பகத்தைப் பார்த்து, “ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்னு கேக்கமாட்டீயா?” என்றான், அமைதியாக அவளைத் தன்பக்கம் இழுத்துப் பிடித்துக்கொண்டே, “சத்தம் போடாதீங்க, மெதுவா பேசுங்க. புள்ளைங்களுக்கு நீங்க தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கறது தெரிய வேணாம். எதுக்கு இப்படி குடிச்சிட்டு கீழ விழுந்து எந்திரிச்சி வந்துருக்கீங்க? சட்டையெல்லாம் மண் அப்பிக் கிடக்கு. நிதானம் இல்லாம இருக்கீங்க. கண்ணெல்லாம் கோவைப்பழம் மாதிரி சிவந்து கிடக்கு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி இரகசியமாகக் கேட்டவளைப் பார்த்து, “நீ நல்லவ செண்பகம். மூனு வேளை சோத்துக்கு மேல ஒரு புடவைக்குக்கூட நீ ஆசைப்பட்டதில்ல. ஆனா நான் அப்படி இல்ல. ஒரு வருசத்துக்கு முன்னாடி காளியம்மன் கோவில் திருவிழா சமயத்துல, நான் திருவிழா கடை போடும்போது கோவிலிலேயே தங்கியிருந்தேன்ல்ல? அவள அங்கதான் முதல்முறையா பார்த்தேன். நான் பொதுவாவே பெண்களை அதிகமாக ரசிப்பவன் இல்லைங்கிறது உனக்கே தெரியும். என் வாழ்வின் வறுமை, அதைத் தீர்க்க நான் படும்பாடு, எனது சுபாவம், எதுவுமே நான் இன்னொரு பெண்ணை ரசிப்பதற்கு இடம் தருவதாக இல்லை. அன்று காலை வழக்கம்போலப் பாலை ஊற்றி சட்டியில் காய்ச்சிக்கொண்டிருந்தபோது முதல்நாள் பெய்த மழையினால் கோவிலுக்கு எதிரே உள்ள இடமெல்லாம் சகதியாகியிருந்தது. அப்பொழுதுதான் கோவிலைத் திறந்து அலசிக் கோலமிட்டுக்கொண்டிருந்தார்கள். நீலநிறக் கருக்கல் மின்னிக்கொண்டிருக்கும் தங்க வளையல்கள் அணிந்த கையொன்றைப் பார்த்தேன். கோவிலின் வாசலைக் கூட்டிக் கோலமிட்டுக்கொண்டிருந்தது. முகத்தைக்கூட நான் சரியாகப் பார்க்கவில்லை. ஏதோ வேண்டுதலென எண்ணிக்கொண்டு வடை போடுவதற்கான வேலையை கவனித்துக்கொண்டிருந்தேன். பழக்கமில்லாத வேலை போல. ‘ஆ..’வென சத்தம் போட்டவாறே அவள் சேற்றில் வழுக்கி விழுந்திருந்தாள். அதிகாலை நேரமாதலால் கோவிலில் யாருமே இல்லை. வயதான பெண்ணொருத்தி அவளைத் தூக்கமுடியாமல் அவளோடு சேற்றில் திணறிக்கொண்டிருந்தாள். சட்டென்று வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி அங்கே ஓடிச்சென்று அவளைத் தூக்கியவன் அப்படியே நின்றேன் செண்பகம். அவ்வளவு அழகியை நான் அருகில் கண்டதே இல்லை. எத்தனை மென்மை, வழவழப்பு! அதிகாலை வெளிச்சம் பட்டு மின்னும் கன்னங்கள், பதட்டத்தில் ஆடும் ஜிமிக்கி. என்னால் முடியவில்லை. எத்தனை அழுத்தமாக நீரில் அழுத்திவைத்தாலும் அடங்காமல் பீறிட்டெழும் பந்தாய், நான் அவளிடம் மறைக்க முயன்றாலும் முடியாமல் மயங்கி நின்றேன். இவளுக்காகத்தான் இத்தனை வருடம் காத்திருந்ததாகத் தோன்றியது. அவளைப் பார்த்த நிமிடத்திலிருந்து அவளைத்தவிர வேறு எதுவுமே எனக்கு வேண்டாமெனத் தோன்றியது. உன்னை மறந்தேன். நம் குழந்தைகளை மறந்தேன். இந்த உலகில் உள்ள அத்தனையும் மறந்து நின்றேன். அவளை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருந்தது. நெளிநெளியான அலை மாதிரியான கூந்தல். விளக்கு மாவை உருட்டி வச்ச மாதிரி முகம். தீபம் மாதிரி கண்கள். துடைச்சு வச்ச குத்துவிளக்கு மாதிரி அப்படியொரு பிரகாசம். என்னை மறந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்த விநாடியிலேயே அவள் கண்டுபிடிச்சிட்டா, எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு. திருவிழா நடந்த பத்து நாட்களும் அவள் தொடர்ந்து கோவிலுக்கு வர, கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கதையும் எனக்குத் தெரியவந்தது. கோவிலூர் பஞ்சாயத்துகாரர் மாணிக்கவேலோட மனைவி அவள். பதினைந்து வயதிலேயே அவளுடைய அழகைப் பார்த்து மாணிக்கத்தின் வீட்டில் பெண் கேட்க, ‘வசதியாக வாழப்போகிறாளே’ என இரண்டாம் தாரமாக வயசு வித்தியாசம் பார்க்காமல் கொடுத்துவிட்டார்கள். முதல் தாரம் குழந்தை இல்லையெனத் தற்கொலை பண்ணிக்கொண்டதாகவும் குழந்தை இல்லையென மாணிக்கமே ஆள் வைத்துக் கொலை செய்துவிட்டதாகவும் பேச்சிருக்கிறதாம். இவளுக்கும் கல்யாணம் ஆகி பத்து வருடங்களாகக் குழந்தை இல்லை. அதனால்தான் கோவிலுக்கு வாசல் கூட்டிக் கோலமிட்டால் குழந்தை பிறக்குமென யாரோ சொல்ல,

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

MBBS மட்டுமே மருத்துவப் படிப்பு என பொதுப்படையாக எல்லார் மனத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல் மருத்துவத்தைத் தேர்வு செய்வோர் சிலர். ஆனால் அதையும் தாண்டி நிறைய துணை மருத்துவப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடமோ பொதுமக்களிடமோ இன்னமும் இல்லை. மருத்துவர்கள்கூட அப்படிப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் அந்தப் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளின் காலி இடங்கள் வெகுவாக அளவாக நிரப்பப்படவே இல்லை. கடந்த 2021இல் NSSO (National Sample Survey Organization) மேற்கொண்ட ஆய்வின்படி 2030இல் 10000 நபர்களுக்கு 22 துணை மருத்துவப் பணியாளர்கள் என்ற அளவில் (22.3 : 1000) தேவை விகிதம் இருக்கும் எனத் தெரிய வருகிறது. மற்ற எல்லாத் துறைகளிலும் பாலினப் பாகுபாடு இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும் செவிலியர்களின் துறையில் மட்டும் 79.85 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். வெறும் 20.15% ஆண்கள் மட்டுமே இந்தத் துறையில் உள்ளனர். பெரும்பாலான இடங்களில் ஆண்கள் செவிலியர் துறைக்கு வருவதை ஒரு இழுக்காகவே கருதுகின்றன்றனர். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே ஆன செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தனியார் கல்லூரிகள் நிறுவத் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் நிலைமை மோசமாகி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர துணை மருத்துவர்களுக்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் OECD (The Organization for Economic Co-operation and Development) நாடுகள் நிறைய துணை மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்ததன் விளைவாக கோவிட் காலகட்டங்களில் துணை மருத்துவர்களுக்கான நெருக்கடி ஏற்பட்டு அதன் விகிதம் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்றளவிலும்கூட துணை மருத்துவ ஊழியர்களின் தேவை குறித்த விழிப்புணர்வு பேசப்படுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். இன்னும் ஆராய்ந்து பார்த்தால் மருத்துவர்களிடமே இந்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்றே கூறலாம்.   மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சில படிப்புகளையும் அந்த ஊழியர்களையும் குறித்த தாழ்வு மனப்பான்மையே நிலவுகிறது. அவர்களைக் குறித்து இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் நடந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவோ பகுத்தறிவுச் சிந்தனைகள் பேசப்பட்டாலும் “ஓ.. நர்ஸா..? ஓ.. தெரபிஸ்டா..? அப்போ டாக்டர் இல்லையா?” என்ற வார்த்தைகள், மேலும் ஒரு சமூகச் சீர்திருத்தமின்மையைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. சிறந்த துணை மருத்துவப் படிப்பு என்று கூகுளில் தேடினால், ஏதோ கடமைக்கு நான்கு படிப்புகளைக் காட்டிவிட்டு முதுகலைப் பட்டப்படிப்பை எல்லாம் அங்கே அள்ளிவிட்டிருக்கிறார்கள். MBBS மட்டும்தான் மருத்துவப் படிப்பு என்ற ஆழ்ந்த எண்ணம் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் என்பது பலதரப்பட்ட அணுகுமுறை (Multidisciplinary approach) கொண்ட பல துறைகளும் தொடர் சங்கிலிகளைப்போலப்  பிணைந்திருப்பது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கு மருத்துவர்கள் மட்டுமே போதாது. மருத்துவத் துறை சார்ந்த இதர கருவிகளை இயக்கவும் அதை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்லவும் அனைத்து வகையான இதர துணை மருத்துவ ஊழியர்களும் அவசியம். Every health worker’s work matters. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் துணை மருத்துவப் படிப்புகள் குறித்தும் அவற்றிற்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள பெற்றோர்கள் இதைக்குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். B.PHARMB.P.T. (Physiotherapy)B.ASLP (Audiology Speech Language Pathologist)B.Sc. (NURSING)B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGYB.Sc. RADIO THERAPY TECHNOLOGYB.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGYB.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGYB.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGYB.Sc. CARDIAC TECHNOLOGYB.Sc. CRITICAL CARE TECHNOLOGYB.Sc. DIALYSIS TECHNOLOGYB.Sc. PHYSICIAN ASSISTANTB.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGYB.Sc. RESPIRATORY THERAPYB.OPTOMB.O.T (Occupational Therapy)B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGYB.Sc. CLINICAL NUTRITION மேலே உள்ளது துணை மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியல் மட்டுமன்று. இந்தத் துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு கலந்தாய்வையும் நடத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்த மாணவர்கள் தங்கள் மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் இந்தப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்காக இணைய வழியில் கீழ்க்காணும் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.net    விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 19 அன்று தொடங்கி ஜூன் 28 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் கொண்ட கையேடும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேற்கண்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். – லக்ஷயா, Occupational Therapist

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

நேற்றைய பதிவின் தொடர்ச்சி. முந்தைய பதிவை வாசிக்க https://hexamedia.in/p-2023-0619-01/ 2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவொரு ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருக்கும் சட்டங்களிலேயே மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது. புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன? இந்தச் சட்டங்கள் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாஜக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஆண்டொன்றுக்கு  13 ஊபா வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு  34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான ஊபா வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித் திட்டம் தீட்டுவதற்கான பிரிவு 18 பயன்படுத்தப்படுகிறது.  என்.ஐ.ஏ.வால் புலனாய்வு செய்யப்படும் 357 ஊபா வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18  பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றிலெல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை;  சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஊபா வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது மூன்றிலிருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே ஊபாவின் குறி. ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி ஊபா வழக்குகளில் சிறைப்பட்டோரில் 2018இல் 16.32%, 2019இல் 32.08%, 2020இல் 16.88%  பேர் மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர். ஊபா வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57 (2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் ஊபாவில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே. மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கடந்த  2022 அக்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும். ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால், ’குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வழக்கமான சட்ட நடைமுறைக்கு முரணாக, ‘மெய்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல’ என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது ஊபா.  ஊபா சொல்லும் ‘அதிருப்தி’ என்றால் என்ன? இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை அரசுக்கு வழங்குகிறது. அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய நபர்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது. இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ அல்லது தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ அல்லது இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம். யாரைத்தான் விட்டுவைத்தது ஊபா? மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கில், கனிம வளங்களைக் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு எதிராக, பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணை நின்றவர்கள்,  தலித் மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டனர். நாடறிந்த மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்கள்,  கலைஞர்கள்,  பேராசிரியர்கள், அருட்தந்தை ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது. பீமா கோரேகான் வழக்கில் மூன்று முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புதிய புதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்லச் சதி செய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருன்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித், சர்ஜீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா ஜார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்பால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா உள்ளிட்ட மாணவர்கள் ஊபாவின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர். ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராஜ்தீப் சர்தேசாயும் வினோத் கே ஜோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைத் திறனாய்வு செய்ததற்காக அரச துரோகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத் ஜாக்ரா, பீர்சாடா ஆசிக் ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்மீது ஊபாவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக் கப்பான்மீது உத்தரபிரதேச அரசு ஊபா பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது. பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின்போது அவர்கள் மீது ஊபாவின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு. அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்களும் தனியார் சுரங்க நிறுவனங்களும் சட்ட விரோதச் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள் மற்றும் பிற பழங்குடிகளை  இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். ஜார்க்கண்டின் மஸ்தூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இஸ்லாமியர் என்றால் ஊபா பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இஸ்லாமிய இளைஞர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றமற்றவர் என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்காக வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் ஊபா பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தெலங்கானாவைச் சேர்ந்த  9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் என ஊபா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களைச் சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இஸ்லாமியர்கள் ஒருபக்கம். இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொரு பக்கம். இந்துத்துவத்தின் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்சல்பாரி அமைப்பினர்,  உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஊபா கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19  வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஊபா சட்டம் அமைந்துள்ளது. மேலும் ஊபா சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும்  அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14, வாழ்வுரிமையையும் ஆள்வகைச் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும். பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ. 2008இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லை கடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப்போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது. தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறு செய்யக்கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் என்.ஐ.ஏ. நிறுவப்பட்டது. அதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதை, ஒன்றிய ’காவல்துறை’க்கு மாற்றிவிட வழிவகுக்கும் சட்டம் இது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு என்.ஐ.ஏ. என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. என்.ஐ.ஏ. சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் ஊபா சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள்,  வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட என்.ஐ.ஏ. சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டுவரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும்  சொல்லப்படவில்லை. இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை என்.ஐ.ஏ. எடுத்துக்கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது. இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு என்.ஐ.ஏ.வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை  நடத்திய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சலைன்  2015 ஜூன் 25 அன்று தெரிவித்தார். இவ்வாறாக, ஊபா சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மக்கள் அமைப்பாகத் திரள்வதையும் தடுக்கிறது. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தங்களைக் குற்றமற்றவர்கள் என உறுதிப்படுத்த வேண்டும் என்பது எவர்மீதும் பொய்யான குற்றச்சாட்டைப் பதிவு செய்து, அவர்களை முற்றாக முடக்கிச் சிறையில் அடைத்துவிட வழிவகை செய்கிறது. என்.ஐ.ஏ. அமைப்பானது ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் துணை போவதாகவும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. இந்தச் சூழலில், முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இவ்விரண்டுக்கு எதிராகவும் இவற்றை முற்றாக அகற்றவும் குரல் எழுப்புவதும் செயல்படுவதும் தற்போதைய முக்கியத் தேவையாகும்.

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act) எனப்படும் ‘சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் எதிர்த்து முனைப்புடன் இயக்கம் நடத்த வேண்டிய தேவையை பாசிச எதிர்ப்பு மற்றும் குடியாட்சிய ஆற்றல்கள் போதிய அளவு உணரவில்லை எனத் தோன்றுகிறது. இந்நிலை குறித்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில், என் ஐ ஏ குறித்தும் ஊபா குறித்தும் அண்மைக்காலத்தில் இவை ஏவப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் மக்களிடையே முனைப்புடன் பரப்புரை செய்யத் தீர்மானித்துள்ளோம். இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்துவிட்டதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துவிட்டனர். ஆனால் சுமார் ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் நிர்வாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அப்துல் ரசாக் உள்ளிட்ட ஐந்து இசுலாமியர்கள் கடந்த மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்காக முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் வாதாடினார்கள். எந்த வழக்குக்காக அவர்கள் வாதாடிக்கொண்டிருந்தார்களோ அதே வழக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிடுகின்றனர்; சட்டவிரோதச் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர்; இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்; தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்க்கின்றனர்; பேரணி நடத்துகின்றனர்; ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றனர் போன்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இவ்வழக்கைப் போட்டிருப்பதாகச் சொல்கிறது என்.ஐ.ஏ.. பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த செப்டம்பர் 28ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(B), 153-A, 153-AA ஆகியவற்றின் கீழும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13,17,18, 18(B), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். ஊபா உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித் முகமதுவும் அந்த 9 பேரில் ஒருவர். கடந்த ஏப்ரல் 13 அன்று மேற்சொன்ன பிரிவுகளுடன் ஊபா பிரிவுகள் 20, 22B-ஐயும் சேர்த்து இன்னொரு வழக்கு போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்ரலில். ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை என்.ஐ.ஏ. மேற்கொண்டது செப். 22இல். இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர். உரத்து எழுப்ப வேண்டிய கேள்விகள்: பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததாக என்.ஐ.ஏ. சொல்கிறது. அந்தத் தகவல்களைக் கொண்டு ஏப்ரலில் ஒரு வழக்குப் போட்டுள்ளது. பின்னர் அதே தகவல்களைக் கொண்டு இன்னொரு புதிய வழக்கை செப்டம்பரில் பதிந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இவ்விரு வழக்கிலும் இல்லை. ஒரே குற்றத்திற்கு இரு வேறு வழக்குகள் போடுவது சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பானது இல்லையா? பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்ரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு, ஐந்து மாதங்கள் கழித்து புதிய வழக்குக்காகக் கைது செய்திருப்பதிலிருந்தே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை அம்பலமாகிறது இல்லையா? ஊபா பிரிவு 13, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது பற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டவிரோதச் செயல்கள் என்ன? இது பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லாமல் பிரிவு 13ஐ வழக்கில் சேர்த்தது சட்டப் புறம்பானதில்லையா? இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் எங்கு, எப்போது, என்ன பேசப்பட்டது? பிரிவு 38,39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. பாப்புலர் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை. மாறாக, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்படித் தடைசெய்யப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்பே ஊபாவின் இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தமுடியுமா? வழக்கம்போலவே, ஊபாவின் பிரிவு 18, பயங்கரவாதச் செயல்களை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே, எவ்வித பயங்கரவாதச் செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்: இவ்வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை ரத்து செய்யக் கோரி குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ் சாட்டப்பட்டவர்களை என்.ஐ.ஏ. தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர். முகமது அப்பாஸ் இவ்வழக்கை எதிர்த்த 10 வழக்குகளில் வாதாடியவர்; 4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார். இதற்கிடையே 05.03.2023 அன்று மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரை ‘விசாரணை’ என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரி டி.எஸ்.பி. செந்தில்குமார் கூட்டிச் சென்றார். என்.ஐ.ஏ அதிகாரிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதால் மயங்கி விழுந்த ஜின்னா இறந்துவிடுவாரோ என்று அஞ்சி உடனே அவரை மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேர்த்தனர். ஆனால், அவருக்கு வலிப்பு வந்த நிலையில் மருத்துவமனைக்கு அருகில் கிடந்ததாக இட்டுக்கட்டுகின்றனர். இவ்விசயத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கையும் களவுமாகச் சிக்கும் வகையில் மருத்துவமனையில் ஜின்னாவை சேர்க்கும்போது பதிவான சிசிடிவி காணொளிகளை வழக்கறிஞர் முகமது அப்பாசு பெற்றுவிட்டார். இது டி.எஸ்.பி. செந்தில்குமாருக்கு ஆத்திரமூட்டுகிறது. என்.ஐ.ஏ. வின் சித்திரவதையை அம்பலப்படுத்தி முகமது அப்பாஸ் ஒரு முகநூல் பதிவை எழுதினார். இதனால் ஆத்திரம் அடைந்த என்.ஐ.ஏ. டி.எஸ்.பி செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ‘என்.ஐ.ஏ. மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாஸ் மீது புகார் செய்தார். இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களைச் சேர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டிக் கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? என்.ஐ.ஏ. வழக்குகளுக்கு எதிராக வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்து சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன? இதைக் கண்டித்து மதுரை ‘பார் அசோசியேசன்’ தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரியது. முகமது அப்பாசையும் முகமது யூசுப்பையும் பொய் வழக்குகளில் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். வழக்கறிஞர்களுக்கு எதிரான இதுபோன்ற பயங்கர அச்சுறுத்தல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மே 30 அன்று சென்னையில் நடந்த ஊடகச் சந்திப்பில் மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்கண்டேய கட்ஜூ முழங்கினார். இஸ்லாமியர்களைக் குதறும் என்.ஐ.ஏ. திறந்த வீட்டில் நுழைந்த நாய் போல் என்.ஐ.ஏ. தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொதுச்சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரை குத்தி அச்சுறுத்த நினைக்கிறது பாசிச பாஜக அரசு. கடந்த செப்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிக்கையை அணியமாக்க மார்ச் 27 வரை இழுத்தடித்தது என்.ஐ.ஏ. அதையும்கூட நீதிமன்றத்தில் முன்வைக்காமல் காலந்தாழ்த்தியது; குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான் ‘குற்றப்பத்திரிக்கையை என்.ஐ.ஏ. வெளியிட்டாக வேண்டும்’ என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்து, கூடுதல் குற்றப்பத்திரிக்கையை அணியமாக்கியுள்ளது என்.ஐ.ஏ. கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைகட்டத் துடிக்கிறது என்.ஐ.ஏ. கேட்பார் யாரும் இல்லை என்பதுபோல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கின்றன. பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா! ஊபா வந்த பாதை: திமுக திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிக்கொண்டிருந்த பின்புலத்தில், தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை தேசிய ஒருமைப்பாடு மற்றும் வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 19ஐத் திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு இணங்க 1963ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16வது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக்கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. மேலும் பிரிவினைக் கோரிக்கையைக் கொண்டிருக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவல்ல திருத்தங்களும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, ‘நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்து நிற்பேன்’ என்று உறுதிமொழி ஏற்கும் திருத்தமும் அப்போது செய்யப்பட்டது. 16ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் செயல்படுத்தும் நோக்கில் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதுவரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாகக் காரணம் சொல்லப்பட்டது. மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறை சட்டங்கள் ஜனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தைக் கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதை ஆளும்

தோள்களில் கருவறை சுமப்பவன்

தோள்களில் கருவறை சுமப்பவன்

அந்தப் பாதங்கள் இன்னமும்ஓடிக்கொண்டேதானிருக்கின்றனஅந்தக் கைகள் இன்னமும்என் விரல் பிடித்துதான் நடக்கின்றனஅந்தத் தோள்கள் இப்போதும்எனைத் தோள் சாய்த்து ஆறுதல் தருகின்றன தாடி முடி குத்தும் இடத்திலெல்லாம்பரிசாகக் கிடைக்கும் அவரின் முத்தம்அவர் முத்தம் கொடுக்கும்போதெல்லாம்தாடிமுடி குத்தும் அவருக்கும் கருவறை உண்டுதோள்களில்அவருக்கும் தாய்மை உண்டுமனத்தில் என் பையனுக்குப் பிடிக்கும்என் பொண்ணுக்குப் பிடிக்கும்என்னவளுக்குப் பிடிக்கும்என வாழும் அவர்மறந்தே போகிறார்தனக்கு எது பிடிக்கும் என்று அப்பா எனும் பாறைகள்தான்தனக்குள்ளான மென்மைகளில்பூக்களைப் பிரசவிக்கின்றனஅப்பா எனும் வழிகாட்டிகள்தான்வாழ்க்கைப் பாதையின் முள்ளகற்றிநம் கால்களில் கவசம் பூட்டுகின்றன தந்தையர் தின வாழ்த்துகள் என்றேன்சட்டை செய்யாமல் சிறு புன்னகையுடன்அடுத்த வேலை பார்க்கக் கிளம்பிவிட்டார்

தற்கொலை முயற்சிக்குப்பின் தலைசிறந்த இலக்கியங்கள்

தற்கொலை முயற்சிக்குப்பின் தலைசிறந்த இலக்கியங்கள்

உலக இலக்கியங்களிடையே மிகுந்த தனித்தன்மையும் பெரும் சிறப்பும் பெற்று விளங்குகின்றன இரஷ்ய, சோவியத் இலக்கியங்கள். ரஷ்ய கலை இலக்கியத் துறையில் மாக்ஸிம் கார்க்கியின் பங்கு மகத்தானது. தனது வாழ்நாளை, கலை இலக்கிய வாழ்வாக வாழ்ந்து காட்டியவர் மாக்ஸிம் கார்க்கி. மேலை நாடுகளில் அன்றைய காலகட்டத்தில் நிலவி நின்ற பழைய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி, புதிய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி; கார்க்கி முழு அறிவு படைத்தவராக இருந்தார். கார்க்கி தன் பயிற்சியால் தயாரான கலைஞர். இசை, சிற்பம், ஓவியம் முதலிய பல்வேறு கலைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். அவர் தனது சுயசரிதத்தில் குறிப்பிடுவதுபோல, வாழ்க்கையே அவருக்குப் பெரும் கல்லூரியாகத் திகழ்ந்தது. ரஷ்ய நாட்டு மக்கள் துன்பங்களின்றி, எல்லா உரிமைகளுடனும் வாழப் பங்காற்றிய எழுத்தாளர்களில் மாக்ஸிம் கார்க்கியும் ஒருவர். அவர் உலகப் படைப்பாளர்களில் முன்னணியில் இருந்தவர். மனிதனே கார்க்கியின் இலக்கியப் படைப்புகளின் தலைவன். மனிதன் மாண்புற வேண்டும் என்பதற்காகவே எழுதுகோலை ஏந்தியவர். லியோ டால்ஸ்டாய், விளாடிமர் கோரோலெங்கோ போன்ற ஆகச் சிறந்த எழுத்தாளர்களை ஆழ அலசிக் கற்றவர். இரஷ்ய இலக்கியத்தின் பால் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. ஐரோப்பிய இலக்கியத்தின் வரலாற்றில் ரஷ்ய இலக்கியத்தின் கம்பீரத்தையும்பேராற்றலையும் உலகம் ஒப்புக்கொண்டு வியப்படைகிறது. அந்த இரஷ்ய இலக்கியத்தில் அவர் நிலைகொண்டு இறவாப் புகழ் அடையும் முன்பு, பலவிதமான வேலைகளில் இருந்திருக்கிறார். நீஜ்னி நோவ்கோரத் (Ni Zhni Novgorod) என்ற ஊரில் மாக்சிம் செவ்வோட்டிவிச் பெஷ்கோவ்வின் மகனாக 1868, மார்ச் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 1872இல் கார்க்கியின் தந்தையும், 1878இல் தாயும் மரணமடைந்தனர். தாயார் மறைவுக்குப்பிறகு செருப்புக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின் பிளான் வரைகிறவரிடம் வேலை. அதன்பின் ரொட்டிக் கிடங்கில் சிற்றாள் வேலை. 1880இல் கப்பல் ஒன்றில் சமையலறை சிற்றாளாக வேலை பார்க்கும்போதுதான் படிக்கக் கற்றுக்கொண்டார். நூலக குமாஸ்தாவாக, பறவைகளைப் பிடித்து வாழ்க்கை நடத்துபவனாக என்று பலப்பல வேலைகளைப் பார்த்த கார்க்கி, வேலையின்றி உணவுக்கு வழியின்றி, காஸானுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே கூத்தாடிகளுடன் சேர்ந்து கூத்தாடிப் பிழைத்தார். தெருக்களில் குவாஸ் விற்றுப் பிழைத்தார். 1887 டிசம்பர் 12இல் தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கிறார். 1888இல் புரட்சிக்காரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். பின் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டார். காஸ்பியன் கடலில் மீன் பிடித்துக்கொண்டு சுற்றித் திரிந்து வயிறு வளர்த்தார். 1888 – 89 ஆண்டுகளில் ரயில்வே தொழிலாளியாக வேலை பார்த்தார். அவர் வேலை பார்த்த எந்த இடத்திலும் மனிதத் தன்மையற்றவர்களையே சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழத் துணிந்தார். சிறையில் அடைக்கப்பட்ட கார்க்கி சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மைல் தொலைவு நடந்தே பயணம் செய்தார். பின்னர் எழுத்துலகில் நுழைந்தார். மனிதன் புராதன காலம் தொட்டுத் தன்னுடைய உழைப்பால் உருவாக்கி, வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொடுத்துவந்த கலைச்செல்வத்தைக் கரைத்துக் குடித்தார். ‘நான் எப்படி எழுத்தாளன் ஆனேன்?’ என்ற கட்டுரையில், ‘உலகில் சகல எண்ணங்களையும் பொருட்களையும் ஆக்குவதும் அமைப்பதும் மனிதனே. பல அற்புதங்களைச் செய்பவனும் மனிதனே. இயற்கை சக்திகள் அனைத்தையும் அடக்கி ஆளுகிற எஜமானனும் அவனே. உலகிலுள்ள அழகிய பொருட்கள் யாவும் மனிதனாலும் மனிதனுடைய திறமையான அவனுடைய உழைப்பினாலும் உண்டாக்கப்பட்டவையே.உழைப்புத் திறனை உபயோகப்படுத்தும் முறைகளில் இருந்தே சகலவிதமான எண்ணங்களும் உதித்தன. கண்கூடாகத் தெரியும் நிதர்சனத் தோற்றங்களுக்குப் பிறகு எண்ணங்கள் உதிக்கின்றன. நான் மனிதனை வணங்குகிறேன். ஏனெனில் மனிதனுடைய பகுத்தறிவாலும் சிந்தனையாலும் படைக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. அந்தப் பார்வையில் நான் எழுதலானேன்’ என்கிறார். மாக்ஸிம் கார்க்கி ஒரு புரட்சிக்காரர். ‘வாழ்க்கை முழுவதையும் மாற்றி அமைப்பதற்காக, திரண்டு வரும் பொது ஜனசக்தியின் வெள்ளப் பெருக்கில் எழுத்தாளர்கள் இரண்டறக் கலக்கவேண்டும். எழுத்தாளன் கடந்துபோன காலத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் இவ்வாறு தெரிந்துகொள்வதினாலேயே அவன் தன்னுடைய காலத்தைப் பற்றியும் அக்காலத்தில் செய்யவேண்டிய புரட்சிகரமான கடமைகளைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்’ என்று அவர் கூறுகிறார். பிரெஞ்சு எழுத்தாளர் லூயி ஆர்கன், ‘புராதன ரஷ்ய இலக்கிய உலகின் பழைய பாட்டுக்களையும் கவிதைகளையும் அவற்றைப் பாடி மகிழ்ந்த மக்களையும் சரித்திரத்தின் கம்பீரமான முன்னேற்றத்தில் கார்க்கி தன்னுடன் சேர்த்து வெற்றிநடை போட்டு அழைத்துச் சென்றார்’ என்று கார்க்கியைப்பற்றி மதிப்பீடு செய்கிறார். அவரே, கார்க்கியின் மறைவைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘கார்க்கி நறுமலர்களின் நடுவே, சோகக் கண்ணீர் சிந்திய பச்சைச் செடிகளின் நடுவே தூங்கிக்கொண்டிருந்தார். அவர் மிகப்பெரிய பெருமைமிக்க மனிதர். தன்னுடன் எவ்வளவோ ரகசியங்களை அவர் எடுத்துச் சென்றுவிட்டார். அந்த ரகசியங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவரோடு, அந்த ரகசியங்களைப் பற்றிய அறிகுறிகள் எல்லாம் மறைந்துவிட்டன. அவை நற்குணங்களைப் பற்றிய ரகசியங்கள், மக்களைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை வெளியிடும் முடிவற்ற ரகசியங்கள், பொறுமையைப் பற்றிய ரகசியங்கள், கள்ளம் கபடமற்ற தூய இதயங்கள் லட்சோபலட்சக் கணக்கில் மனம் அறியாமல் துடித்து வெளியிடும் அரிய ஓசைகளை செவி கொடுத்துக் கேட்பது பற்றிய ரகசியங்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, தான் கற்றுக்கொண்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் மனிதராகவே அவர் எப்போதும் வாழ்ந்தார்’ என்று கூறுகிறார். அவரது மகத்தான படைப்பான ‘தாய்’ நாவல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடையது. தமிழில் செய்த முயற்சிகளில் தொ.மு.சி.ரகுநாதனின் மொழிபெயர்ப்பைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். 1936 ஜூன் பதினெட்டாம் தேதி மாக்சிம் கார்க்கி மாஸ்கோவில் மரணமடைந்தார். அந்த மகா மனிதனின் இறுதி யாத்திரையை சோவியத் அரசு நடத்தி வைத்தது. அவருக்காக எண் திசையிலும் சோகக் குரல் எழுந்தது. ‘ரஷ்யப் புரட்சியில் முன்னின்று பங்குகொண்டவர் மாக்சிம் கார்க்கி என்றும் புரட்சியின் புயல் பறவையாகத் திகழ்ந்தார்’ என்றும் மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்ட மாக்சிம் கார்க்கியை நினைவு கூர்வோம்.