பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

கல்விக் கட்டுரை : சு. உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வியின் சூழல் நாளுக்கு நாள் பல வழிகளில் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகம் பேசப்படும் ஒன்றாக, போதைப்பொருள் பிரச்சனை இருந்துவருகிறது. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரங்கள் கீழ்வருமாறு. மாவட்ட ஆட்சியரது வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல் குறித்தான, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்குதல். மாணவர்களிடையே COOL LIP என்ற போதை தரக்கூடிய மிட்டாய் பயன்பாடு உள்ளதா என்பதை ஆசிரியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளில் COOL LIP  விற்கப்படுகிறது எனத் தகவல் தெரிந்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்திடல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் தகவல் அளித்திட வேண்டும். RBSK (Rashtriya Bal Swasthya Karyakram) என்ற மருத்துவக் குழு, பள்ளிகளில் மருத்துவ‌ முகாம் நடத்தும்போது, மாணவர்களின் பற்களைப் பரிசோதனை செய்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கறைகள் உள்ளதா எனக் கண்டறிந்து, அம்மாணவர்களுக்கு த் தனியே உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அம்மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மந்தன முறையில் காவல் நிலையத்தில் புகார் தரப்படவேண்டும். அவ்வாறு மந்தன முறையில் காவல்துறையில் தரப்பட்ட புகாரின் நகல், முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பிரதி வாரம் திங்கட்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில், அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மூலமாக, போதை விழிப்புணர்வு சார்ந்த கருத்துருக்களை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும். போதை விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும். காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து, பாரத சாரணர் சாரணியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை இணைத்து, போதை விழிப்புணர்வுப் பேரணி பள்ளியளவில் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கை வழிகாட்டுதலைத் தருகிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் கண்ணகி நகர், வடசென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை, ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் இந்த COOL LIP பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளதாகக் கூறினர். இதனால் மாணவர்கள் சமுதாயம் செல்லும் மோசமான பாதை குறித்தும் தங்கள் சி.ஆர்.சி பயிற்சி அரங்குகளில் வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட சென்னைப் பகுதி மாணவர்களிடம் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளதா? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இந்தப் பழக்கம் எவ்வாறு இருக்கிறது என  ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது, கள நிலவரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், இந்தச் சுற்றறிக்கைகள் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றி வருகின்றன. தஞ்சாவூரைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் இது குறித்துப் பேசும்போது, “வழிபாட்டுக் கூட்டத்தில உறுதிமொழி எடுக்கச் சொல்லியிருக்கோம். வாசல்ல tobacco free zone என்று ஒட்டியிருக்கோம். தலைமையாசிரியர்கிட்ட பக்கத்துல எந்தக் கடையிலும் போதைப்பொருள் விற்பனையில்லைன்னு சான்று வாங்கியிருக்கோம். மாணவர்களிடம் இருந்தால், அதைப்பெற்று அன்பாகக் கண்டிச்சிருக்கோம் என்கிற அளவில் அரசும் கல்வித்துறையும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கின்றன. உண்மையில் இந்தப் பழக்கம் வெளிவட்டாரப் பெரியவர்கள்,  பெற்றோர், முன்னாள் மாணவர்கள் போன்றோரிடமிருந்து மாணவர்கள் பழக்கத்திற்கு வருகிறது. பெற்றோரே பலர் அப்படி வரும்போது, யாரிடம் போய்ச் சொல்வது? விற்பவர்களுக்கும் உபயோகிப்போருக்கும் கடுமையான தண்டனைக்கு வழிவகை செய்யாமல், பள்ளியையோ மாணவர்களையோ குறை சொல்வது அர்த்தமற்றது” என்கிறார். “அரசு இதன் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடையே வயது வித்தியாசம் இன்றி, இப்பழக்கம் பரவி வருகிறது. பல மாணவர்களை இப்பழக்கத்திற்கு  அடிமையாக்கி வைத்திருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஷாலினி. “இதற்காகவே எங்கள் பள்ளியில் கேமரா வைக்க வேண்டும் என நான் வற்புறுத்தி, சில ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி நன்கொடையாளர்கள் மூலம் கேமரா வைத்தோம். தற்போது ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் பள்ளிக்கு வெளியே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பெண் பிள்ளைகள் இதற்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள்” என்கிறார் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர  ஆசிரியர் கௌதமன். “எங்கள் பள்ளி அருகில் கடைகளில் விற்பனை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத் (PTA) தலைவரை வைத்து வார்னிங் கொடுத்துள்ளோம். மீறினால் அவரு இவங்களை வேற மாதிரி கவனிப்பார்னு பயம். நம்ம பையனுகளே ஏஜன்சி எடுத்து நடத்துறாங்க. காட்டில்தான் அவனுகளுக்கு ஓப்பன் டாய்லெட். மண்ணில் புதைத்து வியாபாரம் செய்வாங்க. நாங்களும் சஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் தாராபுரத்தில் அரசுப்  பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெய கீதா. “அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை கமிஷன் போகிறது. சென்ற ஆட்சியில் குட்கா கமிஷன் ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சரே ரெய்டில் சிக்கினார். வட இந்தியக் கூலித் தொழிலாளர்கள் மூலமே இதுபோன்ற பழக்கங்கள் தமிழகத்தில் நுழைந்தது. இப்பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும்” என்கிறார் சீர்காழி ஆசிரியர் கண்ணன். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதி ஒன்றின் அரசு  மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், “முறத்தில் அள்ளி அள்ளிக் கழிப்பறைகளில் கொட்டினேன், COOL LIP பாக்கெட் கவர்களை” என்று கூறி வேதனையாகப் பகிர்ந்துகொண்டார். கூடுவாஞ்சேரி அருகே சில பள்ளிகளில் மாணவர்களிடம் பேசும்போது, சின்ன பசங்ககூட கூலிப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஆசிரியர், “பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், ஒருநாள் முழுவதும் தங்கள் பள்ளிகளில் நடக்கும் கூலிப் பிரச்சனை குறித்துதான் பேசி வருந்துகின்றனர். மொரட்டுப்பாளையம், வாவி பாளையம், முதலிபாளையம், ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த போதைப் பொருள் பயன்பாட்டால் சீரழிவதைக் காணச் சகிக்கவில்லை” என்கிறார். கரூர் பகுதி ஆசிரியர் சாதாரணன் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகர மயமான தனது பள்ளியில், இந்த கூலிப் பழக்கக் குழந்தைகளைக் கண்டறிந்து, அதைக் களையப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு, தனது முகநூலில் விரிவாக எழுதியிருந்தார். இப்படி ஏராளமான கதைகள் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கின்றன பள்ளிகளில். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள்தான்  அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வந்தபிறகு, பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மதுக்கடைகளுக்குச் சீருடையில் செல்வதாகவும் சில பள்ளிகளில் பள்ளிக்குள்ளேயே மது அருந்திவிட்டு வந்து மாணவர்கள் பிரச்சினை செய்வதாகவும் செய்திகளைப் பார்த்திருக்கலாம். ஆனால் கொரோனா காலத்தின் கொடையால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைமறை காய்மறையாக இருந்த இந்த போதைப்பொருள் கலாச்சாரம், தற்போது பள்ளிகளில் வெளிப்படையாகவே வேரூன்றி, மாணவர் சமுதாயத்தை நாசம் செய்து வருகின்றது. இப்படியான பழக்கம் கண்டறியப்பட்ட எத்தனையோ மாணவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கும் செல்கின்றனர். அப்படியான ஒரு சூழலில் ஒரு மருத்துவர் பகிர்ந்துகொண்ட செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. “இந்த ‘கூலிப் ‘ போதை மருந்துப் பொடியில் கண்ணாடித் துண்டுகள் மிகப் பொடியாக அரைத்துக் கலக்கப்படுகின்றன” என்கிறார் அவர். அதை மாணவர்கள் வாயில் வைத்து அடைத்துக்கொள்ளும்போது, வாயின் உட்புறம் இருக்கும் மிக மெல்லிசான தசைப் பகுதியை அறுத்துச் செல்லும் கண்ணாடித் துண்டுகள், இரத்தத்தில் உடனடியாக போதை மருந்து கலப்பதற்காகவும் அந்த போதை உணர்வை வீரியப்படுத்துவதற்காகவும்  அப்படி காலக்கப்படுகிறது” என்று சொல்வதை எப்படி நம்மால் சந்தேகிக்க முடியும்? இந்தப் பழக்கம் ஏழை – பணக்காரன், ஆண் குழந்தைகள் – பெண் குழந்தைகள், அரசுப்பள்ளி – தனியார் பள்ளி என்று எந்த வேறுபாடுகளும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளும் இதைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனனர். எண்ணிக்கையில் குறையலாம். ஆனால், இப்போது மது குடிக்கும் பழக்கம் எப்படிப் பெண் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லையோ, அதுபோலவே இதுவும்.  வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதை உபயோகிப்பதை, ஒவ்வொரு பள்ளியையும் கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள்  ஓரளவு பெற்றோர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதால் கண்டறிய முடிவதாகவும் பெரும்பாலும் மீட்டுவிடுவதாகவும் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றே கூறுமளவிற்கு வீடுகளில் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் எதார்த்தம். ஏனெனில், இந்தச் சமுதாயத்தில் அன்றாடங்காய்ச்சிகளாகவே வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் கடைக்கோடி மக்களின் குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் இந்த வியாபாரிகளின் வலையில் சிக்கித் தவிப்பவர்கள். அரசாங்கம் நினைத்தால் இந்த போதைப் பொருள்கள் தயாரிப்பு, விநியோகம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என்று சுற்றறிக்கைகள் விடுவது எந்த வகையிலும் பொறுப்பேற்காத தன்மையைக் காட்டுகிறது. பாம்பின் கால் பாம்பறியும். ஆமாம், காவல்துறைக்குத் தெரியாமல் எந்தக் கடைகளுக்கு இந்த போதைப் பொருள்கள் வந்துவிடும் சொல்லுங்கள். அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இதுபோன்ற கேடுகள் சமூகத்தில் நடக்க வாய்ப்பு உண்டா? அதோடு, எந்த ஆசிரியர் இயக்கங்களும் சங்கங்களும் இது குறித்து அரசையோ கல்வித் துறையையோ ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளவில்லை? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். இத்தனை விபரீதமான பழக்கத்தை ஒழிக்க, பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறது அரசு. விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தக் கூறுகிறது.  ஆனால், தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் ஆசிரியர்களது வகுப்பறையைக் கவனித்து எமிஸ் ஆப்பில் போட வேண்டும். அதில் இதுபோன்ற மாணவர்கள் வகுப்பறைகளில் ‌இருக்கின்றனரா என்று ஏதாவது கேள்வியை வடிவமைத்திருக்கிறதா கல்வித்துறை என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். தேசிய கல்விக் கொள்கை, இப்படியான மாணவர்களுக்கோ பள்ளிகளைப் பீடித்திருக்கும் இந்த விபரீதப் போக்கிற்கோ என்ன தீர்வை வைத்துள்ளது? இந்த அரசு எடுக்கும் கல்வி சார்ந்த திட்டங்களில் இந்தப் பிரச்சனைக்கு என்ன திட்டம் வைத்துள்ளது? பள்ளி மேலாண்மைக் குழுக்களில் இவையெல்லாம் மனம் திறந்து பேசப்படுகிறதா? கிராமங்களில்கூட வேரூன்றி வளர்ந்துள்ள இந்தப் பழக்கங்களைக் களைய, கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் போடப்படுகிறதா? மாணவர்கள் எதிர்காலம் நாசமாகி வருவதைத் தடுக்க, கல்வி அமைச்சர்

செலக்டிவ் பாலிடிக்ஸ்

செலக்டிவ் பாலிடிக்ஸ்

இது சமூக வலைத்தளங்களின் காலம். சமூகத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்வையும் சமூக வலைத்தளவாசிகள் நினைத்தால், ஆதரவாக அல்லது எதிர்ப்பாக, பெரும் வைரலாக மாற்ற முடியும் எனும் காலம். சமூக வலைத்தளங்களால் உலகெங்கும் அரசுகளே தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இளைஞர் புரட்சியாகக் கருதப்படும் 2011 எகிப்துப் புரட்சியும் சரி, 2017 மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியும் சரி, சமூகவலைதளங்களின் சக்தியால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி நிகழ்த்திக் காட்டப்பட்ட பெரும் புரட்சிகள். இதைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகளும், கட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி, தனி அணிகளையே உருவாக்கி நடத்தி வருகின்றனர். மறுபக்கம் அச்சு ஊடகங்கள் வர்த்தக ரீதியாக சவால்களைச் சந்தித்து வரும் நிகழ்காலத்தில், சேட்டிலைட் சேனல்களுக்கே கடும் போட்டியைக் கொடுக்கும் விதமாக யூ-டியூப் சேனல்கள் பல்கிப்பெருகி வருகின்றன. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் எதுவாகட்டும், அவற்றின் கடமை, அறம் என்னவாக இருக்க வேண்டும்? நீதியின் குரலாக, பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தரப்பு நியாயத்தையே பேசுபொருளாக்க வேண்டும். அதுதான் அறம். ஊடங்கங்களுக்கு மட்டுமல்ல; மக்களைக் காப்பாற்றுவாதற்காகவே அவதாரம் எடுத்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அறம். இந்தச் சூழலில், அண்மைக்காலத்தில் நடந்தேறிவரும் சில நிகழ்வுகளைக் காண்போம். நிகழ்வு 1அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யட்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனைகள் வழங்கப்படட்டும். அதில் தவறு இல்லை. ஆனால் உ.பி. அரசு இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு புதிய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அதாவது, போராட்டங்களை முன்னின்று நடத்துவோர் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டோரது வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அல்லது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக கூறி, காலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. மதியம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. உ.பி இந்தியாவின் ஒரு அங்கம்தானே? இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநிலம்தானே? அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நாடாளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கிறது அல்லவா? அந்த அமைப்புகள் கடமையைச் செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அந்தக் கடமையைச் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதுதானே? நிகழ்வு 2தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 7 விசாரணைக் கைதிகள் காவல்நிலையத்தில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கடுமையாகத் தாக்கப்பட்டதால் மரணமடைந்த்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்குள், முதலமைச்சர் சட்டமன்றத்தில், அந்த நபர் உணவு ஒவ்வாமையால் மரணித்ததாக தவறான தகவலைச் சொல்கிறார். நிகழ்வு 3குடந்தையைச் சேர்ந்த பட்டியல் சமூகப் பெண்ணும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரும் பெண்வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் அண்ணன், தான் மனம்மாறி அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி விருந்துக்கு அழைத்து, இருவரையும் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நிகழ்வு 4கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி, எல்லாவற்றையும் டிரெண்ட் ஆக்கும் சமூக வலைத்தளங்களும் சரி, பெரிதாகப் பொருட்படுத்தவே இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்அப் மரணத்தை மிகப்பெரிய அளவில் வைரலாக்கின சமூக வலைத்தளங்கள். அந்தச் செய்தியைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டங்கள் நடத்தின. கடந்த காலங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தபோது ஊடகங்களும் கட்சிகளும் இடைவிடாது பேசுபொருளாக்கி, போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், தற்போது குடந்தையில் நடந்த படுகொலையை சாதி ஆணவப்படுகொலை என்று குறிப்பிடவே மறுக்கின்றன. சாதிவெறி என்பது, சாதியப் படிநிலையின் எந்த அடுக்கில் இருந்தாலும் அது சமூக இழிவே என்ற உண்மையைப் பேசாமல் மூடி மறைக்கின்றன. அவ்வாறு உடைத்துப் பேசாமல், இத்தகைய படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இவர்கள் சாதியை ஒழிக்கப் போராடுவதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லது நகைப்புக்குரியது. கடந்த காலங்களில் டெல்லியிலும் கஷ்மீரிலும் பெண் பாலியல் வன்கொடுமைகள் நடந்தபோது பொங்கி எழுந்து, “ஜஸ்டிஸ் ஃபார்_____” என்று பதாகைகள் ஏந்தியும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கியும் இவர்கள் எவ்வளவு பெரிய சமர் புரிந்தனர்? இங்கே நம் மண்ணில் நம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது ஊடகங்களும் அன்று போராடிய கட்சிகளும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டுள்ளன. ஏன் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள்? நடந்த குற்றத்தைப் பாரபட்சமின்றிக் கண்டிக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர் யார் என்று பார்த்து, கண்டிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது, அந்தக் குற்றத்தை விட மோசமானது. எத்தகைய அரச பயங்கரவாத்தையும் எதிர்க்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டப்பட்ட அரசாக இருந்தால் கண்டுகொள்ளாமலும், நமக்கு எதிர்ப்பான அரசாக இருந்தால் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துவதும் மிகமிக ஆபத்தான போக்கு. இப்படியெல்லாம் ஊடகங்களும் முன்னால் எதிர்க்கட்சிகளும் செலக்டிவ் நிலைப்பாடுகளை எடுப்பதால்தான், திரு.ஆர்.எஸ்.பாரதி, திரு.அண்ணாமலை போன்றவர்கள் இவர்களை ஏலம்போட்டு இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல, சிறிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள், அந்தந்த நேரங்களில் பெரிய கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன என்ற விமர்சனங்கள் பலதரப்பிலும் வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட எப்போதும் தயங்காமல் முன்வர வேண்டும். இதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களுக்கும் நீதி கிடைக்கும். இவர்களும் மேற்சொன்ன விமர்சனங்களில் சிக்காமல் சுயமரியாதையுடன் நேர்மைக்கே உரித்தான கம்பீரத்துடன் பயணிக்கலாம். செய்வார்கள் என்று நம்புவோம். தஞ்சை ராஜேஷ்

ஜெய் பீம்

ஜெய் பீம்

திரை விமர்சனம் யாரெல்லாம் மனித உயிருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அவர்களே அதற்கு எதிராக இருந்தால் என்ன விளைவு என்பதுதான், ட்டி.ஜெ.ஞானவேல் எழுதி இயக்கி, சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், முதன்மைப் பாத்திரத்தில் சூர்யா நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம். கல்வி அறிவுக்கு வாய்ப்பில்லாத, சாதி பண பலமில்லாத ராஜாக்கண்ணு, ஒரு திருட்டுப் புகாரில் உறவினர் சிலரோடு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவனது மனைவி செங்கேணியிடம், அவர்கள் தப்பித்து விட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். நம்ப மறுத்த மனைவி, காவல்துறையினரின் சித்திரவதை நெருக்கடிகளைத் தாண்டி, கையிலும் வயிற்றிலும் குழந்தைகளோடு சந்துரு என்கிற வழக்குரைஞர் துணையுடன், காணாமல் போன தனது கணவனை மீட்டுத் தர நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தை நடத்துகிறார். அதன் முடிவு என்ன என்பதே ஜெய் பீம் படத்தின் கதை. “ஒரு ஆளு மேல ஒரு கேசுதான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேசு போட்டு வையுங்க, எவன் வந்து கேட்கப் போறான்?” – ஜெயிலர், “நேத்து அடி வாங்கினான், இன்னிக்கு வந்து போராட்டம் பண்றான். இதுதான் ட்ரீட்மென்ட் கொடுக்கற லட்சணமா? யூஸ்லெஸ் ஃபெலோஸ்” – காவல்துறை அதிகாரி “விஐபி கேஸ்கூட இல்லை மேடம், சாதாரண டிரைபல் உமன் கேசுதான்” – உயர்நீதிமன்ற வழக்குரைஞர் “ஒரு டிரைபல் பொம்பளைய ஹைகோர்ட் வரை வர விட்டிருக்க” – அட்வகேட் ஜெனரல் “குற்றத்தைத் தடுக்கணும்னா எல்லா நேரமும் சட்டப்படி நடக்க முடியாது சந்துரு” – காவல்துறை அதிகாரி “நாளை ஒரு நாள் மட்டும் சமாளிச்சுட்டா போதும், ஜட்ஜ் பேனல் மாறுது” – அட்வகேட் ஜெனரல் – லாக்கப் உள்ளே இருப்பது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் இந்தவகை மனோநிலைக்கு மத்தியில், வெளியே இருப்பதும்கூட பேராபத்துதான் என்பதை, இதைப்போன்ற வசனங்கள் மூலம் படம் துல்லியமாகச் சித்தரிக்கிறது. “எம்மா நடந்தாலும் எங்க ஆளுங்களுக்கே பட்டா கெடைக்கறதில்ல. நீங்க என்னமோ பட்டாங்கறீங்க, படிங்கறீங்க..” என மைத்ரா டீச்சரிடமும், “பாம்பு பிடிக்க வேணாம்னுதாய்யா படிக்க ஆசைப்பட்றான்” என்று தாசில்தாரிடமும், “டே பையா, மனுஷங்கிட்ட இருந்து ஒத்தி இருந்தாதான் உனக்கு நல்லது, போயிட்டு வா” என்று பாம்பிடமும், “இந்தக் காயமெல்லாம் கொஞ்ச நாள்ல ஆறிடும். ஆனா திருட்டுப் பட்டம் காலத்துக்கும் தங்கிடும்டா…” என்று சகோதரன் இருட்டப்பனிடமும் கூறும், அப்பாவி இருளர் ராஜாகண்ணுவாக வரும் கே.மணிகண்டன் –    “உழைச்சுப் பொழைக்க தெம்பு இருக்கும்போது, நாங்க ஏஞ்சாமி திருடனும்?” என திருட்டுத் தாலி என்று பரிகசிக்கும் காவலரிடம் சொல்லும்போதும், “இந்தக் கேஸ்ல தோத்தாகூடப் பரவாயில்லை, புள்ளைங்ககிட்ட போராடித் தோத்துட்டேன்னு சொல்லிக்கிறேன்” என டிஜிபியிடம் சொல்லும்போதும், டிஜிபி சொல்லியபடி போலீஸ் ஜீப்பில் ஏறாமல் நடந்தும் பஸ்ஸிலுமாக வீட்டிற்குத் திரும்பும்போதும், சித்திரவதைக்கு இடையில் வெளியே சாப்பிட ஒரு வாய் எடுத்து வைக்கும்போது லாக்கப் உள்ளே ஆணும் பெண்ணுமாகக் காவலர்களின் சித்திரவதைகளால் அலற, அழுதுகொண்டே சாப்பாட்டைத் தவிர்க்கும்போதும், தனது கணவனின் பெயர் ஒரு பாடலில் வருகிறது என்கிற ஒரே காரணத்தால், அந்தப் பாடலையே நேசிக்கும் போதும், சுயமரியாதையும் பாசமும் நேசமும் கொண்ட பெண் செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் – “அசிங்கம் அவங்க பேச்சில இல்ல, நம்ம நடத்தையிலும் இருக்கு” என்று சக காவல் அதிகாரியிடம், “ஜனநாயகத்தை நில நிறுத்தணும்னா சில நேரத்துல சர்வாதிகாரத்தக் கையிலெடுத்துதான் ஆகணும்” என்று வழக்குரைஞர் சந்துருவிடம், “டிபார்ட்மெண்ட்டுக்காக எதையாவது விட்டுக் கொடுக்கலாம், எதற்காகவும் என் மனசாட்சிய விட்டுக்கொடுக்க முடியாது, சாரி சார்” என்று டிஜிபியிடம், உச்சபட்சமாக உயர்நீதிமன்றத்தில் மனசாட்சிப்படி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, சாட்சிகளின் வாக்குமூலம் வழங்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் – “அப்போ கடைசிவரை வேடிக்கை மட்டும்தான் பாப்பீங்க? ஏழாயிரம் மனுஷங்க சார்”, “இல்ல சார், நீங்க இவ்வளவு பாசிட்டிவா சொல்றதுதான், இன்னும் எனக்குச் சந்தேகமா இருக்கு” சந்திரனிடம் அவ்வப்போது பேசும்போதும், “திருடங்க இல்லாத சாதி இருக்கா நடராஜ்? முதல்ல, ஒரு ஜாதி பெயரைச் சொல்லி அவங்களை இப்படி பிராண்ட் பண்றத நிப்பாட்டுங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் கூறும்போதும், ” “எந்த ஆதாரமும் இல்லாமல் கேஸ் போடுவது, போலீசை எதிர்த்து அல்ல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எதிர்த்து. இந்த அரசாங்கத்த எதிர்த்து. சவாலான போராட்டமாய் இருக்கும், தயாரா இருங்க” என்று செங்கேணியிடமும், மைத்ராவிடமும் சொல்லும்போதும், “எதையும் சாதிப்பதற்காக இந்தக் கேஸ எடுக்கல சார். ஒரு இன்னசன்ட் டிரைபல் உமனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கணும்னு போராடறேன். இன்னிக்கு செங்கேணி, நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கு ஆதரவா நிப்பேன். நீதி கிடைக்கலன்னா, ரோட்டுல நின்னு போராடுவேன். போராடறதுக்கு லா எனக்கு வெப்பன், தட்ஸ் ஆல்” என்று அட்வகேட் ஜெனரல் ராம்மோகனிடம் தெளிவு படுத்தும்போதும், “தப்பு பண்றவங்களுக்கு ஜாதிகள் நிறைய இருக்கு சார், பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்? நாமும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போலாம் சார்” என்று ஐஜி பெருமாள்சாமியிடம் உறுதியாகத் தெரிவிக்கும்போதும், “காந்தி நேருன்னு முக்கியமான தலைவரெல்லாம் இருக்காங்க, ஏன் அம்பேத்கர் மட்டும் இல்ல!?” என்று வினவும் போதும், “ஏழு பேரா, ஏழாயிரம் பேராங்கறது முக்கியம் கிடையாது. பாதிக்கப்பட்டவங்க யாராயிருந்தாலும், அவங்க எத்தனை பேரா இருந்தாலும் நீதி கிடைக்கணும். அத உறுதி செய்யறது இந்த நீதிமன்றத்தோட தார்மீகக் கடமை, மை லார்ட்”, “பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்”, “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”, “வரலாறு தெரியாதவங்களுக்குச் சொல்றேன். கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட புருஷனோட மரணத்துக்கு நீதி கேட்கற இந்தப் பொண்ணு செங்கேணிதான், நம்ம கண்ணு முன்னாடி நிக்கற கண்ணகி”, “கணவன இழந்த செங்கேணிக்கு ஊர் மையத்துல ஒரு பட்டா வழங்கனும்னு கேட்டுக்கறேன்” என்று ஆணித்தரமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும்போதும், சட்ட நிபுணத்துவம் மட்டுமல்லாது மனிதநேயமும் கூடிய உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வரும் சூர்யா – என அனைவருமே கதை, சம்பவங்கள், காட்சியமைப்பு, வசனங்கள் சேர்ந்து செதுக்கிய இம்முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றி, உச்சபட்ச அர்ப்பணிப்புத் திறமையால், அவை ‘பளிச்’சிட்டுத் துலங்கச் செய்துவிடுவது தனிச்சிறப்பு. அவ்வாறே, குழந்தை அல்லி (பேபி ஜோஷிகா மாயா), எஸ்.ஐ. குருமூர்த்தி (தமிழ்), ஆசிரியை மைத்ரா (ரஜிஷ விஜயன்), தலைமைக் காவலர் வீராச்சாமி (சூப்பர்குட் சுப்பிரமணி) காவலர் கிருபாகரன் (பால அசன்), அட்வகேட் ஜெனரல் எஸ் ராம்மோகன் (ராவ் ரமேஷ்), வழக்குரைஞர் சங்கரன் (எம்.எஸ்.பாஸ்கர்), பப்ளிக் ப்ராசிக்யூட்டர் செல்லபாண்டியன் (குரு சோமசுந்தரம்), ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் (இளவரசு), காவல்துறை அதிகாரி நடராஜ் (ராஜேஷ் பாலச்சந்திரன்), டிஜிபி எஸ் ராதாகிருஷ்ணன் (ஜெயபிரகாஷ்) தத்தம் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவும் (எஸ்.ஆர்.கதிர்) இசையும் (சீன் ரோல்டன்) படத்திற்கு வலு சேர்த்துள்ளன. தோய்வே தோய்ந்து போகும் அளவிற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்டிங் டைரக்டர் வெகுவான பாராட்டுக்குரியவர்கள். காவல்துறையினரின் லாக்கப் சித்திரவதைகள் திரையைத் தாண்டி வந்து நம்மைத் தாக்குகின்றன. இனி, இது நின்று விடுமா? சாத்தான்குளம் சம்பவமே வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு பிறகும்தானே! ஒட்டுமொத்தமாக நிற்காது, குறையலாம். அப்பட்டமாக ஒரு அப்பாவியைக் கொலை செய்த, அதை மறைக்கப் பாடுபட்ட அத்தனை நெஞ்சழுத்தக்காரர்களின் மனசாட்சியையும் நிச்சயம் இது உலுக்கி இருக்கும். அவ்விதம் அவர்கள் செய்ய எத்தனிக்கும்போது, இனி யோசிக்க வைக்கும். ஜெய் பீம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இருந்தாலும், சில சித்தரிப்புகள் அதனுடன் சேர்க்கப்பட்டிருப்பது, கலையம்சம் மிகுந்த படமாகவும் பரிணமிக்கச் செய்வதுடன், பட்டவர்த்தனமான உண்மைகளைக் கூறும் ஆவணப்படங்களில் இருந்து விலகி நிற்பவர்களையும்கூட, ஆவணப்படுத்தப்பட்ட உண்மை நிலையை அறியச் செய்வதும்தான் ! சித்தரிப்புகளில் சில, சிலரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்குமாயின், அவை சரியாகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விதமான சித்தரிப்புகள் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கேதான் உண்டு. ஜெய் பீம் கொண்டாடப்பட வேண்டிய படம் மட்டுமல்ல; அது பேசும் உண்மைகளை, திரையரங்க வெளியீட்டின் மூலமும் கடைகிராம மக்கள் வரை, கொண்டு சேர்க்கப்பட வேண்டிய படமும்கூட. முழுத் தகுதிகள் இருந்தும் விருதுகள் கிடைக்காமல் போகலாம் – காட்டப்படும் உண்மைகளையும் சேர்த்துச் சேர்த்து அங்கீகரிப்பதாகி விடுமோ எனும் அச்சத்தால். இதை வெறும் படமாக மட்டும் கடந்து செல்லாமல், பல பரிமாணங்களில் அது தரும் பாடத்தையும், படத்தைக் காண்பவர் எல்லாம் பாராட்டித் தீர்ப்பதுதான், அதன் வெற்றி. 27 ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்டிஸ் கே.சந்துரு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தபோது கையாண்ட வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஜெய் பீம் படத்தில், வழக்குரைஞர் சந்துருவாக பாத்திரமேற்று உயிர்ப்பித்ததின் மூலம், நீதி நாயகம் கே.சந்துரு மற்றும் நடிகர் சூர்யா பரஸ்பரம் கௌரவம் பெறுகிறார்கள். இப்படம், நடிகர் சூர்யாவின் நடிப்புத் தொழிலில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையிலேயே ஒரு மைல்கல். மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து