ஆன்டி இண்டியன்
திரை விமர்சனம் வழக்கமான கதை, திரைக்கதை இல்லை. வழக்கமான நடிகர், நடிகைகள் இல்லை. வழக்கமான காதல், சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. வழக்கமான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இல்லை. வழக்கமான திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. வழக்கத்திலிருந்து வேறுபட்டுத் தனித்து, விறுவிறுப்புடன் ரசிகர்களைச் சுவைக்கவும் சிந்திக்கவும் கொஞ்சம் வருந்தவும் செய்து, இறுதிவரை இருக்கையில் இறுத்திப் பார்க்க வைத்து விடுகிற படம்தான், மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து, ப்ளூ சட்டை சி இளமாறன் கதை, திரைக்கதை, வசனம், இசை பொறுப்பேற்று, அறிமுக இயக்கம் என்கிற சுவடே தெரியாமல் அருமையாக இயக்கி வெளிவந்துள்ள ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம். சென்னை மயிலாப்பூர் இடைத் தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அத்தொகுதியைச் சேர்ந்த சுவர் ஓவியர் பாஷா (ப்ளூ சட்டை இளமாறன்) யாது காரணத்தாலோ, யாராலேயோ வெட்டிக் கொல்லப்பட்டு விடுகிறார். ஒரு பக்கம் காவல்துறை விசாரணை நடத்த, மறுபக்கம் கட்சிகளின் தேர்தல் வியூகம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அவரை எரிப்பதா, புதைப்பதா, அடக்கம் செய்வதா என்பதில் துவங்கும் பிரச்சனை, எவ்விதம் முடிவுக்கு வருகிறது என்பதுதான் ‘ஆன்டி இந்தியனி’ன் மொத்தக் கதை. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் புறா கதை, ப்ளூ சட்டை மாறன் துணிச்சலுடன், இப்படி ஒரு படத்தை நேர்த்தியாக எடுத்துத் தருவதற்கு அடிப்படை என்பது, சுவையான ஒரு செய்தி !ஆரம்பத்தில் சொல்லும் இக்கதையை மாறன் இறுதியில் வைத்து முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். “மதத்த நம்பறவன் கோச்சுக்க மாட்டான்… மதத்தை வெச்சு பொழப்பு நடத்தறான் பாத்தியா, அவன்தான் கோச்சுப்பான்”, “நம்ம மக்களப் பத்தி நமக்கு தெரியாதா? செருப்பால அடிச்சிட்டு… கைல கருப்பட்டி கொடுத்தா, நக்கிக்கிட்டே போயிடுவாங்க” செத்தவன் பேரு பாஷா, அப்பன் பேரு இப்ராஹிம், உங்க பேரு?, என்ன, சரோஜாவா?, நம்ம புள்ளைங்கங்ற நம்ம அடையாளமே இல்லீயேப்பா…, இந்துக்களுக்கு என்ன ஒரு பிரச்சனையானாலும் அங்க நாங்க இருப்போம், நார்த் மாதிரி இல்ல தலைவரே, இங்கே எல்லாமே கஷ்டம், அவரு 25 வருஷமா இதோ வரேன் அதோ வரேன்னு சொல்லி, அவர் ரசிகர்களை ஏமாத்திட்டிருக்காரு, செத்தவனை வச்சு பொழப்ப நடத்தி, வாழ்ந்தவங்கதானே நம்ம அரசியல்வாதிக, இவங்க பொணத்த வெச்சிகிட்டு வெளயாட்டு காட்டிட்டிருக்காங்கண்ணா, முன்னாடி எல்லாம் தூர்தர்ஷன்னு ஒரே ஒரு சேனல் இருக்கும், அதுல ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கும். இன்னிக்கு ஊர்பட்ட சேனல்ஸ் இருக்கு, எல்லாத்திலும் வெறும் பஞ்சாயத்து மட்டும்தான் ஓடிட்டு இருக்கு, -இப்படிப் படம் முழுவதும் ‘பஞ்ச் டயலாக்’ ஸாக இல்லாது, ரசிகர்களின் மனதைப் ‘பன்ஞ்’ செய்து விடுகிற டயலாக்குகளாக விரவி இருக்கின்றன. இந்தப் படம் எந்த ஒரு தரப்பையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டிடவில்லை; மதவாதிகள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், ஏன் மக்களையும் சேர்த்து, எல்லோரையுமே அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. என்னதான் இயல்புத் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், படம் முழுவதுமாகத் தொடரும் கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். இறந்த உடலுக்குச் சுன்னத் செய்ய, மார்க்கம் அனுமதிக்குமோ ! படத்தின் பெயரும் கதைக்கருவோடு ஒட்டவில்லை. ராதாரவி (முதல்வர் செங்குட்டுவன்), ஆடுகளம் நரேன் (காவல்துறை துணை ஆணையர்), வழக்கு எண் முத்துராமன் (காவல் ஆய்வாளர்) ஜெயராஜ் (ஏழுமலை) வேலு பிரபாகரன் (ஹாஜியார்) விஜயா (சரோஜா), பசி சத்யா (சரோஜாவின் தோழி) உட்பட அனைத்துக் கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். கதிரவனின் ஒளிப்பதிவும், சுதர்சனின் படத்தொகுப்பும், மாறனின் பின்னணி இசையும், உறுத்தாமல் படத்தின் தேவையை நிறைவு செய்கின்றன. இடையிடையே கானா பாடல், இனிமை சேர்க்கிறது. “பேசாம பாடிய எடுத்துட்டு போய் மெடிக்கல் காலேஜிலாவது போடுங்க சார், பசங்கலாவது அதை வெச்சி படிக்கட்டும்” என்று கருஞ்சட்டை மனிதர் (கில்லி மாறன்) மூலம் துணிச்சலுடன் சொல்லிய இயக்குனர் மாறன், படத்தின் இறுதிக் காட்சியையும் அதே துணிச்சலுடன், மதச் சார்புத் தன்மையை மறுக்கும் விதத்தில், அவ்விதமே அமைத்திருந்தால், ‘ஆன்டி இந்தியன்’ கூடுதல் சிறப்புப் பெற்றிருக்கும். மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்