சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா? நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் தலைமைச் சேனாதிபதியான பீஷ்மர், 10ஆம் நாள் போரில் வீழ்ந்தார். அதன் பின்னர் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான துரோணர் 15ஆம் நாள் கொல்லப்பட்டார். அதன்பின் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான கர்ணன் 17ஆம் நாள் போரில் கொல்லப்பட்டான். கர்ணன் இறந்தபோது, அவன்தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரிந்தது. அதனால் கர்ணன் இறந்ததும் யுத்தம் தற்காலிகமாக நின்றுவிட்டது. பாண்டவர்களும் கௌரவர்களும் மாளாத துக்கத்தில் மூழ்கினர். கர்ணனுக்கு விருஷகேது என்ற மகன் இருந்தான் அவன் கர்ணனின் 10 மகன்களில் உயிரோடு இருந்த கடைசி மகன். அவன் கௌரவப்படையில் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து வந்தான். கர்ணனின் மகனை மன்னனாக்குவதில் தர்மனுக்கும் துரியோதனனுக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தை அத்தோடு நிறுத்திவிட்டு, கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டிவிடலாம் என்று கௌரவர்களும் பாண்டவர்களும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இதுபற்றி பீஷ்மரிடம் ஆலோசனை பெற விரும்பினர். பீஷ்மர் அப்போது அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார். அவர், சூரியன் தெற்குத் திசையில் பயணிக்கும் தட்சிணாயணப் புண்ணிய காலத்திலோ அல்லது வடக்குத் திசையில் பயணிக்கும் உத்ராயணப் புண்ணிய காலத்திலோ, விரும்பும்போது மரணமடைந்துகொள்ள வரம் பெற்றிருந்ததால், பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகாலம் முழுவதும் உயிரோடு இருந்தார். அவர் குலத்தின் பிதாமகன் என்பதால், கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டுவது பற்றி, அவரிடம் இரு தரப்பினரும் ஆலோசனை கேட்டனர். பீஷ்மர், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். இறந்துபோன கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் விருஷாலி. அவள் துரியோதனனின் தேரோட்டியின் மகள். அந்த முதல் மனைவிக்கும் கர்ணனுக்கும் பிறந்த மகன்தான் விருஷகேது. கர்ணனின் இரண்டாவது மனைவி சுப்ரியா. துரியோதனின் மனைவியின் அந்தப்புரத்தில் பணியாற்றிய தோழி. விருஷகேது கர்ணனின் சூத்திர மனைவியின் மகன் என்பதால், அவன் குலத்தினால் சூத்திரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் மன்னனாக அவனுக்குத் தகுதியில்லை என்றும் ஒரு சத்திரியன் மட்டுமே மன்னனாகத் தகுதி உள்ளவன் என்றும் பீஷ்மர் சொன்னார். அதனால் கர்ணணின் மகனுக்கு முடி சூட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிடுகிறார். அதனால் அந்த  ஆலோசனை கைவிடப்பட்டது. யுத்தத்தைத் தொடர்வது என்றும் முடிவாயிற்று. அதுவரை கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்துவந்த கர்ணனின் மகன் விருஷகேது மட்டும் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டான். பீஷ்மர் விருஷகேதுவுக்குப் பட்டம் சூட்டுவதை நிராகரித்ததன் காரணமாகப் போர் மேலும்  நீடித்தது. இல்லையேல் 17ஆவது நாளிலேயே குருக்ஷேத்ர யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும். கர்ணனின் மகனேயானாலும் விருஷகேது சூத்திரன் என்பதாலும் சத்ரியன் இல்லை என்பதாலும் அவன் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியற்றவன் என்று பீஷ்மர் சொன்ன சட்டவிதியின் காரணமாக, மேலும் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். மகாபாரதக் காலத்துச் சட்டம் சூத்திரன் – சத்திரியன் என்ற பாகுபாடு பார்க்காமல் இருந்திருந்தால், இந்த அநியாயமான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். இந்தச் சட்டவிதி இந்தக் காலம் வரை தொடர்ந்திருந்தால், அதாவது, அதே கலாச்சார விதிகள் இப்போதும் தொடருமானால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் வைசிய வகுப்பைச் சேர்ந்த தாமோதரதாஸ் நரேந்திர மோடி பிரதமராகவும் ஆகியிருக்க முடியுமா? முடியாதல்லவா..? மராட்டிய வீரர் சிவாஜியும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. வீர சிவாஜி மீனவ வகுப்பைச் சேர்ந்தவர். சத்திரியர்கள்தான் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடியும் என்று பார்ப்பனர்கள் சொன்னதால், வீர சிவாஜி பெரும் பொருட்செலவில் காசிக்கு ஆள் அனுப்பி ‘காகா பட்டர்’ என்ற பார்ப்பனரை மகுடம் அணிவிக்க அழைத்து வரச் செய்தார். காகா பட்டர் பண ஆசை பிடித்த பைசாசம். ‘பரிகாரம் செய்து, மீனவ குலத்தைச் சேர்ந்த வீர சிவாஜிக்குப் பட்டாபிஷேக விழா நடத்தித் தருகிறேன்’ என்று கூறி, சிவாஜி சேர்த்து வைத்திருந்த திரண்ட செல்வம் முழுவதையும் அபகரித்துக்கொண்டான். அதன் பிறகும் அவனுடைய சாதித் திமிர் போகவில்லை.  இதை ‘வீர’ சிவாஜியால் தாண்டிப் போக முடியவில்லையே..! பாரத கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது என்பது சரியா..? பீஷ்மர் சட்டப் பிரச்சினைகளைச் சொன்னது இப்போதுதானா..? (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

கனவில் தொலைந்தவன்

கனவில் தொலைந்தவன்

நூல் விமர்சனம் வகைமை: வரலாற்று நாவல் ஆங்கில மூல நூலின் ஆசிரியர்: கிரண் நகர்க்கர் தமிழாக்கம்: அக்களூர் இரவி வெளியீடு: சாகித்ய அகாதமி பக்கங்கள்: 800 விலை: 1100 ரூபாய்கள் ‘cuckold’ – இதுதான் ஆங்கில மூல நாவலின் தலைப்பு. பெண்மையை அல்லது பெண்ணைக் கொச்சைப்படுத்தும் பொருள் கொண்ட சொல். இது தமிழுக்கு ‘சரி வராது’ என்று தலைப்பை மாற்றிவிட்டதாக எழுதுகிறார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. முதலில் அது அறம்தானா? என்று நண்பர் இரவியிடம் கேள்வி எழுப்பாமல் இந்த மதிப்புரையைத் தொடருவதற்கில்லை. ஏனெனில் கதாநாயகன் ‘கனவில் தொலைவதற்கு’ அந்த இழிசொல்லே காரணமாகி விடுகிறது. இராமாயணத்தில் இத்தகைய இழிசொல்லைத் தாங்காத இராமன் அக்கினியை வென்றுவந்த மனைவிக்கே தண்டனை அளித்தான். தமிழில் கம்பன் அக்கினிப் பரீட்சையோடு இராமாயணத்தை முடித்துக்கொண்டான் அல்லவா? நாவலில் நாயகன் அந்த ‘சொற்குத்தலை’த் தாங்கி மேலெழுகிறான். நாவலும் இராமாயணத்தில் வந்த அதே கதை முடிச்சை இலாகவமாகத் தொட்டுத் தொடங்கும் புனைவழகில் நானும் சற்றுத் தொலைந்து மீண்டேன். அந்த முதல் முப்பது நாற்பது பக்கங்களை இருமுறை படித்தபிறகே நாவலைத் தொடர்ந்தேன். பெண்களும் ‘cuckquean’ ஆக தமக்குள் குமைவார்களே என்று புராணங்கள் இதிகாசங்கள் ஆராயவில்லை அல்லவா? ஆம். இந்தக் கதையின் நாயகன் பெண்கள் விடயத்தில் அப்படித்தானே இருக்கிறான்.. அவன் மட்டுமல்ல; இந்தக் கதையின் அரச குல ஆண்கள் எல்லோருமே அப்படி இருக்கிறார்களே! ஆனாலும் அக்களூர் இரவியின் தலைப்பும் நாவலில் கனக்கச்சிதமாகப் பொருந்தித்தான் போகிறது என்பதைச் சொல்லிவிட்டுத் தொடருவோம். நண்பர் ரவி தொலைத்தொடர்பு இலாகாவில் கணக்கு அதிகாரியாகப் பணிசெய்து ஓய்வு பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்த ரவி வசிப்பது சென்னையில்தான். பத்து நூல்களுக்கு மேல் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவல் அவரது மொழியாற்றலின் நுட்பத்திற்குத் தகுந்த சான்று. வரலாற்று நாவல்கள் வரலாற்றின் சிலதுளிகளைப் புனைவாற்றலில் மெருகு சேர்த்துச் சொல்வதுதான். ஆனால் புனைவுச் சுதந்திரம் என்ற பெயரில் வரலாற்றை மனம்போலத் திரித்து எழுதுவது வழக்கமாகிவிட்ட காலத்தில், வரலாற்றின் முனை தேயாது புனைவு முலாம் பூசப்பட்ட நாவல்களைக் காணமுடிந்தால் மிக்க மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சியை இந்த நாவல் வாசிப்பு பூரணமாகத் தந்தது. நாவலின் வரலாற்றுக் காலம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். ராஜபுதனத்து அரசர் ராணா சங்காவின் (1484 – 1527) காலத்தின் இறுதி ஆண்டுகளில் கதை நடக்கிறது. 1526இல் பாபர் இப்ராஹிம் லோடியை வென்று மொகலாயப் பேரரசைத் தொடங்கி வைக்கிறார். அடுத்து ராணா சங்காவோடு 1527இல் கனுவாவில் நடந்த மோதலில்வெற்றி பெறுகிறார். ராணா சங்காவின் மூத்த மகன் போஜராஜன் என்ற மஹராஜ் குமார். மஹராஜ் குமாரின் மனைவி கிருஷ்ண பக்தையாக அறியப்படுகிற மீரா. இவர்களோடு இன்னும் சில வரலாற்றுப் பாத்திரங்கள். ராணா சங்கா நடத்திய சில யுத்தங்கள் வழியே அவரை ராஜபுதனத்தின் மகத்தான அரசராக வரலாறு நினைவில் வைத்திருக்கிறது.ஆனால் பாபருடன் நடந்த கனுவாப் போர் அடுத்த 250 ஆண்டுகளுக்கு பாரதத்தில் மொகலாயப் பேரரசை இருத்தி வைத்தது. ஒருபுறத்தில் இந்த நாவல் பாபரின் அல்லது வெற்றிபெற்ற சாம்ராஜ்யக் கனவாளனின் கதையாகவும் மறுபுறத்தில் அதே கனவாய் வாழ்ந்து அதே ‘கனவில் தொலைந்துபோன’ மகராஜ் குமாரின் கதையாகவும் இரண்டு மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று மடிப்புகளில் மீராவின் கதை நாவலில் புனைவின் மடிப்பாக அணைந்து கொள்கிறது. மீராவின் கதையைப் பலர் புனைந்திருக்கின்றனர். அவையெல்லாம் மீராவின் பார்வையில் புனைந்த பக்திப் புனைவுகள். இந்த நாவல் மீராவின் கணவனின் பார்வையில் விரியும் புனைவு. மறுக்கப்பட்ட காதலின், நிராகரிக்கப்பட்ட காமத்தின் கதை. பழைய புனைவுகளைக் கடந்துவிடாமல் புதிய புனைவை இருத்திவைக்கும் இலாவகத்தில் நாவலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மீராவைப் பின்நவீனமாக வாசிக்கும் இரசனையில் வாசகனாக நான் தொலைந்து மீண்டெழுந்தேன். ஏறத்தாழ நான்கு மாத காலம் வாசிப்பில் என்னோடு நெல்லைக்கும் சென்னைக்குமாக இந்த 800 பக்கப் புத்தகமும் பயணம் செய்தது. எனது பல்வேறு சொந்த மற்றும் இலக்கியப் பணிகளினால் வந்த இடைவெளிகளில் வாசிப்பு தள்ளிப்போன யதார்த்த நிலை தவிர, நாவலில் வந்த மீராவின் கதையும் என் வாசிப்பில் இடைவெளியை வேண்டிக்கொண்டே வந்தது. நாவலின் பல பக்கங்கள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்ட பிறகும் அவற்றின் வாசிப்பு பூரணம் ஆகிவிடவில்லை என்றுதான் சொல்வேன். அரசகுடும்பத்தின் வாரிசுச் சண்டைகள் பற்றி பல நவீனங்கள் ரசனையான கதைகளைத் தந்திருக்கின்றன. இந்த நாவலும் தன் கதை நகர்வை சகோதரச் சண்டையில் சாமர்த்தியமாக வைத்துக்கொண்டது. ஆனால் நாவல் அதைப் பற்றியதல்ல. எதிரியைச் சந்திப்பதென்பது, ‘இம்’மென்றவுடன் நேருக்கு நேர் நின்று கத்தி உருவிச் சண்டையிடுவதும் உயிரைத் திருணமாக எண்ணி வெற்றி அல்லது வீரச் சாவு என்ற முரட்டு முடிவுகள் தவிர்த்த மற்றெல்லாம் கோழைத்தனமென யோசிப்பதுமான இராஜபுதனத்து வீரர்களிடையே நவீன ஆயுதத் தொழில்நுட்பங்களை, கொரில்லா யுத்த முறைகளை, தேவையேற்படும்போதெல்லாம் பின்வாங்கித் தப்பிக்கும் உத்திகளை உபதேசிக்கும் மகாராஜ் குமார் என்ற நவீன போர் சிந்தனையாளன் என்னாவான்? 16ஆம் நூற்றாண்டில் யுத்த முறைகள் நவீனமாகிவிட்டன. போர் உத்திகளில் மாற்றங்கள் வந்திருந்தன. இந்த நவீன மாற்றங்கள் பழைய யுத்த பாணிகளில் நிலையான நம்பிக்கை பெற்றிருந்த பாரத நாட்டின், குறிப்பாக வட மேற்கில் அந்நிய எதிரிகள் அடிக்கடி ஊடுருவும் ராஜபுதனத்தின் வீரர்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. போர்கள் என்பவை எதிரி நாட்டைக் கொள்ளையிட, பெண்களைச் சூறையாட என்பதெல்லாம் போய், பேரரசுக் கனவுகள் வந்திருந்தன. அதுவும் அந்நியர், நிலையான இருப்புக்காக வடமேற்கிலிருந்து பீரங்கிகள், மாட்ச் லாக் துப்பாக்கிகள் என்று நவீன ஆயுதங்களோடு வந்து மோதியபோது மிகப்பெரிய படைகள் நிலைகுலைந்தன. யுத்தம் எங்கு யாருக்கிடையே நடந்தாலும் அதற்கான நிதிக்கடனை அளித்து லேவாதேவி செய்யும் வணிகத் தந்திரங்கள் அறிமுகமாகி இருந்ததை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் சொல்கின்றன. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளில் இவர்களே முதலாளியத்தின், ஆயுத வியாபாரத்தின் ஆரம்பமாக இருக்கப்போவதின் எளிய அறிமுகத்தை நாவல் சொல்கிறது. நாவல் பாதி நகர்ந்த பிறகுதான் நாவலில் பாபர் வருகிறார். அவர் எழுதிவைத்திருக்கும் (பின்னாளில் ‘பாபர் நாமாவின்’) குறிப்புகள் வழியாக இந்த ஆப்கானிய அந்நியன் நாவலில் அறிமுகமாகிற புனைவழகு, வாசகனைத் திடீரென்று புதுப்பிக்கிறது. கடல் வழியாகப் போர்ச்சுக்கீசியன் என்ற வணிகன் கடைவிரித்தது மட்டுமல்லாமல், மேலைக் கடல் வழி செல்லும் கப்பல்காரர்களிடம் வரி தண்டல் செய்து அச்சமூட்டுகிற ஆரம்பத்தையும் நாவல் கோடி காட்டுகிறது. எடுத்ததற்கெல்லாம் சண்டை பிடிக்கிற பேராசைக் கூட்டத்தை அவர்கள் புரியத் தொடங்கிவிட்டார்கள். இன்னொரு செய்தி முக்கியமானது. மொகலாயர் வருகைக்கு முன்னர் முஸ்லீம் சுல்தான்களுக்கும் இந்து மன்னர்களுக்கும் பிணக்குகள் இருந்தாலும் சில இணக்கங்களும் இருந்துவந்தன. டில்லி சுல்தானியம் என்பது தங்கள் தலைமேல் கத்தி என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதும் இந்து மன்னர்கள் படைகளில் கணிசமான முஸ்லீம் வீரர்கள் இருந்தனர் என்பதும் நமக்கு வியப்பைத் தருகிறது. மதம் வேறு; பிரதேசம் வேறு என்ற புரிதல் இடைவெளி இருந்திருக்கிறது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் அரச அதிகாரத்தில் பெண்களின் நிர்க்கதியான நிலையை, அவர்களைப் படுக்கைக்கு இழுத்துப்போகும் கேட்பாரற்ற யதார்த்தத்தைச் சொல்கின்றன. இந்தப் பெண்களின் நடுவில் மேர்த்தாவின் இளவரசி மகராஜ் குமாரின் மனைவியாக வருகிறாள். தான் கிருஷ்ணனின் காதலி என்று முதல் நாள் இரவிலேயே மகராஜ் குமாரின் காதலை, காமத்தை நொறுக்கிப் போட்டுவிடுகிறாள். பொது இடத்தில் பாடுகிறாள்; நடனமாடுகிறாள்; இளந்துறவியாகிறாள். ஆனால் இவளுக்குள்ளும் மகராஜ் தன் கணவன் என்ற உடைமைத்துவம் பொங்கி வழிகிறது. அவனது சுதந்திரத்தில் தலையிடுகிறாள். மாறிவரும் அரசியலில், அரியணைப் போட்டியில் கணவனுக்கோ சொந்த நாட்டிற்கோ துணை நிற்காது கண்ணண் பக்தியோடு கரைந்துபோகிறாள். நாவலில் வரும் மற்ற பெண்களான கௌசல்யா, சுனேரியா, சுகந்தா, லீலாவதி எல்லாருமே மகராஜ் குமாரின் வாழ்க்கையில் வந்துபோவது காமம் தோய்ந்தே சொல்லப்படுகிறது. கௌசல்யா தனித்து நிற்கும் பாத்திரம். கௌசல்யா, மகராஜ் குமாரின் ‘சகலமும்’. ஆனால் மங்கள் சிம்மனின் தாய். இந்த மூன்று பாத்திரங்களின் உறவுகள் தாண்டி பாத்திரங்களின் வார்ப்பில் கௌசல்யாவும் மங்களும் மகராஜ் குமாரைப் பின்னால் தள்ளிவிட்டார்கள். சுனேரியாவும் சுகந்தாவும் பரிதாபம் கொள்ள வைப்பவர்கள். நாவலின் போக்கில் எந்த பாதிப்பையும் அவர்கள் தரவில்லை. நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நாவல் முடியும் முன்பு நம்மிடம் விடைபெற்றுவிடுகிறார்கள். மகராஜ் குமார் தனது குற்ற உணர்வுகளில் மூழ்கியிருக்கும்போதும் கழிவிரக்கத்தில் மிதக்கும்போதும் தானே கதை சொல்லி ஆகிவிடுகிறான். தன்னைக் குறித்தும் நாட்டைக் குறித்தும் தனது செயல்களைக் குறித்த பிறர் விமர்சனங்களின்போதும் தன் கனவுகளில் தொலைந்து போகிற தருணங்களிலும் பெரும்பாலும் அவனும் சிலபோது கதாசிரியருமாக இணைந்தே வாசகரிடம் கதை சொல்கின்றனர். அவனே சொல்லியிருக்கலாம்; எதற்கு ஆசிரியர் வரவேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆணுறுப்பு சேதிக்கப்பட்டு அரண்மனைகளில் உலாவரும் ஹிஜிராக்களின் கதை பரிதாபமும் வன்மமுமாகச் சொல்லப்படுகிறது. மகராஜ் குமார் யாரின் பிம்பம்? திறமைகள் இருந்தும் அங்கீகாரம் கிடைக்காதவர்களின் பிம்பமா? ஏதோ ஒரு தருணத்தில் கிடைக்கும் வரவேற்பைத் தக்கவைக்கும் திறமை இல்லாதவர்களின் குறியீடா? அவன் தன் கனவில் தொலைந்து போனதுமில்லாமல் தன்னைச் சார்ந்த எல்லோரையும் தொலைத்துவிட்டானே! கனவில் தொலைந்தவன் கதையில் வாழ்கிறான்.அக்களூர் ரவிக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

நடுகற்கள் – வரலாற்றின் சுவடுகள்

நடுகற்கள் – வரலாற்றின் சுவடுகள்

நடுகற்கள் என்றால் என்ன? மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே இயற்கையை வணங்கியும், மரணத்தைக் கண்டு பயந்தும் வாழ்ந்துள்ளான். அப்படி இறந்து போகும் மனிதன் எங்கு செல்வான் என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களை ஏற்படுத்தவும் பழகிக்கொண்டான். அவற்றில் ஒன்று கல்திட்டை. இவை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்தக் கல்திட்டைக்குள் வேட்டைக் காட்சிகளும், மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்தப் பாறை ஓவியங்களே நடுகற்களின் முன்னோடியாக இருக்கலாம். சங்க இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றிக் குறிப்பு இருந்தாலும் அவை இப்போது நம்மிடையே இல்லை. கால வெள்ளத்தில் அழிந்துபட்டன. விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தொன்மை வாய்ந்தவை. பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு உலகமெங்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டாலும் போரில் இறந்தவர்களுக்கு வீரக்கல் எனப்படும் நடுகல் எடுப்பது சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. விலங்குகளுக்கும் கோழிக்கும்கூட நடுகல் எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆநிரைப்போரில் இறந்தவர்களுக்கு பல்லவர், பாணர், கங்கர்களின் காலத்தில் நிறைய நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. நடுகற்களின் வகைகள்:நடுகற்களின் அமைப்பு, உருவங்கள், கருவிகள் கொண்டு அவற்றை சிலவாராக நாம் வகைப்படுத்தலாம். நினைவுக்கல் வீரக்கல் நவ கண்டம் அரிகண்டம் சதிகல் புலிக்குத்திப்பட்டான் கல் யானைகுத்திப்பட்டான் கல் காட்டுப்பன்றி குத்திபட்டான் கல் கோழிக்கற்கள் ஏறுதழுவல் வீரக்கல்என்றவாறாக வகைப்படுத்தலாம். நினைவுக்கல் ஆதிமனிதன் தன் கூட்டத்தில் இறந்தவர்களைப் புதைத்த இடத்தை அடையாளப்படுத்த, அந்த இடத்தில் கற்களை நட்டுவைத்தான். அதுவே உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் குத்துக்கற்கள், கற்பதுகை, கல்வட்டம், கற்குவை, கற்திட்டை எனப் பல வகைகளில் மாற்றமடைந்து வந்தது. போரில், மற்றும் விலங்குகளை வேட்டையாடி இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. தற்போதும் கூட கிராமங்களில் உள்ள அய்யனார், செல்லியம்மன், கருப்பையா கோயில்களில் இறந்தவர்களுக்கான நினைவுக் கற்களைக் காணலாம். பிரசவத்தில் இறந்த பெண்கள் கைக்குழந்தையுடன் காட்டப்பட்டுள்ளனர். இன்றும் கூட இந்தப் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. வீரக்கல் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களை நாம் வீரக்கல் எனக் கூறலாம். பல்லவர் காலம் துவங்கி நாயக்கர் காலம் வரை இது போன்ற வீரக்கற்கள் தமிழகம் முழுக்கக் காணக் கிடைக்கின்றன. நவகண்டம் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும்போது, தன்னுடைய நாடு வெற்றியடைய தன் உயிரைக் கொற்றவைக்குப் பலி கொடுப்பது நவகண்டம் எனப்படும். தன்னுடைய உடலில் எட்டு பாகங்களை அரிந்து கொற்றவைக்குப் படையல் இட்டு கடைசியாகத் தன் தலையைத் தானே அரிந்து கொற்றவைக்குப் பலி கொடுத்துக் கொள்வது நவகண்டம் எனப்படும். இத்தகைய சிற்பங்களை அடையாளப்படுத்த, சிற்பத்தில் உள்ள வீரன் கையில் உள்ள கத்தியானது வீரனின் கழுத்துக்கு நடுவே காட்டப்பட்டிருக்கும். நோய்வாய்பட்ட தன் மன்னன் நலமடையவும், நீண்ட நாட்களாய் நின்றிருந்த திருவிழா நடை பெறவும் இது போன்று நவ கண்டம் கொடுத்துக் கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டம் ஆறகழூரில் இது போன்று 5 நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. அரிகண்டம் நவகண்டத்துக்கும் அரிகண்டத்துக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. அரி கண்டத்தில் ஒரே வெட்டில் தலை துண்டாகும்படி வெட்டிக்கொள்வார்கள். தலை முடியை வளைவான ஓர் மூங்கிலில் இணைத்து, தன் தலையைத் தானே வெட்டிக்கொள்வார்கள். தமிழகம் முழுக்க இது போன்ற அரிகண்டச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தன் தலைமுடியைத் தானே பிடித்திருப்பது போல் இச்சிற்பங்கள் காட்டப்பட்டிருக்கும். கொற்றவைக்கு தன்னைத் தானே பலி கொடுத்துக்கொள்ளும் நிகழ்வு இது. ஆரம்பக் காலகட்டத்தில் தானே விரும்பி இச்செயலைச் செய்தாலும், பிற்காலத்தில் வற்புறுத்திப் பலி கொடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதிரப்பட்டி நிலம் தானமாக கொடுக்கப்பட்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆறகழூரில் இது போன்ற உதிரப்பட்டி கல்வெட்டு ஒன்று உண்டு. சதிகல் போரிலோ அல்லது வேறு காரணங்களாலோ கணவன் இறந்தவுடன் மனைவி உடன் கட்டை ஏறுதல் அல்லது சில வாரங்கள் கழித்து சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, தீயில் புகும் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடுகற்கள் சதிகற்கள் எனப்பட்டன. இவர்கள் தீப்பாஞ்சாயி என்ற பெயரில் அவரின் வம்சத்தால் வழிபடப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தீப்பாஞ்சாயி கோயிகள் பரவலாக உள்ளன. ஆறகழூரில் உள்ள அய்யனார் கோயிலில் தீப்பாஞ்சாயிக்கு சிறு கோயில் உள்ளது. ஆரம்பக் காலகட்டத்தில் விரும்பி மேற்கொள்ளப்பட்ட உடன் கட்டை ஏறுதல், பிற்காலத்தில் வற்புறுத்தி செய்விக்கப்பட்டது. இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய் அவர்களின் முயற்சியின் பேரில் அரசியல் சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுதல் தடை செய்யப்பட்டது. புலிக்குத்திப்பட்டான் கல் மனிதன் காடுகளை ஒட்டிய கிராமங்களில் வாழ்ந்தபோது, அவனையும் அவன் வளர்க்கும் கால்நடைகளையும் புலிகள் தாக்கிக் கொன்று வந்தன. அத்தகைய கிராமங்களில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புலி வேட்டைக்குச் சென்று அந்தப் புலியைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்திருப்பான். அந்த இளைஞனின் வீரத்தைப் போற்றி வைக்கப்பட்ட நடுகற்களே புலிக் குத்தி நடுகல். சேலம் அருங்காட்சியகத்தில் சேந்தமங்கலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இரு புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. தமிழகம் முழுக்க இது போன்ற புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. சேலம் குகை பகுதியில் புலிக்குத்தி தெரு என ஒரு தெருவின் பெயரே உள்ளது. யானை குத்திப்பட்டான் கல் வரலாற்றுக் காலம் தொடங்கியே போரில் யானைகளைப் பயன்படுத்தும் வழக்கம் தமிழ் மன்னர்களிடையே இருந்து வந்தது. காட்டு யானைகளைப் பிடித்து போர்ப் பயிற்சி கொடுத்து போரில் பயன்படுத்தினர். காடுகளின் அருகே உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்தும் மனிதர்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளையும் கொன்று வந்தன. இப்படி போரில் அல்லது யானை வேட்டையின் போது இறந்த வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களே யானை குத்திப்பட்டான் கல் எனப்படும். காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் விளை நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, தானும் இறந்த வீரனுக்காக வைக்கப்படும் நடுகல் காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் ஆகும். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வராயன் மரபுநடையில் இத்தகைய நடு கல் ஒன்றைக் காணலாம். கோழிக்கற்கள் மனிதனுக்கு மட்டுமல்லாமல் தான் வளர்க்கும் நாய், கோழி போன்றவற்றுக்கும் நடுகல் எடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அரசலாபுரம் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மைத்தின் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் கண்டறிந்துள்ளார். இந்தளூர் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அச்சிறுப்பாக்கம் தாமரைக்கண்ணன் அவர்கள் இதைக் கண்டறிந்துள்ளார். கோழிச்சண்டையில் இறந்த கோழிக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏறுதழுவதல் வீரக்கல் ஏறுதழுவுதல் என்பது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. கருமந்துறையில் கிடைத்த இந்த ஏறுதழுவல் நடுகல், தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது ஆறகழூர் பொன் வெங்கடேசன்

பேரரசுகளின் கல்லறையில்..!

பேரரசுகளின் கல்லறையில்..!

காணுமிடமெங்கும்இரத்தம் உறைந்த பூமியில்வாழ்வுக்கும் சாவுக்கும்இடையே போராடுகிறார்கள் அண்டங்களுக்கு அப்பால் சென்றுகுடியிருப்புகளை நிறுவஇருபத்தியோராம் நூற்றாண்டு மனிதன்முயன்று கொண்டிருக்கையில்,உயிர் தப்ப எண்ணியோர்உயிரே பறக்கும் விமானத்தின்சக்கரங்களிலிருந்து வீழ்வது இருண்ட காலத்திற்குள் அவர்கள்விழுவது போலவே இருக்கிறது பஸ்தூன், டாஜிக்ஸ், ஹாசாரஸ்பழங்காலத்திலிருந்து பழங்குடிகளேபல்குடிகளாகப் பெருகிவாழும் தேசத்தில்வரலாற்றின் போக்கிற்கேற்ப வாழும் மக்கள்மாறும் போதெல்லாம்கற்காலத்தில் வாழவேகட்டாயப்படுத்தப்படுகிறார்கள்கொலைக்கருவி ஏந்திமதம் காப்பவர்களால் புதுமையோ புரட்சியோ இல்லாமல்பழமையிலேயே கிடக்கும்பழங்குடிகளின் தேசம்புவிசார் அரசியலில்வளங்களைக் கொள்ளையடிக்கும்வல்லூறுகளின் வேட்டைக் காடாகிவிட்டது ஆதிக்கம் எதுவாயினும்அடிபணியோம் என்பதைதுப்பாக்கி முனையிலும்பயமேதுமின்றிப் பதாகை ஏந்தும்பெண்கள் சொல்கிறார்கள் ஆதிக்கவாதிகள் எல்லாம்அழிந்து போன பேரரசுகளின் கல்லறையில்புரட்சியின் பூப்பூக்கும் காலம்போர்க்களத்திலும் அமைதி சூழும் ஆக்கம்: பவா சமத்துவன் படங்கள்: இணையத்திலிருந்து