ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்
கட்டுரையாளர்: உமா மகேஸ்வரி ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை ஆடையை வைத்தும் ஒடுக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலையில்தான் இந்த 2023இலும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த செய்தியொன்று பல தளங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமான செய்தி. ஆம், கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், புடவைக்குப் பதிலாக சுடிதாரில் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். தலைமையாசிரியரும் கல்வி அலுவலரும் அதற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். இவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல ஆசிரியைகள் இந்த உடைப் பிரச்சனையால் அவதியுற்று வரும் நிலையை ஆங்காங்கே காண முடிகிறது. வளர்ந்த மாணவர்கள் மத்தியில் சங்கடமாக உணரும் பெண் ஆசிரியர்கள் கோவையில் சுடிதார் அணிந்து வந்த அந்த ஆசிரியர் அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். புடவை அணிந்துகொண்டு வந்து வகுப்பில் பாடம் நடத்தும்போது கிண்டல் கேலிப் பேச்சுகளை அவரது உடையை வைத்து மாணவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர் தனது சேலையைச் சரிப்படுத்திய பிறகே மீண்டும் கற்பித்தலைத் தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் இது தொடர, வசதியான உடையாகக் கருதி, பள்ளிக்கு சுடிதாரில் வந்திருக்கிறார். ஆனால் பள்ளித் தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியதால் தொடர்ந்து சுடிதாரில் செல்ல முடியவில்லை. மீண்டும் புடவையை அணிந்து வந்த ஆசிரியர் மாணவர் தரும் சங்கடங்களைச் சந்திக்க நேரிட, அது அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. சமீப காலங்களில் பள்ளி மாணவர்களிடையே பல விரும்பத்தகாத நடத்தைகள் வெளிப்படுவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கலாம். அவரவர் வீடுகளில், வசிப்பிடங்களில், சமூகத்தில் சற்று உற்று நோக்கினாலே குழந்தைகளிடம் உருவாகியுள்ள நடத்தை மாற்றத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மேல்நிலை வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களது பணி, கூடுதல் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் ஆசிரியைகள் பல இடங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஏனெனில் இந்தச் சமூகத்தில் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை, வயதுக்கு ஏற்புடையதாக இல்லாத பலவற்றை உற்றுநோக்கும் குழந்தைகள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைச் செயல்படுத்த முனைகின்றனர். குறிப்பாக, பள்ளிகள் – வகுப்பறைகள்தான் அதற்கான தளங்களாக அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது வீடுகளில் சரியான வழிகாட்டுதல் இல்லை; பள்ளிகளிலும் உரையாடல் என்பதே இல்லை. திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்களை ஹீரோக்களாகவும் ஆன்ட்டி ஹீரோக்களாகவும் எண்ணிக்கொள்ளும் மனோநிலை மாணவர்களிடம் தோன்றுகிறது. அதன் ஒருபகுதியாகவே பள்ளிகளில் பெண் ஆசிரியர்களது உடலை வைத்துக் கேலி செய்யும் சூழல் உருவாகிறது. அதேபோல் வீடுகளில் பெண்கள் நடத்தப்படும் விதம், மரியாதையற்ற தன்மை இதையெல்லாம் மாணவர்கள் பார்த்து வளர்கின்றனர். இவற்றின் வெளிப்பாடே பள்ளிகளில் நடக்கும் இப்படியான சில விரும்பத்தகாத விளைவுகள். வீடும் பள்ளியும் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்தத் தவறியதன் விளைவுதான் இது. ஆகவே வளர்ந்த மாணவர்கள் மத்தியில் உடை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதாலேயே பல ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர விரும்புகின்றனர். அரசாணை 67 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்ட அரசாணை (GO No.67) அரசு ஊழியர்கள் அணியக்கூடிய உடை குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்குத் தனித்தனியாக என்ன மாதிரியான உடைகளை அணியவேண்டும் என்று அந்த அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்துத் தரப்பினரும் கண்ணியமான உடையையே அணிந்து வரவேண்டும் என்று அந்த அரசாணை கூறுகிறது. பெண்களுக்கான உடைகளாக, சல்வார் கமீஸ், சுடிதார், புடவை என அனைத்தும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளவை ஆசிரியர்களுக்கும் பொருந்துகிறது. ஏனெனில் அவர்களும் அரசு ஊழியர்களே. பள்ளிக்கல்வி இயக்குனர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பள்ளியில் பெண் ஆசிரியர்களின் நிலை உடல்நிலையில் பிரச்சனைகள் வந்து புடவை அணிய முடியாமல் இன்னலுறும் ஆசிரியர்களும் கல்வித்துறையில் சுடிதார் அணிய அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் துறையில் அனுமதி கிடைக்காததால் வேதனையுடன் புடவையையும் சுமக்கின்றனர். அந்தவகையில் நம்முடன் பேசிய கூகல் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஜான் பௌலா, “எனக்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் ஜாக்கெட் அணிய முடியாது. புடவை அணிவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளியில் தலைமையாசிரியரிடம் அனுமதி கேட்டால், சுடிதார் அணிந்து வரக்கூடாது என்கிறார். துறையில் வட்டாரக் கல்வி அலுவலருக்கு, மாவட்டக் கல்வி அலுவலருக்கு என, அனைவரிடமும் எனது மருத்துவச் சான்று மற்றும் பரிசோதனைச் சான்றுகளை இணைத்து விண்ணப்பித்து அனுமதிக்காகக் காத்திருந்து மிகுந்த போராட்டத்திற்கிடையே அனுமதி பெற்றேன். மீண்டும் இந்தக் கல்வி ஆண்டில் இதே அனுமதிப் பிரச்சனை. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா என்று நினைத்து வருந்தினேன். இந்த அரசாணையைப்பற்றி அறிந்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார். “மார்பில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேரும் காலம் வந்தபின்னும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜாக்கெட் அணிய முடியாத காரணத்தால், முழுமையாகக் குணமாகும்வரை சுடிதார் அணிந்து செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் பள்ளிக்குச் சென்றபோது உடன் பணிபுரியும் ஆசிரியைகளால் பட்ட இன்னல்களைச் சொல்லி மாளாது. உடன் பணிபுரியும் ஆண் ஆசிரியர், அலுவலகம் சென்று உயரதிகாரியிடம் பேசி அனுமதி வாங்கினார். ஏறத்தாழ ஒரு மாதம் சுரிதாரில் சென்றேன். இன்று இந்த G.O. பார்த்த பிறகு அனைத்தும் ஞாபகம் வருகிறது. இப்படி ஒரு ஆணை இருக்கிறது என்பதையே இன்றுதான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி” என்கிறார் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் தேன்மொழி. கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் சசிகலா, இந்தக் கல்வி ஆண்டில் முதலில் இருந்தே பள்ளிக்கு சல்வார் கமீஸ் உடை அணிந்து சென்றுகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தலைமையாசிரியர் கேள்விக்கு உட்படுத்தினாலும் இந்த அரசாணையைக் கூறி ஆசிரியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசாணைப்படி தாங்கள் விரும்பிய உடையை அணிந்து வரலாம் என்று மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதித்துள்ளார் என்கிறார். இப்படி, தற்போது இந்த அரசாணையைப் பார்த்தபிறகு பலரும் தாங்கள் சந்தித்த இந்தச் சுடிதார் பிரச்சனைகள் குறித்து மனம் திறக்கின்றனர். அரசாணைக்குப் பிறகும் தடைகள் ஆசிரியைகள் புடவை, சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் துப்பட்டாவுடன் அணிந்து வரலாம் என்று அரசாணை கூறிய பிறகு, தமிழ்நாட்டில் ஆங்காங்கே சிலர் அணிந்து செல்லத் தொடங்கினர். ஆனால் சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சேலையைத் தவிர வேறு உடை அணியக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதும் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலக்கல்நத்தம் என்ற பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் இந்த அரசாணைக்குப் பிறகு சுடிதார் அணிந்து பள்ளி சென்றிருக்கிறார். ஆனால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் அங்குள்ள மூத்த பெண் ஆசிரியரின் வழியாக இவரிடம் இந்த உடையை அணியக் கூடாது என வற்புறுத்தக் கூறியுள்ள்ர். ஆனால் அதன் பிறகும் இவர் தொடர்ந்து சுடிதார் உடையையே அணிந்து செல்வதால், ‘வழக்குத் தொடர்ந்த ஆசிரியருக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும், மற்ற ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. எனவே உயர் அலுவலர் வழிகாட்டல்படி (Dress Code) உடை அணிந்து வரவேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுகிறது. அதன்பிறகும் ‘முதன்மைக் கல்வி அலுவலருக்குக் கடிதம் கொடுத்து அனுமதி வாங்குங்கள். பிறகு உங்கள் விருப்பப்படி உடை அணியலாம்’ என்று தொடர்ந்து பள்ளியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். பெண் ஆசிரியர்களே இந்த மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் பல இடங்களில் நடக்கிறது. சமூகத்தின் பார்வை – உடை என்பது கலாச்சாரம் காலம்காலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உடையை அவர்கள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் வாழும் வீடும் குடும்பத்தாரும் சமூகமும்தான் முடிவு செய்கின்றன. ஒருகாலத்தில் பெண்கள் பருவம் அடைந்த உடனேயே பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பதிமூன்று, பதினான்கு வயதுள்ள பெண் குழந்தைகள் பூப்படைந்த பிறகு, தாங்கள் விரும்பவில்லை என்றாலும் தாவணியைத் தவிர வேறு உடை அணிய வீட்டில் அனுமதி கிடையாது. வீட்டிலேயே இல்லாதபோது, ஒரு பெண் பள்ளிக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ தான் விரும்பும் உடையை அணிவது சாத்தியமற்ற செயல். ஆனால் சமீபகாலமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சேலை அணிந்தவர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், பேண்ட் சட்டை மற்றும் பல நவீன ஆடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமல்ல , வளர்ந்த பெண்களும்கூட எல்லாவிதமான உடைகளையும் அணிய ஆரம்பித்துள்ளனர். இன்று பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை எனலாம். அந்தவகையில் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான உடையை அணிய ஆரம்பித்துள்ளனர். பல துறைகளிலும் உடை அணிவது என்பது ஒரு பிரச்சினையாக இல்லை. மத்திய மாநில அரசு அலுவலகளில் பணிபுரியும் பெண்கள், கீழ்நிலையில் இருந்து உயர்பதவிகள் வரை இந்த அரசு ஆணை 67 வருவதற்கு முன்பிருந்தே புடவை, சுடிதார், சல்வார் என அணிந்து செல்வதைப் பார்க்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் இருக்கும் பெண்களும் சல்வார் கமீஸ், சுடிதார் ஆகியவற்றை அணிகின்றனர். பள்ளிக்கல்வித் துறையிலேயேகூட, பல மட்டங்களில் பணிபுரியும் பெண்களும் சுடிதார் அணிந்து பணிக்குச் செல்கின்றனர். இவை மட்டுமல்லாது, கல்வித்துறை அலுவலகங்களில் மாற்றுப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஆசிரியர்களும் தாங்கள் விரும்பும் உடையை அணிந்து செல்கின்றனர். ஆனால் அதே ஆசிரியர்கள், பள்ளிக்குள் பாடம் கற்பிக்கக் கூடியவர்களாக இருந்தால் சேலை மட்டுமே அணியக் கட்டாயப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் ஆசிரியர்கள் எல்லாரும் கலாச்சாரக் காவலர்களாகவே இருக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் சமூகத்தின் போக்கு கவலைப்பட வைக்கிறது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் சிந்தனையில், சிறுவயது முதலே ஆசிரியை என்றால் சேலைதான் அணிய வேண்டும் பதிய வைக்கக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆண் ஆசிரியர்கள் நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறார்களா? பாரம்பரிய உடையைத்தான் பள்ளிக்கு அணிந்து வருகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். பள்ளி மாணவிகள் உடை மாற்றம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தாவணி உடையை மாற்றி சுடிதார் உடையைப் பரிந்துரை செய்து 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து