திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

திருப்பூர் எனும் திருப்புமுனை – 3

பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட ஆர்டருக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்ய, தங்களின் தேவைக்கேற்ற தர வரையறைக்குள் துணி தயாரிக்கும் ஆலைகளிடம் துணிகளை ஆர்டர் செய்து பெற்று, ஆடைகளைத் தயாரித்து அனுப்புவர். திருப்பூரைப் பொறுத்தமட்டில், இங்கு துணி தயாரிப்பு நிறுவனம் என்பது கிடையாது (அண்மைக் காலங்களில் உருவாகி வருகிறது). ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவைகளுக்கேற்ப நூலை மொத்தமாக நூற்பாலைகளிலிருந்து கொள்முதல் செய்து, அதனைப் பல்வேறு படிநிலை சார்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் துணியாக உற்பத்தி செய்யபடும். முதல் நிலை, நிட்டிங் என அழைக்கப்படும். வாங்கிய நூலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த குறியீடுகளுக்கு உட்பட்டு, அதற்குரிய துணி உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு துணியாகப் பின்னல் செய்யப்படும். அடிப்படைத் துணி இவ்வாறாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்நாட்டு இயந்திரங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்ட நிலை மாறி, தற்போது அதிநவீன இறக்குமதி இயந்திரங்கள் வாயிலாக, அதிகளவு துணி உற்பத்தி நடைபெறுகிறது. உற்பத்தி செய்யபட்ட துணி, வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள விவரக்குறிப்பிற்கு உட்பட்டு சாயம் ஏற்றப்பட்டு அல்லது சலவை செய்யப்பட்டு, சில சமயங்களில் துணியாக இருக்கும் நிலையிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு, உரிய செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஆடைகளாகத் தைத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். இதில் ஆடைகளின் வடிவத்திற்கு ஏற்ப பிரிண்டிங், எம்பிராய்டரி போன்ற மதிப்புக்கூட்டல் செய்யப்படும். இது தவிர, அக்சஸரீஸ் என அழைக்கப்படும் லேபிள், டேக், ஸ்டிக்கர் மற்றும் ஆடைகளைப் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நெகிழிப் பைகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை அதற்குரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து பெறப்பட்டு ஆடைகளைப் பேக்கிங் செய்து அனுப்பிவைக்கப்படும். மேற்சொன்ன விபரங்களைக்கொண்டு திருப்பூரின் பின்னலாடை உற்பத்திச் சங்கிலியைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். இந்த உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் நூறு முதல் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. 5 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் – நிறுவனத்தின் உற்பத்திப் பின்னணி மற்றும் திறன் அடிப்படையில் – முதலீடு செய்யப்பட்டு இயங்கிவருகின்றன. குறைந்தபட்சம் 5 முதல் ஆயிரங்கள் என்னும் எண்ணிக்கையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த உற்பத்திச் சங்கிலியின் தலைமைப் பொறுப்பு, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு ஆடை உற்பத்தியாளரையே சாரும். ஒவ்வொரு நிலை சார்பு நிறுவனமும் அடுத்தடுத்த நிலை சார்பு நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகிறது. சார்ந்து இயங்கினாலும் ஒவ்வொரு படிநிலை உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு மட்டுமே இந்த மாதிரியான உற்பத்திச் சங்கிலியை வெற்றிகரமாக இயங்க செய்யும். இதுவொரு இயல்பான கலாச்சாரமாகவே இங்கு உருவெடுத்துள்ளது. இப்படியான ஒரு அமைப்பை நான் அறிந்தவரை உலகளவில் திருப்பூரில் மட்டுமே காண இயலும். திருப்பூரில் உற்பத்தியாகும் ஒவ்வொரு பின்னலாடையையும் ஒரு பண்பாட்டு உருவாக்கமாகவே நாம் பார்க்கலாம். இந்தப் பண்பாட்டு இயக்கம் பல ஆயிரம் நபர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்தியது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளியாக உயரப் பெரும் காரணம் இந்தப் பண்பாட்டு விழுமியமே என்று சொன்னால் மிகையல்ல. ஒரு தொழில் நகரம் உருவாகும்போது, ஒரு சமூகக் கட்டமைப்பு உருவாகும். அந்த வகையில், இங்கு பனியன் தொழில் சாராத பல தொழில்கள், அதாவது ஒரு கை வண்டியில் காய்கறி, பழங்கள் விற்கும் எளிய வியாபரி முதல், மளிகை, உணவகம், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மருத்துவமனைகள், திரை அரங்குகள், நகைக் கடைகள், அடுமனைகள் (பேக்கரி) என, பல அடுக்குகளில் தொழில்கள் உருவாகிச் செழித்து வளர்ந்துள்ளன. இப்படியாக, திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது, மிகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டது. ஒரு கிராமமாக ஒரு காலத்தில் அறியப்பட்ட ஊர், இன்று ஒரு மாவட்டத் தலைநகராக எவ்வாறு தன்னைத்தானே உயர்த்திக்கொண்டது என்பதை மேற்சொன்ன விவரங்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். இங்கு பின்னலாடைத் தொழிலுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவே இவ்வளவு செய்திகளைக் கூறவேண்டியுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசித்த ஒரு சகோதரி, நொய்யல் ஆற்றின் நிலை குறித்த தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். அவரின் கவலை, ஒட்டுமொத்த நொய்யல் வழித்தடச் சமூகத்தின் கவலை என்பதாகவே நாம் கருதலாம். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு அங்கம். கண்களை விற்று ஓவியம் வாங்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒட்டுமொத்தத் தொழில்துறையினரின் நிலைப்பாடும் அதுதான். இந்தத் தொடரில், நொய்யல் குறித்து, விருப்பு வெறுப்பின்றி தனி அத்தியாயமே வரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளிக்கிழமை நான்காம் அத்தியாயத்தில் மற்றுமொரு தரவோடு உங்களைச் சந்திக்கிறேன்.

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரண்டு அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. 60க்கும் மேற்பட்ட நகரங்கள் ஒரு நொடியில் பஸ்பமாக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது. லிட்டில் பாய் (Little Boy) மற்றும் ஃபேட் மேன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அந்த அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றில், மனித வரலாற்றில் முதல்முறையாக, போரில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகள் (Atomic Bombs). இந்த அணுகுண்டுகளைத் தயாரிக்க, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் புராஜெக்ட் (Manhattan Project) குழுவினர்தான் இதைச் செயல்படுத்தினார்கள். மன்ஹாட்டன் புராஜெக்டின் ஒரு அங்கமாக நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமாஸ் என்ற இடத்தில் மிக ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த ஆய்வுக்கூடத்தில்தான் இந்த அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டன. அங்குதான் உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்த அணுகுண்டுகளை உருவாக்கும் ஆய்வின் தலைமை சயிண்டிஸ்டாக – மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டவர்தான் ஓப்பன்ஹெய்மர் என்கிற இயற்பியல் அறிவியலாளன். குவான்டம் பிஸிக்ஸ் மீது ஓப்பன்ஹெய்மருக்கு இருந்த தீவிரமான காதல்தான் அணுகுண்டின் தந்தை என்ற நிலையை நோக்கி அவரை இழுத்துச் சென்றது. 1945 ஜூலை 16ஆம் நாள், நியூ மெக்ஸிகோ நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு, ட்ரினிட்டி (Trinity) என்று ஓப்பன்ஹெய்மரால் பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டு வெற்றி பெறுகிறது. அந்த வெற்றிதான் Father of Atomic Bomb என்ற வரலாற்றுப் பெயரை ஓப்பன்ஹெய்மருக்குத் தருகிறது. அணுகுண்டு பரிசோதனை வெற்றியடைந்த பின் அமெரிக்கா நீண்ட காலம் எல்லாம் காத்திருக்கவில்லை. வெறும் 20 நாட்களில் அமெரிக்கா ஜப்பான்மீது அணுகுண்டுகளை வீசுகிறது. “இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் கை ஓங்கி இருக்கிறது. ஜெர்மனியில் அணுகுண்டு ஆராய்ச்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு அது சாத்தியமாகும் எனில், உலகம் பேரழிவைச் சந்திக்கும். அதைப்போல ரஷ்யாவும் இந்த அணுகுண்டு ஆராய்ச்சியில் மிகவும் மும்முரமாக இருப்பதாக அறிகிறோம். உலகத்தின் பேரழிவைத் தடுக்க, இதை நாம் செய்தாக வேண்டியிருக்கிறது” என்று சொல்லித்தான் ஓப்பன்ஹெய்மர் இதைச் செய்யச் சம்மதிக்க வைக்கிறார்கள். ஏனெனில், ஓப்பன்ஹெய்மர் கம்யூனிஸ ஆதரவாளராக இருக்கிறார். கூடவே, ‘தியரட்டிக்கல்தான் என் விருப்பம்; எக்ஸிகியூஸன் அல்ல’ என்றும் கூறுகிறார். ஆனால் ஜெர்மனியையும் ரஷ்யாவையும் ஹிட்லரையும் காரணம் காட்டித்தான் லாஸ் அலமாஸில் அந்த ரகசிய ஆய்வுக்கூடத்தை, ஓப்பன்ஹெய்மரை வைத்து உருவாக்குகிறார்கள். இதுதான் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஓப்பன்ஹெய்மர் படத்தின் கதை சாராம்சம். இது தவிர ஹெய்மரின் காதல்கள், அவரின் கம்யூனிஸ ஆதரவு மற்றும் அணு ஆயுதங்கள் (Nuclear Weapons) குறித்த அவரது நிலைப்பாட்டால் அவருக்கு ஏற்பட்ட அரசாங்க ரீதியான பிரச்சினைகள், நெருக்கடிகள், சக விஞ்ஞானிகளின் பொறாமைகள் என, கொஞ்சம் எமோஷனல் ஏரியாவும் உண்டு. ஓப்பன் ஹெய்மருக்கு, அணுகுண்டு சோதனை வெற்றிபெற்று விடும்; உலகத்தின் முதல் அணுகுண்டு லாஸ் அலமாஸில் உருவாக்கப்பட்டு விடும் என்று, தன் ஆய்வின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வருகிறது. அப்போது அதன் கூடவே அவருக்கு மிகப்பெரிய அவநம்பிக்கையும் சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உலகம் இதை வைத்து எவ்வளவு மோசமான கொடுரங்களைச் செய்யும், எவ்வளவு மக்கள் கொல்லப்படுவார்கள், இதைக் கண்டிப்பாக நாம் செய்தே ஆக வேண்டுமா என்றெல்லாம் ஓப்பன்ஹெய்மர் குழம்புகிறார். அங்கேதான் ஓப்பன் ஹெய்மரின் தோளில் தட்டி, ‘அதெல்லாம் தப்பில்லை, கண்டிப்பாக இதை நீ செய்ய வேண்டும்’ என்று நம்ம ஊரிலிருந்து ஒருவர் ஆறுதல் கூறி, ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல. ‘தி கிரேட் லார்ட் கிருஷ்ணா அலைஸ் கண்ணன்’தான். ஆம். ஓப்பன்ஹெய்மர் பகவத் கீதாவை வாசித்தபோது, அதில் அர்ஜூனன், போரில் தன் சொந்தபந்தங்களை நானே கொல்வதா என தவித்துக் கலங்கி நின்றபோது, கண்ணன் கீதாசாரத்தைக் கூறுகிறார். அதாவது, “மரணம் என்பது நான்தான். மக்கள், மரம், செடி, கொடி எல்லாம் நான்தான். கொல்பவனாகிய நீயும் நான்தான். கொல்லப்படுபவர்களாகிய மக்களும் நான்தான். கொல்லச் சொல்பவனும் நான்தான். நீ எதையும் செய்யவில்லை. நான்தான் அனைத்தையும் செய்கிறேன். நீ இதைச் செய்வதனால் போற்றப்பட்டாலும் தூற்றப்பட்டாலும் அது என்னையே சேரும்; உன்னைச் சேராது. நீ இதைச் செய்யவில்லை என்றாலும் இன்னொருவன் செய்யத்தான் போகிறான். எனவே, உன் கடமையை நீ செய்; பலனைப் பற்றி நீ யோசிக்காதே” என்கிறான். அதில் தெளிவு?! பெற்ற அர்ஜூனன் போல, ஓப்பன்ஹெய்மரும் தெளிவு பெற்று அணுகுண்டைத் தயாரிக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் இந்த உரையாடலையே படத்தின் ஒரு காட்சியாகவும் வைத்திருப்பார். கண்ணனாக அப்போதைய அமெரிக்க பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டும் அர்ஜூனனாக ஓப்பன்ஹெய்மரும் பேசிக்கொள்வதுபோல அச்சு அசலாக அந்த உரையாடலைக் காட்சிப்படுத்தியிருப்பார் நோலன். ஒரே ஒரு வித்தியாசம், பாரதப் போரில் மக்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் உரையாடல், இங்கே ஜப்பான்மீது குண்டு வீசிக் கொன்றபின் நடக்கும். இப்படியாக அவர்கள் இயற்பியல், அறிவியல், குவான்டம் பிஸிக்ஸ் என்று அறிவியல் சார்ந்த படங்கள், அறிவியலாளர்கள் சார்ந்த படங்கள், வரலாற்றுப் படங்கள் என எடுத்துக்கொண்டிருக்க, நாம் கேரளக் கதைகள் கஸ்மீர்க் கதைகள் என்று புளுகிக் கொண்டிருக்கிறோம். கில்லியன் மர்பி, ஓப்பன்ஹெய்மராகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு ஸ்டைல், ஆட்டிட்யூட்! கூடவே ராபர்ட் டௌனி ஜுனியர், அட நம்ம அயர்ன்மேனா இது ஆச்சர்யப்பட வைக்கும் தோற்றத்தில் கேரக்டரில் வந்து அசத்துகிறார். மார்ஷியன் மேட் டேமென் அட்டகாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். மொத்தத்தில், ஓப்பன்ஹெய்மர் படமாகவும் மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும்.

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

11. மகாபாரதத்தில் தாசியும் நவீன பாரதத்தில் கொத்தடிமையும் திருதராஷ்டிரன் ஏன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன வியாசர், அதற்கு திருதராஷ்டிரனின் தலைவிதியோ கர்மாவோ காரணம் என்று சொல்லி மழுப்பவில்லை. திருதராஷ்டிரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகப் பிறந்தததற்கு, அவனுடைய தாய் அந்நியருடன் உறவு கொள்வதை எண்ணி, கண்ணை மூடிக்கொண்டதால் ஏற்பட்ட எதிர்பாரத விபத்து என்று கூறிக் கதையை நகர்த்துகிறார். முதல் நாள் இரவு, நன்கு அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் தள்ளப்பட்ட அம்பிகை, பயங்கரமான உருவத்தில் இருந்த வேறொரு ஆணுடன் கலவி முடியும்வரை, கண்ணை இறுக மூடிக்கொண்டுவிட்டாள். அம்பிகை, கலவியின்போது கண்ணை இறுக மூடிக்கொண்டதால், திருதராஷ்டிரன் பார்வை  இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்கிறார் வியாசர். அம்பாலிகையும் வியாசருடன் சகஜமாக உறவில் ஈடுபடவில்லை. மிகுந்த கூச்சத்துடன் நடந்துகொண்டதால் உடல் வெளுத்தும் மலடனாகவும் பாண்டு பிறந்தான் என்கிறது மகாபாரதம். ஆகவே, இரண்டு மனைவியர் இருந்தும் சாபத்திற்கு முன்பே அவனுக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதுபோகவும் அம்பிகையின் சேடிப் பெண்ணாக வேலை பார்த்த ஒரு பெண்ணையும் வியாசருடன் உறவு கொள்ள வைத்தார்கள். அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்தவன்தான் விதுரன். இந்தச் சம்பவங்களின்படி பார்த்தால், திருதராஷ்டிரனும் பாண்டுவும் சத்ரியர்களாக மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் விசித்ர வீரியனின் வாரிசுகளாக அரச பதவி பெற்றனர். அவர்களுடைய சகோதரன் விதுரன் மட்டும் சூத்திரனாகவே நடத்தப்பட்டான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் என்பதால், ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவார்கள். ஆனால், விதுரனின் தாய் வேலைக்காரி (தாசி) என்பதால், மற்ற இருவரும் விசித்திர வீரியனின் புதல்வர்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதும், விதுரனை விசித்ரவீரியனின் மகனாக அன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் ஏறத்தாழ, கர்ணன் பாண்டுவின் புத்திரனாகக் கருதப்படமாட்டான் என்ற சட்ட நிலைப்பாட்டோடு ஒத்த நிலைப்பாடாகும். விதுரன், பெரிய நீதிமான் என்று கொண்டாடப்பட்டவன். கிருஷ்ண பரமாத்மாவின் பரம பக்தன். அவன் கையில் இருந்த சிவதனுசு, உலகை வெல்லக்கூடியது. விதுரனால் சொல்லப்பட்ட சமூக நீதிகளை ‘விதுர நீதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். திருதராஷ்டிரன் அரசவையில் முக்கிய அமைச்சராக இருந்த விதுரன், பல சமயங்களில் பாண்டவர்களை ஆதரித்துப் பேசும் வழக்கமுள்ளவனாக இருந்தான். அது துரியோதனனை எரிச்சலடைய வைத்தது. கிருஷ்ணன் ஊசிமுனை நிலம் கேட்டு சமாதானத் தூதுவனாக வந்தபோது, ‘நீ என்ன இருந்தாலும் தாசி மகன் (வேலைக்காரியின் மகன்)தானே’ என்று விதுரனை துரியோதனன் கடுமையாக வசை பாடினான். கர்ணனுக்குத் தன் தாய் யார் என்று தெரியாததால் ஏற்பட்ட அவமானத்தைவிட, தன் தாய் யார் என்பது தெரிந்ததால் விதுரன் சொல்லொணா அவமானப்பட்டான். பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக, அரசாட்சிப் பொறுப்பேற்கும் உரிமையைத் தன் தந்தை இழந்ததும் மூத்தவன் இருக்கும்போது இளையவன் மன்னனானதும் துரியோதனனை நிலைதடுமாற வைத்த மோசமான சட்ட நிலைப்பாடுகள். இவை ஒருபுறமிருக்க, ‘தாசி மகன்’ (வேலைக்காரியின் மகன்) என்றழைக்கப்பட்ட விதுரனின் தாயையும் அவளைப் போல அந்தப்புரங்களில் பணியாற்றிய வேலைக்காரப் பெண்களைப் பற்றியும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் அடிமைச் சமுதாயம் ஒருபோதும் இருந்ததில்லை என்பது சில தத்துவ ஆசிரியர்களின் கருத்து. அடிமைச் சமுதாயத்தைக் கடந்துதான் நிலப் பிரபுத்துவ சமுதாயம் ஏற்பட்டது என்று வாதிடுவோரும் உண்டு. இந்தச் சர்ச்சை இன்றும் முடிவில்லாத சர்ச்சையாக இருக்கிறது. அந்தப்புரப் பெண்களுக்குப் பணிவிடை செய்து அந்தப்புரத்திலேயே வாழும் பெண்களை, வேத வியாசர் ‘தாசி’ என்ற பெயரில்தான் அழைக்கிறார். ‘தாசி’ என்ற சொல்லுக்கு, வேலைக்காரி என்ற அர்த்தம் மட்டுமின்றி அடிமை என்ற அர்த்தமும் உண்டு. ஆனால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யயாதியின் கதையில், அசுர குருவின் (பிராமணர்) மகள் தேவயானியை, யயாதி மணந்தபோது அசுரர்களின் அரசனின் மகளான சர்மிஷ்டை, அவளுடைய தீய செயலுக்கு (வேறொன்றுமில்லை.. அசுர குருவின் மகள் தேவயானியை அரசனின் மகள் என்ற நிலையில் அவமதித்தாள்) தண்டனையாக தேவயானியின் ‘தாசி’யாக அனுப்பப்படுகிறாள் என்கிறது  மகாபாரதம். அதுமட்டுமன்றி, பின்ளாளில் யயாதி, சர்மிஷ்டையை தேவயானிக்குத் தெரியாமல் மணந்துகொண்டதால், தேவயானியை சமாதானம் செய்வதற்காக அசுர குரு சுக்கிராச்சாரியார், ‘உன்னுடைய யௌவனம் இப்போதே அழிந்து நீ முதுமை எய்துவாயாக’ என்று யயாதிக்கு சாபம் கொடுத்ததாகவும் மகாபாரதம்  சொல்கிறது. யயாதியின் கதை தனிக்கதை. அதை ‘தாசி’ பற்றிய பதப் பிரயோகத்தை விளக்குவதற்காக இங்கே குறிப்பிட நேர்ந்தது. தாசி என்பவள் ஒரு மணப்பெண்ணுக்கு தரப்படும் சீர்வரிசைப் பொருளைப்போல, எந்த உரிமையும் இல்லாத ஒரு அஃறிணைப் பொருளாக நடத்தப்படுவதை மகாபாரதத்தில் பார்க்கிறோம். அதனால் ‘தாசி’யை விரும்பி மணந்த யயாதி, சபிக்கப்பட்டான். விதுரனின் தாய் அவளுடைய விருப்பமின்றியே வியாசருடன் உடலுறவு கொள்ளும்படி செய்யப்பட்டாள். இந்த அடிமைமுறை, இப்போது இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘கொத்து’ என்றால் உணவு என்று அர்த்தம். ‘கொத்தடிமை’ என்றால் உணவை மட்டும் கொடுத்து அடிமையைப் போல 24 மணி நேரமும் முதலாளிகளுக்கு உழைக்க வைக்கப்படுபவர்கள் என்று பொருள். கொத்தடிமை முறை இப்போது பெரும்பாலும் செங்கல் சூளைகளில்தான் இருக்கிறது. அங்கே, பள்ளிக்கூடம் போகவேண்டிய மாணவர்கள் வறுமையின் காரணமாக, ‘கொத்தடிமை’ ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைவிடக் கேவலமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுவதுடன், ஒரு சுதந்திர நாட்டில் எந்த மனித உரிமையும் இல்லாமல் ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். இப்போது இந்த முறை ‘சுமங்கலித் திட்டம்’ என்பதுபோல, பல்வேறு பெயர்களில் நூற்பாலை முதல் பல்வேறு தொழில்களில் கால் பதித்துவிட்டது. எங்கே இந்தக் கொத்தடிமை முறை வழக்கில் இருக்கிறதோ, அங்கே பெண்கள் எஜமானர்களின் காமப் பசிக்கு இரையாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. ‘கொத்தடிமை’ முறை குற்றம் என்று சட்டம் அறிவித்துவிட்டாலும் மகாபாரதக் காலத்தில் இருந்ததைப்போல், இன்றும் அது வழக்கில் இருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. இப்போது, ‘தொழில் வளர்ச்சியின்’ மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துகிறோம் என்ற சாக்கில், அந்நிய முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைக்கும் அரசுகள், அவர்கள் தொழில் நடத்த சாதகமான சூழலை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், இதுவரை 8 மணி  நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க முயல்கிறார்கள். 8 மணி நேர வேலை – 8 மணி நேர ஓய்வு – 8 மணி நேர ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்று, ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் மே தினத் தியாகிகள் பெற்றுத்தந்த மனித உரிமையைப் பறிப்பதற்கு, எல்லாவிதமான பசப்பு வார்த்தைகளையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேசுகின்றன. 12 மணி நேர வேலை என்பது, வேறு வடிவத்திலான கொத்தடிமை முறை என்பதை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் அறியும். எனவே, வேலை நேரத்தை அதிகரித்து அதிக உபரி மதிப்பை லாபமாகப் பெற, தொழிலாளர் வர்க்கத்தைக் கொடும் சுரண்டலுக்கு உள்ளாக்கி, தொழிலாளியை குடும்பம், சமூகம்,அறிவியல் மற்றும் கலையில் ஈடுபாடு முதலான எல்லா அம்சங்களில் இருந்தும் அந்நியப்படுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சி, இப்போது தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுவிட்டாலும், அந்த அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதால், அதை எதிர்க்க சதா விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அன்றாடம் காய்ச்சிகளான கட்டடத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கூலிமுக்குகள்’ அதிகரித்துக்கொண்டே போகின்றன. அந்தத் துறையில் வேலைநேரம் முறைப்படுத்தப்படாமல், கடும் உடல் உழைப்பினால் மாடமாளிகைகளைக் கட்டவேண்டியுள்ளது. அவர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை. அந்தக் கூலி முக்குகள் கடும் போட்டியின் காரணமாக, ‘கொத்தடிமைச் சந்தைகளாக மாறிவருவதை, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பொய் பேசும் அரசியல்வாதிகள், கருத்திலேயே கொள்வதில்லை என்பது வேதனையான விஷயம். அதனால் மகாபாரதக் காலத்தில் ‘அடிமை முறை’ இருந்ததா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, இன்றைய சமுதாயத்தில் ‘நவீனக் கொத்தடிமை முறை’ இந்தியாவில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் காரணமாகவே, பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இங்கு பல்கிப் பெருகி, தமிழ்நாட்டின் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பொருளாதாரம் மற்றும் உற்பத்திக் குறியீடுகளிலும் கொங்குப் பகுதி எப்பொழுதும் முன்னணி வகிக்கிறது. ஒட்டுமொத்த கொங்குப் பகுதிகளில் ஜவுளித் தொழில் பிரதானமாக வளர்ந்ததற்கு, பருத்தி உற்பத்தியோடு, நான் மேற்சொன்ன காரணங்களும் உள்ளடங்கியுள்ளன. இதையும் கடந்து, ஒரு வரலாற்றுத் தரவையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் என்னும் ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்பும் பட்டாடைகள் நெய்து ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியும் நடந்துள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்குள்ள மக்களின் மரபணுவிலேயே ஜவுளித்தொழிலின் தாக்கம் இருப்பதே, இங்கு இந்தத் தொழில் வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். 1950-களில் வேறொரு பணியின் காரணமாகக் கல்கத்தா சென்ற திரு. குலாம் காதர் அவர்கள், அங்கிருந்து தையல் இயந்திரங்களை வாங்கிவந்து, இங்கு பனியன் உற்பத்தியை முன்னெடுத்தார்.  தொடக்கத்தில் வெள்ளை நிற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நூலைத் துணியாகப் பின்னுவதற்கான நிட்டிங் இயந்திரம் லூதியானாவிலிருந்து வாங்கப்பட்டு, துணி உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து, அந்தத் துணிகளை வெள்ளையாக்கும் வேலைகளைச் செய்ய சலவைப் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. 1970-களில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாய ஆலைகள் தொடங்கப்பெற்று, உள்ளாடைகளைத் தாண்டி மேலாடை உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் ஆடைகளில் அச்சு (பிரிண்ட்) செய்வதற்கான ஆலைகளும் உருவாகின. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஆடைகளின் தயாரிப்பு தொடங்கப்பெற்று, 1980-களில் ஏற்றுமதியும் தொடங்கியது. ஒரு தொழில் அமைக்க ஏதுவான சுற்றுச்சூழல், அந்தத் தொழில் குறித்தான நுட்பங்கள், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், அதனைச் சந்தைப்படுத்தும் வழிகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதாரம், இவையனைத்தையும்  உள்ளடக்கியதுதான் வெற்றிகரமான உற்பத்தித் தொழிலுக்கான அடிப்படை. எந்தவித தொழில்நுட்ப, கல்விப் பின்புலமோ வழிகாட்டுதல்களோ இல்லாது, ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, உயர வேண்டும் என்கிற எண்ணமும் அதற்கான தேடலும் தேடலைப் பகிர்தலும் அதன் வாயிலாக ஒரு சமூகமாக உயர்ந்ததும் திருப்பூரின் வெற்றிக்கான அடிப்படை. இந்தத் தொழிலும் இந்த ஊரும் சுயம்புவாக உருவானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. 1980-களில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே பெரும் செலவு செய்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்வது அத்தனை எளிதல்ல. அந்தக் காலகட்டத்தில் திருப்பூர் ஒரு சிறு நகரம்; ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு அங்கம். வெளிநாடுகளுக்கான தொலைபேசித் தொடர்புக்கு கோவைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஏற்றுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கும் மத்திய  அரசின் அலுவலகங்களை நோக்கி சென்னை, பெங்களூரு, மும்பை அல்லது டெல்லி செல்லவேண்டும். இத்தகையை சிரமங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் மனோபலமும் விடாமுயற்சியும் எதற்கும் துணிந்த செயல்பாடுகளும் இந்தத் தொழிலின் ஆரம்பகாலச் சிரமங்களைக் கடந்து முன்னேற, அடுத்தடுத்து இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பெருமளவு உதவியது. பொதுவாக ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கும்போது, எளிதாக அந்தத் தொழிற்சாலைக்குள் அனுமதிப்பதோ நுட்பங்களைக் கற்று கொடுப்பதோ சந்தையைப் பற்றிய அறிவினைப் பகிர்வது என்பதோ நடக்காது. இன்றும், இந்தத் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்திலும் பல இடங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், திருப்பூரைப் பொறுத்தமட்டில் இந்தத் தொழில் வளர்ந்ததற்கான பிரதான காரணங்கள் பல என்பதை ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். அதுபோலவே, பகிர்தல் என்பது திருப்பூரின் வளர்ச்சிப் பின்புலத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. தொழில் நுட்பங்கள், நிதியாதாரத் திரட்டல், சந்தை வாய்ப்புகள், மூலப்பொருட்களின் மூலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவிதத் தயக்கமுமின்றி இந்தத் தொழிலை முன்னெடுக்க வந்த நண்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் எனப் பகிர்ந்து, அவர்களையும் தொழிலை நிறுவச்செய்த பண்பாடு  திருப்பூரைத் தவிர வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். இதைச் சொல்வதால் மற்ற தொழில் நகரங்களைத் தாழ்த்தியோ அல்லது திருப்பூரை உயர்த்தியோ கூறுவது நோக்கமல்ல. இங்குள்ள இயல்பினையும் சுயம்புவாக இந்தத் தொழில் உருவானதையும் பல பத்தாண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரைத் தங்கள் மாநிலங்களில் அமைக்க முயன்று இயலாமல் போனதும் இன்றைய, மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு. பியூஸ் கோயல், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில்சார் கூட்டங்களில், ‘திருப்பூரைப் போன்று, இந்தியா முழுவதும் 75 திருப்பூரை உருவாக்கவேண்டும்’ என்று பதிவு செய்வதின் அடிப்படையும் திருப்பூரின் இந்தப் பண்பாட்டு விழுமியமே. ‘திருப்பூர் எனும் திருப்புமுனை’ கட்டுரை, இன்றைய சிக்கலான சூழலை விவரிக்கத்தானே! ஏன் பழைய வரலாறுகளைப் பேசவேண்டும்?’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். திருப்பூரின் தொழில், அடுத்த தலைமுறை மற்றும் சில தொழிற்சாலைகளில் இரண்டாம் தலைமுறைக்கு நகர்ந்துள்ள சூழலில், ஜவுளித் தொழிலைச் சாராதவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, அவர்களுக்கும் இந்தத் தொழில் கடந்து வந்த பாதை, அதைக் கடக்க ஏற்பட்ட சிரமங்கள், அந்தப் பயணத்தில் நேர்ந்த நல்ல விடயங்கள் மற்றும் தவறான முடிவுகள், செய்யத் தவறிய விடயங்கள் உள்ளிட்டவற்றை விவரித்தால் மட்டுமே, அடுத்து பயணிக்க வேண்டிய பாதையை வலுவாக அமைத்துக்கொள்ளலாம் என்பதாலேயே முந்தைய வரலாறுகளைச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே கடந்தகால வரலாற்றை மிகச் சுருக்கமாகப் புரிந்துகொண்டு, மேலும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

ஹலோ மீரா

ஹலோ மீரா

திரை விமர்சனம் நாளை மறுநாள் காதலித்தவனுடன் மணவிழாவைக் காண உள்ள, ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண் மீரா, தையற்காரரிடமிருந்து தனது திருமண உடைகளைப் பெற்றுக்கொண்டு, காரில் அமர்ந்து அம்மாவுடனும் கல்யாணுடனும் கிண்டலும் கேலியுமாகப் பேசி முடிக்கிறாள்.  அப்போது, தோழி சாக்‌ஷி குறிப்பிடும் இன்ஸ்டாகிராம் பதிவும் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம் தெரிவிக்கும் தகவலும் அதிர்ச்சியைத் தர, மறுநாள் சங்கீத் உள்ள நிலையில் வீட்டிற்குக்கூடச் செல்லாமல்,  அந்த இரவில் அவள் விஜயவாடாவிலிருந்து, நிர்ப்பந்தத்தில் ஹைதராபாத்திற்குச் செல்லும்போது, வரும் அடுத்தடுத்த அழைப்புகளால், அவை தரும் செய்திகளால் பதற்றம், குழப்பம், அச்சம், வெறுப்பு, கோபம் என, பெரும் மன உளைச்சலில் உழல, அதிலிருந்து மீரா மீண்டாளா, திட்டமிட்டபடி அவளது திருமணம் நடைபெற்றதா என்பதுதான், ‘ஹலோ மீரா’ தெலுங்குப் படத்தின் மொத்தக் கதை.  வழக்கமான திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ‘ஹலோ மீரா’ படம்,  ஸ்ரீநிவாசு கக்கர்லா திரைக்கதையை அழகாக எழுதி, விறுவிறுப்பாக இயக்கியிருக்க, அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன் வெளியாகி உள்ளது.  அழகான இளம் பெண் மீராவாக வரும் கர்கேயி எல்லபிரகடா, இக்கதைக்குப் பொருத்தமான நாயகி. பதற்றத்திலும் மன உளைச்சலிலும் மன உறுதியை இழக்காமல், உடைந்துவிடாமல், துணிச்சலுடன் பிரச்சனைகளைத் தெளிவாக எதிர்கொள்வதுமாக, யார் ஒருவருடனும் திரையைப் பகிர்ந்து கொள்ளாமல், முழுத்திரையையும் படம் முழுவதும் வியாபித்து,  உணர்வுபூர்வமான பாவங்களை வெளிப்படுத்தி, தனியாளாகவே நடிப்பில் முத்திரை பதிக்கிறார். படம் முழுவதும் அப்படி இப்படிக் கவனம் சிதறாமல், அவருடனேயே  நம்மையும் ஒன்றிடச் செய்திருப்பது வெகு சிறப்பு.  நாயகி மீரா  தவிர, அவளது அம்மா, அப்பா, தம்பி, மணமகன் கல்யாண், அவனின் அம்மா, சகோதரி திவ்யா, மீராவின் தோழிகள் சாக்‌ஷி, பூஜா, புவி, நண்பன் கிரண், ஏசிபி ராகவ ராவ், சப்-இன்ஸ்பெக்டர் விக்ரம், பெண் காவலர், சுதிர், அவனின் அப்பா, அம்மா, டைலர், டிஜே, பியூட்டிஷியன் சாந்தி என, எல்லாரும் திரைமறைவுப் பாத்திரங்களாக இருந்தாலும் குரல் வழியில் உயிர்ப்புடன் வழங்கியிருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது.  ‘சாரி பேபி.. சாரி, நீ பேசும்போது அந்த இன்சூரன்ஸ் கம்பெனி ‘ஹட்’ல ஒரு பையன் பேசுவானே, அந்த மாதிரி இருந்தது’  ‘இதே மாதிரி பத்து வருஷத்துக்கு அப்றமும் பேசு, அப்ப நான் ஒத்துக்கறேன்’  ‘பேரு எழுதினதுக்கெல்லாமா அரெஸ்ட் பண்ணுவீங்க? அநியாயமா இருக்கு சார்!’ ‘இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு டிஸ்கஷன் அவசியமா?’  ‘போறவன் போகாம, சூசைட் நோட்ல என் பேரையும் ஏன் எழுதணும்?’  ‘இந்தப் பசங்களே இப்படித்தான், லவ் பண்றப்போ  பொண்ணுங்க சொல்றபடி கேட்கறது; மேரேஜ்னா அம்மா சொல்றபடி கேட்கறது.’  ‘சந்தோஷமா இருக்கும்போது நாம தைரியமாக இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கஷ்டம் வரும்போதுதான் நம்ம தைரியம் என்னன்னு நமக்குத் தெரியும்’  ‘லவ் பண்றதுன்னா, தெனமும் பத்து தடவ போன் பண்ணி, ஐ லவ் யூ’ன்னு சொல்றதில்ல. இந்த மாதிரியான நெலயில உன்னைப் புரிஞ்சுகிட்டு உனக்கு சப்போர்ட் பண்றது’  ஒரு நாள் கல்யாண கூட்டிட்டு வந்து, ‘ரெண்டு பேரும் லவ் பண்றோம்; இவனைத்தான் கட்டிப்பேன்’னு சொன்னே. ஆனா,  நீ மட்டும்தான் லவ் பண்ணி இருக்கேன்னு இப்ப தெரியுதுமா’  இவை  ‘நச்’ சென்று ஈர்க்கின்ற வசனங்களில் சில.  வேறுபட்ட களங்களுக்கு வாய்ப்பே இல்லாத நிலையிலும் காரில் அமர்ந்திருக்கும் நாயகியின் முகத்தைப் பல்வேறு கோணங்களிலும் வேறுபட்ட முக பாவங்களையும் கிடைத்த கொஞ்சமான வாய்ப்பில் ‘ட்ரோன் ஷாட்’டில் சாலைப் போக்குவரத்தை இரவு ஒளியில் அழகாகப் படமாக்கி, சலிப்புத் தட்டாமல் செய்த கொப்பிலிடி பிரசாந்தின் ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் எஸ்.சின்னாவின் இசையும், மெடிகொண்டா ராம்பாபுவின் படத்தொகுப்பும் இயக்கத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.  காதல், சண்டை, பாடல், நகைச்சுவைக் காட்சிகள் என எதுவும் இல்லாமல், ஒரே காட்சி, ஒரே நடிகை என்று வைத்து, விறுவிறுப்புடன் கூடிய தெளிவான திரைக்கதை, வசனங்களால் 90 நிமிடங்கள் அப்படியே இருக்கையில் கட்டிப் போட்டுவிட்ட இயக்குநர் ஸ்ரீநிவாசு கக்கர்லாவின்  ‘ஹலோ மீரா’, வித்தியாசமான அனுபவமாக அமையும் என்பதுடன், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள், இம்மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க, எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டுவதை வலியுறுத்தும் என்பதும் நிச்சயம்.  மதிப்பெண்: 7.5/10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

10. துரியோதனின் புகழ் துரியோதனன் பிறந்தபோது நரிகள் ஊளையிட்டதாகவும் கோட்டான்கள் கூவியதாகவும் கழுதைகள் கத்தியதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் துரியோதனனின் வருகையைப் பல்வேறு கெட்ட சகுனங்களோடு தொடர்புபடுத்தி அவன் பிறப்பை அறிமுகப்படுத்துகிறார் வியாசர். ஆனால், துரியோதனன் சத்ரியனைப் போல வீரமரணம் எய்தியபோது பலமுறை வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்ததாகச் சொல்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ‘நான் சத்ரியனாக வீர மரணம் எய்தி, என் சுற்றத்தாரோடும் என் நண்பன் கர்ணனோடும் மகிழ்வோடு இருக்க சொர்க்கம் போகிறேன். பாவிகளான நீங்கள் இந்தப் பாவபூமியில் நீண்டகாலம் வாழ்ந்து ஆட்சி புரிந்து மாளாத துன்பமுற்று, பின்பு மேலுலகம் வருவீர்களாக. சத்ரியனாக மரணமடைவதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு, புலம்பிட எதுவுமில்லை’ என்று மரணத் தருவாயில் துரியோதனன் சொன்னபோதெல்லாம் தேவர்கள் பூமாரி பொழிந்து அவனை கௌரவப்படுத்தினார்கள் என்கிறார் வியாசர். எதையும் தட்டையாகச் சொல்லாமல் சுவாரசியமான நிகழ்வாகச் சொல்வது மகாபாரதத்தை இணையில்லாத இதிகாசமாக்குகிறது என்பதற்கு இவையும் எடுத்துக்காட்டு. அந்த கௌரவம் இரண்டு தரப்பிலும், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தேவர்கள் பூமாரி பொழிந்ததற்குப் பிரதான காரணம், திரௌபதி செய்த சபதமே. யுத்த நெறிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக, பீமன் துரியோதனைனைக் கொல்வதற்குக் காரணமாய் அமைந்தது அந்த சபதம். துகிலுரிதல் நிகழ்ச்சிக்குப் பின்பு, திரௌபதி தன் கருங்கூந்தலை அவிழ்த்துவிட்டு, “துரியோதனா, பீமனின் கதாயுதத்தினால் பிளக்கப்படும் உன் தொடையின் ரத்தத்தை இந்த அவிழ்ந்த கூந்தலில் பூசாமல் என் கூந்தலை முடிந்திடமாட்டேன்” என்று சபதம் செய்தாள். துரியோதனனும் பீமனும் கதாயுதத்தில் சமமானவர்கள். இருவருக்குமே கிருஷ்ணனின் அண்ணனான பலராமன்தான் குரு. கதாயுத யுத்தத்தில் இடுப்பிற்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது சட்ட நியதி. ஆனால், திரௌபதி சபதம் செய்யும்போதே ‘பீமனின் கதாயுதத்தால் பிளக்கப்பட்ட உன் தொடை ரத்தம்’ என்று யுத்த நியதிக்குப் புறம்பாகச் சபதம் செய்கிறாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், திரௌபதியின் அந்தச் சபதமே அப்போதைய யுத்த நெறி சம்பந்தமான சட்ட நிலைப்பாட்டிற்குப் புறம்பான சபதம். இறுதியில், துரியோதனனுடன் பீமசேனன் கதை யுத்தம் செய்தபோது, இருவரும் சமமாகப் போரிட்டனர் என்கிறார் வியாசர். அவர்கள் யுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தீர்த்த யாத்திரை போயிருந்த கிருஷ்ணனின் அண்ணன் பலராமன், யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு வந்துவிடுகிறார். யுத்தத்தை அவரும் கிருஷ்ணனோடு கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கதாயுத யுத்தம் நீண்ட நேரம் நீடித்தது. யார் வெல்வார் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, தன் தொடையைத் தட்டி பீமனுக்கு சமிக்ஞை கொடுத்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட பீமசேனன், துரியோதனன் எதிர்பார்க்காத சமயத்தில் துரியோதனின் தொடையில் அடித்து, துரியோதனின் தொடையைப் பிளந்தான். துரியோதனன் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்தான். அப்போது பீமசேனன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் கிடந்த துரியோதனின் தலையைத் தன் கால்களால் மிதித்துத் துவைத்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலராமனின் கோபம் உச்சத்தைத் தொட்டது. யுத்த நியதிகளுக்குப் புறம்பாகத் தொடையில் அடித்ததுமில்லாமல், கீழே விழுந்த துரியோதனின் தலையைக் கால்களால் மிதித்துத் துவைத்ததை பலராமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீமசேனனைப் பார்த்து, பலராமன் காறி உமிழ்ந்தான்.பலராமனுக்கு ‘ஹலாயுதன்’ என்று ஒரு பெயர் உண்டு. ஹலாயுதம் என்பது, உழவர்கள் பயன்படுத்தும் ஏர் என்கிற மேழி. முறையற்ற செயல் செய்த பீமனைத் தாக்குவதற்காக, பலராமன் ஹலாயுதத்தைத் தூக்கிக்கொண்டு பீமனைத் தாக்கத் தயரானபோது, கிருஷ்ணன், “நீ தீர்த்த யாத்திரை போயிருந்தபோது நடந்த யுத்தத்தில், இரண்டு பக்கத்திலும் ஏராளமான முறைகேடுகளை இரு தரப்பினரும் தெரிந்தே செய்துள்ளனர். மேலும், திரௌபதி துரியோதனின் தொடை ரத்தத்தைப் பூசிக் குழல் முடிப்பேன் என்று சபதம் செய்துள்ளதால், பீமனுக்கு துரியோதனின் தொடையில் அடித்துப் பிளப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் திரௌபதி, அவள் செய்த சபதத்தின்படி கடைசிவரை குழல் முடிக்க முடியாமலே போயிருக்கும். எனவே, கோபத்தை அடக்கிக்கொண்டு மதுராபுரிக்குப் போ” என்று சொல்லி, பலராமனை சமாதானம் செய்து அனுப்பினான். அந்த நொடி முதல் துரியோதனனின் பேச்சு, செயல் எல்லாமே ஒரு மாவீரனின் பேச்சு மற்றும் செயலை ஒத்திருந்ததாலேயேதான், தேவர்கள் அவன் இறந்தபோது பூமாரி பொழிந்து அவனை வாழ்த்தினார்கள். “நான் சக்ரவர்த்தி. நான் இறந்த பிறகு, என் தலையைக் காக்கைகள் மிதிக்கும். அதை பீமா, என் மரணத் தருவாயில் நீ செய்தாய். அதனால் நீ காக்கைக்கு நிகரானாவன்தான். நான் சக்ரவர்த்தியாகவே இறப்பேன்” என்று முழங்கினான். துரியோதன வதமானது பாண்டவர்களுக்கும், குறிப்பாக கிருஷ்ண பரமாத்மாவிற்கும் பீமசேனனுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்திய சம்பவமாகவும் அமைந்துவிட்டது. (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

சுத்தமான கடவுள்

சுத்தமான கடவுள்

கவிதை அகல் விளக்கை‘சுத்தமான’ எள் எண்ணையால் ஏற்றினால்சனி சமாதான உடன்படிக்கைக்கு வருவாராம் கடைவீதிகளைச் சலித்தால்தங்க விளக்குகூட கண்முன்னே மின்னுகிறதுமண்விளக்கென வாய் திறந்தால்அதிசயப்பிறவி போல் பார்க்கிறார்கள்எங்கே போனார்கள் மண்பாண்டக் கலைஞர்கள்..?அறுபது மைலுக்கு அப்பால் போனால்‘சுத்தமான’ அகல்விளக்கு கிடைக்குமாம் எள் எண்ணை கேட்டால்எள் படம் போடப்பட்டஎண்ணற்ற பைகள் வரிசையில் கிடந்தனஎங்கே போனார்கள் செக்காட்டுவோர்.?இருபது மைல் கடந்து போனால்‘சுத்தமான’ எண்ணெய் கிடைக்குமாம் திரி கேட்டால்‘சுத்தமான’ பஞ்சுத்திரி கிராமத்தில்தானாம்மறைந்துவிட்டதா பருத்தி உற்பத்தி..? வெறுப்பின் உச்சத்தில்பொறுப்பாய் வீடு வந்துகிண்ணத்தை விளக்காக்கிநீரை எண்ணையென வார்த்துபூவைத் திரியென மிதக்கவிட்டுகோபத்தைத் தணலாக்கிப் பற்ற வைக்கபூத்திரியில் ஒளிர்கிறார் ‘சுத்தமான’ கடவுள்