திருப்பூர் எனும் திருப்புமுனை – 3
பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்கு வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட ஆர்டருக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்ய, தங்களின் தேவைக்கேற்ற தர வரையறைக்குள் துணி தயாரிக்கும் ஆலைகளிடம் துணிகளை ஆர்டர் செய்து பெற்று, ஆடைகளைத் தயாரித்து அனுப்புவர். திருப்பூரைப் பொறுத்தமட்டில், இங்கு துணி தயாரிப்பு நிறுவனம் என்பது கிடையாது (அண்மைக் காலங்களில் உருவாகி வருகிறது). ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவைகளுக்கேற்ப நூலை மொத்தமாக நூற்பாலைகளிலிருந்து கொள்முதல் செய்து, அதனைப் பல்வேறு படிநிலை சார்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ற வகையில் துணியாக உற்பத்தி செய்யபடும். முதல் நிலை, நிட்டிங் என அழைக்கப்படும். வாங்கிய நூலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த குறியீடுகளுக்கு உட்பட்டு, அதற்குரிய துணி உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு துணியாகப் பின்னல் செய்யப்படும். அடிப்படைத் துணி இவ்வாறாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்நாட்டு இயந்திரங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்ட நிலை மாறி, தற்போது அதிநவீன இறக்குமதி இயந்திரங்கள் வாயிலாக, அதிகளவு துணி உற்பத்தி நடைபெறுகிறது. உற்பத்தி செய்யபட்ட துணி, வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள விவரக்குறிப்பிற்கு உட்பட்டு சாயம் ஏற்றப்பட்டு அல்லது சலவை செய்யப்பட்டு, சில சமயங்களில் துணியாக இருக்கும் நிலையிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு, உரிய செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஆடைகளாகத் தைத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். இதில் ஆடைகளின் வடிவத்திற்கு ஏற்ப பிரிண்டிங், எம்பிராய்டரி போன்ற மதிப்புக்கூட்டல் செய்யப்படும். இது தவிர, அக்சஸரீஸ் என அழைக்கப்படும் லேபிள், டேக், ஸ்டிக்கர் மற்றும் ஆடைகளைப் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நெகிழிப் பைகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை அதற்குரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து பெறப்பட்டு ஆடைகளைப் பேக்கிங் செய்து அனுப்பிவைக்கப்படும். மேற்சொன்ன விபரங்களைக்கொண்டு திருப்பூரின் பின்னலாடை உற்பத்திச் சங்கிலியைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். இந்த உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் நூறு முதல் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. 5 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் – நிறுவனத்தின் உற்பத்திப் பின்னணி மற்றும் திறன் அடிப்படையில் – முதலீடு செய்யப்பட்டு இயங்கிவருகின்றன. குறைந்தபட்சம் 5 முதல் ஆயிரங்கள் என்னும் எண்ணிக்கையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த உற்பத்திச் சங்கிலியின் தலைமைப் பொறுப்பு, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு ஆடை உற்பத்தியாளரையே சாரும். ஒவ்வொரு நிலை சார்பு நிறுவனமும் அடுத்தடுத்த நிலை சார்பு நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகிறது. சார்ந்து இயங்கினாலும் ஒவ்வொரு படிநிலை உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு மட்டுமே இந்த மாதிரியான உற்பத்திச் சங்கிலியை வெற்றிகரமாக இயங்க செய்யும். இதுவொரு இயல்பான கலாச்சாரமாகவே இங்கு உருவெடுத்துள்ளது. இப்படியான ஒரு அமைப்பை நான் அறிந்தவரை உலகளவில் திருப்பூரில் மட்டுமே காண இயலும். திருப்பூரில் உற்பத்தியாகும் ஒவ்வொரு பின்னலாடையையும் ஒரு பண்பாட்டு உருவாக்கமாகவே நாம் பார்க்கலாம். இந்தப் பண்பாட்டு இயக்கம் பல ஆயிரம் நபர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்தியது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளியாக உயரப் பெரும் காரணம் இந்தப் பண்பாட்டு விழுமியமே என்று சொன்னால் மிகையல்ல. ஒரு தொழில் நகரம் உருவாகும்போது, ஒரு சமூகக் கட்டமைப்பு உருவாகும். அந்த வகையில், இங்கு பனியன் தொழில் சாராத பல தொழில்கள், அதாவது ஒரு கை வண்டியில் காய்கறி, பழங்கள் விற்கும் எளிய வியாபரி முதல், மளிகை, உணவகம், தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மருத்துவமனைகள், திரை அரங்குகள், நகைக் கடைகள், அடுமனைகள் (பேக்கரி) என, பல அடுக்குகளில் தொழில்கள் உருவாகிச் செழித்து வளர்ந்துள்ளன. இப்படியாக, திருப்பூரின் பின்னலாடைத் தொழில் என்பது, மிகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டது. ஒரு கிராமமாக ஒரு காலத்தில் அறியப்பட்ட ஊர், இன்று ஒரு மாவட்டத் தலைநகராக எவ்வாறு தன்னைத்தானே உயர்த்திக்கொண்டது என்பதை மேற்சொன்ன விவரங்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளலாம். இங்கு பின்னலாடைத் தொழிலுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவே இவ்வளவு செய்திகளைக் கூறவேண்டியுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசித்த ஒரு சகோதரி, நொய்யல் ஆற்றின் நிலை குறித்த தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். அவரின் கவலை, ஒட்டுமொத்த நொய்யல் வழித்தடச் சமூகத்தின் கவலை என்பதாகவே நாம் கருதலாம். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு அங்கம். கண்களை விற்று ஓவியம் வாங்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒட்டுமொத்தத் தொழில்துறையினரின் நிலைப்பாடும் அதுதான். இந்தத் தொடரில், நொய்யல் குறித்து, விருப்பு வெறுப்பின்றி தனி அத்தியாயமே வரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளிக்கிழமை நான்காம் அத்தியாயத்தில் மற்றுமொரு தரவோடு உங்களைச் சந்திக்கிறேன்.