கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

நடக்கலாம் வாங்க – பகுதி 5 ஒருவர் நடக்க ஆரம்பிக்கும்பொழுது நிறைய சுவாரஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போனால், அவர்களது கண்களுக்கு நாம் மை டியர் மார்த்தாண்டன் ஐடியா மணி, கவுண்டமணி போல் தெரிவோம். இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது போல் சில புரிதல்களும் தேவைப்படுகின்றன.  ஒரு பிரச்சினை குறித்து ஒரு அனுபவசாலியிடம் போய்க் கேட்கும்பொழுது, அவர் தன் அனுபவத்தின் வாயிலாகப் பாடம் நடத்துவார். அது பிரச்சினையோடு இருப்பவனுக்கு எட்டாத தூரம் ஆகிவிடும். அவரிடம் கேட்டதன் நோக்கம் என்ன? பிரச்சினை தீரவேண்டும் என்பதுதான். அப்படியென்றால் பிரச்சினை இருப்பவரின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டும்.  புதிதாக நடக்க இருப்பவர்களுக்கு எங்கெல்லாம் அலுப்பு ஏற்படலாம்? அதை எப்படிக் களையலாம்? என்று விவாதிப்பதே சுவாரஸ்யங்களை ஏற்படுத்த முதல் படி. காலையில் எழுவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம்.  உழைப்பாளி படத்தில் ரஜினி, “எனக்கு என் ட்ரஸ் வேணும்” என்று கடைக்காரரை பாடாய்ப் படுத்துவார். அதுபோல், காலையில் வேகமாக எழும்பினால்தான் நடப்பேன். இல்லாவிட்டால் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” என்று கன்னம் தெறிக்க பக்கோடா சாப்பிடும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். நடப்பது என்று முடிவாகிவிட்டால் காலை, மாலை, மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் நடக்கலாம்.  எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். இரவு நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போக இரவு 12 ஆகிறதாம். காலை எழ எட்டு ஆகிறதாம். ஒன்பது மணிக்கு மறுபடியும் நோயாளிகளைப் பார்க்க வருகிறார். கையில் ஸ்மார்ட் வாட்ச்சை அவரது மருமகள் கட்டிவிட்டிருக்கிறார். ஸ்டெப்ஸ் கவனிக்க ஆரம்பித்த பிறகு, அவர் சொல்கிறார், ” பழனிக்குமார், நடக்குறதுக்குனு எனக்கு தனி டைம் இல்ல. ஸோ, நோயாளிகளைப் பார்க்குற நேரத்துல நான் உட்காருறதே இல்ல. தூரமா நோயாளிகளை உட்காரவச்சுட்டு நானே போய்ப் பாக்குறேன். எனக்கு அது வசதியா இருக்கு. மதியம் 2 மணிக்குள்ள 2000 ஸ்டெப்ஸை முடிச்சிடறேன்” என்றார்.  எனக்குத் தெரிந்த ஒரு பிசினஸ் மேன் இருக்கிறார். காலை ஏழு மணிக்கெல்லாம் கல்லாவில் உட்கார்ந்துவிடுவார். மதியம் மூன்று மணிக்கு, கடையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து வருகிறார். வண்டி இல்லாமல் இல்லை, நடப்பதற்காக. 15000 ஸ்டெப்ஸ் எட்டவில்லை என்று இரவு பதினோரு மணிக்கு தோழர் கிருத்திகா தரன் இலக்கை எட்டும் நோக்கில்  நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார். “மனசு இருந்தால் மார்க்கபந்து” என்று சொல்லிச் சென்றிருக்கிறார் தோழர் க்ரேஸி மோகனார்.  * கூட நடப்பவர் வேகமாக/ மெதுவாக நடக்கிறார். இது ஒரு தனிப் பிரச்சினை. குழுவாய் சேர்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். அது ஒருவகையில் புது வகையான ஊக்கத்தைத் தரலாம். ஆனால், சமயத்தில் அதுவே கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். ‘நம்மால் வேகமாக நடக்க முடியவில்லை, நம்மால் இவர்களது வேகம் தடைபடுகிறதே, நம்மால் அவர்களுக்கு இவ்வளவு சுமை வேண்டுமா?’ என்று விக்கிரமன் படத்து ஹீரோ போல் ஏகப்பட்ட சென்டிமெண்ட் மூளைகளை வைத்துக்கொண்டு இருப்பதால் இப்படிலாம் யோசிப்பார்கள். நடைப் பயிற்சியில் ஒத்த சிந்தனையோடு நடக்கக்கூட ஆள் கிடைப்பார்கள், ஒத்த வேகத்தில் நடக்கும் ஆள் கிடைக்கமாட்டார்கள்.  எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. வெளிநாட்டுக்காரன் சேர்ந்தே இருந்தா உருப்புடுவான். ஆனா பாரு டூர் ங்குற பேர்ல தனித்தனியா சுத்துவான். இந்தியாக்காரன் தனியா இருந்தாத்தான் உருப்புடுவான். ஆனா பாரு, உச்சா போகக் கூட ஆள் கூப்ட்டு திரியுறான்” என்பார்கள். அது தான் உண்மை. நடக்க ஆசைப்படுபவர்கள் உடன் நடந்து வருபவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாவிட்டால் உங்கள் பயிற்சியை நிறுத்த முயலாதீர்கள். அவரவர்களின் வேகம், அவர்வர்களின் உடல் நிலையைப் பொறுத்தது. நீங்கள் உங்கள் உடல்நிலைக்கேற்றபடி வேகத்தை நிகழ்த்தலாம்.  * நடப்பதற்குத் தோதான இடம் இல்லை சின்னக் குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்செல்லும் சில காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களில் தர தரவென்று குழந்தைகளை இழுத்துச்செல்லும் பெற்றோர்களும் உண்டு. அப்படி மனதை நீங்கள் தயார்படுத்தி இழுத்துச்சென்றால் ஒழிய, இப்படி யோசிப்பவர்களால் நடக்க இயலாது.  ஒரு விசயம் தானாய் நடக்காது. நடத்தித்தான் ஆக வேண்டும் என்று எங்கள் துறையில் சொல்வார்கள். அதைத்தான் நடப்பதற்கும் சொல்கிறேன்.  இவை எல்லாம் பொதுப்புத்தியில் உள்ளுக்குள் இருக்கும் தடைகளாகச் சொல்கிறேன். இவற்றிலிருந்து வெளியே வந்தால்தான் நடப்பதில் சுவாரஸ்யங்களைக் கூட்டமுடியும். ‘முதலில் படுக்கையிலிருந்து வெளியே வா நண்பா, பிறகு நடக்க பாதை பிறக்கும்’ என்பது தான் ஸ்கெட்ச்சே. இப்பொழுது ஒரு வகையில் நடக்க சாலைக்கு வந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இனி சுவாரஸ்யங்களை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.  என்னுடைய அனுபவத்திலிருந்து அதைத் தொடர்கிறேன்.  11 வருடங்களுக்கு முன் என் கம்பெனியின் இயக்குனரிடம் முக்கியமான விசயங்கள் பேச அனுமதி கேட்டால், வேலை நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்று காலையில் அவர் நடைப்பயிற்சி நேரத்தில் அழைப்பார். அவர் நடப்பார்.பல ஆண்டுகளாக வாக்கிங் செல்பவரின் வேகத்திற்கு என்னால் நடக்க முடியாது. கிட்டத்தட்ட அவருடன் நான் ஓடியிருக்கிறேன்.   “என்னங்க, நடக்க முடியலையா உங்க வயசுக்கு?” என்பார். ‘என்னடா, இந்த மனுஷன் இப்படி நடக்குறாரு!’ என்று வியந்திருக்கிறேன் . நான் ஆலோசனை செய்யப்போகும் விசயத்தைவிட அவருடன் ஓடுவதே எனக்குப் பெரும் சாதனையாய் இருந்தது. காலையில் மீட்டிங் என்ற பெயரில் டிஷ்கஷனா? இல்லை உடற்பயிற்சி ஆசிரியரின் ட்ரில்லா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நான் நடைப் பயிற்சி செய்ய ஆசைப்பட்டபோது அதே இடத்தில் நடக்கச்செல்ல மனதில் ஒரு சங்கடம். ‘என் கூட நடக்க வா’ என்று அவர் அழைத்துவிட்டால், எப்படி அவர் வேகத்திற்கு ஈடுகொடுப்பது? என்று. அதற்காக சுவாரஸ்யமான ஒன்றைச் செய்தேன்.  சுவாரஸ்யங்களுக்காகக் காத்திருங்கள். இவை என் நடைக்குறிப்புகள். கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4 சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா?  நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள். சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு,  * நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? * வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா? * அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா? *உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா? * நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா? *நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா? * ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா? * நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா?  * நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா?  * உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா? இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும். ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார்.  இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.  இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே? எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன்.  “எப்பவாவது போவேன்” என்றார். “தினமும் போங்க” என்றேன்.  அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார்.  உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும்.  அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? யோசித்தபடியே நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

WHERE ARE WE?

WHERE ARE WE?

நடக்கலாம் வாங்க – பகுதி 3 உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை எவை என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கட்டுரைக்குள் செல்லும் முன்பாக அவற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * நடக்கும் நேரத்தில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?   *  நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இத்தனைக் கெடுபிடிகளுடன் அல்லது கணக்குகளுடன் நடக்க வேண்டுமா என்றால் ஆம், அப்படித்தான். எல்லாமே அப்படித்தான்.  ஒரு தங்க நகை வாங்கச் செல்கிறீர்கள். மில்லிகிராம் கூட அங்கு காசுதான். கடைக்காரர் பணம் வாங்கிவிட்டு, நகையைக் கையில் தரும்பொழுது மூன்று மில்லி கிராம் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வோமா?  மாட்டோம் அல்லவா? அதைப்போல எல்லாமே ஒரு கணக்குத்தான்.  உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில், தான் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டும். தாங்கள் நடக்கும் தூரத்தைக் கணக்கில் வைத்தால்தான் ‘சரியான அளவில் நடக்கிறோமா’ என்று தெரியும்.  உதாரணத்திற்கு நீங்கள் தினமும் நடைப்பயிற்சி என்ற பெயரில் நடப்பது, உங்கள் வீட்டிலிருந்து  தெரு முனை வரை என்று எடுத்துகொள்வோம். அதன் தொலைவு 100 மீ என்றால், போக வர 200 மீட்டர். இதைத்தான் வழக்கமாகச் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். இதை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கவேண்டும். ஒரு தெருவினுள் நுழைந்து அடுத்த தெருவின் வழியாக வந்து பார்த்து தூரத்தை அதிகப்படுத்தலாம்.  அடுத்ததாக நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு. அதாவது, நீங்கள் வீட்டிலிருந்து தெருமுனை வரைதான் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் திரும்பவும் வீடு திரும்பும் வரையான நேர அளவு கண்காணிக்கப்படவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊர்ந்து செல்கிறீர்கள் என்றால் முந்தைய பகுதியில் சொன்னது போல் அதற்குப் பெயர் ‘உல்லாச உலா’. உதாரணத்திற்கு 200 மீ சென்று திரும்ப பத்து நிமிடங்கள் ஆகிறதென்றால் அது மோசமான நடை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படவேண்டும். அதற்கேற்றபடி நடக்க வேண்டும். உங்களது வேகம் துரிதப்படுத்தப்படவேண்டும்.  இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொன்று, நம் உடலில் ஏற்படும் மாற்றம். சிலருக்கு நடக்கையில் மூச்சு வாங்கலாம். சிலருக்கு நீரிழப்பு ஏற்பட்டு தாகம் ஏற்படலாம். சிலருக்கு முழங்கால் வலி வரலாம். ஒருவேளை நடக்க முடியாத அளவிற்கு உடல் தொந்தரவு செய்யும் என்றால் அன்றைய பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு தக்க ஆலோசனைகளுடன் மறு நாள் நடக்கலாமே தவிர, எதற்காகவும் பயிற்சியை நிறுத்தக்கூடாது.  ஆதலால், நம் உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றைக் கவனிக்கவேண்டும்.  உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டு யாரும் கம்பெனியின் கேட்டை ஆட்டவேண்டாம். அது வேறு டிபார்ட்மெண்ட்.  இவற்றையெல்லாம் கவனித்து ஒருவாரம் நடக்கிறீர்கள் என்றால், அடுத்து நீங்கள் உங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் நடக்கும் அடிகளைக் கணக்கிட வேண்டும். அதன் மூலம் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யவேண்டும்.  நடக்க ஆரம்பிக்கும் புதிதில் 5000 அடிகள் என்று இலக்கு வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடைப்பயிற்சியின் நேரத்திலோ அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் தூரத்தை உத்தேசமாகக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். (இந்த விசயத்தில் என்னைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு அடியையும் எண்ணியிருக்கிறேன். நடப்பதில் தீவிரவாதம் வகை) ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நடக்கும் தூரத்தை, நேரத்தை, அடிகளை மறு பரிசீலனை செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது தெருமுனை வரைதான் செல்கிறீர்கள் என்றால், 200 மீட்டர் தூரத்தை அடுத்த தெருவின் வழியாகச் சென்று திரும்புவதன் மூலம் 200 மீட்டரை 400 மீட்டராக உயர்த்தலாம். பத்து நிமிடத்தில் 200 மீட்டர் என்பதை பத்து நிமிடத்தில் 300 மீட்டராகவோ அல்லது 400 மீட்டராகவோ மாற்றலாம். நடக்கும் அடிகளை இன்னும் உயர்த்துவதன் மூலம் உங்களது உடல் உழைப்பு அதிகரித்து அதிகமான கலோரிகள் எரிக்கப்பெறும். இதன் மூலமாக உடல் எடை குறையவோ இலகுவாக மாறவோ செய்யலாம். உங்களது நடைப்பயிற்சியை இப்படி கவனிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை பற்றியும் கவனம் கொள்கிறீர்கள்.  இதில் அனைவருக்கும் வரும் ஒரு சந்தேகம், எந்த நிலையில் நான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது எந்த நிலையில் என் தூரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது. நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் உங்களால் அதில் ஒன்ற முடியாது.  நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.  சொல்வது எல்லாம் சரி, அதை எப்படிச் செய்வது என்று சிலர் யோசிக்கலாம். சிலருக்கு அந்த யோசனையே இல்லாமல் செய்ததையே செய்துகொண்டிருப்பார்கள். செக்கில் மாடுகளைக் கட்டி ஆட்டுவார்கள். மாட்டை அங்கு நிறுத்திவிட்டால் போதும் அது சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய் வருகிறதா இல்லையா என்ற கவலை மாட்டிற்கு இருக்காது. அதைத்தான் ‘செக்கு மாடு கணக்கா’ என்பார்கள். ஒரே விசயத்தை எந்தப் பலனையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்துகொண்டிருந்தால் நேர விரயம்தான் ஆகுமே தவிர பலன் கிடைக்காது. அவ்வப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் [ WHERE ARE WE ]என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும்.  அதை நீங்கள் நடந்து காட்டுவதிலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதிலும் சரி. யோசியுங்கள் WHERE ARE WE? இப்போதைக்குத் தொடர்ந்து நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

நடக்கலாம் வாங்க

நடக்கலாம் வாங்க

ஏன் நடக்க வேண்டும்? க்ளப் ஹவுஸ் செயலியின் ‘உணவும் உள்ளமும்’ ஹவுசில் கொரோனா தொற்று சமயத்தில் நோய்த்தொற்று சம்பந்தமாக சில சாமான்யர்கள் மருத்துவர்களிடம் நேரடியாக சந்தேகங்களைக் கேட்டனர். பிறகு தடுப்பூசி பற்றி கேட்டனர். நாளடைவில் உடல்நிலை சம்பந்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேச குழு உறுப்பினர்கள் சேர்ந்தனர். இதில் பலர் ‘நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்றும், சிலர் ‘நடைப்பயிற்சியை முறையாகத் தொடர முடியவில்லை’ என்றும் சிலர் ‘நடப்பதற்கு முன் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார்கள். இவற்றை எல்லாம் முன்வைத்து, எப்பொழுது எனக்கு வாக்கிங் போகும் பழக்கம் வந்தது என்பதை ஞாபகப்படுத்தவே ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நடைப்பயிற்சி என்பது ஒரு கட்டத்தில் போதையாயிருந்தது. நடப்பது என்பது போதையாகவே தொடரவும் செய்கிறது. “உனக்கு மோசமான மன நிலை இருந்தால் ஒரு முறை நடந்து செல். இன்னும் மோசமான மனநிலை தொடர்கிறதா மறுபடியும் நடந்து கொண்டே இரு” என்பது ஹிப்போக்ரேட்ஸ் சொன்ன ஞாபகம். நான் வாக்கிங் செல்ல ஆரம்பித்த நான் எதிர்கொண்ட சவால்கள் என்று சில இருந்தன. அவை பொத்தாம் பொதுவாய் பலருக்கும் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் நடைப்பயிற்சியைத் தொடரும்பொழுது ஏற்படும் அல்லது உணரும் உணர்வுகளையும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒரு சேர மறுபடியும் எழுதிப்பார்க்க ஆசை. பொதுவாய் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் தங்களுக்கு நேரும் தடைகள் எனப் பட்டியலிடுபவை: என்னால் தினமும் எழ முடியவில்லை. என்னால் தினமும் நடக்க முடியவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். அதனால் வாக்கிங் செல்ல நேரம் இல்லை. ஒரு நாள் நடந்தபின் அடுத்த நாள் கால் வலி. எழவே முடியவில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் உடல் எடை குறையவில்லை. பிறகு எதற்கு நடக்கவேண்டும்? அலுவலகத்தில் ஒரு இருக்கைக்கும் இன்னொரு இருக்கைக்கும் நடந்தே போகிறேன். (பிறகு ஹெலிகாப்டரிலா போவாங்க என்ற மைண்ட் வாய்சை கவுண்டமணி குரலில் படிக்கவும்) அலுவலகத்தில் ஃபோன் வந்தால் நடந்துகொண்டே பேசுவேன். இது தவிர எதற்காகத் தனியாக நடக்கவேண்டும்? என்ற எண்ணம். உலகில் நடப்பவர்கள் எல்லாம் சுகர் வந்தவர்கள் அல்லது ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் என்ற பார்வை. காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள், இப்படியான கண்ணோட்டம். எனக்கு சுகர் இன்னும் வரவில்லை. நன்றாக இருக்கிறேன். எனக்கு டாக்டரிடம் போவதற்கு எந்த அவசியமும் இல்லை என்ற மனநிலை. என்னை வாக்கிங் போகச்சொல்லி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. பிறகு எதற்காகப் போகவேண்டும்? என்ற கேள்வி. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்க இத்தனைக் காரணங்கள் இருக்கலாம். இதை விடக் கூடுதலாகவும் இருக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்தால் புது வருட சபதம் எடுத்து நடக்க வருபவர்கள் வருவார்கள். மூன்றே நாளில் பாதி பேர் காணாமல் போவார்கள். மீதிக் கூட்டமும் பொங்கல் விடுமுறையில் காணாமல் போவார்கள். எங்கள் வாக்கர்ஸ் க்ளப்பில் ஜனவரி 1ம் தேதி இந்தச் சபத க்ரூப்களைத் தனியாக அடையாளம் காணுவோம். முதல் நாளே ஐந்து கி.மீ. பத்து கி.மீ. என நடந்து உடல் எடையைக் குறைத்துவிடுவோம் என்ற வெறியுடன் நடப்பார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமியை நிறுத்தி பிறகு எதிர்திசையில் சுற்றிவிடும் வெறி இருக்கும் அவர்களிடம். ஆனால் அவர்கள் தலை கீழாக நின்றாலும் வெறுமனே நடப்பதன் மூலமாக மட்டும் உடல் எடையைக் குறைக்கமுடியாது என்பது அவர்களுக்கு தாமதமாகத்தான் புரியும். இந்த யோசனைகள் எல்லாவற்றையும் தாண்டி, ‘ஏன் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்? நடப்பதனால் ஆய பயன் என்ன?’ என்று பலர் கூகுளாண்டவரைத் துழாவி பார்த்திருப்பார்கள். அது போக, க்ளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் வெல்னெஸ் கோச், டாக்டர்கள் என எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தும் நல்ல அறிவியல் பூர்வமான விசயங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததுதான் மறுபடியும் மீள் பார்வையாக இங்கே. *நடப்பதனால் உங்களுக்கு உடல் எடை குறைய சில வாய்ப்புகள் உண்டு. ஆனால் முறையான பயிற்சியில் நீங்கள் உங்கள் எடை கூடுவதைத் தவிர்க்க நடக்கலாம். *தூக்கமின்மைக்குச் சில மருத்துவர்கள் நடக்கப் பரிந்துரை செய்கிறார்கள். உடனே ‘நடந்தால் தூக்கம் வருமா?’ என்று நீங்கள் வாங்கும் மிக்ஸி க்ரைண்டருக்கு கேரண்டி, வாரண்டி கார்ட் கேட்பது போலக் கேட்கக்கூடாது. உடல் தசைகள் முறையான இரத்தம் ஓட்டம் பெறும்பொழுது, மூளையும் முறையான இரத்த ஓட்டம் பெற்று தசைகள் சுருங்கி விரிந்து உங்களது உடல் ஓர் இறுக்கமற்ற சூழலை உணரும். அது பல வகைகளில் உங்களுக்கு உதவலாம். இரவு படுத்தால் அயர்ச்சியின் காரணமாகச் சிலர் உடனே உறங்கிவிடுவார்கள். அப்படியான அயர்ச்சியை நீங்கள் நடந்தே பெற்றுக்கொள்ளலாம். *காலையில் நடப்பது, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற காரணங்கள் தவிர்த்து, PRE OCCUPIED மன நிலையில் இருப்பவர்கள், தொடர் வேலை அழுத்தங்கள் இருப்பவர்கள், காலை எழுந்தால் ஏகப்பட்ட வேலைகள், எந்த வேலையை முதலில் செய்வது? என்று குழம்புவோர் இப்படியானவர்கள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் அழுத்தச் சூழலிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது. தங்களின் வேலைகளை அதனதன் முக்கியத்துவம் கருதி நிரல்படுத்தி (PRIORITY) எதை முதலில் முடிக்கலாம் என்ற முடிவு எட்டுவது எளிதாக இருக்கலாம். நிதானமான முடிவுகளை எட்டுவதற்கு மூளை பழக்கப்படலாம். எனக்குத் தெரிந்த சில தொழில் முனைவர்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்க யோசிப்பதற்காகவே காலையில் வாக்கிங் வருகிறார்கள். *உடல் தசைகளுக்கு முறையான இரத்தம் ஓட்டம் செல்லும்பொழுது அன்றைய நாள் முழுதும் புத்துணர்வோடு உடல் இயங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து அதிகாலை எழுவது பழக்கம் ஆவதால் மூளையும் புத்துணர்வு பெறுவதை காலப்போக்கில் உணரலாம். நண்பர்களில் சிலர் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களும், நடப்பதனால் ஏற்படும் பயன்களில் சிலவற்றையும் பார்த்தோம். ‘ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா?’ என்பது போன்ற கேள்விகளை என் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. ஒரு கட்டுரையாக எழுத எத்தனித்த இந்த விசயம், சற்றே நீளலாம். இந்தகே கட்டுரையைப் படித்தவர்கள், தங்களது நடைப்பயிற்சி பற்றிய அனுபவங்களையோ யோசனைகளையோ சொன்னால் கம்பெனி அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்று நடை பணிந்து சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து ‘நடைக் குறிப்புகளோடு’ நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து