நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது. இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம். பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? – உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? – பன்றிச் சேய்களோ? என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார். வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன். ‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி) யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது. வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா? வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்? வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா.. வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..? ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி.. சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்.. சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி. சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..? ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..? சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..? ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே! வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார். எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை. ‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை. இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை. பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது. இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

காட்சி 6 காலம் : 1908ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒருநாள்இடம் : தூத்துக்குடியில் வ.உ.சி.யின் வீடுபாத்திரங்கள் : வ.உ.சி., நீலகண்டர், பத்மநாப அய்யங்கார் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி(வ.உ.சி.யும் பத்மநாப அய்யங்காரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீலகண்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்) பத்மநாப அய்யங்கார் : சூரத் காங்கிரஸ் நல்லபடியா முடிஞ்சதோல்லியோ.. தூத்துக்குடியில் புதிய கட்சி வேலையும் பிரமாதமா நடந்துண்டிருக்கு. நீலகண்டர் : இல்லையா பின்னே.. திலகர் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பிள்ளைவாள்தான தலைவர்?! அப்புறம் தூத்துக்குடியில் உற்சாகத்திற்குக் கேக்கணுமா என்ன? பத்மநாப அய்யங்கார் : ஆஹா! பிள்ளைவாள்.. இவர் யார்..? இந்தப் போடு போடுறாரே! வ.உ.சி. : அய்யங்கார்.. இவர் பெயர் நீலகண்டன். நம்ம வேலைக்கு உதவி செய்ய பாரதியார் அனுப்பி வச்சிருக்கார். தீவிர தேச பக்தர். பத்மநாப அய்யங்கார் : பேஷ்.. பேஷ்..! (இளைஞர் ஒருவர் கும்பிட்டுக்கொண்டே வருகிறார். கண்களில் பதட்டம் தெரிகிறது) வ.உ.சி. : வா, மாடசாமி.. என்ன ஆச்சு? ஏன் பதட்டமா வர்ற..? மாடசாமி : வணக்கம் வக்கீலய்யா.. வணக்கம் சாமி.. நேத்து மில் தொழிலாளர் கூட்டம் நடந்துச்சுல்லங்க ஐயா.. அதுக்கு வந்த தொழிலாளிங்கள எல்லாம் மிரட்டிருக்காங்க. ‘சிதம்பரம் பிள்ளை ராஜ துரோகம் பேசுறவரு.. அவரு கூட்டத்துக்குப் போனா வேலை கிடையாது’ன்னு மிரட்டிருக்காங்க ஐயா. பத்மநாப அய்யங்கார் : அதுக்கு ஏன் பதட்டம்? இது எதிர்பார்த்ததுதான..?(மௌனமாக இருக்கும் வ.உ.சி.யைப் பார்த்து) பிள்ளைவாள்.. என்ன யோசனை.? வ.உ.சி. : அதிகாரிங்க என்ன மிரட்டுறது..? போராட்டம் தீவிரமாகும்போது, வேலைக்கு வரமாட்டேன்னு தொழிலாளி அதிகாரிகளை மிரட்டுற நாளும் வரும். அந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் அவங்க குடும்பமும் வயிறு காயாம இருக்க நாம ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். பத்மநாப அய்யங்கார் : அவ்வளவு தூரம் போகுமா..? வ.உ.சி. : அதுக்கும் மேலேயே நடக்கும். இந்தத் தொழிலாளிங்களோட கஷ்டங்களை நாம இப்போ வெளிப்படுத்துறோம். விடிஞ்சு போனா அடைஞ்சு வாராங்க; நேரக் கட்டுப்பாடில்லாத வேலைக்கு ரொம்ப மோசமான கூலி. வார ஓய்வு கிடையாது; விடுப்பு எடுக்க முடியாது. இதெல்லாத்தையும் வாங்கணுமின்னா தொழிலாளிங்க ஒற்றுமையாலும் வேலையை நிறுத்தியும்தான் முடியும். நீலகண்டர் (குறுக்கிட்டு) : பிள்ளைவாள்.. நாம தேச சேவையில் மட்டும் கவனம் செலுத்தலாமே..வ.உ.சி. : (மெல்லச் சிரித்து) தேச சேவைன்னா என்ன..? தேச பக்தின்னா என்ன..?மக்களோட பிரச்சினையைப் பேசுறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமன தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனைக்கிறீரா நீலகண்டர்..? இந்தப் பாடம் யாரு சொன்னது? நீலகண்டன் : மன்னிக்கணும்.. நம்மளோட ஆற்றல் வீணாப் போகுதேன்னுதான் கவலை.. எவ்வளவு நாள்தான் வெள்ளைக்காரங்க அக்கிரமத்தைப் பொறுத்துக்கறது? வெள்ளை அதிகாரிகள இன்னமும் ஏன் விட்டு வைக்கணும்..? வ.உ.சி. : என்ன செய்யலாம்? நாம நாலு பேரு சேர்ந்து வெள்ளைக்கார துரைகளைக் கொன்னுட்டா சுதந்திரம் வந்துருமா..? ஒரு துரை போனா இன்னொருத்தன் வருவான். நாம் மக்களைத் திரட்டிப் போராடித்தான் ஜெயிக்கணும். உமக்கு தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால்ஸ் மாகாணத்துல நடந்த சேதி தெரியுமோ..? பத்மநாப அய்யங்கார் : அது ஒரு பாடம்.. விவரமாச் சொல்லுங்க பிள்ளைவாள். வ.உ.சி. : தென்னாப்பிரிக்காவுல வாழுற ஆசியா மக்கள் எல்லாரையும் பதிவு செய்யச் சொல்ற சட்டம்.. அதன்மூலம் ஆசிய மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டம்.. இதை ஆசிய மக்கள், குறிப்பா நம்ம இந்தியர்கள் எதிர்த்து ரெண்டு வருசமா போராடினாங்க. அதிலேயும் தமிழர்கள்தான் முன்னால நின்னாங்க. இப்போ போன மாசம்தான் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு போராட்டத்துக்குப் பணிஞ்சு, ஒரு சமாதான பேரத்திற்கு வந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த மக்களை இன்னும் உற்சாகப்படுத்தும். இன்னும் ஒன்னா இணைக்கும். இந்த உலகத்துல அடிமைத்தனம் எந்த வடிவத்தில் இருந்தாலும் மக்களைத் திரட்டித்தான் எதிர்த்துப் போராடணும். பத்மநாப அய்யங்கார் : இந்த வேலையைச் செய்ததும் நம்ம பிள்ளைவாள்போல இளம் வக்கீல் ஒருத்தர்தான். அவரு பேரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வ.உ.சி. : சரி, இன்னைக்கு சாயுங்காலம் கடற்கரையில் கோரல் மில் தொழிலாளிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கேன்.. எல்லாரும் வந்துருங்க. (நீலகண்டர் மாடசாமியின் தோள்களில் கை போட்டுக்கொண்டு வெளியில் வருகிறார்) நீலகண்டர் : என்ன மாடசாமி.. பிள்ளைவாள் பேச்சுல அப்படி பிரமிச்சுப் போயிட்டீர் போல.. இப்படிக் கூடறதும் பேசுறதும் எத்தனை நாளைக்கு..? ஒரே நாள்ல நாடு முழுவதும் இருக்கிற வெள்ளைக்காரங்கள கொன்னு போடணும்.. யுத்தம் பண்ணணும். மாடசாமி.. வாய் யுத்தமில்ல. ஆய்தம் தாங்கி, துப்பாக்கி ஏந்தி யுத்தம் பண்ணணும்.. மாடசாமி : இதெல்லாம் நடக்குமா..? ஆயுதம் வாங்கணுமே..! பணம் வேணுமே..! பெரிய ஆட்கள் துணை வேணுமே..! அப்புறம், துப்பாக்கி சுடத் தெரியணுமே..! நீலகண்டன் : எல்லாம் நடக்கும் மாடசாமி.. பரோடா மகராஜா போன்ற சுதேசி ராஜாக்களெல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் போட்டுருக்காங்க.. விவரமாச் சொல்றேன் வாரும்.. (ஒளி மங்கி மேடை இருள்கிறது.. ஒளி விரியும்போது ஓம்கார் சுவாமிகளின் அறையாக இருக்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இந்த மாடசாமி பெரிய சாகசக்காரர் என்கிறார்களே.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரர், தீரர். ஓட்டப்பிடாரம் இவரது ஊர். சிதம்பரம் பிள்ளையோட தீவிர விசுவாசி. ஆஷ் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டாலும் கடைசிவரை இவர் பிடிபடவே இல்லை. இவரை என் கட்சிக்குக் கொண்டுவர எத்தனை பேசியிருப்பேன்..? (சிறிய சிந்தனைக்குப் பிறகு)ஆஷ் கொலைக்குப் பின் அவர் தலை மறைவானதால் அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துவிட்டது. அவரது குடும்பம் நிராதரவானது. பாவம்.. இப்படி எத்தனைப் பேரின் கண்ணீரில் உருவானது இந்த சுதந்திர தேசம்.. (கண் கலங்குகிறார்) சீடர் : (உள்ளே வந்து) சுவாமி ஆகாரம் தயார் ஆகிவிட்டது. ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள் சாப்பிடலாம் (திரை விழுகிறது) (நாளை பார்க்கலாம்)

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

காட்சி 5 களமும் காலமும் : அதே களம், அதே காலம் பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன் (பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும். சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி.. பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன். அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..? ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார். சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி. அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி. தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி. (மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்) ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது. 1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன். சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ… (மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரி

நாடகம் காட்சி 1 காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலைகளம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடுபாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார் வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.” (வாசலில் குரல் கேட்கிறது) குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..” சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது. சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..” வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.” சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..” நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார். நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?” செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.” சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார். செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..” நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..” செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?” நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..” செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?” நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..” செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..” (வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்) பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..” நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..” பாரதியார்: “யார்..?” நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?” பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?” நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..” பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..” நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..” பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?” நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..” பாரதியார்: “ஏன்..?” நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..” பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?” செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம் செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..” நீலகண்டர்: “வந்தனம் மன்னி..” (நீலகண்டர் வெளியே நடக்கிறார்) பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”(பாடுகிறார்) “இனியொரு விதிசெய்வோம் – அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக் குணவிலையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்” (திரை விழுகிறது) (நாளை தொடரும்)

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய் கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி வீசிப்பறக்கிறது பாரெங்கும் நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீபொருள் ஈட்டியிருக்கலாம் மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உன்னை ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டியநீதிமன்றத்துக்குகுற்றவாளியாகக் கொண்டு போய்நிறுத்தியது காலம் கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை நீதி தேவதையா?அநீதி தேவதையானஅவள் வழங்கியதோஇரட்டை தீவாந்திரம் அத்தோடு மூழ்கியதுஉன் வாழ்க்கைக் கப்பல் முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டும் என்பதால்கப்பலில் வந்த வெள்ளையனைகப்பலோட்டியே கப்பலேற்றலாம்என நீ நினைத்தாய் சட்டம் படித்த உன் நெஞ்சில்இருந்தது நீதிஅதனால் உன் முள் கூடதராசு முள்ளாகத்தான் இருந்தது வணிகம் செய்ய வந்துஆட்சியைப் பிடித்தவெள்ளையன் வைத்திருந்ததோவிஷம் தடவிய முள் ஆயுள் தண்டனை விதித்துசிறையில் அடைத்துஉன் சிறகுகளைப் பிய்த்து எறிந்ததுஆங்கில ஏகாதிபத்தியம் செக்கிழுத்து செக்கிழுத்துசிறையிலேயே நீசிதைந்து போனாய் விடுதலை அடைந்து வெளியே வந்ததும்உன் துடுப்புகளையும்உடைத்துப் போட்டதுஎமது அலட்சியம் ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீஅதனால் உள்ளமும்ஓய்ந்து போனாய் அடியோடு வீழ்ந்துபோனதுஅரசோடு போட்டி போட்ட உன்அகண்ட பொருளாதாரம் அன்றாட வாழ்க்கைக்கேதள்ளாடும் நிலைக்குப் போனதுஉன் வாழ்வாதாரம் பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்கொடும் வெயிலானதுகடன்காரர்கள் பட்டியலேஉன் உயிலானது கடிதம் எழுதி எழுதியேகாலாவதி ஆனதுன் காலம் கணக்குப் பார்த்தாதீர்க்க முடியும் உன் தியாகத்தை? கடலில் கரைத்த பெருங்காயமானதுஉன் தியாகம்கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானதுஎங்கள் இயலாமை காந்தி கணக்கானதுஉன் வாழ்வு மன்னிக்கச் சொல்லிஉன் முன் மன்றாடுவதன்றிவேறொன்று தோன்றவில்லை எனக்கு இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையேஎப்படி உனக்குள்அப்படி ஒரு இலக்கிய தாகம்? கடலையே குடித்துவிடுவதுபோல்எழுதித் தள்ளியிருக்கிறாய்! பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்கவிதை எழுதினாய்உரை எழுதினாய்சிறையிலும் எழுதினாய் எங்கள் பாரதியின் தோழனேஉன்னை எழுதாமல் இன்று நான்வேறு யாரை எழுதிஎன்ன பயன்? கப்பலால் கவிழ்ந்தகலங்கரை விளக்கேஒன்றை மட்டும் யாரும்மறைக்கமுடியாது எங்கே எப்போதுகப்பலைப் பார்த்தாலும்உன் ஞாபகம்தான்எங்கள் நெஞ்சில் எழுகிறது ஏனெனில்தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்உன்னுடையதல்லவா?அதில் பட்டொளி வீசிப் பறந்ததுஇந்த மண்ணின் மானம் அல்லவா? அதிகாரத்துக்கு அஞ்சாமல்நெஞ்சு நிமிர்த்திய வீரனேசட்டத்தால் போராடிய சூரனே சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்இந்திய விடுதலை வரலாற்றில்என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்உன் சரித்திரம் காலக் கடலில் கரைந்து போகும்எத்தனையோ மனித வாழ்க்கையில்என்றென்றும் கரையாமல் வாழும்கப்பல் ஓட்டிய உன் கம்பீரம் இந்தியப் பெருங்கடல் அலைகள்உன் பெயரை ஓயாமல்பாடிக்கொண்டே இருக்கும் எங்கள் நெஞ்சின் அலைகளும்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறான். சமகால விடுதலை இயக்கத் தலைவனுக்குத் தமிழால் சாகாவரம் தருகிறான். அது மட்டுமல்ல, ‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்மன்னனென மீண்டான் என்றேகேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே!’என்று வ.உ.சி.க்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஆறுதலாக உரைக்கின்றான். தேசத்தின் விடுதலை இயக்க வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற கருதுகோள், கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் காலத்தில் திலகர் யுகத்திலும், தொடர்ந்த காந்தி யுகத்திலும், எம் தமிழ்நிலத்தின் பங்கே பிரதானமாக இருந்ததில் நிலை கொண்டுள்ளது.  அது இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற இந்தத் தியாகத் திருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் (1872-1936) வரலாற்றால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சான்றாக அமைந்து விடுகிறது. செப்டெம்பர் 5 என்றால் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களோடு, வ.உ.சி. பிறந்தநாள் என்பதால் அவர் பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறியத் தருதல் வேண்டும். வ.உ.சி.யும் பாரதியும் மனமொப்பிய நண்பர்கள். அவர்கள் நட்பை ஆராய்கிற பாங்கில் ‘நான் கண்ட பாரதி’ என்று சிறு நூலை வ. உ. சி. எழுதியிருக்கிறார். பாரதி சுதேசிய இயக்கப் பரப்புரையாளன். தூத்துக்குடி செய்திகளைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிறான். வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளில் அந்தச் செய்திகளைப் பகிர விரும்புகிறேன். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி எண் 85, கிரேட் காட்டன் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பதிவு எண் 13 of 1906. அதற்கு முன்பு, ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் பம்பாய் ஷலைன் ஸ்டீம் கப்பல்  கம்பெனியாரிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வந்தனர். ஆங்கில அரசாங்கம் வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிகளுக்குச் சார்பாக இருந்து, சுதேசிய கம்பெனி கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தனர். 1906 ஜூலை 7-ஆம் தேதியிட்ட ‘இந்தியா’ இதழில், ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற தலைப்பில் நிருபர் செய்தி என்ற கோதாவில் பாரதி தருகிற செய்தியின் சாரம்: தூத்துக்குடியிலே அஸிஸ்டெண்ட் போலீஸ் தலைவர் மிஸ்டர் ராமசாமி நாயுடு, ஸ்டேஷன் ஆபீஸர் குருநாதய்யர், இருவரும் மாதக் கணக்கில் விடுப்பு கேட்கிறார்களாம். ஏன்? அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி நாயுடுவும் சப் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் மோஹிதீன் கான் லோடி என்பவரும் வேறு ஊருக்குப் பணி மாறுதல் கேட்கிறார்களாம். அதுவும் ஏன்? தூத்துக்குடி அஸிஸ்டெண்ட் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் வாலர் என்பவர் வெள்ளைக் கப்பல் கம்பெனி பக்கம் சேர்ந்து கொண்டு, சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொந்தரவு கொடுக்கிறாராம். அதனால் மேற்படி அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லையாம். இதையெல்லாம் சொல்லிவிட்டு மேற்படி அதிகாரிகள் வாலருக்கு அஞ்சிவிடாமல் தாம் நியாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று அறிவூட்டுகிறார் அந்த நிருபர். மீண்டும் ஜூலை 21 இதழில் மிஸ்டர் வாலரின் சுதேசிக் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக எழுதுகிறார் பாரதி. ஆகஸ்டு 11 இதழில் ‘தூத்துக்குடியில் சுதேசியம்’ என்ற தலைப்பில், சுதேசிய முயற்சிகள் பலப்பட்டு வருவதை எழுதுகிறார். அதே இதழில், தென் இந்திய இரயில்வே கம்பெனியார் வெள்ளைக் கப்பல் கம்பெனியில் வர்த்தகம் செய்ய வரும் வணிகர்களுக்குக் கட்டணச் சலுகை அளித்திருப்பதை எழுதி, சீர்காழி வர்த்தகர்கள் இந்த வெள்ளைக் கம்பெனிகளின் கூட்டுச் சதியில் ஏமாறாமல் சுதேசிக் கம்பெனியுடனேயே வர்த்தகம் நடத்தியிருப்பதைப் பாராட்டுகிறார் பாரதி. செப்டெம்பர் 11 இதழில் புதிய கப்பல் கம்பெனி கனவு நிறைவேறப் போவதைத் தெரிவிக்கிறார். இந்தப் ‘புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’யின் பாகஸ்தர்கள் லீகல் அட்வைசர்கள் காரியதரிசிகள் யார் யார்? என்றெல்லாம் விரிவான விவரங்களைத் தருகிறார் பாரதி. தூத்துக்குடி சுதேசிய இயக்கத்தில் வ.உ.சி.தலைவன் என்றால் பாரதி மகத்தான பரப்புரையாளன். செப்டெம்பர் 5-இல் வ.உ.சி.க்குப் பிறந்த நாள் வருகிறதென்றால், செப்டெம்பர் 11 பாரதியின் நினைவுநாள் ஆகும். இருவரையும் நினைவு கூர்வோம். இரா.கோமதிசங்கர், திருநெல்வேலி