குமிண் சிரிப்பு
நாடக விமர்சனம் : மது ராஜேந்திரன் சிவபுரம் நடராஜர் சிலை கடத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட உண்மைக் கதையின் அடிப்படையில், சுஜாதா விஜயராகவன் எழுத்தில், திரைப்பட இயக்குநரும் வீணைக் கலைஞருமான எஸ்.பாலச்சந்தர் அவர்களின் மகன் எஸ்.பி.எஸ். ராமன் இயக்கத்தில் மேடையேறி இருக்கும் நாடகம்தான் ‘குமிண் சிரிப்பு.’ புதுப்பிப்பதற்காகத் தம்மிடம் வந்த ராஜநல்லூர் சிவன் கோவில் நடராஜர் சிலையைப் போன்றே அச்சு அசலான ஒரு சிலையைப் பணத்தாசையால் மாணிக்க ஆசாரி செய்து விற்றுவிடுகிறார். அச்சிலை பல கைகள் மாறி, அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு கலைக்கூடத்திற்குப் போய்ச் சேருகிறது. இச்சிலைத் திருட்டு, பின்னர் வெளியுலகத்திற்குத் தெரிந்ததையடுத்து நடந்த சட்டப் போராட்டத்தின் இறுதியில் நடராஜர் சிலை மீட்கப்பட்டு, கிராமத்திற்குத் திரும்ப வருவதுதான் ‘குமிண் சிரிப்பு’ நாடகத்தின் மொத்தக் கதை. அப்பர் பாடலில் வரும் வார்த்தைகள் நாடகத்தின் தலைப்பாக இருப்பதுடன், உண்மையை வெளிப்படுத்த அதையே ஒரு உத்தியாகவும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. சிலை செய்யும் நேர்த்தியில் பெருமிதம் கொள்வதிலாகட்டும் வந்தவர்களிடம் முடிந்தவரை பேரம் பேசுவதிலாகட்டும் நகை செய்யும் ஆசாரியிடம் மனைவிக்கு வாங்கும் நகை குறித்துச் சந்தேகம் தீர விசாரிப்பதிலாகட்டும் மாப்பிள்ளை, மகளிடம் பெற்ற பயனைப் பங்குபோட முனைவதிலாகட்டும் செய்த குற்றம் வெளிப்பட்டுவிட, அதைப் பேசிப் புலம்பி மருகுவதிலாகட்டும், பாத்திரத்தின் தன்மையை முழுதும் உள்வாங்கி மாணிக்க ஆசாரியாகவே மாறி நடிப்பில் பிரகாசிக்கிறார் ராஜா மான்சிங். ஆசாரியின் மகள் செல்லம்மா, மனைவி, மருமகன் கோபால், நிலக்கிழார் குமாரசாமி, காவல் ஆய்வாளர், கலை வரலாற்றாய்வாளர் ரோஜர் வில்லியம்ஸ் உள்ளிட்ட துணைப் பாத்திரங்களும் நடிப்பில் தத்தம் பங்களிப்பைக் குறையின்றி வழங்கியுள்ளனர். மேடையில் வழக்கமான அரங்க அமைப்புகளைத் தவிர்த்து, பிரம்மாண்டமான டிஜிட்டல் பின்புலத்தைப் பயன்படுத்தியுள்ள புதுமை பாராட்டத்தக்கது. எனினும் அந்தத் திரை வரம்பிற்கு அப்பாலும் பாத்திரங்கள் நிற்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோன்று, மேடை ‘மைக்’குகளுக்குப் பதிலாக, பாத்திரங்களின் தலையைச் சுற்றி ஒலிவாங்கியைப் பயன்படுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அவை வெள்ளை நிறத்தில் அல்லாது கருப்பு நிறத்தில் இருந்திருந்தால், பார்வைக்குச் சற்று உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கும். பின்னணி இசையின் துல்லியமும் பாடலின் கனீரென்ற குரல்களும் ஈர்க்கின்றன. ஒளியமைப்பும் ஒப்பனையும் அருமை. இடையிடையே வரும் நிதீஷ் குமாரின் ‘சிவ’தாண்டவம் நேர்த்தியாக இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதன் குறியீடு என்னவென்பது (எஸ் பி எஸ்) ‘ராமனு’க்குத்தான் வெளிச்சம்! பொதுவாகச் சிலைத்திருட்டு பற்றி அமையாமல், வசதியாக சிவபுரம் நடராஜர் வழக்கைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளதால், சிலைத் திருட்டில் கைக்கொள்ளப்படும் செயல்முறைகள் குறித்து ஒரு முழுமையான தோற்றம் வெளிப்படாதது ஒரு குறையே. சிலைத் திருட்டில் கடவுளர் சிலைகள் மட்டுமின்றி, பழமையான கலைப் பொருட்களும் ஓவியங்களும்கூட அடங்கும். இதனை பக்தி நாடகமாகவே உருவகித்துவிட்டதால், ஒரு ‘திரில்லர்’ அளவிற்குச் செல்ல வேண்டிய கதையோட்டம் இல்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம், சிலைத் திருட்டின் மர்மத்தை முதல் காட்சியிலேயே உடைக்காமல், விறுவிறுப்பான விசாரணையின் முடிவில் வழக்கின் முடிச்சை அவிழ்த்திருந்தால், குறைவான எண்ணிக்கையிலேயே படங்களைத் தந்திருந்தாலும் தமிழ்நாட்டின் ஹிட்ச்காக் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட எஸ்.பாலச்சந்தரின் புதல்வரானஇயக்குநரிடமும் அவரின் மரபு வெளிப்பட்டிருக்கும். மதிப்பெண் 6.5/10