நீலகண்ட பிரம்மச்சாரி – 16
காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )